நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //
உக்கல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உக்கல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 27 ஆகஸ்ட், 2012

உக்கல் இளைஞர்களின் அன்பான வரவேற்பு...




 மழையும் காற்றுமாக மாலை நேரம் இருந்தது (15.08.2012). பெருமழை வந்தால் நிகழ்ச்சியை உக்கல் பெருமாள்கோயிலில் வைத்துக்கொள்ளலாம் என்று ஆசிரியர் சு.மோகனவேல் சொன்னார். வந்தவாசி - காஞ்சிபுரம் சாலையில் உள்ள கூழமந்தலிலிருந்து மூன்றுகல் தொலைவில் உக்கல் உள்ளது. குண்டும் குழியுமான தார்ச்சாலை.

 எங்கள் உந்து வண்டியில் கூழமந்தல் வழியாக நாங்கள் ஊர்முனையை நெருங்கியதும் ஒலிபெருக்கி எங்களை வரவேற்றது. நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் “உறியடி” என்னும் நிகழ்ச்சி நடந்துகொண்டிருந்தது. உறியடி மகிழ்ச்சியிலும் எங்களைக் கண்டு ஓரிருவர் வரவேற்றனர். சிற்றூர்ப்புற நிகழ்ச்சி என்றாலும் வழக்கம்போல் வெட்டுருக்கள், பதாகைகள் வரவேற்றன. சு. மோகனவேல் அவர்களின் இல்லத்தை அடைந்தோம். சு.மோகனவேல் அவர்களின் தந்தையார் திரு. கோ.சுப்பிரமணியம் அவர்கள் அரசியல் ஈடுபாடு கொண்டவர். ஒன்றியக்குழு உறுப்பினராக இருந்து மக்கள்பணி செய்து வருகின்றார்.

 சு. மோகனவேல் வீடு எளிமையாகவும் அதேபொழுது வசதியாகவும் அமைந்துள்ளது. அவர்களின் குடும்பத்தார் யாவரும் ஒற்றுமையாக இருந்தமை எனக்கு மகிழ்ச்சி தந்தது. வீட்டில் காற்றுவளிப்பாடு இருந்தது. பகல் முழுவதும் அலைந்த அலைச்சல் சிறிது நேரம் ஓய்வாக அமர்ந்தேன்.

 மோகனவேல் அவர்களின் தந்தையாருடன் உரையாடி ஊர்நிலை அறிந்தேன். உக்கல் சிற்றூர் சற்றொப்ப 800 குடும்பங்களைக் கொண்ட ஊர். பள்ளிப் படிப்பிற்குப் பிறகு பிள்ளைகள் காஞ்சிபுரம் உள்ளிட்ட நகரங்களுக்குதான் படிக்கவும், பணிக்கும் செல்ல வேண்டும்.

 உக்கலுக்கு அருகில் காஞ்சிபுரம் செல்லும் நெடுஞ்சாலையில் இப்பொழுது பன்னாட்டு நிறுவனம் ஒன்று தோல்பொருள் தொழிற்சாலை தொடங்கி, பத்தாயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு வேலை வழங்கி வருவதாக உரைத்தார்கள். இந்தத் தொழிற்சாலை வந்த பிறகு காவல் நிலையங்களுக்குப் புதுப்புது வகையான வழக்குகள் வருவதாக அனைவரும் கூறிச் சிரித்தனர்.

 மோகனவேல் அவர்களின் தந்தையார் திரு. கோ.சுப்பிரமணியம் அவர்கள் உக்கலின் பழங்காலச் சிறப்புகளையும் இந்த ஊரில் அண்மைக்காலம் வரை வேளாண்மை செழித்திருந்த வரலாற்றையும் நினைவுகூர்ந்தார். இந்த ஊரின் தென்பகுதியில் சேயாறும் (செய்யாறு), வட பகுதியில் பாலாறும் ஓடும் பெருமைக்குரியது. பண்டைக் காலத்தில் மழைவளம் மிக்கிருந்ததால் சோழப்பேரரசன் காலத்தில் புகழ்பெற்ற கோயில்களை எடுத்துள்ளனர். மேலும் மாமண்டூர் போன்ற ஏரிகளை உருவாக்கிப் பல்லாயிரம் ஏக்கர் நிலங்களை வேளாண்மை செய்து நாட்டை வளப்படுத்தியுள்ளனர். இன்று இந்த ஊரின் நிலங்கள் யாவும் வீட்டு மனைகளாக்கப்பட்டுவிட்டன. சென்னை, காஞ்சிபுரம், நெய்வேலி முதலான ஊரிகளில் வாழும் செல்வ வளம் உடையவர்கள் இந்தப் பகுதியில் வீட்டு மனைகளை மூலப்பொருளாக்கிவிட்டனர். இதனால் வேளாண்மைக்கு உகந்ததாக இல்லாமல் ஊர் பாழடைந்து வருகின்றது என்ற கவலையை அனைவரும் பகிர்ந்துகொண்டனர்.

