நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வியாழன், 31 மே, 2018

கிண்டற்பித்தன் கவிதை

( பழைய பதிவு. இன்று மீள்பதிவானது)

நேற்று நான் பேராசிரியர் தங்கப்பா அவர்களை ஒருமொழி பெயர்ப்பு தொடர்பாகச் சந்தித்து உரையாடிக் கொண்டிருந்தேன். எங்கள் பேச்சு பேராசிரியர் அவர்களின் பாட்டுகள் குறித்துத் திரும்பியது. வெளிவராத அவர்களின் பாடல்கள் பற்றி உரையாடல் நகர்ந்தது. எத்தனையோ சமூக நடப்புப் பாடல்களை அவர்கள் வரைந்து சில இதழ்களில் வெளியிட்டிருந்தாலும் முறையாகத் தொகுத்து வெளியிடவில்லை. அப்பொழுது அவர்களின் செல்பேசி குறித்து எழுதிய பாடலை நான் நினைவுகூர்ந்தேன். மேலும் பனிப்பாறை நுனிகளில் சில பாடல்கள் எனக்குப் புரியிவில்லை என்றேன். ஓய்வுநேரத்தில் விளக்குவதாகச் சொன்னார்கள்.

அப்பொழுது கிண்டற்பித்தன் என்பவர் எழுதிய பாடலை நீங்கள் படித்தது உண்டா? என்று பேராசிரியர் தங்கப்பா அவர்கள் வினவினார்கள். இல்லை என்றேன். ஒளியச்சில் இருந்த அந்தப் பாடலைக் காட்டினார்கள். மகிழ்ந்தேன். இன்றும் மரபு மாறாமல் பாடல் எழுதுபவர்கள் இருப்பது அறிந்து மகிழ்ந்தேன்.

 இருபதாம் நூற்றாண்டு அவலங்களை மரபில் எழுதுவோர் குறைந்துவரும்
சூழலில் கிண்டற்பித்தனின் பாடல் எனக்கு மகிழ்ச்சி தந்தது. மரபுப்பாடல் ஆர்வலர்களுக்கு என்பக்கத்தில் அந்தப் பாடலைவைக்கின்றேன். இது போன்ற மரபுப் பாடல்கள் இருப்பின் அனுப்பி வையுங்கள். மரபுக்கவிதைக்கு நீர் ஊற்றி வளர்ப்போம். உண்மையான மரபுப் பாவலர்களுக்கு ஊக்கம் தருவோம். படித்து மகிழுங்கள்.

என்னடா பிழைப்பு?

என்னடா பிழைப்புப் பிழைக்கின்றீர்கள்?
நக்கிப் பிழைக்கும் நாய்ப்பிழைப்பு!
படித்த பட்டமும் பதவியும் எதற்கடா?
அடுத்தவன் காலை நக்கிப் பிழைக்கவா?

ஆண்டான் மார்கள்தம் அந்தப்புரங்களில்
களியாட்டங்கள் ஆடிக் களைத்தபின்
விளையாட் டாக வீசி எறியும்
எச்சிலுக்காக, இப்படி வாசலில்
காத்துக் கிடந்து அவர்கண் எதிர்ப்படுகையில்
குழைந்து பல்இளித்தும்,கூழைக்கும்பிடு
போட்டு நின்று புழுப்போல் நெளிந்தும்
பெருமிதம்விட்டுப் பிழைக்கின்றீர்களே!

வயிறு வளர்க்க வழியா இல்லை?

வண்டியில் காய்கறி வைத்துத் தள்ளலாம்.
நண்டுபிடித்துக் கொண்டுபோய் விற்கலாம்.
காட்டுச் சுள்ளி பொறுக்கி வந்து
வீட்டுக்கு வீடு விற்றுப் பிழைக்கலாம்.
கோயில்முன்னே குந்தியிருந்து
பூ,பழம் தேங்காய் போட்டு விற்கலாம்.

