நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வியாழன், 29 மார்ச், 2012

பாரதிதாசன் பரம்பரை


பாரதிதாசன் பரம்பரை

  திருச்சிராப்பள்ளி, பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் 1993 முதல் 1996 வரை “இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்க்கவிதை: பாரதிதாசன் பரம்பரை விளக்கம் வரலாறு, மதிப்பீடு” என்னும் தலைப்பில் நிகழ்த்தப்பெற்ற முனைவர் பட்ட ஆய்வு பல்கலைக்கழகத்தின் இசைவுடன் 2001 இல் பாரதிதாசன் பரம்பரை என்ற தலைப்பில் நூல்வடிவம் பெற்றது. இந்த ஆய்வுக்குப் பேராசிரியர் முனைவர் மா.இராமலிங்கம்(எழில்முதல்வன்) அவர்கள் நெறியாளராக இருந்து நெறிப்படுத்தினார்.

  பாரதிதாசன் பரம்பரை என்ற இந்த நூல் முனைவர் பொற்கோ, முனைவர் இரா.இளவரசு, தமிழண்ணல் ஆகியோரின் அணிந்துரையுடன் வெளிவந்துள்ளது.

  1.இருபதாம் நூற்றாண்டில் தமிழ்க்கவிதைகள், 2. பாரதிதாசன் பரம்பரை தோற்றமும் வரலாறும், 3. பாரதிதாசன் பரம்பரையினர் அறிமுகம், 4.பாரதிதாசன் படைப்புகளுக்கும் பரம்பரையினர் படைப்புகளுக்கும் உள்ள ஒற்றுமைகளும் தனித்தன்மைகளும், 5. இருபதாம் நூற்றாண்டுக் கவிஞர்களிடம் பாரதிதாசனின் தாக்கம் என்னும் தலைப்புகளில் இயல்கள் பகுக்கப்பட்டுள்ளன.

  தமிழகத்தின் முன்னணிக் கவிஞர்களின் படைப்புகள், பணிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. நூற்று ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்களின் பட்டியல் ஆய்வுக்குப் பயன்பட்ட நூல்களின் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளன. இருபதாம் நூற்றாண்டு மரபுக்கவிதைகள் குறித்து அறிய விரும்புபவருக்கும் ஆராய விரும்புபவருக்கும் அரிய தகவல்களைத் தரும் களஞ்சியமாக இந்த நூல் விளங்குகின்றது.

வெளியீடு:

முகிலரசி வெளியீடு
31, கொல்லப்பாளையம்,
ஆர்க்காடு - 632 503, வேலூர் மாவட்டம்

பக்கம்: 248
விலை: 100 உருவா

புதன், 28 மார்ச், 2012

பழையன புகுதலும்


பழையன புகுதலும்

  நான் பல்வேறு கருத்தரங்குகளுக்கு எழுதிய கட்டுரைகள் பழையன புகுதலும் என்னும் தலைப்பில் தொகுக்கப்பட்டு நூல்வடிவம் கண்டுள்ளது(2002). அண்ணன் வே.இளங்கோ அவர்கள்(அடவி வரைகலை, சென்னை) இந்த நூலை உருவாக்கினார்கள். ஓவியர் புகழேந்தியின் அட்டைப்படம் நூலுக்கு அழகு சேர்த்துள்ளது. இந்த நூலை அச்சிடும்பொழுது நான் ஆர்க்காட்டில் தங்கியிருந்தேன். ஒரு பதிப்பாளரை நம்பி முன்தொகை அளித்து, நூலை அச்சிட வழங்கினேன். அவரோ பல முறை அலையவிட்டு மட்டமான தாளில் அச்சிட்டு வழங்கினார்.

 பதிப்புநிலையில் மிகச்சிறந்த நண்பர்கள் பலர் கிடைத்தனர். அவர்களுள் அண்ணன் வே.இளங்கோ அவர்கள் குறிப்பிடத்தக்கவர். இன்னொரு நண்பர் திரு.தேவநேயன் அவர்கள் சென்னையில் திரு. மறைமணி அவர்களை அறிமுகப்படுத்தினார். பின்னர் மறைமணி அவர்கள் சிங்கப்பூர் சென்ற பிறகு அவர் அலுவலகத்தில் பணிபுரிந்த அண்ணன் வே.இளங்கோ அவர்களின் நட்புகிடைத்தது.

 வே.இளங்கோ அவர்கள் கல்பாக்கம் வேம்பையன் ஐயா அவர்களின் திருமகனார் என்பது கூடுதல் சிறப்பு. இளங்கோ அவர்கள் பழகுதற்கினிய பண்பாளர். என் நூல் உருவாக்கத்திற்கு உதவிய அவர் பெற்றதைவிட, என்னிடம் இழந்ததே அதிகமாக இருக்கும். நிறைவில் உடன்பிறப்புகளாக வாழ்கின்றோம். இது நிற்க.

1. அயலகத் தமிழ்
2. பழையன புகுதலும் புதியன கழிதலும்
3. கன்னங்குடா உழுதொழிற்பள்ளு
4. சீட்டுக்கவி
5. டேப் கலைஞர் குடந்தை குருசாமிதாசு
6. பாப்பாத்தியம்மன் வழிபாடு
7. தெவம்
8. திருவள்ளுவரின் நட்பு
9. இலக்கணத்தைக் கற்பிக்க எளிய வழிகள்
10. தெருக்கூத்துக் கலைஞர் கலவை குமாரசாமி

என்னும் தலைப்புகளைக் கொண்ட கட்டுரைகள் இந்த நூலில் இடம்பெற்றுள்ளன.

வயல்வெளிப் பதிப்பகம்,
இடைக்கட்டு, உள்கோட்டை(அஞ்சல்)
கங்கைகொண்டசோழபுரம்(வழி),
உடையார்பாளையம் (வட்டம்),
அரியலூர் மாவட்டம்-612 901

பக்கம் 112
விலை 40

நாட்டுப்புறவியல்


நாட்டுப்புறவியல்

புதுவையில் கல்லூரிப் பணியேற்றபொழுது நாட்டுப்புறவியல் என்னும் பாடத்தை நடத்தும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அப்பொழுது நாட்டுப்புறவியல் குறித்த நூல்கள் இளங்கலை மாணவர்களின் உள்ளத்தில் பதியும்படி எளிமையாக இருந்தால் நல்லது என்று நினைத்தேன். அதற்காக இத்துறையின் முன்னோடி நூல்கள் பலவற்றை முன்மாதிரியாகக் கொண்டு நாட்டுப்புறவியல் என்ற தலைப்பில் ஒரு நூலை உருவாக்கினேன்.

முதல்பதிப்பு விற்று அடுத்தப் பதிப்பும் இந்த நூல் கண்டது. தமிழகத்தின் கல்லூரிகள் பலவற்றுள் இந்த நூல் பாடமாக உள்ளது. நாட்டுப்புறவியல் என்னும் தலைப்பில் அமைந்த இந்த நூலுக்கு என் பேராசிரியர் முனைவர் அ.அறிவுநம்பி அவர்கள் அணிந்துரை வழங்கியுள்ளார்.

நாட்டுப்புறவியல் என்னும் இந்த நூலில் 1. நாட்டுப்புறவியல் 2. தமிழ் இலக்கியங்களில் நாட்டுப்புற இலக்கியத்தின் செல்வாக்கு, 3. நாட்டுப்புறப் பாடல் பற்றிய அறிஞர்களின் விளக்கம்/ கருத்துகள், 4. கதைப்பாடல்கள் 5. நாட்டுப்புறவியலும் மானிடவியலும் என்னும் தலைப்புகளில் செய்திகள் இடம்பெற்றுள்ளன.

வயல்வெளிப் பதிப்பகம்,

இடைக்கட்டு, உள்கோட்டை(அஞ்சல்)
கங்கைகொண்டசோழபுரம்(வழி),
உடையார்பாளையம் (வட்டம்),
அரியலூர் மாவட்டம்-612 901

பக்கம் 160
விலை 80

மராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும்


மராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும்

நான் புதுவைப் பல்கலைக்கழகத்தில் இளம் முனைவர் பட்ட ஆய்வு செய்தபொழுது(1992) அயலவர் ஆட்சியில் தமிழ், தமிழ் இலக்கியம், தமிழகம் என்னும் பொதுத்தலைப்பில் ஆய்வு செய்யும்படி பேராசிரியர் முனைவர் க.ப.அறவாணன் அவர்கள் ஆய்வு மாணவர்களாகிய எங்களை அறிவுறுத்தினார்கள். எனக்கு நெறியாளராக முனைவர் இளமதி சானகிராமன் அவர்கள் அமைந்தார்கள்.

நான் மராட்டியர்கள் காலத்தில் தமிழக நிலை எவ்வாறு இருந்தது என்று ஆய்வு செய்தேன். அவ்வாறு செய்யப்பட்ட ஆய்வேடு மராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும் என்னும் தலைப்பில் நூல் வடிவம் பெற்றது(11.12.1994).

முதல் இயல் மராட்டியர் காலத் தமிழகம் எனவும் இரண்டாம் இயல் மராட்டியர் காலத் தமிழ் இலக்கியம் எனவும், மூன்றாம் இயல் மராட்டியர் காலத் தமிழ் எனவும் நூலின் தலைப்புகளைக் கொண்டுள்ளது.

இந்த நூலில் தமிழில் கலந்துள்ள மராட்டிய மொழிச்சொற்கள் பட்டியலிட்டுக் காட்டப்பட்டுள்ளன.

இந்த நூல் அச்சுவடிவம் பெறுவதற்குப் புலவர் த.கோவேந்தன் அவர்கள் உதவியாக இருந்தார்கள்.

