நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

செவ்வாய், 17 ஜனவரி, 2012

பெரியார் தொண்டர் து.தில்லைவனம் மறைவு

பெரியார் பற்றாளரும் தலைசிறந்த பகுத்தறிவு அன்பருமான து.தில்லைவனம் அவர்கள் இன்று(17.01.2012) மாலை இயற்கை எய்தினார். காட்டுமன்னார்கோயில் அடுத்த சின்னபுங்கனேரி என்னும் ஊரில் பிறந்தவர். வேளாண்மைப் பட்டதாரியான இவர் வேளாண்மை ஆசிரியராக முப்பத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாகப் பணிபுரிந்தவர். உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த இவர் இன்று மாலை இவரின் இல்லத்தில் இயற்கை எய்தினார். மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சியின் துணைப்பொதுச்செயலாளராகப் பொறுப்பு வகித்தவர். பெரியார் சிந்தனைகள் நூல் வெளிவர பெரும் பங்காற்றியவர். சிந்தனையாளன், பெரியார் ஊழி(ஆங்கில ஏடு) ஏடுகளின் ஆசிரியர்குழுவில் இடம்பெற்றவர். இவருக்கு ஒரு மகனும் மூன்று மகளும் உள்ளனர்.

திங்கள், 16 ஜனவரி, 2012

தந்தை பெரியார் முத்தமிழ் மன்றம்-பெரியார் விருது

சென்னை தந்தை பெரியார் முத்தமிழ் மன்றம் சார்பில் தமிழுக்கும், தமிழர்க்கும் ஆக்கமான பணிகளைச் செய்பவர்களை ஊக்குவிக்கும் வகையில் பெரியார் விருது ஆண்டுதோறும் வழங்கிவருகின்றனர். அந்த வகையில் எனக்கும் வேறு சில நண்பர்களுக்கும் இந்த ஆண்டு பெரியார் விருது வழங்குகின்றனர். இன்று மாலை(16.01.2012) 6 மணியளவில் சென்னை பெரியார்திடலில் நடைபெறும் விழாவில் விருதுபெறுகின்றேன். சென்னை நண்பர்கள் முடிந்தால் வந்து மகிழ்ச்சியூட்டலாம்.

இன்று காலையில் சென்னைப் புத்தகக் கண்காட்சிக்கு வர உள்ளேன். பிறகு மாலை நிகழ்வுக்குப் பெரியார் திடலுக்கு வருவேன். வாய்ப்பு உள்ளவர்கள் சந்திக்கலாம்.

சென்னைப் புத்தகக் கண்காட்சியில் என் நூல்கள் டிஸ்கவரி புக் பேலஸ், விழிகள் பதிப்பகம் இவற்றில் கிடைக்கும்.

திங்கள், 9 ஜனவரி, 2012

பேராசிரியர் அடிகளாசிரியர் நினைவுகள்…


இந்தியக் குடியரசுத்தலைவர் திருவாட்டி பிரதிபா தேவிசிங் பாட்டில் அவர்கள் பேராசிரியர் அடிகளாசிரியர் அவர்களுக்குத் தொல்காப்பியர் விருது வழங்கிப் பாராட்டுதல்


பேராசிரியர் அடிகளாசிரியர் அவர்களைச் சற்றொப்ப இருபது ஆண்டுகளுக்கு முன்பே அறிவேன். அவரின் தண்ணிழல் நூல் அவர்மேல் எனக்கு ஈடுபாட்டை உருவாக்கியது. அதன் பிறகு அடிகளாசிரியரின் தொல்காப்பியப் பதிப்புகளில் மிகுந்த ஈடுபாடு உண்டானது. பல ஆண்டுகளாக ஐயாவைக் காண நினைத்தும் 09.08.2008 இல்தான் ஐயாவைக் கண்டு உரையாடினேன். அவரை நூற்றுக்கணக்கன ஒளிப்படங்களில் பதிவுசெய்தேன். தமிழ் ஓசை நாளிதழில் வெள்ளாற்றங்கரையில் ஒரு தமிழ்த்துறவி என்ற தலைப்பில் ஐயாவின் பெருமைகளை ஒரு கட்டுரையாக எழுதி வெளியிட்டேன். இணையத்திலும் ஐயாவின் வாழ்க்கை உலகத்து அறிஞர்களின் பார்வைக்குச் சென்றது. மீண்டும் ஒருமுறை அவரை இல்லம் சென்று கண்டு மகிழ நினைத்திருந்தேன்.

