நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

ஞாயிறு, 13 அக்டோபர், 2024

செவாலியே, பேராசிரியர் க. சச்சிதானந்தம்

 

செவாலியே க. சச்சிதானந்தம் 

     [செவாலியே க. சச்சிதானந்தம் அவர்கள் புதுச்சேரியைச் சேர்ந்தவர். தமிழ் ஆங்கிலம், பிரஞ்சு மொழிகளை அறிந்தவர். பிரஞ்சுக்காரர்களுக்குத் தமிழும், தமிழ் மாணவர்களுக்குப் பிரஞ்சும் பயிற்றுவித்தவர். பிரஞ்சு மொழி இலக்கியங்களைக் கதைகளாகவும், கட்டுரைகளாகவும் மொழிபெயர்த்து வழங்கியவர். முப்பத்தைந்து ஆண்டுகள் ஆசிரியப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். இவர்தம் பணிகளைப் பாராட்டிப் பிரான்சு நாட்டு அரசு இவருக்கு 2006 ஆம் ஆண்டில் “செவாலியே” என்ற உயரிய விருதளித்துப் பாராட்டியுள்ளது. 94 அகவை ஆகும் இப்பெரியோர் பிரஞ்சு மொழியிலிருந்து தமிழுக்கு நூல்களை மொழிபெயர்த்து வழங்கும் பணியில் ஆர்வமுடன் ஈடுபட்டு வருகின்றார்.] 

பிரான்சிலிருந்து புதுச்சேரிக்கு வந்திருந்த நண்பர் கோவிந்தசாமி செயராமன் அவர்களிடம் பிரான்சில் நடைபெறும் தமிழ் இலக்கிய நிகழ்வுகள் குறித்தும், நூல் வெளியீடுகள் குறித்தும், தமிழர்களின் வாழ்க்கைச்சூழல் குறித்தும் உரையாடிக்கொண்டிருந்தபொழுது எங்களின் பேச்சு, பிரஞ்சுப் பேராசிரியர் ’செவாலியே’ க. சச்சிதானந்தம் குறித்துத் திரும்பியது. பேராசிரியர்  க. சச்சிதானந்தம் அவர்கள் பிரான்சு நாட்டு அரசின் உயரிய விருதான ’செவாலியே’ விருதுபெற்ற பெருமைக்குரியவர். புதுச்சேரியைச் சேர்ந்தவர். அவரைப் பிரான்சில் ஒருமுறை சந்தித்திருந்தாலும்(27.09.2015) மனம் திறந்து அன்றைய பொழுதில் அங்கு உரையாடமுடியாதபடி சூழல் இருந்தது. புதுவைக்கு அருகில் பலவாண்டுகளாக வாழ்ந்துவரும் அவரைச் சந்தித்து, உரையாடி அவர்தம் பணிகளை அறிய நினைத்திருந்தேன். ஆனால் என் விருப்பம் நிறைவேறாமல் காலங்கள் உருண்டோடிக்கொண்டிருந்தன. 

க. சச்சி அவர்களைச் சந்திக்க விரும்பும் என் விருப்பத்தைச் சொன்னவுடன் கோவிந்தசாமி செயராமன் அவர்கள் கடலூர் மாவட்டம் நல்லாத்தூரில் தங்கியிருந்த நம் பேராசிரியரைத் தொடர்புகொண்டு, சந்திக்க வரும் வேட்கையைச் சொன்னார்கள். மறுநாள்(12.10.2024) சந்திக்க, நாளும் நேரமும் உறுதியானது. குறித்த நேரத்தில் புறப்பட்டு, நல்லாத்தூரை அடைந்தோம். நல்லாத்தூர் என்பது சிவப்பிரகாச சுவாமிகள் அடக்கமான ஊராகும். மேலும் புகழ்பெற்ற சிவன்கோவிலும், பெருமாள் கோவிலும் இவ்வூருக்குப் பெருமை சேர்க்கின்றன. இயற்கையான சிற்றூர்ப்புறச் சூழல்களை நிறைத்துக்கொண்டு, நகரத்து மாந்தர்களை ஆர்வமுடன் வரவேற்கும் அழகுநிறைந்த ஊர் இதுவாகும். முன்னமே இவ்வூருக்கு ஒருமுறை சென்றுள்ளேன்; இவ்வூரின் நீர்நிலைகளை ஒட்டிய வயல்வெளிகளில் காலார நடந்துள்ளேன். எனினும் இந்த ஊரில்தான் பேராசிரியர் க. சச்சிதானந்தம் அவர்கள் வாழ்ந்து வருகின்றார் என்ற செய்தி அந்தநாளில் எனக்குத் தெரியாது. இது நிற்க. 