 இரவு 7.30 மணி ஆன பிறகும் நிகழ்ச்சி தொடங்கவில்லை. மோகனவேல் நேரு இளைஞர் நற்பணி மன்ற இளைஞர்களைப் பார்த்து வேகப்படுத்தினார். அதற்குள் அங்கிருந்த கல்லூரி மாணவர்கள், மாணவியர்கள் பலரும் குடும்பத்தினருடன் வந்து என்னுடன் உரையாடி மகிழ்ந்தனர். அனைவருக்கும் தன்னம்பிக்கை தரும் வகையில் பல அறிவுரைகளை வழங்கியும் எப்பொழுதும் உதவிக்குத் தொடர்புகொள்ளுங்கள் என்றும் கூறி என் முகவரி கொடுத்து ஊக்கப்படுத்தினேன். என் கையிலிருந்த ஐபேடில் என் வளர்ச்சி நிலை காட்டும் பல படங்களைக் கண்டு மோகனவேல் அவர்களின் தந்தையாருக்கு என்மேல் பேரீடுபாடு ஏற்பட்டது.

 இரவு 7.45 மணியளவில் மேடைக்குச் சென்றோம். ஒலிவாங்கி ஆய்வு, விளக்குகள் பொருத்தம் என்று மேடையருகில் வேலைகள் முனைப்பு காட்டின. மோகனவேல் நிகழ்ச்சியைத் தொடங்கிவிடுவோம். அதன் பிறகுதான் மக்கள் கூடுவார்கள் என்று வரவேற்புரையாற்றி, என்னை அறிமுகம் செய்தார். நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு அருகில் தெருவெங்கும் மக்கள் அமர்ந்து பார்க்க ஆயத்தம் ஆனார்கள்.

 இளைஞர்கள், பெரியவர்கள், சிறியவர்கள், தாய்மார்கள் என்று பல தரத்து, மக்கள் கூடிக் கேட்க வந்திருந்தனர். நிகழ்ச்சியின் தொடக்கமாகத் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பெற்றது. பள்ளியில் பயிலும் இரு பெண்கள் நன்கு பாடினர். அதன் பிறகு கூட்டத்தைச் சேர்க்க அதே பெண்கள் வேப்பிலையைக் கையில் பிடித்தபடி “வெக்காளி அம்மனை” அழைத்துச் சாமிஆடும் பாடலுக்குத் தக ஆடினர். தங்கள் பிள்ளைகள் ஆடுகின்றனர் என்று இப்பொழுது கூட்டம் கூடத் தொடங்கியது.

 நான் நிகழ்ச்சியை முடித்துவிட்டு இரவே புதுவை திரும்பவேண்டும் என்பதால் முதலில் என்னைப் பேசச் சொன்னார்கள். அங்கிருந்த மாணவர்கள் பயன்பெறும் வகையில் தன்னம்பிக்கையூட்டும் சில கருத்துகளை எடுத்துப் பேசினேன். வறுமையில் வாடி, உழைத்து முன்னேறிய புகழ்பெற்றவர்கள் பலரின் வாழ்வியலை நினைவுகூர்ந்தேன். சிற்றூர்ப்புறத்தில் பிறந்து கல்வியை மட்டும் துணையாகக் கொண்டு முன்னேறிய என் வாழ்க்கையையும் சொன்னேன். மாணவர்கள் அமைதியாகக் கேட்டனர். முன்னேறுவதற்கும், படிப்பதற்கும் பணம் ஒரு தடையில்லை. படிக்க முன்வந்தால் பலர் உதவுவதற்குத் தயாராக உள்ளனர் என்று மாணவர்களை ஊக்கப்படுத்தினேன்.