கிழமைக்கு ஒருநாள் கீழூர்ச் சந்தையில்
கருவாட்டுக்கடை வைத்தால்கூட
அன்றாட வாழ்க்கை அழகாய் நடக்குமே!

எவன்பின் போயும் இளித்திட வேண்டா.

தெருவோரத்தில் செருப்புத் தைக்கலாம்.
சாய்க்கடை கூட அள்ளலாம். தப்பில்லை.
சட்டையில்தானே கொஞ்சம் கறைபடும்.
உள்ளம் அழுக்குப்படாமல் இருக்குமே!

இதையெல்லாம் விட்டுநீர்
அதிகாரச்சேற்றில் அழுந்தி அழுந்தித்
தினவெடுத்துத் திரிபவனுக்கு
முதுகுசொறியப் போகின்றீர்களே!
வெட்கம் இல்லையா?

படம்பல காட்டிப் பதவிக்கு வந்தவன்
குடும்பமாய் அடிக்கும் கொள்ளை விருந்தில்
சதையை நன்றாய்ச் சப்பித் தின்றபின்
எறியும் எலும்புத் துண்டுக்கட்காக்
காலடி நாய்களாய்க் காத்துக் கிடக்கன்றீர்கள்!
இந்தப் பிழைப்பும் ஓர் பிழைப்பா?
எந்த நாட்டிலும் இதுபோல் இல்லையே!

பாடலாசிரியர்: கிண்டற்பித்தன்
நன்றி: புகழ்ச்செல்வி இதழ்

பேரறிஞர். ம. இலெ. தங்கப்பா மறைவு!


பேரறிஞர். ம. இலெ.தங்கப்பா

 புதுச்சேரியில் வாழ்ந்துவந்த பேராசிரியர் ம.இலெனின் தங்கப்பா அவர்கள் 31.05.2018 அதிகாலை 1. 30 மணியளவில் தம் 84 ஆம் அகவையில் தமிழ்ப்பணியை நிறைவு செய்து, தம் இயக்கத்தை நிறுத்திக்கொண்டார். உடல்நலம் குன்றி, மருத்துவம் பார்த்து வந்த பேராசிரியர் தங்கப்பா அவர்கள் மருத்துவம் பயனளிக்காத நிலையில் இயற்கை எய்தியமை தமிழறிஞர் உலகத்தைப் பெரும் துன்பத்தில் ஆழ்த்தியுள்ளது. ஐம்பதுக்கும் மேற்பட்ட அரிய நூல்களின் ஆசிரியராகவும், இரண்டுமுறை சாகித்ய அகாதெமி விருது பெற்ற படைப்பாளியாகவும் மிகச் சிறந்த மொழிபெயர்ப்பாளராகவும், தெளிதமிழ் என்ற இலக்கிய இதழின் ஆசிரியராகவும், பல்வேறு தமிழ்நலம் சார்ந்த போராட்டங்களைத் தலைமை தாங்கி நடத்திய செயல்மறவராகவும், வாழ்வியல் பேரறிஞராகவும் விளங்கிய தங்கப்பாவின் பணிகள் தமிழுலகில் என்றும் போற்றத்தக்க பணிகளாகும்.

 தங்கப்பாவுக்கும் எனக்கும் சற்றொப்ப முப்பதாண்டுகள் நட்பு உண்டு. நான் மாணவப்பருவத்திலிருந்தே அவர்களின் வீட்டில் ஒரு மகனாக வளர்ந்தேன். எங்கள் இல்லத்தில் பல நாள் வந்து தங்கி, எங்களின் விருந்தோம்பலை ஏற்றவர். என் திருமணத்திற்குத் தம் துணைவியாருடன் கலந்துகொண்டு வாழ்த்தியவர். ஆர்க்காட்டில் நான் பணியிலிருந்த காலத்து அம்மாவுடன் வந்து ஒரு கிழமை தங்கி, எங்களை இல்லற நெறிக்கு ஆற்றுப்படுத்தியவர்கள். புதுவைக்குப் பணிக்கு வந்த பிறகு கிழமைக்கு ஒருமுறையேனும் சந்தித்து உரையாடுவதை வழக்கமாக் கொண்டிருந்தேன். ஐயாவின் மறைவு எனக்கும், என்னைப் போல் அவரை நேசித்த அன்பர்களுக்கும் மிகப் பெரிய வெற்றிடத்தை உருவாக்கியுள்ளது. பேராசிரியர் ம. இலெனின் தங்கப்பாவின் பிரிவால் வருந்தும் குடும்பத்தினர், நண்பர்கள், தமிழியச் செயற்பாட்டாளர்கள் என அனைவருக்கும் என் ஆழ்ந்த வருத்தத்தையும், இரங்கலையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.

