நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //
அறிஞர்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அறிஞர்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 24 ஜனவரி, 2018

மலேசியக் கவிஞர் சி. வேலுசுவாமி...

 சி. வேலுசுவாமி (02.04.1927 - 24.05.2008)

     புலம்பெயர்ந்து பிற நாடுகளில் வாழும் தமிழர்கள் தாங்கள் வாழும் நாட்டுச் சூழலுக்கு ஏற்ப மொழி, இலக்கியம், கலை  வளர்ச்சிக்குத் தொடர்ந்து பாடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் மலேசியத் தமிழர்களின் தமிழிலக்கியப் பணிகளும், பங்களிப்புகளும் தாயகத் தமிழகத்தார் அறியத்தக்க வகையில் தகுதியுடையனவாக உள்ளன. மலேசியாவில் வாழும் தமிழர்களின் எண்ணிக்கை ஏறத்தாழ இருபது இலட்சம் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. மலேசிய நாட்டின் வளர்ச்சியிலும், அரசியலிலும், தமிழர்கள் தீர்மானிக்கும் சக்தியாக இருப்பதால் தமிழர்களுக்கு உரிய சிறப்பு மலேசியாவில் தொடர்ந்து கிடைத்தவண்ணம் உள்ளது.

     தமிழ் மாணவர்கள் கல்விபெறுவதற்குச் சிறப்பான வசதிகளை அந்த நாட்டு அரசு ஏற்படுத்தித் தந்துள்ளது. மலேசியாவில் 524 தமிழ்ப் பள்ளிகள் மொழியையும், இலக்கியத்தையும் கற்பிக்கும் பணியைச் சிறப்பாக செய்துவருகின்றன. இப்பள்ளிகளில் பணியாற்றும்  ஆசிரியர்கள் பாட நூல்களையும் பிற துறைசார்ந்த, அரிய நூல்களையும் பலவகையில் எழுதித் தமிழ் மொழிக்கு வளம் சேர்த்துள்ளனர். அந்த வகையில் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களுள் ஒருவர் கவிஞர் சி. வேலுசுவாமி ஆவார்.

    மலேசியப் பள்ளிகளில் தமிழாசிரியராகவும் தலைமையாசிரியராகவும் கடமையாற்றிய சி. வேலுசுவாமி (02.04.1927 - 24.05.2008) பன்முகத் திறமைகொண்ட படைப்பாளியாக வாழ்ந்துள்ளதை அவரின் படைப்புகள் நமக்கு உணர்த்துகின்றன. எழுத்தாளர், பதிப்பாளர், இதழாசிரியர், சொற்பொழிவாளர், மொழிபெயர்ப்பாளர் எனப் பலமுனைகளில் செயல்பட்டுள்ள சி. வேலுசுவாமி திருக்குறளுக்கு உரையெழுதிய உரையாசிரியராகவும் விளங்கியுள்ளார். கோலாலம்பூரில் இயங்கிய குறள் இயக்கம் வழியாகத் திருக்குறள் வகுப்புகளை நடத்தித் திருக்குறள் நூல் மலேசிய மண்ணில் பரவுவதற்கு வழியமைத்தவர். திருக்குறள் மணிகள் என்ற நூலையும் வெளியிட்டவர். தமிழ்நேசன் நாளிதழில் திருக்குறளை உரைநடையாக அறத்துப்பால் முழுமைக்கும் எழுதி வெளியிட்டவர். தமிழ்-மலாய்-ஆங்கிலமொழி அகராதி உருவாக்கிய வகையில் மும்மொழி வளர்ச்சிக்கும் பாடுபட்டவராகவும் சி. வேலுசுவாமியின் பணிகள் நீட்சிபெறுகின்றன.

     பண்டித வகுப்பில் மூன்றாண்டுகள் பயின்று தமிழ்ப்புலமை கைவரப்பெற்ற இவர், தமிழாசிரியராகவும், போதனாமுறைப் பயிற்சிக் கல்லூரியில் பகுதிநேர விரிவுரையாளராகவும் கடமையாற்றியவர். மாணவர்களின் உள்ளம் அறிந்து கற்பிக்கும் இவர், சிறந்த பாட நூல்களை எழுதி, நிலைத்த புகழ்பெற்றுள்ளார். தமிழ்ப்பண்ணை நடத்திய சிறுகதைப் போட்டியில், இவர் எழுதிய ’மீனாட்சி’ என்னும் சிறுகதை தங்கப்பதக்கம் பரிசு பெற்றது. இந்தக் கதை அக்கரை இலக்கியம் என்னும் பெயரில் தமிழகத்தில் வெளியிடப்பட்ட நூலில் இடம்பெற்றது. தமிழகத்து ஏடுகளான கலைமகள், தீபம், மஞ்சரி முதலிய இதழ்களிலும் இவரின் படைப்புகள் வெளிவந்துள்ளன. தமிழ்முரசு, தமிழ்நேசன், மலேசிய நண்பன், மக்கள் ஓசை, ஜனோபகாரி, வளர்ச்சி, வெற்றி  போன்ற ஏடுகளிலும் தொடர்ந்து எழுதியவர்.

     மலேசியாவில் நெகிரி செம்பிலான் மாநிலம், ரந்தாவ் (Rantau) என்ற ஊரில் வாழ்ந்த சின்னசுவாமி, அங்கம்மாள் ஆகியோரின் மகனாக, சி.வேலுசுவாமி 02.04.1927 இல் பிறந்தவர். "லிங்கி" எஸ்டேட் தோட்டப்பள்ளியில் படித்தவர். எழாம் வகுப்பு வரை படித்த பிறகு, ஆசிரியர் பயிற்சி பெற்று தமிழாசிரியராகப் பணியைத் தொடங்கினார். தலைமையாசிரியர் நிலைக்குப் பின்னாளில் உயர்ந்து ஓய்வுபெற்றவர். 1946 இல் இலட்சுமி என்னும் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டவர். இவர்களுக்கு எட்டுக் குழந்தைகள் மக்கள் செல்வங்களாக வாய்த்தனர்.

     மலேசியாவில் தொடக்க நாள்களில் பாட நூல்கள் அச்சிடுவதற்கு வசதிகள் இல்லை. இந்தியாவிலிருந்தும், இங்கிலாந்திலிருந்தும் பாட நூல்கள் வரவழைக்கப்பட்டன.  மலேசியா சுதந்திரம் பெற்ற பிறகு (1957) பாட நூல்கள் அச்சிடும் பணி தொடங்கியது.

     மலேசியாவில் அச்சகங்களோ, போதிய பதிப்பகங்களோ தொடக்க காலத்தில்  இல்லை. அக்காலத்தில் மனோன்மணி புத்தகசாலை, கிருஷ்ணா புத்தகசாலை, விவேகானந்தா புத்தகசாலை, மயிலோன்(Mylone) புத்தகசாலை உள்ளிட்ட சில பதிப்பகங்களே இருந்தன.  தோட்டப்பள்ளியில் ஆசிரியராக இருந்த சி.வேலுசுவாமி நற்றமிழ்த் துணைவன் (கட்டுரைகள்) என்ற தலைப்பில் ஒன்றாம் வகுப்பு முதல் ஆறாம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் படித்துப் பயனடையும் வகையில் பயிற்சி நூல்களை உருவாக்கினார். சந்திரன் என்ற புனைபெயரில் இந்த நூலை இவர் எழுதினார். மனோன்மணி பதிப்பகத்தின் வழியாக நற்றமிழ்த் துணைவன் 1963 முதல் 2009 வரை 33 பதிப்புகளைக் கண்டது. மலேசியாவில் அனைவருக்கும் அறிமுகமான நூலாக இந்த நற்றமிழ்த் துணைவன் பயிற்சிநூல் உள்ளது.

     சி. வேலுசுவாமி அரசு பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றியதால் பல்வேறு புனைபெயர்களில் எழுதத் தொடங்கினார். சரவணபவன், சந்திரன், தமிழ்வாணன், கவிதைப்பித்தன், இளங்கவிஞன், ஏச்சுப்புலவன் உள்ளிட்ட பல பெயர்களில் இவர் பலதுறை சார்ந்து நூல்களை எழுதியுள்ளார்; பதிப்பித்துள்ளார். இவர்தம் நூல்களையும் படைப்புகளையும் முறைப்படுத்தி வெளியிடும்பொழுது மலேசியத் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு உதவும் நூல்களாக இருக்கும். இவர் மலேசிய மொழியிலிருந்து தமிழில் மொழிபெயர்த்த சிறுகதைகள் வெளிவராமல் போனமை தமிழுக்கு இழப்பேயாகும்.

     மலேசிய மொழி படியுங்கள், பழமொழி விளக்கம், இலக்கணச் சுருக்கம், நற்றமிழ்த் துணைவன், கவிஞராகுங்கள் என்பன இவரின் பெருமையுரைக்கும் நூல்களாகும். மலாய்-தமிழ்-ஆங்கில மொழி அகராதிகளை மாணவர்களுக்கும், பெரியவர்களுக்குமாக இவர் வெளியிட்டுள்ளமை மொழி வரலாற்றில் குறிப்பிடத்தக்க செய்தியாகும். இந்த அகராதிகள் பல பதிப்புகளைக் கண்டு, பல்லாயிரம் படிகள் விற்பனையாகியுள்ளமை குறிப்பிடத்தக்க செய்தியாகும்.

     ’திருமகள்’ என்ற பெயரில்  மாணவர்களுக்கு உரிய இதழை சி. வேலுசுவாமி 27 ஆண்டுகளாகத் தொடர்ந்து நடத்தியவர். ’பக்தி’ என்ற சமய இதழை 14 ஆண்டுகள் நடத்தியவர். இந்து சமயத்தில் ஈடுபாடு கொண்ட இவர் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாகப் பல்வேறு ஆன்மீக நூல்களைப் பதிப்பித்துள்ளார். மிகச் சிறந்த முருகபக்தரான சி.வேலுசுவாமி மலேசிய இந்து சங்கப் பிரச்சாரக் குழுவைச் சார்ந்தவராக விளங்கியவர். இசையுடன் பாடி விளக்கும் ஆற்றலும், தமிழ் இலக்கியப் பயிற்சியும் இவருக்கு இருந்ததால் சிறந்த சொற்பொழிவாளராகவும் விளங்கியவர். திருமகள் அச்சகம், திருமகள் பதிப்பகம், சரவணபவன் பதிப்பகம் என்று பல்வேறு நூல்வெளியீட்டகங்களை நடத்தியவர்.

     சி.வேலுசுவாமி குழந்தைப் பாடல்கள் வரைவதில் பெரும்புலமை பெற்றிருந்தவர். பாட்டுப்பாடலாம், நான் பாடும் பாட்டு, தேனீயைப் பாரீர், பாட்டெழுதப் பழகுங்கள், அருள்புரிவாய் என்ற தலைப்புகளில் இவர் வெளியிட்ட குழந்தைப் பாடல் நூல்கள் மலேசியப் பின்புலத்தில் சிறந்த படைப்புகளாக வெளிவந்துள்ளன.  இவரின் அருள்புரிவாய் நூலுக்குக் கவியரசு கண்ணதாசன் வரைந்துள்ள அணிந்துரைப் பாடல் சி.வேலுசுவாமியின் கவிதைப்பணிக்குச் சூட்டப்பெற்ற மணிமகுடம் எனில் பொருந்தும்.
"............................
சிறுவர்க் காகத் திறத்துடன் வடிக்கும்
வியத்தகு கவிஞர் வேலு சாமி
இந்நூல் தன்னை இயற்றித் தந்துள்ளார்!
அருள்புரிவாய் என ஆரம்ப மாகித்
தொடரும் இஃதோர் சுவையுள்ள நூலே!
கலைமகள் பற்றிக் கார்முகில் பற்றிப்
பலகா ரத்தில் பலவகை பற்றி
ஒலிக்கும் பறவைகள் ஓசைகள் பற்றிப்
பூக்கள் நிறத்துப் புன்னகை பற்றி
வாழை பற்றி, வானொலி பற்றி
நன்றி பற்றி, நால்திசை பற்றிச்
சாலை விதிகள் சாற்றுதல் பற்றி
எறும்பைப் பற்றி எலிகளைப் பற்றி
பாரதி பற்றி பாமதிக் பற்றி
வண்ண வண்ண வார்த்தைக ளாலே
சின்னச் சின்ன சிறுவர்கள் பாட
வேலுச் சாமி விரித்த பாடல்கள்
பிள்ளைகள் அறிவைப் பெரிதும் வளர்க்கும் ...
வேலுச் சாமிஓர் வீட்டின் விளக்கு!
பல்லாண் டிவரைப் பரமன் காக்க! "

என்று கண்ணதாசன் வேலுசுவாமியைப் பற்றி எழுதியுள்ளமை இலக்கிய வரலாற்றில் இவரின் இருப்பை உறுதி செய்யும் கவிதைப் பத்திரமாகும்.

 "கவிதைப்பித்தன் கவிதைகள்" என்ற தலைப்பில் இவரின் கவிதைகள் 1968 இல் நூலாக வெளிவந்தன. தமிழகப் பேராசிரியர் அ.கி.பரந்தாமனார், மலேயாப் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஈ.ச. விசுவநாதன் ஆகியோரின் அணிந்துரைகளுடன் வெளிவந்த இந்த நூலில் தனிப்பாடல்களும், இசைப்பாடல்களும், வானொலிக் கவியரங்கப் பாடல்களுமாக 72 கவிதைகள் உள்ளன. வெற்றி, மலைமகள், மாதவி, தமிழ்நேசன், மலைநாடு  உள்ளிட்ட ஏடுகளில் வெளிவந்த படைப்புகளே இவ்வாறு நூலுருவம் பெற்றுள்ளன. வெண்பா, விருத்தம், சிந்து, கொச்சகக் கலிப்பா வடிவங்களில் மரபுநெறி நின்று பாடியுள்ளமை சி.வேலுசாமியின் தமிழ்ப்புலமைக்கு எடுத்துக்காட்டாக உள்ளன. மலேசிய நாட்டுத் தலைவர் துங்கு அவர்களையும், மலேசிய நாட்டு வளத்தையும், கூட்டுறவுச் சிறப்பையும், தமிழர் நிலையையும், தமிழ்ச் சிறப்பையும் பல பாடல்களில் இந்த நூலில் ஆசிரியர் பாடியுள்ளார். 03.05.1964 இல் கோலாலம்பூர் நகர மண்டபத்தில் நடைபெற்ற பாரதிதாசன் மறைவுகுறித்த இரங்கல் கூட்டத்தில் கலந்துகொண்டு,

நின்பாட்டால் உணர்ச்சி எழும், நித்தம் நித்தம் நான்படிப்பேன்.
துன்பத்திலும் நின்கவிதை துயரோட்டும் நன்மருந்தாம்;
என்னின்பத் தமிழ்க் கவிஞா! ஏனய்யா நீமறைந்தாய்?
கண்ணில்லா அந்தகனுன் கனமறியாக் காரணமோ?

