நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வியாழன், 17 நவம்பர், 2022

பொன்னி ஆசிரியவுரைகள்



நூல்: பொன்னி ஆசிரியவுரைகள்

பதிப்பாசிரியர்: முனைவர் மு.இளங்கோவன்

முதல் பதிப்பு: 2004

பக்கம்: 272

விலை: 130 - 00 உருவா


நூல் கிடைக்குமிடம்: 

வயல்வெளிப் பதிப்பகம்,

இடைக்கட்டு, உள்கோட்டை(அஞ்சல்),

கங்கைகொண்டசோழபுரம்(வழி),

உடையார்பாளையம்(வட்டம்),

அரியலூர் மாவட்டம் - 612 901

பேசி: 9442029053


1947 முதல் புதுக்கோட்டையிலிருந்து வெளிவந்த பொன்னி இலக்கிய இதழில் வெளியான ஆசிரியவுரைகளின் தொகுப்பு நூல் இஃது.  இதில் 98 தலைப்புகளில் அமைந்த ஆசிரியவுரைகள் (தலையங்கங்கள்) தொகுக்கப்பட்டுள்ளன. பதிப்பாசிரியர் மு.இளங்கோவனின் முன்னுரையில் அரிய தகவல்கள் பல அடங்கியுள்ளன.

பொருளடக்கம்:

  1. எங்கள் எண்ணம்
  2. தமிழ்ப் புலமைக்குப் பரிசு
  3. புரட்சிக் கவிஞர்
  4. கேளாக் காதினர்...
  5. இனியும் இழிநிலை!
  6. கல்வி நீரோடை
  7. எதிரிகளில் ஒருவன் விலகுகிறான்
  8. உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே!
  9. தமிழியக்கம் தொடங்க...
  10. வேண்டாம் தமிழர் வெறுத்த இந்தி
  11. உணவுக் கட்டுப்பாடு
  12. தமிழ் வளர்ச்சி
  13. பெருந்தகை பிரிந்தார்!
  14. தடையுத்தரவு
  15. தூத்துக்குடி நோக்கி...
  16. வெற்றிப்பாதையில் பெரியார் பெரும்படை
  17. இந்தி வேண்டாம்!
  18. தீமை ஒழிந்தது!
  19. போர் முரசு கேட்கிறது!
  20. தீர்ப்பளிக்கும் திருச்சபை!
  21. அறப்போர் தொடங்கிற்று!
  22. முதல் அத்தியாயம்
  23. மொழிவழி மாகாணம்
  24. சென்னைத் தேர்தல்
  25. மீண்டும் அறப்போர்
  26. அரசியல் அமைப்பு மன்றம்
  27. வாழ்வளியுங்கள்!
  28. புதுக்கோட்டை மாவட்டம்
  29. குடந்தைப் போராட்டம்
  30. தமிழர் நெறி
  31. வீரர் சிதம்பரம் நினைவு
  32. வேலை நிறுத்தம்
  33. அம்பேத்கர் மசோதா
  34. வகுப்பு நீதி
  35. அட்லாண்டிக் ஒப்பந்தம்
  36. திருவாங்கூர்த் தமிழர்கள்
  37. உலகம் சிரிக்கும் உறவு
  38. நண்பர்கள் சந்திப்பு
  39. வேண்டாத இந்தி
  40. நீதியல்ல!
  41. தகாது! தவறு! வேண்டாம்!
  42. ஜூலை ஒன்பது துக்கநாள்!
  43. இந்தி ஏகாதிபத்தியம்
  44. இராண்டாண்டு வாழ்வு
  45. சென்னை தமிழருக்கே!
  46. திராவிட முன்னேற்றக்கழகம்
  47. சீனக்குடியரசு
  48. தமிழ் முதல் மொழியாம்!
  49. மாணவர் கடமை
  50. ஆந்திர மாகாணம்
  51. இலங்கைத் தமிழர் நிலை
  52. திருச்சி அழைக்கிறது வாரீர்!
  53. வியட்நாம்
  54. வரவும் செலவும்
  55. மாவீரனை நினையுங்கள்
  56. கிழக்கும் மேற்கும்
  57. முதல்மொழி எது?
  58. முத்தமிழ் வளர!
  59. வானொலி நிலையங்கள்
  60. முத்தமிழ் வளர்வது காணீர்!
  61. கல்வி நீரோடை
  62. உலகப்போருக்கு ஒத்திகை
  63. இந்தி கட்டாயமில்லை!
  64. வகுப்புரிமைக்கு ஆபத்து!
  65. உணவு நெருக்கடி
  66. புதிய காங்கிரஸ்
  67. அழைத்தார்கள்... சென்றிருக்கிறார்!
  68. சந்திப்பு
  69. சென்னைக்கு வருகை
  70. அணுக்குண்டு
  71. மறைந்த மாவீரர்
  72. நெசவாளர் தொல்லை
  73. தேர்தல் உற்சாகம்
  74. காஷ்மீரம்
  75. காங்கிரஸ் நெருக்கடி
  76. பொம்மை ஜப்பான்
  77. அம்பேத்கர் மசோதா
  78. காங்கிரஸ் சீர்திருத்தம்
  79. பாகிஸ்தான் துயரம்
  80. சர்ச்சில் வெற்றி
  81. தமிழ் மக்களுக்கு அழைப்பு
  82. தேர்தலோ தேர்தல்
  83. மக்கள் தீர்ப்பு
  84. மந்திரிசபை அமைப்பு
  85. மக்கள் விருப்பம்
  86. மந்திரிசபை அமைப்பு மக்கள் கடமை
  87. புதுக் கவர்னர்
  88. பெரிய மனிதரும் சின்னப் பதவியும்
  89. இலங்கை இந்தியர்
  90. ஒரே வழி
  91. தமிழுக்கு விழா
  92. பொன்னியின் புதுவாழ்வு
  93. புதுவையின் புரளி
  94. திருக்குறள் மாநாடு
  95. உணவுக்கொள்கை இங்கும்- அங்கும்
  96. தஞ்சை நில வாரப் பாதுகாப்பு மசோதா
  97. ஆந்திராவில் உரிமைஒளி தமிழகத்தில்...?
  98. புத்தாண்டு

சனி, 17 செப்டம்பர், 2022

புலவர் செம்மங்குடி துரையரசன்…

 

புலவர் செம்மங்குடி துரையரசன் 

திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரியில் நான் பயின்றுகொண்டிருந்த நேரம்திருப்பனந்தாள் மாரியம்மன்கோவில் தெருவில் வாழ்ந்த புலவர் கனக. ஞானசம்பந்தம் அவர்கள் அடிக்கடி ஒலித்து மகிழும் பெயர் இந்த செம்மங்குடி துரையரசன். 

