நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

புதன், 22 ஏப்ரல், 2026

சிங்கப்பூர், கவிமாலையின் காப்பாளர் மா. அன்பழகன் மறைவு

 


    சிங்கப்பூரில் தமிழ்ப் பற்றுடனும், படைப்பாற்றலுடனும் வாழ்ந்து, கவிமாலை என்னும் இலக்கிய அமைப்பின் வழியாகச் சிங்கப்பூர் எழுத்தாளர்களை ஒன்று திரட்டித் தமிழ்ப்பணியாற்றி வந்த அண்ணன் கவிமாலை மா. அன்பழகனார் அவர்கள் இன்று (22.04.2026) இயற்கை எய்திய செய்தியறிந்து மிகுந்த துயருற்றேன். கடந்த பல நாட்களாக அண்ணன் மா. அன்ழகனார் அவர்கள் உடல்நலம் குன்றி, மருத்துவம் பார்த்து வந்த செய்தியை அன்பர்கள் வழியாக அறிந்து வருந்திக்கொண்டிருந்தேன். சிங்கப்பூர்த் தமிழ் இலக்கிய உலகம் கையற்றுக் கலங்குமாறு அண்ணனின் மறைவு அமைந்துவிட்டது. அண்ணாரைப் பிரிந்து வருந்தும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கின்றேன். 

    மா. அன்பழகனார் அவர்கள் மிகச் சிறந்த பேச்சாளர்; அரங்கு வழிநடத்துநர்; கவிஞர்: புதின ஆசிரியர்: தன்முனைப்பு நூல்களின் ஆசிரியர்; சிறுகதை ஆசிரியர்; சிறுவர் நூல்கள் படைத்தவர்; திரைத்துறை ஈடுபாட்டினர்; உயர்ந்த பண்புகள் பலவற்றைக் கொண்ட பெருந்தகையாளர் ஆவார். 

    அன்பழகன் என்னும் இவரின் பெயர் காரணப் பெயர் என்பேன். அன்பும் இவரிடம் உண்டு; அழகும் இவரிடம் அடைக்கலம். இவர் ஓர் இலக்கிய ஆலமரம். இத் தமிழாலமரத்தின் அடியில் தங்கி, இலக்கியம் கற்றவர்களும் உரையாடியவர்களும் கணக்கிலர். கவிதைச் சிறகுகளை வளர்த்துக்கொண்டு இலக்கியவான் பரப்பில் இட வலமாகச் சுற்றிப் பறப்பவர்கள் பலரை அறிவேன். இளம் பாவலர்களை ஊக்குவிக்க எண்ணற்ற வழிகளைக் கண்டவர். இவர் நடத்தும் இலக்கிய அரங்குகள் நேரம் தவறாமல் தொடங்கப்பட்டு, எதிர்பார்த்தவாறு நிறைவுறும். ஓர் இராணுவத் தளபதிக்கு உரிய திட்டமிடலும், ஒரு தாயைப் போலும் அரவணைத்துச் செல்லும் கருணை உள்ளமும் கொண்டவர். எம் போலும் புதியவர்களுக்கும் நிழல் தந்து, இளைப்பாறிச் செல்ல இடம் தந்தவர். 

    பத்தாண்டுகளுக்கு முன்னர் பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார் ஆவணப்படத்தைச் சிங்கப்பூரில் திரையிடுவதற்கு அண்ணன் செய்த உதவியையும், ஈழத்து அறிஞர் விபுலாநந்த அடிகளார் ஆவணப்படத்தைத் திரையிடுவதற்கு அண்ணன் செய்த உதவியையும் யானும் என் குடிவழினரும் என்றும் நினைவுகூர்வோம். அதுபோல் என் நூல்களை வெளியிட்டு, சிங்கப்பூர் இலக்கியவாணர்களுக்கு என்னை மகிழ்ச்சியுடன் அறிமுகம் செய்த அந்தப் பெரும்பண்பை நினைக்கும்பொழுது கண்ணீர் கரைபுரண்டு ஓடுகின்றது. அருகில் அமர்த்தி, உணவருந்தச் செய்து, வானூர்தி நிலையத்துக்கு என்னை வண்டியில் ஏற்றிக்கொண்டு, வலவனாக வந்து வழியனுப்பிய அந்த “அன்புக்கு” யாது கைம்மாறு ஆற்றுவேன். 

    சிங்கப்பூருக்கு நான் செல்லும் பொழுது ஒவ்வொரு முறையும் எங்களின் இளைஞர் பட்டாளத்துக்கு ஈடுகொடுத்து, நடுவண் அமர்ந்து இனிய உரையாடலை வழிநடத்தும் அந்தப் பொழுதுகள் ஒவ்வொன்றாக நினைவில் வந்து மோதுகின்றன. 

    சிங்கப்பூர்த் தமிழ்ப் படைப்புலகம் இன்று தன் தலைமகனை இழந்து நிற்கின்றது. சிங்கப்பூர்ப் படைப்பாளிகள் தங்களின் மூத்த படைப்பாளிகளுள் ஒருவரை இழந்து பெருந்துயர் சுமந்து நிற்கின்றனர். இலக்கிய வானில் ஒரு விடிவெள்ளியாய் மா. அன்பழகனாரின் புகழ் நிலைபெற்றிருக்கும். 

    புதுமைத்தேனீ மா. அன்பழகனாரின் வாழ்வியலை இந்நேரத்தில் நினைவுகூர்கின்றேன். 

