நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வியாழன், 29 நவம்பர், 2012

இந்தியப் பல்கலைக் கழகத் தமிழாசிரியர் மன்றப் பன்னாட்டுக் கருத்தரங்கம்




இந்தியப் பல்கலைக் கழகத் தமிழாசிரியர் மன்றத்தின் நாற்பத்து நான்காம் பன்னாட்டுக் கருத்தங்கம் காரைக்குடி அருகில் உள்ள அமராவதி புதூரில் அமைந்துள்ள இராசராசன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் 2013 மே மாதம் 18, 19 ஆகிய நாள்களில் நடைபெற உள்ளது. இந்தக் கருத்தரங்கில் பல்கலைக்கழகம், கல்லூரிகள், ஆய்வு நிறுவனங்களில் பணியாற்றும் பேராசிரியர்கள் மட்டும் கலந்துகொண்டு கட்டுரை படைக்கலாம்.

பேராளர் பதிவுக் கட்டணம் ; உருவா 700 – 00

ALL INDIA UNIVERSITY TAMIL TEACHERS ASSOCIATION, MADURAI -625 021
என்ற முகவரியில் மாற்றத் தகுந்த வரைவோலையாகப் பதிவுக் கட்டணத்தை அனுப்பிவைக்க வேண்டும்.

கட்டுரை, தொகை அனுப்ப இறுதிநாள் : 15.01.2013

தொடர்பு முகவரி:

முனைவர் போ. சத்தியமூர்த்தி அவர்கள்
துணைப் பொருளாளர், இ.த.ப.மன்றம்,
தமிழியல்துறை,
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்,
மதுரை- 625 021, தமிழ்நாடு, இந்தியா
செல்பேசி: 0091 94886 16100



மணற்கேணியின் ஆய்வரங்கு...



மணற்கேணி ஆசிரியர் இரவிக்குமார், முனைவர் விசயவேணுகோபால், அறிஞர் நடன.காசிநாதன், முனைவர் இராசன், முனைவர் செல்வக்குமார்

 தோழர் இரவிக்குமார் அவர்களின் மணற்கேணி அமைப்பு இன்றையச் சூழலில் தொல் தமிழ் ஆய்வுகள் குறித்த பல ஆய்வுக் கூட்டங்களைத் தொடர்ந்து நடத்தி வருகின்றமை பாராட்டிற்குரிய ஒன்றாகும். கிரந்த எழுத்துத் திணிப்பை எதிர்த்துத் தோழர் இரவிக்குமார் காட்டிய ஆர்வம் போற்றற்குரிய ஒன்றாகும். கிரந்தம் குறித்த அமைதிப்போர் பற்றிப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராசிரியர்களோ, தமிழ்நாட்டின் தமிழாசிரியர்களோ இன்னும் அறியாமல் இருப்பதையும் இங்குக் குறிப்பிட்டாக வேண்டும்.

இந்த நிலையில் தோழர் இரவிக்குமார் அவர்கள் தமிழறிஞர்களையும், வரலாற்றுப் பேரறிஞர்களையும் நண்பர்களின் ஒத்துழைப்புடன் அழைத்து இளைய தலைமுறையினருக்கு வரலாற்றை நினைவுகூரச் செய்வதை நான் பாராட்டுகின்றேன். அந்த வகையில் நடைபெற்றத் தொல்லியல் குறித்த ஆய்வுக் கருத்தரங்கிற்குப்(24.11.2012) பிற்பகல் அமர்வில் பேராசிரியர் இராசன், பேராசிரியர் செல்வக்குமார் (தமிழ்ப் பல்கலைக்கழகம்) முனைவர் விசய வேணுகோபால் ஆகியோரின் உரை அமைவதை அறிந்து அந்த அமர்வுக்குச் சென்றிருந்தேன்.

புதுவைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் இராசன் அவர்களின் ஆய்வுகள்தான் தமிழர்களின் தொல் வரலாற்றை அறிவியல் அடிப்படையில் நிலைநிறுத்தும் என்பதை உணர்ந்தவன் ஆதலின் அவர் உரை சிறப்பாக இருக்கும் என்ற நம்பிக்கையில் அரங்கில் அமர்ந்தேன். அங்குத் தொல்லியல் அறிஞர் நடன. காசிநாதன், கனடா பேராசிரியர் செல்வக்குமார், இராம. கி ஐயா, நாக. இளங்கோவன், விழுப்புரம் தமிழநம்பி, ஒரிசா பாலு, தாமரைக்கோ உள்ளிட்ட அன்பர்களைக் கண்டு உரையாடினேன்.

பேராசிரியர் இராசன் அவர்கள் கொடுமணல் அகழாய்வுகள் குறித்துச் சிறப்பாகக் காட்சி விளக்கத்துடன் விளக்கினார்கள்.

ஓர் ஊரை முழுமையாக ஆய்வு செய்ய ஐம்பதாண்டுகள் ஆகும் என்று குறிப்பிட்டு இதற்குப் பலரின் ஒத்துழைப்பும் உதவியும் தேவை என்று குறிப்பிட்டார். தம் ஆய்வுக்குத் தம் மாணவர்கள்தான் அடிப்படையாக இருந்து உதவி வருவதை நன்றிப் பெருக்குடன் குறிப்பிட்டார். அதுபோல் தம் ஆய்வுக்கு உதவும் அன்பர்களையும் மேடையில் சிறப்பாக நினைவுகூர்ந்தார்.

கொடுமணல் அகழாய்வில் கிடைத்துள்ள எஃகு உருக்காலை, பதுக்கைகள், மணிகள் பற்றிய பல புதிய செய்திகளைகளை அரங்கிற்கு எடுத்துரைத்தார். “வடமலைப் பிறந்த மணியும் பொன்னும்” என்னும் பட்டினப் பாலை வரிகளில் குறிப்பிடப்படும் மணிகள் விந்திய சாத்பூரா மலைகளில் கிடைக்கின்றன எனவும் அதனை இங்குக் கொண்டுவந்து அழகுப்படுத்தி மக்கள் பயன்பாட்டிற்கு வழங்கியுள்ளனர் என்றும் குறிப்பிட்டார்.

கொடுமணலில் இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கும் முன்பாக நெய்யப்பட்ட துணிகள் கிடைப்பதைக் குறிப்பிட்டு அந்தத் துணிகளைக் காட்சிப்படுத்தினார். கொடுமணல் அகழாய்வுகளைக் கொண்டு அந்தப் பொருட்கள் கி.மு. ஐந்தாம் நூற்றாண்டு என்று காலக்கணிப்பையும் குறிப்பிட்டார். கொடுமணலில் கிடைத்த புலிச்சின்னம், தங்கம், வெள்ளிப்பொருள்கள் குறித்தும் உரையாற்றினார். அதுபோல் அழகன்குளம் அகழாய்வுகள் குறித்தும் பேசினார். நிகம வணிகக்கழுக்கள் பற்றியும் பல செய்திகளை எடுத்துரைத்தார். தொல்லியல் அறிஞர் நடன.காசிநாதன் தலைமையில் இந்த அமர்வு அமைந்தமை குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

தமிழ்ப்பல்கலைக்கழகப் பேராசிரியர் செல்வக்குமார் அவர்களின் ஆய்வுரையும் மிகச்சிறப்பாக இருந்தது. அத்திரப்பாக்கம், குடியம்-குகை, கருப்பலவாடி, ஆய்வுகள் குறித்து விளக்கினார். நுண்கற்காலம் சார்ந்த மாங்குடி, பரிக்குளம், தேரிருவேலி(இராமநாதபுரம் மாவட்டம்) ஊர்களில் நடைபெற்ற ஆய்வுகள் குறித்து நினைவூட்டினார். தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் பிள்ளையார் பட்டி ஆய்வு குறித்து விளக்கிப் பழங்கற்கால மாந்தர்கள் தமிழகத்தில் வாழ்ந்துள்ளனர். 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஒரு குறிப்பிட்ட இனக்குழு இங்கு வாழ்ந்துள்ளது என்பதை அறிவியல் அடிப்படையில் சான்றுகளுடன் விளக்கினார்.

மூன்றாவது உரையாளராகப் பேராசிரியர் விசய வேணுகோபால் அவர்கள் புதுவையில் அமைந்துள்ள பிரெஞ்சு ஆசியவியல் பள்ளி தமிழாய்வுகளுக்கு எந்த எந்த வகையில் தொண்டாற்றி வருகின்றது என்பதைச் சிறப்பாகக் குறிப்பிட்டார்.

கோயிற்கலை, சிற்பக்கலை, ஓவியக்கலை குறித்த ஆய்வுகளுக்கு இந்த ஆய்வுநிறுவனம் செய்துள்ள பல்வேறு பணிகளைப் பட்டியலிட்டுக் காட்டினார். சுப்பிரமணியர் வழிபாடு(1978) பற்றி 246 புகைப்படங்களுடன் நூல் வெளிவந்துள்ளது என்றார். பைரவர் வழிபாடு(2005) குறித்தும் இந்த நிறுவனம் ஆய்வுநூல் வெளியிட்டுள்ளது என்றார். தாராசுரம்கோயில், பல்லவர் காலச் சைவ சமயச் சிற்பங்கள், திருப்புடைமருதூர் ஓவியங்கள், தமிழகம் ஆந்திரம், கேரளக் குகைகள் குறித்த ஆய்வுநூல்கள் சிறப்புடன் வெளிவந்தமையைக் குறிப்பிட்டார்.

தமிழகக் கோட்டைகள் குறித்து இதுவரை 4 நூல்கள் வெளிவந்துள்ளன எனவும், தேவாரம் மூன்று தொகுதிகள் தி.வே. கோபாலையரால் வெளியிடப்பட்டுள்ளன எனவும், பரிபாடல் பிரெஞ்சு நாட்டு அறிஞர் பிரான்சுவா குரோ அவர்களால் பிரெஞ்சு மொழியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது (1968) எனவும், கணினித் தேவாரம்(2008) வெளிவந்துள்ளது எனவும் கர்ணமோட்சம் (நாட்டுப்புறவியல்) ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டுள்ளது எனவும் சங்க இலக்கியம் செம்பதிப்பாக வெளிவந்துள்ளமையும் குறிப்பிட்டார்.

அறிஞர் செவ்வியாரின் தொல்காப்பியம் - சேனாவரையம் பிரெஞ்சு மொழிபெயர்ப்பு, ஈவா வில்டனின் நற்றிணை, குறுந்தொகைப் பதிப்புகள் பற்றியும், யாப்பருங்கலக்காரிகை(1993), மாறனகப்பொருள் - கோபாலையர் பதிப்பு, உத்திரமேரூர் கல்வெட்டுகள் (1970), பற்றியும்  திருவண்ணாமலைக் கல்வெட்டுகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிடப்பட்டுள்ளது எனவும், 1970 முதல்  கல்வெட்டு ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன எனவும் குறிப்பிட்டார்.

புதுவை மாநிலக் கல்வெட்டுகள் 435 இதுவரை பதிப்பிக்கப்பட்டுள்ளன எனவும், கன்னடத்தில் 1500, ஆந்திராவில் 6000, கேரளாவில் 6000  தமிழ்க்கல்வெட்டுகள் இருப்பதையும் குறிப்பிட்டார். இந்தக் கல்வெட்டுகளில் கன்னடநாட்டில் கிடைக்கும் கல்வெட்டுகள் இராசேந்திர சோழன் காலத்திய கல்வெட்டுகள் என்றும் குறிப்பிட்டார்.

கல்வெட்டில் இடம்பெறும் “ஜாதிநாசம் செய்தல்” என்ற தொடரை விளக்கினார். தற்பொழுது தமிழ்க் கல்வெட்டுச் சொல்லகராதி உருவாகி வருவதையும் எடுத்துரைத்தார்.

மொத்தத்தில் மணற்கேணியின் பங்களிப்பால் தமிழுக்கு வற்றாமல் ஆய்வுத் தரவுகள் சுரந்துகொண்டே உள்ளன. 



கொடுமணல் அகழாய்வில் கிடைத்த மணிகள்(பட்டினப்பாலை குறிக்கும் மணிகள்)

கொடுமணல் அகழாய்வில் கிடைத்த சங்குகள்



கொடுமணல் அகழாய்வுகள்




நாக.இளங்கோவன், தாமரைக்கோ, தமிழநம்பி, செல்வா(கனடா), இராம.கி. 

 

புதன், 28 நவம்பர், 2012

கல்வெட்டு அறிஞர் வில்லியனூர் ந. வேங்கடேசன்...





வில்லியனூர் ந. வேங்கடேசன் அவர்கள்

புதுவைப் பல்கலைக்கழகத்திற்கு நான் படிக்க வந்தபொழுது(1992-93) புதுவையில் உள்ள முதன்மையான நூலகங்களுக்குச் சென்று வருவது வழக்கம். அப்பொழுது பிரெஞ்சு நிறுவன நூலகத்தில் அறிமுகமானவர் வில்லியனூர் ந. வேங்கடேசன் ஆவார். அன்று முதல் இன்றுவரை படிப்பதை ஒரு வாழ்க்கைமுறையாகக் கொண்டிருப்பவர் வில்லியனூர் ந. வேங்கடேசன்.  எப்பொழுது பிரெஞ்சு நிறுவன நூலகத்திற்குச் சென்றாலும் குனிந்த தலை நிமிராமல் தென்னிந்தியக் கல்வெட்டுகளின் தொகுப்புகளைப் பார்வையிட்டு ஏதேனும் குறிப்புகளை எழுதிக் கொண்டிருப்பார். இடையூறு செய்யக்கூடாது என்று நான் ஒரு வணக்கம் மட்டும் தெரிவித்துவிட்டு வருவேன்.

கல்வெட்டுகள், அல்லது புதுவை பற்றிய பழைய செய்திகளைத் தெரிந்துகொள்ள வேண்டியிருந்தால் அடுத்த நொடி ஐயாவை அழைத்து விளக்கம் பெறுவேன். பழகுதற்கு இனிய பண்பாளர். பி.எல். சாமி குறித்தும், திருமுடி சேதுராமன் செட்டியார் பற்றியும், குடந்தை ப. சுந்தரேசனார் பற்றியும், அரிக்கமேடு பற்றியும் பல செய்திகளை நான் உரையாடிப் பெற்ற பட்டறிவு உண்டு.

வில்லியனூர் ந. வேங்கடேசனார் எழுதியுள்ள நூல்களைப் பயன்படுத்தாமல் ஒருவர் புதுவை வரலாற்றை எழுதிமுடிக்க இயலாது. அந்த அளவுக்குச் சான்று காட்டும் தரத்தில் அரிய செய்திகளைக் கொண்டு வில்லியனூர் ந. வேங்கடேசன் நூல்கள் விளங்குகின்றன. பெருமைக்குரிய அறிஞரின் வாழ்க்கைக் குறிப்பையும் தமிழ்ப்பணிகளையும் இங்குப் பதிந்துவைக்கின்றேன்.

வில்லியனூர் ந. வேங்கடேசன்

கல்வெட்டுத்துறையில் தொடர்ந்து இயங்கிவரும் அறிஞர் வில்லியனூர் ந. வேங்கடேசன் அவர்கள் புதுவை மாநிலம் வில்லியனூரில் 30.10.1940 இல் பிறந்தவர். பெற்றோர் சீ. நடராசன், சுப்புலட்சுமி. ந. வேங்கடேசன் தொடக்கக் கல்வியைப் புதுவை வேதபுரீசுவரர்  வித்தியாநிலையத்தில் பயின்றவர். அங்குப் பணிபுரிந்த திரு. தாமோதரன் என்ற தமிழாசிரியர் கட்டுரை ஒன்று எழுதச் சொன்னார். ந. வேங்கடேசன் எழுதிய கட்டுரையைப் படித்த ஆசிரியர் தனித்தமிழ் படித்தால் நன்றாக இருக்கும் என்று ஊக்கப்படுத்தி, புலவர் புகுமுக வகுப்பிற்கு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் விண்ணப்பித்து, 12 மாணவர்களை எழுதச் சொன்னார். அதில் ஒன்பது மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். அந்த ஒன்பது மாணவர்களில் வில்லியனூர் ந. வேங்கடேசன் அவர்களும் ஒருவர்.

1958 இல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து ஐந்தாண்டுகள்  படித்தவர். பிறகு 1964 இல் சென்னை மாகாண முதல்வராக இருந்த ஓ.பி.ஆர் அவர்களின் தலைமையின் கீழ் இயங்கும் வள்ளலார் குருகுலத்தில் தமிழாசிரியராக ஓராண்டு பணிபுரிந்தார். பிறகு  சென்னையில் அரசுப் பள்ளிகளில் பணியேற்று,  35 ஆண்டுகள் பணிபுரிந்தார். தமிழாசிரியர் பணியை வளவனூர் மேல்நிலைப்பள்ளியில் நிறைவு செய்தவர்(1998).

கல்வெட்டுத் துறையில் தம்மையும் தம் ஒருசாலை மாணாக்கர் பாகூர் புலவர் குப்புசாமி அவர்களையும் வழி நடத்தியவர் அமரர் திருமுடி சேதுராமன் செட்டியார் என்று அடிக்கடி ந. வேங்கடேசன் குறிப்பிடுவார். அவர்தான், “தமிழ்படித்தவர்கள் கல்வெட்டுத் துறைக்கு வரவேண்டும்” என்று ஊக்கப்படுத்தி வில்லியனூர் ந. வேங்கடேசன் போன்றவர்களைக் கல்வெட்டுத்துறைக்கு ஆற்றுப்படுத்தினார்.

 வில்லியனூர் ந. வேங்கடேசன் அன்றிலிருந்து பேசுவது, அல்லது எழுதுவது கல்வெட்டுத்துறையை மட்டும் என்று அமைகின்றது. திருமுடி சேதுராமன் செட்டியார் அவர்கள் வில்லியனூர் ந. வேங்கடேசனைப் புதுவையில் உள்ள பிரெஞ்சு நிறுவனத்திற்கு அழைத்துச் சென்று டாக்டர் பிலியோசா, டாக்டர் பிரான்சுவா குரோ, போன்ற பேராசிரியர்களிடம் அறிமுகப்படுத்தி,  பிரெஞ்சுப் பண்பாட்டுக் கழகத்துடன் தொடர்புகொள்ளச் செய்தார். திருமுடியாரின் நினைவாகத் தாம் நடத்தும் பதிப்பகத்திற்குத் திருமுடிப் பதிப்பகம் என்று பெயர்சூட்டித் தம் நன்றியறிதலைப் புலப்படுத்தி வருபவர்.

வில்லியனூர் ந. வேங்கடேசன் அவர்களுக்கு 1958 முதல் விடுமுறை நாள்களில் பிரெஞ்சு நிறுவன நூலகத்துடன் தொடர்பு உண்டு. அது இன்றுவரை நீடிக்கின்றது.

வில்லியனூர் ந. வேங்கடேசன் அவர்கள் இதுவரை 26 நூல்களைத் தமிழில் வெளியிட்டுள்ளார். இதில் பெரும்பாலும் கல்வெட்டுகள், தமிழரின் தொன்மை, வரலாற்றுச் சிறப்பு விளக்கும் நூல்களாக அமைந்துள்ளன.

வில்லியனூர் ந. வேங்கடேசன் நூல்கள்:

  1. பண்பும் பயனும் (மொழியியல் கட்டுரைகள்) 1979
  2. வரலாற்றில் வில்லியனூர்- 1979
  3. வரலாற்றுச் சின்னங்கள்
  4. வரலாற்றில் ஆரிய வைசியர்
  5. பல்லவன் கண்ட பனைமலைக்கோயில்
  6. புதுவை மாநிலக் கல்வெட்டுகளில் ஊர்ப்பெயர்கள்
  7. புதுவை மாநிலக் கல்வெட்டுகளில் நாடும் வளநாடும்
  8. புதுவை மாநிலச் செப்பேடுகள்
  9. கல்வெட்டுகளில் காரைக்கால் பகுதிகள்
  10. கல்வெட்டுகளும் சில வரலாறுகளும்
  11. வரலாற்றில் அரிக்கமேடு
  12. நீர்நிலைகளும் வரிகளும்
  13. கல்வெட்டுகளில் திருவாண்டார் கோயில்
  14. கல்வெட்டுகளில் திருபுவனை
  15. கல்வெட்டுகளில் மதகடிப்பட்டு
  16. கல்வெட்டுகளில் பாகூர்
  17. கல்வெட்டுகளில் அரியசெய்திகள்
  18. கல்வெட்டுகளில் திருமால் திருப்பதிகள்
  19. தேவாரத்தில் இசைக்கருவிகள்
  20. பொன்பரப்பின வாணகோவரையன்(இணையாசிரியர்)
  21. திருநள்ளாற்று தருபாரணேசுவரர் கோயில் ஒரு ஆய்வு
  22. கல்வெட்டுகளில் தொண்டைநாட்டுத் திருமுறைத் தலங்கள்
  23. பி.எல்.சாமியின் ஆய்வுக்கட்டுரைகள்(தொகுதி 1) தொகுப்பாசிரியர்
  24. பி.எல்.சாமியின் ஆய்வுக்கட்டுரைகள் (தொகுதி 2) தொகுப்பாசிரியர்
  25. நடுநாட்டில் சமணம்


வில்லியனூர் ந. வேங்கடேசன் அவர்கள் தமிழகக் கோயில் வரலாறுகள் பற்றி மக்கள் தொலைக்காட்சியில் 50 தொடர்கள்  தொடர்ந்து உரையாற்றியுள்ளார். சன் தொலைக்காட்சியில் அரிக்கமேடு குறித்து உரையாட்டில் பங்காற்றியுள்ளார்.  புதுவைப் பல்கலைக்கழகத்தில் வருகைதரு ஆய்வாளராகப் பணியேற்றுப் புதுவை மாநிலக் கல்வெட்டுகளில் அரிய செய்திகள் என்ற நூலை வெளியிட்டுள்ளார்கள் (பல்கலைக்கழக வெளியீடு).

வில்லியனூர் ந. வேங்கடேசன் அவர்கள் எழுதிய “வரலாற்றில் மதகடிப்பட்டு” என்ற நூலுக்குப் புதுவை அரசு “தொல்காப்பியர் விருது” வழங்கியது. புதுவை அரசின் “கலைமாமணி” விருதும் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது(2008). “கல்வெட்டுகளில் காரைக்கால் பகுதி” என்னும் நூலுக்குக் காரைக்காலில் உள்ள திரு. கணபதி சுப்பிரமணியம் என்ற தணிக்கையாளர் தலைமையில் இயங்கும் பாரதியார் கழகம் “கல்வெட்டுக் கலைமணி” என்று பட்டமளித்துப் பாராட்டியுள்ளது.

தொல்புதையல், திருச்சிற்றம்பலம் ஆகிய ஏடுகளில் துணையாசிரியராகப் பணியாற்றுகின்றார். புதுவை வரலாற்றுச் சங்கத்தில் தொடக்க காலம் முதல் இணைந்து பணியாற்றி வருகின்றார். தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் தொல்லியல் கழகத்தில் உறுப்பினராகவும் உள்ளார். நடன. காசிநாதன் நிறுவிய தமிழகத் தொன்மையியல் ஆய்வு நிறுவனத்தில் உறுப்பினராகவும் உள்ளார். இப்பொழுது தென்னார்க்காடு மாவட்ட ஊர்ப்பெயர்கள் குறித்து ஆய்வுசெய்து வருகின்றார். பிரெஞ்சு நிறுவனம் வெளியிட்ட சமணம், புத்தர் குறித்த ஒளிவட்டுகளில் பணிபுரிந்துள்ளார்.

.வில்லியனூர் ந. வேங்கடேசன் அவர்கள் பல இதழ்களில் தொடர்ந்து கட்டுரைகள் எழுதுவதுடன் புதுவை வானொலியில்  வரலாற்றுச் செய்தி கள் குறித்த பல உரையும் ஆற்றியுள்ளார்.


வில்லியனூர் ந.வேங்கடேசன் அவர்களின் தொடர்புமுகவரி:

வில்லியனூர் ந. வேங்கடேசன் அவர்கள்,
40, கிழக்கு சந்நிதி வீதி,
வில்லியனூர்,
புதுவை மாநிலம்
605 110
செல்பேசி: 0091- 9442066599

(குறிப்பு: இக்கட்டுரையை - படத்தைப் பயன்படுத்துவோர் முன் இசைவு பெறுக)



வேலூர் வழக்கறிஞர் தெ.சமரசம், மருத்துவர் பத்மா சமரசம் அவர்களுடன் புதுவையில் சந்திப்பு...



மருத்துவர் பத்மா சமரசம், மருத்துவர் ச.இனியன், முனைவர் மு.இளங்கோவன் 

 வேலூர் என்றவுடன் வரலாற்று ஆர்வலர்களுக்கு அங்குள்ள கோட்டை நினைவுக்கு வரும். அரசியல்காரர்களுக்கு அங்குள்ள சிறை நினைவுக்கு வரும். திராவிட இயக்க உணர்வாளர்களுக்குத் தந்தை பெரியார் மறைந்தமை நினைவுக்கு வரும். இலக்கிய ஆர்வலர்களுக்குத் தமிழறிஞர் மு.வ நினைவுக்கு வருவார். அதுபோல் தமிழ்ப் பற்றாளர்களுக்கு வேலூர் என்ற உடன் நினைவுக்கு வரும்பெயர் வழக்கறிஞர் தெ.சமரசம் என்பதாகும்.

 திராவிட இயக்கப் பின்புலத்தில் வளர்ந்த வழக்கறிஞர் தெ.சமரசம் ஐயா பல்வேறு தமிழ்ப்பணிகளுக்கு அமைதியாக உதவி வருபவர். முல்லைச்சரம், கண்ணியம், மூவேந்தர் முழக்கம் உள்ளிட்ட ஏடுகளில் தொடர்ந்து எழுதி வருகின்றார். இவர் இயற்றியப் பயண இலக்கிய நூல்கள் பற்றி முன்பே ஓர் ஆய்வரங்கில் கட்டுரை படித்துள்ளேன். இருபதாம் நூற்றாண்டில் பயண இலக்கிய நூல்களுக்குத் தனிச் சிறப்பை ஏற்படுத்தித் தந்தவர். இவர் இலங்கை, மலேசியா, நியூசிலாந்து, அந்தமான் உள்ளிட்ட நாடுகளுக்கும் ஊர்களுக்கும் பயணம் செய்தமையைப் படிப்பவர் உள்ளம் மகிழ்ச்சியடையத்தக்க வகையில் தனித்தனி நூல்களாக எழுதியுள்ளமை பாராட்டிற்கு உரிய ஒன்றாகும்.