வயல்வெளிப் பதிப்பகம்,
இடைக்கட்டு, உள்கோட்டை(அஞ்சல்)
கங்கைகொண்டசோழபுரம்(வழி),
உடையார்பாளையம் (வட்டம்),
அரியலூர் மாவட்டம்-612 901

பக்கம் 136
விலை 25

தில்லித் தமிழ்ச்சங்கத்தில் நூல் வெளியீடும் கவியரங்கும்

தில்லித் தமிழ்ச்சங்கத்தில் தநாமகன் எழுதிய சரித்திரச் சறுக்கல்கள் புதுக்கவிதை
நூல் வெளியீடும் கவியரங்கமும் சிறப்புற நடைபெற உள்ளது.

இடம் - திருவள்ளுவர் கலையரங்கம், தில்லித் தமிழ்ச் சங்கம்
நாள் - 30-3-2012 வெள்ளிக்கிழமை மாலை 6.00 மணி

நூல் வெளியிடுபவர்: பேராசிரியர். கி. நாச்சிமுத்து(சவகர்லால் நேரு பல்கலைக்கழகம்)

முதல் படி பெறுபவர்: பேராசிரியர் எம்.ஏ. சுசீலா(முன்னைத் தமிழ்த்துறைத்தலைவர், பாத்திமாகல்லூரி, மதுரை)



சொல் விழுதுகளால் ஊஞ்சலாடுவோம் என்னும் பொருண்மையில் நவீனக் கவியரங்கம் நடைபெற உள்ளது.

நெறியாளுகை: த.நா.சந்திரசேகரன்,துணைப் பேராசிரியர், சவகர்லால் நேரு பல்கலைக்கழகம்)

சொல்விழுதாடுவோர்:
இராஜேஸ்வரி அன்பரசன்
இரா தமிழ்ச்செல்வன்
ஆ. ஈஸ்வரன்
சு. அம்பேத்கர்
ஜோதி பெருமாள்
கவிதா ரமேஷ்
சத்யா அசோகன்
பாரதி பிரகாஷ்

செவ்வாய், 27 மார்ச், 2012

பொன்னி பாரதிதாசன் பரம்பரை


பொன்னி பாரதிதாசன் பரம்பரை

 பாரதிதாசன் பரம்பரை என்ற தலைப்பில் பொன்னி இலக்கிய இதழ் ஒரு தொடரை 1947 பிப்ரவரி முதல் 1949 அக்டோர் 25 வரை வெளியிட்டது. அந்தத் தொடரில் இடம்பெற்ற பாவலர்களை என் முனைவர் பட்ட ஆய்வில் அறிமுகம் செய்து, அவர்களின் படைப்புகளை ஆய்வுசெய்து வெளியிட்டேன். அத்தொடரில் இடம்பெற்ற பாவலர்களின் பட்டியல் இதோ:

1.அண்ணாமலை. மு 1947, பிப்ரவரி
2.நாச்சியப்பன். நாரா, 1947,மார்ச்சு
3.சுரதா 1947,ஏப்ரல்
4.புத்தனேரி ரா.சுப்பிரமணியன் 1947, மே
5.முத்தையா, இராம.நாக, 1947,சூன்
6.முடியரசன் 1947, சூலை
7.சேதுராமன், இராம.வே1947,ஆகத்து
8.வாணிதாசன் 1947,செப்டம்பர்
9.இராமசாமி, சி. 1947, அக்டோபர்
10.பழனியப்பன், சாமி. 1947, நவம்பர்
11.இராமநாதன், அண 1947,டிசம்பர்
12.கோவை இளஞ்சேரன் 1947,சனவரி
13.தமிழரசன்(மாணிக்கம்,சி) 1948, பிப்ரவரி
14.தேவர் கே.டி 1948,மார்ச்சு
15.நமச்சிவாயம், நா.கி 1948,மே
16.குழூத்தலைவன்(இரா.கணபதி),1948, மே
17.திரவியம்,கு (ரவி), 1948,சூன்
18.வழித்துணைராமன்,சு. 1948, சூலை
19.ரங்கதுரைவேலன், 1948,சூலை
20.குலோத்துங்கன்,வா.செ. 1948,ஆகத்து,1
21.கிருஷ்ணசாமி,டிகே. 1948,ஆகத்து 15
22.குருசாமி,வெ 1948,செப்டம்பர் 1
23.சண்முகம்.வே.1948, செப்டம்பர் 15
24.நாகப்பன்,பெ. 1948, அக்டோபர்,10
25.சுந்தரராசன்.தண. 1948, அக்டோபர்,30
26.சிவனடியான்.பெரி 1948,நவம்பர் 10,
27.சிவப்பிரகாசம்,எஸ், 1948,நவம்பர் 25
28.சீனிவாசன் சி.அ. 1948,டிசம்பர் 10
29.ரெங்கநாதன் மு. 1948,டிசம்பர் 25
30.பொன்னையா,ஜே.எஸ். 1949, சனவரி 25
31.சுந்தரம்,கதி. 1949,பிப்ரவரி10
32.மணி.எம்.எஸ். 1949,பிப்ரவரி 25
33.கணேசன், நா 1949,மார்ச்சு 10
34.அரசமணி. தி 1949,மார்ச்சு 25
35.சண்முகசுந்தரம், ப. 1949,ஏப்ரல் 10
36.பரமசிவன், க. 1949,ஏப்ரல் 25
37.மாவண்ணா தேவராசன் 1949,மே,10
38.அண்ணாமலை, வே. 1949மே,25
39.குமாரசாமி, மா 1948,சூன்10
40.முத்துசாமி, ப. 1949,சூன் 25
41.ஷரிப் 1949,சூலை 10
42.சுப்பு ஆறுமுகம் 1949,சூலை 25
43.திருநாவுக்கரசு, சி. 1949,ஆகத்து 10
44.சீத்தாராமன்,ச.(சீராளன்) 1949,ஆகத்து 25
45.ஜெயராமன் தெ. 1949, செப்டம்பர் 10
46.மாணிக்கவாசகன், ஞா 1949,செப்டம்பர் 25
47.மனோகரன், கி. 1949, அக்டோபர் 10
48.இராமநாதன், எஸ்.எம். 1949,அக்டோபர் 25

நூல்: பொன்னி பாரதிதாசன் பரம்பரை
ஆசிரியர்: முனைவர் மு.இளங்கோவன்

பதிப்பகம் முகவரி:
வயல்வெளிப் பதிப்பகம்,
இடைக்கட்டு,உள்கோட்டை(அஞ்சல்)
கங்கை கொண்டசோழபுரம் (வழி),
உடையார்பாளையம் (வட்டம்),
அரியலூர் மாவட்டம் - 612 901
+ 9442029053

விலை: 50 உருவா
பக்கம்: 160

திங்கள், 26 மார்ச், 2012

இதழகல் வெண்பா

மலேசியாவுக்கு அண்மையில் சென்றிருந்தபொழுது தமிழகத்திலிருந்து பல அன்பர்கள் என்னுடன் பயணம் செய்தனர். ஒருவருக்கொருவர் சென்னை வானூர்தி நிலையத்தில் அறிமுகம் ஆனோம். பாதுகாப்பு ஆய்வுகளை முடித்துக்கொண்டு வானூர்தியில் ஏறி அமர்ந்தோம். அப்பொழுது வானூர்தியில் ஓர் அகவை முதிர்ந்த பெரியவர் கையில் நாட்குறிப்பேட்டைப் பார்ப்பதும் மனப்பாடம் செய்வதுமாக வந்தார். பணியிலிருந்து ஓய்வுபெற்ற சாயல் அவரிடம் தெரிந்தது. படிப்பவர்கள், பணியில் இருப்பவர்களே புத்தகத்தைப் புரட்ட அலுத்துக்கொள்ளும் சூழலில் அந்த அகவை முதிர்ந்த பெரியவர் பொறுப்புணர்வுடன் மனப்பாடத்தில் மூழ்கியிருந்தார். தேர்வு எழுதும் மாணவரைப் போல் கண்ணை மூடியும் குறிப்பேட்டைப் பார்த்தும் நினைவைச் சரிசெய்துகொள்வதுமாக இருந்தார். தயங்கியபடியே அவரைப் பற்றி வினவி அறிந்துகொண்டேன்.

செங்கற்பட்டு ஊரைச் சார்ந்த திருக்குறள் கவனகர் சுந்தர. எல்லப்பனார் அவர் பெயர் என அறிந்தேன். அரசுப்பணியிலிருந்து ஓய்வுபெற்றவர் (இதே பெயரில் வேறொரு எல்லப்பனார் இருப்பதாகவும் அவர் இவரைவிட மிகச்சிறந்த கவனக ஆற்றல் பெற்றிருப்பதாகவும் அவர் வழியாகவே அறிந்தேன்). திருவாளர் சுந்தர. எல்லப்பனாரின் நினைவாற்றலும் ஊக்கமும் அறிந்து அவர்மேல் எனக்கு அன்பும் மதிப்பும் ஏற்பட்டது. அவரிடம் திருக்குறள் சார்ந்த பல வினாக்களைக் கேட்டு அவரின் நினைவாற்றலை ஆய்ந்தேன். அப்பொழுது என் நினைவுக்குத் திருக்குறளில் இடம்பெற்றுள்ள இதழகல் குறள்வெண்பாவைக் குறித்த வினா எழுந்தது. திருக்குறளில் இடம்பெற்றுள்ள இதழகல் குறட்பாக்கள் எத்தனை என்று வினவினேன். முன்பு மூன்று இருப்பதாக நான் அறிந்திருந்திருந்தேன். ஐயாவிடம் கேட்டபொழுது 28 குறள்வெண்பாக்கள் இதழகல் குறள் வெண்பாக்கள் என்றார்கள். அவற்றைச் சொன்னார்கள். இவை பயன்படும் என்று குறித்துகொகண்டேன். அந்த குறட்பாக்களைப் பதிகின்றேன். ஆர்வலர்கள் படித்து மகிழலாம். விரைவில் இரண்டு எல்லப்பனாரையும் அறிமுகம் செய்வேன்.