    மா. அன்பழகன் அவர்கள் நாகை மாவட்டம் வேதாரண்யம் வட்டம் ஆயக்காரன்புலம் என்னும் ஊரில் வாழ்ந்த திருவாளர்கள் மாசிலாமணி, செல்லம்மாள் ஆகியோரின் பதின்பிள்ளைகளுள் ஏழாவது பிள்ளையாகப் பிறந்தவர். பிறந்த ஊரில் பள்ளிப்படிப்பும், அதிராம்பட்டினம், கும்பகோணம், சென்னையில் மருத்துவக்கல்லூரியில் படித்திருந்தாலும் இவர்தம் பட்டப்படிப்பு முற்றுப்பெறாமல் போனது

    1971 ஆம் ஆண்டு மக்கள்திலகம் எம்.ஜி.ஆர் அவர்களின் முன்னிலையில் திருமணம் செய்துகொண்டவர். இவரின் இல்லறத் துணைவியார் திருவாட்டி திலகவதியார் ஆவார். இவர்களின் இல்லறப் பயனாகச் செல்வம், இராமையா என்னும் ஆண்மக்களைப் பெற்றனர். இயக்குநர் கே.பாலசந்தர் அவர்களிடம் பதினைந்து படங்களுக்கு மேல் துணை இயக்குநராகப் பணிபுரிந்த பெருமைக்குரியவர். பாத பூஜை, புது செருப்பு கடிக்கும் உள்ளிட்ட படங்களைத் தயாரித்தவர்

    மாண்புமிகு தமிழக முதல்வராக விளங்கிய ஜெ. ஜெயலலிதா அவர்கள் திரைத்துறையில் புகழுடன் விளங்கிய சூழலில் அவரை நாயகியாக வைத்துக் குறும்புக்காரி எனும் படத்தைத் தயாரித்து, பாதியிலேயே படத்தை நிறுத்தவேண்டிய சூழ்நிலை அக்காலத்தில் ஏற்பட்டுவிட்டது. எனினும் புரட்சித் தலைவி அவர்கள் தம் நூறாவது பட விழாவின்போது, படமெடுத்துக்கொண்டிருக்கும் தயாரிப்பாளர்களில் ஒருவர் என்கிற முறையில் நினைவுப் பரிசு வழங்கி இவரைப் பாராட்டியுள்ளார்

    1994 ஆம் ஆண்டு முதல் சிங்கப்பூரில் தங்கி வணிகம் செய்யத் தொடங்கினார். பின்னாளில் முழுநேர இலக்கியப்பணியாற்றியவர். 

    கவிமாலை என்னும் இலக்கிய அமைப்பின் வழியாகச் சிங்கப்பூரில் தமிழ் இலக்கியத்திற்கும், தமிழ்க்கலைக்கும் தொண்டாற்றியவர்

    மா.அன்பழகன் அவ்வர்களின் கவிதை ஈடுபாட்டை அறிந்த உவமைக்கவிஞர் சுரதா அவர்கள் இவருக்கு 1990 இல் கிருட்டினகிரியில் நடைபெற்ற  உலகக் கவிஞர் மன்றத்தின் சார்பில் இவருக்குக்  "கவிமாமணி" பட்டம் வழங்கிச்  சிறப்பித்தார்

    மா.அன்பழகன் அவர்களின் நூல்கள் சென்னைப் பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம் ஆகியவற்றிலும் தமிழகத்தின் பல்வேறு கல்லூரிகளிலும் பாட நூல்களாக வைக்கப்பட்டுள்ளன. இவர்தம் படைப்புகளை ஆய்ந்து பலர் பட்டம்பெற்றுள்ளனர்

    இவர் எதனையும் புதுமையாகவும் மக்கள் ஏற்கும் வண்ணமும் செய்வதால் இவருடைய 60 ஆம் ஆண்டின் நிறைவு   விழாவின்போது "புதுமைத்தேனீ" என அன்போடு அழைக்கப்பட்டார். அதுவே அவருடைய செயற்பாட்டால் இன்றும் நிலைத்து நிற்கிறது. வாழ்வில் நேர்மையையும் சிந்தனையில் புதுமையையும், செயலில் உண்மையான உழைப்பையும், கொண்டவர். மக்களுக்குப் பயன்படும் பொதுநலச் சேவையும், அன்பான மனித நேயப் பண்புகளும் இவருடைய இனிய குணங்கள்

 மா. அன்பழகன் அவர்களின் தமிழ்க்கொடை

1.       சமுதாயச் சந்தையிலே.... .....கட்டுரை - 1985

2.       அலைதரும் காற்று..............கவிதை

3.       ஜூனியர் பொன்னி.............புதினம்

4.       மடிமீது விளையாடி..............புதினம்

5.       இதில் என்ன தப்பு...............திரைக்கதை வடிவம்

6.       அந்தப் பார்வையில்...............புதினம் - 1987

7.       பழமும் பிஞ்சும்.....................சிறுவர் இலக்கியம்                                                     

8.       ஒன்றில் ஒன்று.....................கவிதை(ஆங்கில மொழிமாற்றத்துடன் ) 2003

9.       இப்படிக்கு நான் ...................படச்சுவடி

10.   விடியல் விளக்குகள்............. சிறுகதைகள் 2005

11.   உடன்படுசொல் ....................மேடைப் பேச்சு 2006

12.   இன்னும் கேட்கிற சத்தம்       பதிவு(உரை வீச்சு) 2007

13.   ஆயபுலம் ............................புதினம் 2009

14.   என்பா நூறு .......................வெண்பா

15. BUBBLES OF FEELINGs...சிறுகதைகள்

16.   திரையலையில் ஓர் இலை .......கட்டுரை

17.   என் வானம் நான் மேகம் ........சிறுகதைகள் 2010

18.   BEYOND THE REALM..........சிறுகதைகள் 2011

19.   கவித்தொகை ........................கவிதை – 2012

20. எர்கு திரைப்படத்திற்கான கதை

21. ERHU – Story Translation

22. பாதிப்பில் பிறந்த பாடல்கள்

23. புதுமைத்தேனீ சிறுகதைகள்

24. வாய்க்கால் வழியோடி – மேடைப்பேச்சுகள்

25. ஆயிழையில் தாலாட்டு அளித்த அணிந்துரைகள்

26. கூவி அழைக்குது காகம்....மாணவர் கடித இலக்கியம்தொகுதி 1

27.   கூவி அழைக்குது காகம்....மாணவர் கடித இலக்கியம் - தொகுதி 2

28. கூவி அழைக்குது காகம்....மாணவர் கடித இலக்கியம்  - தொகுதி 3

29. காதல் இசைபட வாழ்தல் – புதினம்

30. அடுத்த வீட்டு ஆலங்காற்று - கவிதை

31. அன்புக்கு அழகு 75 பவளவிழா மலர்

32. சிங்கப்பூர் சொல்வெட்டு 555 வரலாற்று விருத்தப்பா

33. டுரியானுள் பலாச்சுளை - சிறுகதைகள்

34. கூவி அழைக்குது காகம்....மாணவர் கடித இலக்கியம்தொகுதி 4

35. மேகம் மேயும் வீதிகள் – கவிதைகள்

36. ஐம்பதிலும் வாழ்க்கை வரும் – தன்முனைப்புக் கட்டுரைகள்

37. செம்பியன் திருமேனி - சரித்திரப் புனைவுப் புதினம் 

 

