நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வெள்ளி, 31 டிசம்பர், 2010

புதுவையில் குறும்படப் பயிற்சி வகுப்பில் இயக்குநர் வ.கௌதமன்


மு.இளங்கோவன்,புதுவை அரசு கொறடா அங்காளன்,இயக்குநர் வ.கௌதமன்

புதுவையில் நிழல் அமைப்பும், நண்பர்கள் தோட்டம் இலக்கிய அமைப்பும் இணைந்து குறும்படப் பயிற்சிப் பட்டறையை நடத்தியது.ஆறு நாள்கள் நடக்கும் பயிற்சியில் நேற்று(30.12.2010) சந்தனக்காடு தொடர், மகிழ்ச்சித் திரைப்படம் ஆகியவற்றை இயக்கிய இயக்குநர் வ.கௌதமன் அவர்கள் கலந்துகொண்டு மாணவர்களுடன் உரையாடினார்.தம் திரைத்துறைப் பட்டறிவுகளைப் பகிர்ந்துகொண்டார்.

முன்னதாக நம் இல்லத்துக்குக் குடும்பத்தினருடன் வந்த இயக்குநர் அவர்களுக்கு அன்பான வரவேற்பு நல்கி,சிறிய விருந்தோம்பல் செய்து மகிழ்ந்தோம். பிறகு நேராக புதுவை,திருவள்ளுவர் சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெறும் பயிற்சி வகுப்பில் மாணவர்களுக்குப் பயிற்சி வழங்க இயக்குநர் சென்றார்.தொண்ணூறு மாணவர்களுக்கு மேல் பயிற்சியில் கலந்துகொண்டனர்.இவர்களுக்குக் கதை, திரைக்கதை, இயக்கம், ஒளிப்பதிவு, படத்தொகுப்பு உள்ளிட்ட துறைகளில் பயிற்சி வழங்கப்படுகின்றது.

நானும் இயக்குநருடன் பயிற்சி வகுப்புக்கு உடன் சென்றேன். மாலை 4 மணிக்குச் சிறப்பு வகுப்பு தொடங்கியது.

நண்பர்கள் தோட்டம் திருநாவுக்கரசு வரவேற்றார். புதுவை அரசு கொறடாவும் முன்னாள் அமைச்சருமான திரு.அங்காளன் அவர்கள் கலந்துகொண்டு வாழ்த்திப் பேசினார். நிழல் திருநாவுக்கரசு இயக்குநர் கௌதமன் அவர்களை அரங்கிற்கு அறிமுகப்படுத்தினார்.

இயக்குநர் கௌதமன் தம் திரைத்துறைப் பட்டறிவுகளைப் பகிர்ந்துகொண்டார்.
இயக்குநருக்கு உரிய தகுதிகளை எப்படி வளர்த்துக்கொள்வது என்றும், நடிப்பை எவ்வாறு கற்றுக்கொள்வது என்றும் தம் பட்டறிவிலிருந்து விளக்கினார். இலக்கிய ஆர்வம் உடையவர்களாகவும்,சுற்றி நடக்கும் நிகழ்வுகளை உற்றுநோக்கும் இயல்புடையவர்களாகவும், அவ்வாறு நோக்கியவற்றை உள்ளுக்குள் தேக்கிக்கொள்பவராகவும் இருக்கும்பொழுது மிகச்சிறந்த நடிகர்களாக மிளிரமுடியும் என்று குறிப்பிட்டார். சந்தனக்காடு தொடரை உருவாக்கத் தாம் மேற்கொண்ட களப்பணிகளை நினைவுகூர்ந்தார்.

தம் மகிழ்ச்சித் திரைப்படத்தில் காட்சி அமைப்பதில் மேற்கொண்டு உத்திமுறைகளையும் விளக்கினார்.மாணவர்கள் எழுப்பிய பல்வேறு ஐயங்களுக்கு அவர் விரிவாக விடை தந்தார்.


பயிற்சிப்பட்டறை மேடையில் இயக்குநர் கௌதமன்,புதுவை அரசு கொறடா அங்காளன், நிழல் ப.திருநாவுக்கரசு


பயிலரங்கப் பொறுப்பாளர்களுடன் இயக்குநர் வ.கௌதமன்

திங்கள், 27 டிசம்பர், 2010

சிங்கப்பூரில் கரிகாலன் விருதுகள் வழங்கும் விழா



தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் சிங்கப்பூர் முஸ்தபா அறக்கட்டளை நிறுவியுள்ள தமிழவேள் கோ.சாரங்கபாணி ஆய்விருக்கை சார்பில் ஆண்டுதோறும் வழங்கப்படும் கரிகாலன் விருதுகள் பெறும் தகுதியாளர்களைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் அண்மையில் அறிவித்துள்ளது.

சிங்கப்பூர்,மலேசியா தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில் வழங்கப்படும் இவ்விருதுக்குச் சிங்கப்பூர், மலேசியா எழுத்தாளர்களின் படைப்புகள் வரவேற்கப்பட்டுத்
தகுதியான படைப்பாளர்களுக்கு ஆண்டுதோறும் கரிகாலன் விருது வழகுவது வழக்கம். அவ்வகையில் சிங்கப்பூர் எழுத்தாளருக்கு வழங்கப்படும் விருது சிங்கப்பூர்த் தேசியக் கல்விக்கழகத்தில் பணிபுரியும் முனைவர் சீதாலெட்சுமி, முனைவர் வனிதாமணி சரவணனுக்கு வழங்கப்படுகின்றது. இவர்கள் இருவரும் இணைந்து எழுதிய "தரமான தமிழ்ப்பேச்சு" என்னும் நூலின் அடிப்படையில் இவர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகின்றது.

மலேசியாவுக்கு வழங்கப்படும் விருது எழுத்தாளர் கே.பாலமுருகன் எழுதிய "நகர்ந்துகொண்டிருக்கும் வாசல்கள்" என்ற நூலுக்காக வழங்கப்படுகின்று.

தமிழ்ப் பல்கலைக்கழகம் அமைத்த நடுவர் குழு விருதுக்குரியவர்களைத் தேர்ந்தெடுத்தது.

கரிகாலன் விருது வழங்கும் விழா சிங்கப்பூரில் 01.01.2011(சனிக்கிழமை) மாலை ஆறு மணிக்கு நடைபெறுகின்றது.

வளர்தமிழ் இயக்கத்தின் தலைவர் வி.பி.ஜோதி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்கின்றார்.
தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ம.இராசேந்திரன், தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் அயல்நாட்டுத் தமிழ்க்கல்வித்துறைத் தலைவர் முனைவர் ஆ.கார்த்திகேயன் திரைப்படப் பாடலாசிரியர் முனைவர் நா.முத்துக்குமார் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்ற உள்ளனர்.

ஐக்கிய நாட்டு நிறுவன ஆசிய-பசிபிக் பொருளியல் சமூக ஆணைக்குழுவின் வணிக ஆலோசனைக் குழு உறுப்பினர் டாக்டர் முகமது இக்பால், மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர் பெ.இராசேந்திரன், சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத் தலைவர் நா.ஆண்டியப்பன் ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றுகின்றனர்.

அனைவரையும் சிங்கப்பூர் முஸ்தபா அறக்கட்டளை நிறுவுநர் முஸ்தபா அவர்கள் அழைத்து மகிழ்கின்றார்.

சிறப்பாக நடந்த கோவைத் தமிழ் இணையப் பயிலரங்கம்



கோவைக்கு முதன்முதல் கணிப்பொறியை அறிமுகம் செய்த கணிப்பொறி வல்லுநர் கு.வெ.கி.செந்தில் நிகழ்ச்சி பற்றிய மதிப்பீடு வழங்குதல்

கோவையில் பயிலரங்கம் நடத்தும் விருப்பத்தை நண்பர் பிரின்சு அவர்கள் சில மாதங்களுக்கு முன்பு தெரிவித்தார். உரிய காலம் அமையட்டும் என்று காத்திருந்தோம். எனக்கு அமைந்த விடுமுறையைப் பயன்படுத்தி மிகச்சிறப்பாக நடத்த ஆயத்தம் செய்தோம்.

கோவையில் கல்வியகம் என்னும் பெயரில் தொடர்ந்து கல்விப்பணி செய்த தமிழன்பர் கு.வெ.கி.ஆசான் ஐயா அண்மையில் மறைந்தார்கள். அவர்களின் நினைவாகப் பயிலரங்கம் ஒன்று நடத்தி மாணவர்களுக்கு இணையக்கலவி பற்றிய ஒரு விழிப்புணர்ச்சி செய்ய அவர் மகனாரும், குடும்பத்தாரும் இயக்கத்தாரும் விரும்பினர்.

நான் 25.12.2010 இரவு புதுவையில் புறப்பட்டு 26.12.2010 காலையில் கோவை சென்றேன். காலை பத்து மணியளவில் பயிலரங்கம் தொடங்கியது. பேராசிரியர்கள் துரை, இரவி(பேராசிரியர் கி.நாச்சிமுத்து ஐயா அவர்கள் தந்த தகவலின்பேரில் வந்தார்கள்), கூட்டுறவு த்துறை சார்ந்த பன்னீர்செல்வம், திரு.சிவக்குமார் உள்ளிட்ட நண்பர்கள் என் தொலைபேசி செய்தியறிந்து வந்தனர். வசந்தம் கு.இராமச்சந்திரன் ஐயா தலைமையில் தொடக்கவிழா நடந்தது. திரு.சந்திரசேகர் வரவேற்புரையாற்றினார்.பிரின்சு தமிழ் இணையப் பயிலரங்கத்தின் நோக்கம் பற்றி எடுத்துரைத்தார்.

நான் காலையில் 10.30 மணியிலிருந்து பகல் 1 மணி வரையிலும் பிற்பகல் 2.15 மணியிலிருந்து 4.15 மணி வரையிலும் தமிழ் இணையப் பயன்பாடு பற்றி பயிற்சியளித்தேன். மாணவர்கள்,தமிழ் ஆர்வலர்கள் ஊக்கமுடன் கற்றுக்கொண்டனர். தமிழ்த் தட்டச்சு தொடங்கிப் பல வகையான பயன்பாடுகளை இணையம் வழி எடுத்துரைத்தேன். திருவாளர் செந்தில் அவர்கள் கணிப்பொறித்துறை வல்லுநர் என்பதால் அவரிடம் அகண்டவரிசை இணைய இணைப்பு, கணிப்பொறிகள், அவை சார்ந்த பொருட்கள் சிறப்பாக இருந்தன. ஒலிபெருக்கி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் சிறப்பாக இருந்தது. மின்சாரமும் தடையில்லாமல் இருந்தது. பார்வையாளர்கள் நூறுபேர் வருவார்கள் என்று விழாக்குழுவினர் எதிர்பார்த்தனர். நூற்றைம்பது பேருக்கு மேல் கலந்துகொண்டு பயன்பெற்றனர். பிரின்சு பெரியார் இடையில் சில விளக்கங்கள் சொல்லி எனக்கு உதவியாக இருந்தார்.

இணையம் வழியாக அமெரிக்காவில் இருந்த வைரம், சென்னையில் இருந்த தமிழ்த் தேனீயுடன் உரையாடினோம். அரங்கினர் பார்த்து மகிழ்ந்தனர். நிகழ்ச்சியின் நிறைவாகக் கணிப்பொறி வல்லுநர் செந்தில் அவர்களும், பேராசிரியர் துரை அவர்களும் மதிப்பீட்டு உரை வழங்கினர். அனைவரிடமும் விடைபெற்று அறைக்கு வந்தேன்.

என் நண்பர் பேராசிரியர் அன்பு சிவாவுக்கு ஒரு தொலைபேசி பேசினேன். அடுத்த ஐந்து நிமையத்தில் அறைக்கு வந்து சேர்ந்தார். அங்கிருந்தபடியே இந்துத்தான் கல்லூரிப் பேராசிரியர் மணிவண்ணன் அவர்களிடம் பேச வாய்ப்பை உருவாக்கினார். நலம் வினவினோம்.

பேராசிரியர் மணிவண்ணன் அவர்களைச் செம்மொழி மாநாட்டில் சந்தித்தேன். என் இணையம் கற்போம் நூலை அப்பொழுது அவர்கள் வாங்கினார்கள்.அதன்பிறகு இணையத்தைத் தொடர்ந்து பயன்படுத்தி வருவாக உரைத்தார்கள்.அன்பு சிவாவும் முன்பு ஒரு பயிற்சியில் கலந்து கொண்டவர். இப்பொழுது தமிழ்த்தட்டச்சு அவருக்கு எளிதாகிவிட்டது. தட்டச்சில் புகுந்து விளையாடுகின்றார்.

மீண்டும் விழாக்குழு சார்பில் கு.வெ.கி.செந்தில்,சந்திரசேகர், தமிழ்முரசு ஆகியோர் அறைக்கு வந்து விருந்தோம்பல் செய்து இரவு என்னை வழியனுப்பி வைத்தனர்.


பிரின்சு என்னாரெசு பெரியார் இணைய தளங்களின் உள்ளடக்கம் பற்றி உரையாற்றுதல்


பதிவர் இலதானந்து தம் பதிவுலகப் பட்டறிவை விளக்குதல்


பேராசிரியர்கள் இரவி, துரை, திரு.பன்னீர்செல்வம்(கூட்டுறவுத்துறை)உள்ளிட்டோர் பார்வையாளர்கள் வரிசையில்


பேராசிரியர் துரை அவர்கள் பார்வையாளர்கள் சார்பில் மதிப்பீடு வழங்கல்


ஆர்வமுடன் பங்கேற்ற மாணவர்கள்

ஞாயிறு, 26 டிசம்பர், 2010

கோவை பயிலரங்கம் உணவு இடைவேளைக்குப் பிறகு தொடங்கியது...