பேராசிரியர் க. சச்சிதானந்தம் அவர்கள் நல்லாத்தூரில் உள்ள தம் தாய் மாமன் வீட்டில் வாழ்ந்து வருகின்றார். எங்களை அவர்களின் குடும்பத்தினர் அனைவரும் அன்பொழுக வரவேற்றனர். தாம் பிறந்த இடம் இதுதான் என்று பேராசிரியர்  அவர்கள் இல்லத்தின் ஓர் இடத்தைச் சுட்டிக் காட்டி, மகிழ்ந்தார்கள். தமக்கு 94 அகவை ஆகின்றது என்று ஊக்கமுடைய இளைஞரைப்போல் உரைத்தார். கண் பார்வையும் செவிப்புலனும் பேச்சுறுப்புகளும் சிறப்புடன் செயலாற்றுகின்றமையைக் கண்டு மகிழ்ந்தோம். அறிவு ததும்பும் முகமும், அன்பு கனிந்த அகமும் அவரிடம் இருக்கக் கண்டேன். உரையாடலில் மகிழ்ச்சியும் நகைச்சுவையும் தெறித்து ஓடின. தம் மனைவியைப் பலவாண்டுகளுக்கு முன்னமே இழந்த நிலையிலும் தம் பிள்ளைகளை வளர்ப்பதற்காக மறுமணம் செய்துகொள்ளவில்லை என்ற உண்மையை மனந்திறந்து உரைத்தார். தம் பிள்ளைகளை யாதொரு குறையுமில்லாமல் படிக்க வைத்து ஆளாக்கியதாகவும் அனைவரும் நல்ல நிலையில் பிரான்சு நாட்டில் பணியிலிருந்தபடி, மகிழ்ச்சியாக வாழ்ந்து வருவதாகவும் தெரிவித்தார். 

பேராசிரியர் க. சச்சிதானந்தம் அவர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தபொழுது அவரின் இளம்பருவத்து வாழ்க்கையைக் குறித்தும், ஆசிரியர் பணி குறித்தும், குடும்பப் பொறுப்புகள் குறித்தும், தம் பிள்ளைகளின் வளர்ச்சி குறித்தும், தம் ஈடுபாடான பணிகளுக்குக் கிடைத்த பாராட்டுகள், விருதுகள் குறித்தும், தாம் செய்த அறப்பணிகள் குறித்தும் மனந்திறந்து உரையாடினார். அவரின் உயர்வுக்குக் காரணமாக அமைந்தது அவரின் நன்றி பாராட்டும் உள்ளமே என்பதை அவரின் உரையாடல்களின் வழியாக நான் கவனித்தேன். தம் செல்வத்துப் பயன் ஈதல் என்பதை உணர்ந்து, அறக்கட்டளைகள் பல நிறுவித் தம் விருப்பங்கள் தொடர்ந்து நடைபெற வழிசெய்துள்ள பாங்கும், இறையீடுபாட்டின் காரணமாகப் பல பொதுத்தொண்டுகள் ஆற்றியுள்ளதையும் அறிந்து பேருவகையுற்றோம். 

தன் தாய்மாமன் வீட்டில் வளர்ந்தமை, தம் தாய்மாமன் வழி இலக்கிய அறிவு, உலகியல் அறிவு பெற்றதை அவர் எடுத்துரைத்து, அக்குடும்பத்தின் 94 அகவைப் பேரன் என்பதை அவர் நினைவுகூர்ந்தபொழுது அவரின் மேம்பட்ட உயர்ந்த உள்ளம் எனக்குப் புரியத்தொடங்கியது. தம்முடன் பழகியவர்கள் அவ்வப்பொழுது வந்து, தம்மைப் பார்த்துச் செல்வதை மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். வாய்ப்பு அமையும்பொழுது மீண்டும் வந்து பார்த்துச் செல்லுமாறு எங்களிடமும் சொன்ன, அவரிடம் பிரியா விடைபெற்று வந்தபொழுதும் அவரின் வாழ்க்கை வரலாறு என் நெஞ்சில் நினைவுக்குறிப்புகளாக நிலைபெற்றுள்ளது. 