 இளைஞர்களைத் திரைப்பட நடிகர்கள், அரசியல்காரர்கள் பின் செல்லாமல் ஆக்கபணி செய்ய முன்வந்தமைக்குப் பாராட்டினேன். இணையம், கணினி, தட்டச்சு இவற்றின் முக்கியத்துவத்தைப் பற்றியும் பேசினேன். நிறைவாகச் சிற்றூர்ப்புற மக்கள் மிகுதியாக இருந்ததால் நாட்டுப்புறப் பாடல்கள் பலவற்றைப் பாடி மகிழ்ச்சியூட்டினேன். தமிழர்களின் கலை, பண்பாடு, நாகரிகம், இன்றைய திரைப்படம், தொலைக்காட்சியால் அழிந்துவருவதை நினைவுகூர்ந்தேன். நடவுப்பாடல், ஒப்பாரி, தாலாட்டு, கும்மி, கோலாட்டம், உலக்கைப்பாடல்கள் என்று பலவகைப் பாடல்களைப் பாடி விளக்கியதால் அனைவரும் ஈடுபாட்டுடன் கேட்டனர். இதனை நண்பர்களும் உறுதிப்படுத்தினர். சற்றொப்ப ஒரு மணி நேரத்திற்கும் மேல் என் உரை நீண்டது.

 என்னிடம் இருந்த இணையம் கற்போம் நூல்களை அனைவரும் ஆர்வமுடன் வாங்கிக்கொண்டனர். குறைந்த படிகள் கையில் இருந்ததால் தேவையானவர்களுக்குத் தனித்தூதில் அனுப்புவதாக உறுதியுரைத்துப், பெயர் விவரம் பெற்றுக்கொண்டேன். உணவு முடித்துதான் செல்ல வேண்டும் என்று நேரு இளைஞர் நற்பணி மன்றத்துத் தோழர்கள் கேட்டுக்கொண்டனர். உக்கல் பெருமாள்கோயிலில் அமர்ந்தபடி சில நண்பர்களுடன் உரையாடியபடி உண்டோம். நினைவுக்குச் சில படங்களை எடுத்துக்கொண்டோம்.

 சிற்றூர்ப்புறத்தில் பிறந்து வளர்ந்த நான் இந்த ஊரையும் மக்களையும் கண்டு அவர்களுள் ஒருவனாக மாறினேன். பத்து மணியளவில் அண்ணன் உதயகுமார், மோகனவேல், முகிலன் உள்ளிட்டவர்களிடம் விடைபெற்றுக்கொண்டு, கூழமந்தல் தார்ச்சாலையை நெருங்கினோம். அவர்களின் உந்து வண்டி எங்கள் வண்டிக்குப் பின்னாக வந்துகொண்டிருந்தது. மழை இப்பொழுது வலுவாகத் தூறுவதற்குரிய அறிகுறி இருந்தது. எனவே எங்கள் உந்துவண்டி வேகமெடுத்தது. கூழமந்தலை நாங்கள் அடைவதற்கும் எனக்குரிய பேருந்து வருவதற்கும் சரியாக இருந்தது. இரவு நேரங்களில் இந்த நிறுத்தத்தில் பேருந்துகள் நிற்காது என்பதால் கிடைத்த பேருந்தில் ஏறவேண்டிய நிலை. மற்ற நண்பர்களிடம் விடைபெறத் திரும்பியபொழுது யாரும் இல்லை என்பதால் என்னை அழைத்து வந்த நண்பரிடம் மட்டும் சொல்லிவிட்டு உடன் பேருந்தில் ஏறினேன். பேருந்தில் ஏறிய பிறகு ஒவ்வொரு தோழர்களுக்கும் செல்பேசி வழியாக நன்றி கூறினேன். இரவு புதுச்சேரி வரும்பொழுது நடு இரவு இரண்டு மணியாகும்.


பார்வையாளர்களாக ஊர்ப் பெரியவர்கள்


பார்வையாளர்கள்(மகளிர்)


மாணவப் பார்வையாளர்கள்


உக்கல் விழாவில் மு.இ


உக்கல் விழாவில் மு.இ.


