நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வியாழன், 23 ஜூன், 2011

அமெரிக்காவின் தேசிய இயற்கை வரலாற்றுக் காட்சியகம்…


நிலவுக்கற்கள்,கருவிகள்

21.06.2011 பிற்பகல் திரு.கோபி அவர்கள் என்னை அழைத்துக்கொண்டு போய் தலைநகர் வாசிங்டன்னில் உள்ள இயற்கை வரலாற்றுக் காட்சியகத்தைப் (NATIONAL MUSEUM O NATURAL HISTORY) பார்க்கும்படி மருத்துவர் சித்தானந்தம் அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார். பகலுணவுக்குப் பிறகு திரு. கோபியின் வருகைக்குக் காத்திருந்தேன். தம் மகன் ஆதித்தனை மருத்துவ ஆய்வுக்கு உட்படுத்திவிட்டு வரும்பொழுது போக்குவரவு நெருக்கடியால் காலத்தாழ்ச்சியாக வருவதைத் தொலைபேசியில் கோபி சொன்னார். சொன்னபடி சிறிது நேரத்திற்குள் வந்தார்.

அவர் மகன் ஆதித்தியன் அரசுப்பள்ளியில் படிப்பதாகவும் அவனுக்குரிய பொத்தகச் சுவடிகள் அரசால் தரமாகத் தயாரிக்கப்பட்டுத் தரப்பட்டுள்ளதாகவும் இருப்பில் இருந்த சில சுவடிகளைக் காட்டினார். குழந்தைகளின் படங்கள், வகுப்புகள் எனப் பல விவரங்கள் அந்தச் சுவடியில் இருந்தன. பெற்றோர்கள் விரும்பினால் மட்டும் அந்தப் புத்தகத்தில் மாணவக் குழந்தைகளின் படம் இடம்பெறுமாம். பாதுகாப்பு கருதுபவர்கள் படத்தை வெளியிட விரும்பமாட்டார்களாம். இதுவும் நம் நாட்டில் மேற்கொள்ளத்தக்க ஒரு நற்பழக்கமாகவே கருதுகின்றேன்.

திரு.கோபியின் மகிழ்வுந்து வாசிங்டன் நகர எல்லையை அடைந்தது. பாதை மாறி ஒரு வட்டம் போட்டு உரிய இடத்துக்கு வந்தோம். மலேசியா கோலாலம்பூரில் நடு இரவு ஒன்றில் நானும் முரசு.நெடுமாறன் ஐயா அவர்களும் பாதைமாறி ஒருமணி நேரத்துக்கு மேலாகச் சுற்றியது நினைவுக்கு வந்தது.

அமெரிக்க இயற்கை வரலாற்றுக் காட்சியகம் பரந்துகிடந்தது. எங்கும் குளிரூட்டப்பட்ட அரங்குகள். நாங்கள் அங்கு இயற்கை குறித்த படம் பார்ப்பதற்குரிய நுழைவுச்சீட்டு வாங்கி கொண்டோம். சான்சன் இமேஜ் திரையரங்கில் படம் 5.15 மணிக்கு என்றனர். கோபி அக்காட்சியகத்தின் உறுப்பினர் ஆனார். உறுப்புக்கட்டணம் 6.50 டாலர். குறித்த நேரத்தில் படம் ஓடியது. அனைவரும் அமைதியாக அமர்ந்து பார்த்தனர்.

கென்யாவில் வளர்க்கப்படும் குரங்குகள், யானைக்குட்டிகள் குறித்த விவரிப்பும் காட்சியும் சிறப்பாக இருந்தன. குரங்குகள் மரத்தில் விளையாடுவது மிகச்சிறப்பாகப் படமாக்கப்பட்டிருந்தது. இயற்கை சார்ந்த தொலைக்காட்சிகளை விட இக்காட்சிகள் சிறப்பு. முப்பரிமானக் காட்சி என்பதால் கண்முன் காட்சிகள் நடப்பது போன்ற உணர்வைப் பெற்றோம். பையன் ஆதித்யன் தம் முகத்தை நோக்கிக் குரங்குகள் வருவதாக உணர்ந்து அதனைத் தாவித் தாவிப் பிடித்தபடி இருந்தான். யானைகளும், குரங்குகளும் பழக்கத்துக்கு உட்பட்டுப் பாசத்துக்கு ஏங்கிய காட்சிகளை நேரில் கண்டு மகிழ்ந்தோம். படம் அரை மணி நேரத்திற்கு மேல் ஓடியிருக்கும். மெதுவாக வெளியே வந்தோம்.