செம்மங்குடி என்பது குடந்தைக்கு அருகில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஊர். இந்த ஊரில்தான் “பழந்தமிழ் இசை” உள்ளிட்ட புகழ்பெற்ற நூல்களை எழுதிய பேரறிஞர் கு. கோதண்டபாணி பிள்ளை பிறந்தவர். முடிகொண்டான் ஆற்றால் வளங்கொழிக்கும் கவின்மிகு ஊராக இந்தச் செம்மங்குடி உள்ளது. இந்த ஊரில் பிறந்து, பணியின் பொருட்டுத் திருவள்ளூரில் வாழ்ந்துவரும் செம்மங்குடி துரையரசனாரைச் சிலவாண்டுகளுக்கு முன் திருவள்ளூர் பள்ளியொன்றில் நடைபெற்ற இலக்கிய விழாவில் சந்திக்கும் வாய்ப்பு எதிர்பாராமல் அமைந்தது. நீண்ட நாழிகை உரையாடி உள்ளம் பரிமாறினோம். அவர்தம் தமிழ்ப்பணிகளை அறிந்து வியப்புற்றேன். செம்மங்குடியாரின் தமிழ்ப்பணிகளை எழுதி மகிழ்வதற்குரிய ஓய்வும் நேரமும் கிடைக்காமல் இருந்தன. அண்மையில் செம்மங்குடியார் விடுத்த அரிய இசைத்தமிழ்ப் பனுவலான  இரண்டாம் தமிழ் என்னும் நூலைக் கண்ணுற்றதும் புலவர் பெருமானின் புகழ் மிக்க வாழ்க்கையை அன்பர்களின் பார்வைக்கு முன்வைப்பதை நோக்காகக் கொண்டு சில குறிப்புகளை எழுதுவதில் மகிழ்கின்றேன். 

புலவர் செம்மங்குடி துரையரசனார் அவர்கள் 20.10.1947 இல் பிறந்தவர். பெற்றோர் பெயர்: சா. சிதம்பரம், வேம்பம்மாள் ஆவர். பிறந்த ஊரான செம்மங்குடியில் தொடக்கக் கல்வியையும் நாச்சியார்கோவிலில் உயர்நிலைக் கல்வியையும் கற்ற செம்மங்குடியார் திருப்பனந்தாள் செந்தமிழ்க்கல்லூரியில் 1968 முதல் 1972 வரை புலவர் படிப்பினைப் படித்துமுடித்தவர். 1972-73 ஆம் ஆண்டுகளில் குமாரபாளையம் கல்லூரியில் ஆசிரியர் பயிற்சி பெற்றவர். 1973 ஆம் ஆண்டு முதல் திருவள்ளூர் நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளிகளில் தலைமையாசிரியராகப் பணியாற்றி 2005 இல் ஓய்வுபெற்றவர். 

புலவர் செம்மங்குடி துரையரசனார் 1975 இல் அறிஞர் கோதண்டபாணி பிள்ளை அவர்களின் தலைமையில் திருமணம் செய்துகொண்டவர். இவர்தம் துணைவியார் பெயர் மங்கலம் என்பதாகும். இவரும் புலவர் படிப்பினைப் படித்து, திருவள்ளூரில் ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். இவர்களின் இல்லறப் பயனாக ஒரு பெண், இரண்டு ஆண் பிள்ளைகள் கிடைத்தனர். அனைவரும் படித்து நன்னிலையில் உள்ளனர். 

திருவள்ளூரில் தமிழ்ச்சங்கத்தை நிறுவித் தமிழ்ப்பணியாற்றி வரும் செம்மங்குடி துரையரசன் அவர்கள் மிகச் சிறந்த கவிதையாற்றல் உடையவர். கருணாகரத் தொண்டைமானின் வாழ்க்கை வரலாற்றை ஆராய்ந்து காப்பியமாகப் பாடிய பெருமை புலவர் துரையரசனார்க்கு உண்டு. இவர்தம் ஊர்ப்பகுதியே கலிங்கத்துப் பரணியில் போற்றப்படும் கருணாகரத் தொண்டாமான் பிறந்து வாழ்ந்த ஊர்ப்பகுதி என்று சான்றுகளின் அடிப்படையில் மெய்ப்பித்ததுடன் தம் பெயருக்குப் பின் தொண்டைமான் என்பதை அமைத்து, செம்மங்குடி துரையரசத் தொண்டைமான் என்று அழைக்கப்படுபவர். கருணாகரத் தொண்டைமான் குறித்த ஆய்வில் முன்னிற்பவர். ஐம்பதுக்கும் மேற்பட்ட விருதுகளையும் ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்களையும் எழுதியவர். தன்முன்னேற்ற நூல்களை எழுதி, மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் எழுச்சியூட்டி வருபவர். அறிஞர் கோதண்டபாணியாரின் "தமிழிசை தந்த தனிப்பெரும் வளம்" உள்ளிட்ட நூல்கள் சிலவற்றைப் பின்னாளில் பதிப்பித்துத் தமிழுலகுக்கு வழங்கிய பெருமைக்குரியவர். 

செம்மங்குடியாரின் இரண்டாம் தமிழ் என்பது தமிழிசைப் பாடல்கள் 144 - ஐக் கொண்டதாக வெளிவந்துள்ளது. இன்னும் நூறு இசைப்பாடல்களை எழுதித் தொகுத்து, எதிர்வரும் பொழுதுகளில் வெளியிட அணியமாக உள்ளார். பழந்தமிழ் இசை தந்த கோதண்டபாணியார் மரபில் வந்தவர் என்பதை இம்முயற்சி நமக்குக் காட்டுகின்றது.

பணிபுரியும் காலத்திலேயே பயனில்லாமல் ஊதியம்பெறும் பல ஊழியர்களைப் பார்த்துச் சலித்த எனக்கு ஓய்வுபெற்ற பிறகும் ஆராய்ச்சியிலும், படைப்புப் பணியிலும் தொய்வின்றி இயங்கும் செம்மங்குடியாரைப் பார்க்கும்பொழுது ஊக்கமும் மகிழ்வும் ஊற்றெடுக்கின்றன. 

