நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

ஞாயிறு, 28 செப்டம்பர், 2014

தமிழறிஞர் அருள்நிதி இராம. இருசுப்பிள்ளை




அருள்நிதி இராம. இருசுப்பிள்ளை

  குடந்தை ப. சுந்தரேசனாரின் தமிழிசைப் பணிகளை அறிந்தோர் கோவையில் யார் என வினவிக்கொண்டு பலரைத் தொடர்புகொண்டுபார்த்தோம். அப்பொழுது து. பாலசுந்தரம் ஐயா அவர்களும், திரு. வி. செல்வபதி அவர்களும் பேராசிரியர் இருசுப்பிள்ளை அவர்களின் இல்லத்துக்கு அழைத்துச் சொன்றனர். அருள் ஒழுகும் கண்களும் அன்பு ஒழுகும் பார்வையுமாகத் தமிழ் முனிவராகக் காட்சி தந்த இராம. இருசுப்பிள்ளை அவர்கள் எங்களை இன்முகத்துடன் வரவேற்று, தம் தமிழ் வாழ்க்கையை எடுத்துரைத்தார். தமிழ் வரலாற்றில் அவர் பெயர் நிலைத்து நிற்கும் வகையில் திருவாசகச் சொல்லகராதி, திருக்கோவையார் சொல்லகராதி என்னும் நூல்களைத் தந்துள்ளமை பாராட்டினுக்கு உரியது. அவர்தம் தமிழ் வாழ்க்கையை இங்குப் பதிந்து வைக்கின்றேன்.

  வாழும் தமிழறிஞர்களுள் இராம. இருசுப்பிள்ளை அவர்கள் குறிப்பிடத்தகுந்தவர். விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியை அடுத்த சிருவங்கூர் என்னும் ஊரில் இராமசாமி பிள்ளை, இருசாயி அம்மாள் ஆகியோரின் மகனாக 17.10.1928 இல் பிறந்தவர். கள்ளக்குறிச்சி நாட்டாண்மைக் கழக உயர்நிலைப்பள்ளியில் பயின்றவர். அண்ணாமலைப் பல்கலைக்கழகம், சென்னைப் பல்கலைக்கழம் ஆகியவற்றில் உயர்கல்வி பயின்றவர். 

   இராம. இருசுப்பிள்ளை அவர்கள் ஓராண்டு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றிய பிறகு கோவை பூ.சா.கோ. கலைக்கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராகப் பணியாற்றியவர்.  பூ.சா.கோ. அறநிலைய தொழிலகத்தில் தொழிலாளர் அலுவலராகவும் கடமையாற்றியவர். கலைக்கதிர் இதழின் பொறுப்பாசிரியராக 17 ஆண்டுகள் (1953 முதல் 1990 வரை) பணியாற்றியவர். சர்வோதயம் மாத இதழின் பொறுப்பாசிரியராக ஏழாண்டுகள் பணியாற்றியவர். 

   இறையீடுபாடு கொண்ட இருசுப்பிள்ளை அவர்கள் கோவை நன்னெறிக்கழகம், கோவை கம்பன் கழகம், கோவை திருவள்ளுவர் மன்றம், கோவை இரமணகேந்திரம், கோவை சன்மார்க்க சங்கம், உலக சமுதாய சேவா சங்கம் உள்ளிட்ட அமைப்புகளில் இணைந்து பணிபுரிந்த பெருமைக்குரியவர்.

இராம. இருசுப்பிள்ளை அவர்களின் தமிழ்க்கொடைகள்:

1.   எப்படிச் செய்தன
2.   வண்டி வளர்ந்த கதை
3.   தொழிலகமும் மனித உணர்வும்
4.   தொழிலகப் பாதுகாப்பு
5.   தொழில் நல்லுறவில் மேற்பார்வையாளர் பங்கு
6.   கொக்கரோ(சப்பானிய குறுநாவலின் தமிழாக்கம்)
7.   எண்ணுக நல்லன
8.   நல்ல எதிர்காலம்
9.   புத்தாண்டில் புதுவாழ்வு
10. வள்ளலாரும் வேதாத்திரி மகரிஷியும்
11. வள்ளலார் வாழ்வும் வாக்கும்
12. ஞானப்பரம்பரை
13. திருவருட்பா தினசரி தியானம்
14. நாளொரு குறள்
15. கோவை மாவட்ட சுதந்திரப் போராட்ட வரலாறு
16. தமிழ்மொழியின் தொன்மையும் மேன்மையும்
17. அருட்பெருஞ்ஜோதி அகவல் விளக்கம்
18. மனித உணர்வு மேம்பாட்டிற்கான வழிமுறைகள்
19. திருவாசகச் சொல்லகராதி
20. திருக்கோவையார் சொல்லகராதி

என்பன.