நேரு இளைஞர்கள் மன்றத்தின் தோழர்களுடன்

திங்கள், 21 ஜூன், 2010

உக்கல் கோயிலின் இராசராச சோழன் காலத்துக் கல்வெட்டு


உக்கல் திசைகாட்டி

திருவண்ணாமலை மாவட்டம்,செய்யாறு வட்டத்தில் உக்கல் என்னும் ஊர் உள்ளது.இந்த ஊரை அடைவதற்கு வந்தவாசி-காஞ்சி நெடுஞ்சாலையில் கூழமந்தல் பேருந்து நிறுத்தத்தில் இறங்க வேண்டும்(கூழமந்தல் என்பது பண்டைக்காலத்தில் சோழமண்டலம் என்னும் பெயர் உடைய ஊராகும்.இதனை ஆங்கிலத்தில் chozhamandalam என்று எழுதினர்.இதனை ஒலிக்கத் தெரியாத ஆங்கிலேயர் கூழமந்தல் என்றனர். தமிழறியாத அவர்கள் வாயில் கூழமந்தல் என்று வர அன்றுமுதல் இவ்வூர் கூழமந்தலானது. இவ்வூரில் அழகிய சிவன்கோயில் உள்ளது. சோழர்காலத்துக் கட்டடக்கலைக்குச் சான்றாக உள்ள இந்தக் கோயில் கலையுணர்வுடன் உருவாக்கப்பட்டுள்ளது).

காஞ்சிபுரத்திற்குத் தெற்கே 18 கி.மீ. இல் இந்த ஊர் உள்ளது.அருகில் மாமண்டூர் ஏரி வரலாற்றுச் சிறப்பு மிக்கது(7.கி.மீட்டரில்).உக்கல் ஊரின் சிறப்புகளுள் ஒன்று பெருமாள்கோயில் இங்குக் கட்டப்பட்டுள்ளது.சோழர் காலத்துக் கோயில் என்பதும்,அரிய கல்வெட்டுகள் உள்ளதும் குறிப்பிடத்தகுந்த செய்திகளாகும்.

கூழமந்தலிலிருந்து உக்கல் 3 கி.மீ.நடந்தும், பகிர்வுத்தானியிலும் செல்லலாம்.காலையிலும் மாலையிலும் பேருந்துகள் செல்லும். 1000 குடும்பம் இந்த ஊரில் இருக்கும். 5000 பேர் அளவில் வாழ்கின்றனர். அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. அடிப்படை வசதிகளை எதிர் நோக்கிக் காத்திருக்கும் இந்த ஊர் வரலாற்றுச் சிறப்பு மிக்கது.இவ்வூரின் கோயிலும் கல்வெட்டுகளும் பாதுகாக்கப்படாமல் சிதிலமடைந்து கிடக்கின்றன.அரசும்,பொதுமக்களும் இணைந்து இக்கோயிலைப் புதுப்பிக்க வேண்டும்.தொல்பொருள் துறையினர் கட்டுப்பாட்டில் இக்கோயில் இருப்பின் நல்லது.

உக்கல் பெருமாள் கோயிலில் முன்பு புரட்டாசி மாதத்தில் சனிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன.இன்று முறையான வழிபாடு இல்லாமலும் பராமரிப்பு இல்லாமலும் உள்ளது.

உக்கல் என்ற ஊரில் உள்ள பெருமாள் கோயிலின் மேற்குப் புறச்சுவரில் உள்ள கல்வெட்டு இராசராசன் காலத்து கல்வெட்டாகும்.இது தமிழும் கிரந்தமும் கொண்டு எழுதப்பட்டுள்ளது.
கி.பி 1014 இல் வெட்டப்பட்ட கல்வெட்டாகும் இது. இராசராசனின் வெற்றிச்சிறப்பைக் கூறும் கல்வெட்டு இதுவாகும்.

மெய்க்கீர்த்தியால் அறியப்படும் செய்திகள்.

காந்தளூர்ச்சாலையிலுள்ள கலங்களை அறுத்தருளினான்.வேங்கைநாடு,நுளம்பபாடி,தடிகைபாடி, குடமலை நாடு,கொல்லம்,கலிங்கம்,ஈழமண்டலம்,இரட்டபாடி,பழந்தீவு இவைகளை இராசராசன் வென்றான் என்று செய்திகள் புலனாகின்றன.