வரலாற்று அறிவும் தேடலும் கொண்ட செம்மங்குடியார்க்கு உரிய ஏற்பளிப்போ, மதிப்போ தமிழுலகில் அமையாமல் போனமை தமிழின் போகூழ் என்றே குறிக்க வேண்டும். இவர்களைப் போலும் நல்லாசிரியர்களையும் படைப்பாளிகளையும் ஆய்வாளர்களையும் தமிழுலகம் போற்றும் நாளே தமிழுக்கு ஆக்கமாக அமையும் நாள் என்று உறுதியாகக் குறிப்பிடலாம். 

இவர்தம் பெருமைகளையும் பாப்புனையும் ஆற்றலையும் திருவள்ளுவர் தவச்சாலை நிறுவுநர் இரா. இளங்குமரனார், எழுத்தாளர் தகடூரான், முனைவர் அ. ஆறுமுகம் உள்ளிட்ட அறிஞர்கள் சிறப்பாக எழுதி ஊக்கப்படுத்தியுள்ளனர். கவியரங்குகளில் தலைமையேற்று பார்வையாளர்கள் விரும்பும் வகையில் சுவைபடப் பாடுவதில் செம்மங்குடியார் வல்லவர். இத்துறையில் இவர் பணி இன்றும் தொடர்கின்றது. 

செம்மங்குடி துரையரசன் தமிழ்ச்சுவடி என்னும் இருதிங்கள் இதழின் ஆசிரியராக இருந்து இதழினைத் தொடர்ந்து நடத்திவருகின்றார்.  தமிழ்நாடு சிற்றிதழ்க் கூட்டமைப்பு, தமிழ் எழுத்தாளர் சங்கம், சமூக நலப் பேரவை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை உருவாக்கி அருந்தமிழ்ப் பணிகளைச் செய்துவருகின்றார். 

புலவர் செம்மங்குடி துரையரசனின் தமிழ்க்கொடைகள் சில: 

  1. வெற்றிக்கு வழிகள்
  2. நீங்கள் இனி வெற்றியாளர்
  3. கொஞ்சும் கிளியே கொஞ்சம் பேசு
  4. மழலை மொட்டுக்கள்
  5. குழந்தைக் கொண்டாட்டம்
  6. சித்திரப்பூக்கள்
  7. பரிசு கிடைத்தது
  8. செம்மங்குடி துரையரசனின் சிறுகதைகள்
  9. ஞானத்தேர்
  10. இளைய பல்லவன் கருணாகரத் தொண்டைமான்
  11. மேடையில் பேசுவது எப்படி?
  12. பவளச்சூரியன்
  13. தமிழ் ஒளி
  14. சிலை எழுபது
  15. அமுதக் குடம்
  16. மாணவர்களுக்கு மணியான கதைகள் 
  17. இரண்டாம் தமிழ்

உள்ளிட்ட நூல்களை எழுதியுள்ள புலவர் துரையரசன் பல்வேறு நூல்களைப் பதிப்பித்துள்ளார். 






வியாழன், 15 செப்டம்பர், 2022

துன் ச. சாமிவேலு அவர்களுக்குப் புகழ்வணக்கம்!

  

ப.சுந்தரேசனார் ஆவணப்படத்தை வெளியிடும் துன். ச.சாமிவேலுவும் அதனைப் பெறும் டத்தோ சூ. பிரகதீஷ்குமார் அவர்களும். அருகில் தருண்விஜய் எம்.பி. டத்தோ குமரன் ஐயா அவர்கள்.

மலேசியத் திருநாட்டில் தமிழர்களின் அடையாளமாக விளங்கிய துன் . சாமிவேலு அவர்கள் இன்று (15.09.2022) இல் இயற்கை எய்திய செய்தியை அன்பர்கள் வழியாகவும் ஊடகங்கள் வழியாகவும் அறிந்து பெருங்கவலையுற்றேன். 2014 திசம்பர் 28 இல் பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை . சுந்தரேசனார் ஆவணப்படத்தை மலேசியாவில் நாங்கள் வெளியிட்டபொழுது தலைமை தாங்கி, அதனை வெளியிட்ட பெருமை துன். ச. சாமிவேலு ஐயா அவர்களுக்கு உண்டு. இந்த நிகழ்ச்சியை நடத்துவதற்குப் பெரும் உதவிபுரிந்த டத்தோ சூ. பிரகதீஷ்குமார், பேராசிரியர் மன்னர் மன்னன் ஆகியோரின் உதவியை என்றும் நினைவுகூர்வேன். 

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட துன். ச. சாமிவேலு ஐயா அவர்களிடம் ப.சு. ஆவணப்பட ஒளிவட்டுகள் உலகம் முழுவதும் செல்வதற்கு உதவ வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். எங்கள் கோரிக்கையை ஏற்று, துன். சாமிவேலு ஐயா அவர்கள் ஆவன செய்தார்கள்.

உலகத் தொல்காப்பிய மன்றம் மலேசியக் கிளை தொடங்கியபொழுது(2017) தம் உடல்நலத்தையும் பொருட்படுத்தாமல் நிகழ்வுக்கு வருவதற்கு முன்வந்தார்கள். ஐயா அவர்கள் மாடிப்படியில் ஏறி வருவதில் சிக்கல் உள்ளதை எடுத்துச் சொல்லி, அடுத்த நிகழ்வில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்க எண்ணியிருந்தோம். 

தமிழ்ப்பற்றும், கொடையுள்ளமும் வாய்த்த துன். ச. சாமிவேலு ஐயாவின் இழப்பிலிருந்து மீள முடியாமல் தவிக்கும் குடும்பத்தினர், நண்பர்கள், அவர் சார்ந்த இயக்கத் தோழர்கள், மலேசியத் தமிழர்கள் யாவருக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

துன். ச. சாமிவேலு அவர்களிடம் வாழ்த்து பெறும் மு.இளங்கோவன்

துன். ச. சாமிவேலு அவர்கள் எழுத்தாளர் சங்கத்தின் மேனாள் தலைவர் பெ. இராசேந்திரன் அவர்களிடம் ப.சு. ஆவணப்பட ஒளிவட்டினை அளித்தல்.

