நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

சனி, 28 ஆகஸ்ட், 2021

மு.கலைவாணனின் “கதை சொல்வதே பெரிய கலை” நூலுக்கு வரைந்த அணிந்துரை!

 

 

(குறிப்பு: பன்முகத் திறமையாளர் மு. கலைவாணன் அண்மையில் கதை சொல்வதே பெரிய கலை எனும் கட்டுரைத் தொகுப்பு நூலை, அணிந்துரைக்கு விடுத்திருந்தார். நூலைப் படித்து மகிழ்ச்சியுடன் அணிந்துரை எழுதினேன். இந்த நூல் 30.08.2021 மாலை சென்னையில் வெளியீடு காண உள்ளது. உருவா 150 விலையுடைய இந்த நூல் 144 பக்கங்களில் அமைந்துள்ளது. குழந்தை இலக்கிய உலகிற்கு இந்த நூல் நல்வரவாக அமைந்துள்ளது. பள்ளிக் கல்வியில் ஆர்வமுடையவர்கள் இந்த நூலினை வாங்கி, நூலாசிரியரைப் போற்றலாம். தொடர்புக்கு: மு.கலைவாணன், சென்னை.: 0091 94441 47373)

        கதை சொல்பவர்களே பிறர் உள்ளத்தை வெல்ல முடியும்!

    மு. கலைவாணன் அவர்களை 1995 ஆம் ஆண்டளவில்  சென்னை, தியாகராயர் நகர் மாணவர் நகலகத்தின் அலுவலகத்தில் சந்தித்த நாள் முதல் இவரிடம் செழித்துக் கிடந்த கலையுணர்வை ஆர்வமாகச் சுவைத்து வருகின்றேன். மாணவர் நகலகத் தந்தை ஐயா நா. அருணாசலம் அவர்கள் நடத்திய பல்வேறு தமிழ் நிகழ்வுகளின் மேடை வடிவமைப்பு முதல், நிகழ்ச்சி வடிவமைப்பு வரை அனைத்தையும் ஏற்றுத் திறம்படச் செயலாற்றும் செயல் மறவராக இவர் என் உள்ளத்தில் பதிந்திருந்தார்.

    மு. கலைவாணனின் பொம்மலாட்டக் கலைநிகழ்வுகள் சிலவற்றைத் தொலைக்காட்சியிலும் நேரிலும் காணும் வாய்ப்பும் எனக்கு அமைந்தது. இவர்தம் நினைவாற்றலும், பல குரலில் பேசிக், காட்சியைக் கண்முன் விருந்துவைக்கும் பேராற்றலும் நினைந்து, நினைந்து மகிழ்வேன். இவரின் பெருமையை உலகத் தமிழர்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு நாளுக்கு நாள் அதிகரித்தவண்ணம் இருந்தது. அதற்குரிய வாய்ப்பாகச் சிலவாண்டுகளுக்கு முன் சப்பான் தமிழ்ச்சங்கத்து அன்பர்கள் ஏற்பாடு செய்திருந்த பொங்கல் விழாவுக்கு நானும் அண்ணன் மு. கலைவாணன் அவர்களும் டோக்கியா மாநகருக்குச் சென்று திரும்பினோம். அங்கு நடைபெற்ற பொங்கல் விழாவில் இவர் ஆற்றிய உரையும், நிகழ்த்திக்காட்டிய பொம்மலாட்ட நிகழ்வும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரிதும் போற்றிப் பாராட்டப்பட்டன.

