நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

புதன், 3 ஜூலை, 2013

புதுவைத் தமிழ்ச்சங்கத்தில் முனைவர் மு.இளங்கோவனின் நூல்கள் வெளியீடு

புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவர் மாண்புமிகு வ.சபாபதி அவர்கள் நூலை வெளியிட, முனைவர் வி.முத்து பெற்றுக்கொள்கின்றார். அருகில் மின்துறை அமைச்சர் மாண்புமிகு தி.தியாகராசன், அருகில் மன்னர்மன்னன், மு.இளங்கோவன், சோழன் க.குமார்,  கு.மோகன், கோ.முருகன்

புதுவைப் பல்கலைக்கழகத்தின் உதவிப் பதிவாளர் ப.வைத்தியநாதன் அவர்கள் பேரவைத் தலைவரிடம் நூல்படிகளைப் பெறும் காட்சி.


பேரவைத் தலைவர் அவர்களிடம் நூல் படிகளைப் பெறும் சோழன் க.குமார் அவர்கள்
புதுவை மாநிலத்தின் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலை ஆண்டிராய்டு பயன்பாட்டில் வழங்கும் புதுவை மாநிலத்தின் கல்வி அமைச்சர்  மாண்புமிகு தி.தியாகராசன் அவர்கள், அருகில் பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரியின் முதல்வர் சு.வரலட்சுமி அவர்கள்.

நடவுப்பாடல்கள் ஒளிவட்டை மாண்புமிகு தி.தியாகராசன் அவர்கள் வெளியிட முதல்படியைச் சீர்மிகு நர்மதா சாந்தசீலன் அவர்கள் பெற்றுக்கொண்டார்.

முனைவர் மு.இளங்கோவனின் செவ்விலக்கியச் சிந்தனைப் புதையல், கட்டுரைக் களஞ்சியம் ஆகிய நூல்களின் வெளியீட்டு விழா, புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் 03.07.2013 மாலை 7.00 மணி முதல் இரவு 8 .30 மணிவரை நடைபெற்றது.

புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவர் வ. சபாபதி (எ) கோதண்டராமன் அவர்கள் கலந்துகொண்டு நூல்களை வெளியிட்டார். நூலின் முதற்படிகளைப் புதுவைத் தமிழ்ச்சங்கத்தின் தலைவர் முனைவர் வி.முத்து, புதுவைப் பல்கலைக்கழகத்தின் உதவிப் பதிவாளர் ப. வைத்தியநாதன், சென்னையைச் சேர்ந்த சோழன் க.குமார் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

பாவேந்தரின் மகன் மன்னர்மன்னன், பேராசிரியர் சு.வரலட்சுமி, முனைவர் அரங்க.பாரி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நூலினை மதிப்பீடு செய்து பேராசிரியர் இராச.குழந்தைவேலனார் உரையாற்றினார்.

புதுச்சேரி அரசின் மின்துறை, கல்வித்துறை அமைச்சர் தி.தியாகராசன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு புதிய தமிழ் இணைய தளத்தைத் தொடங்கிவைத்தார். இதில் தமிழறிஞர்களின் வாழ்க்கை வரலாறு, இசைப்பாடல்கள், புகைப்படங்கள் உள்ளன. இந்த இணையதளத்தில் பல்வேறு தமிழ் இணையதளங்களுக்குச் செல்ல இணைப்புகளும் வழங்கப்பட்டுள்ளன.

மேலும் இந்த நிகழ்ச்சியில் புதுவை மாநிலத்தின் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் ஆண்டிராய்டு அப்ளிகேஷனாக, இலவசமாக கிடைக்கும் வகையில் வெளியிடப்பட்டது. இதனை அனைவரும் டவுன்லோடு செய்துகொள்ளலாம். குறிப்பாக மாணவர்களும் ஆசிரியர்களும் தங்கள் செல்போன்களில் இந்தப் பாடலைத் தரவிறக்கிக்கொள்ளலாம்.

மேலும் பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் முதல்பதிப்பு நூல்கள் மின்பதிப்புகளாக இந்த நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டன. மு.இளங்கோவன் பாடிய நடவுப்பாடல்கள் ஒளிவட்டும் வெளியிடப்பட்டது. இதன் முதல் படியைப் புதுச்சேரி பொ.தி.ப. அறக்கட்டளையின் தலைவர் நர்மதா சாந்தசீலன் பெற்றுக்கொண்டார்.

நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களை இலக்கிய வட்டத்தைச் சேர்ந்த கு. மோகன் வரவேற்றார். இலக்கிய வட்டத்தின் செயலாளர் கோ. முருகன் நன்றிகூறினார். பேராசிரியர் ஆ.மணி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் தமிழகம், புதுவையைச் சேர்ந்த தமிழறிஞர்கள், பேராசிரியர்கள், ஆய்வுமாணவர்கள், மாணவர்கள், தமிழ் உணர்வாளர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.

1 கருத்து:

க.நா.சாந்தி லெட்சுமணன். சொன்னது…

பெருமதிப்பிற்குரிய ஐயா அவர்களுக்கு வணக்கம். தங்கள் நூல் வெளியீட்டு விழா குறித்த பதிவு படித்து மிக்க மகிழ்ச்சி. தொடருட்டும் உங்கள் தமிழ்ச்சேவை