நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

புதன், 12 ஜனவரி, 2022

தஞ்சையில் திருவள்ளுவர் சிலை திறப்பு விழா!


 


நாள்:  15.01.2022 காரி(சனி)க் கிழமை, நேரம்: மாலை 4. மணி

இடம்: திருக்குறள் பிரதீபா குமரன் இல்லம்,

எண் 26, வளனார் நகர், மாதாக்கோட்டை சாலை, தஞ்சாவூர் – 5 

  திருவள்ளுவர் திருநாளில் திருவள்ளுவருக்குச் சிலை எடுப்பித்து, அவர்தம் திருக்குறள் பணியைப் போற்றும் பணியில் தஞ்சையில் வாழும் திரு. அ. கோபிசிங் அவர்களும் பெருமழைப்புலவர் பொ.வே.சோமசுந்தரனார் அவர்களின் உறவினர் திரு சி. சிவபுண்ணியம் அவர்களும் ஈடுபட்டுள்ளனர். இந்த நிகழ்வில் கரந்தைத் தமிழ்க்கல்லூரி மேனாள் முதல்வர்,  ஆய்வறிஞர் பேராசிரியர் கு. சிவமணி அவர்கள் தலைமை தாங்கி, திருவள்ளுவர்  சிலையினைத்  திறந்து வைத்து, அரியதோர் சிறப்புரை வழங்க உள்ளார். சிலை திறப்பு விழாவை முன்னிட்டு நடைபெற்ற போட்டிகளில் பரிசுபெறுவோர்க்குப் புதுவைப் பேராசிரியர் முனைவர் மு.இளங்கோவன் பரிசளித்து வாழ்த்துரை வழங்க உள்ளார். 

  பேராசிரியர் இலலிதா சுந்தரம் அவர்கள் முன்னிலையுரையாற்ற உள்ளார். 

  திருக்குறள் பற்றாளர்கள் குறள்நெறிச் செல்வர், மேனாள் வணிகவரித்துறை அமைச்சர், சி. நா. மீ. உபயதுல்லா, திருக்குறள் தூதர் கு. மோகனராசு, முனைவர் இரா. கலியபெருமாள், முனைவர் கு.வெ. பாலசுப்பிரமணியன், முனைவர் சண்முக செல்வகணபதி, புலவர் நாவை. சிவம் உள்ளிட்ட அறிஞர்கள்  கலந்துகொண்டு விழாவைச் சிறப்பிக்க உள்ளனர். 

 திரு. சி. சிவபுண்ணியம் வரவேற்புரையாற்றவும், திருக்குறள் தூதர் . கோபிசிங் நன்றியுரையாற்றவும் உள்ளனர். புலவர் மா. கந்தசாமி அவர்கள் ஒருங்கிணைப்பில் இந்த நிகழ்வு நடைபெற உள்ளது. 

அனைவரும் வருக!



கருத்துகள் இல்லை: