நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வெள்ளி, 21 மார்ச், 2014

உலகத் தமிழ்த் தகவல் தொழில் நுட்ப மன்றமும், புதுவைத் தமிழ்ச்சங்கமும் இணைந்து புதுச்சேரியில் நடத்தும் பதின்மூன்றாவது உலகத் தமிழ் இணைய மாநாடு



       உத்தமம் நிறுவனம் தனது பதின்மூன்றாவது உலகத் தமிழ் இணைய மாநாட்டைப் புதுவை மாநகரில் செப்டம்பர் மாதம் 19, 20 மற்றும் 21 ஆம் நாட்களில் நடத்தத் திட்டமிட்டிருப்பதை அறிவிப்பதில் பெருமை கொள்கிறது.  உத்தமம் நிறுவனம் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து உலகெங்கிலும் உள்ள தமிழர்களை இணைப்பதில் மிகவும் முனைப்பாகச் செயல்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.  இந்நிறுவனம் தொடங்கிய கடந்த பதினாறு வருடங்களில் பன்னிரண்டு மாநாடுகளைப் பல்வேறு நாடுகளில் நடத்தி உலகெங்கிலும் உள்ள தமிழர்களை ஒருங்கிணைத்துள்ளமை தமிழர்கள் அனைவரும் பெருமைப்படும் செய்தியாகும். தமிழகம்¸ சிங்கப்பூர்¸ மலேசியா, செர்மனி மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் இந்நிறுவனத்தின் மாநாடுகளை மிகவும் சிறப்பாக நடத்தி உலகத் தமிழர்கள் அனைவரையும் இந்நாடுகளில் ஒருங்கிணைய வைத்துள்ளது.

 உத்தமம் நிறுவனத்தின் பதின்மூன்றாவது தமிழ் இணைய மாநாட்டைப் புதுவை மாநகரில் முதல் முறையாக நடத்துவதில் தமிழர்கள் நாம் அனைவரும் பெருமையடைய வேண்டும்!  மாபெரும் தமிழ்க் கவிஞர் பாரதிதாசன் அவர்கள் பிறந்த இம்மண்ணில் உலகத் தமிழர்கள் அனைவரும் தமிழ் மற்றும் இணையம் குறித்துத் தங்களின் முயற்சிகளை எடுத்தியம்ப ஒருங்கிணைய உள்ளனர். இம்மாநாட்டைச் சிறப்புற நடத்த பேராதரவு அளித்திட முன் வந்திருக்கும் புதுவை மாநில முதல்வர் மாண்புமிகு ந. அரங்கசாமி அவர்களுக்கும்¸ புதுவைத் தமிழ்ச் சங்கத் தலைவர் திரு. வி. முத்து அவர்களுக்கும் பல்லவன் கல்வி நிறுவனங்கள், அரசு சார், தனியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் உத்தமம் நிறுவனத்தின் நிறுவனர் பேராசிரியர் மு. அனந்தகிருட்டிணன் ஆகியோருக்கும், ஏனைய தமிழ் நல்லுள்ளங்களுக்கும் உத்தமம் நிறுவனம் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது. 

இந்த மாநாடு ஆய்வரங்கம், மக்கள் அரங்கம், கண்காட்சி என்ற மூன்று நிலைகளில் நடைபெறும். உலகின் பல பாகங்களிலிருந்தும் 300 மேற்பட்ட ஆய்வாளர்கள் கலந்துகொள்ள உள்ளனர். கட்டுரைச் சுருக்கம் மற்றும் கட்டுரைகளை அனுப்பவேண்டிய கடைசி நாட்கள் குறித்த செய்திகளை உத்தமம் நிறுவனத்தின் இணையப்பக்கத்தில் (http://home.infitt.org/) வெளியிடுவோம்.  மேலதிகச் செய்திகளுக்கு உத்தமம் நிறுவனத்தின் தலைவர் வாசு அரங்கநாதனைத் தொடர்புகொள்ளலாம்.

புதுச்சேரியில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் உத்தமத்தின் முன்னாள் செயல் இயக்குநர் மணியம்(சிங்கப்பூர்), புதுவைத் தமிழ்ச்சங்கத் தலைவர் வி. முத்து, முனைவர் மு.இளங்கோவன் இந்தச் செய்திகளைத் தெரிவித்தனர்.