கல்வெட்டால் அறியப்படும் செய்தி

இராசராச சோழனது பணிமகனும், நித்த விநோத வளநாட்டிலுள்ள ஆவூர்க் கூற்றத்து ஆவூரைத் தனக்குப் பிறப்பிடமாகக் கொண்டவனுமாகிய கண்ணன் ஆரூரன்,தன் அரசன் பெயரால் சயங்கொண்ட சோழ மண்டலத்துக் காலியூர்க் கோட்டத்துத் தனியூர் உக்கலாகிய விக்கிரமாபரணச் சதுர்வேதி மங்கலத்தின் மேலைப் பெருவழியில் ஒரு கிணற்றை அமைப்பித்து அதற்கு நிவந்தம் அளித்துள்ளான்.

நிவந்தத்தின் வகை

இராசராசன் கிணற்றிலிருந்து தொட்டிக்கு நீர் இறைப்பார்க்கு அருண்மொழித் தேவன் மரக்காலால் நாள் ஒன்றுக்கு நெல் இரு குறுணி ஆகத் திங்கள் ஆறுக்கு நெல் முப்பது கலமும், இராச ராசன் பெயரால் தண்ணீர் வார்ப்பார்க்கு நாடோறும் நெல் இரு குறுணியாகத் திங்கள் ஆறுக்கு முப்பது கலமும்,இப்பந்தலுக்கு மட்கலம் இடுவார்க்குத் திங்கள் ஒன்றுக்கு நெல் இரு தூணியாகத் திங்கள் ஆறுக்கு நெல் நான்கு கலமும், இராச ராசன் கிணற்றுக்கும் தொட்டிக்கும் சேதம் ஏற்பட்டால் அவைகளைப் புதுப்பிக்க ஆண்டுதோறும் இருகலனே இரு தூணி நெல்லும் ஆக 66 கலம் எட்டு மரக்கால் நெல் விளையக் கூடிய நிலத்தின் விலைக்குரிய பணத்தையும், அதற்கு வரிக்கு உரிய பணத்தையும் தனியூர் உக்கலாகிய விக்கிரமாபரணச் சதுர்வேதி மங்கலத்துச் சபையார், கண்ணன் ஆரூரனிடம் பெற்றுக்கொண்டு வரி இல்லாமல்(நிலத்தை விற்றுக்கொடுத்து அத்தர்மத்தை நடத்துவதாக இசைந்தனர்)

கல்வெட்டில் அரிய செய்திகள்

இராசராசக் கிணற்றிலிருந்து தொட்டிக்கு நீரிறைப்பார் முதலான பலபணியாளர்களுக்கு ஓர் ஆண்டில் ஆறு மாதங்களுக்குத்தான் கூலிகள் கொடுக்கப்பட்டு வந்தன. தண்ணீர்ப் பந்தல் இக்காலம்போல் அல்லாமல் பண்டைக்காலத்தில் ஆறு மாத காலம் நடத்தப்பெற்று வந்தது என்பது புலனாகின்றது. இக்கல்வெட்டில் வந்துள்ள பெருவழி, பணிமகன்,புதுக்கு என்னும் சொற்கள் தூய தமிழ்ச்சொற்களாகும்.

உக்கல் கல்வெட்டு


கல்வெட்டு


கல்வெட்டு

(கீழே கல்வெட்டின் தட்டச்சு வடிவம்)

1. ஸ்வஸ்தி ஸ்ரீ திருமகள் பொல் பெருநிலச் செ(ல்வி) யுந் தனகெ உரிமை பூண்டமை மனக்கொளக் கா(ந்த) ளூர்ச்சா(லைக)ல (மறுத்த(ரு)ளி (வெக) நாடும் கங்க (பா)டி(யும்) நுளம்ப பாடியு(ந்த)டி(¬)க ப(£) -

2.டியும் குடமலை நாடும் கொல்லமும் கலிங்கமும் முரட்டொழில் சிங்களர் ஈழ (ம)ண்டலமும் (இ)ரட்ட(பா)டி ஏழரை இலக்கமும் முன்(னீ)ர்ப்ப(ழ)ந்(தீவு) பன்(னீ)ராயிர(மும் திண்டி)றல் வெ(ன்)றித் தண்டாற்-

3.கொண்ட தன்னெழில் வளருழியு ளெல்லாய(£)ண்டுந் தொழுதகை விளங்கும் யாண்டெ செழியரை(த்ª)தசுகொள் ஸ்ரீ கொ ராஜ கெஸரி வந்மரான ஸ்ரீ ராஜ ராஜ தேவர்க்கு யாண்-