செவ்வாய், 6 செப்டம்பர், 2022

பேராசிரியர் பொ. நா. கமலா

பேராசிரியர் பொ. நா. கமலா

   தமிழகத்தில் நடைபெறும் கருத்தரங்குகளில் - ஆய்வரங்குகளில் ஆர்வமுடன் கலந்துகொண்டு கட்டுரை படைப்பது, கருத்தரங்கத் தலைமை தாங்குவது, நூல் வெளியிடுவது என்று தேனீயைப் போல் சுறுசுறுப்பாக இயங்கும் பேராசிரியர் பொ. நா. கமலா அவர்களைக் கடந்த கால் நூற்றாண்டுகளுக்கும் மேலாக நன்கறிவேன். 86 அகவை நிரம்பியவர்; முனைவர் பொ.நா. கமலா அவர்கள் இடைநிலைப் பள்ளி ஆசிரியையாகத் தம் பயிற்றுவித்தல் பணியைத் தொடங்கியவர்; பின்னாளில் சிவகாசி எஸ்.ஆர்.எப் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றிப் பல்லாயிரம் மாணவர்களுக்குத் தமிழ் இலக்கியச் சிறப்பினை எடுத்துரைத்த பெருமைக்குரியவர். வாழ்வில் ஏற்ற இறக்கங்களையும், இன்ப துன்பங்களையும் எதிர்கொண்டாலும் தம் ஆராய்ச்சிப் பணியில் சமரசம் இன்றி உழைத்துவருபவர். 

  மார்பகப் புற்றுநோயால் தாக்குண்ட பேராசிரியர் அவர்கள் அதுகுறித்த விழிப்புணர்வூட்டும் கட்டுரைகள் அடங்கிய ரோஜாவுக்கு…! என்னும் தலைப்பில் நூல் எழுதிப் பெண்களுக்கு அந்நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவது பாராட்டுக்கு உரிய ஒன்றாகும். தொல்காப்பியம் குறித்து இவர் வரைந்துள்ள கட்டுரைகளும் நூல்களும் தமிழ் இலக்கிய உலகில் இவருக்கு மிகச் சிறந்த ஆய்வறிஞர் என்ற பெருமையைத் தேடித்தரும். அரசின் பெருமைகளையோ, விருதுகளையோ, பணமுடிப்பையோ பெறுவதற்குரிய பண வலிமையோ, பதவிப் பெருமையோ அற்ற மூத்த பேராசிரியர் அவர்களின் தமிழ் வாழ்க்கையை இவண் பதிந்துவைக்கின்றேன்.

  பேராசிரியர் பொ. நா. கமலா அவர்கள் 23.02.1936 இல் விருதுநகரில் பிறந்தவர். இவர்தம் பெற்றோர் பெயர் பொ. நாகரத்தினம், சரசுவதி அம்மாள். ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை மும்பை மாதுங்காவில் பயின்றவர்(1941-1951). பள்ளியிறுதி வகுப்பினை விருதுநகர் சத்திரிய மகளிர் பள்ளியில் பயின்றவர். இடைநிலை ஆசிரியர் பயிற்சி, தமிழ் வித்துவான் வகுப்புகளைப் பயின்ற பிறகு தனித்தேர்வராக இளங்கலைத் தமிழ், முதுகலைத் தமிழ் பயின்றவர்((1967). 1978 இல் இளம் முனைவர் பட்ட வகுப்பினை மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் பயின்று(1978) மு.வ.பதக்கம் வென்றவர்.  அன்னை தெரசா பல்கலைக்கழகத்தில் பகுதிநேரமாக முனைவர் பட்ட ஆய்வினை மேற்கொண்டு, “இதழ்ச் சிறுகதைகளில் பணிமகளிர் சிக்கல்கள்” என்னும் தலைப்பில் ஆய்வேடு வழங்கியவர். இவர்தம் நெறியாளர் முனைவர் மீனாட்சி முருகரத்தினம் ஆவார்.  காந்திய சிந்தனைகளில் பட்டயமும், அடிப்படை மொழியியல், பயன்பாட்டு மொழியியலில் சான்றிதழும் பெற்றவர். 

பேராசிரியர் பொ. நா. கமலா அவர்கள் தமிழக, இந்திய, உலக அளவில் நடைபெற்ற 170 – இற்கும் மேற்பட்ட கருத்தரங்குகளில் கலந்துகொண்டு ஆய்வுக்கட்டுரை வழங்கியுள்ளார். இவற்றுள் கைதராபாத் பல்கலைக்கழகம், கௌகாத்தி பல்கலைக்கழகம், தில்லிப் பல்கலைக்கழகம், சாதவ்பூர் பல்கலைக்கழகம், குல்பர்கா மத்திய பல்கலைக்கழகம் இந்திராகாந்தி தேசிய இனக்குழு மக்கள் பல்கலைக்கழகம், சென்னைப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்கலைக்கழகங்களில் நடைபெற்ற கருத்தரங்குகளில் கலந்துகொண்டு உரையாற்றியமை நினைவுகூரத் தக்கவை. தமிழ்ப்பணிகளுக்காக 25 – இற்கும் மேற்பட்ட விருதுகளை வென்றுள்ளார். அவற்றுள் அறவாணர் வாழ்நாள் சாதனையாளர் விருது, ஏலாதி இலக்கிய விருது, சிவகாசி ஆர்ட்சு கிளப் – வாழ்நாள் சாதனையாளர் விருது உள்ளிட்டவை குறிப்பிடத்தக்கவை. ஞாலத் தமிழ்ப் பண்பாட்டு ஆய்வு மன்றம், அறிவியல் தமிழ்க் கழகம், கலை இலக்கியப் பெருமன்றம், DLA, Linguistics Society of India, அஞ்சிறைத் தும்பி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளில் உறுப்பினராக இருந்து பணியாற்றி வருபவர். 

முனைவர் பொ.நா. கமலா அவர்களின் தமிழ்க்கொடை: 

1.   பெண்ணென்று பூமிதனில் பிறந்துவிட்டால் (1994)

2.   தொல்காப்பியத்தில் நவீன சிந்தனைகள் (1997)

3.    நவீனக் கோட்பாட்டு ஆய்வுகள் ( 1999)

4.   CHEMBUR MURUGAN TEMPLE, MUMBAI

A Living Monument of Cultural Exchanges (2003)

5.   புற்றில் பிறந்த பூபாளம் (கவிதை) ( 2006)

6.   ரோஜாவுக்கு…! (2007)

7.   தொல்காப்பியர் முதல் தெரிதா வரை ( 2007)

8.   To My Beloved Rose (2012)

9.   க.ப. அறவாணரின் பன்முகச் சிந்தனைகள் (2012)

10. இறைச்சி (2013)

11. தொல்காப்பியரின் கவிதையியல் (தொகுதி) 2013

12.  தெரிதாவின் மானுடவியல் சொல்லாடல்களில்

அமைப்பும் குறியும் விளையாட்டும்(மொழிபெயர்ப்பு) (2015)

13. Songs of Dawn Born in Cancer (2018)

14. DNA Approach to Tolkappiyar’s Poetics (2019)

15. தொல்காப்பியப் பாமாலை (2020)