சென்னையில் விமானம் ஏறியது முதல் சென்னைக்கு மீண்டும் வந்து சேர்வது வரை மு. கலைவாணன் அவர்கள், தம் வாழ்வின் படிநிலை வளர்ச்சியை எனக்குச் சொன்னதுடன் பல்வேறு கதைகளையும், நிகழ்வுகளையும், கவிதைகளையும் சொல்லி, பயணத்தை இனிமையுடையதாக மாற்றியமை என் நெஞ்சில் இன்றும் நிழலாடுகின்றது. அந்தப் பயணம்தான் மு. கலைவாணனை நான் முழுமையாகப் புரிந்துகொள்ள வழிசெய்தது. நாங்கள் இலங்கை வழியாகச் சப்பான் பயணத்தை அமைத்திருந்தோம். சப்பானிலிருந்து தமிழகம் திரும்பும்பொழுது இலங்கைத் தலைநகர் கொழும்புவிற்கு நாங்கள் பயணம் செய்த விமானம் காலம் தாழ்ந்து வந்தது. இதனால் அங்கிருந்து தமிழகம் வருவதற்கு உரிய விமானத்தைத் தவறவிட்டோம். மாற்று விமானம் ஏறித் தமிழகத்துக்கு வருவதில் காலத் தாழ்ச்சி ஏற்பட்டது. நள்ளிரவு முழுவதும் கொழும்பு விமான நிலையத்தில் ஓர் ஓரமாக அமர்ந்தோம். பின்னர் அவர் கால்மீது நான் தலைசாய்த்து, அவர் சொன்ன கதைகளை விடியும்வரை கேட்டபடி இருந்தமை இப்பொழுதும் என் நினைவில் உள்ளது. கதை சொல்வதில் அவருக்கு இருந்த அளப்பரிய திறமையும், அவரின் எழுத்தாற்றலும், சிறுவர்களின் மன உணர்வறிந்து அவர்களைக் கதைகள் வழியே - உரைகள் வழியே தம் பக்கம் இழுத்து நன்னெறி புகட்டும் ஆற்றலும் கண்டு மகிழ்கின்றேன்.

                மு. கலைவாணனின் தந்தையார் கலைமாமணி நா. மா. முத்துக்கூத்தன் அவர்கள் மிகச்சிறந்த திரைப்படப் பாடலாசிரியர்; கவிஞர்; வில்லுப்பாட்டுக் கலைஞர்; நடிகர். தந்தையாரிடம் இளமை முதல் ஒரு நண்பரைப் போல் பழகித் தமிழுணர்வையும், கவிதை புனையும் ஆற்றலையும், நடிப்பாற்றலையும், புதியது புனையும் திறனையும் பெற்றுக்கொண்ட மு. கலைவாணன் தந்தையார் வழியில் பகுத்தறிவுப் பாதையில் நடையிடும் முன்மாதிரிக் கலைஞர் ஆவார். வாய்ப்பு நேரும் இடங்களில் எல்லாம் பகுத்தறிவுச் சிந்தனைகளைப் பந்தி வைக்கும் இயல்பினர். தந்தை பெரியார். அறிஞர் அண்ணா போன்ற தலைவர்களின் கருத்துகளை உள்வாங்கி, தம் படைப்புகளில் வெளிப்படுத்தும் “இரசவாதக்” கலைஞர் இவர். மு. கலைவாணனுடன் பழகுவது இனிமை தருவது. இவர் படைப்புகளைப் படிப்பது புதிய சிந்தனை வீச்சுகளைத் தரும். இதுவரை இவர் எழுதியுள்ள அனைத்து நூல்களையும் கற்று மகிழ்ந்துள்ளேன். அதன் மதிப்புரைகளை ஆய்வுரையாக வரைந்து அறிஞர்கள் அவையில் அரங்கேற்றியுள்ளேன். என் வலைப்பதிவிலும் வரைந்து வைத்துள்ளேன். சுற்றுச்சூழல், இயற்கைப் பாதுகாப்பு, மனிதநேயக் கருத்துகளைக் கொண்ட இவரின் படைப்புகள் யாவும் அனைத்துப் பள்ளி மாணவர்களுக்கும் அறிமுகம் செய்யப்படவேண்டிய அரிய படைப்புகளாகும்.

    அந்த வகையில் மு. கலைவாணன் அவர்கள் எழுதியுள்ள  கதை சொல்வதே பெரிய கலைஎனும் நூலைக் கற்று மகிழும் வாய்ப்பு அண்மையில் அமைந்தது. இந்த நூலில் 33 கட்டுரைகள் கதை சொல்வது பெரிய கலை என்ற பொருண்மையில் அமைந்து கற்பவர்க்கு ஏராளமான செய்திகளைத் தருகின்றன. தாம் கற்ற நூல்களிலிருந்தும், தாம் கேட்ட உரைகளிலிருந்தும் மேற்கோள்களை எடுத்துக்காட்டியும், புதியது புனைந்தும் கதைக் கலைக்கு வாதாடியுள்ள கலைவாணன் அவர்களின் துறையீடுபாடு பாராட்டினுக்கு உரிய ஒன்றாகும்.