என்று பாடியுள்ளமை பாவேந்தர் பாரதிதாசன்மேல் இவருக்கு இருந்த பற்றினைக் காட்டும் பாடல் வரிகாளாகும்.

     மலேசியாவில் தமிழ் எழுத்தாளர் சங்கத்தைத் தோற்றுவித்து, பலவாண்டுகள் செயலாளராகவும், செயற்குழு உறுப்பினராகவும் பணியாற்றியவர். மலேசியத் தமிழ் எழுத்தாளர்கள் குறித்த விவரத் திரட்டினை உருவாக்குவதில் பெரும்பங்காற்றியவர். எழுத்தாளர் சங்கம் சார்பில் ஏடு என்ற இதழ் வெளிவருவதற்கு வழிசெய்தவர். மலாயாத் தமிழ்ப்பள்ளி ஆசிரியர் சங்கத்திலும் தம் பங்களிப்புகளை வழங்கியவர். பெரியாருடைய எழுத்துச் சீர்திருத்தத்தை மலேசியாவில் நடைமுறைப்படுத்துவதில் பெரும்பங்காற்றியவர். சென்னையில் நடைபெற்ற இரண்டாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் மலேசியக் குழுவினருள் ஒருவராகக் கலந்துகொண்டவர்.

     கவிஞர் சி. வேலுசுவாமியின் தேர்ந்தெடுத்த  கவிதைகளை மலேசியத் தேர்வு ஆணையம், உயர்நிலைப்பள்ளி(SPM) மாணவர்களின் பாட நூலில் 2001 ஆம் ஆண்டு முதல் இணைத்துள்ளது. மலேசியத் தமிழ்க் கல்வித்துறைக்கு இவர் ஆற்றிய பணியைப் போற்றும் வகையில் மலேசிய அரசு (PPN) Pingat Pangkuan Negara) என்ற பட்டத்தை வழங்கிச் சிறப்பித்துள்ளது.

     ஆசிரியர் பணி, பதிப்புப்பணி, சொற்பொழிவுப்பணி, படைப்பு நூல்கள், அகராதி நூல்கள், கல்வி நூல்கள் உருவாக்கியதன் வழியாக மலேசியத் தமிழ் இலக்கிய வரலாற்றில் நிலைத்த இடத்தினைத் தக்க வைத்துக்கொண்டுள்ள கவிஞர் சி. வேலுசுவாமியின் இதழ்ப்பணிகளும், படைப்புப்பணிகளும் விரிவாக ஆராய்வதற்குரிய களங்களைக் கொண்டுள்ளன.





வேலுசாமியார் திருக்குறள் உரைத்திறன் அறிய இங்கு அழுத்துக.

நன்றி: தி இந்து (தமிழ்) நாளிதழ் 23.01.2018
திரு. சி. வே. கிருஷ்ணன்(மலேசியா)
திரு. வேங்கடரமணி(மலேசியா)

குறிப்பு: இக்கட்டுரையை எடுத்தாள்வோர் எடுத்த இடம், கட்டுரையாளன் பெயர் சுட்டுங்கள்.



சனி, 23 செப்டம்பர், 2017

விபுலாநந்த அடிகளார் ஆவணப்படத்திற்காக அறிஞர் பெ. சு. மணியைச் சந்தித்த நினைவுகள்!

பெ.சு.மணி அவர்களின் நேர்காணலை ஒளிப்பதிவு செய்தல்...

     விபுலாநந்த அடிகளார் ஆவணப்படத்தின் படப்பிடிப்புகளை முடித்துக்கொண்டு, படத்தொகுப்பில் இருந்தநேரத்தில் படத்தில் ஒரு பற்றாக்குறை நிலவுவதை உணர்ந்தேன். காஞ்சிபுரத்தில் வாழும் தவத்திரு ஆத்மகனானந்த சுவாமிகளையும், அறிஞர் பெ. மணியையும் சந்தித்து, அவர்களின் நேர்காணலை ஆவணப்படத்தில் இணைக்கவில்லை என்றால் படம் முழுமையடையாது என்று அப்பொழுது நினைத்தேன்.

     விபுலாநந்த அடிகளார் வரலாற்றினை அறிந்த பெருமக்களுள் இவர்கள் இருவரும் குறிப்பிடத்தக்கவர்கள். முதற்கட்டப் படப்பிடிப்புக்கு நாங்கள் தயாரானபொழுதே அறிஞர் பெ. சு. மணியைத் தொடர்புகொண்டேன். உடல்நலம் பாதித்து, அவரின் சென்னை இல்லத்தில் ஓய்வில் இருந்தார். விபுலாநந்த அடிகளார் ஆவணப்படத்தின் விவரத்தைச் சொன்னவுடன் எழுந்து அமர்ந்துகொண்டு, உரையாடினார். ‘தாம் இப்பொழுது உடல்நலம் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், ஒருமாதம் கழித்த பிறகு பேசிவிட்டு வருமாறும் அறிவுறுத்தினார். ஒருமாதம் கழித்தபிறகு நாளும் அவரைத் தொடர்புகொண்டும் பேச இயலவில்லை. சில மாதம் கழித்தே, அவர் புதுதில்லியில் தம் மகள் இல்லத்தில் இருக்கும் விவரம் அறிந்தேன். புதுதில்லியிலிருந்து திரும்பியதும் சந்திக்கலாம் என்று அறிஞர் மணி அவர்களின் அழைப்புக்குக் காத்திருந்தேன்.

     அந்தோ ! சில மாதங்கள் கழித்து மணி ஐயா அவர்களின் அருமைத் துணைவியார் இயற்கை எய்தினார் என்ற விவரம் அறிந்து வருந்தினேன். அவர் சென்னை திரும்புவதற்கு உரிய அறிகுறி எதுவும் தென்படவில்லை. மாதங்கள் சில  உருண்டோடின. நிறைவாக, காஞ்சிபுரம் தவத்திரு ஆத்மகனானந்த சுவாமிகளையாவது சந்தித்து, நேர்காணல் செய்து, ஆவணப்படத்தை முடித்துவிடலாம் என்ற முடிவோடு, சுவாமிகளிடம் உரையாட நேரம் கேட்டவண்ணம் இருந்தோம். அவர்களுக்கு இருந்த பல்வேறு பணிகளுக்கு இடையே நேரம் தர வாய்ப்பு அமையவில்லை, ஒரு நாள் திடுமெனச் சுவாமிகள் நேர்காணலுக்கு நேரம் ஒதுக்கினார்கள்

     விடுமுறை நாளொன்றில் புதுச்சேரியில் வைகறையில் புறப்பட்டு, காலை உணவு வேளைக்குக் காஞ்சிபுரம் சென்று சேர்ந்தோம். வழியிடையில் ஒரு கடையில் உண்டு முடித்தோம். சுவாமிகள் குறிப்பிட்ட நேரத்துக்குக் காஞ்சிபுரம் இராமகிருஷ்ண மிஷனின் தவப்பள்ளிக்குள் சென்றோம். எங்களின் வருகையை அறிந்த தவத்திரு ஆத்மகனானந்த சுவாமிகள் நேர்காணலுக்குத் தயாரானார்கள். அரைமணி நேரத்திற்கும் மேலாக விபுலாநந்த அடிகளாரின் சிறப்புகளைச் சுவாமிகள் நினைவுகூர்ந்தார்கள். தாம் இலங்கையில் அமைந்துள்ள இராமகிருஷ்ண மிஷனில் பணியாற்றிய பட்டறிவுகளைப் பகிர்ந்துகொண்டார். எங்களுக்குத் தேநீர் தந்து அன்பொழுக விருந்தோம்பினார்.