16. Style Variations of Kannaki (2021)

17. தொல்காப்பியரின் கவிதையியல் டி.என்.ஏ. அணுகுமுறை (2022)

 





புதன், 24 ஆகஸ்ட், 2022

சிங்கைத் தொல்காப்பிய அன்பர்கள் சந்திப்பு (21.08.2022)

 

சிங்கைத் தொல்காப்பிய அன்பர்கள் சந்திப்பு

  தமிழின் முதல் இலக்கண நூலாகக் கிடைத்துள்ள தொல்காப்பியத்தைப் பரப்பும் நோக்கில் சிங்கைத் தொல்காப்பிய அன்பர்கள் சந்திப்பு நிகழ்ச்சி சிங்கப்பூர், சிராங்கூன் சாலையில் அமைந்துள்ள சந்திர மகால் அரங்கில் 21.08.2022(ஞாயிறு) முற்பகல் 11 மணியளவில் தொடங்கியது

 பேராசிரியர் சுப. திண்ணப்பன் அவர்கள் தலைமையில் சந்திப்பு நடைபெற்றது.  தொல்காப்பியத்தின் முதன்மையையும் தொல்காப்பியத்தைத் தமிழர்கள் அனைவரும் அறிந்துகொள்ள வேண்டியதன் தேவையையும் பேராசிரியர் சுப. திண்ணப்பன் அவர்கள் எடுத்துரைத்தார். தொல்காப்பியத்தின் உள்ளடக்கச் செய்திகளைப் பேராசிரியர் சுப.தி. அவர்கள் விளக்கியமை அனைவருக்கும் தொல்காப்பியத்தின் மீது மிகுந்த ஈடுபாட்டை உருவாக்கியது. 

 நிகழ்ச்சிக்கு வந்திருந்த அன்பர்களைப் பொறியாளர் வி.காமராசு அவர்கள்  வரவேற்று உரையாற்றினார். 

 தொல்காப்பிய அன்பர்கள் சந்திப்பு நிகழ்வில் தமிழகத்திலிருந்து வருகைபுரிந்த முனைவர் மு.இளங்கோவன் கலந்துகொண்டு தொல்காப்பியச் சிறப்பினையும் அமைப்பினையும் உள்ளடக்கத்தையும் எடுத்துரைத்து உரையாற்றினார். மேலும் உலகத் தொல்காப்பிய மன்றம் என்ற அமைப்பை உருவாக்கி இதுவரை செய்துள்ள பணிகளை நினைவுகூர்ந்தார். தொல்காப்பிய அறிஞர்களின் பேச்சுகள் ஒளிவடிவில் பாதுகாக்கும் முயற்சி குறித்தும், தொல்காப்பியத்துக்குத் தனி இணையதளம் உருவாக்கியுள்ளமை குறித்தும், தொல்காப்பிய முத்துகளை உருவாக்கி வெளியிட்டு வருவதையும் எடுத்துரைத்து, அனைவரும் தொல்காப்பியப் பரவலுக்குத் துணைநிற்க வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தார். 

  தொல்காபியம் – கைக்கிளை குறித்து நூலெழுதிய புலவர் முத்துக்கிருட்டினன் அவர்கள் இந்த நிகழ்வில் சிறப்பிக்கப்பட்டார். 

 கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோ, செம்மொழி ஆசிரியர் இலியாஸ், பொறியாளர் மூர்த்தி, புரவலர் மாமன்னன், தங்க. வேல்முருகன், மோகன்ராசு உள்ளிட்டவர்கள் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துரைத்தனர். 

 நிகழ்வில் பங்கேற்றத் தொல்காப்பிய அன்பர்கள் அனைவரும் தொல்காப்பியப் பரவலுக்கு உரிய பல்வேறு நெறிகாட்டல்களை வழங்கினர். இந்த நிகழ்வில் 19 அன்பர்கள் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது. 

 பொறியாளர் அ. இளங்கோவன் அவர்கள் நன்றியுரை கூறினார். 

 தொல்காப்பிய அன்பர்கள் சந்திப்புக்கான அனைத்து முயற்சிகளையும் வி. காமராசு அவர்களும் அவர்களின் வாழ்விணையர் நித்யா மணி அவர்களும் சிறப்பாகச் செய்திருந்தனர்.

 


 

பேராசிரியர் சுப. திண்ணப்பன் அவர்கள் சிறப்பிக்கப்படுதல்


திரு. மாமன்னன் சிறப்பிக்கப்படுதல்


திரு. பிச்சினிக்காடு இளங்கோ உரை

வெள்ளி, 12 ஆகஸ்ட், 2022

பேராசிரியர் கு. சிவமணி அவர்கள் மறைவு!

  


முனைவர் கு. சிவமணி

 பேராசிரியரும் கரந்தைக் கல்லூரியின் முன்னாள் முதல்வருமான முனைவர் கு. சிவமணி அவர்கள் இன்று (12.08.2022) மாலை நான்கு மணியளவில் புதுச்சேரியில் உள்ள அவரின் இல்லத்தில் வயது மூப்பு காரணமாக இயற்கை எய்தினார். இவருக்கு வயது. 90. செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் கலைஞர் மு. கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது, தமிழ்நாட்டரசின் தேவநேயப்பாவாணர் விருது உள்ளிட்ட உயரிய விருதுகளைப் பெற்றவர். 

 தஞ்சாவூரில் வாழ்ந்த புலவர் கரந்தை சிவகுப்புசாமி, பருவதத்தம்மைக்கு  மகனாக 01.08.1932 இல் பிறந்தவர். 1950-52 இல் இடைநிலை வகுப்பையும், 1953-55 இல் தமிழ்ச் சிறப்பு வகுப்பையும், முதுகலைப் பட்டத்தையும் (1958), அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயின்று பெற்றவர். பி.டி. பட்டத்தைச் சென்னை சைதாப்பேட்டையிலும், பி.ஜி.எல். என்னும் சட்டப் படிப்பைச் சென்னைச் சட்டக் கல்லூரியிலும் பயின்றவர். முனைவர் பட்ட ஆய்வைத் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நிகழ்த்தியவர்

 கரந்தைத் தமிழ்க் கல்லூரியிலும், பாபநாசம் திருவள்ளுவர் கலைக் கல்லூரியிலும் கல்லூரி முதல்வராகவும், குமாரபாளையம் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் தமிழ்த்துறைத் தலைவராகவும் பணிசெய்தவர். சென்னை, மதுரைப் பல்கலைக்கழகங்களில் கல்விக்குழு, தேர்வுக்குழு உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட குழுக்களில் இருந்து பணிபுரிந்துள்ளார்

 தமிழக அரசின் தமிழ்நாடு சட்ட ஆட்சிமொழி ஆணையத்தின் மொழிபெயர்ப்பாளராகவும், புதுச்சேரி அரசின் சட்டத்துறையில் மொழிபெயர்ப்பு அலுவலராகவும் பணிபுரிந்த பெருமைக்குரியவர். செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் ஆய்வறிஞராகப் பணியாற்றியவர்.  புதுவை மொழியியல் நிறுவனத்தின் முதுநிலை ஆய்வறிஞராக விளங்கியவர். சென்னைப் பல்கலைக்கழகத்தின் பேரகரமுதலி சீராய்வுத் திட்டத்தின் பதிப்பாசிரியராக விளங்கியவர். 