 வழக்கறிஞர் தெ.சமரசம் ஐயா அவர்கள் கடந்த காரிக்கிழமை(24.11.2012) புதுச்சேரிக்கு வந்துள்ளதாகத் தெரிவித்தார். உடன் அவரைப் பார்ப்பதற்குத் திட்டமிட்டேன். பெரும்பாலும் எனக்குக் காரி, ஞாயிறுகளில்தான் அதிக வேலை இருக்கும். ஆய்வுப் பணிகளில் ஈடுபடவும் இலக்கிய நிகழ்வுகளில் கலந்துகொள்ளவும் விடுமுறை நாள் உதவியாக இருக்கும். ஐயாவின் வருகை எனக்குத் தேனாக இனித்தது. அம்மாவும் உடன் வந்துள்ளதாகத் தெரிவித்தார்கள். காலை 11 மணிக்கு வழக்கறிஞர் தெ.சமரசம் ஐயா தங்கியிருந்த விடுதிக்குச் சென்றேன். நீண்ட இடைவெளிக்குப் பிறகு சந்திப்பு.

 பலவாண்டுகளுக்கு முன் வேலூர் சென்று ஐயாவையும் மருத்துவர் அம்மாவையும் அவர்கள் இல்லத்தில் சந்தித்தேன். அம்மாவுக்குத் தமிழ் இணையம் பயிற்றுவித்தேன். அவர்கள் தமிழில் தட்டச்சிடவும், செய்திகளைத் தேடிப் படிக்கவும் நான் வழங்கிய குறிப்புகள் உதவியதாக அம்மா மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்கள். எவ்வளவு எடுத்துரைத்தும் ஐயாவுக்கு இணையம் தொடர்புஇல்லாமல் உள்ளதை ஒப்புக்கொண்டார்.

 எங்கள் பேச்சு பயண இலக்கிய நூல்கள் பற்றி நகர்ந்தது. அடுத்து மலேசியாவின் முன்னாள் அமைச்சரும், அரசியல் தலைவருமான டத்தோ சுப்பிரமணியன் அவர்களைப் பற்றியும் அவர்களின் அருமைத்துணைவியார் டத்தின் தாமரைச்செல்வி அவர்களைப் பற்றியும் உரையாடினோம். இருவரும் கண் அறுவை மருத்துவத்திற்காகத் தமிழகம் வந்துள்ளதாக அறிந்தேன். அடுத்த கிழமை அவர்களைச் சந்திக்கவும் முன்னேற்பாடு செய்தோம்.

 வேலூரில் நடைபெறும் பல்வேறு தமிழ்ப்பணிகளைப் பற்றியும், குடியாத்தம் புலவர் வே. பதுமனார் பற்றியும் வி.ஐ.டி. பல்கலையில் தமிழ் இணையப் பயிலரங்கம் நடத்துவது பற்றியும் உரையாடினோம்.

 அடுத்து எங்கள் பேச்சு தெ.சமரசம் ஐயா அவர்களின் திருமகனார் மருத்துவர் ச. இனியன் அவர்களைப் பற்றி அமைந்தது. மருத்துவர் இனியன் தமிழகத்தில் மருத்துவப் படிப்பை முடித்து உயர் படிப்பை ஆத்திரேலியாவில் பயின்றவர். முன்பே நூல்கள் வழியாக மருத்துவர் ச. இனியன் பற்றி அறிவேன். இன்று புதுவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மாணவர்களுக்கு உரையாற்ற வந்துள்ளதாக அறிந்தேன்.

 மருத்துவர் ச.இனியன் அவர்கள் சிறப்புரை முடித்து இரண்டு மணியளவில் அறைக்குத் திரும்பினார். மருத்துவர் இனியன் அவர்கள் இப்பொழுது வேலூர் கிறித்தவ மருத்துவக் கல்லூரியில் (சி.எம்.சி) மருத்துவராகப் பணிபுரிகின்றார். அவர் குடல் (முன்குடல்) மருத்துவத்தில் மிகச்சிறந்த புலமை பெற்றவர். அவர் கற்ற கல்விக்குப் பல்லாயிரம் டாலர் ஊதியம் பெறலாம். ஆனால் தாயக மக்களுக்குப் பணிபுரிய வேண்டும் தமிழகம் வந்துள்ளார் என்று அறிந்து வியந்துபோனேன்.


வழக்கறிஞர் தெ.சமரசம், மருத்துவர் ச.இனியன், முனைவர் மு.இளங்கோவன்


மருத்துவர் ச.இனியன் அவர்கள் ஏழை எளிய மக்களுக்குக் குறைந்த கட்டணத்திலும் இலவசமாகவும் மருத்துவம் பார்க்கும் இயல்பறிந்து வியந்துபோனேன். மருத்துவர் ச. இனியனின் இயல்பறிந்தபோது நான் இதுவரை பார்த்த ஒவ்வொரு மருத்துவரும் என் நினைவில் நிழலாடினர். மருத்துவர் ச.இனியனுடன் சிறிது நேரம் உரையாடினேன். அவர்கள் அனைவரும் வேலூரில் ஆறுமணிக்கு இருக்க வேண்டும் என்று புறப்பட்டனர்.

நான் அடுத்த நிகழ்வுக்கு - மணற்கேணி அமைப்பின் தொல்லியல் குறித்த ஆய்வுக் கருத்தரங்கிற்குச் செல்லப் புறப்பட்டேன். வழியில் உணவை முடித்துக்கொள்ளலாம் என்று திட்டமிட்டு, மிசன்வீதி கடந்து, செட்டித் தெருவில் உள்ள ரெட்டியார் உணவகத்தை நோக்கிச் சென்றேன். இடையில் ஒரு இனிய காட்சி: கடலாய்வாளர் ஒரிசா பாலு அவர்கள் ஒரு மரத்தடியில் சிறிய மாநாடு நடத்திக்கொண்டிருப்பதைப் பார்த்தேன்.

ஞாயிறு, 25 நவம்பர், 2012

தொல்லியலறிஞர் நடன. காசிநாதன் அவர்கள்

அறிஞர் நடன.காசிநாதன் அவர்கள்

 1990 ஆம் ஆண்டளவில் எனக்குத் தொல்லியல் அறிஞர் நடன. காசிநாதன் அவர்களின் பெயர் அறிமுகமானது. எங்கள் ஊரான கங்கை கொண்ட சோழபுரம் அகழாய்வுப்பணிகளில் ஆர்வம் காட்டி அந்தப் பகுதிக்குப் பல உதவிகளைச் செய்தார். அந்த நாளில் உள்கோட்டையில் ஒரு விழா ஏற்பாடு செய்து ஐயா அவர்களைப் பேசவும் செய்தோம்.

அச்சக ஆற்றுப்படை   என்ற என் நூலுக்கு அரியதோர் அணிந்துரையும் ஐயா அவர்கள் வழங்கினார்கள்(25.07.1992). நான் சென்னையில் பணியிலிருந்தபொழுது ஒருமுறை அவர்களின் அலுவலகம் சென்று பார்த்த நினைவும் எனக்கு உண்டு. கண்ணியம் இதழ் வழியாகவும், பிற ஏடுகளின் வழியாகவும் அறிஞர் நடன.காசிநாதன் அவர்களின் ஆராய்ச்சி ஆர்வத்தைக் கண்டு பலபொழுது வியந்துள்ளேன்.