மா. அன்பழகனாருடன் மு.இளங்கோவன், பேராசிரியர் சுப. திண்ணப்பன், அண்ணன் ஹனிபா, சிங்கப்பூர் முன்னை நாடாளுமன்ற உறுப்பினர் திரு. தினகரன் (விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் வெளியீடு - (கோப்புப் படம்)


 

செவ்வாய், 24 மார்ச், 2026

பாடிப் பழகுவோம் – தமிழிசைப் பயிலரங்கம்

 

நிறுவன இயக்குநர் முனைவர் சசிகாந்த தாஸ் அவர்கள், முனைவர் தி. பாலச்சந்தர் ஓதுவார் அவர்களைச் சிறப்பித்தல். அருகில் முனைவர் அரிமளம் சு. பத்மநாபன், முனைவர் கா. இராசமாணிக்கம், முனைவர் மு.இளங்கோவன்
 

புதுச்சேரி, இலாசுப்பேட்டையில் அமைந்துள்ள காஞ்சி மாமுனிவர் அரசு பட்டமேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் அமைந்துள்ள தமிழ்த்துறையின் சார்பில் 18.03.2026 – 19.03.2026 ஆகிய இரண்டு நாள்களும் பாடிப் பழகுவோம்தமிழிசைப் பயிலரங்கம் நடைபெற்றது. 

நிறுவன இயக்குநர் பேராசிரியர் சசிகாந்த தாஸ் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் மு. இளங்கோவன் அனைவரையும் வரவேற்று, தமிழிசைப் பயிலரங்கத்தின் நோக்கத்தினை எடுத்துரைத்தார். சிலப்பதிகாரப் பதிகப் பகுதிக்கு அடியார்க்குநல்லார் வரைந்துள்ள உரைப்பகுதியில் பண்டைத் தமிழிசையின் இலக்கணப் பகுதிகள் விளக்கப்பட்டுள்ளதைத் தம் நோக்கவுரையில் நினைவுகூர்ந்தார். இப்பதிகவுரையைக் கற்றுத் தேர்ந்து, அறிஞர் வீ.ப.கா.சுந்தரம் தம் இசையாய்வை மேற்கொண்டதை அரகில் நினைவுகூர்ந்தார். 


முனைவர் அரிமளம் சு.பத்மநாபன் உரை

 இசையறிஞர் அரிமளம் சு. பத்மநாபன் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, தமிழிசை வரலாற்றினையும், சிறப்பினையும் எடுத்துரைத்து அரியதொரு இசைப் பேருரை வழங்கினார். இவர் உரையில் தொல்காப்பியம் சங்க இலக்கியம், சிலப்பதிகாரம், காரைக்கால் அம்மையார் பாடல்கள், திருமுறைகள், ஆழ்வார் பாசுரங்கள், சித்தர் பாடல்கள், சிற்றிலக்கியங்கள், பல்சமயப் பாடல்களில் மிகுதியாகக் காணப்படும் இசைப்பகுதிகளைச் சான்றுகளுடன் விளக்கினார். தமிழிசை மூவர் அளித்துள்ள தமிழிசைப் பங்களிப்புகளையும் எடுத்துரைத்துப் பேசினார். தொடக்க விழாவின் நிறைவில் முனைவர் மா. சுஜாதா நன்றியுரை வழங்கினார்.



பாடிப் பழகுவோம் – தமிழிசைப் பயிலரங்கின் முதல் சிறப்பு அமர்வில் கலைமாமணி கா. இராசமாணிக்கம் குழுவினர்  பாரதியார், பாரதிதாசன், புதுவைச் சிவம், வாணிதாசன், பெருஞ்சித்திரனார், தமிழ் ஒளி, தங்கப்பா பாடல்களையும் பல்சமயப் பாடல்களையும் பாடி மாணவர்களுக்கு இசைத்தமிழின் சிறப்பினைப் புரியவைத்தனர். வயலின் கலைஞர் சீனிவாசன் அவர்களும், நாமுழவுக் கலைஞர் அழகு. இராமசாமி அவர்களும், தண்ணுமைக் கலைஞர் பரத் அவர்களும் மிகச் சிறந்த இணையிசையை வழங்கினர்.

 

முனைவர் தி.பாலச்சந்தர் ஓதுவார்

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் இசைத்துறைத் தேவாரப் பேராசிரியர் குமாரவயலூர் தி. பாலச்சந்தர் ஓதுவார் திருமுறைகளில் காணப்படும் இசைச்சிறப்புகளைப் பண்முறையில் பாடி விளக்கினார். திருமுறைகளின் சிறப்புகளையும், அடியார்களின் இசைப்பணிகளையும் சமயப் பணிகளையும் மாணவர்களுக்கு எளிமையாக அறிமுகம் செய்துவைத்தார். பிற்பகல் அமர்வில் அரிமளம் சு. பத்மநாபன் அவர்கள் சிலப்பதிகாரத்தில் இடம்பெற்றுள்ள முக்கியத்துவம் வாய்ந்த இசைப்பகுதிகளைப் பாடி, விளக்கி உரையாற்றினார். மங்கல வாழ்த்து, கானல்வரி, கந்துக வரிப் பாடல்களைப் பாடி விளக்கியமை அரங்கினருக்கு இசைத்தமிழில் ஈடுபாட்டினை வரச் செய்ததது.

 

முனைவர் சிவகௌரி அவர்களின் உரை

இரண்டாம் நாள் நடைபெற்ற நிகழ்வில் முனைவர் சிவகௌரி கிரிஷ்குமார் அவர்கள் முதல் அமர்வில் சங்கப் பாடல்கள், காரைக்கால் அம்மையார் பாடல்கள், திருப்புகழ்ப் பாடல்களைப் பாடியும் விளக்கியும் தம் இசைப் பேருரையைச் சிறப்பாக அமைத்தார்கள்.