பார்வையாளர்கள் ஒரு பகுதி

கோவையில் இன்று26.12.2010 காலை 10.30 மணியளவில் தொடங்கியது.
கல்வியகம் அரங்கில் தொடங்கிய பயிலரங்கில் திரளான மாணவர்கள்,
தமிழ் ஆர்வலர்கள்,வலைப்பதிவர்கள் கலந்துகொண்டனர். பிரின்சு பெரியார் அறிமுக உரையாற்றினார். தலைமை வசந்தம் இராமச்சந்திரன்.புதுச்சேரி முனைவர் மு.இளங்கோவன் கலந்துகொண்டு பயிற்சி வழங்கினார். இலதானந்து கலந்துகொண்டு தம் வலைப்பதிவு அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். பேராசிரியர்கள் துரை,இரவி ஆகியோர் கலந்துகொண்டு
சிறப்பித்தனர்.கோவை சார்ந்த தமிழ் ஆர்வலர்கள் பலர் கலந்துகொண்டு பயன்பெற்று வருகின்றனர். தமிழ்த்தேனீ, அமெரிக்காவிலிருந்து வைரம் ஸ்கைப்பில் வந்து உரையாடினர். மாணவர்களுக்கு இணையப் பயன்பாட்டின் பல கூறுகளும் பயிற்றுவிக்கப்படுகின்றன.
உணவு இடைவேளைக்குப் பிறகு மீண்டும் பயிலரங்கம் தொடர்கின்றது.


பார்வையாளர்கள் ஒரு பகுதி

சனி, 25 டிசம்பர், 2010

கோவையில் தமிழ் இணையப் பயிலரங்கம்

கோவை பெரியார்களம் அமைப்பின் சார்பில் 26.12.2010 காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை தமிழ் இணையப் பயிலரங்கம் நடைபெறுகின்றது.

இடம்: கல்வியகம், கோவை.

வசந்தம் கு.இராமச்சந்திரன் தலைமையில் தொடக்க விழா நடைபெறுகின்றது. ம.சந்திரசேகர் வரவற்புரையாற்றுகின்றார். ச.பிரின்சு என்னாரெசு பெரியார் அறிமுகவுரையாற்றுகின்றார்.

புதுச்சேரி முனைவர் மு.இளங்கோவன் கலந்துகொண்டு தமிழ் இணையம் குறித்த பயிற்சியை வழங்குகின்றார்.

சு.வேலுசாமி நன்றியுரையாற்றுகின்றார்.

தொடர்புக்கு: 94442 10999 , 98943 65302





வெள்ளி, 24 டிசம்பர், 2010

குறுந்தொகை இன்பம்

புதுச்சேரியில் எனக்கு வாய்த்த நண்பர்களுள் பிரஞ்சுப் பேராசிரியர் வெங்கட சுப்பராய நாயக்கர் குறிப்பிடத்தக்கவர். வாழ்க்கையில் பல தெளிவுகளைக் கண்டு உணர்ந்து அதன்படி அமைதியாக வாழ்ந்து வருபவர். அறிஞர் மு.வ. போலும் குறிக்கோள் வாழ்க்கை வாழ்பவர். நம் போல் உலகியல் மாந்தர்களால் அவரின் சிறப்பை உணர இயலாது.

பேராசிரியர் அவர்கள் அவ்வப்பொழுது தமிழ் இலக்கியம் சார்ந்து உரையாட நம் இல்லத்திற்கும் அலுவலகத்திற்கும் வருவார். பிரஞ்சு இலக்கியம் பற்றியும் உரையாடுவோம். பல பிரஞ்சு சிறுகதைகளை மொழிபெயர்த்து வழங்கும்படி அவரைத் தூண்டிப் பெற்று இதழ்களில் வெளியிட்டதும் உண்டு.

அண்மையில் குறுந்தொகையைப் பிரஞ்சுமொழியில் மொழிபெயர்த்து வழங்கும்எண்ணத்தைப் பேராசிரியர் முன்மொழிந்ததும் அதற்குரிய திட்டமிடலில் கலந்துகொண்டேன். அவர்களும் ஈடுபாட்டுடன் பிரஞ்சுமொழியில் மொழிபெயர்த்து வருகின்றார்கள். அது தொடர்பாக அவ்வப்பொழுது பல ஐயங்களை எழுப்புவார்கள். இப்பொழுது பேராசிரியர் நாயக்கர் அவர்கள் குறுந்தொகை சார்ந்த பல செய்திகளை ஆழமாக அறிந்துள்ளார் என்பதறிந்து மகிழ்கின்றேன். இதே நிலையில் அவர் உழைத்தால் சங்க நூல்களை மிகச்சிறப்பாக அவரால் பிரஞ்சுமொழியில் மொழிபெயர்க்கமுடியும்.பிறநாட்டு அறிஞர்கள் பெயர்ப்பதற்கும் தமிழைத் தாய்மொழியாக அறிந்தவர்கள் பெயர்ப்பதற்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு.

பேச்சின் ஊடே கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் செழுமையான சில பாக்களையும் பிரஞ்சில் மொழிபெயர்க்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டேன்.

இப்பொழுது பிரஞ்சுப் பேராசிரியரின் வினாக்கள் எனக்குக் குறுந்தொகையைப் புதிய பார்வையில் பார்க்க வேண்டும் என்ற ஒரு தூண்டுதலை உண்டாக்கியுள்ளது. கல்லூரியில் பயின்றபொழுது குறுந்தொகை உ.வே.சாமிநாதையர் பதிப்பைப் படித்தோம். அதன் சிறப்பை எழுதி உணர்த்தமுடியாது. பெரும்பேராசிரியர் உ.வே.சா. போலும் உழைக்க இன்று ஆள் இல்லை.

பேராசிரியர் வெங்கட சுப்பராய நாயக்கர் அவர்கள் குறுந்தொகையைப் பெயர்த்து வரும்பொழுது அவருக்கு ஏற்படும் ஐயங்களைப் போக்கிக்கொள்ள தமிழ் இலக்கணம், இலக்கியம் பயின்றவர்கள், விலங்கியல், நிலைத்தினையியல் பயின்றவர்களை அண்மிப் பல உண்மைகளைக் கண்டுகாட்டியுள்ளார். மருத்துவம் சார்ந்த சில நூல்களையும், அகரமுதலிகள்,பல்வேறு குறுந்தொகைப் பதிப்புகளையும் ஒப்பிட்டு மிகச்சிறந்த மொழிபெயர்ப்பாகப் பிரஞ்சுமொழியில் குறுந்தொகையை உருவாக்கி வருகின்றார்.

அவ்வாறு பணிசெய்யும் பேராசிரியரின் தந்தையார் அவர்கள் உடல் நலமிழந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் என்று அறிந்து ஓரிரு நாளுக்கு முன் மருத்துவமனைக்குச் சென்று பார்த்து வந்தேன். தந்தையாருக்குப் பணிவிடை செய்தபடி ஓய்வான நேரத்தில் தம் குறுந்தொகை மொழிபெயர்ப்புப் பணிகளையும் செய்து வருகின்றார். நான் இருமுறை சென்று அவருக்கு உதவியாக உரையாடினேன்.
குறுந்தொகையில் எங்களுக்கு ஏற்பட்ட ஐயங்களை எழுதினால் அறிஞர்களுக்கு அது உவப்பான செய்தியாக இருக்கும் என்று எழுதுகின்றேன்.

குறுந்தொகையில் யானை குளகு(தழை-செந்தமிழ் அகராதி ந.சி.கந்தையா) என்பதை உண்டதும் அதற்கு மதம் பிடிக்கும் என்று ஒரு குறிப்பு வருகின்றது. குளகு என்பது தழையா? செடியா? கொடியா? பூவா? என்பது அறியாமல் திகைத்தோம். தழை என்றே அறிஞர்கள் குறிக்கின்றர்.அவ்வாறு என்றால் அந்தத் தழை எப்படி இருக்கும்? இன்று உள்ளதா என்று அறிய விரும்பினோம். பி.எல்.சாமி இது பற்றி என்ன எழுதியுள்ளார் என்று பார்க்க வேண்டும் என்று பல நூலகங்களுக்கு அலைந்து அவர் எழுதிய கழகப் பதிப்பிலான நூல் ஒன்றைப் பெற்றேன்.

அதில் குளகு பற்றிய விவரம் இல்லை. நாம் அறிந்த புன்னை,காந்தள்,முருக்கம்,தாழை போன்றவற்றை அறிஞர் சாமி அவர்கள் மிகச்சிறப்பாக விளக்கியுள்ளார். மேலும் காட்டுத்துறையில் அதிகாரியாகப் பணிபுரியும் என் அருமை நண்பர் திரு.இலதானந்து அவர்களுக்கு இதுபற்றி விவரம் வேண்டி மின்னஞ்சல் விடுத்தேன்.அவரும் வழக்கம்போல் தரும் விடைகளைத்தான் தந்தார். நாகர்கோயில் திரு.செல்வதரனைத் தொடர்புகொண்டேன். அவர் மலையின மக்களுடன் தொடர்புடையவர்.அவர் வினவிச் சொல்வதாகத் தப்பித்தார். குளகு பற்றி மேலும் தொடர்புடையவர்களையும் வினவியவண்ணம் உள்ளேன்.இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய செய்தி என்பதால் உண்மை காண சில காலம் ஆகலாம். இது நிற்க.

காமங் காம மென்ப காமம்
அணங்கும் பிணியு மன்றே நுணங்கிக்
கடுத்தலுந் தணிதலு மின்றே யானை
குளகுமென் றாண்மதம் போலப்
பாணியு முடைத்தது காணுனர் பெறினே(136)

(பொருள்: காமம் காமம் என்று உலகினர் அதனைக் குறை கூறுவர்; அக் காமம் புதியதாகத் தோன்றும் வருத்தமும் அன்று; உடலில் தோன்றும் நோயும் அன்று.
கடுத்தலும்(மிகுதலும்),தணிதலும் இன்று; யானை குளகு என்ற தழையுணவை மென்று தின்று அதனால் கொண்ட மதத்தைப் போல கண்டு மகிழ்வாரைப் பெற்றால்
அக்காமம் வெளிப்படும் சிறப்பினை உடையது).

அடங்கியிருந்த யானையின் மதம் குளகு என்ற தழையுணவை உண்டதும் வெளிப்படுவதுபோல ஊழின் வலிமையல் காணற்குரியவரைக் காணப்பெறின்
இயல்பாக உள்ளத்தில் அடங்கியிருந்த காமம் வெளிப்படும் என்று உவமையை விரித்தால் பொருள் புலப்படும்.

சிந்தாமணியிலும் நச்சர் உரையில் " குளகுபோல் மதத்தை விளைவிப்பவள் இவளும் ஆதலால் விடுத்தலரிதென்றான்"(சிந்தமணி உரை 750) என்று குளகு பற்றிக் குறித்துள்ளார்.

மேலும் மதம் கொண்ட யானையின் மத்தகம் வாழையின் குருத்தைத் தடவும்பொழுது மதம் அடங்கும்(வலிமை அழியும்) என்று ஒரு குறிப்பு வருகின்றது.

" சோலை வாழைச் சுரிநுகும் பினைய
அணங்குடை யருந்தலை நீவலின் மதனழிந்து
மயங்கு துயருற்ற மையல் வேழம்"( குறுந்தொகை 308)

யானைக்கும் வாழைக்கும் உள்ள தொடர்பைப் பற்றி (அகம் 302-1-4),அகம் 8- 9-11) என்னும் சங்க நூல் வரிகளாலும் இதனை உறுதிசெய்துகொள்ளலாம்.

எனவே யானைக்குக் குளகு உண்டால் மதம் பிடிக்கும் என்றும் வாழை இலையின் குருத்து மதத்தை நீக்கும் என்று குறுந்தொகை வழியாக அறியமுடிகின்றது

வாழையினால் யானையின் வலி கெடும் என்றது " யானைக்கு வாழைத்தண்டு,ஆளுக்குக் கீரைத்தண்டு" என்று சிற்றூரில வழங்கும் பழமொழியாலும் உணரலாம் என்று உ.வே.சா பழமொழியை எடுத்துக்காட்டுகின்றார்.

இது பற்றி பிரஞ்சு நாட்டுப் பேராசிரியர் செவியார் அவர்களிடம் உரையாடியபொழுது அவர் புதுமைச்செய்தியைப் பகிர்ந்துகொண்டார்.அவர் தொல்காப்பியம் சேனாவரையர் உரையை எழுத்தெண்ணிக் கற்றுப் பிரஞ்சுமொழியில் மொழிபெயர்த்தவர்.சேனாவரையர் உரையில் இடம்பெறும் (தொல்.சொல். நூற்பா 37 உரை) "யானைநூல் வல்லானொருவன்" என்னும் தொடரை எடுத்துக்காட்டி யானை இலக்கணம் குறிப்பிடும் நூல் தமிழில் இருந்ததையும் "கஜ சாஸ்திரம்" என்னும் நூல் சரசுவதிமகால் நூலகத்தில் உள்ளது என்றும் குறிப்பிட்டு யானை நூல் படித்தால் நான் தேடுவதற்கு விடை கிடைக்கலாம் என்று ஒரு குறிப்பை விளக்கினார்.
இதுவும் நிற்க.

குறுந்தொகை 394 ஆம் பாடலிலும் ஓர் ஐயத்தைப் பேராசிரியர் வெங்கட சுப்பராய நாயக்கர் எழுப்பினார்.

"முழந்தா ளிரும்பிடிக் கயந்தலைக் குழவி
நறவுமலி பாக்கத்துக் குறமக ளீன்ற
குறியிறைப் புதல்வரொடு மறுவந் தோடி
முன்னா ளினிய தாகிப் பின்னாள்
அவர்தினை மேய்தந் தாங்குப்
பகையா கின்றவர் நகைவிளை யாட்டே"(குறுந்தொகை 394)

பொருள்: முழந்தாளையுடைய கரிய பிடியினது மென்மையான தலையையுடைய கன்று, கள் மிகுந்த மலைப்பக்கத்தில் உள்ள ஊரில் குறத்தி பெற்ற குறிய கைச்சந்தையுடைய பிள்ளைகளோடு சுற்றி விளையாடி இனிமை தந்தது. முன்பு இனிமை தந்த யானைக்கன்று வளர்ந்து பின்னாளில் அவர்களின் தினையை மேய்ந்து துன்பம் தரும். அதுபோல் தலைவன் முன்பு இனியவனாக இருந்து மகிழ்ச்சியைத் தந்தான்.இப்பொழுது அவன் நட்பு அமையாததால் துன்பம் தருகின்றான் என்பது பாடலின் பொருள்.

இப்பாடல், வரைவை(திருமணத்தை) இடைவைத்துத் தலைவன் பிரிந்த காலத்து ஆற்றாளாகிய தலைவியை நோக்கி, தலைவன் முன்பு இனியனாகத் தோன்றி இப்பொது இன்னாமைக்கு ஏதுவானான் என்று தோழி கூறியதாகத் துறை விளக்கம் உள்ளது.

இங்குக் குறியிறை என்பது என்ன? என்று பேராசிரியர் நாயக்கர் அவர்கள் வினா எழுப்பினார்.
நன்று கடாவினீர்கள் என்று நான் உரைத்துக் குறியிறை என்பது என்ன எனப் பெருமழைப் புலவர் உரையைப் பார்த்தேன். குறிய இறை என்பது யகரம் குறைந்து குறியிறை என்று விளக்கம் இருந்தது. உ.வே.சா குறியிறை என்பதற்குக் குறிய கைச்சந்தையுடைய என்று விளக்கம் தருகின்றார்.இறை என்பதற்கு முன்கை என்று ஒருபொருள் உண்டு.அதன் காரணமாக உ.வே.சா.அவர்கள் இவ்வாறு குறித்தனர் போலும்.

பாடலை இயற்றியவர் உவமையால் பெயர் பெற்ற புலவர் ஆதலால் குறியிறையார் எனப்பட்டார்ர். எனவே குறியிறை பற்றி ஆய்வது இங்கு ஆய்வுக்கு ஆழமான காரணமானது. எனவே குறியிறை என்பதைத் தெளிவாக உணர்த்த வேண்டியுள்ளது என நினைந்து முதுபேரறிஞர் சோ.ந.கந்தசாமி ஐயாவிடம் என் வேட்கையுரைத்தேன்.ஐயா அவர்கள் மிக எளிதில் தீர்த்து வைத்தார்கள்.

குறியிறை என்பது சிறுவீடுகளில் உள்ள தாழ்ந்த பகுதியைக் குறிக்கும் இறவாறம்(பேச்சு வழக்கில் இறவாணம்) என்று குறிப்பிட்டார். மேலும் புறநானூற்றின் 129 ஆம் பாடலில் உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் பாடிய பாடலில் "குறியிறைக் குரம்பைக் குறவர் மாக்கள்" எனவரும் பாடலடியை எடுத்துக்காட்டி அதன் பழைய உரையில் குறியிறை என்பது குறிய இறப்பையுடைய சிறிய மனை என்று இடம்பெறுவதை ஐயா சோ.ந.க அவர்கள் குறிப்பிட்டு உ.வே.சா அவர்கள் இந்தத் தொடரைக் குறுந்தொகையில் உரைவரையும்பொழுது எடுத்துக்காட்டடாமல் போனமைக்குக் காரணம் விளங்கவில்லை என்றார்.

காளமேகப் புலவன் சிவனையும் சிட்டுக்குருவியையும் இருபொருள்படப் பாடும்பொழுது இறப்பு என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளதையும் அப்பேரறிஞர் இணைத்துக்காட்டினார். மகிழ்ந்தேன்.அதாவது குறுகிய சிறு வீட்டுப்பகுதியில் விளையாடிய குறக்குடிச்சிறார் என்ப்பொருள் காண்டல் சிறக்கும் என நினைக்கின்றேன்.

இவ்வாறு சில ஐயங்களைப் பேராசிரியர் எழுப்பியதும் நுண்பொருள் காணும் நோக்கில் குறுந்தொகையைச் சிந்தித்து வருகின்றேன்.

முன்பு ஒருமுறை வகுப்பில் ஒருமணி நேரம் ஒரு பாடலைப் பாடமாகப் பயிற்றுவித்தேன். குறுந்தொகையின் அந்த நெஞ்சங் கவர்ந்த பாடல் நினைவுக்கு வந்தது.

தலைவன் இரவுப்பொழுதில் தலைவியைச் சந்திக்க வருகின்றான். அவனுக்குத் தோழி கூறியது.

கடும் மழைக்காலம். எங்கும் கருமுகில்கள் திரண்டு மழைத்துளி வீழ்வதால் வானத்தைக் காண முடியவில்லை. நிலம் முழுவதும் நீர்ப்பெருக்கு. எனவே பாதை தெரியவில்லை. கதிரவன் மறைந்த இருட் காலம் ஆதலின் பலரும் உறங்கும் நடு இரவு. வேங்கை மரத்தின் மலர்கள் மணம் வீசும் எங்கள் ஊருக்கு எவ்வாறு வந்தனையோ? உயர்ந்த மலையையுடையத் தலைவனே! என்று தோழி வினவுகின்றாள்.

இந்த வினவுதலில் இரவுப்பொழுதில் வந்தால் உயிருக்கு அச்சம் ஏற்படும் எனவும் எனவே தலைவியை விரைவில் வரைந்துகொள்வாயாக(திருமணம் முடித்துக்கொள்வாயாக) எனவும் குறிப்பை இப்பாடலில் பாவலர் பொதிந்து வைத்துள்ளார்.

மழைக்காலக் காட்சியை இதைவிட ஒரு புலவனால் மிகச்சிறப்பாகப் பாடிவிடமுடியாது அல்லது ஓவியனால் ஒரு படம் வரந்து விளக்கிவிடமுடியாது.அல்லது திரைக்கலைஞனால் காட்சிப்படுத்திவிட முடியாது என்ற எண்ணத்தை இப்பாடல் உணர்த்துகின்றது.

"பெயல்கண் மறைத்தலின் விசும்புகா ணலையே
நீர்பரந்த தொழுகலி னிலங்கா ணலையே
எல்லை சேறலி னிருள்பெரிது பட்டன்று
பல்லோர் துஞ்சும் பானாட் கங்குல்
யாங்குவந் தனையோ வோங்கல் வெற்ப
வேங்கை கமழுமெஞ் சிறுகுடி
யாங்கறிந் தனையோ நோகோ யானே" (குறுந்தொகை 355)

பாடலின் பொருள்: உயர்ந்த மலைநாட்டுக்கு உரிய தலைவனே! மழை எங்கும் பெய்து பரவி இடத்தை மறைப்பதால் வானத்தைக் காண இயலாது. அந்த மழையின் நீர் எங்கும் நிறைந்து இருப்பதால் நிலத்தையும் காண இயலாது. மேலும் கதிரவன் மறைந்ததால் இருளும் மிகுதியாக உள்ளது; இந்த நிலையில் பலரும் உறங்கும் நள்ளிரவுப்பொழுதில் வேங்கை மலர் மணம் வீசும் எமது சிற்றூரை எங்ஙனம் அறிந்து வந்தனையோ?

இவைபோல் இன்னும் சில பாடல்களை அசைபோடுவோம்!.தமிழ் இலக்கிய இன்பம் நுகர்வோம்.

புதன், 22 டிசம்பர், 2010

தமிழ்ப்பேரறிஞர் ஈழத்துப்பூராடனார் இயற்கை எய்தினார்!


ஈழத்துப்பூராடனார் ( 13.12.1928- 20.12.2010)


  தமிழீழத்தில் பிறந்து கனடாவில வாழ்ந்து வந்த தமிழ்ப்பேரறிஞர் ஈழத்துப்பூரடனார் 20.12.2010 இயற்கை எய்தினார் என்ற செய்தியை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்து அவர் நினைவாக இக்கட்டுரை வெளியிடப்பெறுகின்றது.

  ஈழத்து அரசியல் போராட்டம் காரணமாகக் கனடாவில் வாழ்ந்து வந்த ஈழத்துப்பூராடனார் தமிழீழத்தில் அமைந்துள்ள மட்டக்களப்பு மாவட்டத்தைச் சார்ந்த செட்டிப்பாளையம் என்னும் ஊரில் வாழ்ந்த நாகமுத்து சாமுவேல் கதிர்காமத்தம்பிக்கும் வள்ளியம்மை அம்மாளுக்கும் மகனாக 13.12.1928 இல் பிறந்தவர். இவர்தம் இயற்பெயர் செல்வராசகோபால் ஆகும். செட்டிப்பாளையம் என்னும் ஊரில் பிறந்தாலும் தேற்றாத்தீவில் வாழ்ந்தவர்.

  இவர் தொடக்கக்கல்வியைக் குருக்கள்மடம் மெதடிசுத மிசன் தமிழ்ப்பாடசாலையிலும் உயர் கல்வியினை மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியிலும்,மருதானை கலைநுட்பக் கல்லூரியிலும், குடந்தையிலும் (தமிழகம்) பயின்றவர். ஈழத்தில் தம் ஆசிரியர் பணியை முப்பத்தைந்து ஆண்டுகள் செய்து 1985 ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றார். கனடாவில் தம் குடும்பத்தினருடன் வாழ்ந்துவந்த ஈழத்துப்பூராடனார்க்கு அகவை எண்பத்திரண்டு. தள்ளாத அகவையிலும் தமிழ்ப்பணிபுரிவதில் சோர்வின்றிக் காணப்பட்டவர். உடலில் பல்வேறு நோய்கள் காணப்பட்டாலும் அவற்றையெல்லாம் பொருட்படுத்தாது எழுதுவதிலும், அச்சிடுவதிலும், அவற்றை உரிய இடங்களுக்கு அனுப்பிவைப்பதிலும், அன்பர்களுக்கு மடல் வரைவதிலும் ஈடுபட்டு விருப்போடு செயல்பட்டு வந்தவர். இவர் இளம் அகவையில் பெற்ற பல்வேறு பயிற்சிகள் இவருக்குத் தமிழ்ப்பணி புரிவதற்குத் துணையாக இருந்தது.

  ஈழத்துப்பூராடனார் இளம் அகவையில் ஆசிரியர் பயிற்சி பெற்றதுடன் அமையாமல் ஓவியம். தட்டச்சு, சுருக்கெழுத்து, அச்சுக்கலை. ஓமியோ மருத்துவம் முதலானவற்றிலும் பயிற்சிபெற்றவர். தமிழ்மொழியில் நல்லபுலமை பெற்றதுடன், ஆங்கிலம், சிங்களம் முதலான மொழிகளையும் நன்கு அறிந்தவர். ஈழத்துப்பூராடனாரின் குடும்பம் தமிழறிவு பெற்ற குடும்பமாகும். இவரின் பாட்டனார் புலவர் இ.வ.கணபதிப்பிள்ளை, பெரியதந்தை வரகவி சின்னவப் புலவர், கலாநிதி ஏ.பெரியதம்பிப் பிள்ளைப்பண்டிதர் முதலானவர்கள் வழியாக இவருக்குத் தமிழறிவும் தமிழுணர்வும் கிடைத்தது.

  ஈழத்துப்பூராடனார் தமக்குப் பதினேழு அகவை இருக்கும்பொழுது பாடல் வரைந்து அதனை வீரகேசரி இதழில்(1945 சனவரி) வெளிவரச் செய்தார். அதனைக் கண்ட புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை ஈழத்துப்பூராடனாரை அழைத்து எழுத்துத் துறையில் ஊக்கப்படுத்தினார். அதன்பிறகு ஆசிரியப்பயிற்சி மாணவராக இருந்தபொழுது இலங்கையிலிருந்து வெளிவந்த தினகரன், வீரகேசரி, சுதந்திரன், ஈழகேசரி, மின்னொளி, சிறீலங்கா முதலான ஏடுகளில் எழுதி,கதை, கட்டுரைகள்,தொடர்கள் வெளிவந்தன. அதுபோல் தமிழகத்திலிருந்து வெளிவந்த தமிழன், கல்கி, திங்கள், ஆனந்தவிகடன், கலைமகள் போன்ற ஏடுகளிலும் எழுதினார்.1954 ஆம் ஆண்டிலிருந்து இலங்கை வானொலியில் ஈழத்துப்பூராடனாரின் பேச்சு ஒலிபரப்பாகத்தொடங்கியது.

  ஈழத்துப்பூராடனார் இலக்கிய ஆர்வம் நிறைந்தவர் என்பதற்கு மேலும் ஒரு சான்று அவர்தம் இலங்கையில் தேற்றாத்தீவு இல்லத்தில் அமைந்திருந்த நூலகம் ஆகும். அங்கிருந்த நூல்கள் யாவும் ஈழத்துப்பூராடனாரால் சிறப்பாகப் பராமரிக்கப்பட்டன. கட்டம் செய்யப்பெற்று, வரிசை எண் இடப்பட்டு, பதிவேட்டில் முறையாகப் பதிவு செய்யப்பட்டிருந்தது. பல்வேறு அரிய நூல்களின் சேமிப்பகமாகக் காட்சியளித்தது. ஆனால் அங்கு இருந்த போர்ச்சூழலும் குடும்பம் கனடாவிற்குக் குடிபெயர்ந்ததாலும் நூல்கள் சரியாகப் பராமரிக்க முடியாமல் சிதைந்தன.