 பேராசிரியர் தங்கப்பாவின் வாழ்க்கைக் குறிப்பினைப் பத்தாண்டுகளுக்கு முன்பு எழுதியிருந்தேன். மீள்பதிவாக அதனைத் தங்கள் பார்வைக்கு வைக்கின்றேன்.

 நெல்லை மாவட்டம்,தென்காசி வட்டம், குறும்பலாப்பேரியில் 08.03.1934 இல் பிறந்தவர் .இலெனின் தங்கப்பா. இவர்தம் பெற்றோர் புலவர் . மதன பாண்டியன், இரத்தினமணி அம்மையார். தந்தையாரின் இளமைக்கால கல்விப் பயிற்றலில் இயற்கையாகவே தமிழ்ப்புலமை கைவரப் பெற்றவர் தங்கப்பா. பல்வேறு தமிழ் நூல்கள் இளமையிலேயே அறிமுகமாயின. அப்பாடல்களின் ஓசை உள்ளத்தில் பதிந்ததால் தங்கப்பா இயற்றும் பாடல்கள் மிகச்சிறந்த ஓசையின்பம் கொண்டனவாக விளங்குகின்றன. இளங்கலைப் பொருளியல் பயின்ற தங்கப்பா, பின்னர் முதுகலைத் தமிழிலக்கியம் பயின்றவர்.

 மாணவப் பருவத்திலேயே மொழிபெயர்ப்புப் பணிகளில் விளையாட்டாக ஈடுப்பட்டு மிகச்சிறந்த மொழிபெயர்ப்பாளராக அறியப்படுபவர். கல்வி கற்றவுடன் தமிழகத்தில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் வரலாறு, ஆங்கிலம் பயிற்றுவிக்கும் ஆசிரியராகப் பணிபுரிந்தார் (1954 -1959). பின்னர்ப் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் (1959-68) பணிபுரிந்தார். 1968 முதல் 1994 வரை புதுச்சேரி அரசுக்கு உரிமையான கல்லூரிகளில் புதுச்சேரி, காரைக்காலில் பணிபுரிந்த பெருமைக்கு உரியவர்.

 ஆரவாரம் இல்லாமல் அடக்கமே வடிவாக விளங்குபவர். அன்பின் மேன்மையை உலகிற்குப் பல நூல்களின் வழியாகவும் நடைமுறை வாழ்வியல் வழியாகவும் விளக்கி வருபவர். இயற்கையீடுபாடு கொண்டவர். தம் பிள்ளைகளுக்குச் செங்கதிர், விண்மீன், இளம்பிறை, மின்னல் எனப் பெயரிட்டுள்ள பாங்கு ஒன்றே இவர்தம் இயற்கை ஈடுபாடு காட்டும் சான்றுகளாகும்.

  மொழிப்பற்றும், இனப்பற்றும் கொண்டு பல பணிகள் செய்தவர். பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களுடன் இணைந்து தொடக்க காலத் தென்மொழி வளர்ச்சிக்கு உழைத்தவர். தமிழ் இன முன்னேற்றத்திற்கானஅமைப்புகளுடன் இணைந்து பணிபுரிந்த பெருமைக்கு உரியவர்.