  தமிழ் ஆங்கில மொழிகளில் பெரும்புலமை பெற்ற கு. சிவமணி இந்திய அரசுக்காக இந்திய அரசமைப்பு (அதிகாரமுறைத் தமிழாக்கம்) மொழிபெயர்ப்பினைச் செய்தவர். .சட்டச் சொல் அகராதி (சென்னைப் பல்கலைக்கழகம்), சட்ட - ஆட்சியச் சொற்களஞ்சியம் (புதுவை அரசு வெளியீடு) ஆகிய அகராதிகளை உருவாக்கியவர். 

 முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு. கருணாநிதி, திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, முன்னாள் அமைச்சர் எஸ்.டி. சோமசுந்தரம் உள்ளிட்டவர்களுடன் நெருங்கிப் பழகியவர். 

 1965 இல் கரந்தைப் புலவர் கல்லூரியை மூடும் சூழல் உருவானபொழுது அதனைத் தடுத்து நிலைநிறுத்திய பெருமை பேராசிரியர் கு.சிவமணிக்கு உண்டு. 

 1969 இல் நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் இயங்கிய வள்ளுவர் செந்தமிழ்க்கல்லூரி ஏற்புடைமை இழந்த சூழலில் திருவள்ளுவர் கலைக்கல்லூரியாக உயிர்ப்பித்து வளர்த்த பெருமையும் பேராசிரியர் கு.சிவமணிக்கு உண்டு

 1959 இல் தமிழகத் தமிழாசிரியர் கழக மாநாட்டில் தமிழ்க் கல்லூரிகளையும் கலைக்கல்லூரிக்கு நிகராகக் கருத வேண்டும் என்று தீர்மானம் கொண்டுவந்தவர்

 சிதறிக் கிடந்த தமிழ்க்கல்லூரிகளை ஒன்று திரட்டி, தமிழக மொழிக் கல்லூரிகள் மன்றம் உருவாகக் காரணமாக அமைந்தவர்

 தமிழ்க் கல்லூரிகளைக் கலைக்கல்லூரிகள் போல் கருதவேண்டும் எனவும், தமிழ்ப் பேராசிரியர்களுக்கு ஏனைய பேராசிரியர்களுக்கு வழங்கும் ஊதியம் வழங்க வேண்டும் எனவும் தமிழ் வித்துவான் பட்டத்திற்குப் பதிலாக பி.லிட் பட்டம் வழங்க வேண்டும் எனவும் அரசுடன் பேசி, தமிழ்க்கல்லூரிகளின் வளர்ச்சிக்குப் பாடுபட்டவர்.

தொடர்புடைய பதிவு இங்கு!

 

வியாழன், 14 ஜூலை, 2022

தவத்திரு ஊரன் அடிகளார் மறைவு!

 

தவத்திரு  ஊரன் அடிகளார் 

 வள்ளலார் வழியில் வாழ்வு நடத்தியவரும் திருவருட்பாவினைப் பதிப்பிப்பதிலும் வள்ளலார் அவர்களின் வரலாற்றினை விரித்து எழுதியதிலும் பெரும் பங்காற்றிய தவத்திரு ஊரன் அடிகளார் 13.07.2022 நள்ளிரவு, வடலூரில் உள்ள தம் மனையில் இயற்கை எய்தினார் என்ற செய்தியை ஆழ்ந்த துயரத்துடன் பகிர்ந்துகொள்கின்றேன்.

 கடந்த இருபதாண்டுகளாக அடிகளாருடன் நன்கு பழகும் பேறு எனக்கு வாய்த்தது. அடிகளார் அவர்களை அழைத்து, பல கூட்டங்களை நடத்தியுள்ளேன். யான் உருவாக்கிய பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை . சுந்தரேசனார் ஆவணப்படத்தில் அடிகளாரின் செவ்வி மிகச் சிறப்பாக இடம்பெற்றுள்ளது. மேலும் அடிகளாரின் வாழ்வியலை ஆவணமாக்கும் முயற்சியில் ஈடுபட்டு, பல மணி நேரம் அவர்களின் உரையாடலைப் பதிந்து வைத்துள்ளேன். இந்நிலையில் அடிகளாரின் மறைவுச் செய்தி அறிந்து பெருந்துயரில் தவிக்கின்றேன்.

 திருச்சிராப்பள்ளி மாவட்டம் சமயபுரம் சார்ந்த ஊர் கண்ணனூர் ஆகும். அதனைச் சார்ந்த நரசிங்கமங்கலம் என்னும் ஊரில் தவத்திரு ஊரன் அடிகளார் 1933 ஆம் ஆண்டு மே மாதம் 22 ஆம் நாள் பிறந்தவர். இவர்தம் இயற்பெயர் குப்புசாமி என்பதாகும். ஊரன் அடிகளாரின் தந்தையார் பெயர் இராமசாமிப் பிள்ளை. தாயார் பெயர் நாகரத்தினம் அம்மாள்.

 1967 இல் துறவு பூண்டவர். 1968 முதல் வடலூரில் வாழ்ந்து வந்தவர். பன்னூலாசிரியர். சிறந்த சொற்பொழிவாளர். 

 ஊரன் அடிகளாரின் மறைவு சமய உலகத்திற்கும் வள்ளலார் ஆய்வாளர்களுக்கும் அன்பர்களுக்கும் பேரிழப்பாகும்.

தொடர்புடைய பதிவுகள்:

https://muelangovan.blogspot.com/2014/05/blog-post_1610.html

https://muelangovan.blogspot.com/2017/02/blog-post_16.html

https://muelangovan.blogspot.com/2014/05/blog-post_18.html

ஞாயிறு, 10 ஜூலை, 2022

உலகத் தமிழ் இசை மாநாடு நடத்தும் மலேசியத் தமிழ் அன்பர்களுக்கு உலகத் தொல்காப்பிய மன்றத்தின் சார்பில் வரவேற்பு மற்றும் பாராட்டு விழா!