  இந்நூலகத்தில் தமிழ். ஆங்கிலம்,சிங்கள மொழிகளில் அமைந்த பல்லாயிரம் நூல்கள் இருந்துள்ளன.இவற்றுள் கலைக் களஞ்சியம், அகராதிகள், இலக்கண, இலக்கியநூல்கள், ஆய்வுநூல்கள்,நெடுங்கதைகள், மருத்துவம், சோதிடம், ஓவியம், அறிவியல், வடமொழி மறைநூல்கள், சித்தாந்த நூல்கள், சைவம். வைணவம், கிறித்தவம், இசுலாம், பொளத்தம் சார்ந்த நூல்கள் இடம்பெற்றிருந்தன. மேலும் இதுநாள்வரை வெளிவந்திருந்த திரைப்படப் பாடல்கள், வசனங்கள் முதலியனவும் இருந்தன. இவற்றுடன் சிற்றிலக்கிய நூல்கள், அம்மானை, பெரியெழுத்துக் கதைகள், 1938 இலிருந்து இலங்கைப் பாடசாலைகளில் பயன்பாட்டிலிருந்த புத்தகங்கள், செய்யுள் நூல்கள், கணக்கு, வரலாறு ,புவியியல், பொருளியல், ஆசிரியர் பயிற்சியில் கற்பிக்கப்பட்ட உளவியல் நூல்கள், கல்விநூல்கள், கற்பித்தல் முறைகள், தேர்வுவினாக்கள், பல்வேறு இதழ்கள், இதழ்களின் நறுக்குகள், பல்வேறு கைப்படிகள் எனப் பல்வேறு நூல்கள் இருந்தன. இவை ஈழத்துப்பூராடனாரால் பெரும் பொருள்செலவில் வாங்கிப் பாதுகாக்கப்பட்டவை.

  ஈழத்துப்பூராடனார் ஆசிரியராகப் பணிபுரிந்தாலும் தந்தையார் நடத்தி வந்த மனோகரா அச்சகத்தையும் தொடர்ந்து கவனித்து வந்தார். தந்தையாரின் மறைவுக்குப் பின்னர் அச்சகப்பொறுப்பு முழுவதையும் கவனிக்க வேண்டியநிலை ஈழத்துப்பூராடனாருக்கு அமைந்தது.1980-1984 ஆம் ஆண்டுகளில் ஈழ விடுதலைப்போர் வடிவம் பெற்றபொழுது போராட்டக் குழுவினர்க்குத் துண்டறிக்கை அச்சிட்டுஅளித்தமையை அறிந்த அரசும் காவல்துறையும், இராணுவமும் இவரின் நடவடிக்கையைக் கண்காணிக்கத் தொடங்கின.பல்வேறு தொல்லைகளுக்கு ஆளானார்.எனவே இனியும் தமிழீழத்தில் தங்கியிருப்பது சரியில்லை என முடிவெடுத்துத் தம் மனோகரா அச்சகத்தை நண்பர்களிடம் ஒப்படைத்துவிட்டு,கனடாவிற்குக் குடிபெயர்ந்தார். 

  ஈழத்துப்பூராடனார் ஈழத்தில் வாழ்ந்தபொழுது இவர்தம் தமிழ்ப்பற்று அறிந்த அரசினர் இவர்தம் ஈழத்துப்பூராடனார் என்னும் புனைபெயரில் அமைந்திருந்த ஈழம் என்னும் சொல்லைப் பயன்படுத்தக்கூடாது எனக்கண்டித்தனர்.(1979முதல் அரசினர் ஈழம் என்ற சொல்லைப் பயன்படுத்தியவர்ளைக் கண்காணிக்கத் தொடங்கியமையை நினைவிற்கொள்க).

  ஈழத்துப்பூராடனார் 1985 இல் கனடாவிற்குக் குடும்பத்துடன் குடிபெயர்ந்தார். அங்குச் சென்றபிறகு தமிழர்கள் பலரும் குடிபெயர்ந்து வசிக்கத் துணையாக இருந்தார்.தமிழ்மக்கள் பயன்பெறும்வண்ணம் பல்வேறு நிறுவனங்களை ஏற்படுத்திப் பல பணிகளையும் செய்தார்.அவற்றுள் ரிப்ளக்சு அச்சகம், சீவா பதிப்பகம், நிழல் என்னும் பெயரில் இதழ் நடத்தியது, தமிழ்கற்பிக்கும் பணியில் ஈடுபட்டமை, உலகத்தமிழ்ப் பண்பாட்டு இயக்கம்-கிளை ஏற்படுத்தியமை, இவர்தம் மகன் சார்ச் இதயராச் அவர்கள் வழியாகத் தமிழ்மகன் என்னும் திரைப்படம் உருவாக்கியமை, தம் மக்களுடன் இணைந்து தமிழ்க்கணிப்பொறி எழுத்துகளைப் பயன்படுத்தி முதன்முதல் தமிழ்நூல் வெளியிட்டமை (பெத்லேகம் கலம்பகம்)(1986) முதலியன இவர்தம் பணிகளுள் குறிப்பிடத்தக்கன.

ஈழத்துப்பூராடனார் எழுத்துப்பணிகள்

  ஈழத்துப்பூராடனார் இளம் அகவையிலே எழுதத் தொடங்கிவிட்டார். தம்பெயரிலும்,கதிர்,கதிர்வள்ளிச்செல்வன், பூராடனார், ஈழத்துப்பூராடனார் என்னும் பெயர்களிலும் பல்வேறு கதை, கட்டுரை, திறனாய்வு, கவிதை, மொழிபெயர்ப்புகள் எனப் படைத்துள்ளார்.இவர்தம் எழுத்தாளுமை பதிப்பு, படைப்பு, மொழிபெயர்ப்பு, திறனாய்வு, தொகுப்பு என்று பன்முகத்தன்மை கொண்டது.

பதிப்புப்பணிகள்

  ஈழத்துப்பூராடனார் தாம் பல நூல்களை எழுதியதுடன்,தம்மையொத்த எழுத்தாளர்கள் நூல்களை வெளியிடவும்,பதிப்பிக்கவும் பல்வேறு வகைகளில் துணை நின்றுள்ளார்.ஈழத்தில் இருந்தபொழுது தம்முடைய மனோகரா அச்சகம் வழியும்.கனடாவில் ரிப்ளக்சு அச்சகம் வழியும் பல்வேறு நூல்கள் வெளிவரத் துணையாக இருந்துள்ளார்.மேலும் தமிழகத்தில் நல்ல நூல்கள் பதிப்பிக்கவேண்டும் என்ற நோக்கில் இவர் நெறிப்படுத்தலில் பொன்மொழிப் பதிப்பகம் செயல்படுகின்றமை இங்குக் குறிப்பிடத்தகுந்தது (பொன்மொழிப் பதிப்பகம், இடைக்கட்டு, உள்கோட்டை (அஞ்சல்), கங்கைகொண்டசோழபுரம் (வழி).அரியலூர் மாவட்டம்-612901)

  ஈழத்துப்பூராடனார் எழுதத் துடிக்கும் நூலாசிரியர்களை இனங்கண்டு அவர்களின் நூல்களைத் தாமே முயன்று பதிப்பிக்கும் பணியிலும் ஈடுபட்டவர்.இவருடைய உதவியால் நடராசா,சற்குணம் ஆகிய இருவரும் எழுதிய நாவலர் பெருமானின் வாழ்க்கைக் குறிப்புகள் நூலும்,கா.சிவப்பிரகாசம் அவர்களின் விபுலானந்தரின் கல்விச்சிந்தனைகள் நூலும், ச.நவரத்தினத்தின் கிழக்கின் பேரொளி புலவர்மணி நூலும், சிவகுமாரன் கதைகள் நூலும் வெளிவந்த நூல்களுள் குறிப்பிடத்தக்கன.இவை தவிர ஈழத்து அறிஞர்கள் பலரின் நூல்களைத் தாமே பதிப்பித்துள்ளார்.

ஈழத்துப்பூராடனார் மொழிபெயர்ப்புப் பணிகள்

  ஈழத்துப்பூராடனார் பிறமொழி அறிவின் துணைகொண்டு பலநூல்களைத் தமிழிற்கு மொழிபெயர்த்துள்ளார்.இவற்றுள் ஆங்கிலத்திலிருந்து புகழ்மிக்க கிரேக்க காவியங்களான இலியட்,ஒடிசியை மொழிபெயர்த்தமை குறிப்பிட்டுச் சொல்லவேண்டும்.இவ்வாறு மொழிபெயர்த்த பொழுது கிரேக்க நூல்களின் மூலநூலைத் தழுவித் தமிழ்ச்சூழலுக்கு ஏற்ப மொழிபெயர்ப்பைச் செய்துள்ளார். கோமரின் இலியட் காவியம் 2400 வெண்பாக்களாகவும், ஒடிசி காவியம் 2400 விருத்தப்பவாகவும்(1990) படைக்கப்பட்டுள்ளன. மேலும் கிரேக்க நாடகங்கள் பல பன்னிரண்டு தொகுதிகளாகவும் இவரால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இவற்றுள் 'சொபிக்கொலசின் நாடகங்கள்' 'அயிலசியசின் நாடகங்கள் குறிப்பிடத்தக்கப் பெருமைக்கு உரியன.


  ஈழத்துப்பூராடனார் பலதுறை அறிவுபெற்றவர். தமிழின் இயல்,இசை,நாடகம் என்னும் முப்பிரிவுகளிலும் பல நூல்களை இயற்றியுள்ளார்.தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் கூடாது என இவர் எழுதியுள்ள நூல்களும் அறிக்கைகளும் ஆழ்ந்த சிந்தனையின் வெளிப்பாடாகும். கணிப்பொறி உலகில் எழுத்துச்சீர்திருத்தம் தேவையற்றது என்பது இவர்கொள்கை.தாம் இதுநாள்வரை படைத்துள்ள நூல்கள் யாவற்றையும் பழைய எழுத்துவடிவுகளில் அச்சிட்டு வெளிப்படுத்தியுள்ளார். அவ்வகையில் இவர் படைத்துள்ள தமிழ் எழுத்துகளின் உறுப்பு இலக்கணம் உணர்த்தும் எழுத்துநூல் (உரையுடன்), தமிழ் எழுத்துச் சீர்திருத்தச் சிந்தனைகள், மின்கணனித் தமிழ் எழுத்துச் சீரமைப்பு தேவைதானா? தமிழ் அச்சுக்கலையில் மின்கணனி எனும் கொம்பியூட்டரின் பிரவேசம் என்பன தமிழுலகம் அறியத்தகும் நூல்களாகும்.

  தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் தேவை எனவும்,தேவையற்றது எனவும் சொற்போர்புரியும் நாம் அனைவரும் படித்து இன்புறத்தக்கன. அதுபோல் பழைய தமிழ் எண்களைப் பயன்படுத்த வேண்டும் என்ற விருப்பினர்.இது குறித்து இவர் வெளியிட்ட அறிக்கை உலகம் முழுவதும் இவரால் அனுப்பி வைக்கப்பெற்றது.

இசைத்தமிழ் நூல்கள்

  ஈழத்துப்பூராடனார் இசைத்தமிழ் குறித்த நூலொன்றையும் வெற்றிலை(பக்.80) என்னும் பெயரில் இசைப்பாடலாக எழுதியுள்ளார்.

நாடகத்தமிழ் நூல்கள்

  ஈழத்துப்பூராடனார் தமிழின் ஒருபிரிவான நாடகத்துறை சார்ந்து பல நூல்களை எழுதியுள்ளார்.இவை உரையாகவும்,செய்யுளாகவும் அமைகின்றன.மதங்கசூளாமணி என்னும் நூலினை விபுலானந்த அடிகளார் இயற்றினார்.இதில் வடமொழிச் சொற்கள் மிகுதியும் கலந்துகிடந்தன.இவற்றின் கருத்தைத் தழுவி ஈழத்துப்பூராடனார் மதங்க சூளாமணியின் மறுபதிப்பாகவும்,ஆய்வாகவும் கருதும்படி கூத்துநூல்விருத்தம் என்னும் பெயரில் 320 செய்யுள் கொண்ட நூலினை வெளியிட்டுள்ளார். இந்நூலின் சிறப்பு என்னவெனில், பாடல்களுக்கு உரைவரையும் போக்கே தமிழ் உலகில் காணப்படுவது. நம் ஈழத்துப்பூராடனார் விபுலானந்தரின் உரைக்குப் பாடல் எழுதியுள்ளார்.


  ஈழத்துப்பூராடனார் கூத்தர் வெண்பா(821 செய்யுள்),கூத்தர் அகவல், நாடகத்தமிழ், மணிமேகலை(தென்மோடி). சிலப்பதிகாரம்(வடமோடிக்கூத்து), கனடாக்குறவஞ்சி நாடகம், கிழக்கு ஈழமரபுவழி இருபாங்குக் கூத்துக்கலை ஆய்வுக்கான தகவற்திரட்டு முதலான நூல்களை இயற்றியுள்ளார்.மேலும் பிற எழுத்தாளர்களுடன் இணைந்து பல நூல்களை நாடகத்துறையில் உருவாக்கியுள்ளார்.

  ஈழத்துப்பூராடனாரின் தமிழழகி காப்பியம் என்னும் நூல் ஒன்பது காண்டங்களாக 12000 செய்யுள்களைக் கொண்டு படைக்கப்பட்டுள்ளது. தமிழரின்மொழி,கலை,பண்பாடு,இனம்,வரலாறு,இலக்கம், இலக்கியம் பற்றிய பல தகவல்களைக்கொண்டு இந்நூல் உள்ளது.ஒவ்வொரு காண்டமும் 300 பக்கங்களைக்கொண்டது.

ஈழத்துப்பூராடனாரின் வரலாற்று நூல்கள்


  ஈழத்துப்பூராடனார் ஈழத்தின் வரலாற்றை அறிவதற்குப் பயன்படும் வண்ணம் யாரிந்த வேடர்(1965), ஈழத்தின் வரலாறு(1986) என்னும் நூல்களை எழுதியுள்ளார்.

ஈழத்துப்பூராடனார் உரைநூல்கள்

  ஈழத்துப்பூராடனார் உரைநடை எழுதுவதில் வல்லவர் என்பதுபோல் பிற நூல்களுக்கு உரை வரைவதிலும் வல்லவர்.அவ்வகையில் இவர் சீமந்தனி புராணம்(வித்துவான் பூபாலபிள்ளை), கதிர்காம சதகம்(இ.வ.கணபதிப்பிள்ளை) முதலான நூல்களுக்கு உரை எழுதியுள்ளார்.

ஈழத்துப்பூராடனார் பனைஓலையிலிருந்து பதிப்பித்த நூல்கள்

  ஈழத்துப்பூராடனார் பனைஓலைகளிலிருந்தது சில நூல்களை அச்சில் பதிப்பித்துள்ளார்.அவற்றுள் கபோத கா,தை(1970) இரண்ய சம்கார அம்மானை(1966) குறிப்பிடத்தக்கன.


