நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

புதன், 3 பிப்ரவரி, 2010

புதுச்சேரி முதுமக்கள் தாழிகள் கி.மு.மூன்று அல்லது நான்காம் நூற்றாண்டு சார்ந்தவை...


எலும்புத்துண்டுகள் உள்ள தாழி

புதுச்சேரி அரியாங்குப்பம் அடுத்த மணவெளி பகுதியில் வீடு கட்டுவதற்குத் தோண்டும்போது கிடைத்த முதுமக்கள் தாழிகள் கி.மு. 3 அல்லது 4-ம் நூற்றாண்டு காலத்தைச் சேர்ந்ததாக இருக்கும் என்று தொல்பொருள் ஆய்வுத் துறையினர் கூறுகின்றனர்.எனவே தமிழக வரலாற்றின் தொன்மையை அறிவதற்கு இந்தச் சான்றுகள் பேருதவிபுரியும்.

சென்னைத் தொல்பொருள் துறையின் துணை கண்காணிப்பு தொல்பொருள் ஆய்வாளர் ரமேஷ் முளிமணி தலைமையில் ஒரு குழுவினர் இப் பகுதியை நேற்று ஆய்வு செய்தனர். அவர் கூறுகையில், இப்போது கிடைத்துள்ள ஒரு முதுமக்கள் தாழி காவல் நிலையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. மற்றொரு தாழி தோண்டிய இடத்தில் இருக்கிறது. விரைவில் அப் பகுதியில் அகழ்வாராய்ச்சி செய்ய உள்ளோம். அதன் பிறகு இந்தத் தாழிகள் புதுச்சேரி அருங்காட்சியகத்தில் ஒப்படைக்கப்படும் என்றார்.

இந்தக் குழுவில் இடம் பெற்றுள்ள புதுச்சேரி பல்கலைக் கழகத்தின் வரலாற்றுத்துறை பேராசிரியர் கே.ராஜன் கூறுகையில், தொடக்க வரலாற்று காலமான கி.மு. 3, 4-ம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த மக்களின் ஈமச்சின்னங்களாக இந்த முதுமக்கள் தாழிகள் காணப்படுகின்றன. சங்க இலக்கியங்களில் முதுமக்கள் தாழி பெரிதும் பேசப்படுகின்றன. இப்போது இங்கு வெளியில் எடுத்துள்ள ஒரு தாழியில் ஈம எச்சங்கள் அதாவது எலும்புத் துண்டுகள் கிடைத்துள்ளன. கருப்பு-சிவப்பு மண் பானையாக இது இருக்கிறது. அப் பகுதியில் அகழ்வாராய்ச்சி விரைவில் செய்ய உள்ளோம். தென்னிந்தியாவில் இது போன்ற சின்னங்கள் கிடைப்பது மக்களின் பழங்காலப் பண்பாட்டைத் தெரிந்து கொள்ள உதவுகின்றன. நீத்தோருக்கு அமைக்கப்படும் ஈமச் சின்னம் இது என்றார்.

தமிழர்களின் பண்பாட்டை அறிவதற்கு இந்த முதுமக்கள் தாழிகள் உதவும்.

1 கருத்து:

முனைவர் இரத்தின.புகழேந்தி சொன்னது…

இன்னும் விரிவான தகவல்கள் இருந்தால் வெளியிடுக.
இடுகைக்கு வாழ்த்துகள்