செவாலியே க. சச்சிதானந்தம் வாழ்க்கைக் குறிப்பு: 

க. சச்சிதானந்தம் அவர்கள் கடலூர் மாவட்டம் நல்லாத்தூரில் 30.11.1930 இல் பிறந்தவர். பெற்றோர் பெயர் சவுளி அ. சி. கணேசன் முதலியார், செல்வாம்பாள் ஆவர். புதுச்சேரியில் உள்ள சொசியெத்தே புரோகிரெசீஸ்து பள்ளியிலும் பெத்தி செமினார் பள்ளியிலும் தம் தொடக்கக் கல்வியைப் பயின்றவர். பின்னர் தமிழிலும் பிரெஞ்சிலும் பிரவே(Brevet) பயின்றவர். அதன் பின்னர் தமிழில் பி.லிட், முதுகலை பயின்றவர். பிரெஞ்சு மொழியில் பக்கலோரெயா (Baccalaureat), திப்ளோப் சுப்பேரியேர் (D.S.), Alliance Frse, Paris ஆகிய படிப்புகளை நிறைவுசெய்துவிட்டு, ஆசிரியர் பயிற்சியில் சான்றிதழும் பெற்றவர்.(C.A.P. Certificat Aptitude Pedagogique). தமிழ், ஆங்கிலம், பிரஞ்சு மொழியில் வல்லுநரான க. சச்சிதானந்தம் அவர்கள் தமிழுக்குப் பிறமொழிச் செய்திகளைக் கதைகளாகவும் கட்டுரைகளாகவும் நூல்வடிவில் தந்து மொழிப்பணியாற்றியுள்ளார். முப்பத்தைந்து ஆண்டுகளாகப் பல்லாயிரம் மாணவர்களுக்குப் பிரஞ்சு மொழியையும் தமிழையும் பயிற்றுவித்துள்ளார். இவர்தம் இலக்கியப் பணியைப் பாராட்டி, பிரஞ்சு அரசு 2006 ஆம் ஆண்டு செவாலியே என்ற உயரிய விருதினை வழங்கிச் சிறப்பித்துள்ளது. 

க. சச்சிதானந்தம் அவர்களுக்குக் கிடைத்துள்ள சிறப்புகள்: 

பேராசிரியர் க. சச்சிதானந்தம் அவர்களின் வாழ்நாள் பணியைப் பாராட்டிப் பல்வேறு இலக்கிய அமைப்புகளும் நிறுவனங்களும் பல்வேறு விருதுகளையும் பாராட்டுகளையும் செய்துள்ளன. 

1.   பிரஞ்சு தமிழ் ஆய்வு மாமணி

2.   சான்றோர் மாமணி (2000)

3.   சிறுவர் மனச்செம்மல் (சங்கரதாஸ் நாடக மன்றம்)

4.   மொழியாக்கச் செல்வர் (புதுவைக் குழந்தை எழுத்தாளர் சங்கம்)

5.   செவாலியே தெ. பால்மு அக்காதெமிக் விருது

6.   செந்நாப் புலவர் விருது (2014)

7.   தமிழ்ப்பணிச் செம்மல் விருது (பிரான்சு திருவள்ளுவர் கலைக்கூடம்)

8.   கம்பன் விருது (பாரிசு கம்பன் கழகம்) 

முதலியன குறிப்பிடத்தக்க விருதுகளும் பெருமைகளுமாகும்.  