இதழகல் வெண்பாவைக் குறித்தக் கட்டுரை இணையத்தில் இருக்குமா? என்று தேடினேன். அங்கொன்றும் இங்கொன்றுமாகக் குறிப்புகள் மட்டும் இருந்தனவே தவிர, முழுமையான கட்டுரை எதுவும் என் கண்ணிற்குக் கிடைக்கவில்லை. என் பேராசிரியர் ம.வே. பசுபதி அவர்களிடம் இதழகல் வெண்பா குறித்து விளக்கம் சொல்லும்படி கேட்டேன். அவர்களுடன் உரையாடும்பொழுது இந்தத் தலைப்பை ஒட்டி மிகுதியாகச் சிந்திக்க இடம் உள்ளதை அறிந்தேன்.

இதழகல் என்று நாம் இன்று குறிப்பதைப் பண்டு நிரோட்டகம் என்று புலவர்கள் வழங்கினர். நிரோட்டகம் என்பது நிர்+ ஒட்டகம் என்னும் இரு சமற்கிருதச்சொற்களில் இணைப்பாக உள்ளது. நிர் என்றால் இல்லாதது என்று நேர்பொருள் தரினும் இங்கு ஒட்டாதது என்று பொருள். ஓட்டகம் என்றால் உதடு என்று பொருள். நிரோட்டகம் என்றால் உதடு ஒட்டாதது என்று பொருள். பாடலை நாம் ஒலிக்கும்பொழுது நம் இதழ்கள் ஒன்றுடன் ஒன்று குவியாமல் அமைவது ஆகும். இதற்குத் தக இதழ் குவிதல் இல்லாத தன்மையில் பாடல் இருக்கும். அதாவது இதழ் குவிதலுக்குக் காரணமான எழுத்துக்கள் இல்லாமல் பாடல் புனையப்பட்டிருக்கும்.

எய்தற் கரிய தியைந்தக்கால் அந்நிலையே
செய்தற் கரிய செயல்

என்னும் குறட்பாவை என் பேராசிரியர் எடுத்துரைத்தார்.

உ, ஊ, ஒ, ஓ, ப, ம, வ ஆகிய எழுத்துகள் வராதலால் உதடுகள் குவியாமலும், ஒட்டாமலும் இதைப் படிக்க முடிகிறது. இதில் உ, ஊ, ஒ, ஓ, ஔ, என்ற உயிரெழுத்துகள் ஐந்தும் இதழ் குவியும் முயற்சியில் பிறக்கும்.


“உஊ ஒஓ ஔ என இசைக்கும்

அப்பால் ஐந்தும் இதழ்குவிந் தியலும்” (தொல்.பிறப். 87)


உ ஊ ஒ ஓ ஔ இதழ்க் குவிவே (நன்னூல், நூற்பா 78)).


பம என்ற இரண்டு உயிர்மெய் எழுத்துகளும் மேல் இதழும் கீழ் இதழும் பொருந்தப் பிறக்கும்.


“இதழியைந்து பிறக்கும் பகார மகாரம்” (தொல்.பிறப். 97)


“மீகீழ் இதழுறப் பம்மப் பிறக்கும்” (நன்னூல், நூற்பா 81).


ஆனால் வ என்ற எழுத்தை ஒலிக்கும் பொழுது மேற்பல் கீழிதழைப் பொருந்தும் என்று தொல்காப்பியமும் நன்னூலும் குறிப்பிடுகின்றன.


“பல்லிதழ் இயைய வகாரம் பிறக்கும்”(தொல்.பிறப். 98)

இந்த நூற்பா கூறும் நுட்பத்தைக் கவனிக்கவேண்டும். இங்குக் குவிதல் இல்லாமல் மேற்பல் கீழிதழைப் பொருந்துகின்றது என்று குறிப்பிட்டுள்ளதைக் கவனிக்க வேண்டும். இந்த அமைப்பில் பார்க்கும்பொழுது வ என்பது உருவாகும்பொழுது இதழ் குவிதல் இல்லை என்று கணக்கிட்டால் 28 குறட்பாக்கள் திருக்குறளில் இதழ் குவிதல் இல்லாமல் இடம்பெற்றுள்ளன எனக் கொள்ளலாம்.

ஆனால் மொழியியல் அறிஞர் முனைவர் பொற்கோ அவர்கள் வ என்ற ஒலி உருவாகும்பொழுது கீழ்இதழுடன் மேற்பல் பொருந்துவதால் வகரமும் அதன் இன எழுத்துகளும் இடம்பெறும் குறட்பவை இதழகல் குறட்பா எண்ணிக்கைக்கு உட்படுத்த வேண்டாம் என்று குறிப்பிடுகின்றார்.

வ என்பதை இதழ்க்குவிதலாக் கொண்டு கணக்கிட்டால் திருக்குறளின் இதழகல் குறட்பாக்களின் எண்ணிக்கையில் மாற்றம் இருக்கும். அதுபோல் உ,ஒ என்பனவற்றை ஒலிக்கும்பொழுது இதழ் குவிகின்றதே தவிர இதழ்கள் ஒன்றுடன் ஒன்று ஒட்டவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். எனவே உ,ஊ,ஒ,ஓ, எழுத்துள்ள குறட்பாவை இதழகல் குறட்பாவாகக் கொள்ளலாம். குறளும் மரபு இலக்கணமும் கற்றுவல்ல சான்றோர்கள்தான் இதுகுறித்த முடிவை அறிவிக்கவேண்டும்.

இதழகல் செய்யுளுக்கு 119 தமிழ் எழுத்துகளை பயன்படுத்த முடியாது என்று சிலர் கணக்கிட்டுள்ளனர்(பார்க்க: சந்தவசந்தம் குழு உரையாடல், தங்கமணி)

உ,ஊ,ஒ,ஓ,ஔ உயிர்களுடன்,
ப், ம், வ் மெய்களும் சேர்ந்து 8
ப்,ம்,வ் x 12 உயிர்கள் உறழ்ந்து 36
உ,ஊ,ஒ,ஓ,ஔ x 15மெய்யுடன்
உறழ்ந்து,(ப்,ம்,வ் நீங்கலாக) 75
ஆக 119.

இதில் வரும் உ,ஊ என்ன்னும் எழுத்துகளை ஒலிக்கும்பொழுது இதழ் குவிகின்றனவே தவிர இதழ் ஒட்டவில்லை என்பதை ஆய்ந்துணர்க.

ஒட்டகம் என்பது அலங்காரம் என்று மாறனலங்காரம் குறிப்பிடுகின்றது.

கவனக அறிஞர்கள் குறிப்பிடும் இதழகல் குறட்பாக்கள்:

அளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக்
கோடின்றி நீர்நிறைந் தற்று. 523

அளவின்க ணின்றொழுக லாற்றார் களவின்கட்
கன்றிய காத லவர். 286

அறிவுடையா ராவ தறிவா ரறிவிலா
ரஃஃதறி கல்லா தவர். 427

இறந்தா ரிறந்தா ரனையர் சினத்தைத்
துறந்தார் துறந்தார் துணை. 310

இன்சொலா லீத்தளிக்க வல்லார்க்குத் தன்சொலாற்
றான்கண் டனைத்திவ் வுலகு. 387

உழந்துழந் துண்ணீ ரறுக விழைந்திழைந்து
வேண்டி யவர்க்கண்ட கண். 1177

உள்ளத்தார் காத லவராக வுள்ளிநீ
யாருழைச் சேறியென் னெஞ்சு. 1249

எய்தற் கரிய தியைந்தக்கா லந்நிலையே
செய்தற் கரிய செயல். 489

எற்றிற் குரியர் கயவரொன் றுற்றக்கால்
விற்றற் குரியர் விரைந்து. 1080

ஒல்வ தறிவ தறிந்ததன் கட்டங்கிச்
செல்வார்க்குச் செல்லாத தில். 472

கலங்காது கண்ட வினைக்கட் டுளங்காது
தூக்கங் கடிந்து செயல். 668

காணுங்காற் காணேன் தவறாய காணாக்காற்
காணேன் தவறல் லவை. 1286

காதலர் தூதொடு வந்த கனவினுக்
கியாதுசெய் வேன்கொல் விருந்து. 1211

கூற்றத்தைக் கையால் விளித்தற்றா லாற்றுவார்க்
காற்றாதா ரின்னா செயல். 894

செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோ
டெய்த வுணர்ந்து செயல்.516

தக்கா ரினத்தனாய்த் தானொழுக வல்லானைச்
செற்றார் செயக்கிடந்த தில். 446

தனியே யிருந்து நினைத்தக்கா லென்னைத்
தினிய விருந்ததென் னெஞ்சு.1296

தீயவை செய்தார் கெடுத னிழறன்னை
வீயா தடியுறைந் தற்று. 208

தொடியொடு தோணெகிழ நோவ லவரைக்
கொடிய ரெனக்கூற னொந்து. 1236

நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே
யொட்டாரை யொட்டிக் கொளல். 679