 பாவேந்தர், பெருஞ்சித்திரனார், கண்ணதாசன், கோவேந்தன் உள்ளிட்ட தமிழ்ப்பற்றாளர்களுடன் தொடர்புகொண்டிருந்தவர். பாவேந்தரின் குயில் இதழில் .இலெனின் என்னும் பெயரில் எழுதத் தொடங்கியவர்.

 தங்கப்பாவின் படைப்புகள் தொடக்கத்தில் பல இதழ்களின் வழியாக வெளிவந்தன.அவற்றுள் தென்மொழி, தமிழ்ச்சிட்டு, தென்றல், வானம்பாடி, பூஞ்சோலை, இனமுழக்கம், தமிழகம், உரிமை வேட்கை, கைகாட்டி, கவிஞன், மீட்போலை, அரும்பு, விருந்து, கவியுகம், பொதுமை, தெளிதமிழ், வெல்லும் தூயதமிழ், கண்ணியம் முதலான இதழ்கள் குறிப்பிடத்தகுந்தன.

 தங்கப்பா இதழ்களுக்குத் தகக் கொள்கைகளை மாற்றிக்கொள்ளும் இயல்புடையவர் இல்லை. தமிழ்மொழி, இனம் சார்ந்த கொள்கைகளையும் இயற்கை,அன்பு இவற்றை வலியுறுத்தியும் மிகுதியாக எழுதியுள்ளவர். தமிழ் இலக்கியங்களைப் பிற மொழிக்கு அறிமுகம் செய்த வகையிலும், பிறமொழி இலக்கியங்களைத் தமிழிற்கு மொழிபெயர்த்து வழங்கிய வகையிலும் என்றும் நினைவுகூரத் தக்கவர். தமிழ் இதழ்களில் எழுதுவதுடன் ஆங்கில இதழ்களிலும் எழுதி வருபவர். இவற்றுள் Caravan,Poet, Cycloflame (u.s.a), Modern Rationalist,Youth Age, New Times, Observer முதலியன குறிப்பிடத்தகுந்தன.

 தங்கப்பா தம் பதினேழாம் அகவையில் பாடல் புனையத் தொடங்கி இன்றுவரை கற்பனை வளம் குறையாமல் படைப்புகளை வழங்கி வருபவர். தமிழின் செவ்வியல் படைப்புகளை அதன் தரம் குறையாமல் ஆங்கிலத்தில் பெயர்த்தவர்.Hues and Hormonies என்னும் பெயரில் சங்கப் பாடல்களையும் Songs of Grace in St.Ramalingam என்னும் பெயரில் இராமலிங்க அடிகளாரின் பாடல்களையும் மொழிபெயர்த்த பெருமைக்கு உரியவர். பாவேந்தர் பாரதிதாசன் பாடல்களை மொழி பெயர்த்து Selected Poems of Bharathidasan எனவும் வெளியிட்டவர்.

 பாரதியார் பாடல்களைத் தமிழிலிருந்து ஆங்கிலத்திற்குப் பெயர்த்தமைக்குக் கல்கத்தா தமிழ்ச்சங்கப் பரிசில் பெற்றவர். அரவிந்தர் பாடல்களைத் தமிழிற்குப் பெயர்த்தமைக்கு 1972 ஆம் ஆண்டு அரவிந்தர் ஆசிரமத்தின் பரிசினையும் பெற்றவர்.

 தங்கப்பாவின் படைப்புகள் இவருக்குப் பல பரிசில்களைப் பெற்றுத் தந்துள்ளன. இவற்றுள் தமிழ் நாட்டரசின் பாவேந்தர் விருது(1991), பகுத்தறிவாளர் கழகத்தின் பெரியார் விருது(1998), தமிழர் தேசிய இயக்கத்தின் தமிழ்த்தேசியச் செம்மல்(2002) விருது உள்ளிட்டன குறிப்பிடத்தகுந்தன. இரண்டுமுறை சாகித்ய அகாதெமி விருதுபெற்றவர். பல்வேறு தமிழமைப்புகளின் பரிசுகளையும், விருதுகளையும் பெற்றவர். தெளிதமிழ் இதழின் ஆசிரியராகத் தமிழ்த்தொண்டு செய்தவர்.

