நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

சனி, 31 அக்டோபர், 2009

நூல் வெளியீட்டு விழா-படங்கள்


முனைவர் அரங்க.பாரி,முனைவர் அ.அழகிரிசாமி,முனைவர் முத்து,சட்டப்பேரவைத்தலைவர் இரா.இராதாகிருட்டின்,தி.ப.சாந்தசீலன்,முனைவர் அ.அறிவுநம்பி,மு.இளங்கோவன்.

புதுச்சேரியில் அமைந்துள்ள தமிழ்ச்சங்க அரங்கில் என் அயலகத் தமிழறிஞர்கள்,இணையம் கற்போம் என்ற நூல்களின் வெளியீட்டு விழா மிகச்சிறப்பாக இன்று நடந்தது. புதுவைப் பல்கலைக்கழகத் தமிழியல் துறைத்தலைவர் முனைவர் அ.அறிவுநம்பி அவர்கள் தலைமையில் 30.10.2009 மாலையில் நூல் வெளியீட்டு நிகழ்வு தொடங்கியது.பேராசிரியர் இரா.அகிலா அவர்கள் தமிழ்த்தாய் வாழ்த்து பாட,முனைவர் இரா.வாசுகி அவர்கள் வரவேற்புரையாற்றினார்.

புதுவைச் சட்டப்பேரவைத் தலைவர் மாண்புமிகு இரா.இராதாகிருட்டினன் அவர்கள் இரண்டு நூல்களையும் வெளியிட அயலகத்தமிழறிஞர்கள் நூலின் படிகளை முனைவர் தி.ப.சாந்தசீலன்(பொ.தி.ப.அறக்கட்டளை),முனைவர் மு.முத்து அவர்கள்(பல்லவன் கல்வி நிறுவனங்கள் தாளாளர்) பெற்றுக்கொண்டனர்.

முனைவர் கல்பனா சேக்கிழார் அவர்களும்,முனைவர் பொன்னுத்தாய் அவர்களும் இணையம் கற்போம் நூலின் படிகளை முதற்கண் பெற்றுக்கொண்டனர்.

பேராசிரியர் அ.அழகிரிசாமி,முனைவர் அரங்க.பாரி(அண்ணாமலைப் பல்கலைக்கழகம்), முனைவர் து.சாந்தி,அரியாங்குப்பம் சட்டமன்ற உறுப்பினர் திரு.இரா.அனந்தராமன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பாக உரையாற்றினர்.பாவலர் சீனு.தமிழ்மணி அவர்கள் நன்றியுரையாற்றினார்.

புதுவை,தமிழகத்தின் பல பகுதியிலிருந்தும் பேராசிரியர்கள்,நண்பர்கள்,இலக்கிய ஆர்வலர்கள் எனப் பலர் வந்திருந்தனர். திருமுதுகுன்றத்திலிருந்து புகைப்படக்கலைஞர் திரு.சான்போசுகோ நண்பர் புகழேந்தியுடன் வந்திருந்து படங்களை மிகச்சிறப்பாக எடுத்தார்(பின்பு அந்தப் படங்களை இணைப்பேன்)சென்னையிலிருந்து உதயகுமார்,காஞ்சிபுரத்திலிருந்து திரு.மோகனவேல் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியின் தொடக்கமாக கூத்தப்பாக்கம் குப்பு அவர்களின் நாட்டுப்புற இசைநிகழ்ச்சி நடந்தது.அவர்களைத் தொடர்ந்து புதுவை செயமூர்த்தி அவர்களும் பேராசிரியர் அகிலா அவர்களும் தமிழிசைப்பாடல்கள் பலவற்றைப் பாடி அவையினரை மகிழ்வூட்டினர்.


சட்டப்பேரவைத்தலைவர் இரா.இராதாகிருட்டினன் அவர்கள் உரையாற்றுதல்


முனைவர் இரா.பொன்னுத்தாய் நூல் பெறுதல்


முனைவர் து.சாந்தி அவர்களுக்குச் சிறப்பு செய்யப்படுதல்

செவ்வாய், 27 அக்டோபர், 2009

முனைவர் மு. இளங்கோவன் எழுதிய அயலகத் தமிழறிஞர்கள், இணையம் கற்போம் நூல்கள் வெளியீட்டு விழா

நாள் : 30-10-2009, வெள்ளிக்கிழமை
நேரம் : மாலை 6.30 - 8.00 மணி
இடம் : புதுவைத் தமிழ்ச்சங்கக் கட்டடம், புதுச்சேரி.
தமிழ்த்தாய் வாழ்த்து : பேராசிரியர் இரா. அகிலா
தலைமை : முனைவர் அ. அறிவுநம்பி(புதுவைப் பல்கலைக்கழகம்)
முன்னிலை : புலவர் இ. திருநாவலன்
வரவேற்பு : முனைவர் இரா. வாசுகி

அயலகத் தமிழறிஞர்கள், இணையம் கற்போம் நூல்கள் வெளியீடு

மாண்புமிகு இரா. இராதாகிருட்டினன்
சட்டப்பேரவைத் தலைவர், புதுச்சேரி அரசு

நூல்கள் திறனாய்வு:

முனைவர் மு. தங்கராசு,துணைவேந்தர், பெரியார் பல்கலைக்கழகம், சேலம்.

அயலகத் தமிழறிஞர்கள்
முதலிருபடி பெறுதல் : திருமிகு தி.ப. சாந்தசீலனார்
பொறியாளர் தமிழ்நாடன் (குவைத்)

இணையம் கற்போம்
முதலிருபடி பெறுதல் : முனைவர் கல்பனா சேக்கிழார்
முனைவர் இரா. பொன்னுத்தாய்

வாழ்த்துரை :

முனைவர் து. சாந்தி (முதல்வர், பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரி)
முனைவர் அ. அழகிரிசாமி (முதல்வர், இராசேசுவரி மகளிர் கல்லூரி)
திருமிகு இரா. அனந்தராமன் (ச.ம. உறுப்பினர்)
முனைவர் அரங்க. பாரி (அண்ணாமலைப் பல்கலைக்கழகம்)
திருமிகு குணவதிமைந்தன் (குறும்பட இயக்குநர்)
பாவலர் மகரந்தன் (சாகித்திய அகாடமி உறுப்பினர்)

நன்றியுரை :
பாவலர் சீனு. தமிழ்மணி

அனைவரும் வருக - விழாக்குழுவினர்

அயலகத் தமிழறிஞர்கள் (உருவா 200) இணையம் கற்போம் (உருவா 100)
இருநூல்களும் விழா அரங்கில் 200 உருவாவுக்குக் கிடைக்கும்.