நனவினா னல்கா தவரைக் கனவினாற்
காண்டலி னுண்டென் னுயிர். 1213

நனவினா னல்காரை நோவர் கனவினாற்
காதலர்க் காணா தவர்.1219

நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய
வாயின ராத லரிது. 419

நோக்கினா ணோக்கெதிர் நோக்குத றாக்கணங்கு
தானைக்கொண் டன்ன துடைத்து 1082

யாதனின் யாதனி னீங்கியா னோத
லதனி னதனி னிலன். 341

வசையொழிய வாழ்வாரே வாழ்வா ரிசையொழிய
வாழ்வாரே வாழா தவர். 240

வாராக்காற் றுஞ்சா வரிற்றுஞ்சா வாயிடை
யாரஞ ருற்றன கண்.1179

வினையான் வினையாக்கிக் கோட னனைகவுள்
யானையால் யானையாத் தற்று. 678

முற்றிலும் இதழகல் வெண்பா

இறந்தா ரிறந்தா ரனையர் சினத்தைத்
துறந்தார் துறந்தார் துணை. 310

எய்தற் கரிய தியைந்தக்கா லந்நிலையே
செய்தற் கரிய செயல். 489

நோக்கினா ணோக்கெதிர் நோக்குத றாக்கணங்கு
தானைக்கொண் டன்ன துடைத்து 1082

யாதனின் யாதனி னீங்கியா னோத
லதனி னதனி னிலன். 341


(இக்கட்டுரை குறித்த மாற்றுக்கருத்துகள் / மேம்பட்ட கருத்துகள் வரவேற்கப்படுகின்றன)

ஞாயிறு, 25 மார்ச், 2012

பனசைக்குயில் கூவுகிறது நூலின் நினைவுகள்


பனசைக்குயில் கூவுகிறது


திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரியில் இளங்கலைத் தமிழ் இலக்கியம் பயின்றுகொண்டிருந்த பொழுது பனசைக்குயில் கூவுகிறது என்ற என் நூல் உருவானது(1990 அளவில்). கோடை விடுமுறைக்குப் பிறகு வகுப்பிற்குத் திரும்பினேன். எங்கள் வகுப்பில் சிற்றிலக்கியங்களைப் பாடம் நடத்திய பேராசிரியர் சு.இராமன் அவர்கள் கோடை விடுமுறையில் என்ன செய்தீர்கள் என்று ஒவ்வொரு மாணவரையும் கேட்டார்.

என்முறை வந்தபொழுது ஐயா நான் கோவை அமைப்பில் ஒரு சிற்றிலக்கியம் எழுதிப் பழகினேன் என்று கூறினேன். ” இவன் பெரிய கவி காளமேகம்… பெரிய கவிதை எழுதிக் கிழித்தானாம் ” என்று மாணவர்கள் நடுவில் நகைச்சுவை பொங்க என்னை அறிமுகம் செய்தார். அவ்வாறு எழுதப்பட்ட பாடல்களின் தொகுப்பைப் பனசைக்குயில் கூவுகிறது என்னும் பெயரில் வெளியிடத் திட்டமிட்டேன்.

இந்த நூலைத் திருப்பனந்தாள் மாரியம்மன்கோயில் தெருவில் உள்ள அம்பாள் அச்சகத்தில் அச்சிட்டேன். அந்த நூல் அச்சான பிறகு அம்பாள் அச்சகத்தின் உரிமையாளர் திருவாளர். சோமசுந்தரனார் அவர்களின் குடும்பத்தில் நானும் ஒருவனாக வளர்ந்தேன். இன்றும் அவர்கள் வீட்டில் என் புகைப்படம் ஒன்று சுவரில்மாட்டிப் பாதுகாக்கப்படுகின்றது.

இன்று உரிமையாளராக விளங்கும் திரு.சோ.சிவநேசனார் அவர்கள் என் உடன் பிறப்பினைப் போல் பழகும் இயல்பினர். மிகச்சிறந்த தமிழ்ப்பற்றாளர். அவரின் மகளுக்கு நற்றமிழ் நங்கை என்று பெயரிடும் அளவிற்குத் தமிழ் ஈடுபாடு கொண்டவர். அவர் மகள் நற்றமிழ் நங்கை குடந்தைக் கல்லூரியில் பயில்கின்றார். அவரிடம் உனக்கு யார் இந்தப் பெயர் சூட்டியது என்று கேட்டால் எங்கள் சித்தப்பா என்று என்னை அறிமுகம் செய்துகொள்வதை வழக்கமாகக் கொண்டவர்.

பனசைக்குயில் கூவுகிறது என்னும் நூல் “பனசை” என்று சுருக்கிக் கூறும் திருப்பனந்தாளின் சிறப்பையும் இயற்கை அழகையும் அகப்பொருள் சுவை ததும்ப எடுத்துரைக்கின்றது.

இளம் மாணவன் ஒருவனின் முயற்சி என்ற வகையில் இது குறிப்பிடத்தகுந்த நூலாகும். இந்த நூல் பின்னாளில் எங்கள் பிறந்த ஊரான உள்கோட்டையில் நூல்வெளியீட்டு விழாவையும் கண்டது. அந்த நூல்வெளியீட்டு விழாவிற்குப் பேராசிரியர் கு.அரசேந்திரன், பனசைக் கதிரொளி, குடந்தைக் கதிர் தமிழ்வாசணன் உள்ளிட்டோர் வந்திருந்து சிறப்பித்தனர். ஒரு பொங்கல் திருநாளில் இந்த விழா நடைபெற்றது.

நூல்: பனசைக்குயில் கூவுகிறது
ஆசிரியர்: முனைவர் மு.இளங்கோவன்
விலை: உருவா 2.50
பக்கம்: 16

பஃறுளிப் பதிப்பகம்
இடைக்கட்டு, உள்கோட்டை(அஞ்சல்)
கங்கைகொண்டசோழபுரம் (வழி),
உடையார்பாளையம் (வட்டம்),
அரியலூர் மாவட்டம்- 612 901
வெளியீட்டு ஆண்டு:14.01.1991(திருவள்ளுவர் ஆண்டு 2022,சுறவம் 1)

மரபுப்பாடல்களின் தொகுப்பு:

சான்றுக்குச் சில பாடல்கள்:

தமிழ்த்தாய் வாழ்த்து

இயலுடன் இசையும் கூத்தும் இனித்திட எமக்கே ஊட்டி
நயனுடன் வாழ்வைத் துய்க்க நன்மைகள் இயற்றும் தாயே!
கயல்பல உலவி ஆர்க்கக் கவின்பனை செறிந்து நிற்கும்
வயல்வளப் பனசை வாழும் வண்டமிழ் வாழி! வாழி!

காட்சி

மதகோரம் குளிர்காய மாலைவெயில் ஏற்றதெனச்
சிதலெறும்புப் புற்றுகளில் சிரித்தபடி கால்நீட்டிப்
புதுமைகளைப் பேசிடவே, புகழ்நண்பர் வீற்றிருக்க
உதித்தனளே திங்களென உயர்பனசை இன்மகளே!

ஐயம்

அழகுறையும் காவினிலே அடிபதியா அணங்கோ!
பழகுதமிழ் வண்டெழுந்து பண்ணிசைக்கும் மலைமகளோ!
ஒழுகருவி உறைகின்ற உருவிலியோ! உளம்மகிழச்
செழும்பனசை நகரினிலே சிரிக்கின்ற சேதாம்பல்!

வேட்கை

கல்வியிலே முதிர்ந்தோர்கள் களித்திருக்கும் பனசையிலே
முல்லையிதழ் மொட்டவிழ்ந்து முகைமகளின் குழலினிலே
எல்லையிலா மணம்வீச, எழிலார்ந்த தோழியுடன்
வெல்லமென இனிக்கின்ற வேட்கைதனை ஊட்டினளே!

செஞ்சடையன் வீற்றிருக்கும் சீர்பனசை நகரினிலே
மஞ்சளும்நல் இஞ்சிகளும் மாளாத விளைவாகக்
கொஞ்சிமகிழ் குறுவயதுக் காதலர்கள் தஞ்சமாகும்
பஞ்சிமலர்க் கொல்லையிலே பாவையவள் மயக்கினளே!

நடையழகும் உடையழகும் நாகரிகக் கருமைநிறக்
குடையழகும், குருதிநிற உடலழகும் கொண்டவளாய்ச்
சடையப்பன் வீற்றிருக்கும் சங்கதமிழ்ப் பனசையிலே
விடையனுப்பி நெஞ்சமெலாம் வௌவினளே என்செய்வேன்?

அஃறிணையை வினவுதல்

பேருந்தே! பலபெண்டிர் மேலிருந்து செலவுசெயக்
கார்வண்ணக் கருந்தரையைக் கண்டபடி ஊர்ந்தவாறே
நீயெத்தனைக் காவதம்தான் நடந்தாயே! நீள்பனசைக்
கூரெயிற்றுக் கோதையிவள் குறுவடிபோல் கண்டதுண்டோ!

ஐயன்மீர்! பொத்தகத்தை இவளொத்த மகளிர்தாம்
மெய்யினிலே சுமந்துவரும் மேலாணை நிறுத்துகவே!
கைப்பிடியில் இடுப்பையெல்லாம் கணப்பொழுதில் அளவிடுமோர்
பொய்யாகும் இடைமுறியும் புதுப்பனசை மகள்வாழி!

தலைவன் உடல் மெலிவுற்றுழி நண்பன் வினவுதல்

கல்லூரிப் போட்டிதனில் கேட்போர்கள் வியந்திடவே
சொல்லூற்றுப் பாட்டெழுதிச் சுடர்மணியாய் ஒலித்தவனே!
மெல்லூற்று நீராக மிகப்பேசும் நீயேனோ
மெல்லொற்றாய்ப் பேச்சொழிந்தாய் மேல்பனசை நகரினிலே!