  

மாண்புமிகு பேரவைத் தலைவர் ஏம்பலம் அரங்க. செல்வம் அவர்கள் மலேசியத் தமிழன்பர்களுக்கு விருது வழங்கி வாழ்த்தும் காட்சி. அருகில் மயிலம் தவத்திரு சிவஞான பாலய சுவாமிகள், புதுவைத் தமிழ்ச்சங்கத் தலைவர் முனைவர் வி. முத்து உள்ளிட்டோர்.


முனைவர் அருள் ஆறுமுகம் விருது பெறுதல்

                                டத்தோ முனீஸ்வரன் அவர்கள் விருது பெறுதல்

மலேசிய நாட்டின் ஈப்போ மாநகரில் 2022 நவம்பர் மாதம் 20 ஆம் நாள் உலகத் தமிழ் இசை மாநாடு நடைபெற உள்ளது. அந்த மாநாட்டினைப் பொறுப்பேற்று நடத்தும் மலேசிய உலகத் தமிழ் இசை மாநாட்டின் தலைவர் முனைவர் அருள் ஆறுமுகம் கண்ணன் தலைமையிலான குழுவினர் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள தமிழிசை ஆர்வலர்களைச் சந்தித்து மாநாட்டின் நோக்கம், மாநாட்டு நிகழ்வுகள் குறித்து உரையாற்ற புதுவைக்கு  வருகைபுரிந்தனர்(09. 07. 2022).  அவர்களின் தமிழ்ப்பணியைப் பாராட்டும் வகையில் வரவேற்பு மற்றும் பாராட்டு விழாவினை உலகத் தொல்காப்பிய மன்றம் புதுவைத் தமிழ்ச் சங்க அரங்கில் ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிகழ்ச்சியில்  மாண்புமிகு புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவர் ஏம்பலம் அரங்க. செல்வம் அவர்கள் கலந்துகொண்டு மலேசியத் தமிழ் அன்பர்களுக்கு விருது வழங்கிப் பாராட்டுரை வழங்கினார்.  மயிலம் திருமடம் தவத்திரு சிவஞான பாலய சுவாமிகள் நிகழ்வில் கலந்துகொண்டு அருளாசி வழங்கினார். 

புதுவைத் தமிழ்ச்சங்கத்தின் தலைவர் முனைவர் வி. முத்து தலைமையில் நடைபெற்ற விழாவில் தூ. சடகோபன் வரவேற்புரையாற்றினார். இந்த நிகழ்ச்சி குறித்த நோக்கவுரையை முனைவர் மு. இளங்கோவன் வழங்கினார். மலேசியா, ஈப்போ, முத்தமிழ்ப் பாவலர் மன்றத்தின் தலைவர் முனைவர் அருள் ஆறுமுகம் கண்ணன்,  மலேசியாவைச் சேர்ந்த வீ. மா. சண்முகம், மா.முனீஸ்வரன் ஆகியோருக்குப் பாராட்டும் விருதும் வழங்கப்பட்டன. முனைவர் அருள் ஆறுமுகம் கண்ணன் மலேசிய உலகத் தமிழ் இசை மாநாடு குறித்து அறிமுகவுரையாற்றினார். 

முனைவர் கா. இராசமாணிக்கம் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாட, எழுத்தாளர் பூங்குழலி பெருமாள் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். உலகத் தொல்காப்பிய மன்றத்தைச் சேர்ந்த கோ. முருகன் நன்றியுரை வழங்கினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உலகத் தொல்காப்பிய மன்றத்தினர் செய்திருந்தனர்.





புதன், 15 ஜூன், 2022

மலேசியாவின் ஈப்போ மாநகரில் உலகத் தமிழ் இசை மாநாடு!



தமிழிசைத் தொடர்பாக ஆய்வுக் கட்டுரைகள் / கவிதைகள்

வரவேற்கப்படுகின்றன! 

  தமிழிசையின் சிறப்பினை வளரும் தலைமுறைக்கு எடுத்துச்சொல்லும் முயற்சியாக மலேசிய நாட்டின் ஈப்போ  மாநகரில் உலகத் தமிழ் இசை மாநாடு 2022, நவம்பர் 20 இல் நடைபெற உள்ளது. தமிழர், தமிழ் மொழிகலை, பண்பாட்டோடு இணைந்திருக்கும் ஈப்போ முத்தமிழ்ப் பாவலர் மன்றமும் ஈப்போ வெற்றித் தமிழர் பேரமைப்பும் இணைந்து, உலகெங்கும் உள்ள தமிழ் இசை வல்லுநர்களை ஒன்றிணைத்து இந்த உலகத் தமிழ் இசை மாநாடு – 2022 நடத்துகின்றன

 தமிழிசை மாநாடு நடைபெறும் நாளன்று பாரம்பரிய இசைக் கருவிகளின் கண்காட்சிக்   கூடம்  காட்சிப்படுத்தப்பட உள்ளது. தமிழ் இசைத் தொடர்பான ஆவணப்படங்களும் குறும்படங்களும் திரையிடப்பட உள்ளன. மேலும் இம்மாநாட்டினை ஒட்டி மாநாட்டு மலர் ஒன்று வெளிடவும் உள்ளனர். இந்த மாநாட்டு மலருக்குத் தமிழ் இசைத் தொடர்பான ஆய்வுக் கட்டுரைகள் / கவிதைகள் வரவேற்கப்படுகின்றன

    தமிழிசை சார்ந்த கட்டுரைகள் / கவிதைகளை worldtamilmusiccon2022@gmail.com  என்ற மின்னஞ்சல் முகவரிக்கு  31/8/2022 - க்குள் அனுப்பி வைக்கலாம்.  

    உலகத் தமிழ் இசை மாநாடு குறித்த மேலதிக விவரங்களைத் தெரிந்துகொள்ள மாநாட்டுத் தலைவர் கவிரத்னா டாக்டர் அருள் ஆறுமுகம் கண்ணன் அவர்களின் கைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம். 

தொடர்பு எண் +6 012500 6161 

வெள்ளி, 10 ஜூன், 2022

திருவாடானை அரசு கல்லூரியின் முத்தமிழ் மன்ற விழா!

மு. இளங்கோவன் உரை

கல்லூரி முதல்வர் முனைவர் அ.மாதவி அவர்கள் நூல் பரிசளித்தல்.  அருகில் பேராசிரியர்கள் மு. பழனியப்பன், முனைவர் ப. மணிமேகலை.

இராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை அரசு கல்லூரியில் முதல்வராகப் பணியாற்றும் பேராசிரியர் முனைவர் அ. மாதவி அவர்கள் தங்கள் கல்லூரியில் நடைபெறும் முத்தமிழ் மன்ற விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றுமாறு தொலைபேசியில் என்னைத் தொடர்புகொண்டு, அழைப்பு விடுத்தார். என் அருமை நண்பர் பேராசிரியர் மு. பழனியப்பன் அவர்கள் நான் திருவாடானை சென்று திரும்புவதற்கும், தங்குவதற்கும் உரிய அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்பாகச் செய்திருந்தார். 

நிகழ்ச்சியின் முதல்நாள் இரவே காரைக்குடிக்குச் சென்று தங்கினேன். காலையில் கல்லூரிக்குச் செல்ல மகிழுந்து ஏற்பாடு செய்வதாகச் சொன்னார்கள். தவிர்த்தேன். அரசு பேருந்தில் போகலாம் என்று நண்பரிடம் தெரிவித்தேன். பேராசிரியர் மு. பழனியப்பன் அவர்கள் நான் தங்கியிருந்த விடுதிக்குக் காலையில் வந்து உரையாடினார். காரைக்குடியில் சிற்றுண்டி முடித்து, இருவரும் பேருந்தேறித் திருவாடானை நோக்கிப் பயணித்தோம். ஒரு மணி நேரப் பயணம். அந்த நேரத்தில் தமிழகத்துக் கல்வி நிறுவனங்களின் நிலைகள், பல்கலைக்கழகங்களில் உயர்கல்வியைச் சீரழித்த கல்வியாளர்கள்(!), அரசியல்வாணர்களின் திரு(!) விளையாடல்களை யெல்லாம் அசைபோட்டபடி திருவாடானை சென்றுசேர்ந்தோம். 

திருவாடானை அரசு கல்லூரி என்பது சிற்றூர்ப் பகுதியில் பிறந்து வளர்ந்த மாணவர்களை அரவணைத்து, கல்விப்பால் ஊட்டும் தாயாக விளங்குவதை அறிந்தேன். தமிழக அரசால் புதியதாகத் தொடங்கப்பட்ட கல்லூரிக்குப் பேராசிரியர் அ. மாதவி அவர்கள் முதல்வராகப் பணியாற்ற வந்த பிறகு பல்வேறு வசதிகளை மாணவர்களுக்குச் செய்து தந்துள்ளமையைப் பேராசிரியர்களும் பெற்றோர்களும் நன்றியுடன் குறிப்பிட்டார்கள். தண்ணீர்ப் பஞ்சம் போக்கும் வகையில் ஆழ்துளைக் கிணறு அமைத்து, எந்த நேரமும் மாணவர்களுக்குக் குடிதண்ணீர் கிடைக்குமாறு செய்தமை பெருஞ்சாதனை என்றார்கள். அதுபோல் வகுப்பறை, கணினி, இருக்கை வசதிகளும் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளன. கல்வி, பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியிருக்கும் பகுதியில் பிறந்து வளர்ந்த நான், திருவாடானைப் பகுதி மாணவர்களையும், பேராசிரியர்களையும் சந்திப்பதற்குப் பெரும் விருப்பத்தோடு சென்றிருந்தேன். அனைவருடனும் உரையாடி மகிழ்ந்தேன். 

 முன்பே அறிமுகமான பேராசிரியர்கள் வந்து, ஒருவரையொருவர் அறிமுகம் செய்துகொண்டு, செய்யும் பணிகளைப் பகிர்ந்துகொண்டோம். காலை நிகழ்வின் முத்தமிழ் விழாவுக்குரிய நேரம் நெருங்கியது. 

கல்லூரி முதல்வர் முனைவர் அ. மாதவி அவர்கள் என்னை அறிமுகம் செய்யும் வகையில் என் பணிகளை எடுத்துரைத்து, பேராசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் மகிழ்ச்சியுடன் அறிமுகம் செய்துவைத்தார்கள். சற்றொப்ப முக்கால் மணி நேரம் என் உரை அமைய வேண்டினர். நானும் நேரக்கட்டுப்பாட்டைப் பின்பற்றி உரையை அமைத்தேன்.  

சிற்றூர்ப்புறத்திலிருந்து கல்வி கற்பதற்குப் புறப்பட்ட என் வாழ்க்கைப் பயணத்தையும், கண்ட தோல்விகளையும், அதனை உடைத்து மேலெழுந்த வரலாற்றையும், தமிழ் கற்ற முறையினையும் அதனைப் பரப்புவதற்கு உலக அளவில் செய்துவரும் முயற்சிகளையும் எடுத்துரைத்தேன். நாட்டுப்புறப் பாடல் துறையில் நான் செய்த ஆய்வுகளை மாணவர்களுக்கு எடுத்துரைத்தபொழுது அரங்கம் அமைதிகாத்தது. தமிழிசை என் உரைக்கு வலிமைசேர்த்தது. உலகப்போக்கை உணர்ந்து, கடுமையாக உழைத்துப் படித்து முன்னேறுமாறு மாணவர்களுக்கு ஒரு வேண்டுகோள் வைத்து என் உரையை நிறைவுசெய்தேன். நிறைவில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளைக் கண்டுகளித்தோம். வாழ்வில் நினைக்கத்தகுந்த பொழுதாக இந்த விழாவின் பொழுது அமைந்திருந்தது. 



முத்தமிழ் மன்ற விழா நிறைவுற்றதும் திருவாடானை சிவன்கோவில் சிறப்பையும் அருகில் இருக்கும் ஊர்களின் சிறப்பினையும் பேராசிரியர்கள் எடுத்துரைத்தனர். அவற்றுள் தொண்டி. என்னும் ஊர் பழங்காலந்தொட்டு முதன்மையான ஊராக விளங்குகின்றது. ஓரி என்னும் ஊரும் புகழ்பெற்றதாகும். மேலும் காளையார் கோவில், நாட்டரசன்கோட்டை, இராமநாதபுரம், சிவகங்கை, கீழடி முதலியன இப்பகுதியில் உள்ள பார்க்கத்தகுந்த ஊர்கள் என்றனர். முன்பே திட்டமிட்டிருந்தால் தொண்டிக்குச் சென்று கடற்காற்று வாங்கியிருக்கலாம். கடல்வளம் நுகர்ந்திருக்கலாம். ஆனால் தேவகோட்டையில் வாழும் பேராசிரியர் பழனி இராகுலதாசனைச் சந்திக்க இயற்கை இழுத்துச்சென்றது.