"நல்லது செய்தல் ஆற்றிராயினும்
அல்லது செய்தல் ஓம்புமின்”

என்னும் புறநானூற்று வரிகளைத் தம் வாழ்நாள் நோக்காகக் கொண்டு தமிழ் வாழ்க்கை வாழ்ந்து வருகின்றார்.

 திரு. வி.செல்வபதி, திரு. து.பாலசுந்தரம்(கோவை)

தமிழிசைக் காவலர் நா. வரதராசலு நாயுடு அவர்கள்



                     என்.வரதராசலு நாயுடு(என்.வி.நாயுடு)
    
  பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப.சுந்தரேசனார் வாழ்வை ஆவணப்படுத்தும்பொழுது தமிழுக்குத் துணைநின்ற பல பெரியோர்களின் வாழ்வியலை அறியமுடிந்தது. அவர்களுள் கோவையில் வாழ்ந்த நா. வரதராசலு நாயுடு அவர்களும் ஒருவராவார். என்.வி.நாயுடு என்று அறியப்பட்ட அப்பெருமகனார் குடந்தை ப.சுந்தரேசனார் அவர்களை ஆதரித்த பெருமக்களுள் ஒருவர். என்.வி.நாயுடு பற்றி எழுத்தாளர் நாஞ்சில்நாடன் ஐயா அவர்களிடம் வினவியபொழுது திருவாளர் நாயுடு அவர்களைப் பற்றியும், அவர்களின் குடும்பத்தினர் பற்றியும் அரிய செய்திகள் பலவற்றைத் தந்தார். இப்பொழுது கோவையில் தமிழ் வாழ்க்கை வாழ்ந்துவரும் திரு. து. பாலசுந்தரம் ஐயா அவர்களின் தொடர்புஎண்ணை அளித்து அவர்களுடன் தொடர்புகொள்ளச் சொன்னார். கோவைக்குப் பயணமானேன்.

   திரு. து. பாலசுந்தரம் ஐயா அவர்கள் என் கோவை வருகையை அறிந்து நான் தங்கியிருந்த விடுதிக்கு வந்து திரு. என்.வி.நாயுடு அவர்களின் மகள் வாழும் இல்லத்திற்கு அழைத்துச் சொன்றார். திருவாளர் நாயுடு அவர்களின் கல்வி, பணி, இசை ஈடுபாடு அறிந்து மகிழ்ந்தேன். மிகச் சிறந்த இசையீடுபாடு கொண்டிருந்த நாயுடு அவர்களிடம் மிகப்பெரும் இசைத்தொகுப்புகள் இருந்து சரியாகப் போற்றப்படாமல் இடம்மாறியுள்ளது. திருவாளர் நாயுடு அவர்கள் தொகுத்து வைத்திருந்த இசைத்தொகுப்புகளை மீட்டு வெளியுலகுக்குத் தந்தால் இசைவரலாறு மேம்படும்.

  நா. வரதராசலு நாயுடு அவர்கள் கோவை பீளமேட்டில் 1922 இல் வேளாண் குடியில் காங்கல்லார் மரபில் தோன்றியவர். முதுகலைப் பட்டமும் சட்டத்துறையில் பட்டமும் பெற்றவர். 1939 இல் இலண்டனில் காப்பீட்டுக் கணிப்புத்துறையில் F.I.A. (Fellow of the institute of Actuary ) என்ற பட்டம் பெற்றவர். இப்பட்டம் பெற்ற இந்தியர்கள் மூவரில் இவரும் ஒருவர்.

  மேற்கண்ட கல்வித்தகுதிகளால் இவர்கள் யுனைடெட் இந்தியா இன்சூரன்சு நிறுவனத்திலும் பின்னர் இந்நிறுவனம் தேசிய மயமாக்கப்பட்ட பின்னர் மண்டலத் துணை மேலாளராகப் பணியாற்றினார். பின்னர் தேசிய சேமிப்பு ஆணையராக ஆறு ஆண்டுகள் பணிபுரிந்துள்ளார். மீண்டும் தாய் நிறுவனமான எல்..சியில் நிர்வாக இயக்குநராக இருந்து 1971 இல் பணியிலிருந்து ஓய்வுபெற்றவர். தம் பணிக்காலத்தில் நேர்மையும் ஒழுங்கும் நிறைந்த அதிகாரி என அனைவராலும் பாராட்டப்பட்டவர். தமிழ், தெலுங்கு, வடமொழி, ஆங்கிலத்தில் மிகப்பெரும் புலமை பெற்றிருந்தார். கம்பராமாயாணத்தை ஆழ்ந்து படித்ததால் பிறமொழி இலக்கியங்களில் உள்ள ஒப்புமைப் பகுதிகளையும், நுட்பங்களையும் எடுத்துக்காட்டி விளக்கும் பேராற்றல் பெற்றிருந்தார். மற்ற நூலாசிரியர்களிலிருந்து கம்பர் தனித்து நிற்கும் இடங்களை எல்லாம் நாயுடு அவர்கள் தம் கைப்படியில் குறித்து வைத்திருந்தார். அதனைப் பாதுகாக்கும் நோக்கில் தமிழ்ப் பல்கலைக் கழகத்திற்கு அவர் குடும்பத்தாரால் அப் படி வழங்கப்பட்டுள்ளது.