ஈழத்துப்பூராடனார் இயற்றிய சிற்றிலக்கியங்கள்

  ஈழத்துப்பூராடனார் சிற்றிலக்கியங்கள் பலவற்றை இயற்றியுள்ளார். புயற்பரணி என்னும் பெயரில் 625 செய்யுட்கள் கொண்ட நூலையும், ஈழத்துப் போர்ப்பரணி என்னும் பெயரில் 525 செய்யுள் கொண்ட நூலையும் இயற்றியுள்ளார். இவை தவிர வறுமைப்போர்ப் பரணி என்னும் நூலையும் இயற்றியுள்ளார். விபுலானந்தர் பிள்ளைத்தமிழ்(1984), ஈழத்து இரட்டையர் இரட்டை மணிமாலை(1984), புலவர்மணிக்கோவை (1984) முதலான நூல்களை இயற்றியுள்ளார்.

ஈழத்துப்பூராடனார் எழுதிய மட்டக்களப்பு குறித்த நூல்கள்

  ஈழத்துப்பூராடனார் எழுதிய நூல்களுள் அறிஞர் உலகம் ஏற்றுப்போற்றும் நூல்கள் அவர் மட்டக்களப்பு தொடர்பில் இயற்றப்பட்டவற்றை எனில் மிகையன்று.ஏனெனில் இந்நூல்கள் மட்டக்களப்பு வரலாறு அறிவிப்பதோடு அமையாமல் அங்கு வழக்கிலிருக்கும் பழந்தமிழ்ச் சொற்கள்,வாழ்க்கை முறைகள்,பண்பாடு எனப் பல்துறைப் பயன்பாட்டிற்கு உதவும் வகையில் அந்நூல்கள் வெளிவந்துள்ளன. அவ்வகையில்,


1.மட்டக்களப்புப் பிரதேசத்தின் வழக்கு மரபுச்சொற்கள் சொற்றொடர்களினதும் அகராதி(1984)

2.மட்டக்களப்பு மாநிலப் பழமொழிகள் அகரவரிசை(1984)

3.நீரரர் நிகண்டு(1984)

4.மட்டக்களப்புச் சொல்வெட்டு(1984)

5.மட்டக்களப்புச் சொல்நூல்(1984)

6.மட்டக்களப்பு மாநில உபகதைகள்(1982)

7.சீவபுராணம் நெடுங்கதை(1979)

8.மட்டக்களப்பு மக்களின் மகிழ்வுப் புதையல்கள்(1978)

9.மட்டக்களப்புப் பனையோலைச் சுவடிகள்(1980)

10.மட்டக்களப்பியல்

11.மட்டக்களப்பு உழவர்மாட்சிக் கலம்பகம்

12.கன்னங்குடா உழுதொழிற்பள்ளு

13.மீன்பாடும் தேன்நாடு

14.வசந்தன்கூத்து ஒருநோக்கு

15.வயலும் வாரியும்

16.மட்டக்களப்பில் இருபாங்குக் கூத்துக்கலை

முதலியன குறிப்பிடத்தக்கன.

ஈழத்துப்பூராடனார் கிறித்தவசமயத்தைப் பின்பற்றுபவர். இச்சமயம் சார்ந்து பல நூல்களை இயற்றியுள்ளார். இவர்தம் வாழ்க்கைமுறை என்பது அனைத்துச் சமயத்தாரையும் ஆரத்தழுவிப் போற்றும் வகையினது.இவர் கணிப்பொறி வழி அச்சிட்ட முதல்நூல் பெத்லேகம் கலம்பகம்(1986) கிறித்தவசமயம் சார்ந்த நூலாக இருப்பினும் சைவசமயம் சார்ந்த பல நூல்களுக்கு உரை வரைந்துள்ளார்.இவர்தம் தமிழ்ப் பணியைப் போற்றி இசுலாமிய சமயம் சார்ந்த பெரியவர்கள் பாராட்டு செய்துள்ளனர்.இவரின் வினைப்பாடுகளும் வெளிப்பாடுகளும் தமிழ் தமிழர் நலம்சார்ந்து அமைந்தது.


ஈழத்துப்பூராடனார் பெற்ற சிறப்புகள்

ஈழத்துப்பூராடனார் தன்னலங் கருதாமல் தமிழ்நலம் கருதிச் செயல்பட்டதால் இவர்தம் பணியைப் பாராட்டிப் பல்வேறு அமைப்பினரும், நிறுவனங்களும் பாராட்டிச் சிறப்புச் செய்துள்ளன.இவற்றுள் இந்து பண்பாட்டு அமைச்சின் நாடகசேவை விருது(1982), மட்டக்களப்பு கலை பண்பாட்டு அவை வழங்கிய இலக்கியமணி விருது,கனடாவில் வழங்கப்பட்ட பாராட்டுப்பதக்கம்( 1994), தொரன்றோ சேக்கம் நிறுவனத்தின் கேடயமும்(1987),மொரீசியசில் வழங்கப்பட்ட தமிழ்நெறிப்புலவர் விருதும், கிழக்கிலங்கைப் பல்கலைக்கழகம் இவர்தம் தமிழ் இலக்கியப் பணியைப் பாராட்டி வழங்கிய முனைவர் பட்டமும்(Doctor Of Letters)(2000), தமிழர் தகவல் விருது(1992),தாமோதரம் பிள்ளை விருது(1998) முதலியன குறிப்பிடத் தக்கன.


ஈழத்துப்பூராடனார்

ஈழத்துப்பூராடனார் வெற்றிக்குக் காரணம்

  ஒரு மாந்தன் இல்வாழ்க்கையிலும்,இலக்கிய உலகிலும் இணைந்து வெற்றிபெறுவது அரிதாகவே நிகழும்.அத்தகு அரிய வாழ்க்கை ஈழத்துப்பூராடனார்க்கு அமைந்துள்ளதைப் பெருமையோடு சுட்டிச் சொல்லவேண்டும். அவர்தம் அருமை மனைவியார் வியறிசு பசுபதி அவர்கள் தமிழ் பயிற்றுவித்தலில் நல்ல பட்டறிவுடையவர். ஈழத்துப்பூராடனாரின் மக்கட் செல்வங்கள் அச்சுத்துறையிலும், கணினித் துறையிலும் வல்லுநர்கள்.எனவே உலகில் முதன்முதல் கணிப்பொறியில் தமிழ்நூல் அச்சிடும் நுட்பத்தைக் கண்டுபிடித்தனர். வெற்றியுடன் செயல்படுத்தினர். அம்மக்களுள் ஒருவர் கனடாவில் அச்சுக்கூடம் நிறுவியும் பதிப்புப் பணியில் ஈடுபட்டும் புகழ்பெற்றவர். இன்னொரு மகனார் இதயராச் அவர்கள் புகழ்பெற்ற திரைப்பட இயக்குநராகவும்,நடிகராகவும் புகழ்பெற்றவர்.ஈழத்துப்பூராடனார் அன்பும் அடக்கமும் உருவானவர். அனைவரிடமும் மனம் ஒன்றிப்பழகுவது இவர்தம் இயல்பு,நன்றி மறவாமை என்னும் பண்பு இவரை உயர்நிலைக்குக் கொண்டு சென்றது. ஆசிரியர்களித்தும், நண்பர்களிடத்தும் இவர்கொண்ட மதிப்பும் சிறப்பும் இவர்தம் சான்றாண்மைக்குச் சான்று.

  ஈழத்துப்பூராடனார் பல்வேறு நூல்களை எழுதியதுடன் அந்நூல்கள் யாவும் இன்று கிடைக்காமையை உணர்ந்து ஒவ்வொரு நூல்பற்றிய விவரங்களை அறிவிக்கும் அமைப்பில் நானும் எந்தன் நூல்களும் என்னும் பெயரில் மூன்று தொகுதிகளை வெளியிட்டுள்ளார். இந்நூல்கள் பதிப்புத்துறை சார்ந்தும், தமிழக, ஈழத்து,கனடா சார்ந்த பல்வேறு தகவல்களைத் தருகின்றன.இவ்வாறு காலந்தோறும் நூல்களை ஈழத்துப்பூராடனார் வெளியிட்டாலும் இந்நூல்கள் செம்பதிப்பாகத் தமிழ் உலகிற்குக் கிடைக்கவேண்டும் என்பது நம் எதிர்பார்ப்பு.

  ஈழத்துப்பூராடனார் ஆசிரியப்பணியில் இணைந்து நல்லாசிரியராக விளங்கியதுடன் நாள்தோறும் கற்கத் தக்கனவற்றைக் கற்றும், செய்யத் தக்கனவற்றைச் செய்தும் தமிழ் இலக்கிய வரலாற்றில் இடம்பெற்றுள்ளார். இவர்தம் நூல்கள் தமிழின் அச்சு,இதழியல், கல்வியியல், நாட்டுப் புறவியல்,வரலாறு,சமயம்,பண்பாடு,இனப்பரவல்,திரைப்படம் தொடர்பான தகவல்களைத் தெரிவிக்கும் தகவல்களஞ்சியமாகவும், ஆவண மாகவும் உள்ளன.பல்வேறு தலைப்புகளில் ஆய்வுக்கு உட்படுத்தவேண்டியவை இவர்தம் படைப்புகள்.ஆய்வாளர்களுக்குப் பல்வேறு களங்களில் ஆராய்ச்சி செய்ய உதவுவன.

  வல்வெட்டித்துறைக் கடலோடிகள் என்னும் நூலினை வெளியிடுவதற்குப் பணிகள் நிறைவுற்ற நிலையில் தம் எண்பத்திரண்டாம் அகவையில் கனடாவில் இயற்கை எய்தியுள்ளார். உலகம் முழுவதும் உள்ள புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் அவரின் நூல்கள் இருந்து நமக்கு வழிகாட்டிக்கொண்டிருக்கும்.

(முன்பு திண்ணை இணைய இதழில் வெளியான என் கட்டுரையின் திருந்திய வடிவம் தேவை கருதி மீண்டு வெளியிடப்பெறுகின்றது)

தமிழ்ப்பேரறிஞர் ஈழத்துப்பூராடனார் மறைவு


கலாநிதி ஈழத்துப்பூராடனார்(13.12.1928-20.12.2010)

என் பதினேழு ஆண்டு கால நண்பரும், தந்தையார் நிலையிலிருந்து என் குடும்பத்துக்கு ஆறுதல் மொழிகளும் தேறுதல் உதவிகளும் செய்துவந்தவருமான கலாநிதி ஈழத்துப்பூராடனார் என்னும்
தமிழ்ச்சான்றோர் 20.12.2010 இல் கனடாவில் தம் எண்பத்திரண்டாம் அகவையில் இயற்கை எய்தினார் என்ற செய்தியைக் கனடாவிலிருந்து என் உடன்பிறப்பு செந்தி அவர்கள் செல்பேசியில் இப்பொழுது அறிவிக்க அதிர்ந்துபோனேன். நானும் என் குடும்பத்தினரும் ஆறாத்துன்பத்தில் உள்ளோம். கையற்றுக் கலங்கும் ஈழத்துப்பூராடனார் குடும்பத்தினருக்கும் பன்னாட்டில் வாழும் அவரின் தமிழ் வாசகர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

கதிர்காமம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழ் இணையம் அறிமுகம்




நேற்று புதுச்சேரி இதழாளர் நண்பர் ஒருவர் என்னுடன் தொலைபேசியில் பேசித், திருக்குறள் ஒலிவடிவில் குறுவட்டாகத் தங்களிடம் இருக்குமா என்று கேட்டார்.

கோவையில் செம்மொழி மாநாட்டில் ஒரு குறுவட்டு வாங்கிய நினைவு இருந்தது. என்னிடம் இருக்கிறது என்றேன். அதனைக் கொடுத்து உதவும்படி வேண்டினார். நானும் இசைந்தேன்.
ஒருவருக்கொருவர் முன்பே அறிந்துள்ளோம். ஆனால் பார்த்ததில்லை. அண்மைக்காலமாக நான் தமிழ் இணைய அறிமுக நிகழ்வுகள் நடத்துவதை அறிந்திருந்த அந்த இதழாளருக்கு என் முயற்சி அவர்களின் உள்ளத்தை அசைத்தது.

அடுத்த அரைமணி நேரத்தில் கதிர்காமம் பள்ளியின் ஆசிரியர் திருவாளர் பூபதி அவர்கள் இணைப்பில் வந்து, தங்கள் பள்ளியில் தமிழ் இணையத்தை மாணவர்களுக்கு அறிமுகம் செய்ய வேண்டிக்கொண்டார். எனக்கும் இப்பொழுது கல்லூரி விடுமுறை என்பதால் வருவதாக ஒத்துக்கொண்டேன். இன்று (22.12.2010) காலை 9 மணிமுதல் 11 மணிவரை தமிழ் இணையம் அறிமுக நிகழ்வுக்கு ஏற்பாடாகியிருந்தது.

அந்தப் பள்ளிக்கு நான் இன்றுதான் முதன்முதல் சென்றேன். அந்தப் பள்ளியின் எதிரில் இருந்த உயர்நிலைப்பள்ளிதான் நிகழ்ச்சி நடக்கும் இடம் என்று தவறாக அறிந்து அங்கேயே தானியிலிருந்து இறங்கிக் கொண்டேன்.அப்பொழுது பள்ளியில் இறைவணக்கம் பாடினர். நானும் சாலையில் நின்றபடி இறைவணக்க நிகழ்வுகளை உற்றுநோக்கினேன். தமிழ்த்தாய் வாழ்த்துத் தொடங்கியது. "நைந்தாய் எனில் நைந்து போகும்என் வாழ்வு நன்னிலை உனக்கெனில் எனக்கும்தானே" என்று பாவேந்தர் வரிகளால் தமிழ்த்தாயை மாணவர்கள் வாழ்த்திப் பாடினார்கள்.

பிறகுதான் எதிரில் இருந்த மேல்நிலைப் பள்ளியில் நிகழ்ச்சி நடக்கிறது என்று தெரிந்தது.