க. சச்சிதானந்தம் அவர்களின் தமிழ்க்கொடைகள்:



 

1.   அருமைக் கதைகள் 50

2.   அழகுக் கதைகள் 50

3.   ஈய் நகர வானங்

4.   ஏழைகள் (Les Miserables, V. Hugo)

5.   ஒரு நாள் ஒரு கதை (365 கதைகள்)

6.   கட்டுரைக் களஞ்சியம்

7.   கருணை மறவன்

8.   குரங்குக் காடு

9.   சங்கர்

10. சிவப்புப் பாறை

11. சின்னஞ்சிறு பிரஞ்சுக் கதைகள்

12. சுவையான பிரஞ்சுக் கதைகள்

13. சுவையான பிரஞ்சுக் கதைகள் இருபது

14. சுவையான பிரஞ்சுப் பக்கங்கள் -1

15. ஞான மகன்

16. நல்ல கதைகள் 100

17. நல்ல நல்ல கதைகள்

18. நல்லன நானூறு

19. நாள் ஒன்று கதை ஒன்று (365 கதைகள்)

20. நீதி நூல்கள்

21. பரிசு

22. பாடும் பறவை

23. பிரஞ்சு ஆட்சியில் தமிழின் நிலை

24. பிரஞ்சு இலக்கியக் கதைகள்

25. பிரஞ்சுத் தத்துவக் கதைகள்

26. பிரஞ்சு நகைச்சுவை 1, 2

27. பிரஞ்சு நகைச்சுவை-300

28. பிரஞ்சு நன்னெறிக் கதைகள்

29. பிரஞ்சு நாட்டுப்புறக் கதைகள்

30. பிரஞ்சு நாடோடிக் கதைகள் 1, 2

31. பிரஞ்சு வட்டாரக் கதைகள்

32. பிரஞ்சுப் பூக்கள்

33. பிரஞ்சுப் பொன்மொழிகள் 1000

34. பிரெஞ்சுக் கவிதைகள்

35. புகழ்பெற்ற பிரஞ்சுக் கதைகள்

36. பொனாப்பர்த்தின் பகைச் சிறுவன் (Le Moucheron de Bonaparte)

37. போல், விர்ழினி (அச்சில்)

38. மாய ஈட்டி

39. மிகமிக நல்ல கதைகள்

40. விக்தோர் உய்கோ

41.   ஜானகி

சனி, 12 அக்டோபர், 2024

மொழியியல் அறிஞர் இரா. கோதண்டராமன்

 

முனைவர் இரா. கோதண்டராமன் 

[இரா. கோதண்டராமன் அவர்கள் தமிழ், மொழியியல் பயின்ற அறிஞர் ஆவார். பன்மொழி அறிவு பெற்றவர். சென்னைப் பச்சையப்பன் கல்லூரி, அண்ணாமலைப் பல்கலைக்கழக மொழியியல் துறையில் கல்வி பயின்ற பெருமைக்குரியவர். மதுரை காமராசர் பல்கலைக்கழகம், திருவனந்தபுரம் திராவிட மொழியியல் கழகம், புதுவை மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம் முதலிய நிறுவனங்களில் பணியாற்றியவர். தமிழிலும் ஆங்கிலத்திலும் இவர் எழுதியுள்ள நூல்கள் மொழியியல் துறையிலும், தமிழ் இலக்கணத்துறையிலும் இவருக்கு அமைந்த புலமைத்திறத்தை எடுத்துரைப்பனவாகும். தற்பொழுது புதுச்சேரியில் வாழ்ந்துவருகின்றார்.] 

புதுவைப் பல்கலைக்கழகத்தில் கல்வி பயில்வதற்கு நான் புதுச்சேரிக்கு வந்தபொழுது(1992-93) புதுவை, சின்ன சுப்பராயப் பிள்ளை வீதியின் மாடியில் செயல்பட்டுக்கொண்டிருந்த புதுவை மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தில் நடைபெறும் அறிஞர்களின் சிறப்புப் பொழிவுகளைக் கேட்பதற்குச் செல்வது உண்டு. அப்பொழுது அறிஞர் இரா. கோதண்டராமன் அவர்களின் அறிமுகம் எனக்கு அமைந்தது. என் மூத்த நண்பர் புலவர் பாளை எழிலேந்தி அவர்கள் வழியாகவும் முனைவர் இரா, கோதண்டராமன் அவர்களின் மொழியியல் துறைப் பங்களிப்புகளை அறிந்திருந்தேன். 20.5.1994 இல் புதுவை மொழியியல் பண்பாட்டு ஆய்வு நிறுவனக், கருத்தரங்கில் மரபுக் கவிதைகள் தோற்றமும் இன்றைய நிலையும் என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வழங்கிய நினைவும் எனக்கு உள்ளது. இடையில் என் படிப்பு, பணிகள் என்று பல ஊர்களுக்கு அலைந்து, மீண்டும் புதுச்சேரியில் பணியில் இணைந்தபொழுது அறிஞர் இரா. கோதண்டராமனாரின் தொடர்பு துளிர்விட்டது. அவர்களின் இல்லம் அமைந்துள்ள தொல்காப்பியர் வீதியை ஒட்டி, ஒவ்வொரு நாளும் அலுவலகம் சென்றாலும். அவர்தம் இல்லம் சென்று சந்திக்கும் சூழல் வாய்க்கவில்லை.