மாலை 6.00 மணிக்கு நாட்டுப்புற இசை -செவ்விசை பாடப்பெறும்.

ஞாயிறு, 25 அக்டோபர், 2009

தமிழ் இணையக் கருத்தரங்கம், கொலோன் பல்கலை, செர்மனி, அக்டோபர் 23 - 25, 2009 சில படங்களும் காணொளிக்காட்சிகளும்!



செர்மனி,கொலோன் பல்கலை, தமிழ் இணையக் கருத்தரங்கம், அக்டோபர் 23 - 25, 2009 பற்றி அறிய ஆர்வமுடன் இருந்தேன்.ஏனெனில் நான் அதில் கலந்துகொள்ள நினைத்திருந்ருந்தேன். எனினும் இயலவில்லை.

சில படங்களும் காணொளிக்காட்சிகளும் அங்கிருந்து நண்பர்கள் அனுப்பினர். அவர்களுக்கும் கருத்தரங்கக் குழுவினருக்கும் என் நன்றி. கருத்தரங்கு பற்றி அறிய ஆர்வமுடையவர்களுக்கு அப்படம்,

காணொளி இணைப்பு இங்கு வழங்குகிறேன்.கண்டு மகிழவும்.

அயலகத் தமிழறிஞர்கள்,இணையம் கற்போம் நூல்கள் வெளியீட்டு விழா!

அண்மையில் நான் எழுதிய அயலகத் தமிழறிஞர்கள், இணையம் கற்போம் என்ற நூல்களின் வெளியீட்டு விழா புதுச்சேரியில் உள்ள தமிழ்ச்சங்க அரங்கில் வரும் 30.10.2009 மாலை 6.00 மணிக்கு நடைபெற உள்ளது.

நாட்டுப்புறப்பாடல்கள்,தமிழிசைப்பாடல்களுடன் தொடக்கத்தில் இசையரங்கு நடைபெறும்.

6.30 மணிக்கு நூல் வெளியீட்டு விழா நடைபெறும்.கல்வியாளர்கள், இணைய அறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள் கலந்துகொள்ளும் விழாவாக இது அமைகிறது. இந்நிகழ்வு பற்றிய மேலதிக விவரங்கள், அழைப்பிதழ் நாளை வெளியிடப்பெறும்.

வெள்ளி, 23 அக்டோபர், 2009

புதுவை அரசின் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் தமிழாசிரியர்களுக்குத் தமிழ் இணையப்பயிற்சி!

தமிழ் இணையம் அறியும் ஆசிரியர்கள் 

   புதுவை அரசின் பள்ளிக்கல்வித்துறை புதுவை மாநிலம் முழுவதும் பணிபுரியும் தமிழாசிரியர்களுக்குப் புத்தொளிப்பயிற்சியை வழங்குகிறது. பல அணிகளாகத் தமிழாசிரியர்கள் வந்து புத்தொளிப்பயிற்சி பெறுகின்றனர். புதுச்சேரியில் நான் பணிபுரிவதால் முனைவர் இராச.திருமாவளவன் அவர்களின் (ஒருங்கிணைப்பாளர்) அழைப்பில் நான் பல நூறு தமிழாசிரியர்களுத் தமிழ் இணையத்தை அறிமுகம் செய்துள்ளேன். 

  எனக்கு இன்று இருந்த பல்வேறு பணி நெருக்கடிகளுக்கு இடையிலும் கிடைத்த வாய்ப்பை நழுவ விடாமல் இன்று (23.10.2009) பிற்பகல் 3.15 மணிக்குப் பெருந்தலைவர் காமராசர் நினைவுக் கல்வி வளாகத்தில் உள்ள பயிலரங்க அரங்கை அடைந்தேன். முனைவர் இராச.திருமாவளவன் அவர்கள் பயிற்சிபெறும் தமிழாசிரியர்களுக்கு என்னை அறிமுகம் செய்துவைத்தார். பெரும்பாலும் அவரின் அறிமுகம் இன்று தேவையில்லாமல் போனது. நான் செம்மொழி இளம் அறிஞர் விருது பெற உள்ளதை இன்றைய தினத்தந்தி செய்தியாக வெளியிட்டிருந்ததால் அனைவரும் கைதட்டி ஆரவாரம் செய்து வரவேற்றனர். 

     3.30 மணியளில் தொடங்கிய என் உரை 5.10 வரை நீண்டது. தமிழ்த் தட்டச்சு, இணையத் தளங்கள் வரையறை, மதுரைத் திட்டம், தமிழ்மரபு அறக்கட்டளை, சென்னை நூலகம், காந்தளகம் நூலகம் உள்ளிட்ட சில தளங்களைப் பார்வையிடச் செய்தேன். மேலும் தமிழ் இதழ்கள் மின்னூல்களாக வருவதையும் பார்வையிட வைத்தேன். மின்னஞ்சல் உரையாடல் வசதிகளையும் பார்வைக்கு வைத்தேன். 

  தட்சு தமிழின் இணையாசிரியர் திரு.அறிவழகன் இணைப்பில் வந்து அனைவருக்கும் வாழ்த்து சொன்னார். அவையினர் மகிழ்ந்தனர். அதுபோல் அமெரிக்காவிலிருந்து வேந்தன் அரசு இணைப்பில் வந்து வியப்பூட்டினார். சுரதா தளத்துக்கு அனைவரையும் அழைத்துச் சென்று அனைத்துத் தளங்களையும் பார்வையிடும் வசதியை எடுத்துரைத்தேன். மேலும் பொங்குதமிழ் எழுத்து மாற்றும் செய்தியையும் சொன்னேன். அதில் உள்ள சின்னக்குட்டியின் தளத்தில் உள்ள காணொளிப் படங்களையும் காட்டினேன். என்.எச்.எம். மென்பொருள் தரவிறக்கம், தமிழா.காம் மற்றும் எ.கலப்பை பற்றி விரிவாக எடுத்துரைத்தேன். 

   மேலும் இணையத்தின் தேவை, அதன் சிறப்பு, வாழ்க்கையில் அதன் தாக்கம் பற்றி என் உரை சிறப்பாக அமைந்தது. செர்மனியில் இன்று நடைபெறும் இணைய மாநாடு பற்றியும் எடுத்துரைத்தேன். அங்கு உரையாற்றும் வாய்ப்பு கிடைக்காமல் போனாலும் அதே நாளில் தமிழ் இணையம் பற்றி புதுச்சேரியில் சிந்தித்தது மகிழ்ச்சி தருகிறது. 

ஆசிரியர்கள் (ஒரு பகுதியினர்) 

  முனைவர் இராச. திருமாவளவன் 

ஆசிரியர்கள்(ஒரு பகுதியினர்) 

பயிற்சியளிக்கும் நான் (மு. இ)

வாழ்த்துரைத்த உள்ளங்களுக்கு நன்றி...

செம்மொழி விருதுப் பட்டியல் இந்திய குடியரசுத்தலைவர் மாளிகையில் இருந்து 20.10.2009 அறிவிக்கப்பட்டவுடன் ஊடகங்கள் வழியாக உலகிற்குத் தெரிய வந்தது.2006-07 ஆண்டிற்கான இளம் அறிஞர் விருதுப்பட்டியலில் என் பெயர் இருந்ததும் நண்பர்கள் பலரும் எனக்கு வாழ்த்துத் தெரிவிக்கத் தொடங்கினர்.நான் பேருந்தில் பயணத்தில் இருந்ததால் உடனடியாக உறுதிசெய்துகொள்ள முடியவில்லை.நண்பர்கள் வழியாகவே அறிந்தேன்.இரண்டு மணிநேரம் கழித்து வீட்டிற்கு வந்த பிறகு செய்தியைக் கண்ணால் கண்டு உறுதிப்படுத்திக்கொண்டேன்.

என் பேராசிரியர்கள் திரு.சம்பத்குமார்(நூலகர்,செந்தமிழ்க்கல்லூரி நூலகம், திருப்பனந்தாள்), பேராசிரியர் திரு.ச.திருஞானசம்பந்தம், பேராசிரியர் ஆறு.இராமநாதன்(தமிழ்ப் பல்கலைக் கழகம்) ஆகியோர் உடன் தொடர்புகொண்டு வாழ்த்துரைத்தனர்.புதுவை இதழாளர் பி.என்.எசு.பாண்டியன் அவர்களும் வாழ்த்துரைத்தார்.

20.10.2009 இரவே புதுச்சேரியில் தீபம் தொலைக்கட்சி முதலில் செய்தியை வெளியிட்டது. மற்ற தொலைக்காட்சியினரும் செய்தியை உடன் வெளியிட்டு மகிழ்ந்தனர்.மறுநாள் காலையில் தினகரன் புதுச்சேரிப் பதிப்பில் என் படத்துடன் செய்தி வெளியானதும் புதுவை மாநிலம் முழுவதும் காலையில் செய்தி பரவியது.என் மாணவர்கள்,என்னுடன் பணி செய்யும் பேராசிரியர்கள், நண்பர்கள், தொலைக்காட்சியினர்,இதழாசிரியர்கள் பலரும் தொடர்புகொண்டு வாழ்த்துரைத்தனர்.நானும் என் வலைப்பூவில் செய்திக்குறிப்பொன்றை எழுதினேன்.மின் தமிழிலும் எழுதினேன்.அயல்நாட்டு நண்பர்கள் சிலருக்கு மின்னஞ்சல் அனுப்பினேன்.உலகின் பல பகுதியிலிருந்தும் மின்னஞ்சல்கள்,வாழ்த்துரைப்புகள் எனக்கு வந்தன.

காலையில் கல்லூரிப் பணிக்குச் சென்றேன்.பேராசிரியர்கள்,மாணவர்கள் அன்புடன் நேரில் வாழ்த்துரைத்தனர்.பூங்கொத்துகள்,இனிப்புகள் எனப் பரிமாறிக்கொண்டோம்.மாணவர்கள் எதிர்கொண்டழைத்தனர்.வழக்கத்திற்கு அதிகமாக அன்று அனைவர் முகத்திலும் நான் தெரிந்தேன்.நிற்க

என் பேராசிரியர் க.ப.அறவாணன்(மேனாள் துணைவேந்தர்),முனைவர் பொற்கோ(மேனாள் துணைவேந்தர்),முனைவர் இரா,இளவரசு,முனைவர் தாயம்மாள் அறவாணன்,முனைவர் இராமர் இளங்கோ ஆகியோர் தொலைபேசியில் வாழ்த்துரைத்தனர்.கண்ணியம் இதழாசிரியர் ஆ.கோ.குலோத்துங்கன்,அமுதசுரபி ஆசிரியர் திருப்பூர் கிருட்டினன், திரு.தளவாய், திரு.அண்ணாகண்ணன்,அண்ணன் செயபாசுகரன் ஆகியோரும் வாழ்த்துரைத்தனர்.

என்னுடன் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் ஒரே காலத்தில் வேதியியல் துறையில் ஆய்வு செய்து(1993-96) இப்பொழுது அமெரிக்காவில் புளோரிடா மாநிலத்தில் பணி செய்யும் பேராசிரியர் மனோகரன் அவர்கள் பலவாண்டுகளுக்குப் பிறகு இணையத்தில் செய்தி படித்து தொலைபேசியில் அழைத்து வாழ்த்துரைத்தார்.எதிர்பாராத அவரின் அழைப்பு எனக்குப் பெருமகிழ்வு தந்தது.

வடக்குவாசல் ஆசிரியர் திரு.பென்னேசுவரன்,புதிய தலைமுறை ஆசிரியர் திரு.மாலன், சங்கமம் லைவ் ஆசிரியர் விசயகுமார்,தட்சு தமிழ் ஆசிரியர் திரு.கான்,திரு.அறிவழகன் ஆகியோரும் மின்னஞ்சலில் வாழ்த்துரைத்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள். தட்சுதமிழ், சங்கமம் லைவ் தன் பக்கத்தில் என் வாழ்க்கைக் குறிப்பைப் பதிவு செய்தன.இலங்கையில் வாழும் எழுத்தாளர் திரு.புன்னியாமீன் அவர்கள் தொலைபேசியில் அழைத்து வாழ்த்தியதுடன் தேசம் நெட்.இணையப்பதிப்பிலும்,இலங்கை இதழ்களிலும் செய்தி வெளியிட்டு மகிழ்ந்தார்கள்.