பூம்புகாரும் கடல் அகழாய்வும் என்ற அறிஞர் நடன.காசிநாதன் அவர்களின் ஆராய்ச்சி நூலைக் கற்கும் வாய்ப்பு அண்மையில் அமைந்தது. அந்த நூலைக் கற்ற பிறகு பட்டினப்பாலை நூலைக் கற்றேன். பட்டினப்பாலையின் மேன்மை எனக்கு அப்பொழுது நன்கு விளங்கியது.

பூம்புகாரின் பண்டையச் சிறப்பையும் கடல் அகழாய்வின் உண்மைகளை யும் உரைக்கும் அந்த நூலை வரைந்த அறிஞர் நடன. காசிநாதன் அவர்கள் தமிழகத் தொல்லியல் வரலாற்றில் என்றும் நினைவுகூரத்தக்கத் தொல்லியல் அறிஞர் ஆவார். அவர்தம் வாழ்க்கை வரலாற்றையும், அவர் எழுதிய நூல்களையும் கட்டுரைகளையும் தமிழுலகிற்குப் பதிந்துவைக்கின்றேன்.

தொல்லியலறிஞர், நடன. காசிநாதன் வாழ்க்கை வரலாறு:

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் வட்டம், தொப்பளிக் குப்பத்தில் 01.11.1940 இல் பிறந்தவர். இவர், குழந்தைப் பருவத்திலேயே தமது தந்தையை இழந்துவிட்ட காரணத்தால், தாய்வழிப் பாட்டனார் ஊரான சிதம்பரம் வட்டம், தே.புதுப்பேட்டையில் வளர்க்கப்பட்டார். தொடக்கக் கல்வியைப் புதுப்பேட்டையிலும், புதுப்பூலாமேட்டிலும் முடித்து, சிதம்பரம் இராமகிருஷ்ணா உயர்நிலைப் பள்ளியில் பள்ளி இறுதி வகுப்புவரை பயின்றார். பின்பு, 1963-இல் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் வரலாற்றில் இளங்கலைப் பட்டம் முடித்து, சென்னைப் பல்கலைக் கழகத்தில் தொன்மை வரலாறு மற்றும் தொல்லியல்பாடத்தில் முதுகலைப் பட்டத்தை 1965- இல் பெற்றார். இரண்டாண்டு காலம் அதே பல்கலைக் கழகத்தில் ஆய்வு மாணவராகப் பயின்ற பின்னர், 1967-இல் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையில் கல்வெட்டாளராகப் பணியில் சேர்ந்தார்.

வட்டெழுத்தைப் படிப்பதில் வல்லவர்

கல்வெட்டாய்வாளராகப் பணிபுரிகையில் கன்னியாகுமரி மாவட்டம், திருவண்ணாமலை மாவட்டம் ஆகியவற்றில் கல்வெட்டுகளை ஆய்வு செய்து பல புதிய கோயிற் கல்வெட்டுகளையும், நடுகல் கல்வெட்டுகளையும் கண்டுபிடித்தார். இவர் கண்டறிந்த பல வட்டெழுத்துக் கல்வெட்டுகளைப் படித்து, ‘வட்டெழுத்தைப் பயில்வதில் வல்லவர்என்ற பாராட்டையும் பெற்றார்.

செப்புப் பட்டயங்கள், கல்வெட்டுகள், சிற்பங்கள் கண்டுபிடித்தார்

1974 - இல் பதிவு அலுவலராகப் பதவி உயர்வு பெற்று தஞ்சையிலும், சென்னையிலும் பணியாற்றியபோது, திருத்தணிக்கு அருகிலுள்ள வேலஞ்சேரியில், பல்லவ மன்னன் அபராஜிதன், சோழ மன்னன் முதலாம் பராந்தகன் காலத்திய இரு அரிய செப்புப் பட்டயங்களைக் கண்டறிந்து துறைக்குக் கைப்பற்றினார். சென்னையில் தனியார் ஒருவரிடம் இருந்த மராத்திய மன்னர் சரபோஜியின் திருவுருவச் சிலையையும், இராயப்பேட்டையில் ஒரு புற்றுக் கோயிலுக்கருகில் இருந்த பௌத்த புடைச் சிற்பத்தையும், எல்லிஸ் துரை, கிணறுகள் அமைத்ததைத் தெரிவிக்கும் கல்வெட்டையும், காரனெட் நிறுவனத்தார் சிற்பக் கிடங்கில் இருந்த வட்டெழுத்துக் கல்வெட்டுடன் கூடிய பல்லவர் காலத் துர்க்கைச் சிலையொன்றையும் கண்டுபிடித்துத் துறைமூலம் வெளியுலகுக்குத் தெரியப்படுத்தினார்.

இராசராசனின் ஆயிரமாவது முடிசூட்டு விழா நடத்தினார்

1981-இல் துணை இயக்குநராகப் பதவி உயர்வு பெற்று பணிபுரிந்து கொண்டிருக்கையில், இயக்குநர் பொறுப்பை (Director incharge 1983- இல் ஏற்று, தஞ்சாவூரில் 1984-இல் சோழ மாமன்னன் முதலாம் இராசராசனின் ஆயிரமாவது முடிசூட்டு விழாவை, அந்நாள் மாண்புமிகு தமிழக முதல்வர் புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். மற்றும் மாண்புமிகு பாரதப் பிரதமர் திருமதி இந்திராகாந்தி ஆகியோரைக் கொண்டு சிறப்பாக நடத்தி முடித்தார்.

இயக்குநராக நியமனம் பெற்ற பின்னர் செய்து முடித்த அரும்பணிகள்

1989-இல் துறையின் இயக்குநராகப் பதவி உயர்வு பெற்று பணியாற்றுகையில் பல நில அகழாய்வுகள் நடத்தியும், ஆங்காங்கே அகழ் வைப்பகங்களை நிறுவியும் தமிழக வரலாற்றுக்குப் புத்தொளி ஏற்படுத்தினார். இவர் காலத்தில் நிகழ்ந்த அகழாய்வுகளில் அழகன்குளம் நில அகழாய்வும், பூம்புகார் நில அகழாய்வும் மற்றும் கடல் அகழாய்வும் குறிப்பிடத்தக்கவைகளாகும். இவர் ஏற்படுத்திய அகழ் வைப்பங்களில் தஞ்சாவூர் முதலாம் இராசராசன் அகழ் வைப்பகம், பூம்புகார் ஆழ்கடல் தொல்லியல் அகழ் வைப்பகம் ஆகியவை முக்கியமானவையாகும்.

மரபுச் சின்னங்கள் பாதுகாத்தல்

1995-இல் அந்நாள் தமிழக முதல்வர் டாக்டர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் தலைமையில், தஞ்சையில் நடைபெற்ற எட்டாவது உலகத் தமிழ் மாநாட்டின் போது, தஞ்சாவூர் மராத்திய அரண்மனையில் தர்பார் மண்டபம், மணிக் கோபுரம், ஆயுதக் கோபுரம், சார்ஜா மாடி ஆகியவற்றையும்; சரபேந்திரராசன் பட்டினம் (மனோரா) உப்பரிகை, மதுரை திருமலை நாயக்கர் அரண்மனை, இராமநாதபுரம், இராமலிங்க விலாசம் மற்றும் அங்குள்ள ஓவியங்கள், தரங்கம்பாடி டேனிசு கோட்டை ஆகியவற்றை அவற்றின் பழமைத் தன்மை கெடாமல் பாதுகாக்கும் பணியை மேற்கொண்டு வெற்றிகரமாக முடித்தார்.