கனடா உலகத் தொல்காப்பிய மன்றத்துக் கருத்தரங்கையொட்டி, நடைபெற்ற கண்காட்சிக்குத் தொல்காப்பிய அறிஞர்களின் படங்களைத் தேடியபொழுது, நான் விரும்பும் தரத்தில் இரா. கோதண்டராமன் அவர்களின் படங்கள் இணையத்தில் இல்லை. எனவே, அவர்தம் வீட்டுக்குச் சென்று நேரில் உரையாடவும், அவர்களின் ஆராய்ச்சிப் பணியையும் நூல் வெளியீட்டுப் பணியையும் அறியும் வாய்ப்பு அமைந்தது. 

நான் பயிற்றுவிக்கும் தொல்காப்பியப் பாடத்தை ஒட்டி எங்களின் உரையாடல் நகரத் தொடங்கியது. தொல்காப்பிய எழுத்ததிகாரத்தில் இடம்பெறும் அளபெடைகள் குறித்தும், செருவக்களம் எருவங்குழி, செம்முக்கடிது கம்முக்கடிது, பொருவக்கடிது குறித்தும் தொல்காப்பியரும் உரையாசிரியர்களும் சிந்தித்துள்ள பாங்கினை ஆர்வமுடன் பேராசிரியர் இரா. கோ.  பகிர்ந்துகொண்டார்கள். பேராசிரியர் இரா. கோதண்டராமன் அவர்களுடன் உரையாடிய சில மணி நேரத்தில் அவரின் தொல்காப்பியப் புலமையும் பயிற்சியும், மொழியியல் கண்கொண்டு பார்க்கும் அவர்தம் அறிவியல் பார்வையும் எனக்கு வியப்பினை ஏற்படுத்தின. ஆயிடை, அவர்தம் வாழ்க்கை வரலாற்றையும் அவர்தம் வாய்மொழியாக அறிந்துகொள்ளமுடிந்தது. 

இரா. கோதண்டராமனின் ஆய்வுலக வாழ்க்கை 

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலத்தை அடுத்துள்ள கொத்தாம்பாக்கம் என்னும் சிற்றூரில் வாழ்ந்த இராமானுஜ ரெட்டியார்க்கும் குப்பம்மைக்கும் தலைமகனாக 08.08.1936 இல் பிறந்தவர் (பள்ளிச் சான்றிதழில் 15.01.1937 என்று இருக்கும்). திண்ணைப்பள்ளியிலும், ஐந்தாம் வகுப்பு வரை உதவிபெறும் பள்ளியிலும் பயின்ற இவர் ஆறாம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை வளவனூர் பள்ளியில் பயின்றவர். பள்ளி இறுதி வகுப்பினை விழுப்புரம் முனிசிபல் பள்ளியில் பயின்றவர். பள்ளிப் பருவத்தில் திருவாளர்கள் சுந்தரமூர்த்தி, ஆறுமுக முதலியார், இரத்தின முதலியார் முதலிய ஆசியப் பெருமக்களின் உதவியால் நல்லறிவு வாய்க்கப்பெற்றவர். இண்டர் மீடியட் என்னும் படிப்புக்குக் காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரியில் சேர்வதற்கு அக்காலத்தில் புகழுடன் விளங்கிய திரு. கோவிந்தசாமி படையாட்சியார் பரிந்துரையில் சேர்வதற்கு முனைந்தார். பேரறிஞர் அண்ணா அவர்களின் இல்லத்தில் இரவு தங்கி, அவரின் பரிந்துரையால் காஞ்சிபுரத்தில் இடமும் கிடைத்தது. எனினும் காஞ்சிபுரக் கல்லூரியில் சேர்வதைத் தவிர்த்து, சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் தம் இண்டர்மீடியட் வகுப்பினை அறிவியல் பிரிவில் பயின்றார்(1954-1956)). அறிஞர் மு.வ. அவர்களின் பரிந்துரையால் பச்சையப்பன் கல்லூரியில் பி. ஏ. ஆனர்சு வகுப்பில் 1956 முதல் 1959 வரை சேர்ந்து படித்தார். பின்னர் அக்கல்லூரியில் முதுகலை வகுப்பில் தரம் உயர்த்தப்பட்டு, தமிழ் பயின்ற முதுகலை மாணவராக வெளிவந்தார். 