     ஆத்மகனானந்த அடிகளாரிடம் உரையாடியபிறகு விடைபெற நினைத்தோம். அப்பொழுது பெ. சு.மணி ஐயா குறித்து, எங்களின் உரையாடல் திரும்பியது. தில்லியில் இருப்பதால் அவரின் செவ்வியை  இந்த ஆவணப்படத்தில் இணைக்கமுடியாத நிலையில் உள்ளதைக் கவலையுடன் சுவாமிகளிடம் நான் தெரிவித்தேன். அப்பொழுதுதான் பெ.சு.மணி அவர்கள் தம் மகள் இல்லத்தில் பெங்களூரில் தங்கியிருப்பதைத் தவத்திரு சுவாமிகள் குறிப்பிட்டார்கள். பெ.சு. மணி அவர்களின் தொடர்பு எண்ணையும் வழங்கியருளி ஆசி கூறினார்கள்.

     ஓராண்டாக நான் காத்திருக்கும் நிலையை அறிஞர் பெ. சு. மணி ஐயாவிடம் கூறினேன். இப்பொழுது தவத்திரு. சுவாமிகளுடன் உரையாடிய விவரத்தைக் கூறி, தாங்கள் அனுமதித்தால் இந்தநொடியே பெங்களூர் வர அணியமாக உள்ளேன் என்று கூறினேன். என் ஆர்வத்தை நன்கு உணர்ந்த மணி ஐயா, எங்களை அன்புடன் வரவேற்பதற்குப் பெங்களூரில் காத்திருக்கும் விவரத்தைச் சொன்னார். அவர்தம் மகளாரிடம் பெங்களூர் இல்ல முகவரியைப் பெற்றுக்கொண்டோம். காஞ்சிபுரம் சுவாமிகளும் எங்களுக்கு விடைகொடுத்தார்கள்.

     எங்கள் மகிழுந்து பெங்களூர் நோக்கி விரைந்தது. என் மாமனார் இல்லம் போகும் வழியில்தான் இருந்தது. அங்குச் சென்றால் நேரம் வீணாகும் என்று அதனைத் தவிர்த்தேன். ஆர்க்காடு, வேலூர், வாணியம்பாடி வழியாக எங்களின் பயணம் அமைந்தது. நாங்கள் வருவதைத் தெரிந்துகொண்ட வாணியம்பாடிப் பேராசிரியர் சிவராஜ் அவர்கள் எங்களுக்காகச் சிறப்பு உணவுக்கு  உரிய ஏற்பாடுகளைச் செய்தார். எங்கள் ஓட்டுநர் பஷீர் அவர்களும், ஒளி ஓவியர் செழியன் அவர்களும் புலவுச்சோற்றை உண்ணும் ஆர்வத்தில் மகிழ்ச்சியாக உரையாடியவாறு வந்தனர். சென்னை - பெங்களூர்ச் சாலை சீராக இருந்ததால் எங்களின் புதிய மகிழுந்து அமைதியாக முன்னேறிச் சென்றது.  வாணியம்பாடியை நெருங்கினோம். மகிழுந்தை ஓர் ஓரத்தில் நிறுத்திவிட்டு, புலால்  உணவினை நிறைவாக உண்டோம். விருந்தோம்பலுக்குப் பெயர்பெற்றவர் பேராசிரியர் சிவராஜ் என்பதைத் தமிழுலகு நன்கறியும். ஓட்டுநர் பஷீர் ஒர் வெள்ளைச்சட்டையைப் புதியதாக வாங்கிக்கொண்டு வந்தார். சீருடை இல்லை என்றால் பெங்களூர்க் காவல்துறையினர் தண்டம் விதிப்பார்கள் என்று கூறினார். வண்டியும் சாலையும் நேர்த்தியாக இருந்ததால் அதிவிரைவாக வண்டி ஓடியது. மாலை 6 மணியளவில் பெங்களூரில் உள்ள அறிஞர் பெ. சு. மணி அவர்கள் தங்கியுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பை அடைந்தோம்.

     பெ.சு. மணி அவர்கள் என் முயற்சியை அறிந்து வியந்தார்கள். நெஞ்சாரப் பாராட்டினார்கள். என் நூல்களைப் பரிசளித்தேன். அயலகத் தமிழறிஞர்கள் நூலைப் பார்த்து. நெஞ்சம் நிறைந்து வாழ்த்தினார். இந்த நூலின் தேவையையும் சிறப்பையும் அப்பொழுதே மதிப்பிட்டு வியந்து - விதந்து ஓதினார் இந்த நூல் அச்சிட்ட வரலாறும், தமிழக அரசின் நூலகத்துறையின் ஆதரவு இல்லாததால் நூல் தேங்கிக்கிடக்கும் அவல நினைவும், என் வாழ்நாளில்  இனி நூல் அச்சிடுவது இல்லை; நிறுத்திக்கொள்வோம் என்று முடிவெடுத்ததையும் ஐயாவிடம் பகிர்ந்துகொண்டேன். எங்கள் உரையாடலையும், ஆவணப்படத்திற்கு உரிய செய்திகளையும் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகப் பதிவுசெய்துகொண்டோம். அறிஞர் பெ.சு. மணி ஐயாவின் குடும்பத்தினர் இரவு உணவு முடித்துச் செல்லுமாறு அன்பொழுக வேண்டினர். பின்பொருமுறை வருவதாக உறுதியளித்துவிட்டு இரவு எட்டுமணியளவில் அனைவரிடமும் விடைபெற்றுக்கொண்டோம்.

மு.இளங்கோவன், பெ.சு.மணி


     பெங்களூர் நகரம் இரவுப்பொழுதில் மின்விளக்குகளால் புதுக்கோலம் கொண்டிருந்தது. வெளிச்ச அழகைச் சுவைத்தவாறு பெங்களூரின் நடுநகர் கடந்து, புறநகர் வந்துசேர்ந்தோம்.  தமிழக எல்லையை அடைந்து, நள்ளிரவு திருப்பத்தூர் வந்து இரவு உணவு முடித்தோம். ஊர் அரவம் அடங்கிக் கிடந்தது. திருவண்ணாமலை வழியாக எங்கள் மகிழுந்து விடியல்பொழுதில் புதுச்சேரிக்கு வந்துசேர்ந்தது. அறிஞர் பெ. சு.மணி அவர்கள் பாரதியார் படைப்புகளிலும், விபுலாநந்த ஆய்வுகளிலும் தோய்ந்திருந்த பெரும்புலமையை அவரின் உரையாடல் எனக்கு உணர்த்தியது. தமிழாய்வுலகில் பின்பற்றத்தகுந்த ஆராய்ச்சி ஆளுமை பெ.சு.மணி என்று நவிரமலையில் ஏறி நின்று பெருங்குரலெழுப்பி உரக்கக் கூறுவேன்!