புதுவை மாநில நாட்டுநலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் எ.மு.இராசன் அவர்கள் புதுவை மாநிலத்தின் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களுக்குப் பயன்படும் வகையில் முதன்முதல் இந்த நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்தார். இணையத்தின் தேவையையும் மாணவர்களுக்கு இணையம் பயன்படும் விதத்தையும் எடுத்துரைத்துச் சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்தினார்.

குறுகிய காலத்தில் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதை நான் குறிப்பிட்டுப் பேசினேன். ரிலையன்சு மொபைல் மோடம் சிறப்பாக இயங்கியது.பவர்பாயிண்டு விளக்கமும் சிறப்பாக இருந்தது.

மாணவியர்களுக்குத் தமிழ்த்தட்டச்சு, மின்னஞ்சல் கணக்கு உருவாக்கம், மின்னஞ்சல் அனுப்புவது, மின்னஞ்சலுடன் படங்களை அனுப்புவது உள்ளிட்ட பலவகைப் பயன்பாடுகளை விளக்கினேன். அமெரிக்கா,ஆஸ்திரேலியா,குவைத்,துபாய் உள்ளிட்ட நாடுகளில் இணைய இணைப்பில் இருந்தவர்களிடம் இணையவழி உரையாடலையும் செய்துகாட்டினேன்.

வலைப்பூ உருவாக்கம் பற்றியும் அதில் படங்களை இணைப்பது,விக்கிப்பீடியாவில் உள்ள தமிழ்ச்செய்திகளைப் பயன்படுத்துவது பற்றியும் விளக்கினேன். மின்னிதழ்களின்
சிறப்புகளையும் மின்னிதழ்கள் செய்திகளை உடனுக்குடன் தந்து உலக மக்களை ஒரு கிராமத்துக்குள் அடக்கிவிட்டதையும் எடுத்துரைத்தேன்.இணையத்தைப் பொருத்தவரை
தூரம் என்பது 0 கி.மீ என்ற கவிப்பேரரசு அவர்களின் மேற்கோளை எடுத்துரைத்தேன்.

பள்ளியின் ஆசிரியர்களும் கலந்துகொண்டனர். நாட்டு நலப்பணித்திட்டத்தின் திட்ட அலுவலர்கள் பூபதி, முத்துக்கிருட்டினன் உள்ளிட்டவர்கள் உரையாற்றினர். மாணவியர்கள் இந்த இணைய அறிமுக வகுப்பால் மிகப்பெரிய தொழில்நுட்பத்தை எளிமையாக அறிந்துகொண்டோம் என்று கருத்துரைத்தனர்.தமிழ் வழியில் இணையத்தை அறிமுகம் செய்ததால் அனைவரும் ஆர்வமுடன் பங்கேற்றனர்.


புதுவை மாநில நாட்டுநலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் எ.மு.இராசன் அறிமுக உரை



முனைவர் மு.இளங்கோவன் உரையாற்றுதல்


தமிழ்வழியில் இணையம் அறியும் மகிழ்ச்சியில்...


ஆர்வமுடன் பங்கேற்ற மாணவிகள்


ஆர்வமுடன் பங்கேற்ற ஆசிரியர்கள்


திட்ட அலுவலர் பூபதி அவர்கள் நன்றியுரை


இணையத்தின் பயன் பெற்றதை எடுத்துரைக்கும் மாணவி


இணைய அறிமுக நிகழ்வில் கலந்துகொண்டவர்களின் ஒரு பகுதியினர்

கதிர் காமம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி பயிலரங்கம் இனிதே தொடங்கியது...

கதிர்காமம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழ் இணையப் பயிலரங்கம் இன்று காலை இனிதே தொடங்கியது.துணைமுதல்வர் எ.மு.இராசன் அவர்கள் பயிலரங்கைத் தொடங்கிவைத்தார். முனைவர் மு.இளங்கோவன் மாணவிகளுக்குப் பயிற்சி வழங்குகின்றார்.மாணவிகள்,ஆசிரியர்கள்,ஆர்வலர்கள் பயன்பெறுகின்றனர்.

புதுச்சேரி கதிர்காமம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ் இணையம் அறிமுக விழா

புதுச்சேரியில் அமைந்துள்ள கதிர்காமம் அரசு மேல்நிலைப்பள்ளியில்
மேல்நிலைக்கல்வி பயிலும் மாணவர்களுக்கு இன்று (22.12.2010) காலை
9 மணி முதல் 11 மணி வரை தமிழ் இணையம் பற்றிய அறிமுக விழா
நடைபெற உள்ளது. ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டு பயன்பெற உள்ளனர்.

செவ்வாய், 21 டிசம்பர், 2010

கலைஞன் பதிப்பகம் மாசிலாமணி ஐயா மறைவுக்கு இரங்கல்!


கலைஞன் பதிப்பகம் மாசிலாமணி ஐயா


சென்னைக் கலைஞன் பதிப்பகம் மாசிலாமணி ஐயா மறைவுச் செய்தியை ஏடுகளில் கண்டு(20.12.2010) அதிர்ச்சியுற்றேன். கலைஞன் பதிப்பகத்துக்குப் பல ஆண்டுகளாகச் சென்று நல்ல நூல்களை நான் வாங்கி வந்தது உண்டு. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துத் தமிழ்ப் பேராசிரியர் அரங்க. பாரி அவர்கள் ஏற்பாடு செய்த சில பன்னாட்டுக் கருத்தரங்குகளில் கலந்துகொண்டபொழுது கலைஞன் பதிப்பகத் தொடர்பு எனக்கு வலிமையாக அமைந்தது.

கடந்த மே மாதம் சிங்கப்பூரில் கலைஞன் பதிப்பகம் ஏற்பாடு செய்திருந்த பன்னாட்டுக் கருதரங்கில் கலந்துகொண்டு கட்டுரை படித்தேன். பிறகு மாநாட்டுக் குழுவினர் மலேசியாவுக்குச் சென்றோம். மலேசியாவைக் கண்டு மகிழ அண்ணன் மா.நந்தன் அவர்கள் சிறப்பான ஏற்பாடுகளைச் செய்திருந்தார். ஒருநாள் கோலாலம்பூரில் இரவு விருந்தினை முடித்துக்கொண்டு தங்குமிடத்திற்குத் திரும்பிக்கொண்டிருந்தோம். அப்பொழுது உரையாடலில் அண்ணன் நந்தன் அருகில் நான் அமர்ந்திருந்தேன். அப்பொழுது தங்கள் தந்தையார் மாசிலாமணி ஐயாவை நான் பார்க்கவேண்டும் என்று சொன்னேன். அருகில் இருந்த ஒரு பெரியவரைக் காட்டி இவர்தான் என் தந்தையார் என்றார்.

ஒரு கிழமையாக அமைதியாக அந்தப் பயணத்தில் இருந்த அவர்தான் கலைஞன் பதிப்பக உரிமையாளரா? என்று வியந்துபோனேன். ஐயா பொறுத்தருளவும்!. தாங்கள் யார் என்று தெரியாமல் பல நாள் உங்களுடன் உரையாடாமல் இருந்துவிட்டேன். நான் மு.இளங்கோவன். புதுச்சேரி என்றேன். விடுதலைப்போராட்ட வீரர் வெ.துரையனார் அடிகள் நூலைப் பதிப்பித்தவர்தானே நீங்கள் என்றார். நான் அதிர்ந்துபோனேன். நம் முயற்சிகளைப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னரே அறிந்துவைத்துள்ள ஒருவரை இதுவரை அறியாமல் இருந்துள்ளோமே என்று நாணினேன்.

ஐயாவுக்கு அண்ணன் அறிவுமதி அவர்கள் துரையனார் அடிகள் நூலினைப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன் வழங்கியுள்ளார். அதனை வரி வரியாக மனதில் தேக்கிவைத்திருந்த மாசிலாமணி ஐயாவின் நினைவாற்றலை எண்ணி எண்ணி வியந்தேன். அவர்களுடன் தங்கியிருந்த பல மணி நேரங்களில் அவர்களின் பதிப்புலக வாழ்க்கை, இலக்கிய ஆர்வம், முன்னணி எழுத்தாளர்களின் படைப்பாளுமை பற்றி அறிந்தவண்ணம் இருந்தேன்.

இந்த ஆண்டும் வெளிநாட்டுப் பயணத்தில் ஐயாவைச் சந்திக்கலாம் என்று இருந்தேன். ஆனால் அவர்கள் வீட்டில் படுக்கையில் படுத்து உறங்கியபொழுது (19.12.2010, ஞாயிறு) உயிர் பிரிந்துள்ளது என்ற செய்தியறிந்து வருந்தினேன். தந்தையாரை இழந்து வருந்தும் அவர்களின் பிள்ளைகளுக்கும் பதிப்பாளரை இழந்து தவிக்கும் படிப்பாளிகளுக்கும் என் ஆழ்ந்த இரங்கல்!

நன்றி: (படம்) இந்து நாளிதழ்

ஞாயிறு, 19 டிசம்பர், 2010

சு.ஆடுதுறை இணையப் பயிலரங்கம் நிகழ்ந்தமுறை


கரு.மலர்ச்செல்வன் அறிமுக உரை

18.12.2010 இல் பெரம்பலூர் மாவட்டம் சு. ஆடுதுறையில் தமிழ் இணையப் பயிலரங்கம் நடத்த வேண்டும் என்று ஆறு திங்களுக்கு முன்பாகவே திட்டமிட்டோம். அமெரிக்காவில் வாழும் பொறியாளர் கரு.மலர்ச்செல்வன் அவர்கள் தம் பிறந்த ஊரான சு.ஆடுதுறையில் அறிவகம் என்னும் பெயரில் நூலகம் ஒன்று மக்கள் பயன்பாட்டுக்காகத் தொடங்கி நடத்தி வருகின்றார். அதன் சார்பில் அந்த ஊரில் உள்ள மாணவர்கள், பொதுமக்கள் பயன்பெறும்
வண்ணம் அங்குத் தமிழ் இணையப் பயிலரங்கம் நடத்த வேண்டும் என்று விரும்பினார். அந்த ஊரில் இணைய இணைப்புக்கு முயன்றும் நிலையான இணைய இணைப்பு பெறமுடியவில்லை.

நான் இதற்காக என் ஏர்டெல் மொபைல் மோடத்தின் பயன்பாடு சரியில்லை என நினைத்து ரிலையன்சு மொபைல் மோடம் 2300 உருவா கொடுத்துப் புதியதாக வாங்கினேன். அதுவும் அந்த ஊரில் செயல்படவில்லை. வோடாபோன் மொபைல் மோடம் சிறப்பாக இயங்கியது என்று அறிந்து தம் அலுவலக நண்பர்கள் வழியாக ஆய்வுசெய்து வோடாபோன் இணைப்பைக் கரு.மலர்ச்செல்வன் சிறப்பாக இயங்கும்படி முன்பே வாங்கச் செய்தார்.

மொபைல் மோடம் வாங்கும் தோழர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள். வோடாபோன் மொபைல் மோடம் சிற்றூர்ப்புறத்திலும் சிறப்பாக இயங்குவதை நேரடியாக உணர்ந்தேன். எனவே வோடாபோன் மொபைல் மோடத்தை வாங்கலாம் என்று நினைக்கிறேன். இது நிற்க.

18.12.2010 வைகறை 4 மணிக்கு எழுந்து 5 மணிக்குப் புதுவைப் பேருந்து நிலையில் பேருந்தேறினேன். கடலூர், வடலூர், வழியாகத் திருமுதுகுன்றம்(விருத்தாசலம்) சென்றேன். காலைச்சிற்றுண்டியை அங்குள்ள ஓர் உணவகத்தில் முடித்தேன். பேருந்தில் செல்லும்பொழுது கரூர் வழக்கறிஞர் இராசேந்திரன் அவர்களுக்கும் பிற இணைய அன்பர்களுக்கும் குறுஞ் செய்தியாக இன்றைய நிகழ்ச்சி பற்றி செய்தி அனுப்பினேன்.ஒரிசா பாலு, பேராசிரியர் இரா.சந்திரசேகரன் உள்ளிட்ட சிலர் வாழ்த்துத் தெரிவித்தனர்.இதனிடையை என் திருமுதுகுன்ற நண்பர் புகழேந்தி வந்து உணவகத்தில் இணைந்து கொண்டார்.

இருவரும் திருமுதுகுன்றத்தில் பேருந்தேறிப் பெண்ணாடம், திட்டக்குடி வழியாக ஆக்கனூர் செல்லச் சீட்டு வாங்கினோம். திட்டக்குடியைத் தாண்டிப் பேருந்து புறப்பட்டது. ஆக்கனூரில் இறங்கினால் ஆற்றைக் கடக்க முடியாதபடி வெள்ளாற்றில் தண்ணீர் ஓடுகிறது. வர இயலாது. எனவே திட்டக்குடியில் இருக்கும்படியும் உடனே ஒரு மகிழ்வுந்தில் எங்களை அழைத்துக் கொள்வதாகவும் கரு.மலர்ச்செல்வன் பேசினார். நாங்களும் திட்டக்குடி எல்லையிலேயே இறங்கி நின்றோம். கால் மணி நேர இடைவெளியில் ஒரு மகிழ்வுந்து வந்தது. அதில் ஏறி ஆற்றின் தரைப்பாலம் வழியாக அக்கரையை அடைந்து ஆடுதுறை நோக்கிச் சென்றோம். அண்மையில் பெய்த மழை தென்னார்க்காடு மாவட்டத்தையே அடித்துக்கொண்டு போய்விட்டதுபோல் சாலைகள் குண்டும் குழியுமாக இருந்தது. அரைமணி நேர ஓட்டத்தில் பத்து மணிக்குச் சு.ஆடுதுறையை அடைந்தோம்.