    கதைக்கான இலக்கணம் சொல்லி, கதைக்களங்களை அடையாளம் காட்டி, கதையைக் கண்டறியும் வழிகளையும் சொல்லியுள்ளார். கதை சொல்லி வெற்றிபெற்றவர்கள் இந்த நூலில் வந்துபோகின்றனர். ”முதலில் கதையைக் கேட்க, காதுகளைத் திறந்து வையுங்கள். ஓரிடத்தில் அடைந்து கிடக்காமல் மக்கள் நிறைந்த இடங்களில் பயணம் செய்யுங்கள்” என்று கதைச் சுவையறிவதற்கு வழிவகை சொல்கின்றார். நமக்குக் கதையார்வம் வருவதற்குக் கிருபானந்த வாரியார், என்.எஸ்.கே. (கலைவாணர்) தென்கச்சி கோ. சுவாமிநாதன், திருக்குறள் முனுசாமி, சுகி சிவம் உள்ளிட்ட அறிஞர் பெருமக்களின் வாழ்வியல் சிறப்புகளை இந்த நூலில் நினைவூட்டுகின்றார். சமகால எழுத்தாளர்களான தமிழ்ச்செல்வன், எஸ். இராமகிருஷ்ணன், சு. வெங்கடேசன் உள்ளிட்ட கதையாசிரியர்களின் சிறப்புகளையும், எழுத்தாற்றலையும், பெருமைகளையும் நன்றியுடன் இந்த நூலில் பதிவுசெய்துள்ளார். தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர் மு. கருணாநிதி, உள்ளிட்ட அரசியல் தலைவர்களின் கதை சொல்லும் ஆற்றலை அடுத்த தலைமுறைக்கு மு. கலைவாணன் சிறப்பாகப் பதிவுசெய்துள்ளார்.

    குழந்தைகள் விரும்பும் கதைகளைப் பெரியவர்கள்  சொல்லி, குழந்தைகளைக் குழந்தைப் பருவத்தை அனுபவிக்குமாறு சிறப்பான வழிகாட்டல்களை மு. கலைவாணன் இந்த நூலில் வழங்கியுள்ளார். இன்றைய அறிவியல், தொழில்நுட்பங்களின் வளர்ச்சியால் பிள்ளைகள் தொலைக்காட்சி, செல்பேசிகள், கணினிகளில் மூழ்கிக் கிடக்கும் கொடுமையான நிலையினை எடுத்துக்காட்டி, அவர்களின் உள்ளங்களில் நஞ்சு விதைக்கப்பட்டுக்கொண்டிருக்கும் கொடுமையை நினைவூட்டி, மாந்த சமூகத்தை நல்வழிப்படுத்தும் பணியையும் இந்த நூலில் மு.கலைவாணன் செய்துள்ளார்.

    “அனைத்து மதங்களும் கதைகளை நம்பியே கட்டமைக்கப்படுகின்றது” என்று மு.கலைவாணன் கூறுவதிலிருந்து மதங்களைச் சார்ந்து புனையப்பட்டிருக்கும் பல்லாயிரம் கதைகள் நமக்கு நினைவுக்கு வருகின்றன. ஒவ்வொரு மதத்தினரும் தங்கள் மதப்பெருமையை நிலைப்படுத்த பல்வேறு கதைகளையும், புராணங்களையும் எழுதி வைத்து, அடுத்த தலைமுறைக்குக் கையளித்துச் சென்றுள்ளமை கதைகளின் செல்வாக்கைக் காட்டும் சிறந்த சான்றாகும்.  “கதைகளைக் கேட்டு, மதம் மாறியவர்களும் உண்டு; கதைகளைக் கேட்டு, குறிப்பிட்ட மதத்தினைத் தொடர்ந்து பின்பற்றுபவர்களும் உண்டு. கதைகளைக் கேட்டு, பிற மதத்தினைத் தாக்கி அழித்தவர்களும் உண்டு.  குறிப்பிட்ட மதத்தின் கதைகள் இழிவாக உள்ளனவே என்று தம் மதத்தை வெறுத்தவர்களும் உண்டு” என்று மு.கலைவாணன் எழுதியுள்ள வரிகள் கதைகள் சமூகத்தில் ஏற்படுத்திய தாக்கங்களை அறிவதற்குப் பெரிதும் துணைசெய்கின்றன.