ஓலைச்சுவடி நூல் நிலைய நூல் வெளியீடு மற்றும் மேம்பாடு

சென்னை அரசு கீழ்த்திசை ஓலைச் சுவடி நூல் நிலையத்தில் 51க்கு மேற்பட்ட சுவடிகளை நூல்களாக அச்சாக்கி வெளியிட்டார். மேலும், சுவடிகள் வைத்துப் பாதுகாக்கும் கூடத்துக்குக் குளிர்சாதன வசதி செய்தார்.

கோடைக் காலக் கல்வெட்டுப் பயிற்சி

கோடைக் காலக் கல்வெட்டுப் பயிற்சியையும், ஓராண்டு காலக் கல்வெட்டுப் பட்டய வகுப்புப் பயிற்சியையும் மீண்டும் துறையில் தொடங்கி ஆண்டுதோறும் நடத்தினார். இவர் காலத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பல அரிய தொல்பொருள்கள் இவராலும், துறையின் பிற அலுவலர்களாலும் கண்டுபிடிக்கப் பெற்று வெளியுலகிற்குத் தெரிவிக்கப்பட்டன.

திரைப்பட வெளியீடு

தமிழகத்தின் நாகரிகச் சிறப்பு குறித்த உங்கள் பெருமையை உணர்வீர்என்னும் திரைப்படம் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும், துறையின் செயல்பாடுகள் குறித்த வீடியோபடம் தமிழிலும் தயாரித்தார்.

பூம்புகார் கடலகழாய்வு

 இவர் காலத்தில் நிகழ்ந்த பூம்புகார் கடலகழாய்வு மூலம் கடற்கரையிலிருந்து சுமார் ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் கடலுக்கடியில் 21 மீட்டர் ஆழத்தில் ஐந்து கட்டடப் பகுதிகள் இருப்பதையும், பழைய காவிரி ஆற்றுப் போக்கு கடலுக்கடியில் தெரிவதையும், சின்ன வானகிரிக்கு எதிர்த்திசையில் நாலரை கி.மீட்டர் தொலைவில் கடலுக்கடியில் 19 மீட்டர் ஆழத்தில் தரை தட்டிச் சிதைந்த, கி.பி. 18-ஆம் நூற்றாண்டுக் கப்பல் ஒன்று புதைந்து கிடப்பதையும், கடற்கரையிலிருந்து 200 மீட்டர் தொலைவில், ஏழு மீட்டர் ஆழத்தில் கருங்கல் கட்டடங்கள் சில புதைந்திருப்பதையும், கரையின் ஓரமாக அலைகள் மோதும் இடத்தில் கடலுக்கடியில் சில செங்கற் கட்டடங்கள் அழிந்திருப்பதையும், சின்னமேட்டுக்கு எதிர்த் திசையில் கடலிலிருந்து ஒரு புத்தர் சிற்பத்தையும் கண்டறிந்து வெளியுலகுக்குத் தெரிவித்தார்.

கருத்தரங்குகள் நடத்தப் பெற்றமை

பொதுமக்களிடையே மரபுச் சின்னங்கள் பாதுகாப்புப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, மாவட்டந்தோறும் வரலாற்றுக் கருத்தரங்குகள் நடத்தவும், அதையட்டி காட்சிகள் அமைக்கவும் ஏற்பாடு செய்தார். ஆழ்கடல் அகழாய்வுக் கருத்தரங்குகள் சென்னையிலும், பூம்புகாரிலும் நடத்தினார். அகில உலக ஆழ்கடல் அகழாய்வுக் கருத்தரங்கினைச் சென்னையில் நடத்தினார். இக்கருத்தரங்கைத் தமிழக ஆளுநர் மேதகு பாத்திமா பீவி அவர்கள் தொடங்கி வைத்தார்கள். இக்கருத்தரங்கில் ஆஸ்திரேலியா, மலேசியா, இசுரேல், இங்கிலாந்து, இலங்கை ஆகிய வெளிநாடுகளைச் சேர்ந்த பேராளர்களும், இந்திய நாட்டுப் பேராளர்களுமாக 70க்கும் மேற்பட்ட பேராளர்கள் கலந்துகொண்டு சிறந்த ஆய்வுக் கட்டுரைகளைப் படித்தளித்தனர். அக்கட்டுரைகளின் சுருக்கம் அச்சாக்கப் பெற்றுக் கருத்தரங்கம் நடைபெற்றபோதே, பேராளர்களுக்கு வழங்கப்பெற்றது.

வெளிநாடுகளுக்குச் சென்று பன்னாட்டுக் கருத்தரங்குகளில் பங்கு பெற்றமை

இந்தியாவில் நடைபெற்ற கல்வெட்டு, நாணயவியல், தொல்லியல், இடம் பெயர் வரலாறு சம்பந்தமான தேசிய கருத்தரங்குகளில் பங்கு பெற்றுச் சிறந்த கட்டுரைகளைப் படித்தளித்ததோடு, சென்னையில் 1992-இல் நடைபெற்ற பன்னாட்டுப் பௌத்த மதக் கருத்தரங்கு மற்றும் 1990-இல் நடைபெற்ற பன்னாட்டுப் பௌத்த மதக் கருத்தரங்கு, 1981-இல் மதுரையில், 1995-இல் தஞ்சையில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டுக் கருத்தரங்குகள், புதுதில்லியில் 1994-இல் நடைபெற்ற பன்னாட்டு மூன்றாம் தொல்லியல் கருத்தரங்கு, ஆஸ்திரேலியாவில் 1997-இல் நடைபெற்ற பன்னாட்டு ஆழ்கடலாய்வுக் கருத்தரங்கு, யாழ்ப்பாணத்தில் 1976- இல் நடைபெற்ற தெற்காசியக் கல்வெட்டுக் கருத்தரங்கு ஆகியவற்றில் இவர் கலந்துகொண்டு கருத்தரங்கு சார்பான சிறந்த ஆய்வுக் கட்டுரைகளைப் படித்தளித்தார்.

வெளிநாட்டுப் பயணம்

1976-இல் இலங்கைக்கும், 1986-இல் அந்தமான் தீவுக்கும், 1997&இல் சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிற்கும், கல்வி சம்பந்தமான பயணம் மேற்கொண்டார்.

