நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

சனி, 29 ஏப்ரல், 2017

தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல்: பேராசிரியர் பெஞ்சமின் இலெபோ உரை!


பேராசிரியர் பெஞ்சமின் இலெபோ உரை 

புதுச்சேரி உலகத் தொல்காப்பிய மன்றம் சார்பில் 29.04.2017(சனிக்கிழமை) மாலை 6.30 மணிக்குப் புதுச்சேரி, செகா கலைக்கூடத்தில் தொல்காப்பியம் குறித்த சிறப்புப் பொழிவு நடைபெற்றது. பிரான்சு நாட்டில் வாழும் பேராசிரியர் பெஞ்சமின் இலெபோ சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றினார். தொல்காப்பியரின் மெய்ப்பாட்டியலும் உடல்மொழிக் கூறுகளும் என்ற தலைப்பில் இவரின் சிறப்புரை அமைந்தது. தொல்காப்பியர் உடல்மொழிக் கூறுகளை நுட்பமாகக் கவனித்து இலக்கணம் வரைந்துள்ளமையை இவரின் உரையில் குறிப்பிட்டார். தொல்காப்பியம் பொருளதிகாரத்தில் அமைந்துள்ள மெய்ப்பாட்டியல் குறித்தும், உடல்மொழிக்கூறுகள் குறித்தும் இலக்கியங்களிலிருந்து மேற்கோள் காட்டி இவர் பேசினார்.

பேராசிரியர் ம. இலெனின் தங்கப்பா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் முனைவர் ப. பத்மநாபன் வரவேற்புரை நிகழ்த்தினார். வில்லிசை வேந்தர் இ. பட்டாபிராமன் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடினார். முனைவர் மு.இளங்கோவன் அறிமுகவுரையாற்றினார்.

பேராசிரியர் பெஞ்சமின் இலெபோ அவர்களின் தமிழ்ப்பணியைப் பாராட்டித் தமிழ்ப்பணிச் செம்மல் என்ற விருதினைப் பாவலர் சு. சண்முகசுந்தரம் வழங்கிப் பாராட்டினார். முனைவர் இரா. கோவலன் நன்றியுரை வழங்கினார்.

புலவர் சீனு. இராமச்சந்திரன், தூ. சடகோபன், வெல்லும் தூயதமிழ் ஆசிரியர் க. தமிழமல்லன், தனித்தமிழ்ப் பாவலர் தமிழியக்கன், பேராசிரியர் க. நாராயணன், அ.இராமதாஸ், பாவலர் துரை. மாலிறையன், பேராசிரியர் அ. செல்லப்பெருமாள், பேராசிரியர் பட்டம்மாள், சாது. அரிமாவளவன், அறிவியல் அறிஞர் தாமரைக்கோ உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

பேராசிரியர் பெஞ்சமின் இலெபோ அவர்களுக்குத் 
தமிழ்ப்பணிச் செல்வர் விருது அளித்தல் பாவலர் சு. சண்முகசுந்தரம்

பேராசிரியர் ம.இலெனின் தங்கப்பா உரை

முனைவர் ப. பத்மநாபன் வரவேற்புரை

மு.இளங்கோவன் அறிமுகவுரை

செவ்வாய், 25 ஏப்ரல், 2017

முனைவர் அ. அறிவுநம்பி அவர்களின் நினைவேந்தல் கூட்டம்!




புதுவைப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும், புதுவைத் திருக்குறள் மன்றத்தின் (புதிமம்) செயலாளருமான முனைவர் . அறிவுநம்பி அவர்கள் 09.04.2017 இல் இயற்கை எய்தியதை முன்னிட்டு, இன்று 25.04.2017 மாலை 6 மணிக்குப் புதுச்சேரி செயராம் உணவகத்தின் சங்கமித்ரா அரங்கில் நினைவேந்தல் கூட்டம் ஒன்றைப் புதுவைத் திருக்குறள் மன்றம் ஏற்பாடு செய்துள்ளது.

முனைவர் அ. அறிவுநம்பியின் நினைவைத் தாங்கியுள்ள தமிழார்வலர்கள், திருக்குறள் அன்பர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அன்புடன் அழைக்கின்றோம்.

நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்

பெருமை உடைத்(து)இவ் வுலகு - திருக்குறள்.