உடல் மெலிவுக்குக் காரணம் கூறல்

தூயதமிழ் வளர்வதற்குத் தொண்டாற்றி வாழ்பவனே!
தாயவளாய்த் தமிழ்மொழியைத் தலையினிலே சுமப்பவனே!
மாயவளாய் மதிமயக்கி மன்னுபுகழ் செல்லரிக்க
வேய்மரத்துப் பனசையிலே வேல்விழியால் மயக்கினளே!

தலைவியின் இருப்பிடம் சுட்டல்

தோப்புகளும் தோட்டங்களும் தொகையடங்கா; தொன்மைமிகு
காப்புகளும் களங்களும்தான் கணக்கடங்கா; காரிருளாய்
மூப்புமிகு முனியனிவன் முன்கோயில் வாசலிலே
பாப்புகளும் பலநெளியும் பழம்பனசைப் பாவைகாண்!

பனசை சிறப்புரைத்தல்


தமிழன்னைச் சீர்பெறவே தண்பனசைப் பொழிலகத்துப்
தமைச்சூழும் இளையோரின் தடைகளுக்கு விடையளித்து
நிமையமெலாம் நெஞ்சினிலே நினைப்பூறும் நிலைதமிழை
அமைவுறவே கற்றவனாம் அருள்பொற்கோ வாழ்கவென்பேன்!

அலராமல் மீசைமயிர் அடக்கத்தில் இருக்கையிலே
புலவோரைப் பாட்டாலே பசுபதிதான் புகழ்ந்தானே!
குலவழியில் பலர்வரவே குறும்பாகப் பாட்டெழுதும்
நலமிகுந்த பனசையிலே நங்கதிரோன் தோன்றினனே!

மழலையர்கள் விளையாடி மேல்நாட்டு மொழிபேச
வழியினிலே செல்லுகின்ற வஞ்சியர்கள் வெறித்தபடி
குழிவிழுந்த கண்நோகக் குதலையர்கள் மொழிகேட்டுப்
பழியென்றே பழம்பனசைப் பைந்தமிழைப் போற்றுவரே!

தலைவி நிலை

பஞ்சணையில் தலைசாய்த்து பாவையவள் துயின்றாலும்
நெஞ்சனைய செம்மலவன் நீள்நினைவு வந்திடவே
துஞ்சிருளைக் கிழிக்கின்ற தொல்பனசை விளக்கத்தை
விஞ்சுகால் உந்தெனவே விம்மிவிம்மி அழுவாளே!

தலைவன் தலைவியைக் காணச்செல்லுதல்

கள்ளிறக்கும் தொழிலாளர் கால்மிதித்துப் பனையேறி
உள்ளிருக்கும் கள்ளதனை ஓர்நொடிக்குள் கீழிறக்க
முள்காட்டு மதிலகத்தே மொத்தத்தில் குடித்தவனாய்த்
தள்ளாடிக் கும்மிருளில் தேமொழியைக் காண்பனனே!

பொருள்வயிற் பிரிவு

அணிமுல்லை ஆடிடுமே! இன்கொம்பை ஈகவென
உணர்த்திடுமே! ஊதைவந்தே எல்வளையர் ஏங்குவண்ணம்
புணர்மொழியைக் கௌவைமிகக் கொளுத்திடுமே! கோட்டிதழின்
இணர்சூழும் பொழிலாற்றைப் பனசைமகன் கடந்தனனே!

வரலரும் அருவியை இருவிழி புருவினில்
உரமிகு திருமகன் நிரலெனச் சிறையிட,
அரும்பனை மகளவள் இருமுகை வருதுளி
திருமகன் நினைவினில் திகழ்ந்திடும் அறிகவே!

வெள்ளி, 23 மார்ச், 2012

தொல்லியல் அறிஞர் பேராசிரியர் கா. இராசன்


பேராசிரியர் கா.இராசன் 

  அண்மையில் பேராசிரியர் கா. இராசன் அவர்களின் தமிழகத் தொல்லியல், அகழாய்வு குறித்த உரையைக் கேட்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. பல மாதங்களாக நண்பர் ஒரிசா பாலு அவர்கள் பேராசிரியர் கா. இராசன் அவர்களைக் கண்டு உரையாடும்படி அன்புக்கட்டளை இடுவார். எனக்கிருக்கும் மலையளவு வேலைகளில் எங்கும் அசையமுடியாதபடி அழுத்தம் இருந்து வந்தது. பலநாள் திட்டமிட்டது அண்மையில் கைகூடியது. எதிர்பாராமல் கிடைத்த அரிய வாய்ப்பாகப் பேராசிரியர் கா.இராசன் அவர்களின் உரையைக் கருதினேன்.

  பேராசிரியர் கா. இராசன் அவர்கள் அகழாய்வுப் பணிக்கெனத் தம் வாழ்நாளை ஒப்படைத்துக் கொண்ட மூத்த ஆய்வாளர் ஆவார். இவரின் முப்பதாண்டுக்கால உழைப்பால் தமிழகத்தின் தொன்மையை விளக்கும் பல அரிய சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. உலகம் முழுவதும் பரவியிருக்கும் தமிழ்ச் சான்றுகளைத் தொகுப்பதைத் தம் வாழ்நாள் கடமையாகக் கொண்டவர். இவர்தம் அகழாய்வுப்பணிகளுள் பொருந்தல் அகழாய்வு, தாண்டிக்குடி அகழாய்வு, கொடுமணல் அகழாய்வு குறிப்பிடத்தக்கன. இதுவரை ஆங்கிலத்தில் 12 நூல்களை எழுதியுள்ளார். தமிழில் தொல்லியல் நோக்கில் சங்க காலம் என்ற நூலையும் எழுதியுள்ளார்.

 கோவை மாவட்டம் கரடிமடையில் 12.04.1955 பிறந்த பேராசிரியர் கா. இராசன் அவர்களின் பெற்றோர் திருவாளர் காரைக் கவுடர், முத்தம்மாள் ஆவர்.

 சென்னைப் பல்கலைக்கழகத்தில் முதுகலைத் தொல்லியல் பயின்ற பேராசிரியர் கா.இராசன் அவர்கள் மைசூர் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வு செய்தவர். “கோவை மாவட்டப் பெருங்கற்படைப் பண்பாடு” என்பது இவர்தம் முனைவர் பட்ட ஆய்வாகும்.

 புதுவைப் பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத்துறைப் பேராசிரியராகப் பணிபுரிகின்றார். பல நாடுகளில் இவர் வருகைதரு பேராசிரியராகப் பணிபுரிந்த பட்டறிவுடையவர். இவர் பணியேற்ற நாள்முதல் கோடைவிடுமுறையை அகழாய்வுப் பணிக்கெனத் திட்டமிட்டு ஒதுக்கிப் பணிபுரிகின்றமையை அறிந்து நானும் நண்பர்களும் வியந்து போனோம். எந்த வகையிலாவது விடுப்பெடுத்துக்கொண்டு வாழ்நாளை வீழ்நாளாகக் கழிக்கும் பொழுதுபோக்கு ஊழியர்களைப் போல் அல்லாமல் குடும்பம், உறவு மறந்து ஆராய்ச்சியில் ஈடுபடும் பேராசிரியர் இராசன் போன்றவர்கள் வளரும் தலைமுறையினருக்கு ஓர் எடுத்துக்காட்டாகும்.

பேராசிரியர் கா.இராசன் உரையில் தெறித்த சில அறிவுப்பொறிகள்:

இதுவரை 300 சங்க கால ஊர்ப்பெயர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆதிச்சநல்லூரில் 600 சதுரமீட்டரில் 160 முதுமக்கள் தாழிகள் கிடைத்தன. இந்த முதுமக்கள் தாழிகளைக் கணக்கிட்டு இந்தப் பகுதியில் வாழ்ந்த மக்கள்தொகையைக் கண்டுபிடித்துவிடமுடியும்.

ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியனை நினைவூட்டும் ஒல்லையூரில் 300 -  இற்கும் மேற்ட்ட கற்பதுக்கைகள் இருந்தன. இன்று 30 பதுக்கைகள்தான் உள்ளன. ஊரிலிருந்து பல கல்பதுக்கைகளை வரலாற்று உணர்வு இல்லாமல் தரைமட்டமாக்கிவிட்டனர்.

 சவ்வாது மலைப்பகுதியில் உள்ள கீழ்ச்சேப்புளி என்னும் ஊரில் ஆயிரக்கணக்கான கற்பதுக்கைகள் உள்ளன. முன்பு நடுகல் வேலிபோல் ஊரில் இருந்துள்ளன. பனைமரத்தைவிட உயரமான நடுகற்கள் உண்டு.

 கொடைக்கானல் அருகில் உள்ள ஊர் தாண்டிக்குடி ஆகும். இது தான்றிக்குடி என முன்பு அழைக்கப்பட்டது. தான்றி என்பது மரமாகும். தான்றி மரத்தின் அனைத்துப் பகுதிகளும் மருத்துவக்குணம் கொண்டவை.

 தமிழகத் தொல்லியல் சின்னங்கள் பல வெளிநாடுகளில் உள்ளன. பனை ஒறி என்னும் பெயர் பொறித்த மட்பாண்டம் எகிப்துநாட்டில் உள்ளது. கொற்றப்பூமான் என்னும் பெயர் பொறித்த இலங்கைநாட்டு தொல்பொருள் கெய்ரோ காட்சியகத்தில் உள்ளது.

