சிவாப் பிள்ளை அவர்கள் 1942 மே 9 இல் இலங்கையில் பிறந்தவர். பெற்றோர் சிவ. கணபதி பிள்ளை, நாகம்மா ஆவர். இந்துக் கல்லூரியில் 19 அகவை வரை கல்வி பயின்றவர். பிறகு இலங்கையில் உள்ள மாணவ ஆசிரியர் பயிற்சியைக் (Teacher Training) கோப்பாய்க் கிறித்தவக் கல்லூரியில் பயின்றவர். பொறியியல் படிப்பைக் கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரியில் பகுதி நேரமாகப் பயின்றவர். இலங்கையில் தமிழ் மாணவர்கள் படிப்பதில் இருந்த இடையூற்றின் காரணமாகவும் செல்வச் செழிப்பின் காரணமாகவும் இலண்டனுக்கு 1967 இல் படிக்கச் சென்றார். Diplomo in Mecanical Enginering பயின்றவர். பகுதிநேரமாகக் கணிப்பொறி, தொழில்நுட்பம் சார்ந்த படிப்புகளை முடித்தார். நாட்டிங்காம் பல்கலைக்கழகம் இவர்தம் கல்வி வளர்ச்சிக்குப் பெரிதும் பயன்பட்டது. பல்தொழில்நுட்பக் கல்லூரி ஒன்றில் கணிப்பொறி ஆய்வாளராகப் (1977-1980) பணி புரிந்தார். 1980 இல் கோல்டுசுமித் பல்கலைக்கழகத்தில் பணியேற்றவர். தமிழ்க் குழந்தைகளுக்குத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திக் கற்பிப்பதைத் தம் பணியாகச் செய்து வந்தவர்.
இறையீடுபாடு கொண்ட சிவாப் பிள்ளை அவர்கள் தமிழகம் வரும்பொழுதெல்லாம் அருட்செல்வர் நா. மகாலிங்கம் ஐயா அவர்களின் விருந்தினராகத் தங்கிச் செல்வது வழக்கம். அண்மையில் தமிழகம் வந்திருந்தபொழுது தருமபுர ஆதீனம், தவத்திரு மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகளின் மணி விழாவில் கலந்துகொண்டு, ஆசிபெற்றவர்.
கம்போடியா பயணத்தின்பொழுது சிவாப் பிள்ளையின் உயிர் பிரிந்தமையை நினைத்து வருந்துகின்றேன். குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கல்.
05.10.2008
இல் தமிழ் ஓசை நாளிதழின் களஞ்சியம் பகுதியில் சிவாப் பிள்ளை குறித்து நான் எழுதிய கட்டுரையை
என் வலைப்பதிவிலும் பதிந்துள்ளேன். ஆர்வலர்கள் படிக்க வருகை தாருங்கள்.