ஆனால் செம்மொழித் தமிழ் விருது அறிவிப்பு வெளியானதும் ஐயாவுக்குத் தொல்காப்பியர் விருது(ஐந்து இலட்சம் உருவா) அறிவிப்பு வந்தது. பொருத்தமான தேர்வு என்று தமிழ் உலகமே மகிழ்ந்தது. எனக்கும் நண்பர்களுக்கும் செம்மொழி இளம் அறிஞர் விருது கிடைத்தது. அதன் தொகை பெறுவதற்குச் சென்னை சென்ற பொழுது ஐயாவை மீண்டும் ஒரு முறை பார்த்தேன். பிறகு இந்தியக் குடியரசுத்தலைவர் அவர்களின் மாளிகையில் தொல்காப்பியர் விருது வழங்குவதற்குக் குழுவாகப் பயணம் செய்தோம்.

செம்மொழி நிறுவனத்தின் பொறுப்பு அலுவலர் பேராசிரியர் க.இராமசாமி ஐயாவும், பேராசிரியர் கு.சிவமணி ஐயாவும் ஏர் இந்தியா விமானத்தில் நாங்கள் அனைவரும் பயணம் செய்வதற்குரிய சூழலையும், ஒரே இடத்தில் தங்குவதற்கு உரிய சூழலையும் அமைத்தார்கள். அப்பொழுது அனைவரும் இணைந்து புதுதில்லி வானூர்தி நிலையத்தில் ஒன்றாகப் படம் எடுத்துக்கொண்டோம்.

பிறகு குடியரசுத்தலைவர் மாளிகையில் பரிசு பெறுவதற்கு ஐயாவுடன் ஒரே இடத்தில் சில மணி நேரம் கழிக்க வாய்ப்பு கிடைத்தது. மாலையில் புதுதில்லியில் தமிழ்ச்சங்கத்தில் நடைபெற்ற பாராட்டு விழாவில் ஐயாவுடன் ஒரே மேடையில் தமிகத்தின் பாராளுமன்ற உறுப்பினர்களும், அமைச்சர்களுமான சா.செகத்ரட்சகன், நெப்போலியன், பழனிமாணிக்கம் உள்ளிட்டவர்களுடன் இணைந்து படம் எடுத்துக்கொண்டு, பாராட்டுப் பெற்றதை வாழ்நாளில் மறக்க இயலாது.

மறுநாள் காலையில் வானூர்தி கிடைக்காமல் திண்டாடிய எங்கள் அணியில் சிக்காமல் முன்னதாக ஐயா அவர்கள் பாதுகாப்பாக வானூர்தியில் சென்னை வந்து சேர்ந்தார்கள். அதன் பிறகு அவ்வப்பொழுது ஐயாவின் உடல்நலனைப் பற்றி வினவிய வண்ணம் இருப்பேன். நேற்று நடு இரவு 12 மணியளவில் திரு.சனதா சி.மாணிக்கம் அவர்கள் அடிகளாசிரியர் மறைவு குறித்த தகவல் தந்தார்கள். உடனடியாக பேராசிரியர் அ.சிவபெருமான் அவர்களிடம் ஆழ்ந்த இரங்கல் கூறிய கையுடன் இணையத்தில் ஐயாவின் மறைவை உலகத் தமிழர்களுக்குத் தெரிவித்தேன். ஆர்வமுடன் இந்தச் செய்திகளை வெளியிட்ட இணைய தளங்களுக்கு நன்றி. தொல்காப்பிய அறிஞர்களுள் ஒருவரை இழந்து நிற்கின்றோம். தொல்காப்பிய உரைநூல் ஒன்று இயற்கையின் பக்கத்தில் கிழிந்துவிட்டது…

பேராசிரியர் அடிகளாசிரியர் அவர்களின் தமிழ் வாழ்க்கை


பேராசிரியர் அடிகளாசிரியர்(மறைவு 08.01.2012)

 பேராசிரியர் அடிகளாசிரியர் அவர்கள் விழுப்புரம் மாவட்டம் கல்லக்குறிச்சி வட்டத்தின் தென்கோடியில் உள்ள கூகையூரில் பிறந்தவர்(1910 சாதாரண ஆண்டு,சித்திரைத் திங்கள் ஐந்தாம் நாள்,ஞாயிற்றுக்கிழமை).இவர் தம் பெற்றோர் பெரியசாமி ஐயர்(பார்ப்பனர்களைக் குறிக்கும் ஐயர் இல்லை),குங்கும அம்மாள்.வீரசைவ மரபினர்.அடிகளாசிரியரின் இளமைப் பெயர் குருசாமி என்பதாகும்.மறைமலையடிகளார் தொடர்பிற்குப் பிறகு தம் பெயரைத் தனித்தமிழாக்கி அடிகளாசிரியர் என அமைத்துக்கொண்டார்.