வியாழன், 31 ஆகஸ்ட், 2017

மின்மினி இதழ் ஆசிரியர் தில்லை சிதம்பரப்பிள்ளை


தில்லை சிதம்பரப்பிள்ளை

     இணையத்தின் தொடர்பில் இருப்பவர்களுக்கு மின்மினி இதழ் அறிமுகமாகியிருக்க வாய்ப்பு உண்டு. சுவிசர்லாந்திலிருந்து கால் நூற்றாண்டுக் காலமாக வெளிவரும் மின்மினி இதழ் இலவச இதழாகும். விளம்பரம் உட்பட அனைத்தும் இலவசமாக அமைவது இதன் தனிச்சிறப்பு. தில்லை சிதம்பரப்பிள்ளை இதன் ஆசிரியர்; 25/04/1945 இல் பிறந்த இவர், இலங்கை யாழ்ப்பாணம் நாவற்குழியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். பெற்றோர் பெயர் சங்கரப்பிள்ளை சிதம்பரப்பிள்ளை - சரஸ்வதி என்பதாகும். இவர் உயர்தரக் கல்வியை வண்ணை வைத்தீஸ்வராக் கல்லூரியில் பயின்றவர். இலங்கைப் பல்கலைக் கழகம் பேராதனையில் பயின்று 1969 இல் இளங்கலைப் பட்டம் பெற்றவர்.

     தில்லை சிதம்பரப்பிள்ளைக்குக் கல்லூரியில் கற்கும் நாள்களில் கல்வி சாராத பல நூல்களைப் படிப்பதற்குரிய வாய்ப்புகள் அதிகமாகக் கிடைத்தன. எனவே இவரின் உள்ளம் படைப்புநூல்களைப் படைக்க வேண்டும் என்று ஆவல் கொண்டது. எனவே, அவ்வப்போது நாடகங்கள் சிலவற்றை எழுதுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அந்த நாடகங்கள் சில இலங்கை வானொலியில் ஒலிபரப்பப்பட்டன என்பதை இங்குக் குறிப்பிடுதல் வேண்டும்.

     தில்லை சிதம்பரப்பிள்ளை கல்லூரியில் பயின்று, பட்டம் பெற்றுத் தகுந்த வேலை கிடைக்கும் வரை 2 ஆண்டுகள் இலங்கை வீரகேசரிப் பத்திரிகையில் செய்தியாளராகவும், கட்டுரையாளராகவும், சிரித்திரன் பத்திரிகையில் நகைச்சுவை எழுதுபவராகவும் பணியாற்றியவர்.

     இவர் எழுதிய கட்டுரைகள்  வீரகேசரியில் வெளிவந்ததோடு நின்றுவிடாமல்  அக் கட்டுரைகளில் சில அன்றைய ஆட்சியாளர்களிடம் மொழிபெயர்ப்புடன் இவரால் சமர்ப்பிக்கப்பட்டு அவை நடைமுறைக்கு வந்தனவும் உண்டு.

     எடுத்துக்காட்டாக அரசு பனை அபிவிருத்திக் கூட்டுத்தாபனம் அமைக்க அப்போதய இலங்கைப் பல்கலைக்கழகப் புவியியற் பீடத்தலைவர் பேராசிரியர் . குலரத்தினம் அவர்களுக்கு உதவியாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதைக் குறிப்பிடலாம். பல ஆண்டுகளாகப் பெருந்தொகையான பட்டதாரிகள் வேலை எதனையும் பெற வாய்ப்பின்றி இருந்த காரணத்தினை ஆய்வுசெய்தபோது  பட்டதாரிகளுக்கு வேலைப் பயிற்சித் திட்ட முக்கியத்துவம் பற்றிக் கட்டுரை எழுதினார். அதனை அப்போதைய ஆட்சியாளர்களிடம் கையளித்து நடைமுறைப்படுத்துவதற்கு வாய்ப்பை ஏற்படுத்தினார். இதனால் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் - சிங்களப்  பட்டதாரிகள் பயிற்சி பெற்றதுடன் தகுந்த வேலையிலும் அமர்த்தப்பட்டனர்

     இலங்கை அரசாங்கத்தின் கூட்டுத்தாபனம் ஒன்றில் 15 ஆண்டுகள் நிர்வாக உத்தியோகத்தவராகவும், தொடர்ந்து உதவி முகாமையாளராகவும் கடமையாற்றியவர். அக்காலத்தில் தேவைக்கேற்ற சிறந்த கட்டுரைகள் எழுதுவதில் ஈடுபாட்டுடன் செயல்பட்டவர். இக்கட்டுரைகள் பத்திரிகைகளுக்கும், கடமையாற்றிய அரச நிறுவனத்தின் வளர்ச்சிக்கும்  உதவியுள்ளன. தாம் பணிபுரிந்த நிறுவனத்தின் கருத்தரங்கம், மேடைப் பேச்சுக்களில் பேச்சாளராகவும், மொழிபெயர்ப்பாளராகவும் கடமையாற்றியுள்ளார். வவுனியா, மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் கொழும்பு மாவட்டங்களில் பணிபுரிந்துள்ளார்.

                1985 முதல் இலங்கைத் தமிழர்கள் சுவிசர்லாந்தில் குறிப்பிடத்தக்க அளவில் குடியேறினர். சுவிசில் வழக்கில் இருந்த பிரெஞ்சு, ஜெர்மன், இத்தாலி  மொழி இவற்றில் ஒன்றை இருப்பிடத்திற்கேற்ப கற்கவேண்டிய சூழ்நிலை  ஈழத்தமிழர்களுக்கு அப்பொழுது ஏற்பட்டது. அம்மொழிகளைக் கற்றுத் தேர்வதற்குக் கால அவகாசம் தேவைப்பட்டது  இக்காலப் பகுதியில் இங்குவாழ்ந்த தமிழ் மக்கள் உள்ளுர் மொழிபற்றி அதிகம் அறியவில்லை. எனவே  இந்த நாட்டின் நடைமுறைகளையும், சிறார்களின் கல்வி முறைகளையும் அறிவதற்கு இதழின் முக்கியத்துவம் உணர்ந்து, மின்மினி என்ற இதழைத் தொடங்கினார். தங்கள் தங்கள் சமய, கலை பண்பாடுகளைப் பேணிக்காக்க உதவும் வகையில் தமிழ் மொழி அறிவைத் தமிழ்ச் சிறார்களுக்கு ஊட்டவும் சில முக்கிய செய்திகளை அறியச் செய்யவும் மின்மினி இதழ் வெளியிடப்பட்டது



     1993 புரட்டாசி மாதம் சுவிசர்லாந்து  வோ மாநிலத்தில் முதன்முதலாக  மின்மினி இதழ் உதயமானது, முதலில்  மாநில அளவில் இங்கு வாழும் தமிழ் மக்களைச் சென்றடைந்தது. மின்மினி இதழ் நேரடியாக அவரவர் வீட்டுக்கு அஞ்சல் பெட்டியில் இலவசமாகவே கிடைக்கும்படியாக அனுப்பப்பட்டது. பின் படிப்படியாகத் தமிழ் மக்கள் வாழும் எல்லா மாநிலங்களுக்கும் இதன் சேவை பரவியது.  அங்குள்ள வியாபார நிலையங்கள் வழியாகவும் மின்மினி விநியோகிக்கப்பட்டது. பிற்காலத்தில் வெளிநாடுகளுக்கு மின்னஞ்சல் மூலமாகவும் விநியோகிக்கப்படுகின்றது.

                ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளுக்கு அந்த அந்த நாடுகளின் செய்திகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டுத் தனித்தனியாக பதிப்புகள் சில வருடங்கள் வெளியிடப்பட்டன.

                தில்லை சிதம்பரப்பிள்ளை 1985 ஆம் ஆண்டு முதல் சுவிசர்லாந்தில் ஆரம்பத்தில் சேவை மனப்பான்மையுடன் ஆங்கில, தமிழ் உரையாடல்களை மொழிபெயர்த்தும் சில அரச சார்புடைய ஆவண நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்தும் வழங்கியவர்.  தனியார் தமிழ் ஆவணங்களைப் பிரெஞ்சு மொழிக்கு மொழிபெயர்த்தல், வரியிறுப்புப் பத்திரங்களை நிறைவுசெய்வதற்கு உதவுதல், கணினி, இணையம் ஆகியவற்றில் வேண்டியோர்க்கு உறுதுணை அளித்தல் போன்றவற்றில் ஆர்வமாகச் செயல்பட்டவர்.

     தில்லை சிதம்பரப்பிள்ளை மின்மினி என்ற தமிழ் இதழினை அன்றைய தேவைகருதி ஆரம்பித்து 24 வருடங்களாகத் தொடர்ந்து வெளியிட்டு, அதன் ஆசிரியராகவும் கடமையாற்றிவருகின்றார். அயல்நாட்டு எழுத்தாளர்களுடன் நல்ல தொடர்பில் உள்ளார்.

                2013 ஆம் ஆண்டில் இருந்து மின்மினி இதழின் வழியாக மாநாடுகள் நடத்துவோர்க்கும், ஆய்வுக்கட்டுரைகள் வழங்கும் ஆய்வாளர்களுக்கும் தொடர்புப்பாலமாகச் சேவைமனப்பான்மையுடன் கடமையாற்றி வருவதைக் குறிப்பிட்டுச் சொல்லுதல் வேண்டும். 2014 இல் நடைபெற்ற 2 வது முருகபக்தி மாநாடு, 2014இல் சிட்னியில் நடைபெற்ற சிட்னி முருகன் சைவநெறி மாநாடு, புதுச்சேரி அருள்மிகு திருப்புகழ் மன்ற வெள்ளிவிழா மாநாடு 2014, 2015 இல் நடைபெற்ற 9 வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு, மற்றும் ஐரோப்பியத் தமிழ் ஆய்வியல் மாநாடு 2015, 2016 மற்றும் உலகத் தமிழ் இணைய மாநாடு  ஆகியவற்றின் செய்திகளை உலக அளவில் தெரியப்படுத்தி, கல்வியாளர்களுக்கு உதவியுள்ளார்.

                தமிழ் மொழி இந்தப் பூமிப்பந்தில் தொடர்ந்து  வாழ வழிதேடும் வகையில் மேற்கொள்ளவேண்டிய பொறிமுறைகளைப் பல ஆய்வாளர்களிடமிருந்து பெற்று, அக்கரையில் பச்சை என்ற கட்டுரைத் தொகுப்பு நூலினை வெளியிட உழைத்துவருகின்றார். இந்த நூல் நூல் வடிவிலும், மின்னூல் வடிவிலும் தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு இலவசமாகவே சென்றடையவேண்டுமென்ற நோக்கில் முயற்சிகள் இவரால்  மேற்கொள்ளப்பட்டுள்ளன.

                மின்மினி இதழில் வெளியிடப்படும் இவரின் கட்டுரைகள் தமிழ் மக்களின் கல்வி சமய வேறுபாடின்றிக் கலை கலாச்சாரங்களைப் பேணிப் பாதுகாப்பதாக அமைவனவாகும்.

     சுவிசர்லாந்தில் மருத்துவக் காப்பீட்டுக் கட்டணம்  ஆண்டுதோறும் அதிகரித்து வருகின்றது.  அதனைக் கட்டுப்படுத்த பலதிட்டங்கள் தீட்டப்பட்டும் அதனை மக்கள் ஆதரிக்கவில்லை என்பதால் அமல்படுத்தப்படவில்லை. மின்மினியில் இது தொடர்பான தீர்வுக்குப் பல கட்டுரைகள் வெளியிடப்பட்டன. மேலும் அதன் மொழிபெயர்ப்பைச் சம்பந்தப்பட்ட அமைச்சர்களுக்கு அவ்வப்போது அனுப்பியதால் பயன் ஏற்பட்டுள்ளது.  மாநிலங்கள் அளவிலான மின்மினி ஆசிரியரது தீர்வுத்திட்டம் ஒன்று மேல்மட்டத்தில் ஆராயப்பட்டுத் தற்போது நடைமுறைப்படுத்த முயற்சிகள் மேற்கொள்வதாக அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன.


     புலம்பெயர்ந்து வாழ்ந்தாலும் தில்லை சிதம்பரப்பிள்ளை அவர்கள் தமிழுக்கும், மக்களுக்கும் பயன்படும் அரிய செயல்களைத் தொடர்ந்துசெய்துவருகின்றார். கால்நூற்றாண்டாக மின்மினி இதழ்வழியாக உலகத் தமிழர்களின் உள்ளத்தில் இடம்பெற்றிருக்கும் இவர்தம் தொண்டு தொடர்வதாகுக! நீடு நிலைபெறுவதாகுக!

****இக்கட்டுரையைப் பயன்படுத்துவோர், திருத்தி எழுதுவோர், களஞ்சியம் உருவாக்குவோர் எடுத்த இடம் சுட்டுங்கள்.

செவ்வாய், 22 ஆகஸ்ட், 2017

நாவற்குடா இளையதம்பி தங்கராசா மறைவு!

நாவற்குடா இளையதம்பி தங்கராசா

     இலங்கையின் மட்டக்களப்பு பிரதேசத்தில் உள்ள நாவற்குடா ஊரில் பிறந்த இளையதம்பி தங்கராசா அவர்கள் தம் 84 ஆம் அகவையில் இன்று (22.08.2017) அதிகாலை 2.30 மணியளவில் கனடாவில் இயற்கை எய்தினார் என்ற செய்தியை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கின்றேன். இவர்தம் பெற்றோர் அமரர் பத்தினியர் இளையதம்பி - பிள்ளையம்மா ஆவர்.

     விபுலாநந்த அடிகளார் உருவாக்கிய சிவாநந்த வித்தியாலயத்தில் கல்வி பயின்றவர். தங்கராசா அவர்கள் இலங்கை மத்திய வங்கியின் ஆய்வுத்துறையில் உயரதிகாரியாக 38 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வுபெற்றவர்.  தம் பணிக்காலத்தில் பல ஆய்வுக்கட்டுரைகள் எழுதித் தம் மேலதிகாரிகளின் பாராட்டினைப் பெற்றவர். இலங்கைப் போர்ச்சூழலால் கனடாவுக்குக் குடிபெயர்ந்த இவர் தம் மகன்களுடன் அமைதி வாழ்க்கை வாழ்ந்து வந்தவர்.