அமெரிக்காவில் வாழும் திரு.வாசு.அரங்கநாதன் அவர்கள் செர்மனியில் நடைபெறும் தமிழ் இணையமாநாட்டிற்கு வரும் நண்பர்களுடன் இந்த மகிழ்வுச் செய்தியைப் பகிர்ந்துகொள்வேன் என்று உரைத்து மின்மடல் தீட்டியிருந்தார். அமெரிக்கா,கனடா, இலண்டன்,சிங்கப்பூர், மலேசியா,இலங்கையில் வாழும் பேராசிரியர்கள்.நண்பர்கள் பலரும் வாழ்த்துரைத்தனர்.கதார் நாட்டில் வாழும் என் மாமா மகன் திரு.கார்த்தி,செர்மனியில் உள்ள பெர்லின் நகரில் வாழும் என் சிறியமாமனார் திரு.சேகரன் குடும்பத்தினர் எனப் பலரும் தொலைபேசியிலும் மின்னஞ்சலிலும் வாழ்த்தினர்.

மோகனூர் சுப்பிரமணியம் கல்லூரியின் தாளாளர் திரு.பழனியாண்டி அவர்களும் கோவை கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறைத்தலைவர் அவர்களும் உள்ளன்போடு வாழ்த்து தெரிவிக்க நெகிழ்ந்துபோனேன்.சாகித்திய அகாதெமியின் உறுப்பினர் திரு.மகரந்தன் அவர்கள் நேரில் கண்டு வாழ்த்துரைத்தார்.மக்கள் உரிமைக்கூட்டமைப்பு திரு.கோ.சுகுமாரன்,ஓவியர் இராசராசன் ஆகியோர் நேரில் வாழ்த்தினர்.அரியாங்குப்பம் சட்டமன்றத்தொகுதி உறுப்பினர் திரு.அனந்தராமன் அவர்கள் தொலைபேசியில் வாழ்த்துரைத்தார்.

21.10.2009 புதன் இரவு 8 மணியிலிருந்து 9 மணி வரை புதுவையின் புகழ்பெற்ற தொலைக்காட்சியான் சுப்ரீம் தொலைக்காட்சியில் என் நேர்காணல் ஒன்று நேரலை உரையாடலாக ஒளிபரப்பானது.முனைவர் பா.பட்டம்மாள் அவர்கள் நேர்கண்டார்கள்.

புதுவையில் நான் "செம்மொழி இளம் அறிஞர்" விருதுபெற உள்ள செய்தி பரவலாக அனைவருக்கும் தெரியவந்தது."ஐ தொலைக்காட்சியும்" என் இல்லம் வந்து ஒரு நேர்காணல் கண்டு வெளியிட்டது.மேலும் "ரெயின்போ தொலைக்காட்சியும்" சிறப்பாக நேர்காணல் கண்டு ஒளிபரப்பியது.

எனக்குச் செம்மொழி இளம் அறிஞர் விருது அறிவிக்கப்பட்ட செய்தியறிந்து நேரிலும், தொலைபேசியிலும், மின்னஞ்சலிலும், இதழ்களிலும்,தொலைக்காட்சிகளிலும் வாழ்த்துரைத்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி உரியவாகும்.அனைவரின் பெயரையும் என்னால் இந்த வலைப்பூவில் பதியமுடியாமல் போனமைக்கு வருந்துகிறேன். சிலருக்கு நன்றி தெரிவித்து உடனுக்குடன் விடையிட்டேன்.சிலருக்கு விடையிட,விரிவாகப் பேச நினைத்தும் கால நெருக்கடியால் இயலாமல் போனது.அந்த நல்லுள்ளங்கள் என்னைப் பொறுத்தாற்ற வேண்டுகிறேன்.

புதன், 21 அக்டோபர், 2009

செம்மொழி விருதுகள் அறிவிப்பு!

இந்திய அரசின் செம்மொழி நிறுவனம் சங்க இலக்கிய ஆய்வுகளில் ஈடுபட்டு உழைத்தவர்களுக்கு விருதுகளை வழங்க முடிவு செய்திருந்தது. அதன் அடிப்படையில்
குடியரசுத்தலைவர் மாளிகையிலிருந்து முறைப்படியான அறிவிப்பு இன்று வெளியானதாகத் தொலைக்காட்சிகளில் செய்திகள் வெளியாயின.நான் பேருந்துப் பயணத்தில் இருந்தேன்.என் பேராசிரிய நண்பர் மயிலாடுதுறையிலுருந்து அழைத்து செம்மொழி இளம் அறிஞர் விருது எனக்குக் கிடைத்துள்ள செய்தியை மகிழ்ச்சியிடன் பகிர்ந்துகொண்டார்.

பேராசிரியர் அடிகளாசிரியர்,அறிஞர் ஜார்ஜ் ஹார்ட்டு உள்ளிட்ட இருவருக்கும் தொல்காப்பியர் விருது வழங்கப்பட உள்ளதாகவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.நாளை இது பற்றி விரித்து எழுதுவேன்.

திங்கள், 19 அக்டோபர், 2009

எய்போல் கிடந்தான் ஏறு!


முள்ளம்பன்றி

புறப்பொருள் வெண்பாமாலை என்ற இலகண நூலை முற்றாகச் சுவைப்பதற்குப் புறநானூறு,பதிற்றுப்பத்து உள்ளிட்ட பழந்தமிழரின் புறநூல்களின் பின்னணி அறிந்திருப்பது நன்று.ஏனெனில் தமிழர்கள் அறத்தில் மறத்தையும் மறத்தில் அறத்தையும் மேற்கொண்டிருந்தவர்கள்.ஆம் அறத்தை நிலைநாட்ட மறத்தை மேற்கொண்டதையும் மறத்தை நிலைநாட்டும்பொழுது அறத்தை நிலைநாட்டியதையும் நம் பழைய நூல்கள் பல இடங்களில் தெரிவிக்கின்றன.முருகபெருமான் அறத்தை நிலைநாட்ட சூரபத்மாவை அழித்ததை நினைவிற்கொள்க. மறத்தை நிலைநாட்டும்பொழுது "ஆவும் ஆனியற் பார்ப்பன மாக்களை"யும்(புறம்) வெளியேறும்படி செய்ததும் இதனை மெய்ப்பிக்கும்.