 அடிகளாசிரியரின் ஏழாம் அகவையில் தந்தையார் இயற்கை எய்தினார்.எனவே அடிகளாசிரியர் தம் தாய்மாமனான பெரம்பலூருக்கு அண்மையில் உள்ள நெடுவாசல் என்னும் ஊரில் வாழ்ந்த கு.சுப்பிரமணியதேவர்,கு.சிவப்பிரகாச தேவர் ஆகியோரின் ஆதரவில் வளர்ந்தார். தாய்மாமன்கள் மருத்துவம்,சோதிடம் வல்லவர்கள்.அவர்கள் வீட்டில் தங்கித் தமிழும் வடமொழியும் பயின்றார்.

 பெரம்பலூரில் வாழ்ந்த மருத நாடார் என்பாரிடம் சோதிடக் கலையை முறையாக அறிந்தவர்.முசிறியில் வாழ்ந்த அரசினர் உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராக விளங்கிய வீ.குமார வீரையர் என்பவரிடம் நன்னூல் காண்டிகையுரையைப் பாடம் கேட்டார்.1937 இல் இவர் தனித்தேர்வராகத் தேர்வெழுதி 1937 இல் சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப்புலவர் பட்டம் பெற்றார்.

 14.07.1938 இல் மயிலம் திருமடத்தில் தமிழ்க்கல்லூரி தொடங்கப்பட்டது. அக்கல்லூரியில் இவர் முதல் ஆசிரியராக அமர்த்தம் பெற்றார்.அங்கு விரிவுரையாளராகவும், துணைத் தலைவராகவும் பணிபுரிந்தார்.அதுபொழுது மறைமலையடிகளார்,நா.மு.வேங்கடசாமி நாட்டார் உள்ளிட்ட அறிஞர்களுடன் பழகியதாக அறியமுடிகிறது.

 அடிகளாசிரியர் அவர்களின் துணைவியார் பெயர் சம்பத்து(அகவை 80).கூகையூரில் அடிகளாசிரியருடன் வாழ்ந்து வருகிறார்.இவர்களுக்கு எட்டு மழலைச்செல்வங்கள் வாய்த்தன. அவர்களுள் ஆண்மக்கள் நால்வர். 1. அ.பேராசிரியர் (மறைவு), 2. அ. இளங்கோவன், 3. அ.நச்சினார்க்கினியன், 4.அ.சிவபெருமான். பெண்மக்கள் நால்வர். 1.திருநாவுக்கரசி,2. குமுத வல்லி, 3.செந்தாமரை,4.சிவா(மறைவு).அடிகளாசிரியர் வீரசைவ மரபினர் என்பதால் இறையீடுபாடு கொண்டு விளங்குகிறார்கள்.

கடவுள் மறுப்பாளர்கள் பலரும் இவருக்கு அணுக்கமான நட்பிற்கு உரியவர்கள். தந்தை பெரியாரை உயர்வாக மதிப்பவர். பிறர் மனம் புண்படாதபடி பழகும் பாங்கினர்.எளிய வாழ்க்கை, தூய வாழ்க்கை இவருடையது. இவருக்குப்பணிவிடை செய்யும் அன்பர் அடிகளாசிரியரை மிகச் சிறப்பாகக் கவனித்துக்கொள்கிறார்.கிழமைதோறும் மருத்துவர் ஒருவர் வந்து அடிகளாசிரியர் உடல்நிலையை ஆய்வு செய்து அறிவுரை சொல்கின்றார். இம்மருத்துவர் அடிகளாசிரியர் மேல் அன்பும் மதிப்பும் கொண்டவர் என்பதால் தம் மருத்துவ ஆய்வைத் தொழிலாகச் செய்யாமல் தன் குருவிற்குச்செய்யும் பணிவிடையாகச் செய்வதை அறியமுடிந்தது.



03.07.1950 முதல் 03.07.1970 வரை தஞ்சை-கரந்தைக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணிபுரிந்து தரமான தமிழ் மாணவர்களை உருவாக்கினார். இவர் வகுப்பில் பாடம் நடத்தும் பொழுது மாணவர்கள் விரும்பிப் பாடம்கேட்பது உண்டாம்.கடுஞ்சொல் சொல்லாதவர். இவருக்குச் சினம் வருவதே இல்லையாம். இவர்மேல் மாணவர்களுக்கு மிகப்பெரிய மதிப்பு இருந்தது. நாற்பதாண்டுகளுக்கு முன்பு இவரிடம் படித்த மாணவர்கள் கூட இப்பொழுதும் இவரை வீடு தேடி வந்து பார்த்துச் செல்கின்றனர் என்றால் இவரின் பெருமை விளங்கும்.