   திரு. என்.வி. நாயுடு அவர்கள் கம்பராமாயணத்தில் மிகச் சிறந்த புலமை பெற்றவர்கள். காப்பிய இமயம் என்ற இவரின் நூல் குறிப்பிடத்தகுந்த ஒன்றாகும். இவரின் இலக்கிய ஈடுபாட்டை நாஞ்சில்நாடன், “வால்மீகி இராமாயணம், கம்பரின் இராம காதை, துளசிதாசரின் இராம சரித மானசம், அத்யாத்ம இராமாயணம், காளிதாசனின் ரகுவம்சம் ஆகிய நூல்களை மூலமொழியில் கற்றுத் தேர்ந்து பேரறிஞர் N.V.நாயுடு என அறியப்பட்டவர் அவ்வப்போது எழுதிவைத்த கட்டுரைகளும், குறிப்புகளுமே காப்பிய இமயம்ன்னும் நூல் என்று அறிமுகம் செய்வார். 

  இரணிய வதைப் பரணி, ஆண்டாள் பிள்ளைத்தமிழ் உள்ளிட்ட நூல்களின் பதிப்பாசிரியராகவும் விளங்கியவர். தமிழிசைக்கும், தமிழ் இலக்கியத்தின் மேம்பாட்டிற்கும் உழைத்த என்.வி.நாயுடு அவர்கள் தமிழ் இலக்கிய உலகில் நினைவிற்கொள்ளவேண்டியவர்.

செவ்வாய், 23 செப்டம்பர், 2014

மலேசியத் தமிழர்களின் தமிழ்ப்பற்றினைப் போற்றுகின்றேன்! புதுவை முதலமைச்சர் ந. அரங்கசாமி பேச்சு!





புதுவை முதலமைச்சர் ந.அரங்கசாமி அவர்கள் உலகத் தமிழ் இணைய மாநாட்டில் உரையாற்றும் காட்சி

புதுச்சேரியில் நடைபெற்ற 13 வது உலகத் தமிழ் இணைய மாநாட்டில் கலந்துகொண்ட புதுச்சேரி முதலமைச்சர் ந. அரங்கசாமி அவர்கள் மலேசியத் தமிழர்களின் தமிழ்ப்பற்றினைப் பாராட்டிப் பேசினார். புதுச்சேரியில் அமைந்துள்ள புதுவைப் பல்கலைக்கழகத்தில் உலகத் தமிழ் இணைய மாநாடு கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி ஞாயிற்றுக்கிழமை வரை மூன்று நாள்(19-21.09.2014) நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்துகொள்ள உலகின் பல பகுதிகளிலிருந்து முந்நூறுக்கும் மேற்பட்ட பேராளர்கள் வருகை தந்தனர். அவர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகளைப் படித்தனர். க் கட்டுரைகள் தொகுக்கப்பட்டு ஆய்வுக்கோவையாக வெளியிடப்பட்டது

இந்த மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய புதுச்சேரி முதலமைச்சர் ந. அரங்கசாமி அவர்கள் புதுச்சேரியில் கல்வி, தொழில்நுட்ப வளர்ச்சிக்குத் தாம் தொடர்ந்து அதிக முக்கியத்துவம் கொடுத்துவருவதை ஆர்வமுடன் குறிப்பிட்டார். அதிகமாக நான் வெளிநாடு செல்லவில்லை. மலேசியா, சிங்கப்பூர் என இரண்டு நாட்டுக்கு மட்டும் நான் சென்றுள்ளேன். மலேசியாவுக்குச் செல்வது அங்குள்ள முருகன் கோயிலில் வழிபாடு செய்வதற்காகும். மலேசியாவில் ஒரு கடையில் பொருள்களை எடுத்து விலை விசாரித்தபொழுது அங்குப் பணிபுரிந்த பணிப்பெண் நல்ல தமிழில் விலை கூறியதுடன் பொருள்கள் குறித்த விளக்கத்தையும் நல்ல தமிழில் குறிப்பிட்டார். தமிழைத் தூய்மையாகப் பேசுவதில் மலேசியத் தமிழர்கள் சிறப்பாக உள்ளமை பாராட்டிற்கு உரிய ஒன்றாகும். இங்கு அறுபதிற்கும் மேற்பட்ட மலேசியப் பேராளர்கள் வந்தும் அவர்களைச் சந்திக்கமுடியாமல் போனது. எனினும் அடுத்தமுறை மலேசியா செல்லும்பொழுது அவர்களைக் கட்டாயம் சந்தித்துக் கலந்துரையாடுவேன் என்று ஆர்வமுடன் குறிப்பிட்டார்.  