எங்களின் வருகைக்காகக் கரு.மலர்ச்செல்வன் காத்திருந்தார். அவரின் உறவினரும் பொறியாளருமான திரு.கௌதமன் அவர்கள் இந்த நிகழ்ச்சிக்காகச் சென்னையிலிருந்து வந்திருந்தார்கள். கரு.மலர்ச்செல்வனின் தமிழ் உள்ளத்தை அந்த அறிவக நூலகம் எனக்குக் காட்டியது. கரு.மலர்ச்செல்வனை இன்றுதான் முதன்முதல் சந்தித்தேன். இவ்வளவு நாளாக ஓர் உண்மைத் தமிழன்பரைக் காணாமல் இருந்தோமே என்று நாணினேன். அறிவகத்தை முதுமுனைவர் இரா.இளங்குமரனார், முனைவர் இரா. திருமுருகனார் உள்ளிட்ட தமிழறிஞர்கள் முன்னின்று திறந்து வைத்துள்ளனர் என்பதை அங்குள்ள கல்வெட்டு வழி அறிந்து மகிழ்ந்தேன்.

தமிழ் இணையப் பயிலரங்கத்திற்கான ஏற்பாடு சிறப்பாக இருந்தது. மருதூரிலிருந்து பேராசிரியர் செ.ஆனந்தகுமார் அவர் தம் இரு மகன்களையும் அழைத்து வந்திருந்தர். அறிவக நூலகத்தின் மாடியில் இருந்த அரங்கில் பயிலரங்கம் தொடங்கியது. வந்திருந்தவர்கள் மாணவர்களும் பெண்களுமாகப் பலர் இருந்தனர்.அரங்கின் சூழல் உணர்ந்து தமிழ் இணைய வளர்ச்சியைச் சுருக்கமாக நினைவுகூர்ந்தேன். தமிழ்த்தட்டச்சு தெரிந்தால் இணையத்தின் பல்வேறு பயன்களை நம்மால் எளிதாகப் பெறமுடியும் என்று அரங்கினருக்குக் காட்சி வழியாக விளக்கினேன். தமிழ்த்தட்டச்சு தமிழ் 99 விசைப்பலகைச் சிறப்பைச் சொன்னேன். அனைவருக்கும் இது உதவியாக இருந்ததைக் குறிப்பால் உணர்ந்தேன். அவர்களுக்குத் தெரிந்த எடுத்துக்காட்டுகளுடன் சொன்னதால் அனைவருக்கும் புரிந்திருக்கும் என நம்புகின்றேன்.

இந்த நேரத்தில் திட்டக்குடித் திரைப்படத்தின் இயக்குநர் சுந்தரன் அவர்களும் கடலூர்த் திரைப்படச்சங்கத்தின் செயலாளர் சாமிக்கச்சிராயரும் வந்து இணைந்துகொண்டனர். சிங்கப்பூரிலிருந்து பொறியாளர் இரவிச்சந்திரன்(வெட்டிக்காடு பதிவர்) அவர்கள் வந்திருந்தார். தமிழ் இணையப் பயிலரங்கத்தின் இடையே ஒரு சிறு இடைப்பிறவரலாக புதிய விருந்தினர்களை அறிமுகம் செய்யும் நிகழ்வு நடந்தது. நான் எழுதிய இணையம் கற்போம் நூலை அரங்கில் வெளியிட்டோம். கரு.மலர்ச்செல்வன் வெளியிட முதலிரு படிகளைப் பொறியாளர் இரவிச்சந்திரன் அவர்களும் திட்டக்குடிப் படத்தின் இயக்குநர் சுந்தரன் அவர்களும் பெற்றுக்கொண்டனர். அவர்கள் இருவரும் தங்களை அறிமுகம் செய்துகொண்டு அரங்கினருக்கு ஆர்வத்தை உண்டாக்கினர். அவர்களும் பயிலரங்க நிகழ்வுகளை உற்றுநோக்கிய வண்ணம் இருந்தனர். கூகுளில் மின்னஞ்சல் கணக்குத் தொடக்கம் பற்றியும், மின்னஞ்சல் பயன்பாடு பற்றியும் காட்சி வழியாக விளக்கினேன்.

ஸ்கைப் வசதியால் பெறத்தக்க பயன்களை எடுத்துரைத்தேன். இலண்டனிலிருந்து சிவா பிள்ளை அவர்கள் ஸ்கைப் இணைப்பில் வந்தார்கள். என்னுடனும் மாணவர்களுடனும் அறிவகப் பொறுப்பாளர் திருவாட்டி வாணி அவர்களுடனும் உரையாடினார். இன்னும் முழுமையான வசதி வாய்ப்புகளைப் பெற முடியாத சு.ஆடுதுறை என்னும் ஊரிலிருந்து அரங்கத்தினர் இலண்டனுக்கு நேரடியாக முகம் பார்த்து உரையாட முடிகின்றதே என்று வியந்தனர். எதிர்காலத்தில் அறிவகத்திலிருந்து அமெரிக்காவில் உள்ள மலர்ச்செல்வனிடம் இதுபோல் நேரடியாக உரையாடலாம் என்ற நம்பிக்கையை விதைத்தேன்.

கணிப்பொறி,இணையத் தொழில்நுட்பத்தைப் பயிற்றுவிப்பதைவிட இவற்றின் பயன்பாட்டை மக்களுக்கு எடுத்துச்சொல்வதால் இணையம் நோக்கிப் பலர் வருவார்கள்.

இன்றைய நிகழ்வுச் செய்தியை ஒரு வலைப்பூ பதிவாக அரங்கிலிருந்தபடி அரங்கினருடன் இணைந்து வெளியுலகுக்குத் தெரிவித்தேன். அனைவரும் வியந்தனர். இணையத்தின் பலவகையான பயன்பாடுகளையும் எடுத்துரைத்து மாணவர்களுக்கு விக்கிப்பீடியாவின் பங்களிப்பை எடுத்துச்சொன்னேன். பயன்பெற்றனர். காலை 10.30 மணிக்குத் தொடங்கிய பயிலரங்கம் பகல் 1.30 மணிக்கு நிறைவுக்கு வந்தது.


கரு.மலர்ச்செல்வன் இணையம் கற்போம் நூலை வெளியிடப் பொறியாளர் சிங்கப்பூர் இரவிச்சந்திரன் பெற்றுக்கொள்ளும் காட்சி


கரு.மலர்ச்செல்வன் வெளியிடும் இணையம் கற்போம் நூலைப் பெற்றுக்கொள்ளும் திட்டக்குடித் திரைப்பட இயக்குநர் சுந்தரன்



அரங்கத்தினர் சிவாப்பிள்ளை இலண்டனிலிருந்து உரையாடும் காட்சியைத் திரையில் கண்டு மகிழ்கின்றனர்



அறிவகப் பொறுப்பாளர் திருவாட்டி வாணி இலண்டன் சிவாப் பிள்ளையுடன் காணொளி வழியாக உரையாடும் காட்சி


தமிழ் 99 விசைப்பலகையை விளக்கும் மு.இ


பயிற்சி பெறுபவர்களுடன் மு.இ

அனைவரும் ஒன்றாகத் தரையில் அமர்ந்து உணவு உண்டோம். திரு.இரவிச்சந்திரன் அவர்கள் பல நாட்டு விண்மீன் உணவு விடுதிகளில் உண்டபொழுதுகூட இதுபோன்ற மகிழ்ச்சி இல்லை என்றார். நாங்கள் அனைவரும் உழவுத்தொழிலை உயிர்மூச்சாகக் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தோம். வயல்வெளிகளில் ஏரோட்டிய பொழுதுகளில் காலையுணவுக்கு ஏரை நிறுத்திவிட்டுக் கை கால் கழுவி இருக்கும் உணவை மகிழ்ச்சியாக உண்ட அந்தப் பழைய உணர்வை அனைவரும் பெற்றோம்.

கரு.மலர்ச்செல்வன் காலை நிகழ்ச்சிக்குப் பிறகு அந்த ஊரில் உள்ள மேல்நிலைப்பள்ளிக்கு எங்களை அழைத்துச்சென்றார். அந்தப் பள்ளிக்குக் கரு மலர்ச்செல்வன் முயற்சியால் இரண்டு வகுப்பறைகள் கொண்ட கட்டடம் அன்பளிப்பாகக் கட்டித் தரப்பட்டுள்ள விவரத்தை அங்குச் சென்றபொழுதுதான் அறிந்தோம். அயல்நாடுகளில் பணிபுரியும் பல நல்ல உள்ளங்கள் தாம் பயன்பெற்ற சமூகத்துக்கு மீண்டும் ஏதாவது திருப்பித்தர வேண்டும் என்ற அமெரிக்கர்களின் ஆர்வத்தை நடைமுறைப் படுத்தி வருவதறிந்து வியப்புற்றேன்.

அப்பொழுது பொறியாளர் இரவிச்சந்திரன் அவர்கள் அமெரிக்காவில் பணிபுரியும் திருவாளர் கல்யாணராமன் அவர்கள் படிக்கும் காலத்தில் உணவுக்கே தொல்லையுற்றதாகவும் இன்று அமெரிக்காவின் கோடியாளர் பில்கேட்சுடன் ஒன்றாக அமர்ந்து உணவு உண்ணும் வகையில் முன்னேறியதையும் எங்களுக்கு எடுத்துரைத்தார். அந்தக் கல்யாணராமன் தம் பிறந்த பகுதிக்குப் பல உதவிகள் செய்துள்ளதையும் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களைப் பொறியாளராகவும் மருத்துவராகவும் தம் சொந்த செலவில் படிக்க வைத்துள்ளதையும் அறிந்து வியந்துபோனேன். வாய்ப்பு வரும்பொழுது கல்யாணராமன் அவர்களைக் கண்டு உரையாடவேண்டும் என்று நினைத்துள்ளேன்.

பள்ளியின் தலைமை ஆசிரியரும் பிற ஆசிரியர்களும் மாணவர்களும் எங்களுக்காகக் காத்திருந்தனர். சிறு கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடாகி இருந்தது.
பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் அழைக்கப்பட்டிருந்தனர்.

நாங்கள் ஆளுக்கு ஐந்து நிமிடம் உரையாற்றி மாணவர்களுக்குத் தன்னம்பிக்கையூட்டும் பேச்சாக எங்கள் பேச்சை அமைத்துகொண்டோம்.

என் பள்ளிப்பருவத்து நினைவுகளை எடுத்துரைத்துத் தேர்வில் தோல்வியடைந்தவர்கள் கலங்க வேண்டாம். முயன்றுபடித்தால் முன்னேறலாம் என்று குறிப்பிட்டேன். இணையம்
கணிப்பொறியின் சிறப்புகளை எடுத்துரைத்தேன். காலையில் பயிலரங்க நிகழ்வுக்குப் பள்ளித் தலைமையாசிரியர் வந்திருந்ததால் இணைய ஆர்வலன் என்று என்னை அறிமுகம் செய்தார்கள் பின்பு நடந்த உரையாடல் தமிழ் இணையம் நோக்கித் திசை திரும்பியதும் சிறப்பாக இருந்தது.

கரு.மலர்ச்செல்வன் படிக்கும் மாணவர்களுக்கு எதிர்காலத்திலும் உதவியாக இருப்பேன் என்று உரைத்தார். இரவிச்சந்திரன் அவர்கள் தம் படிப்புப் பட்டறிவுகளை எடுத்துரைத்து, தன்னம்பிக்கை மாணவர்களுக்குத் தேவை எனவும் உயர் நோக்கம் குறித்த நினைவில் எப்பொழுதும் இருக்க வேண்டும் எனவும் எதற்கும் அஞ்சக்கூடாது எனவும் தாமும் மாணவர்களின் படிப்புக்கு எந்த நேரமும் இயன்ற வகையில் உதவியாக இருப்பதாகவும் குறிப்பிட்டார். அமெரிக்காவில் வாழும் கல்யாணராமன் நமக்கெல்லாம் எடுத்துக்காட்டானவர் என்று அவர் வாழ்க்கையை எடுத்து உரைத்ததும் மாணவர்கள் மகிழ்ந்தனர்.

முனைவர் இரத்தின. புகழேந்தி பள்ளி ஆசிரியர் என்பதால் பள்ளி மாணவர்களின் உள்ளம் அறிந்து சிறப்பாகப் பேசினார். இயக்குநர் சுந்தரன் அவர்கள் தம் பட்டறிவுகளைப் பேசி மாணவர்களுக்குத் தன்னம்பிக்கை ஊட்டினார். அவரின் திட்டக்குடிப் படத்தை மாணவர்கள் பார்த்திருந்ததால் அந்தப் படத்தில் வரும் ஆடல் பாடல் காட்சிகள் பற்றித் தனிப்பட்ட முறையில் மாணவர்கள் அவரைப் பின்னர் சூழ்ந்துகொண்டு வினவினர்.

எங்கள் பேச்சை ஒட்டி மாணவர்கள் ஐயம், வினாக்கள் எழுப்பினால் ஒரு பரிசில் தரப்படும் என்று கரு. மலர்ச்செல்வன் அறிவித்தார். அவ்வாறு வினா எழுப்பிய மாணவர்கள், ஆசிரியர்களுக்கு இணையம் கற்போம் என்ற என் நூலை அன்பளிப்பாகப் பலருக்கு வழங்கினார். அந்த மாணவகளுள் பலர் இணையம் கணிப்பொறி பற்றி அறிந்திருந்தனர் என்பது வியப்பாக இருந்தது. அவர்களுக்கு இணையம் கற்போம் நூல் மேலும் பல செய்திகளைத் தரும் என்று நம்புகிறேன்.

ஆடுதுறையில் பொதுமக்களுக்கும் அந்த ஊர்ப்பள்ளியில் மாணவர்களுக்கும் தமிழ் இணையத்தை அறிமுகம் செய்த மன நிறைவுடன் அனைவரிடமும் மாலை 5.30 மணிக்கு விடைபெற்றோம். திட்டக்குடி வரை எங்களை ஒரு மகிழ்வுந்தில் மலர்ச்செல்வன் அனுப்பினார். அதன் பிறகு பேருந்தேறித் திட்டக்குடி, விருத்தாசலம், கடலூர் வழியாக நான் புதுவை வந்து சேர்ந்தபொழுது இரவு பத்தரை மணியிருக்கும்.