                 தங்கராசா அவர்கள் கடந்த 2015 ஆம்  ஆண்டு" நான் என் அம்மாவின் பிள்ளை" என்ற புதினத்தை எழுதி, இரண்டு பாகங்களாக வெளியிட்டவர். 2008 இல்  மட்டக்களப்பு மாமாங்ககேசுவரப் பிள்ளையார் மான்மியம் என்னும் நூலினை ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதிய பெருமைக்குரியவர். இருமொழிப் புலமைகொண்டவர் இவர் என்பதற்கு இந்த நூல்கள் சான்றாகும். மட்டக்களப்பு என்னும் தம் ஊரின்மீது அளப்பரிய ஈடுபாடுகொண்டு இவர் எழுதிய "நான் என் அம்மாவின் பிள்ளை" எனும் அரிய புதினம் என்றும் இவர்பெயரைச் சொல்லிக்கொண்டிருக்கும். எழுத்தாளராகவும், மாந்த நேயம்கொண்ட மனிதராகவும் பெருமை மிகு வாழ்க்கை வாழ்ந்த தங்கராசா அவர்கள் என்மீது அளப்பரிய அன்புகொண்டவர்.

நூல்வெளியீட்டு நிகழ்வு, கனடா(12.06.2016)

நூல்வெளியீட்டு நிகழ்வு, கனடா(12.06.2016)


     தங்கராசா அவர்களின் புதின நூல் வெளியீட்டு நிகழ்வுக்காக யான் கனடா சென்றிருந்தபொழுது, தம் இல்லத்துக்கு அழைத்து விருந்தோம்பி, நினைவாக யாழ்நூலைப் பரிசளித்து, விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் உருவாவதற்குத் தூண்டுகோலாக இருந்தவர். பேராசிரியர் இ.பாலசுந்தரம், தமிழ்த்தொண்டர் சிவம்வேலுப்பிள்ளை ஆகியோரின் தொடர்பால் அமைந்த தங்கராசா ஐயாவின் நட்பும், நினைவும் ஊழிதோறும் நீடித்து நிற்கும்.

     எங்களின் விபுலாநந்த அடிகளார் ஆவணப் படத்தைப் பார்த்து, எங்கள் முயற்சியை ஊக்கப்படுத்துவார்கள் என்று அதற்குரிய நாளுக்குக் காத்திருந்த வேளையில் தங்கராசா அவர்களின் திடீர் மறைவு எனக்கு மிகப்பெரிய அதிர்ச்சியைத் தந்தது. அண்மைக்காலமாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த தங்கராசா அவர்களுக்கு உயர்தரமான மருத்துவசிகிச்சை அளிக்கப்பட்டிருந்தும் மருத்துவம் பயனளிக்காத நிலையில் இன்று அவரின் ஆருயிர் பிரிந்தது.

     ஐயா தங்கராசா அவர்களைப் பிரிந்து வருந்தும் எங்கள் அன்னையார் சொர்ணம்மா தங்கராசா அவர்களுக்கும், அவர்களின் அருமை மகன்கள், மருமகள்கள், பெயரப்பிள்ளைகள், உற்றார், உறவினர், நண்பர்கள் என அனைவருக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

     மீன்பாடும் தேன்நாடு தம் தவப்புதல்வருள் ஒருவரை இழந்து நிற்கின்றது!
தங்கராசா ஐயா குடும்பத்தாருடன் ...

நான் என் அம்மாவின் பிள்ளை புதினம் பற்றிய அறிய இங்கே செல்க!

ஞாயிறு, 24 ஜூலை, 2016

புலவர் பொ.வேல்சாமியின் உரைகளை ஆவணமாக்கும் பணி!

புலவர் பொ.வேல்சாமி

புலவர் பொ. வேல்சாமியின் கட்டுரைகளைக் காலச்சுவடு, தீராநதி, கவிதாசரன் உள்ளிட்ட ஏடுகளில் படித்ததுண்டு. ஆய்வு மாணவனாக இருந்த காலத்தில் ஐயம் ஏற்படும்பொழுது அவருடன் உரையாட நினைத்தாலும் இருப்பிடம் அறியாது, காலங்கள் உருண்டோடின. சிலவாண்டுகளுக்கு முன்னர் நாமக்கல் சென்ற ஓர் இளங்காலைப் பொழுதில் பொ. வேல்சாமியின் இல்லம் சென்று கண்டுவந்தேன். அதன் பிறகு ஓய்வு கிடைக்கும்பொழுதெல்லாம் இருவரும் உரையாடுவோம். சில நேரம் உரையாடல் மணிக்கணக்கில் நீள்வதும் உண்டு. பயனுடைய செய்திகளை  அமுதசுரபிபோல வழங்குவதில் ஆர்வம் கொண்டவர். தமிழ் நூல்கள் இணையத்தில் கிடைப்பதைக் கண்டு அதனை உடனுக்குடன் தெரிவிப்பவர். அரிய பழைய நூல்களை மின்படிகளாக மாற்றி வைத்துள்ள இணையதளங்களின் முகவரிகளை எடுத்துரைப்பவர். தமிழ்நாட்டில் உள்ள கல்வி நிறுவனங்கள் இந்த முயற்சியில் ஈடுபடவேண்டும் என்ற தம் விருப்பத்தை ஒவ்வொரு முறையும் கூறத் தயங்குவதில்லை. இவரின் இல்லத்தின் அருகில் நாம் இருந்தால் நம் அறிவுத்தாகம் தணிப்பார் என்று நினைத்து, ஏமாற்றம்கொள்வதுண்டு.

பதிப்புச் சார்ந்த செய்திகளில் எனக்கு ஐயம் ஏற்பட்டால் உடனே பொ. வேல்சாமியை அழைத்து, தெளிவு பெறுவேன். உலகத் தொல்காப்பிய மன்றம் என்ற அமைப்பைத் தொடங்க நினைத்தபொழுது நோக்கம் கூறினோம்; ஆர்வமாகத் தழுவி அன்புமொழிகளைத் தந்தவர். இந்த மன்றத்தின் பொழுது, சற்றும் தயங்காமல் இணைந்துகொண்டவர். தொல்காப்பியம் தொடர்பில் சலிப்பில்லாமல் மணிக்கணக்கில் செய்திகளைச் சொல்பவர்.

தொல்காப்பியத்தின் பழைய பதிப்புகள் குறித்து விரல்முனையில் செய்திகளை வைத்திருப்பவர். பிற நூல்களைப் பதிப்பித்த பதிப்பாசிரியர்கள் தொல்காப்பியம் பற்றியும், சங்க நூல்கள் பற்றியும் அறிவித்திருந்த நூற்றாண்டுப் பழைமையுடைய அறிவிப்புகளை நினைவூட்டுபவர்; ஆங்கிலப் பாதிரிமார்கள் தம் நூல்களிலும், அகரமுதலிகளிலும், நூலடைவுகளிலும் தொல்காப்பியம் குறித்து, வெளிப்படுத்தியுள்ள செய்திகளை நுட்பமாக விளக்குபவர். இவ்வாறு ஒவ்வொரு நாளும் நான் மணிக்கணக்கில் கேட்கும் உரைகளை உலகம் கேட்கவேண்டும் என்று உறுதிபூண்டேன்; அந்த உரைகளும் உலகு உள்ளவரை நிலைப்படுத்தப்பட வேண்டும் என்று வேட்கையுற்றேன்.