புதுச்சேரி ஆன்மீக பூமி. அறிஞர்கள் நிறைந்த பூமி. இந்த மாநிலம் அளவில் சிறியதாக இருந்தாலும் இந்தியாவின் சிறந்த மாநிலங்களில் இது முதன்மையானது. இங்குக் கல்வி, தொழில்நுட்பத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றோம். புதுச்சேரிக்குப் பன்னாட்டு அறிஞர்கள் வந்துள்ளதை மகிழ்ச்சியுடன் வரவேற்கின்றேன். உத்தமம் என்ற இந்த அமைப்பு உலக அளவில் கணினி, இணையத்தில் தமிழை உள்ளிட்டுப் பயன்படுத்த எடுக்கும் முயற்சிக்குப் புதுவை அரசு துணைநிற்கும் என்றார்.

 புதுச்சேரியில் உலகத் தமிழ் இணைய மாநாட்டை நடத்த முன்வந்த உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றமான உத்தமம் அமைப்பையும் இந்த மாநாட்டில் கலந்துகொண்டு கட்டுரை படித்த பேராசிரியர்களையும் பாராட்டுகின்றேன் என்றார்.

 புதுவை முதல்வரை வரவேற்று அழைத்துவரும் உத்தமம் பொறுப்பாளர்கள்.

அறிஞர் பெருமக்கள் புதுவை முதலமைச்சர் அவர்களை எழுந்து நின்று வரவேற்றல்.

மாநாட்டு மலரில் முதலமைச்சரின் வாழ்த்துரைப் பகுதியைக் காட்டி மகிழும் மு.இளங்கோவன்

மக்கள் முதல்வருடன் மு.இளங்கோவன், சட்டமன்ற உறுப்பினர் திரு. பாலன்

உத்தமம் தலைவர் வாசு அரங்கநாதன் முதல்வர் அவர்களைச் சிறப்பித்தல். அருகில் துணைவேந்தர் மு. பொன்னவைக்கோ.


             புதுவை முதலமைச்சர் அவர்களின் வாழ்த்துரை


புதுவை முதல்வர் அவர்களின் உரையைக் கேட்டு மகிழும் உத்தமம் பொறுப்பாளர்கள்.

மக்கள் முதல்வர் மாண்புமிகு ந.அரங்கசாமி அவர்களின் உரையைக் கேட்கும் மாநாட்டுப் பேராளர்கள்

மாநாட்டு ஒருங்கிணைப்பாளர் மு.இளங்கோவனிடம் முதல்வர் அவர்கள் தம் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் காட்சி.

 மக்கள் முதல்வர் அவர்களுக்கு நன்றி கூறி வழியனுப்பும் உத்தமம் மாநாட்டு விழாக்குழுவினர்




சனி, 20 செப்டம்பர், 2014

உலகத் தமிழ் இணைய மாநாடு – நிறைவு விழா



   புதுச்சேரியில் நடைபெறும் பதின்மூன்றாவது உலகத் தமிழ் இணைய மாநாட்டின் நிறைவு விழா 21. 09. 2014 மாலை 4.30 மணிக்குத் தொடங்கி நடைபெறுகின்றது. நிகழ்ச்சிக்குப் பாரத் பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் மு.பொன்னவைக்கோ தலைமை தாங்குகின்றார். முனைவர் கு. கல்யாணசுந்தரம் வரவேற்புரையாற்றுகின்றார். முனைவர் வாசு அரங்கநாதன் முன்னிலையில் நடைபெறும் விழாவில் இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், பிரான்சு, செக், அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துகொண்டு மாநாடு குறித்த தங்கள் கருத்துகளைப் பதிவு செய்ய உள்ளனர். 

மலேசியாவைச் சேர்ந்த சி. ம. இளந்தமிழ், பொறியாளர் மணி. மணிவண்ணன் வாழ்த்துரை வழங்க உள்ளனர். புதுவைப் பல்கலைக்கழகக் கலைப்புல முதன்மையர் சு. பன்னீர்செல்வம் அவர்கள் கருத்துரை வழங்க உள்ளார். பொறியாளர் இராமகி, பேராசிரியர் செல்வக்குமார் (கனடா), வாசு அரங்கநாதன் ஆகியோர் மாநாட்டை ஒட்டி நடைபெற்ற போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகளை வழங்கிப் பாராட்ட உள்ளனர். மாநாட்டு உள்நாட்டுக் குழுத் தலைவர் மு.இளங்கோவன் நன்றியுரையாற்ற உள்ளார்.