போர் நடைபெறும் பொழுது போரில் இயலாதவர்களுக்குத் துன்பம் வரக்கூடாது என்று நினைத்து ஆக்கள்(பசுக்கள்), பார்ப்பனர்கள், பெண்கள்,கருவுற்ற மகளிர்,பிணியில் வாடும் மாந்தர் என இவர்களை அப்புறப்படுத்துவதும் அதன்பின் போர் தொடுப்பதும் தமிழர்களின் போரியல் நடைமுறை.இதைத்தான் புறநானூறு என்ற சங்க இலக்கியம் சாற்றும்.ஆனால் உலக நாடுகள் இன்று மக்களை வாட்டுவதும் வதைப்பதும் சிறைப்பிடிப்பதும்,நேருக்கு நேராகச் சுட்டுக்கொள்வதும்,மூக்கில் சுடுவதும்,தலையில் சுடுவதும்,கை,கால்களைக் கட்டிச் சுடுவதும் போரியல் நடைமுறையாகக் கொண்டுள்ளன.உயிர் போக்கும் குண்டுகளை வீசுவதும், கொடிய நச்சுப்புகைகளைப் பரப்புவதும்,வானூர்திகளில் பறந்து பறந்து தொடர்த்தாக்குதல் நடத்துவதும் வழக்கத்தில் உள்ளன.சப்பான் போன்ற நாடுகளில் நடந்த பேரவலம் உலகையே நடுங்கச் செய்தது.

ஆனால் பழந்தமிழகத்தில் போர்முறை பற்றி அறியும்பொழுது நமக்கு வியப்பாக உள்ளது. வீரத்தாயின் கூற்றாக வரும் ஒரு புறப்பொருள் வெண்பாமாலையில் ஒரு பாடல் நம் நெஞ்சைப் பிழியச்செய்யும் தன்மையில் உள்ளது.ஏறாண் முல்லை என்ற பகுதியில்(வாகைத்திணை) வரும் பாடலின் பொருள் இதுதான்:

என் தந்தை முதல்நாள் நடந்த போரில் இறந்து நடுகல்லானான்;என் கணவனும் போர்க்களத்தில் இறந்தான்;என் உடன் பிறந்தோரும் பகைவர்முன் நின்று போர்க்களத்தில் விழுப்புண்பட்டு இறந்தனர்;என் மகன் அஞ்சி ஓடிய தன் படை மறவருக்குப் பின்னாக நின்றான்.தன் படையைக் கெடுத்த பகைவர்களோடு போர்செய்ய விரைந்தான்.அவனின் பகைவர்கள் தொடுத்த அம்பு அவன்மீது மிகுதியாகத் தைத்தன.அதனால் அவன் அம்பு தைக்கப்பட்ட முள்ளம்பன்றி போல் போர்க்களத்தில் கிடந்தான் என்று தாய் குறிப்பிடுகிறாள்.

முள்ளம்பன்றியின் உடலில் உள்ள தோல் பகுதியில் முள்போன்று அமைப்பு இருக்கும். பகைவர்களிடம் இருந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்ள முள்ளம்பன்றி தன் உடலில் கம்பி போன்ற உறுதியான முள்ளைப் படரவிட்டுத் தம்மைப் பாதுகாத்துக்கொள்ளும். முள்ளம் பன்றியின் உடலைப் பார்க்காதவர்களுக்கு இந்தக் காட்சியைப் புரிந்துகொள்ள முடியாது. போரியல் நுட்பம் தெரிந்த பழந்தமிழ்ப் பாவலன் இயற்கையறிவு பெற்றிருந்தது நம்மை வியப்படையச்செய்கிறது.

போருக்குச் சென்று பலர் மடிவதும் எஞ்சியிருப்பவர்கள் போரை வழிநடத்துவதும் தமிழர்களுக்குப் புதிய குணம் அன்று.தொன்றுதொட்டு வருவதாகும் எனபதை எய்போல் கிடந்த று வழியாக அறியலாம்.

புறப்பொருள் வெண்பாமாலையின் பாடல் பின்வருமாறு:

கல்நின்றான் எந்தை; கணவன் களப்பட்டான்;
முன்னின்று மொய்யவிந்தார் என்னையர்- பின்னின்று
கைபோய்க் கணையுதைப்பக் காவலன் மேலோடி
எய்போல் கிடந்தான்என் ஏறு

(கல்=நடுகல்;எய்= முள்ளம்பன்றி;களம்=போர்க்களம்)

ஏறாண்முல்லை என்று இதற்குத் துறை வகுக்கப்பட்டுள்ளது.ஏறாண் முல்லை என்பது மறப்பண்பு மேலும் மேலும் வளர்தலுடைய மறக்குடியின் ஒழுக்கத்தை மேம்படுத்திச்சொல்வதாகும்."மாறின்றி மறங்கனலும் ஏறாண்குடி எடுத்துரைத்தன்று" என்று இதனைப் புறப்பொருள் வெண்பாமாலை குறிப்பிடும்.

ஞாயிறு, 18 அக்டோபர், 2009

புறப்பொருள் வெண்பாமாலை நினைவுகள்...1

புறப்பொருள் வெண்பாமாலை என்று ஓர் இலக்கண நூல் தமிழில் உண்டு.தமிழ் இலக்கியம் பயிலும் மாணவர்கள் இந்த நூலைப் பட்டப் பேற்றிற்குக் கற்பது வழக்கம்.புறப்பொருள் இலக்கணத்தை எளிய நடையில் கூறும் நூல்.இதனை மாணவனாக இருக்கும்பொழுது ஆர்வமுடன் கற்றுள்ளேன்(1987-88).என் பேராசிரியர்கள் இந்த நூலைச் சிறப்பாகக் கற்பித்தனர்.இதில் இடம்பெறும் எடுத்துக்காட்டு வெண்பாக்கள் அவ்வளவு எளிதில் மனத்துள் நிற்காது.மறந்துவிடுவோம்.எனவே இந்த வெண்பாக்களை மின்னல் வெண்பாக்கள் என்று அறிஞர் உலகம் போற்றும்.