    கதைகள் ஏழைகளைப் பணக்காரனாக்கும் எனவும், கோழைகளை வீரனாக்கும் எனவும் கொள்கையற்றவனைக் கொள்கையுடையவனாக மாற்றும் எனவும் குறிப்பிடும் கலைவாணன் லியோ டால்ஸ்டாய் பற்றியும் வால்ட் டிஸ்னி, ரௌலிங்(ஹாரிபாட்டர்), மா சே.துங் பற்றியும்  குறிப்பிட்டு, கதைகள் உலக அளவில் ஏற்படுத்தியுள்ள மாற்றங்களை நினைவுகூர்ந்துள்ளார்.

    படிக்கும் பருவத்தினரை நல்வழிப்படுத்துவதிலும், பழகும் நண்பர்களை மேன்மைப்படுத்துவதிலும் கதைகளுக்கு முக்கியப் பங்கு உள்ளது என்பதைச் சமூக நடப்புகளிலிருந்தும், படித்த நூல்களிலிருந்தும் உணர்ந்த மு. கலைவாணன் நல்ல சமூகம் உருவாவதற்குக் கதைகள் முக்கியப் பங்காற்றுவதால் அதனை அடுத்த தலைமுறையினருக்கு அறிமுகம் செய்ய வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் இந்த நூலை எழுதியுள்ளார். தெளிந்த நடையிலும், புதுமையான எடுத்துரைப்பு நிலையிலும் இந்த நூல் உள்ளது.

    எழுதுவது சிலருக்குக் கைவந்த கலையாக இருக்கும். பேசுவது சிலருக்குக் கைவந்த கலையாக இருக்கும். தாம் கண்டதையோ, தாம் கேட்டதையோ, தாம் உணர்ந்ததையோ பிறரின் உள்ளத்தை ஈர்க்குமாறு கதைபோல் எடுத்துரைப்பது சிலருக்கே இயன்ற ஒன்றாகும். கதைகளின் வழியே நீதியை, மனிதநேயத்தை, அன்பை, இயற்கை ஈடுபாட்டை, பகுத்தறிவை, உலகம் உய்வதற்கு உரிய உயர்ந்த கருத்தை எடுத்துரைக்கமுடியும் என்ற அசைக்கமுடியாத நம்பிக்கையைக் கொண்டிருக்கும் மு. கலைவாணனின் கதை சொல்வது பெரிய கலை என்ற இந்த நூல் உலகத் தமிழர்களின் உள்ளங்களை ஈர்க்கட்டும். அவர்களின் பிள்ளைகள் பயிலும் கல்விக் கூடத்து வகுப்பறைகளை இந்த நூலும், நூல் கருத்துகளும் சென்று சேரட்டும் என்று வாழ்த்தி மகிழ்கின்றேன். பாராட்டி உவக்கின்றேன்.

மு.இளங்கோவன் 

15.08.2021

 

புதன், 18 ஆகஸ்ட், 2021

வரலாற்றைச் சுமந்துநிற்கும் கங்கைகொண்டசோழபுரம்…

    

கங்கைகொண்டசோழபுரம் திருக்கோவில்(தென்புறத் தோற்றம்)

 

                    (கனடா உதயன் இதழ் - 06.08.2021)

 (குறிப்பு: மாமன்னன் இராசேந்திர சோழனின் பிறந்த ஆடித் திருவாதிரைத் திருநாளை முன்னிட்டு,  அப்பெருமன்னன் எடுப்பித்த கங்கைகொண்ட சோழபுரத்தின் சிறப்புகளை விளக்கி, ஓர் அறிமுகக் கட்டுரை வரைந்து, கனடாவிலிருந்து வெளிவரும் உதயன் சிறப்பிதழில் (06.08.2021) வெளிவரச் செய்தேன். கட்டுரையை வெளியிட்ட உதயன் ஆசிரியர் திரு. நாகமணி லோகேந்திரலிங்கம் ஐயா அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி.