 

ப.தி. சேஷாத்ரி உரை

சென்னையச் சேர்ந்த திரு. ப. தி. சேஷாத்ரி அவர்கள் ஆழ்வார் பாசுரங்களின் சிறப்புகளை எடுத்துரைத்தும் அதில் பொதிந்திருக்கும் இசைப் பெருமைகளைப் பண்மரபில் பாடிக் காட்டியும் மாணவர்கள் உள்ளத்தில் பாசுரத் தமிழைப் பதியவைத்தார்.


பறையிசைக் கலைஞர் பிரசாந்த் குழுவினர்

பறையிசைக் கலைஞர் பிரசாந்த் அவர்கள் தம் குழுவினருடன் பறையிசையை முழக்கி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். 

முனைவர் சித்தன் செயமூர்த்தி உரை

முனைவர் சித்தன் செயமூர்த்தி அவர்கள் மண்ணிசை மாண்பினை எடுத்துரைத்து மக்கள் வாழ்வில் உணர்வு ததும்பும் பாடல்கள் ஏற்படுத்தும் மாற்றங்களைப் பாடிக்காட்டி விளக்கினார். செயமூர்த்தி அவர்கள் பனை மரம் குறித்த செயபாஸ்கரன் எழுதிய பாடலையும் பெருஞ்சித்திரனார் பாடல்களையும், அப்பா, அம்மா குறித்துத் தற்காலக் கவிஞர்கள் எழுதியுள்ள பாடல்களையும் அரங்கில் பாட, அனைவரும் ஆர்வமுடன் கேட்டனர். சில திரைப்படப் பாடல்களையும் பாடி, மாணவர்கள் உள்ளத்தில் செயமூர்த்தி இடம்பிடித்தார்.

 

முனைவர் இரகுநாத் மனே உரை

முனைவர் சசிகாந்த தாஸ் அவர்கள் சான்றிதழ் வழங்குதல். அருகில் முனைவர் சோ. சீனிவாசன், முனைவர் இரகுநாத் மனே.

பிரான்சிலிருந்து வருகைபுரிந்த செவாலியே, முனைவர் இரகுநாத் மனே இசை, பரதக் கலை மாண்புகள் குறித்த சிறப்புரையை வழங்கினார். நிறைவு விழாவில் நிறுவன இயக்குநர் முனைவர் சசிகாந்த தாஸ், அம்பேத்கர் சட்டக்கல்லூரியின் முன்னை முதல்வர் முனைவர் சோ. சீனிவாசன் ஆகியோர் கலந்துகொண்டு, பயிலரங்கில் கலந்துகொண்டவர்களுக்குச் சான்றிதழ் வழங்கிப் பாராட்டிப் பேசினர். இந்த நிகழ்வில் பல்வேறு துறைகளைச் சார்ந்த பேராசிரியர்கள், மாணவர்கள், பிற கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள், பேராசிரியர்கள், புதுவைத் தமிழறிஞர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.

 


செவ்வாய், 17 மார்ச், 2026

கலைமாமணி முனைவர் கா. இராசமாணிக்கம்

 

முனைவர் கா. இராசமாணிக்கம் 

[முனைவர் கா. இராசமாணிக்கம் புதுச்சேரியில் வாழ்ந்துவரும் இசை, நாட்டிய அறிஞர் ஆவார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முறையாக வாய்ப்பாட்டினைப் பயின்றவர். இளங்கலை – நாட்டியம் பயின்றவர். நாட்டியத்திற்கான தமிழ் உருப்படிகளில் இசை அமைதி என்னும் தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர். இலக்கியங்களை நாட்டிய வடிவில் வழங்கிப் புகழ்பெற்றவர். பல்லாயிரம் மாணவர்களுக்கு இசை, நாட்டியம் பயிற்றுவித்து வருபவர்.] 

கா. இராசமாணிக்கம் அவர்கள் 19. 07. 1963 இல் புதுச்சேரியில் உளைவாய்க்கால் என்னும் ஊரில் பிறந்தவர். பெற்றோர் பெயர் காத்தவராயன் – பச்சையம்மாள் என்பனவாகும். வில்லியனூர் விவேகானந்தா பள்ளியில் இளமைக் கல்வியை நிறைவு செய்தபின்னர். முத்தரையர்பாளையம் பள்ளியில் பள்ளியிறுதி வகுப்பினைப் பயின்றவர். 

முனைவர் கா. இராசமாணிக்கம் அவர்கள் இசைத்துறையிலும் நாட்டியத்துறையிலும் பேரறிவுபெற்ற பெருந்தகையாளர். இவரும் இவரின் குடும்பத்தாரும் இசைத்துறைக்கும் நாட்டியத்துறைக்கும் ஆற்றிவரும் பங்கு சிறப்பிற்குரியனவாகும். முனைவர் கா. இராசமாணிக்கம் அவர்கள் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இசை மாமணி என்னும் பட்ட வகுப்பில் நான்கு ஆண்டுகள் பயின்று வாய்ப்பாட்டில் புலமைபெற்றவர். கலைக்காவிரி இசைக்கல்லூரியில் பயின்று நாட்டியத்தில் இளங்கலைப் பட்டமும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயின்று இசையில் முதுகலைப் பட்டமும் பெற்றவர். நாட்டியத்திற்கான தமிழ் உருப்படிகளில் இசை அமைதி என்னும் பொருளில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டு, பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் வழியாக முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த முப்பத்தைந்து ஆண்டுகளாக மேடைகளில் பாடிவரும் இவர், தஞ்சாவூர் கே. பி. கிட்டப்பா பிள்ளை அவர்களிடம் நாட்டியம் பயின்ற சீடர் ஆவார். 

1992 ஆம் ஆண்டு முதல் சங்கீத சலங்கை நாட்டியாலயா – கலையருவி என்னும் இசை நாட்டியப் பள்ளியை நடத்திப் பல்லாயிரம் மாணவர்களுக்கு, இசை நாட்டியத்தைப் பயிற்றுவித்து வருபவர். ஆதித்யா வித்யாசரமம் பள்ளியில் கடந்த இருபது ஆண்டுகளாக இசைத்துறை இயக்குநராக இருந்து பல மாணவர்களுக்கு இசையைப் பயிற்றுவித்து வருபவர். மாணவர்கள் நாட்டியக்கலையையும்  இவரிடம் பயின்று வருகின்றனர். 