 வத்தலகுண்டு அருகில் உள்ள தாதப்பட்டி என்னும் ஊரில் கிடைத்துள்ள தொல்பொருளில் “அடி ஓன் பாகல் பானிய் கல்” என்ற குறிப்பு உள்ளது. அடியோன் என்பதை அடி ஓன் என்று எழுதியுள்ளதைப் பேராசிரியர் விளக்கினார்.

 மேலும் வத்தலகுண்டு அருகில் உள்ள ’புலிமான் கோம்பை’ என்ற இடத்தில் கிடைத்துள்ள நடுகல்லில்(இந்தியாவில் கிடைத்துள்ள காலத்தால் முந்திய முதல் நடுகல்) “ பேடு தீயன் அந்தவன்” “கூடல் ஊர் ஆகோள்” என்று எழுதப்பட்டுள்ளது.

 உம்பற்காடு என்பது பாலக்காடு பகுதியில் உள்ள பகுதியாகும். பதிற்றுப்பத்தில் குறிப்பிடப்படும் ஊராகும். வேழம் தாவளம் என்று இன்றும் ஊர் உள்ளது.

 முத்துக்கள் மன்னார் வளைகுடாப் பகுதியில் விளைவதற்குரிய இயற்கைச்சூழல் உண்டு.

 வீர சேகரப் பெருவழி, அதியமான் பெருவழி என்னும் பெயரில் அக்காலத்தில் பெருவழிகள் இருந்துள்ளன.

 அதியன் பெருவழி 27 காதம் என்ற குறிப்பு உள்ளது.
 ஒரு காதம் என்பது 5 மைல் அதாவது 8 கி.மீ. ஆகும்.

 வயல்நாடு என்பது இன்று வயநாடு என்று அழைக்கப்படுகின்றது.

 பொருந்தல் என்னும் ஊர் பழனி அருகில் உள்ளது. “பொருந்தலான இராஜராஜபுரம்” என்று இந்த ஊர் அழைக்கப்பட்டது. பொருந்தல் அகழாய்வில் கிடைத்துள்ள நெல்மணிகள் பயிரிடப்பட்டதை அறிவியல் அடிப்படையில் உறுதிசெய்த்தள்ளார். இதற்கு நெல்மணிகள் Beta Analytic Laboratory, U.S.A ஆய்வுக்கூடத்திற்கு அனுப்பப்பட்டு, இந்த நெல்மணிகளின் காலம் கி.மு. 490, கி.மு.450 என்று உறுதிச்செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு ஆய்வு செய்யப்பட்ட பிறகு இந்த நெல் விதைக்கப்பட்டுத் தயாரானதா? நாற்றாக உற்பத்தி செய்து பயிரிடப்பட்டதா என்று உறுதிப்படுத்தும் பணியில் உள்ளார்.

 அகழாய்வில் கரூர் பொன்வணிகன், எண்ணெய் வணிகன், மணிய வண்ணக்கன், திருமணிக்குயிலன் என்னும் பெயர்கள் கிடைத்துள்ளன.

 ஆப்கான் பகுதியில் கிடைக்கும் வைடூரியம் என்னும் நீலமணிகள் கொடுமணல் பகுதியில் மிகுதியாகக் கிடைத்துள்ளன.


 நம் கொற்கை முத்து சகாரா பாலைவனத்தில் கிடைக்கின்றன. அசோகர் அரண்மனையில் பாண்டிய நாட்டு முத்துகள் இருந்தன. பெரும்படை என்பது படையல் பொருள்களாகும். இறந்தவர்களை அடக்கம் செய்த இடத்தில் இந்தப் பெரும்படை என்னும் படையல் பொருள்கள் இருந்துள்ளன. சாதவாகனர்கள் முன்பு நூற்றுவன் கண்ணர்(சிலப்பதிகாரம்) என்று அழைக்கப்பட்டனர்.

 பழைய பூம்புகார் கடலுக்கு அடியில் 65 அடி ஆழத்தில் தடயங்களைக் கொண்டுள்ளது. சேந்தமங்கலம் என்னும் ஊர் கோச்செங்கனான் வரலாற்றுடன் தொடர்புடையது.

 இன்றைய இந்திய அரசின் சின்னமான நான்கு சிங்கத் தலைக்கு மேலே ஒரு தருமச்சக்கரம் இருந்துள்ளது. இதனைத் தாய்லாந்தில் காணும் சிங்கத்தலைச் சிற்பத்தில் காணலாம். அந்த தருமச்சக்கரம் நீங்கிய அமைப்பில்தான் இன்றைய அரசின் சிங்கத்தலைகள் உள்ளன.

சங்க இலக்கியத்தில் காணப்படும் தொழில்நுட்பம், சங்க காலத்தில் குறிப்பிடப்படும் ஊர்கள், இடங்கள், முத்து, மலைவளம், வணிக உறவு, அயலக உறவுகள் குறித்த மேலாய்வுகளுக்குச் சங்க இலக்கியம் இடம்தருவதாக உள்ளது என்று பேராசிரியர் கா.இராசன் அவர்கள் பல செய்திகளை முன்வைத்தார்.


பேராசிரியர் கா.இராசன் அவர்களுடன் மு.இளங்கோவன்

திங்கள், 19 மார்ச், 2012

சந்தித்தவேளையில் நேர்காணல் - காணொளி

கலைஞர் தொலைக்காட்சியில் 15.03.2012 காலை 8 மணி முதல் 9 மணிவரை சந்தித்தவேளையில் என்னும் பகுதியில் திரு.இரமேஷ் பிரபா அவர்கள் என்னை நேர்காணல் செய்தார்கள். அதன் காணொளியை விடுதலை வலைக்காட்சித் தளத்தில் திரு.பிரின்சு அவர்கள் வெளியிட்டுள்ளார்கள். அதனை நண்பர்களின் பார்வைக்கு இணைத்துள்ளேன்.
கண்டு மகிழுங்கள்.
இங்கே சொடுக்கவும்

ஞாயிறு, 18 மார்ச், 2012

பாரதி பன்னாட்டுக் கருத்தரங்கம்

வாணியம்பாடி பாரதி தமிழ்ச்சங்கமும், சென்னை செம்மூதாய்ப் பதிப்பகமும் இணைந்து நடத்தும் பாரதி பன்னாட்டுக் கருத்தங்கம் எதிர்வரும் மே மாதம் வேலூர் மாவட்டம் ஏலகிரியில் நடைபெற உள்ளது. பாரதியார் படைப்புகள் குறித்த கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன.

கட்டுரை அனுப்ப இறுதிநாள்: 15.04.2012

தொடர்புக்கு”

முனைவர் ப.சிவராஜி, இசுலாமியாக் கல்லூரி, வாணியம்பாடி
9095831291

முனைவர் சு.சதாசிவம்
9444200369

பேராளர் கட்டணம்:

பேராசிரியர், இலக்கிய ஆர்வலர் உருவா 500-00
ஆய்வாளர் உருவா 400-00

கட்டுரைகள் அனுப்பவேண்டிய முகவரி:

செம்மூதாய்ப் பதிப்பகம்
எண் 17, தாகூர் தெரு, எம் எம். டி. ஏ. நகர்
சிட்லபாக்கம், சென்னை 600 064
செல்பேசி: 9444200369

செவ்வாய், 13 மார்ச், 2012

உயர்கல்வியில் உயர…

 அண்மையில் அமெரிக்கா சென்றிருந்தபொழுது புகழ்பெற்ற உயர்கல்வி நிறுவனங்களான ஆர்வர்டு, ஏல், எம்.ஐ.டி, பென்சில்வேனியா, மேரிலாந்து, தெற்குக் கரோலினாவின் மருத்துவப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல பல்கலைக்கழகங்களைப் பார்வையிட்டேன். அங்குள்ள பல்கலைக்கழகக் கட்டமைப்பு வசதிகள், வகுப்பறை, நூலகம், உணவகம், எழுதுபொருள் அங்காடி, மாணவர்களுக்குப் பல்கலைக்கழகம் உருவாக்கித் தந்துள்ள நீச்சல் குளம், வேலைவாய்ப்பு வசதிகள், முன்னாள் மாணவர்கள் பேரவை, போக்குவரவு வசதிகள், விடுதி வசதிகள் யாவும் என்னை வியப்படைய வைத்தன.

 ஒரு கட்டுப்பாட்டு அறைக்குள் அமர்ந்தபடி பல்கலைக்கழகத்தின் ஆயிரக்கணக்கான அறைகளில் நடக்கும் பாடங்களைப் பதிந்து உடனுக்குடன் இணையத்தில் ஏற்றிப் பல்கலைக்கழகத்திற்கு வர இயலாத மாணவர்களுக்கும் பாடங்களைத் தடையில்லாமல் படிப்பதற்கு வழங்கும் வசதிகளைக் கண்டு மலைத்துப்போனேன். மேற்கண்ட பல்கலைக் கழகங்களில் ஆர்வர்டு பல்கலைக் கழக்கழகம் பல நோபல் பரிசுபெற்ற அறிஞர்கள் பணிசெய்த - செய்யும் பெருமைக்குரியது.