இராசேந்திர சோழனின் ஆடித் திருவாதிரைப் பிறந்தநாளினை அரசு சார்பில் கொண்டாட ஆணை பிறப்பித்த தமிழ்நாட்டு மாண்பமை முதலமைச்சர் திரு. மு.. ஸ்டாலின் அவர்களுக்கும், மாண்புமிகு தொழில்துறை அமைச்சர் திரு. தங்கம் தென்னரசு அவர்களுக்கும், இம்முயற்சியில் ஆர்வமுடன் உழைத்த கங்கைகொண்டசோழபுரம் பகுதிவாழ் வரலாற்று ஆர்வலர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி.)   

தமிழகத்திற்குச் சுற்றுலா வருபவர்களின் பட்டியலில் மாமல்லபுரம், காஞ்சிபுரம், தஞ்சாவூர், மதுரை,  இராமேசுவரம், திருச்செந்தூர் போன்ற ஊர்கள் மட்டும் இருக்கும். அவ்வாறு சுற்றுலா வருபவர்களின் பட்டியலில் கங்கைகொண்டசோழபுரம் என்ற ஊரும் இடம்பெறுதல் வேண்டும் என்பது என் விருப்பம். இவ்வூரில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இராசேந்திரசோழன் எடுப்பித்த கண்ணைக் கவரும் கங்கைகொண்ட சோழீச்சுரம் என்னும் பெருவுடையார்கோவில் இன்றும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் எழிலோடு காட்சி தருகின்றது.  இங்குள்ள சிவலிங்கமும், சண்டேசுவர அனுக்கிரகமூர்த்தியின் சிற்பமும், துவாரபாலகர் சிலையும், கருவறைக்குள் கதிரவ ஒளியை எந்த நேரத்திலும் அனுப்பும் வகையில் அமைந்த நந்தியின் சிலையும், ஒரே கல்லில் அமைந்த  நவ கிரகங்களின் அமைப்பும், சிங்கமுகக் கிணறும் காண்போர்க்குப் பேருவகை தருவன. எனவேதான் யுனெஸ்கோ அமைப்பு இவ்வூர்க் கோவிலை உலகின் பாதுகாப்புச் சின்னமாக அறிவித்துள்ளது(2004).

கங்கைகொண்டசோழபுரத்தின் அருகில் சோழ அரசனின் மாளிகைமேட்டு அகழ்வாராய்ச்சிக் கூடமும், அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருள்களின் கண்காட்சிக் கூடமும் உள்ளன. கங்கைகொண்ட சோழபுரத்தின் மேற்கே இரண்டு கல் தொலைவில் பொன்னேரி எனப்படும் சோழகங்கம் என்ற பேரேரி நீர்ப்பிடிப்புக் காலங்களில் அழகோடு காட்சி தரும். இந்த ஏரியை “வெற்றி மயமான நீர்த்தூண்” என்று திருவாலங்காட்டுச் செப்பேடுகள் குறிப்பிடுகின்றன. அக்காலத்தில் நான்கு திசைகளிலும் எல்லைக் காளிகளின் கோவில்களை அரசன் அமைத்துள்ளான். அவையும் இன்று காணத்தக்க வகையில் உள்ளன(வீரா ரெட்டித்தெரு, செங்கல்மேடு, அழகர்கோவில் உள்ளிட்ட ஊர்களில் உள்ளன).

ஊர் அமைவிடம்:

தமிழகத்தில் திருச்சிராப்பள்ளி - சிதம்பரம் நெடுஞ்சாலையில் கங்கைகொண்ட சோழபுரம் உள்ளது. கும்பகோணம், சிதம்பரம், விருத்தாசலம் ஆகிய ஊர்களிலிருந்தும் இவ்வூரை எளிதில் அடையலாம். சென்னையிலிருந்து வருபவர்கள் கும்பகோணம் சாலை வழியாக கங்கைகொண்டசோழபுரத்தை அடையலாம் (245 கி.மீ). திருச்சிராப் பள்ளியிலிருந்து 100 கி.மீ. தூரத்திலும் சிதம்பரத்திலிருந்து 45 கி.மீ. தூரத்திலும் இவ்வூர் உள்ளது.