புதுச்சேரியில் பணியில் இணைந்தபொழுது தமிழ்நூற்கடல் தி.வே.கோபாலையர் அவர்கள் அப்பொழுது வள்ளலார் மடத்தில் கிழமைதோறும் சமய இலக்கிய வகுப்பு நடத்துவார்(வியாழக்கிழமைகளில்).ஒரு மணி நேரம் நடக்கும் வகுப்பு எனக்குப் பெரு விருந்தாக இருக்கும்.புலால் உணவகத்தில் நுழைந்த பேருண்டியன் வயிறு புடைக்க உண்டு மீள்வதுபோல் அடியேன் தமிழ்நூற்கடலில் நீந்தி வருவேன்.இடையிடையே சில வினாக்களை எழுப்புவேன். ஐயாவுக்கு ஊக்கம் பிறக்கும்.விளக்கம் அள்ளி வீசுவார்கள்.வகுப்பு நிறைவுற்றதும் புறப்பொருள் வெண்பா மாலையிலிருந்து சில பாடல்களுக்கு விளக்கம் கேட்பேன்.மின்னல் வெண்பாக்கள் அந்த இடிதாங்கியிடம் பணிந்து புறப்படும். இலக்கிய இன்பம் நுகர்ந்து காட்டுவார்.யான் அப்பொழுது மாணவர்களுக்குப் புறப்பொருள் வெண்பாக்கள் கற்பிக்கும் பணியில் இருந்தேன்.ஐயாவிடம் கேட்டு மகிழ்ந்த கூடுதல் விளக்கங்களை என் மாணவர்களுக்கு எடுத்துரைப்பேன்.எல்லோரும் சேர்ந்து வகுப்பில் மனப்பாடம் செய்வோம். மனப்பாடம் செய்து மறுநாள் ஒப்புவிப்பவர்களுக்கு என் வகுப்பில் என்றும் பாராட்டும்,சிறப்பும் உண்டு.

வகுப்புகளில் அடிக்கடி நான் நினைவுகூரும் பெயர் தி.வே.கோபாலையர் என்பதாகும். அவரிடம் கற்ற மாணவர்களை விடவும் ஐயா மேல் எனக்குப் பெரிய மதிப்பு உண்டு.அவரைக் காண்பதையும் அவர் உரை கேட்பதையும் எந்தச் சூழலிலும் கைவிட்டதே இல்லை.அவர் உரை கேட்டு மீண்டால் புதுத்தெம்பு எனக்கு உண்டாகும்.எனக்கு ஏற்ற ஆசிரியராக அவர் இருந்தார்.வாழ்நாள் முழுவதும் அவருடன் இருந்திருந்தால் மிகப்பெரிய அறிவு பெற்றிருக்கலாம்.ஐயா அவர்கள் தமிழ் இலக்கியங்களைப் படித்துச் சுவைக்க வேண்டும் என்பார்கள்.நாம் படிப்பது கற்பதற்குதான்.அவர் படித்ததோ சுவைப்பதற்கு.அடிக்கடி தமிழ் மொழியின் அமைப்பு,இலக்கிய இலக்கணங்களின் சிறப்புகளை எண்ணி எண்ணி மகிழ்வார்.நம்மையும் அந்த இன்பம் பெற பாதை காட்டுவார்.சிலர் ஐயம் போக்கிக்கொள்ளும் கடைசிப் புகலிடமாக ஐயாவை நினைப்பார்கள்.நான் அவரின் ஒவ்வொரு அசைவையும் கண்டு பூரித்துப்போவேன்.அவருடன் சற்றொப்ப பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலான பழக்கம் எனக்கு உண்டு.செந்தாமரையின் மதுவுண்ணும் கானத்து வண்டு யான்.

புறப்பொருள் வெண்பாமாலையின் புரியாத பல இடங்களை ஐயாவிடம் கேட்டு மயக்கம் போக்கிக்கொண்டேன்.புறப்பொருள் வெண்பா மாலைக்குத் தமிழ் நூற்கடலை ஓர் உரை வரையவும் வேண்டினேன்.என் எண்ணம் இதில் நிறைவேறாமல் போனது.ஐயா இன்னும் சில காலம் இருந்திருந்தால் எண்ணம் கனிந்திருக்க வாய்ப்பு உண்டு.

பெருமழைப்புலவரின் உரையிலும் எனக்கு ஈடுபாடு உண்டு.பெருமழைப்புலவரின் உரையினைக் கழகத்தின் முதற்பதிப்பில் கண்டு மகிழ வேண்டும்.பின்னாளில் வந்த பதிப்புகளில் உரைகள் சுருக்கப்பட்டுவிட்டன.நம் அரைகுறை தொழில்முறைப் பேராசிரியர்கள் சரியாகப் பாடம் நடத்தாததாலும்,சுருக்கமாக எதிர்பார்த்ததாலும்,பக்க வரையறை,விலைக் குறைப்பு போன்ற வணிக நோக்காலும் கழகம் பொருமழைப்புலவரின் உரையைச் சுருக்கி வெளியிட வேண்டியதாயிற்று.மேலும் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள சுப.இராமநாதன் அவர்களின் பதிப்பும் மிகச்சிறந்த பதிப்பே.ஆய்வுப்பதிப்பு அஃது.

புறப்பொருள் வெண்பாமாலை ஐயனாரிதனார் என்னும் புலவர் பெருமானால் இயற்றப்பட்ட நூலாகும்.இவர் சேர மரபினர் என்பர்.தொல்காப்பியத்திற்குப் பிறகு வந்துள்ள புறப்பொருள் குறித்த குறிப்பிடத்தகுந்த நூல் இதுவாகும்.இந் நூல் பகுதிகள் இளம்பூரணர், பரிமேலழகர், அடியார்க்கு நல்லார் உள்ளிட்டவர்களால் எடுத்தாளப்பட்டுள்ளதால் இவர்களின் காலத்திற்கு முந்தியவர் ஐயனாரிதனார் ஆவார்.இவர் காலம் கி.பி.எட்டாம் நூற்றாண்டு என்பது அறிஞர்களின் துணிபாகும்.இந்த நூலுக்குச் சாமுண்டி தேவநாயகர் என்பவர் உரை வரைந்துள்ளார்.

அகத்தியரின் மாணவர்கள் பன்னிருவர் என்பதும் அப்பன்னிருவரும் யாத்த நூல் பன்னிரு படலம் என்பதும் இந்தப் பன்னிரு படலத்தின் வழிநூல் புறப்பொருள் வெண்பாமாலை என்பதும் அறிஞர் உலகம் குறிப்பிடும் செய்தியாகும்.தொல்காப்பியத்தின் புறத்திணையியலை ஒட்டிப் புறப்பொருள் வெண்பாமாலை செய்திகள் இருப்பினும் இரண்டு நூல்களுக்கும் இடையே வேறுபாடுகள் பல உண்டு.குறிப்பாகத் தொல்காப்பியம் உணர்த்தும் காஞ்சித்திணையும்,புறப்பொருள் வெண்பாமாலை உணர்த்தும் காஞ்சித்திணையும் பெயர் அளவில் ஒன்றாக இருப்பினும் பொருள் அளவில் வேறுபாடு உடையனவாகும்.