கா. இராசமாணிக்கம் பாடிய ஒலிவட்டுகள் 

  1. இது நல்ல தருணம்
  2. மணல்மேட்டு மழலைகள்
  3. நாட்டியப் பாடல்கள்
  4. பாரதியார் பாரதிதாசன் பாடல்கள் 

நாட்டியப்பணி 

  1. அருங்கலைச்செல்வி ஆயி
  2. வளம் காண வாருங்கள்
  3. நிலமகள் நலம் காப்பாள்
  4. இராமாயணம்(சீதா கல்யாணம்)
  5. வீரத்தாய் (பாரதிதாசன்)
  6. மகுடத்தின் மணிகள்
  7. ஒரு காற்சிலம்பு நியாயம் கேட்கிறது.
  8. பாரதி போற்றுதும்
  9. புரட்சிக்கவி
  10. கொடி முல்லை(வாணிதாசன்) 

ஆவணப்படங்களில் பாடியமை 

  1. பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார் ஆவணப்படம்
  2. விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் 

அயல்நாட்டுப் பயணம் 

பிரான்சு, செர்மனி, சுவிசர்லாந்து, டென்மார்க்கு, மலேசியா, ரியூனியன், கம்போடியா முதலான நாடுகளுக்குச் சென்று வந்துள்ளார். 

சங்கீத நாடக அகாதெமி, தென்னகப் பண்பாட்டு மையம் முதலிய நிறுவனங்களில் உறுப்பினராக இருந்து கலைத்தொண்டு செய்துள்ளார். 

இல்வாழ்க்கை 

கா. இராசமாணிக்கம் அவர்கள் இராஜேஸ்வரி அவர்களை 1989 இல் திருமணம் செய்துகொண்டவர். இவரும் மிகச்சிறந்த வாய்ப்பாட்டுக் கலைஞர் ஆவார். இவர்களுக்கு இராஜ்குமார், இரஞ்சனி என்னும் மக்கள் செல்வங்கள் வாய்த்தனர். அனைவரும் இசைக்கலையை முறைப்படி பயின்று, பரப்பி வருகின்றனர். இக் கலைக்குடும்பம் தமிழ்போல் தழைத்து இனிது புகழ்பெறுக.

ஞாயிறு, 8 மார்ச், 2026

தொல்காப்பிய ஆய்வறிஞர் சந்திரா கிருட்டிணன்

 

பேராசிரியர் சந்திரா கிருட்டிணன்

[முனைவர் சந்திரா கிருட்டிணன் அவர்கள் திருவனந்தபுரத்தில் பிறந்தவர். கோவை பேரூர் சாந்தலிங்க அடிகளார் தமிழ்க் கல்லூரியில் தமிழ் பயின்றவர். பேராசிரியராக 31 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். தொல்காப்பியம் குறித்த ஆய்வினை நிறைவுசெய்து முனைவர் பட்டம் பெற்றவர். தொல்காப்பியப் பொருளதிகாரத்தை அருணா ரகுராமன் அவர்களுடன் இணைந்து மொழிபெயர்த்து வெளியிட்டு வருபவர். பன்னூலாசிரியர். பேராசிரியர் சென்னியப்பனார் அவர்களிடம் தமிழ் கற்ற பெருமைக்குரியவர்] 

    கோவை மாநகரில் வாழ்ந்துவரும் பேராசிரியர் சந்திரா கிருட்டிணன் அவர்கள் தொல்காப்பிய ஆய்வு உள்ளமும் தமிழ் நூல்களில் ஆழ்ந்த பயிற்சியும் கொண்ட பெருந்தகையாளர் ஆவார். மாணவர்களின் உள்ளங்கவர்ந்த பேராசிரியரான இவர்தம் ஆய்வுப்புலம் தொல்காப்பியம் சார்ந்தது ஆகும்.  31 ஆண்டுகள் கல்லூரிப் பேராசிரியராகப் பணியாற்றிய பட்டறிவு உடையவர். தொல்காப்பியச் செய்திகளை ஆய்வுகள் வழியாகவும் மொழிபெயர்ப்புகள் வழியாகவும் நாடக வடிவிலும் மக்களிடம் கொண்டுசேர்க்கும் பெரும்பணியை விருப்பமுடன் செய்து வருபவர். பேராசிரியர் சந்திரா கிருட்டிணன் அவர்களின் வாழ்வியலையும் தமிழ்ப்பணிகளையும் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்கின்றேன். 

    சந்திரா கிருட்டிணன் அவர்கள் திருவனந்தபுரம்  ஊரில் வாழ்ந்த அ. சிவதாணு பிள்ளை - சீ மீனாட்சி ஆகியோரின் மகளாக 27. 07. 1960 இல் பிறந்தவர். தாத்தா வாத்தியார் அம்பலவாணர் பிள்ளை ஆச்சி வள்ளியம்மாள் ஆகியோரின் வளர்ப்பில் வளர்ந்தவர். 1 முதல் 5 வகுப்பு வரை கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கணபதி புரம்,  அரசு தொடக்கப் பள்ளியில் பயின்றவர். 6 முதல் 9 ஆம் வகுப்பு வரை கணபதிபுரம் அ. வி தே. உயர்நிலைப்பள்ளியில் பயின்றவர். பத்தாம் வகுப்பினை விழுப்புரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயின்றவர். 11 ஆம் வகுப்பினைச் சத்தியமங்கலம்  . ஜான் டி பிரிட்டோ உயர்நிலைப்பள்ளியில் பயின்றவர். இலக்கிய இளவல் (பி.லிட்), முதுகலை, இளம் முனைவர், முனைவர் பட்ட ஆய்வுகளைப் பேரூர் சாந்தலிங்க அடிகளார் தமிழ்க் கல்லூரியில் பயின்றவர். கல்வியியல் இளையர், நூலகவியல் இளையர் பட்டங்களை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அஞ்சல் வழியில் பயின்று பெற்றவர். 

    சந்திரா கிருட்டிணன் அவர்களின் முனைவர் பட்ட ஆய்வுத் தலைப்பு தொல்காப்பியம் செய்யுளியலும் யாப்பருங்கல விருத்தியும் ஒப்பாய்வு என்பதாகும்.இவர்தம் நெறியாளர் முனைவர் உமாபதி ஆவார். 