சனி, 8 மார்ச், 2014

தட்டுப்புடைக்கண் வந்தான்…



அண்மையில் எங்கள்  கல்லூரிக்கு உரையாற்ற வந்த முதுபெரும் தமிழ்ப் பேராசிரியர் தெ. முருகசாமி ஐயா அவர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தபொழுது எங்கள் பேச்சு தொல்காப்பியம் பக்கம் திரும்பியது. அப்பொழுது சேனாவரையரின் உரைச்சிறப்பைப் பேராசிரியர் அவர்கள் நினைவுகூர்ந்தார். சேனாவரையர் குறிப்பிடும்தட்டுப்புடைக்கண் வந்தான்என்னும் தொடர் பற்றி நம் பேராசிரியர் அவர்கள் அரிய விளக்கம் சொன்னார்கள்.

தட்டுப்புடை என்றவுடன் முறத்தைப் பயன்படுத்தித் தட்டிக்கொழிக்கும் செயலே நினைவுக்கு வரும். ஆனால் நம் பேராசிரியர் தட்டுதலுக்கும் புடைத்தலுக்குமான இடம் என்று குறிப்பிட்டார். பழங்காலத்தில் போர்ப் பயிற்சி பெறும் இடம் இது என்றார். இன்று நாம் குறிப்பிடும் GYM போன்ற பயிற்சிக்களம் போன்று இது பண்டைய நாளில் இருந்திருக்கும் என்று பேராசிரியர் நம்பிக்கையுடன் பேசினார்.

தொல்காப்பிய உரையாசிரியரின் சொல்தேர்ச்சிப் புலமையை அறியச் சேனாவரையத்தில் நுழைந்து தேடிப்பார்த்தேன்.

என் பேராசிரியர் கு. சுந்தரமூர்த்தி அவர்கள் இந்த இடத்திற்கு என்ன விளக்கம் தருகின்றார் என்று பார்த்தபொழுது தட்டுப்புடை என்பதற்கு நெல்கொழிக்கின்ற இடம்; ஒருவகை விளையாட்டிடமுமாம் என்று எழுதியுள்ளமை தெ. முருகசாமி ஐயாவின் கருத்துக்கு வலிமை சேர்ப்பதாக இருந்தது.

வினைசெய்யிடம்    -     தட்டுப்புடையுள்  வந்தான், தட்டுப்புடையுள் வலியுண்டு. என்று கல்லாடர் விருத்தியுரை குறிப்பிடும். தட்டுப்புடை என்ற சொல் தமிழகத்தின் பிற பகுதிகளில் அல்லது கேரளத்தில் என்ன பொருளில் வருகின்றது என்பதை அறிந்தோர் அறிவிக்க நன்றியுடன் ஏற்பேன்.

தொல்காப்பிய நூற்பாக்களும் அவற்றிற்கு உரையாசிரியர்கள் தரும் விளக்கங்களும் பழந்தமிழகத்தின் பல்வேறு உண்மைகளைத் தாங்கி நிற்கின்றன. தொல்காப்பியர், சொல்லதிகாரம் வேற்றுமையியலில் நூற்பா 71 இல் ஏழாம் வேற்றுமை பற்றி எடுத்துரைக்குமிடத்தில்,

ஏழாகுவதே
கண்ணெனப் பெயரிய வேற்றுமைக் கிளவி
வினைசெய் இடத்தின், நிலத்தின், காலத்தின்
அனைவகைக் குறிப்பின் தோன்றும் அதுவே

என்று குறிப்பிடுவார். (நூற்பாவின் பொருள்: கண் என்பது ஏழாம் வேற்றுமை உருபாகும். அது இடம், நிலம், காலம் ஆகிய பொருள்களை இடமாகக் குறித்து வருகின்றபொழுதே வேற்றுமையாக அமையும். “அனைவகைக் குறிப்புஎன்றமையான் கண் முதலிய உருபுகள் யாண்டு வரினும் அவ்விடமெல்லாம் ஏழாம் வேற்றுமை உருபு என்று கருத வேண்டாம்) இந்த நூற்பா விளக்கத்தில்தான் தட்டுப்புடைக்கண் என்ற தொடர் தட்டுப்படுகின்றது.