தொல்காப்பியர் புறத்திணையியலில் வெட்சி,வஞ்சி,உழிஞை,தும்பை,வாகை,காஞ்சி,பாடாண் என்று ஏழு புறத்திணைகளையும்,அகத்திணையயியலில் முல்லை,குறிஞ்சி, பாலை,மருதம், நெய்தல்,கைக்கிளை,பெருந்திணை என்று ஏழு அகத்திணைகளையும் குறிப்பிடுகின்றார். தொல்காப்பியர் அகத்திணையாகக் குறிப்பிடும் கைக்கிளை,பெருந்திணை என்பதைப் புறப்பொருள் வெண்பாமாலை ஆசிரியர் புறத்திணையாகக் குறிப்பிடுகிறார்.

மேலும்தொல்காப்பியர் குறிப்பிடும் வெட்சி,வஞ்சி,உழிஞை,தும்பை,வாகை,பாடாண் என்ற ஆறு திணைகளுடன் கரந்தை,காஞ்சி,நொச்சி, என்று மூன்று திணைகளைக் கூட்டிப் புறத்திணைகள் மொத்தம் பதினொன்று என்றும் ஐயனாரிதனார் குறிப்பிட்டுள்ளார்.

படித்து நாம் விளங்கிக்கொள்ளவும், புறப்பொருள் வெண்பாமாலை ஆசிரியர் அமைத்துள்ள முறையிலும் புறத்திணைகளைப் பின்வருமாறு வரிசையிட்டுக்கொள்ளலாம்.

1.வெட்சித் திணை( ஆநிரைகளைக் கவர்தல்)
2.கரந்தைத் திணை(வெட்சி மறவர்கள் கவர்ந்த தம் ஆநிரைகளை மீட்டல்)
3.வஞ்சித்திணை(பகைப்புலத்தின் மேல் படையெடுப்பது)
4.காஞ்சித்திணை(தம் நாட்டின் மேல் படையெடுத்து வரும் வஞ்சி வேந்தனைப் படைதிரட்டித் தடுத்து நிறுத்திப் போர் புரிவது.இதன் அடையாளமாக காஞ்சிப்பூ சூடுவர்)
5.நொச்சித்திணை(பகையரசனிடம் இருந்து மதிலைக் காப்பது)
6.உழிஞைத்திணை(பகையரசனின் காவற்காடு,அகழி கடந்து கோட்டைக்குள் நுழைவது)
7.தும்பைத்திணை(பகையரசர்கள் இருவரும் போர் புரிவது)
8.வாகைத்திணை(போரிட்ட இருவருள் ஒருவர் வெற்றி வாகை சூடுவர்)
9.பாடாண்திணை(ஓர் ஆண்மையாளனின் உயர் ஒழுகாலாறுகளைப் புகழ்வது)
10.கைக்கிளை(ஒரு தலையாக விரும்புவது )
11.பெருந்திணை(பொருந்தாத காதல்)

புறப்பொருள் வெண்பாமாலை இலக்கண நூலாயினும் அதில் உள்ள வெண்பாக்கள் முத்தொள்ளாயிரம் போலவும்,நளவெண்பா போலவும் கற்று இன்புறத்தக்க இனிய வெண்பாக்களைக் கொண்டுள்ளது.சிறந்த வெண்பாக்களை எடுத்து விளக்குவேன்.இதனைப் படித்து மகிழும் பேராசிரியர்கள்,ஆய்வாளர்கள்,பதிவர்கள் உரிய குறிப்புகளுடன் வெளியிடுவது வரவேற்கத்தக்க ஒன்றேயாகும்.வெட்டி ஒட்டித் தங்கள் பெயரில் வெளியிட்டு மகிழும் வீண் விருப்பம் தவிர்க்க வேண்டுகிறேன்.இத்தகையோரின் செயல்களால் பல நூறு பக்க அரிய செய்திகள் தட்டச்சிட்டும் வெளியிடப்பெறாமல் உள்ளன.
மீண்டும் வருவேன்...

சனி, 17 அக்டோபர், 2009

அகவிழி ஆவணப்படம் புதுச்சேரியில் வெளியீட்டு விழா



இடம்: அல்லயன்சு பிரான்சீசு அரங்கம்,சுய்ப்ரேன் வீதி,புதுச்சேரி-605 001.

நாள்: 24.10.2009 சனிக்கிழமை மாலை 6.00 மணி

புதுவையின் புகழ்பெற்ற இதழாளர் பி.என்.எசு.பாண்டியன் அவர்களின் இயக்கத்திலும்,புதுவை இளவேனிலின் ஒளி ஓவியத்திலும் உருவாகியுள்ள அகவிழி என்னும் ஆவணப்படம் தமிழகத்தின் கடைக்கோடிப்பகுதியில் இருக்கும் இராமநாதபுரத்தின் வெள்ளரி ஓடை கிராமத்தில் பனைத்தொழில் புரியும் முருகாண்டி என்ற பார்வையிழந்த மனிதரின் வாழ்க்கையைப் பதிவு செய்துள்ளது.இயல்பிலேயே பார்வையிழந்த முருகாண்டிப் பனைமரமேறித் தொழில் செய்வதை மிகச்சிறப்பாகப் பதிவு செய்துள்ள இந்தப் படம் வரும் 24.10.2009 இல் புதுவையில் வெளியிடப்பட உள்ளது.

எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்கள் தலைமையில் நடைபெறும் விழாவில் புதுவைச் சட்டப்பேரவைத்தலைவர் இரா.இராதாகிருட்டிணன் அவர்கள் அகவிழி குறுந்தகட்டை வெளியிடுகிறார்.எழுத்தாளர் இரவிக்குமார் அவர்கள் பெற்றுக்கொள்கிறார்.புதுவைக் காவல்துறையின் முதுநிலைக் கண்காணிப்பாளர் சிறீகாந்து அவர்கள் முதன்மையுரை ஆற்றுகிறார்.மேலும், நிழல் இதழாசிரியர் ப.திருநாவுக்கரசு(சென்னை) சிறப்புரை ஆற்றுகிறார்.

இந்தப் படத்தில் சிற்பி செயராமன் அவர்கள் குரல்கொடுத்துள்ளார்.சே.கே.அவர்கள் ஆங்கில உரை வழங்கியுள்ளார்.இரா.ச.முருகேசபாரதி அவர்கள் வரைகலைப் பணியையும் படத்தொகுப்பினைச் ச.மணிகண்டனும்,ஒளி ஓவியத்தைப் புதுவை இளவேனிலும் மேற்கொண்டுள்ளனர்.ஆக்கத்தில் உதவியவர் சரவணன் அவர்கள் ஆவார்.