 உலகின் 200 பல்கலைக்கழகங்களின் தரவரிசைப்பட்டியலில் ஆர்வர்டு பல்கலைக்கழகம் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.(ஆர்வர்டு பல்கலைக்கழகத்தில் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், ஜனதா கட்சித்தலைவர் சுப்பிரமணியன் சுவாமி உள்ளிட்டவர்கள் படித்தவர்கள்). இந்த இருநூறு பல்கலைக்கழகங்களின் தரவரிசைப்பட்டியலில் இந்தியாவின் எந்தப் பல்கலைக்கழகமும் இடம்பெறவில்லை( மும்பை ஐ.ஐ.டி 163 இடம் என்பது நமக்கு ஆறுதல்(2009 ஆம் ஆண்டில்))

 அமெரிக்காவின் பல்கலைக்கழகங்களில் ஓர் இளங்கலைப் பட்டம் பெற நம் நாட்டு மதிப்பில் ஐம்பது இலட்சத்துக்கு மேல் செலவாகும் என்று எங்களின் வழிகாட்டி மாணவி எடுத்துரைத்தார். அனைத்து மாணவர்களும் முதலாண்டில் கட்டாயம் விடுதியில் தங்கிப் படிக்க வேண்டும் என்றனர். ஆண், பெண் இணைந்து படிக்கும் வகையில் விடுதிகள் உள்ளன. நம் நாட்டில் கல்லூரி, பல்கலைக்கழகங்களில் ஆண் பெண் இணைகள் அமர்ந்துபேசுவது போன்ற காட்சிகளை எங்கும் காணமுடியவில்லை.

 பலவற்றை ஆர்வமுடன் பார்த்தும் கேட்டும் வந்த நான் இங்கு வன்பகடி(ரேகிங்) நடக்குமா? என்றேன். அப்படி என்றால் என்ன? என்று ஒரு கல்லூரி மாணவி என்னைக் கேட்டாள். அவர்களின் பண்பட்ட வாழ்க்கையும் கல்வி முறைகளும் எனக்கு மகிழ்ச்சியைத் தந்தது. பண்பாட்டையும் அறநெறியையும் போற்றும் கல்வியாக அது எனக்குத் தெரிந்தது. கடும் உழைப்புக்கு அங்கு மதிப்பு இருக்கின்றது. மாணவர்கள் அனைவரும் அவரவர் கணக்கில் வங்கிகளில் கடன்பெற்று படிக்கின்றனர். பகுதி நேர வேலைகளில் இணைந்தும் அதன் வழியாகச் சம்பாதித்துக் கல்வி கற்கின்றனர். எனவே அவர்களுக்கு உழைப்பின் மதிப்பு புரிகின்றது. அதுபோல் நாட்டுப்பற்றும் மக்கள் பற்றும் அவர்களிடம் இயல்பாக உள்ளன.

 தேர்வுக்காலங்களில் பல்கலைக்கழகங்களின் உணவகங்கள் விடியற்காலையில் மிகவும் சுறுசுறுப்பாக இருக்குமாம். இரவு, பகல் பாராமல் படிப்பதிலும் குறிப்புகள் எடுப்பதிலும் மாணவர்கள் முழுமையாகக் கரைத்துக்கொள்கின்றனர். இவ்வாறு படிப்பதிலும் அறிவுத்தேடலிலும் இருப்பதால் அவர்களின் ஆராய்ச்சியும் உலகத்தரத்தில் இருந்து அனைவருக்கும் பயன்படும் வகையில் இருக்கின்றது.

 எம்.ஐ.டி. பல்கலைக்கழகத்தின் தொடர்வண்டி நிறுத்தத்தில் அந்தப் பல்கலைக் கழகத்தின் கல்வியாளர்கள், கண்டுபிடிப்பாளர்களின் படங்கள், கண்டுபிடிப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. தொடர் வண்டி நிறுத்தம் அறிவின் அடையாளமாகத் தெரிந்தது. அமெரிக்கர்கள் கல்விக்கு அளிக்கும் முதன்மைக்கும் மரியாதைக்கும் இந்தத் தொடர்வண்டி நிறுத்தம் சான்றாக உள்ளது.

 நம் நாட்டுப் பல்கலைக்கழகங்களில் பேருந்துகள் நின்று போவதைக் கண்ணியக் குறைவாகப் பேருந்து ஓட்டுநர்கள் நினைக்கின்றனர். இந்தப் பேருந்து ஓட்டுநர்களும், மக்களும் திரையரங்குதோறும் நிறுத்தம் எனவும், சாராயக் கடைகள்தோறும் நிறுத்தமாகவும் குறிப்பிட்டு ஏறி இறங்குவது தலைகுனியும் நிலைக்கு நம்மைத் தள்ளுகின்றது.

 மேரிலாந்து பல்கலைக்கழகத்தின் நூலகத்தில் உலகின் பல பகுதிகளைச் சேர்ந்த ஊர்கள், ஆறுகள் குறித்த பல்லாயிரம் வரைபடங்களைக் கண்டு வியந்து போனேன். அங்கிருந்தபடியே இந்தியாவின் அனைத்துச் செய்திகளையும் வரைபடம் உள்ளிட்டவற்றின் துணையுடன் பெற்றுவிடமுடியும், நூல்கள், நுண்படச்சுருள்கள் (மைக்ரோ பிலிம்), குறுவட்டுகள், காணொளிப் பேழைகள், கணினிகள், இணைய இணைப்புகள் என்று நூலகங்களில் அனைத்து வகையான வசதிகளும் உள்ளன. குறிப்பாக அமைதி நிலவுகின்றது. உதவுவதற்கு ஆட்கள் தீயவிப்புத் துறையினர் போல் ஆயத்த நிலையில் உள்ளனர். மாணவர்களை அறிவாளிகளாக மாற்றுவதற்குரிய அனைத்து வசதிகளும் நூலகத்தில் உள்ளன. இலக்கியக் கூட்டங்கள், கலந்துரையாடல்கள் நடத்துவதற்கு நூலகத்தின் குளிரூட்டப்பட்ட அரங்கு இலவசமாக வழங்கப்படுகின்றது. கற்பதும் அதன்வழி நிற்பதும் அவரவர் கடமையாக்கப்பட்டுள்ளது.

 அமெரிக்கப் பல்கலைக்கழகத்தின் பணியமர்த்தம் பற்றி வினவினேன். மேல்நிலையிலிருந்து கீழ்நிலைவரை தகுதி ஒன்று மட்டும் அமெரிக்காவில் முதலிடம் பிடிக்கின்றது. இங்கு போல் துணைவேந்தர் பதவி அங்கு இல்லை. தலைவர், துணைத்தலைவர், புலமுதல்வர், பேராசிரியர் என்ற வகையில் பொறுப்புகள் உள்ளன. தலைவராக இருப்பவர் கல்வியிலும், அறிவாராய்ச்சியிலும் முதலிடத்தில் இருந்தால் மட்டும் இத்தகைய பதவிகளை வகிக்கமுடியும். நம் ஊர் போல் சாதிச்சான்றும், கட்சி உறுப்பினர் அட்டையும் அரசியல் பின்புலமும், பண அறுவடையுமாக உள்ளவர்களால் உயர்பதவிக்கு வர இயலாது. ஆட்சி மாற்றங்கள் அமையும்பொழுது தலைமறைவாகும் துணைவேந்தர்களோ கல்வியாளர்களோ அமெரிக்காவில் இல்லை எனலாம். அதுபோல் பேராசிரியர்கள் பதவிக்குரிய பணியிடங்களில் அமர்பவர்கள் கல்வித்துறையில் நல்ல பட்டறிவு உடையவர்களும், அறிவாராய்ச்சியில் முன்னிற்பவர்களும் மட்டும் அமரமுடியும். எந்தத் துறையில் ஒருவர் ஆய்வு செய்கின்றாரோ அந்தத் துறையில் அவர் பணி நியமனத்துக்கு எந்தத் தடையும் இருக்காது.

 மேல்நாட்டுப் பல்கலைக்கழகங்களில் ஆசிரியர்கள் தங்கள் திறமையை உறுதிப்படுத்தும் வகையில் பாடம் நடத்துதலிலும் ஆய்வுகளிலும் தொடர்ந்து ஈடுபட வேண்டும். மாணவர்கள் மற்றும் தணிக்கையாளர்கள் உள்ளம் நிறைவடையும்படி பேராசிரியர்களின் முன்னேற்றச் செயல்பாடுகள் இருக்க வேண்டும். பேராசிரியர்கள் பல்கலைக்கழகப் பணியில் தொடரலாமா வேண்டாமா? என்பதை நிர்ணயிக்கும் இடத்தில் மாணவர்கள்தான் இருப்பார்கள். கல்வி நிறுவனம் சார்ந்த அதிகாரிகள் ஆசிரியர்களின் முன்னேற்றத்தைப் பலவகையில் உறுதிப்படுத்திப் பணி நீட்டிப்பை வழங்குவார்கள்.

 பேராசிரியர்கள் பாடம் நடத்துவதை மாணவர்கள் கேட்பதுடன் மட்டும் அல்லாமல் ஐரோப்பிய நாடுகளில் ஊடகத் துறையைச் சேர்ந்தவர்கள் வந்து அமர்ந்து பாடம் கேட்டு, அது பற்றிய செய்தியை மறுநாள் இதழ்களில் எழுதுவதும் உண்டு. ஊடகத்துறை சார்ந்தவர்கள் மட்டுமன்றிச் சமூக அக்கறையுடையவர்களும், பெற்றோர்களும், பொதுமக்களும் இந்தப் பாடங்களைக் கேட்கமுடியும். அந்த அளவு பல்கலைக்கழகப் பாடம் என்பது திறந்தநிலையில் இருப்பதால் ஆசிரியர்கள் மிக விழிப்பாக இருப்பார்கள். நம் நாட்டுப் பல்கலைக்கழகங்களில் பணியில் இணைந்துவிட்டால் இனி நம்மை அசைக்க ஆள் இல்லை என்றும் இருக்கவே இருக்கின்றனர் கூட்டமைப்பினர் என்று ஆசுவாசப்படுத்திக் கொள்கின்றோம். போக்குவரவுப்படிகளிலும், வெளியூர்ப் பண்டமாற்றுப் பயணங்களிலும் செலுத்தும் கவனத்தை பாடத்திலும், ஆய்விலும் செலுத்துவதில் நாம் குறைவாகவே உள்ளோம்.