தஞ்சாவூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சிபுரிந்த இராசராச சோழனுக்கும், வானவன்மாதேவி  எனப்பட்ட திரிபுவன மாதேவி என்ற அரசிக்கும் மகனாகப் பிறந்த, இராசேந்திர சோழனின் தலைநகராக விளங்கிய ஊர்தான் கங்கைகொண்டசோழபுரம்.

இராசராசன் ஆட்சிக்காலத்திலேயே இளவரசனாக விளங்கிய இராசேந்திரசோழன் மிகப்பெரும் வீரனாக விளங்கி, பாண்டிய நாட்டையும், சேர நாட்டையும் தன்வயப்படுத்தியதுடன் அண்டை நாடுகளையும் தன் அடிக்கீழ் கொண்டுவந்தவன். “பூர்வ தேசமும் கங்கையும் கடாரமும் கொண்ட கோப் பரகேசரிவர்மன்” என்று கல்வெட்டுகள் இவனைப் புகழ்ந்து கூறுகின்றன. மிகச் சிறந்த சிவபக்தனாக விளங்கியவன்.

இலங்கை, மலேசியா, சுமத்தரா, ஜாவா, கம்போடியா உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்குத் தலைநகராகச் சற்றொப்ப இருநூற்றைம்பது ஆண்டுகள் விளங்கிய, பெருமைக்குரிய ஊர்தான் கங்கைகொண்டசோழபுரம். இராசேந்திரசோழன் தன் கங்கை வெற்றியின் நினைவாக இவ்வூர்க் கோவிலை எடுப்பித்ததாகவும், அருகில் உள்ள பொன்னேரி எனப்படும் சோழகங்கத்தை நிறுவியதாகவும்  வரலாறு குறிப்பிடுகின்றது. கங்கைகொண்டசோழபுரத்தில் இராசேந்திர சோழனின் கல்வெட்டு ஒன்றுகூட இடம்பெறவில்லை என்பது வரலாற்று ஆய்வாளர்க்குப் பெரிய வியப்பை ஏற்படுத்துகின்றது. இராசேந்திரன் காலத்திற்குப் பிறகு ஆட்சி செய்த அரசர்களின் கல்வெட்டுகள் உள்ளன. கங்கைகொண்டசோழபுரத்திற்கு அருகில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள் பலவும் பல்வேறு வரலாறுகளைச் சுமந்து நிற்கின்றன. கங்கைகொண்டசோழபுரத்தைச் சார்ந்த ஊரில் பிறக்கும் ஆண் குழந்தைகளுக்கு இராசேந்திரன் என்று பெயர் வைப்பதை மக்கள் தொடர்ந்து செய்துவருகின்றனர்.

கங்கைகொண்டசோழபுரத்திற்கு அருகில் உள்ள ஆயுதக்களம் என்ற ஊர் ஆயுதங்கள் செய்த இடமாக இருந்திருக்கும் என்று அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். அதனை மெய்ப்பிக்கும் வகையில் அவ்வூரில் அகழாய்வில் மிகப்பெரிய வாள் ஒன்று கிடைத்துள்ளது. இவ்வூரார் இன்றும் வீரத்தோடு விளங்குவது கவனத்தில் கொள்ளத்தக்க செய்தியாகும். வீரசோழபுரம், வானவநல்லூர், வாணதிரையன் குப்பம், வாணதிரையன் பட்டினம், சோழன்மாதேவி, வானவன்மாதேவி, படைநிலை, பழூர், தொட்டிக்குளம், யுத்தப்பள்ளம், கொல்லாபுரம், வேம்புக்குடி, உள்கோட்டை,  சுண்ணாம்புக்குழி, சலுப்பை, குருகைக்காவலப்பர்கோவில், இடைக்கட்டு, பள்ளிவிடை, உலகளந்தசோழன்வெளி, உடையார்குடி, மாளிகைமேடு, பாகல்மேடு, மண்மலை, மெய்க்காவல்புத்தூர், திறந்தவாசல், மீன்சுருட்டி, கடாரங்கொண்டான், விக்கிரமங்கலம், நாயகனைப்பிரியாள் போன்ற ஊர்களின் பெயர்களைக் கொண்டு இவ்வூரின் தொன்மையையும், பெருமையையும் அறியலாம். கங்கைகொண்டசோழபுரத்துக்கு அருகில்தான் புகழ்பெற்ற வீராணம் ஏரியும் உள்ளது.