காட்சிக்கூட முகப்பில் உயிரோட்டமாக காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள யானை

மரம், செடி, கொடி, பூ, புழு, பூச்சி, மண், மலை என்று உலகின் அனைத்து இயற்கை வளர்ச்சிகளையும் படிப்படியாகக் கண்டு மகிழ்ந்தோம். மாந்தனின் அத்தனை உறுப்புகளையும் பிரித்துப் போட்டு வைத்துள்ளனர். தென்னாப்பிரிக்கர்களின் வாழ்க்கை முறையை விளக்கும் தனிக்காட்சிக் கூடங்களும் இருந்தன. தங்கம், வெள்ளி குறித்த காட்சிகளையும் பார்த்தபடி வந்தோம். வைரத்தின் அனைத்து வகைகளையும் கண்ணாரக் கண்டு அதன் ஒளிப்பு அழகை நேரில் கண்டு வியந்தேன். பாதுகாப்பு இந்தப் பகுதியில் மிகுதியாக இருந்தது. எங்கும் வெளிச்சமும் வளிக்கட்டுப்பாடும் இருந்தது. தகுந்த அறிவிப்புப் பலகைகள் இருந்தன. யார் உதவியும் இல்லாமல் யாவற்றையும் பார்க்கலாம். கண்ணாடிக் கூண்டுகளில் பொருள்கள் மிகச்சிறப்பாகப் பாதுகாக்கப்படுகின்றன. போதிய விளக்கங்களும் உள்ளன.

நெப்போலியன் தன் காதல் மனையாளுக்கு வழங்கிய வைரமாலைகள் ஆயிரம் கதைகளைத் தாங்கிக்கொண்டு அனைவரின் பார்வைக்கும் விருந்தாக உள்ளது. இந்தியா, பிரேசில் பகுதிகளில் கிடைக்கும் வைரங்களும் காட்சிக்கு இருந்தன. தங்கப் பாலங்களைப் பார்க்கமுடிந்தது. இரும்புப் பாறைகளையும் பார்க்க முடிந்தது.

விண்வெளிக்குச் சென்று நிலவிலிருந்து கொண்டுவந்த மண்ணையும் அதனை எடுக்கப் பயன்படுத்திய கருவிகள், பெட்டிகள், உறைகளையும் பாதுகாப்பது கண்டு வியந்தேன். இந்தப் பகுதியை மக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டனர். மாலை 7.15 மணிவரை காட்சியகத்தைப் பார்த்துக் கடைசியாக நாங்கள் வெளியே வந்தோம்.


விண்கல் அருகில் மு.இளங்கோவன்,ஆதித்தியன்


முதல் நெப்போலியனின் காதல் மனையாள் அணிந்த வைரமாலை


வைரமாலைகள்(தாய்க்குலங்களின் கனிவான கவனத்திற்கு: பார்க்கமட்டும்,கேட்காதீர்கள்(!)


வைரமாலைகள்(தாய்க்குலங்களின் கனிவான கவனத்திற்கு: பார்க்கமட்டும்,கேட்காதீர்கள்(!)

இரவு மருத்துவர் சித்தானந்தம் அவர்களின் இல்லம் வரும்பொழுது நல்ல தூக்க நிலையில் இருந்தேன். நம் நாட்டு நிலையிலிருந்து என் உடல் விடுபடாததுதான் இச்சோர்வுக்குக் காரணம். கோபியிடம் விடைபெற்றுக் கொண்டு வீட்டில் படுக்கும்பொழுது இரவு 1 1 மணி இருக்கும்.

1 கருத்து:

ராஜ நடராஜன் சொன்னது…

நட்சத்திர வாழ்த்துக்கள்.