 பணி நியமனங்களில் தகுதியானவர்களுக்கே பணி வழங்கப்படுவதால் அமெரிக்கா, இங்கிலாந்து, ஆத்திரேலியா, உருசியா நாடுகளில் உயர்கல்வித் துறையின் தரம் மென்மேலும் கூடிக்கொண்டே போகின்றது. இந்தியாவில் குறிப்பாகத் தமிழகத்தில் பணம், அரசியல் பின்புலம், வயது, தோற்றம் பார்க்கப்படுகின்றதே அல்லாமல் அறிவுக்கு முக்கியத்துவம் இல்லாமல் போய்விட்டது. அதனால் மிகப்பெரும் கல்விமான்கள் அமர்ந்த இடத்தில் இன்று எத்தகு தகுதி இல்லாதோரும் நுழைந்து அமர்ந்துவிடுகின்றனர். இன்றைய நிலையில் கல்வித்தகுதி கண்டுகொள்ளப்படாமல் அரசியல்வாதிகள், பணமுதலாளிகள், மணற் கொள்ளையர்கள், மனைக் கொள்ளையர்கள், திரைத்துறையினர், கட்டைப்பஞ்சாயம் செய்பவர்களின் வாரிசுகள் உலவும் இடங்களாக இந்திய, தமிழகப் பல்கலைக்கழகங்கள் படிப்படியாக மாறிவருகின்றன.

 இத்தகு சூழலை எண்ணும்பொழுது இன்னும் சில ஆண்டுகளில் தமிழகத்தில் உயர்கல்வியின் தரம் மிகத்தாழும். தனியார் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் பணியில் இருப்பவர்கள் பலர் முதலாளிகளுக்கு ஆள்பிடிக்கும் தரகர்களாக மாறியுள்ளனர். வகுப்பிலிருக்கும் மாணவர்களின் எண்ணிக்கையைவிட துறையில் இருக்கும் ஆசிரியர்களின் எண்ணிக்கை சில பல்கலைக் கழகங்களில் அதிகம் இருப்பதை அறியமுடிகின்றது. பல்கலைக்கழக மானியக்குழுவின் விதிமுறைகளை எல்லாம் மிகச் சாதூர்யமாக மீறும் பணமுதலைகள் இந்தியாவெங்கும் கல்வித்தந்தைகளாக உலா வருகின்றனர்.

 அண்மைக் காலங்களில் பல்கலைக்கழகங்களின் பணி நியமனங்கள் குதிரைபேரங்களாக மாறிப்போனது. இது உயர்கல்விக்கு நல்ல முன்மாதிரியாக அமையாது. ககரமும் இலகரமும் பல்கலைக்கழகங்களை ஆக்கிரமித்துவிட்டால் பணியிடங்கள் ஏலச்சந்தையாகிவிடும். இன்று முதல்போட்ட கல்வி முதலாளிகள் ஒன்றுக்குப் பத்தாக அறுவடை செய்வதில் கண்ணும் கருத்துமாக உள்ளனர். பல்கலைக்கழகத்திற்கு என இடைத்தரகர்கள் இன்று தோற்றம் பெற்றுவிட்டனர். தமிழ் இலக்கியங்களில் வேந்தர்கள் வள்ளல்களாக இருந்தனர் என்று படித்தோம். இன்று வள்ளல்களாக இருப்பவர்களே வேந்தர்களாக முடியும் என்று அறிஞர் ஒருவர் சொன்ன செய்தி உண்மையாகவே உயர்கல்வித்துறையில் தெரிகின்றது.

 பல்கலைக்கழகங்களில் நடைபெறும் நேர்காணல் தேர்வுக்குத் துறைசார் வல்லுநர்களாக வரும் கல்வியாளர்கள் பணிப்போட்டிக்கு வருபவர்களைக் கோமாளிகளைப் பார்ப்பதுபோல் பார்ப்பதும் வேடிகையாகச் சில வினாக்களைக் கேட்பதுமாக உள்ளனர். முந்திரிப்பருப்புகளைக் கொறித்தும் தேநீரும், பழச்சாறும் பருகி நிறைவில் துணைவேந்தர்களின் உள்ளக்குறிப்பறிந்து நடந்துகொள்கின்றனர். வழிசெலவு, மதிப்பூதியம் குறையாமல் குளிர்வண்டிப் பிடிப்பதில் மட்டும் இவர்கள் கவனமாக இருக்கின்றார்கள். தகுதியானவர்களைத்தான் பணி அமர்த்துவோம் என்று அறிவுபோற்றும் அறிஞர்கள் தமிழகத்தில் இல்லாமல் போனதால்தான் உயர்கல்வி தமிழகத்தில் சரிவு நிலைக்கு வந்தது.

 உயர்கல்வியில் இன்று பல முனைகளில் களைகள் மண்டிக்கிடக்கின்றன. இவற்றை அப்புறப்படுத்தமுடியாமல் சங்கங்களும், சட்டப்பாதுகாப்பு வளையங்களும் உள்ளன. எனவே வெளிப்படையான பணியமர்த்தங்கள் நடைபெற வேண்டும். துறைசார் வல்லுநர்களை அரசியல் வாதிகள் அடக்கி ஒடுக்காத நிலை இருந்தால்தான் உண்மையான உயர்கல்வியின் தரம் உயர்வதற்கு வழி கிடைக்கும். அதனைவிடுத்து ஆட்சி மாற்றங்கள், அரசியல் மாற்றங்கள் என எதுவும் உயர்கல்வியை உயர்த்திவிடமுடியாது. உயர்கல்வி என்பது நாட்டை வளப்படுத்தவும் மக்களை நலப்படுத்தவும் உதவுவது. அறிவுசார்ந்த சமூகத்தையும் எதிர்காலத்தையும் தீர்மானிக்க உதவுவது. எனவே இன்றைய அடிப்படையில் மாற்றங்கள் நடைபெறாத வரையில் உயர்கல்வி வளர வாய்ப்பு இல்லை.

 உயர்கல்வி ஒருநாட்டில் வளமாக இல்லை என்றால் அந்த நாட்டில் வளர்ச்சி இல்லை என்று பொருள். உயர்கல்வி வழங்கும் பல்கலைக்கழகங்கள் பட்டங்களை வழங்கும் தொழிற்பேட்டைகள் அல்ல. அடுத்த தலைமுறையின் முன்னேற்றத்துக்கு உழைக்கும் உலைக்களங்கள் ஆகும்.

சனி, 10 மார்ச், 2012

பாவேந்தர் பாரதிதாசன் கவிதைகள் முழுத்தொகுப்பு வெளியீடு


மன்னர்மன்னன், பேரவைத்தலைவர் சபாபதி, முத்து உள்ளிட்டோர்

புதுச்சேரியில் அமைந்துள்ள புதுவைத் தமிழ்ச்சங்கத்தில் பாவேந்தர் பாரதிதாசன் கவிதைகளின் முழுத்தொகுப்பு இன்று(10.03.2012) மாலை 7 மணியளவில் நடைபெற்ற விழாவில் வெளியிடப்பட்டது. புதுவைச் சட்டப்பேரவைத் தலைவர் சபாபதி அவர்கள் நூலை வெளியிட்டார். முதற்படியினைப் புதுவைத் தமிழ்ச்சங்கத் தலைவர் முனைவர் வி.முத்து அவர்கள் பெற்றுக்கொண்டார். தமிழ்மாமணி மன்னர்மன்னன் அவர்களின் முன்னிலையில் இந்த விழா நடந்தது. உவமைக்கவிஞர் சுரதா அவர்களின் மகன் சுரதா கல்லாடன் அவர்கள் தொகுத்து மணிவாசகர் பதிப்பகம் வெளியிட்டுள்ள இந்த நூலின் சிறப்பு விலை உருவா 500 அளவில் விழாவில் விற்கப்பட்டது. பாவேந்தரின் அனைத்துக் கவிதைகளும் இந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. சென்னைப் பல்கலைக்கழகத்துப் பேராசிரியர் முனைவர் அரங்க. இராமலிங்கம் அவர்கள் சிறப்புரையாற்றி நூலின் சிறப்பையும் பதிப்பையும் பாராட்டிப் பேசினார்.

வியாழன், 1 மார்ச், 2012

முனைவர் மயில்சாமி அண்ணாதுரையின் கையருகே நிலா நூல் வெளியீட்டு விழா


அழைப்பிதழ்

அறிவியல் அறிஞர் சந்திரயான் புகழ் மயில்சாமி அண்ணாதுரை அவர்களின் கையருகே நிலா என்னும் வாழ்க்கை வரலாற்று நூல் சென்னையில் வெளியீடு காண உள்ளது. கலாம் பதிப்பகம் வெளியிட்டுள்ள இந்த நூல் வெளியீட்டுக்கு அனைவரையும் அழைத்து மகிழ்கின்றனர்.

இடம்: இரசியக் கலாச்சார மையம்(ஓட்டல் சோழா பின்புறம்), சென்னை-18

நாள்: 09.03.2012 வெள்ளிக்கிழமை,
நேரம்: மாலை 6 மணி

தலைமை: முனைவர் சிற்பி பாலசுப்பிரமணியன்

நூல் வெளியீடு: முனைவர் மன்னர் ஜவகர்(துணைவேந்தர்)

முதற்படி பெறுதல்: “தாமரைத்திரு” கவிப்பேரரசு வைரமுத்து

ஏற்புரை: அறிஞர் மயில்சாமி அண்ணாதுரை