கரந்தைக் கல்லூரியில் பணிபுரிந்தபொழுது அருகில் உள்ள சிவன் கோயிலில் சைவ சித்தாந்த வகுப்புகளை இலவயமாக நடத்தியுள்ளார். இதில் பல மாணவர்கள் கற்றுள்ளனர். இங்குப் பணிபுரியும்பொழுது பல தமிழ் நூல்களைப் பதிப்பிக்கும் பணியில் ஈடுபட்டார்.சரசுவதிமகால் நூலகம் இதில் இவரைப் பயன்படுத்திக் கொண்டது.

1977 இல் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையில் ஆராய்ச்சியாளராகப் (1977) பணிபுரிந்த பெருமைக்கு உரியவர்.

20.01.1982 முதல் 01.10.1985 வரை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் சுவடிப்புலத்தில் சிறப்புநிலை இணைப்பேராசிரியராக அமர்ந்து தொல்காப்பிய ஆராய்ச்சிகளைச் செய்து வந்தார்.மூப்பின் காரணமாகத் தாமே அப்பணியிலிருந்து விலகி வந்தாலும், வீட்டிலிருந்தபடியே அப்பணியை நிறைவுசெய்து வழங்கினார். அவ்வகையில் தொல்காப்பியம் செய்யுளியல், பிற இயல்களைத் தமிழ்ப்பல்கலைக்கழகம் வெளியிட்டது.

செம்மொழித் தமிழாய்வு நிறுவனம் இவர் தம் தொல்காப்பிய ஆராய்ச்சியைப் போற்றி ஐந்து இலட்சம் உருவா மதிப்புள்ள தொல்காப்பியர் விருதினை மாண்புயர் இந்தியக் குடியரசுத்தலைவரின் திருக்கையால் வழங்கிச் சிறப்பித்தது. இத்தகு பெருமைக்குரிய பேராசிரியர் அடிகளாசிரியர் அவர்கள் 08.01.2012 இரவு 11 மணிக்குத் தம் 102 ஆம் அகவையில் இயற்கை எய்தினார்.

அடிகளாசிரியர் தமிழுலகிற்கு வழங்கிய தமிழ்க்கொடை

1.அருணகிரி அந்தாதி(1967) சரசுவதி மகால் வெளியீடு.
2.மருதூரந்தாதி உரை(1968)
3.காலச்சக்கரம் 1969,79(சோதிடம்)
4.வராகர் ஓரா சாத்திரம் 1970,78,90
5.சிவஞானதீபம் உரை 1970
6.சிவப்பிரகாச விகாசம் 1977
7.முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் உரை 1938
8.சேக்கிழார் பிள்ளைத்தமிழ் உரை 1967
9.தமிழகக் கல்வெட்டு விளக்கவுரை 1967(மு.கோவிந்தராசனாருடன்)
10.திருவலஞ்சுழி தேவாரப்பாடல்கள் உரை 1958
11.திருவாசகக்கோயில் திருப்பதிகம் உரை 1956
12.சிவபுராணச் சிற்றுரை 1986,99
13.சதமணிமாலை மூலமும் உரையும் 1990
14.சித்தாந்த சிகாமணி அங்கத் தலத்திரட்டு உரை 1991
15.சிவஞானபால தேசிகர் திருப்பள்ளி எழுச்சி உரை 1991
16.குதம்பைச்சித்தர் பாடலும் உரையும் 1999
17இட்டலிங்க அபிடேகமாலை மூலமும் உரையும் 2001
18.சசிவன்ன போதம் மூலமும் உரையும் 2002
19.பஞ்சதிகார விளக்கம் மூலமும் உரையும் 2003

பதிப்பு நூல்கள்

20.வீரசைவப் பிரமாணம் 1936
21.சதமணிமாலை 1938
22.சிவப்பிரகாச விகாசம் 1939
23.காமநாதர் கோவை 1957
24.மேன்மைப் பதிகம் 1957
25.சதுர்லிங்க தசகோத்திர சதகம் 1958