1960 ஆம் ஆண்டு இரா. கோதண்டராமன் அவர்களுக்குத் திருமணம் நடைபெற்றது. இவரின் துணைவியார் பெயர் சாந்தகுண பூஷணம் ஆவார். இரா.கோதண்டராமன் அவர்களின் பணிநிலை நெய்வேலியில் மக்கள் தொகை கணக்கெடுப்புத் துறையில் அமைந்தது. 4 ஆண்டுகள் பணிபுரிந்தபொழுது பழங்குடி மக்களின் (சோளகர், ஊராளி) மொழிகள் குறித்த ஆய்வில் ஈடுபட்டார். 1966 முதல் 1968 ஆம் ஆண்டு வரை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மொழியியல் படித்தார். அப்பொழுது இவருக்கு உதவித்தொகை 120 ஆகும். தொ.பொ. மீனாட்சிசுந்தரம், ச.அகத்தியலிங்கம் உள்ளிட்ட மொழியியல் அறிஞர்களிடம் படித்த பெருமைக்குரியவர். மலையாள மொழியை எழுதவும் பேசவும், படிக்கவுமாக அறிந்தவர். பன்மொழியறிவால் பின்னாளில் மொழியியல் ஆய்வுத்துறையில் பெரும்புகழ் ஈட்டமுடிந்தது. 

1968 முதல் 1973 வரை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முனைவர் ச. அகத்தியலிங்கம் அவர்களின் மேற்பார்வையில் மொழியியல் துறையில் முனைவர் பட்ட ஆய்வினை மேற்கொண்டு பட்டம்பெற்றவர். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் அறிஞர் மு.வ. அவர்கள் துணைவேந்தராகப் பணியமர்த்தப்பட்ட பிறகு இரா. கோதண்டராமன் அங்குத் தமிழ் விரிவுரையாளராகப் பணியில் இணைந்தார்.  ஒன்பது ஆண்டுகள்(1973-1982) தமிழிலக்கணமும், ஆறு ஆண்டுகள் அமெரிக்க மாணவர்களுக்கு American Institute of Indian Studies சார்பில் தமிழ் பயிற்றுவிக்கும் பணியிலும் இருந்தார். 

திருவனந்தபுரத்தில் உள்ள அனைத்துலகத் திராவிட மொழியியல் கழகத்தில் மொழியியல் பிரிவில் முதுநிலை ஆய்வாளராகவும் பேராசிரியராகவும் ஏழு ஆண்டுகள் (1982-1988) பணிபுரிந்தவர். புதுச்சேரியில் இருந்த புதுவை மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தில் இயக்குநராக அறுபத்து மூன்று மாதங்கள் (1989-1994) பணியாற்றி ஓய்வு பெற்றவர். 

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் ஆய்வறிஞராகவும் பணியாற்றிய பெருமைக்குரியவர்(2007-2014). 

Tamil Syntax – New Perspectives  என்ற இவர்தம் நூலினைப் புதுவை மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த நூல் தமிழ் மொழியியல் குறித்து ஆங்கிலத்தில் அமைந்த அரிய நூலாகும். 

இரா.கோதண்டராமனின் அறிவுக்கொடை 

  1. வாழிய செந்தமிழ் (2007), உ.த.நி. வெளியீடு
  2. தமிழெனப்படுவது (2004) உ.த.நி. வெளியீடு
  3. தமிழ் செய்த வினை(2021), தமிழ்ப் பல்கலைக்கழகம்
  4. The Riddle That is Tamil (2019), ISDL, Thiruvananthapuram
  5. Dynamics of Tamil Finite System, (2010), CICT, Chennai