அகவிழி படக்குழுவினர் அனைவரையும் அழைத்து மகிழ்கின்றனர்.

தொடர்புக்கு:

+91 9894660669

செவ்வாய், 6 அக்டோபர், 2009

பெரியார் ஈ.வெ.ரா.சிந்தனைகள் நூல் திருத்தப்பட்டு,விரிவாக்கம் செய்யப்பட்ட இரண்டாம் பதிப்பு 2010 பிப்ரவரியில் வெளியீடு!

திருச்சி வே.ஆனைமுத்து அவர்களால் பெரியார் ஈ.வெ.ரா.சிந்தனைகள் நூல் மூன்று தொகுதிகளாகத் தொகுக்கப்பட்டு,01.07.1974 இல் அன்றைய தமிழக முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களால் வெளியிடப்பெற்றது.அதன் படிகள் விற்றுத் தீர்ந்தன.பல ஆண்டுகளாக அதன் படிகள் விற்பனைக்குக் கிடைக்கவில்லை.உலகு தழுவிய தமிழர்கள் இந்த நூலின் மறுபதிப்பு எப்பொழுது வெளிவரும் என்று ஆர்வமுடன் வினவியவண்ணம் இருந்தனர்.அவர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில் தந்தை பெரியார் பல காலம் எழுதியும் பேசியும் வந்த செய்திகள் உரிய வகையில் தொகுக்கப்பட்டு 2010 பிப்பரவரியில்வெளியிடப்பட உள்ளன.முன் வெளியீட்டுத் திட்டத்தில் இந்த நூல்கள் வெளியிடப்படுவதால் குறைந்த விலையில் வாங்கிக்கொள்ள அரிய வாய்ப்பு.

தெமி 1/ 8 அளவிலான,20 தொகுதிகளைக்கொண்ட(20 Volumes ) இப்பெரும் தொகுப்பு முன்வெளியீட்டுத் திட்டத்தில் மிகவும் குறைந்த விலைக்குக் கிடைக்க உள்ளது.இத்தொகுப்பு உயரிய,அழகிய,தரமான பதிப்பாக அமைகிறது.100 பக்கங்கள் முதல் 675 பக்கங்கள் வரையிலான தொகுப்புகளாக மொத்தம் 9000 பக்கங்களைக் கொண்டுள்ளது.

பெயர்க்குறிப்பு அடைவு,சொற்குறிப்பு அடைவு, அருஞ்சொற்பொருள் அகராதி,இன்றியமையாத அடிக்குறிப்புகள் தரப்பெற்றுள்ளன.

நூலை வெளியிடுவோர் பெரியார் ஈ.வெ.இராமசாமி-நாகம்மை கல்வி,ஆராய்ச்சி அறக்கட்டளையினர் ஆவர்.

20 தொகுதிகளைக்கொண்ட 9000 பக்கம் கொண்டு இந்த நூலின் விற்பனை விலை 5,800 உருவா ஆகும்.

ஆனால் முன்பதிவுவிலையில் 3500 உருவாவுக்குக் கிடைக்கும்.

முன்பதிவுத் தொகை செலுத்திப் பதிவு செய்துகொள்ள கடைசி நாள் 15.11.2009.

இரண்டு தவணைகளில் முன்பதிவு செய்துகொள்ள விரும்புவோர் முதல் தவணையை (2000 உருவா) 15.11.2009 இலும்,இரண்டாம் தவணையை(1800 உருவா) 15.12.2009 இலும் செலுத்தவேண்டும்.

வங்கி வரைவோலையாகத் தொகையை அனுப்ப விரும்புவோர்(Bank Draft)

PERIYAR E.V.RAMASAMY-NAGAMMAI EDUCATIONAL AND RESEARCH TRUST என்று ஆங்கிலத்திலோ பெரியார் ஈ.வே,இராமசாமி -நாகம்மை கல்வி,ஆராய்ச்சி அறக்கட்டளை எனத் தமிழிலோ வரைவோலை எடுத்து,

திரு.வே.ஆனைமுத்து,தலைவர்
பெரியார்-நாகம்மை அறக்கட்டளை,
19,முருகப்பா தெரு,
சேப்பாக்கம்,சென்னை-600005,இந்தியா

என்னும் முகவரிக்கு அனுப்பலாம்.

தொலைபேசி எண்: + 91 44 2852 2862

மின்னஞ்சல் முகவரி:
sinthaniyalan@yahoo.in
periyar_era@yahoo.in

வியாழன், 1 அக்டோபர், 2009

புதுச்சேரியில் துளிப்பா(ஐக்கூ) குறித்த ஒருநாள் ஆய்வரங்கம்

புதுச்சேரியிலிருந்து வெளிவரும் கரந்தடி இதழ் சார்பாக 11.10.2009 ஞாயிறு அன்று துளிப்பா(ஐக்கூ),நகைத்துளிப்பா(சென்றியு),உரைத்துளிப்பா(ஐபுன்),ஈறுதொடங்கித் துளிப்பா(ஐக்கூ அந்தாதி),இயைபுத் துளிப்பா(லிமரிக்கூ) ஆகியன குறித்த ஒருநாள் ஆய்வரங்கு நடைபெற உள்ளது.

மேற்குறித்த தலைப்பில் ஆய்வுக்கட்டுரை படிக்க விரும்புவோர் புதுவைப் பாவலர் சீனு.தமிழ்மணி அவர்களிடம் செல்பேசியில்(+91 94436 22366)தொடர்புகொள்ளலாம்.அயல் நாட்டினர் கட்டுரை அனுப்ப விரும்பினால் என் மின்னஞ்சல் muelangovan@gmail.com முகவரிக்குக் கட்டுரையை அனுப்ப ஆய்வரங்க அமைப்பாளரிடம் கட்டுரையை ஒப்படைப்பேன்.

தொடர்புகளுக்கு ஏற்பப் பெயரை அழைப்பிதழில் இணைக்க முடியும்.ஆய்வுக்கட்டுரைகள் நூல்வடிவம் பெற உள்ளன.

அஞ்சல் முகவரி:

பாவலர் சீனு.தமிழ்மணி
ஆசிரியர்-கரந்தடி,
50,நிலையத்தெரு,சண்முகாபுரம்,
புதுச்சேரி-605 009,இந்தியா