 புதுச்சேரி அரசு வழங்கிய விருதை அவ்வரசு தமிழுக்கு ஆக்கமான பணிகளில் ஈடுபடாததைச் சுட்டிக்காட்டித் திருப்பி வழங்கியவர். புதுச்சேரி தமிழ்வளர்ச்சி நடவடிக்கைக்குழுவின் தலைவராகவும், புதுச்சேரி இயற்கைக் கழகத்தின் தலைவராகவும், புதுவை அரசின் மொழிபெயர்ப்புக் குழுவின் உறுப்பினராகவும், தில்லி சாகித்திய அகாதெமியின் மொழிபெயர்ப்பாளருள் ஒருவராகவும் விளங்குபவர். தென்மொழி இதழின் உறுப்பாசிரியராகவும் விளங்கியவர்.

 ம.இலெனின் தங்கப்பா இன்று 31.05.2018 அதிகாலை 1.30 மணியளவில் இயற்கை எய்தினார்.


.இலெ.தங்கப்பாவின் நூல்கள்

கட்டுரை நூல்கள்

01.பாரதிதாசன்-ஓர் உலகப்பாவலர்,1987

02.நுண்மையை நோக்கி,1989

03.எது வாழ்க்கை,1994

04.திருக்குறளும் வாழ்வியலும்,1995

05.வாழ்க்கை அறிவியல்,1998

06.பாட்டு வாழ்க்கை,1994,1999.

07.மொழிமானம்,2000

08.கொடுத்தலே வாழ்க்கை,2001

தமிழாக்கம்

09.புகழ்பெற்ற ஆங்கிலப் பாடல்கள் சிலவற்றின் தமிழாக்கம்,1959

10.மலைநாட்டு மலர்கள்,1975(இரசுல் கம்சுதாவ் பாடல்கள்)

11.மண்ணின் கனிகள்,1996

12.கனவுகள்,2002(ஆங்கிலப்பாடல்களின் தமிழாக்கம்)

ஆங்கில ஆக்கம் 

13.Hues and Hormonies From Anciend Land,1970

14.Songs of Grace in St.Ramalingam,1985

15.Selected Poems of Bharathidasan,1992

16.House of Darkness,1996(இருண்ட வீடு)

17.Hues and Hormonies From Anciend Land,Part II

17.a. LOVE STANDS ALONE,

17.b.RED LILIES AND FRIGHTENED BIRDS[Muttollayiram]

ஆங்கில மொழியில் எழுதியவை

18.This Question of Medium(Essay)-1996

19.Meadow Flowers(Poems)-1984

பிற நூல்கள்

20.பாடுகிறேன்,1973

21.தேடுகிறேன்,1980

22.ஆந்தைப்பாட்டு,1983

23.அடிச்சுவடுகள்,1983

24.வேப்பங்கனிகள்,1985

25.கள்ளும் மொந்தையும்,1987

26.இயற்கையாற்றுப்படை,1989

27.மயக்குறுமக்கள்,1990

28.அகமும் புறமும்,1991

29.பின்னிருந்து ஒரு குரல்,1992

30.பனிப்பாறை நுனிகள்,1998

31.புயற்பாட்டு,2000

32.பாட்டெனும் வாள் எடுப்பாய்,2004

குழந்தைகட்கான நூல்கள்

33.எங்கள் வீட்டுச்சேய்கள்,1973,2003

34.மழலைப்பூக்கள்,1983

35.இயற்கை விருந்து,1991

36.வாழ்க்கை மேற் காதல்

37.மரபுப்பாடல் செத்துவிட்டதா?

38.இடித்துரைப் பாடல்கள்(வசையமுது)

39.நையாண்டிமாலை(பாட்டும் உரையும்)

40.சோளக்கொல்லைப் பொம்மை

41.வாழ்வியல் அறிவீர்.

குறிப்பு: பழைய பதிவைக் காண இங்கே சொடுக்குக.