பொ. வேல்சாமியைப் புதுச்சேரிக்கு ஒருமுறை வந்து, உலகத் தொல்காப்பிய மன்றத்தில் சொற்பொழிவாற்றும்படிக் கேட்டுக்கொண்டேன். நாளும் நேரமும் வாய்க்கவேண்டும் என்று இருவரும் மாதக் கணக்கில் காலம் கடத்தினோம். நான் கனடாவில் நடைபெற்ற உலகத் தொல்காப்பிய மன்றக் கருத்தரங்கிற்குச் சென்று, திரும்பிய பிறகு பொழிவை வைத்துக்கொள்ளலாம் என்று மனத்தளவில் உறுதியுரைத்தார்; உரைத்தபடி நாளும் கொடுத்தார். உலகத் தொல்காப்பிய மன்றத்தின் ஏழாம் பொழிவுக்கு வருகை தரும் பொ. வேல்சாமியின் வருகைக்குக் காத்துக்கிடந்தேன்.

தொல்காப்பிய மன்றப் பொழிவுகள் மாலை 6.30 மணிக்குத் தொடங்கி, இரவு 8 மணிக்கு நிறைவுறும். தமிழ்த்தாய் வாழ்த்து, வரவேற்புரை, தலைமையுரை எனப் பதினைந்து நிமையம் கழிந்தாலும் ஒன்றேகால் மணிநேரம் சிறப்புரை அமையும். ஒன்றேகால் மணிநேரத்தில் பொ.வேல்சாமியின் பொழிவை அடக்கமுடியாது என்ற நினைவு எனக்குப் பிறகுதான் வந்தது.

பொ. வேல்சாமி அவர்களோ நாமக்கல்லில் முட்டைவணிகம் செய்யும் தொழில் முனைவர். அவரின் நிறுவனத்தில் சரக்குந்து ஓட்டவும், முட்டைகளைக் கணக்கிடவும், பணத்தை வாங்கி வைக்கவும் எனப் பல பணியாளர்கள் உள்ளனர். அவர்கள் அனைவரையும் மேற்பார்வையிடும் பொறுப்பு இவருக்கு உண்டு. வணிகத்தை விட்டுவிட்டு, தமிழ்க்காப்பு முயற்சிக்கு முதல்நாளே புதுச்சேரிக்கு வர வேண்டும் என்று கேட்க எனக்குத் தயக்கம் இருந்தது. இருப்பினும் என் விருப்பத்தைச் சொன்னதும் நிகழ்ச்சி நடைபெறுவதற்கு முன் முதல்நாள் இரவே புதுச்சேரிக்கு வர ஒப்புதல் தந்தார். தொல்காப்பியப் பொழிவுக்குரிய நாளும் வந்தது. பொ. வேல்சாமி தம் மகிழ்வுந்தில் புதுச்சேரிக்கு வந்துகொண்டிருப்பதை அறிவித்தவண்ணம் இருந்தார். அவர் தங்குவதற்கு ஒரு விடுதியை ஏற்பாடு செய்திருந்தேன். இரவு பதினொரு மணியளவில் புதுவை வந்து சேர்ந்தார். கையில் இருந்த சிற்றுண்டியைக் கொடுத்து, உண்டு, ஓய்வெடுக்கும்படிக் கேட்டுக்கொண்டு இல்லம் திரும்பினேன்.

23. 07. 2016 காலை 7 மணியளவில் விடுதியின் கதவைத் தட்டினேன். குளித்து முடித்தார்; உடைமாற்றிக்கொண்டு உடன்புறப்பட்டார். இந்த நேரத்தில் ஒளி ஓவியர் திரு. சிவக்குமாரும் வந்து இணைந்துகொண்டார்; சிற்றுண்டி முடித்தோம். புதுவையின் கடற்கரை ஒட்டிய கழிமுகப் பகுதியில் இருந்த அமைதியான தென்னந்தோப்பில் எங்களின் மகிழ்வுந்து நின்றது. படப்பிடிப்புக்கு ஆயத்தமானோம். ஒளிப்பதிவுக் கருவிகளைப் பொருத்தினோம்; பொ. வேல்சாமியை இருக்கையில் அமரவைத்து, அவரிடமிருந்து நாங்கள் எதிர்பார்க்கும் உரைப்பகுதிகளை நினைவூட்டிப் பேசும்படிக் குறிப்பிட்டோம்.
பொ. வேல்சாமியுடன் உரையாடும் மு..இ.

பொ.வேல்சாமி தமிழின் பன்முகத் தளங்களைக் கற்றறிந்தவர். கரந்தைப் புலவர் கல்லூரியின் மாணவர். பேராசிரியர்கள் அடிகளாசிரியர், ச.பாலசுந்தரம் போன்றவர்களிடம் பழந்தமிழ் நூல்களைப் படித்தவர். இலங்கைப் பேராசிரியர். கா. சிவத்தம்பியுடன் பழகி ஆய்வுப்போக்குகளை அறிந்தவர். இலக்கியம், இலக்கணம், கல்வெட்டு, வரலாறு, சமூகவியல், கோட்பாட்டு ஆய்வுகளைக் கற்றுத் துறைபோனவர். எனவே இவரின் பேச்சை ஒரு வரம்பிட்டு அடக்க வேண்டும் என்று நினைத்தேன். இல்லையென்றால் பேச்சு வேறு வேறு வடிவங்களைப் பெற்றுவிடும் என்று நினைத்தேன். கரைபுரண்டு ஓடும் காவிரியாற்றைக் கரைக்குள் அடக்கி, கல்லணை கட்டித் தேக்கி, அதன் வேகத்தை வயலுக்குள் அமைதியாக்கி அனுப்பும் ஓர் உழவனைப் போல் புலவர் பொ. வேல்சாமியின் பேச்சை அமைக்க நினைத்து, சில தலைப்புகளில் தங்கள் பேச்சு இருக்கும்படி விரும்புகின்றேன் என்று கூறினேன். முழுவதும் உடன்பட்டதுடன் தலைப்புகளையும் செப்பமாக அமைக்க அறிவுறுத்தினார். அந்த வகையில்,

1.            நானும் தமிழும்
2.            தமிழ் மரபில் தொல்காப்பியம் பெற்ற இடம்
3.            தொல்காப்பியமும் வடமொழி மரபும்
4.            தொல்காப்பியமும் உரையாசிரியர்களும்
5.            தொல்காப்பியத்தைத் தமிழ்மக்கள் மறந்த வரலாறு
6.            தொல்காப்பியம் மீட்டெடுக்கப்பட்ட வரலாறு
         
என்ற தலைப்புகளில் அமையும்படி பொ. வேல்சாமியின் உரையைக் காணொளியில் பதிவு செய்தோம். ஒளி ஓவியர் திரு. சிவக்குமாரும் அவரின் உதவியாளரும் என் உள்ளக் குறிப்பறிந்து மிக உயர்ந்த தமிழ்ப்பணிக்குத் துணைநின்றனர். எங்களின் படப்பிடிப்புப் பணிக்கு வழக்கம்போல் இடமளித்து உதவிய திரு. செயப்பிரகாஷ் இராசு அவர்கள் என்றும் தமிழர்களின் நன்றிக்குரியவர். பொ. வேல்சாமியின் வாய்மொழியில் தமிழர்கள் தங்கள் பழம்பெருமையை விரைவில் கேட்டும், பார்த்தும் மகிழலாம்.

பதிந்த காட்சிகளைக் கண்டு மகிழ்தல்

படப்பிடிப்பில் இணைந்த முனைவர் ப. பத்மநாபன் அவர்கள்

படப்பிடிப்பில்...