    1976 இல் முதலாம் ஆண்டு படிக்கின்ற பொழுது விஞ்ஞானச் சுடரில் முதல் கட்டுரை வெளிவந்தது. செந்தமிழ்ச் செல்வி, சித்தாந்தம், செங்கரும்பு, தமிழ்நேயம், பூம்புனல் முதலான இதழ்களிலும் தொடர்ந்து எழுதி வருபவர். சமயத்தமிழ் இதழில் 7 ஆண்டுகளாகக் கட்டுரை எழுதி வருகிறார். எழுத்துலகப் பயணத்தில் இது 50 ஆவது ஆண்டு ஆகும். 

    நெதர்லாந்து சூரியத் தமிழ் தொலைக்காட்சியில் தொல்காப்பியத்தைத் தொடர்ந்து இணையம் வழியாக நடத்தித், தேர்வு வைத்துத்  தொல்காப்பியத் தேனீ என்ற பட்டம் வழங்கிய இவர்தம் தொல்காப்பியப் பணி போற்றுதலுக்கு உரியது. 

பணியனுபவம்: 

    சந்திரா கிருட்டிணன் அவர்கள் 1989 முதல் 1993 வரை இமாகுலேட் மெட்ரிக் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றியவர். 1993 முதல் 1995 வரை சபர்பன் மெட்ரிக் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றியவர். 1995 முதல் 96 வரை நிர்மலா கல்லூரியின் சுயநிதிப் பிரிவில் விரிவுரையாளராகப் பணியாற்றியவர். 1996 முதல் 2007 வரை வி. எல். பி. கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றியவர். 2008 முதல் 2009 வரை திருப்பூர் எல்.ஆர்.ஜி. கல்லூரியில் பணியாற்றியவர். 2009 முதல் 2019 வரை கோவை அரசு கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். 

இல்வாழ்க்கை: 

    சந்திரா கிருட்டிணன் அவர்கள் 05. 11. 1984 இல் பொறியாளர் க. ச. பாலகிருட்டிணன் அவர்களை இல்வாழ்க்கைத் துணையாக ஏற்றவர். இவர்களுக்கு இரண்டு மக்கள் செல்வங்கள் வாய்த்தனர். 

எழுதியுள்ள நூல்கள்:

1. கதிர் நோக்கும் கவின் மலர்

2. நகை என்னும் மெய்ப்பாடு

3. பன்முகப் பார்வைகள்

4. அனிதா கிருஷ்ணமூர்த்தி (கட்டுரை ஆசிரியர் வரிசை)

5. கவிஞர் செல்வமணி (கவிஞர் வரிசை)

6. நலம் தரும் நந்தி

7. சுகம் தரும் சுகப்பிரம்மர்

8. தமிழர் பண்பாட்டில் கொழுக்கட்டை

9. நிலை (புதினம்)

10. தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல்

11. தொல்காப்பியம் உவமை இயல்

13. அருணோதயம் (புதினம்) 

ஆங்கில நூல்கள்: 

அமெரிக்காவில் வாழ்ந்துவரும் திருமதி அருணா ரகுராமன் அவர்களுடன் இணைந்து ஆங்கிலத்தில் எழுதியவை: 

1. தொல்காப்பியம்  - அகத்திணை இயல்

2. புறத்திணை இயல்

3. களவியல்

4. கற்பியல்

5. உவமவியல்

6. மெய்ப்பாட்டியல்

7. பொருளியல்

8. செய்யுளியல்

9. மரபியல் 

சமூகப் பணி: 

1.   நாட்டு நலப்பணித்திட்டச் செயல் அலுவலர்

2.   செஞ்சுருள் மன்ற அலுவலர்

3.   செஞ்சிலுவைச் சங்க அலுவலர்

4.   கோவை மாவட்ட பேரிடர் பயிற்சி அலுவலர் (ஓராண்டு) 

தொகுப்பாசிரியர்: 

1. தாவரக் களஞ்சியம்

2. கொங்கு நாட்டு மலைகள்

3. பேரூர் சாந்தலிங்க இராமசாமி அடிகளார் நூற்றாண்டு உரைக்கோவை

(ஞாலம் நின் புகழே பேச வேண்டும்) 

பாடப் பகுதியாக வந்தவை:

1.   மாசுக் கட்டுப்பாடு.  கட்டுரை,  பாரதியார் பல்கலைக்கழகம்

2.   கதிர் நோக்கும் கவின் மலர்

கோழிக்கோடு பல்கலைக்கழகம் மற்றும் பல தன்னாட்சிக் கல்லூரிகளில் பாடப் பகுதி

 3. சிறுகதை தொகுப்பில் வந்த சிறுகதை (பெரியார் பல்கலைக்கழகம் மற்றும் பல தன்னாட்சிக் கல்லூரிகளில்      பாடப் பகுதியாக உள்ளது)

4. அருணோதயம் புதினம் வி எல் பி கல்லூரியில் பாடப் பகுதியாக   வைக்கப்பட்டுள்ளது

5.  பாரதியார் பல்கலைக்கழகம், முதுகலைத் திறந்தவெளிப் பட்டப் படிப்பு மாணவர்களுக்குச் சைவசித்தாந்தம் என்னும் பாடத்தினை இருவர் இணைந்து எழுதியுள்ளனர். 

உரையாசிரியர்: 

1.   கந்தசாமி சுவாமிகள் எழுதிய அன்னூர் தல புராணம். 

    கோவை செம்மொழி மாநாட்டில் பண்ணத்தி குறித்து கட்டுரை வழங்கி அனைவரின் பாராட்டையும் பெற்றவர். பணிநிறைவுக்குப் பிறகு தொடர்ந்து தமிழ் ஆய்வுப்பணிகளிலும் மொழிபெயர்ப்புப் பணிகளிலும் ஈடுபட்டு வருபவர்.