கங்கைகொண்டசோழபுரத்தை ஆட்சி செய்த அரசர்கள்

கங்கைகொண்டசோழபுரத்தில் இராசேந்திரசோழன் (102-1044), முதலாம் இராஜாதி ராஜன் (1018-153), இரண்டாம் இராஜேந்திரன் (1052-1063), வீர ராஜேந்திரன் (1063- 1070), அதி ராஜேந்திரன்( 1067-1070), முதலாம் குலோத்துங்கன் (1070-1120), விக்கரமசோழன் ( 1118-1135), இரண்டாம் குலோத்துங்கன் (1135-1150), இரண்டாம் இராஜராஜன் (1146-1166), இரண்டாம் இராஜாதிராஜன் (1166-1180), மூன்றாம் குலோத்துங்கன் (1178-1218) மூன்றாம் இராஜாதி ராஜன் (1216-1257), மூன்றாம் இராஜேந்திரன் (1246-1279) உள்ளிட்ட அரசர்கள் ஆட்சி செய்துள்ளனர். பாண்டியர்களின் படையெடுப்பால் சிதறுண்ட சோழர் ஆட்சி, பின்னர் தலையெடுக்க முடியாமல் போனது. பின்னாளில் விசயநகர மன்னர்களும், செஞ்சி நாயக்கர்களும், உடையார்பாளையம் ஜமீன்தார்களும் கங்கைகொண்டசோழபுரத்தை ஆண்டுள்ளனர். பிரெஞ்சுக்காரர்களும், ஆங்கிலேயர்களும் கங்கைகொண்ட சோழபுரத்தைக் கைப்பற்றுவதற்குப் போர் புரிந்துள்ளமையையும் அறியமுடிகின்றது. போரின்பொழுது சிதறுண்ட கங்கைகொண்டசோழபுரத்துக் கோவிலின் சுற்றுச்சுவர்கள் இடிந்து பலவாண்டுகள் கிடந்தன. ஆங்கிலேயப் பொறியாளர் ஆர்தர் காட்டன் என்பவரின் முயற்சியால் அருகில் உள்ள  அணைக்கரையின் மதகு கட்டுவதற்கு (1840) இக்கோவில் கற்கள் கொண்டுசெல்லப்பட்டன.

கங்கைகொண்டசோழபுரம் கோவில் 1035-36 ஆம் ஆண்டுகளில் கட்டிமுடிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று வரலாற்று அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். கங்கைகொண்டசோழபுரம் கோவிலைப் பற்றி கருவூர்த்தேவர் பதினொரு பாடல்களைப் பாடியுள்ளார். மூவருலா, தக்கயாகப்பரணி போன்ற நூல்களில் கங்கைகொண்டசோழபுரம் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. கங்காபுரி எனவும், கங்கா குண்டம் (விக்கிரமாங்க தேவசரிதம்), கங்கைகொண்ட பட்டணம் எனவும் இவ்வூர் அழைக்கப்பட்டுள்ளது. கங்கைகொண்டசோழபுரத்திலிருந்து 45 கி.மீ. தூரத்தில் உள்ள சிதம்பரம் நடராசப்பெருமானின் திருக்கோவில் சோழமன்னர்களின் வரலாற்றுடன் மிகநெருங்கிய தொடர்புகொண்டுள்ளது. இங்கிருந்த திருமுறைகளை மீட்டதால்தான் இராசராசனுக்குத் திரமுறைகண்டசோழன் என்ற ஒரு சிறப்புப் பெயர் ஏற்பட்டது. குலோத்துங்களின் அவைக்களப் புலவராக விளங்கிய சேக்கிழார் பெருமான் தில்லையில் இறைவன் அடியெடுத்துக் கொடுக்க பெரியபுராணம் பாடியமையைச் சைவப் பெருமக்கள் எடுத்துரைப்பர்.