ஆராய்ச்சி நூல்கள்

26.தொல்காப்பியம்- எழுத்தத்திகாரம்-இளம்பூரணம் அரிய ஆராய்ச்சிப்பதிப்பு 1966
27.ஐவகையடியும் என்னும் தொல்காப்பிய நூற்பா விளக்கம்(செ.ப.)
28.தமிழ் இலக்கண இலக்கியங்களில் சைவசித்தாந்தம்,1978
29.தொல்காப்பியம்-சொல்-இளம்பூரணம் த.ப. 1990
30தொல்காப்பியம்-பொருள்-செய்யுளியல் த.ப.1985
31.தொல்காப்பியம்-பொருள்-எட்டு இயல்கள் (அச்சில்)

படைப்பிலக்கிய நூல்கள்

32.பிள்ளைப்பாட்டு 1945
33.திரு அரசிலிக்காதை 1948
34.குழந்தை இலக்கியம் 1963
35.சான்றாண்மை 1964-1975



36.சென்னிமலை முருகன் தோத்திரம் 1980
37.அரசியல் இயக்கம் 1981
38.பல்சுவைப் பண்ணத்திப் பாடல்கள் 1983
39.அருள்மிகு மாரியம்மன் திருப்பதிகம் 1982
40.உளத்தூய்மை,1984,1994
41.தண்ணிழல் 1990
42.மறவர் நத்தக் குன்றமரும் திருமுருகன் 1993
43.தொழிலியல் 1993
44.மெய்பொருட்காதை
45.தமிழ் மாண்பும் தமிழ்த்தொண்டும் 1996
46.ஒண்பான்கோள் வணக்கப்பாடல்கள் 1993
47.சிறுவர் இலக்கியம்



உரைநடை

48.எங்களூர்
49.தொடக்கப்பள்ளி - நாடகம்
50.வீரசைவ சிவபூசாவிதி 1949
51.விலையேற்றமும் வாழும் வழியும் 1984
52.திருமூலரும் பேருரையும் 1998
53.காயத்துள் நின்ற கடவுள்,1999
54.திருவாசக அநுபூதி 2000
55.கீதையின் அறிவுப்பொருள் 2000
56.திருமந்திர உணர்வு 2001
57.தொல்காப்பியச் செய்யுளியல்-உரைநடை (அச்சில்)
58,திருமந்திரத்தில் எட்டாம் திரும்முறை,2005


வெளிவர வேண்டிய நூல்கள்

1.கலித்தொகை உரை (குறிஞ்சிக்கலி)
2.பிரபுலிங்கலீலை
3.அடிகளாசிரியர் சமுதாயப்பாடல்கள்
4.அடிகளாசிரியரின் இலக்கணக் கட்டுரைகள்
5.அடிகளாசிரியரின் இலக்கியக் கட்டுரைகள்
6.திருக்குறள் உரை
7.முப்பால் உரைநடை
8.சிவஞான பாலய சுவாமிகள் கலம்பகம் மூலமும் உரையும்

பேராசிரியர் திரு.அடிகளாசிரியர் முகவரி

பேராசிரியர் திரு.அடிகளாசிரியர்
குகையூர்-அஞ்சல்
நயினார் பாளையம்-வழி
கல்லக்குறிச்சி-வட்டம்
விழுப்புரம் மாவட்டம்
6006 306

தொடர்புக்கு: அ.சிவபெருமான் 94430 99936

முதுபெரும் தமிழறிஞர் அடிகளாசிரியர் மறைவு


பேராசிரியர் அடிகளாசிரியர் அவர்கள்

முதுபெரும் தமிழறிஞரும் இந்தியக் குடியரசுத்தலைவரிடம் செம்மொழித் தொல்காப்பியர் விருது பெற்றவருமான பேராசிரியர் அடிகளாசிரியர் அவர்கள் தம் 102 ஆம் அகவையில் இயற்கை எய்தினார். விழுப்புரம் மாவட்டம் கூகையூரில் வாழ்ந்த பேராசிரியர் அடிகளாசிரியர் அவர்கள் 08.01.2012 இரவு 11 மணிக்கு உடல்நலக்குறைவு காரணமாக இயற்கை எய்தினார். தமிழறிஞரை இழந்துவாடும் குடும்பத்தினருக்கும், அவரின் மாணவர்களுக்கும், அன்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்களைப் பணிவுடன் தெரிவித்துக்கொள்கின்றேன்.

பேராசிரியர் அடிகளாசிரியர் அவர்களின் தமிழ் வாழ்க்கையை அறிய இங்கே சொடுக்குக.

தொடர்புக்கு: முனைவர் அ.சிவபெருமான்
94430 99936