 

வியாழன், 5 மார்ச், 2026

பேராசிரியர் சு. திருஞானம்

 

பேராசிரியர் சு. திருஞானம் 

 [திருச்சிராப்பள்ளியில் வாழ்ந்துவரும் பேராசிரியர் சு. திருஞானம் அவர்கள் இயற்பியல் பேராசிரியர் ஆவார். முசிரியில் அமைந்துள்ள அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் முதல்வராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். மிகச் சிறந்த சித்தமருத்துவ அறிஞர்; வர்மக்கலை அறிந்தவர்; இசையாய்வாளர். மூலிகை மருத்துவம் குறித்துப் பல நூல்களை எழுதியவர். அறிஞர் வீ. ப. கா. சுந்தரம் அவர்களின் தாள முழக்கியல் என்னும் நூலைப் பதிப்பித்து வெளியிட்ட பெருமைக்குரியவர்.] 

திருச்சிராப்பள்ளியில் யான் முனைவர் பட்ட ஆய்வினை நிகழ்த்தியபொழுதில் (1993-1997) எனக்கு அறிமுகமானவர் பேராசிரியர் சு. திருஞானம் ஆவார். கொடுங்கூர் வறுமைப்பிடியில் நான் சிக்கியிருந்து, ஆய்வேடு எழுதப்பெற்றும் அதனைத் தட்டச்சிட்டு வழங்க இயலாமல் தத்தளித்தபொழுது என் ஆய்வேட்டை வடிவமைத்து, அச்சிட்டு அந்நாளில் தந்த பெருமை பேராசிரியர் சு. திருஞானம் ஐயாவுக்கும் அவர்களின் அருமைத் திருமகளார் தி. மதியரசி அவர்களுக்கும் உரியதாகும். 

நான் பாரதிதாசன் பல்கலைக்கழகத்துக்கு ஆய்வேடு அளித்து முனைவர் பட்டம் பெற்ற பிறகு, ஒராண்டு இடைவெளியில் பத்துத் திங்கள் இசையறிஞர் வீ. ப. கா. சுந்தரம் அவர்களின் உதவியாளனாகப் பணியாற்றிக் கொண்டிருந்தேன். அப்பொழுது திருச்சிராப்பள்ளி, கலைஞர் கருணாநிதி நகரில் இசையறிஞர் வீ. ப. கா. சுந்தரம் அவர்களின் சிறப்புப் பொழிவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அவ்வேற்பாட்டைச் செய்தவர் பேராசிரியர் சு. திருஞானம் ஆவார். 

வீ. ப. கா. சுந்தரம் அவர்களின் இசையாய்வு சார்ந்த உரையால் அமையும் அக்கூட்டத்திற்குத் தலைமை தாங்குவது யார்? என்று நினைந்தபொழுது தமிழ்த்தந்தி சிவலிங்கனார் அவர்கள் தலைமை தாங்கியதாக நினைவு வருகின்றது. திருச்சிராப்பள்ளி சார்ந்த அறிஞர்கள் பலர் அவ்வுரை கேட்க வந்திருந்தனர். நானும் அந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரைகேட்டேன். அப்பொழுதுதான் இயற்பியல் பேராசிரியராகிய சு. திருஞானம் அவர்களின் இசைத்துறைப் புலமையை அறிந்தேன். அவர்களுக்கு இசையின் மீது இருந்த ஈடுபாட்டால்தான் வீ. ப. கா. சுந்தரத்தின்  பழந்தமிழ் இலக்கியத்தில் தாள முழக்கியல்(1995) என்னும் நூலை வெளியிட்டிருந்தார்கள். ஒலியியல் துறையில் வல்லுநர் என்பதால் திருஞானம் ஐயாவுக்கு இசை குறித்த மிகச் சிறந்த ஆராய்ச்சி அறிவு இருந்ததை அன்பர்கள் வழியாக அறிந்துகொண்டேன். 

பேராசிரியர் திருஞானம் ஐயா அவர்கள் சித்த மருத்துவத்தில் வல்லவர் என்பதும், தம் பேராசிரியர் நண்பர்களுக்கும் பிற பொதுமக்களுக்கும் சித்தர் வழியில் மருந்துகளை உருவாக்கி, நோய்நீக்கும் பணியைச் செய்து வருவதையும் அவரிடம் மருந்து வாங்கி உண்டு, நலம்பெற்றவர்களையும் நான் நன்கு அறிவேன். 

காலச்சக்கரம் பலவாண்டுகள் உருண்டுகொண்டிருந்தது. யானும் பணியின் பொருட்டுப் பல ஊர்களில் வாழ நேர்ந்தது. எனினும் திருச்சிராப்பள்ளி அன்பர்கள் யாரையேனும் காண நேர்ந்தால் திருஞானம் ஐயாவின் நலம் வினவுவதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். அதுபோல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் இசைத்துறைத் தலைவராக விளங்கும் பேராசிரியர் தி. அருட்செல்வி அவர்களைக் காணும்பொழுதும் தந்தையாரின் நலம் கேட்டு, மனம் நிறைவடைவேன். 

மு.இளங்கோவன், சு. திருஞானம், செ.குணாளன்(மலேசியா)

அண்மையில் திருச்சிராப்பள்ளிக்குத் தமிழகன் ஐயாவின் நூல் வெளியீட்டு விழாவுக்குச் செல்லும் வாய்ப்பு அமைந்தபொழுது பேராசிரியர் சு. திருஞானம் ஐயா அவர்களை நேரில் கண்டு, நலம் அறிந்து மகிழ்ந்தேன். அவர்களின் சித்த மருத்துவப்பணி, தமிழ்ப்பணிகளை அறிந்து உவந்தேன். உலகத் தமிழர்களின் பார்வைக்கு நம் காலத்தில் வாழும் சித்த மருத்துவப் பேரறிஞர் ஒருவரின் தமிழ் வாழ்வை அறிமுகம் செய்துவைப்பதில் மகிழ்கின்றேன். 