அரசு மேல்நிலைப்பள்ளி, சு.ஆடுதுறை


கலந்துரையாடலில் பங்கேற்ற மாணவிகள்


கலந்துரையாடலில் பங்கேற்ற மாணவர்கள்


கலந்துரைக் களம்


கரு.மலர்ச்செல்வனின் முயற்சியால் உருவான அரசுப் பள்ளிக் கட்டடம்

சனி, 18 டிசம்பர், 2010

ஆடுதுறை இணையப் பயிலரங்கம் தொடங்கி நடைபெறுகின்றது...


கரு.மலர்ச்செல்வன் இணையம் கற்போம் நூல் வெளியிட அதனைப் பெறுகின்றார் திட்டக்குடித் திரைப்படத்தின் இயக்குநர் சுந்தரன். அருகில் சிங்கப்பூர் இரவிச்சந்திரன், நூலாசிரியர் மு.இளங்கோவன்

பெரம்பலூர் மாவட்டம் சு.ஆடுதுறையில் இன்று(18. 12. 2010) காலை 10.30 மணியளவில் தமிழ் இணையப் பயிலரங்கம் தொடங்கியது. நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களைக் கரு.மலர்ச்செல்வன் வரவேற்றார். புதுச்சேரி மு.இளங்கோவன் கலந்துகொண்டு மாணவர்கள்,பொதுமக்களுக்குத் தமிழ் இணையம்,தட்டச்சு, மின்னஞ்சல், விக்கிப்பீடியா வசதிகளை எடுத்துரைத்தார்.
முனைவர் இரத்தின. புகழேந்தியும் கலந்துகொண்டு பயிற்சி வழங்கினார்.
இலண்டனில் உள்ள சிவா பிள்ளையுடன் மாணவர்களும் அறிவகம் நூலகப் பொறுப்பாளர் திருமதி. வாணியும் காணொளி வழியாக உரையாடினர்.

நிகழ்ச்சிக்குச் சிங்கப்பூரிலிருந்து இணைய ஆர்வலர் இரவிச்சந்திரன் அவர்கள் வருகைபுரிந்து வாழ்த்துரை வழங்கினார். திட்டக்குடி திரைப்பட இயக்குநர் சுந்தரன் அவர்கள் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார். கடலூர் திரைப்பட இயக்கத்தின் செயலாளர் சாமிக் கச்சிராயர் கலந்துகொண்டு மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக முனைவர் மு.இளங்கோவன் எழுதிய இணையம் கற்போம் நூல் செம்பதிப்பைக் கரு. மலர்ச்செல்வன் வெளியிடச் சிங்கப்பூர் இரவிச்சந்திரன், திரைப்பட இயக்குநர் சுந்தரன் ஆகியோர் முதலிரு படிகளைப் பெற்றுக்கொண்டனர். நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது...

வெள்ளி, 17 டிசம்பர், 2010

இணையம் கற்போம் நூல் இரண்டாம் பதிப்பு - கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் அணிந்துரையுடன் வெளிவந்துள்ளது...



2009 இல் நான் எழுதி வயல்வெளிப் பதிப்பகம் வெளியிட்ட இணையம் கற்போம் நூல் விற்பனையில் இல்லாமல் இருந்தது. எனவே மேலும் சில கட்டுரைகள் இணைக்கப்பட்டு, தேவையான விளக்கப் படங்களுடன் 176 பக்கங்களில் செம்பதிப்பாக அழகிய வண்ணப்படத்துடன் வெளிவந்துள்ளது. கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் அணிந்துரை நூலுக்குச் சிறப்பு சேர்க்கிறது.

கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்கள், ஆசிரியர்கள், பேராசிரியர்கள் தமிழ் இணையம் பற்றி அறிய ஆர்வம் உடையவர்களுக்கு இந்த நூல் நல்ல அறிமுக நூலாக அமையும். தமிழ்க் கணினி, இணையத்திற்கு உழைத்தோர் இந்த நூலில் நினைவுகூரப்பட்டுள்ளனர். இணையத்தில் உள்ள தமிழ் வளம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

நூல் படி தேவைப்படுவோர் என் மின்னஞ்சல் முகவரிக்குத்
( muelangovan@gmail.com ) தொடர்புகொள்ளலாம்.

அல்லது +91 94420 29053 என்ற செல்பேசிக்குத் தொடர்புகொள்ளலாம்.


கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் அரிய அணிந்துரை

இணையற்ற இணைய நூல்

இணையம் கற்போம் என்னும் இந்த இணைய நூலைத் தமிழின் காலத் தேவை என்று கருதலாம். இந்த நூலைப் படைத்திருப்பதன் வாயிலாக முனைவர் மு. இளங்கோவன் என்ற ஒரு புலவர் உலகத் தமிழராக உயர்ந்து நிற்கிறார்.

‘இணையம்’ என்ற உலக வலைத்தளத்தைப் பாமரரும் புரிந்துகொள்ளும் வண்ணம், ஒருபெண்பால் ஆசிரியரைப்போல் அன்பால் விளக்குகிறது இந்த அரிய நூல்.

கல்லிலும் பனைஓலையிலும் சுட்டமண்ணிலும் தோலிலும் செப்பேட்டிலும் நாணயத்திலும் காகிதத்திலும் திரையிலும் காலந்தோறும் தாவித் தாவி வந்த தமிழ் இந்த மின்னணுயுகத்தில் இணையத்தில் ஏறி அமர்ந்துகொள்வது தவிர்க்கவியலாதது.

இனிவரும் நூற்றாண்டுகளில் இணையத்தில் ஏறாத மொழி நிலைபெறுவதற்கான வாய்ப்புகளை இழந்துபோகும் என்றே சொல்லத் தோன்றுகிறது.

ஆனால் இந்திய மொழிகளுள் இணையம் ஏறிய முதல்மொழி தமிழ்மொழிதான் என்ற பெருமையை முனைவர் மு.இளங்கோவன் இந் நூலில் பதிவுசெய்கிறார்.

கைத்தொலைபேசியும் மின்சாரமும் போலத் தமிழர்களின் அன்றாடப் பயன்பாட்டில் இணையம் வந்தே தீரும் என்று அழுத்திச் சொல்கிறார்.

இணையத்தின் பயன்பாடு துய்க்கத் தட்டச்சு பயிலவேண்டும்; ஆனால் தட்டச்சு பயில்வதொன்றும் எட்டாத உயரமன்று; ஒற்றை விரலால் கூடத் தட்டச்சு பயின்று வெற்றி பெற்றவர்கள் உண்டு என்று நம்பிக்கையூட்டுகிறார்.

இணையத்தின் சிக்கல்களை மட்டும் சொல்லி நம்மைச் சிக்க வைக்காமல் சிக்கெடுக்கும் தீர்வுகளையும் சொல்கிறார்.

ஒரு கிராமத்து இளைஞன் தன் முயற்சியால் படிப்படியாக முன்னேறி இணையத்தை எட்டி, அதில் தனக்கென்று ஒரு தனியரசு கட்டி, 315 மொழிகளில் மொழிபெயர்க்கத் தக்க நிறுவனத்தை உண்டாக்கி வெற்றிபெற்றதை விவரிக்கிறார்; அதை வாசித்தபொழுது ஒரு தமிழனின் வெற்றிகண்டு விம்மியது நெஞ்சம்.


விக்கிப்பீடியா என்ற உலக அறிவுப்பெட்டகத்துக்குள் பிறமொழிக் கட்டுரைகள் இடம்பிடித்த அளவுக்குத் தமிழ்க் கட்டுரைகள் இடம்பிடிக்கவில்லை என்ற ஆதங்கத்தை முனைவர் அனந்தகிருட்டினன், முதல்வர் கலைஞர் முன்பு வெளிப்படுத்தியபோது நான் அருகிலிருந்தேன். அதே ஆதங்கம் முனைவர் மு.இளங்கோவனுக்கும் இருக்கிறது.

விக்கிப்பீடியாவில் கட்டுரை எழுதுவதைக் கல்வி நிறுவனங்கள் ஒரு பாடமாக்க வேண்டும் என்ற முதன்மைக் கருத்தை முன்மொழிந்திருக்கும் நூலாசிரியரை நான் வழிமொழிகின்றேன்.

மூளையால் மட்டுமே முதன்மைபெறும் அறிவு நூற்றாண்டுக்குள் உலகம் நகரத் தொடங்கிவிட்டது.

இனி எந்த இனம் தாய்மொழியால் அறிவுபெறுகிறதோ தாய்மொழிக்கு அறிவைத் தருகிறதோ அந்த இனம்தான் வாழும்; எந்த இனம் அந்த அறிவை நவீன அறிவியல் வாகனங்களில் ஏற்றி உலகப் பொதுமை செய்கிறதோ அந்த இனம்தான் வளரும்.

தமிழையும் தமிழரையும் அப்படி வாழவைக்கவும் வேண்டும்; வளர வைக்கவும் வேண்டும். அதற்கான முயற்சிகளை முன்னெடுத்துச் செல்லும் ஒரு நூலாகத்தான் இந்த நூலை நான் கருதுகிறேன்.

நூலாசிரியர் முனைவர் மு.இளங்கோவன் அவர்களைப் பெரிதும் பாராட்டுகிறேன். இவரைப் போன்ற இளைஞர்களைத்தான் என் கவிதை கனவு கண்டு வருகிறது.

தமிழ் இலக்கணம், இலக்கியம் மட்டுமே கற்ற புலவர்கள் பலர் முத்தொள்ளாயிரத்தோடும், நன்னூலோடும் முடிந்துபோகிறார்கள். தகவல் தொழில்நுட்பம் பயின்ற பல இளைஞர்கள் மேற்கத்திய நாகரிகத்தில் மூழ்கி, பெப்சியில் செத்து மிதக்கும் ஈக்களாய் மிதக்கிறார்கள்.

தமிழின் ஆழ்ந்த அறிவும் தொழில்நுட்பத்தின் விரிவும் இணைந்து இருநூற்றாண்டுகளைப் பாலம் கட்டி இணைக்கத் தெரிந்த முனைவர் மு.இளங்கோவனைப் போன்ற இணையத் தமிழர்கள்தாம் தமிழ் உலகத்தைத் தாங்கிப் பிடிக்கும் தங்கத் தூண்களாகத் திகழப் போகிறார்கள்.

இவரின் வெற்றி தமிழின் வெற்றி; தமிழின் வெற்றி இவரின் வெற்றி.

வாழ்த்துகிறேன்..

வைரமுத்து

28.11.2010

உலகத் தமிழாசிரியர் மாநாட்டில் தமிழ் இணையம் அறிமுகம்

இன்று(17.12.2010) சென்னையில் நடந்த உலகத் தமிழாசிரியர் மாநாட்டில் தமிழ் இணையம் அறிமுகம் செய்யும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. காலை 9 மணி முதல் 9.30 மணி வரை என் பங்களிப்பு இருந்தது. சிங்கப்பூர், இலங்கை போன்ற அயல்நாட்டிலிருந்தும், தமிழகத்தின் அனைத்து மாவட்டத்திலிருந்தும் வந்திருந்த ஆசிரியர்கள், தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் அறியும் வண்ணம் தமிழ் இணைய வளர்ச்சியைக் காட்சி விளக்கத்துடன் எடுத்துக்காட்டினேன்.

தமிழகத்தின் அனைத்துப் பள்ளிகளிலும் பயன்படுத்தாமல் உள்ள கணினி இனிப் பயன்பாட்டுக்கு வரும் என்ற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டது. ஆர்வமாக அனைவரும் முன்வந்து உரையாடிக் கூடுதல் செய்திகளைப் பெற்றுச்சென்றனர்.

தருமபுரி, தூத்துக்குடி,பழனி, ஆர்க்காடு,கிருட்டினகிரி,விழுப்புரம்,திண்டிவனம், மதுராந்தகம், செஞ்சி, கன்னியாகுமரி,நெல்லை,மதுரை சார்ந்த தமிழகத்தின் பெரும்பான்மையான மாவட்டங்களில் இனித் தொடர்ந்து என்னை அழைத்துத் தமிழ் இணையப் பயன்பாடுகளை அறிந்துகொள்வதாகக் குறிப்பிட்டுச்சென்றர்.

இந்த மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றியதால் தமிழ் இணையப் பரவலாக்கம் தமிழக அளவில் அறிமுகம் ஆகியுள்ளது. இந்த வாய்ப்பைக் காலத் தேவையறிந்து, உணர்ந்து பேராளர்கள் அனைவரும் நேற்றே மாநாட்டு ஒருங்கிணைப்பாளரிடம் வேண்டுகோள் விடுத்துக் கூடுதல் நிகழ்ச்சியாக இதனை அமைத்தனர். இந்த வகையில் உதவிய மாநாட்டு ஒருங்கிணைப்பாளர் திரு.ஈசுவரன் ஐயா உள்ளிட்ட மாநாட்டுக் குழுவினர்க்கு என் நன்றி.

வியாழன், 16 டிசம்பர், 2010

சென்னை உலகத் தமிழாசிரியர் மாநாட்டுப் படங்கள்

சென்னையில் இன்று(16.12.2010)நடைபெற்ற உலகத் தமிழாசிரியர் மாநாட்டில் எடுக்கப்பெற்ற சில படங்களை இணைத்துள்ளேன். கண்டு மகிழலாம்.


உலகத் தமிழ் ஆசிரியர் மாநாட்டில் பங்கேற்ற பேராளர்கள்


இலங்கைப் பேராளர் மாநாட்டு மலரைப் பெற்றுக்கொள்ளும் காட்சி


மாநாடு தொடக்க விழா


சிங்கப்பூர் பேராசிரியர் தலைமையில் ஆய்வரங்கு


கட்டுரை வழங்கும் பேராளர்கள்


மு.இ, சிங்கப்பூர் இராசிக்கண்ணு,கோவலன்,ஈசுவரன்


புலவர் கோமதிநாயகம் அவர்கள் தலைமையில் மு.இளங்கோவன் கட்டுரை வழங்கிய அரங்கம்