கங்கைகொண்டசோழபுரத்தில் கிடைத்துள்ள கல்வெட்டுகள், சிற்பங்கள், கோவில் சிலைகள், கோவில் அமைப்புகள் ஆகியவற்றைக் கொண்டு தமிழர்களின் பண்பாட்டுச் சிறப்புகளையும் கலைநயத்தையும் நாம் அறிந்துகொள்ளமுடியும். கங்கைகொண்டசோழபுரத்தைச் சார்ந்துள்ள ஊரின் அடிப்பகுதியை எந்த இடத்தில் தோண்டினாலும் செப்புக் காசுகளும், செப்புச் சிலைகளும், செங்கல் சுவர்களும், வேலைப்பாடுடைய மண்பாண்டங்களும், கல்வெட்டுகளும் காணப்படுகின்றன. கோவிலில் உள்ள சிலைகள் அழகிய வேலைப்பாடுகளுடன் அமைந்து, பண்டைக்காலச் சிற்பிகளின் தொழில்திறமையை நமக்குக் காட்டுகின்றன. காரைக்காலம்மையார் இறைவனின் திருநடனத்தை அமர்ந்து பார்க்கும் சிற்பம் இக்கோவிலின் தென்புறப் பகுதியில் அமைந்துள்ளது. கங்கைகொண்டசோழபுரம் கோவில் சுற்றுச்சுவர்களில் சமய இலக்கிய  நூல்களின் செய்திகள் சிற்பங்களாகக் கைதேர்ந்த சிற்பிகளால் செதுக்கி வைக்கப்பட்டுள்ளன. அரசர்கள் பல்வேறு காலங்களில் செய்த அறப்பணிகள் கல்வெட்டுகளில் வெட்டப்பட்டுள்ளன.

திருமுறை ஓதுவார்கள், நாட்டியப்பெண்கள், இசைக்கலைஞர்கள், கோவில் பணிகளில் ஈடுபட்டவர்களுக்கு அரசன் நிலங்களைத் தானமாக வழங்கிச், சமயப்பணிகள் இடையீடு இல்லாமல் நடைபெறுவதற்கு வழிசெய்துள்ளான். எனவே ஆயிரம் ஆண்டுகளைக் கடந்தும் இக்கோவிலில் இன்றும் பூசை, சிறப்பு விழாக்களுடன் நல்லநிலையில் வழிபாடு நடைபெறுகின்றது. இக்கோவிலின் திருப்பணிகளைச் சிறப்பாக நடத்துவதற்கு ஒவ்வொரு அரசனும் தங்களால் முடிந்த வகையில் தேவதானங்களாகவும், பிரம்மதேசங்களாகவும் இறையிலி நிலங்களை வழங்கியுள்ளமையைக் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. நான்கு வேதங்களில் வல்ல பிராமணர்களுக்கு ஸ்ரீ பராந்தகசோழன் சதுர்வேதி மங்கலம் என்ற ஊரினை வழங்கியுள்ளமையை அறியமுடிகின்றது. இவ்வூரின் பெயர் கல்லாத இந்நாளைய மக்களின் நாவில் ஸ்ரீபுரந்தான் என்று அழைக்கப்படுகின்றது.

கங்கைகொண்டசோழபுரத் திருக்கோவில் சிவனுக்கு  உரிய கோவிலாக விளங்கினாலும், அருகில் உள்ள ஊர்களில் பெருமாள் கோவில்களும், புத்தர் வழிபாடும் இருந்துள்ளன. கங்கைகொண்டசோழபுரத்தின் அருகில் சாளுக்கிய சிற்பங்களும், புத்தர் சிலைகளும் மிகுதியாக காணப்படுகின்றன. கணக்கவிநாயகர் கோவில் என்ற கோவில் இங்குள்ள புகழ்பெற்ற கோவிலாகும். நாதமுனிகள் அடக்கமான இடமும் இவ்வூரை ஒட்டிக்  கோவிலாக அமைக்கப்பட்டுள்ளது.

கோவில் சிறப்பாலும், கட்டடக்கலை மாண்பாலும், இறையுருவத் திருமேனிகளாலும், அரசாட்சிச் சிறப்பாலும், இலக்கியப் புலவர்களின் ஏற்றமிகு இலக்கியங்களாலும், கல்வெட்டுகளாலும், செப்பேடுகளாலும் நிலைநிறுத்தப்பட்டுள்ள கங்கைகொண்டசோழபுரத்தின் பெருமையை அறிந்துகொள்ள உலகத் தமிழர்கள் ஒருமுறை இந்த ஊருக்கு வந்துசெல்வது நலம் பயக்கும்.

படம் உதவி: விக்கிப்பீடியா