பேராசிரியர் சு. திருஞானம் அவர்களின் அறிவுலக வாழ்க்கை: 

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு வட்டம் நாட்டரசன்கோட்டையில் வாழ்ந்த சு. அம்மாளு, மா. சுப்பையா ஆகியோரின் அன்புமகனாக 09.11.1942 இல் பேராசிரியர் சு. திருஞானம் அவர்கள் பிறந்தவர். ஈச்சங்கோட்டை அரசு தொடக்கப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை கல்வி பயின்றவர். அதன் பிறகு கோவிலூர் அரசு உயர்தொடக்கப்பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை கல்வி பயின்றவர். ஒன்பது முதல் பள்ளியிறுதி வகுப்பு வரை திருவையாறு சீனிவாசராவ் உயர்நிலைப் பள்ளியில் கல்வி பயின்றவர்(1955-58). மன்னர் சரபோஜி கல்லூரியில் புகுமுக வகுப்பு, இளம் அறிவியல் வகுப்பு - இயற்பியல் பிரிவில் பயின்றவர். முதுநிலை அறிவியல் படிப்பினைத் திருச்சிராப்பள்ளி, தூய வளனார் கல்லூரியில் பயின்றவர்(1963-1965). சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் இளம் முனைவர் (M.Phil.) படிப்பினைப் படித்து, நிறைவுசெய்தவர். இயற்கை மருத்துவம், சித்த மருத்துவம் சார்ந்த சான்றிதழ் மற்றும் பட்டயங்களையும் பெற்றவர். 

பேராசிரியர் பணி 

பேராசிரியர் சு. திருஞானம் அவர்கள் தஞ்சாவூர், திருபுட்பம் கல்லூரியில் 1965-66 இல் தம் பேராசிரியர் பணியைத் தொடங்கியவர். பின்னர்த் திருச்சிராப்பள்ளி, பெரியார் அரசு கலைக்கல்லூரி, மன்னார்குடி அரசு கலைக்கல்லூரி, கரூர், திருச்சிராப்பள்ளி, அரியலூர் முதலான ஊர்களில் அமைந்துள்ள அரசு கல்லூரிகளில் பணியாற்றி, நிறைவாக முசிரி அரசு கலைக்கல்லூரியில் முதல்வராக இருந்து ஓய்வுபெற்றவர்(1999-2001). தமிழகத்துக் கல்லூரிகளில் பணியாற்றிப் பல்லாயிரம் மாணவர்களுக்குப் பயிற்றுவித்த பெருமைக்குரியவர். 

1986 ஆம் ஆண்டு முதல் நான்கு ஆண்டுகள் பரம்பரை சித்த மருத்துவரிடம் முறையாகப் பயிற்சிபெற்று, இதுவரை தொடர்ந்து சித்த மருத்துவத்துறைக்குப் பங்களிப்பு நல்கிவருபவர். மருந்து செய்முறையிலும், நோய் நாடுவதிலும், நோய் முதல்நாடுவதிலும் அதுதணிக்கும் முறையினையும் நன்கு அறிந்த அறிஞர் இவர். 

இசைத்தமிழ் ஈடுபாடு 

1965 இல் ஆபிரகாம் பண்டிதரின் கருணாமிர்த சாகரம் நூலினைப் படித்து, ஆராய்ந்ததிலிருந்து பேராசிரியர் சு. திருஞானம் அவர்களுக்கு இசையில் மிகுந்த ஈடுபாடு ஏற்பட்டது. யாழ்நூல் உள்ளிட்ட இசையாய்வு நூல்களைப் பயின்று இசை நுட்பங்களை அறிவதற்குப் பொன்மலை ஜி.கே.கணேசன் என்ற இசையாசிரியரிடம் 1970 முதல் 1972 வரை முறையாக இசைப்பயிற்சி பெற்றவர். 

அனைத்து இந்திய வானொலி நிகழ்வுகளில் பங்குகொண்டு, ஒலி எவ்வாறு உண்டாகின்றது? எக்ஸ் கதிர்கள், லேசர் குறித்த பொருண்மைகளில்  உரையாற்றியுள்ளார். அதுபோல் தினம் ஒரு மூலிகை என்னும் தலைப்பிலும் பலநாள் வானொலியில் உரையாற்றியுள்ளார். 

மூலிகைப் பயன்பாடு, மூலிகைகளைக் காட்சிப்படுத்தல் என்ற வகையில் கல்லூரி மாணவர்கள், பள்ளி மாணவர்கள், பொதுமக்களுக்கு மூலிகை குறித்த விழிப்புணர்வு ஏற்படுதவற்குப் பல அமைப்புகளுடன் இணைந்து, மூலிகைக் கண்காட்சிகளை நடத்தியவர். 

இல்வாழ்க்கை: 

பேராசிரியர் சு. திருஞானம் அவர்கள் 1968 ஆம் ஆண்டு தி. செயலட்சுமி அவர்களை இல்வாழ்க்கைத் துணையாக ஏற்றவர். இவர்களுக்குத் தி. அருட்செல்வி, தி. மதியரசி, தி. அருண்மொழி, தி. அம்பலவாணர் முதலிய மக்கள் செல்வங்கள் வாய்த்தனர். 

பேராசிரியர் சு. திருஞானம் அவர்களின் தமிழ்க்கொடை: 

1.   இயற்பியல் துணைப்பாட நூல் (பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்காக)

2.   மூலிகை மருத்துவம் – தொகுதி 1 (1992)

3.   திருக்கோவில் மரங்களின் மருத்துவப் பயன்கள்(1998)

4.   Indian medicinal Plants and Home Remedies (2010)

5.   மூலிகை மருத்துவம் - தொகுதி 2  (2015) 

பேராசிரியர் சு. திருஞானம் அவர்களின் முயற்சியால் இசையறிஞர் வீ. ப. கா. சுந்தரம் அவர்களின் தாள முழக்கியல் என்ற அரிய நூல் வெளிவந்தமையும் போற்றுதலுக்கு உரியது. 

சித்த மருத்துவத்துறைக்கும், இசைத்துறைக்கும் தொண்டாற்றியுள்ள பேராசிரியர் சு. திருஞானம் அவர்களை அரசு அமைப்புகளும், தனியார் அமைப்புகளும் அழைத்துப் போற்றும் நாளே தமிழுக்கு ஆக்கமான நாளாக இருக்கும். 

இயற்பியல் அறிஞராகத் துலக்கம்பெற்று, சித்த மருத்துவ வல்லுநராக ஒளிவீசி, இசையாராய்ச்சியாளராக நிறைவாழ்வு வாழ்ந்துவரும் பேராசிரியர் சு. திருஞானம் அவர்கள் தமிழ் வாழும் காலம்வரை நிலைத்த புகழ்பெற்று வாழ நெஞ்சார வாழ்த்துகின்றேன்.