4.டு,உயக ஆவது ஜயங் கொண்ட சோள மண்டல(த்)துக் காலியூர்க் கொடத்துத் தனியூர் உக்கலாகிய ஸ்ரீ விக்கிரமா பரணச் சதுவெதி மங்கலத் தின் மெலை-

5.ப் பெருவழியில் ஸ்ரீ ராஜ ராஜ தேவர் திரு(ந)£மத்தால்க் கிணறுந் தொட்டியும் சமைப்பித்தான் உடையார் ஸ்ரீ ராஜ ராஜ தேவர் பணிமகன் சௌ (ம)ண்டலத்து ª(த)ன்க¬(ர) நா(ட்)டு நித்த-

6.வினோ(த) வளநாட்டு ஆவூர்க் கூற்றத்து (ஆ)வூருடையான் கண்ணனாரூரன்,இவனெ ஸ்ரீ ராஜ ராஜ கி(ணற்)றில் (த் தொட்டிக்கு நீரிறை(ப்)பதார்க்கு அருமொழி தெவன் மரக்கா(ல)£ல் நிசதம் (நெ)ல் ஜுங (ஆ)

7.கத் திங்கள் ச க்கு நெல் ஜ ங ய(கள)மும் ஸ்ரீ ராஜ ராஜன் தண்ணீரட்டுவார்க்கு நிசத(ம்) நெல் ஜ (உங) ஆக திஙள் ச க்கு நெல்லு ஙய (கள)ம் இப் பந்தலுக்கு குசக் கலம் இ (டு)

8.வ(£)ர்க்கு திங்கள் க க்கு நெல்லு வத ஆக திங்கள் ச க்கு நெல்லு (சகள)மும் ஸ்ரீ ராஜ ராஜன் கிணற்(று)க்கு(ம் ª(த)£ட்டிக்(கு)ம் ª(ச)த்தத்துக்கும் ஆட்டாண்டு தொறு(ம் பு(து)க்குப் புறமாக (¬)வச்ச

9.நெல்லு உ கள வத ஆக ஜ ச ய ச(கள)வத இந்நெல்லுக்கு இவன் பக்கல் இவ்வூர் ஸ(பை (யம் இ)¬(ற திர) விய(மு)ம் (கிரய திர) விய (மு)ம் கொண்டு இறை இழிய்ச்சி -

(அளவைக்குறிகளை என்னால் தமிழ் எண்களால் சரியாகக் குறிக்க இயலவில்லை.மேலும் தட்டச்சிட்டவற்றை ஒருங்கு குறிக்கு மாற்றிய பொழுது எழுத்துருக்கள் உடைகின்றன(கால், ஒற்றைக்கொம்பு, இரட்டைக்கொம்பு)அறிஞர் உலகம் மூல நூலைக் கண்டு உறுதிசெய்ய வேண்டுவன்)


உக்கல் பெருமாள்கோயில் முகப்பு


உக்கல் கோயில் முன் மண்டபமும்,கருவறையும்


உக்கல் கோயில் முகப்பின் உள்பகுதி


கோயில் கிணறு


உக்கல் கோயில் கல்வெட்டு


உக்கல் கோயில் சுவர்


கோயில் கருவறை வெளிப்புறம்


உக்கல் கோயிலின் ஒரு பகுதி(யானை மண்டபம்)


உக்கல் கல்வெட்டு


இடிபாடுகளுடன் கோயில்(காஞ்சிபுரத்துக்குச் சுரங்கப் பாதை இருந்ததாக நம்பப்படும் பகுதி)


உக்கல் கோயில் முன்மண்டபம்

(இக்கட்டுரைப் பகுதிகள்,படம் ஆகியவற்றை எடுத்தாள விரும்புவோர் இத்தளத்திலிருந்து எடுக்கப்பெற்றது என அற உணர்வுடன் குறித்தல் நன்று.பலரும் இன்னவண்ணம் சுட்டாமல் கள்வர்போலும் கவர்தலால் இக்குறிப்பு.)

நன்றி:
1.30 கல்வெட்டுக்கள்,வித்துவான் வை.சுந்தரேச வாண்டையார்,பழனியப்பா பிரதர்சு வெளியீடு.
2.திருவாளர்கள் கூழமந்தல் உதயகுமார், உக்கல் மோகனவேல்