வானொலி, தொலைக்காட்சி உரை

அகில இந்திய வானொலி மூலமும், தொலைக்காட்சி மூலமும் தமிழகத் தொல்லியல் துறையின் செயல்பாடுகள், மரபுச் செல்வங்களைப் பாதுகாத்தல், அகழாய்வில் வெளிக் கொணரப்பட்ட முக்கியத் தொல்பொருள்கள் ஆகியவை பற்றி பல உரை நிகழ்த்தியுள்ளார்.

பல்கலைக் கழகப் பாடத் திட்டக் குழு உறுப்பினர்

தமிழகத்தில் உள்ள சென்னைப் பல்கலைக் கழகம், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகம், மதுரை காமராசர் பல்கலைக் கழகம் ஆகியவற்றின் பாடத் திட்டக் குழுக்களில் உறுப்பினராகவும், சில சமயங்களில் தலைவராகவும் இருந்து பணியாற்றி உள்ளார்.

அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆளவைக் குழு உறுப்பினர்

2004 டிசம்பர் திங்கள் 6-ஆம் நாள் முதல் மூன்று ஆண்டு காலத்துக்குச் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் ஆளவைக் குழு உறுப்பினராகத் தமிழக மேதகு ஆளுநர் சுர்ஜித்சிங் பர்னாலா அவர்களால் நியமனம் செய்யப்பட்டார்.

அரசு உயர்மட்டக் குழுக்களில் உறுப்பினர்

தமிழ்நாடு அரசு தமிழ்நாடு வரலாறு எழுதும் உயர்மட்டக் குழுவில் ஐந்து முறை உறுப்பினராக இருந்து பல்லவ & பாண்டியர் வரலாறு, சோழப் பெருவேந்தர் வரலாறு, தமிழக வரலாறு (ஒரே தொகுதி) ஆகிய நூல்களுக்குச் சில பகுதிகள் எழுதியும் உதவியுள்ளார்.

தமிழ்நாடு அரசு ஆலய நிருவாக உயர்மட்டக் குழு, தமிழ் ஆட்சிமொழி உயர்மட்டக்குழு போன்றவற்றிலும் உறுப்பினராகச் செயல்பட்டிருக்கிறார். நடுவணரசு தமிழ்ச் செம்மொழி ஆய்வு நிறுவனத்தின் சான்றாதார வல்லுநராகவும் பணியாற்றியிருக்கிறார்.
அறிஞர் நடன.காசிநாதன் பெற்ற விருதுகள்

முனைவர் ந. சஞ்சீவி & காசுநாதன்; ‘கண்ணியம்இதழ் & கல்வெட்டுச் செம்மல்;

முனைவர் ச. மெய்யப்பனார்; முனைவர் ஒளவை நடராசனார் & தொல்லியல் அறிஞர்;

பத்மபூஷன் வை. கணபதிஸ்தபதி & கல்வெட்டுச் சொல்லோவியர்;

தாமரைத்திரு. ஐ. மகாதேவன் & கல்வெட்டறிஞர்; முனைவர் இரா. நாகசாமி & வட்டெழுத்தில் வல்லவர் என்று இவரைப் பாராட்டியுள்ளனர்.

தமிழ்நாடு தொன்மை இயல் ஆய்வு நிறுவனம் என்னும் அமைப்பை அமைத்தல்

அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்பு தமிழ்நாடு தொன்மை இயல் ஆய்வு நிறுவனம்என்னும் ஒரு அமைப்பை ஏற்படுத்தி அதில் சில ஆய்வு அறிஞர்களை இணைத்துக்கொண்டு பல அரிய தொல்பொருள்களைக் கண்டுபிடிப்பதற்கு உதவியுள்ளார். மேலும் தொண்டை மண்டல வரலாற்றுக் கருத்தரங்குகளைஇவ்வமைப்பின் மூலம் இதுவரை பன்னிரண்டு நடத்தியுள்ளார்.

முத்தரையர் சங்கம் பாராட்டு

முத்தரையர்என்ற நூலை எழுதியதற்காக முத்தரையர் சங்கம்புதுக்கோட்டையிலும், முத்தரையர் வரலாற்றாய்வு மையம் திருச்சியிலும் இவரை மிகைப்படப் பாராட்டியது. 2007&இல் திருச்சியல் இவருக்கு மலர் மகுடம் சூட்டி மகிழ்ந்தது.

திருப்பூர்த் தமிழ்ச் சங்கம் பாராட்டு

இவரது நூலான தமிழகம் அரப்பன் நாகரிகத் தாயகம்என்னும் நூலுக்குப் பரிசளித்துப் பாராட்டியது.

2006-இல் இவரது நூலான தமிழகச் சிற்பிகள் வரலாறுஎன்னும் நூலை வெளியிட்டு, இவருக்கு ரூ. 5,000 பண முடிப்பைச் சிற்பச் சித்தர் பத்மபூஷன் வை. கணபதி ஸ்தபதி அவர்கள் வழங்கிப் பாராட்டினார்.

வரலாற்றுப் பேரறிஞர்

2009-இல், திருவையாறு, “தமிழய்யா கல்விக் கழகம்நாகப்பட்டினத்தில் நடத்தியக் கருத்தரங்கில், இவருக்குச் சிறந்த வரலாற்றுப் பேரறிஞருக்கான கரிகாற் சோழன்விருதை வழங்கிச் சிறப்பித்தது.

நூல்கள்:

இவர் தமிழிலும், ஆங்கில மொழியிலும் தொண்ணூறுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதிச் சிறப்பித்திருக்கிறார்.

குடும்பம்

இவருக்குத் திலகவல்லி என்ற இல்லத்தரசியாரும், கதிரவன், அருண்மொழி, ஆதித்யன் என்ற மகன்களும், க.ஜெயந்தி, அ. இரமா, ஆ. இரம்யா ஆகிய மருமகள்களும், க. அரிணி, க. புனிதன், அ.ஈரா, ஆ. சேந்தன் ஆகிய பெயரப்பிள்ளைகளும் உள்ளனர்.

தொல்லியறிஞர் நடன. காசிநாதன் அவர்களின் வாழ்க்கை வரலாற்றைக் கண்ணியம்இதழ் கண்ணியப் பெருமக்கள்வரிசையில் வெளியிட்டு வரலாற்று அறிஞர்என்று சிறப்பித்து மகிழ்ந்தது.


தொல்லியலறிஞர் நடன. காசிநாதன் அவர்கள் எழுதிய
நூற்கள் பட்டியல்


ENGLISH BOOKS

S.No.       Name of the Book                     Author / Editor, Year
1.         Hero Stones in Tamil Nadu                                     Author     1978

2.         Functions of the Department of
             Archaeology                                                           Author     1989

3.         Under Sea Exploration off the shore of
            Pumpuhar                                                              Author     1991

4.         The Metropolis of the Medieval Cholas -
            (First Edition)                                                         Author     1992

5.         Seminar on Marine Archaeology                             Author     1992

6.         Art panorama of the Tamils                           Joint Author     1993

7.         Padavedu Excavation                                              Author     1993

8.         Alagankulam - A Preliminary Report of
            Excavation                                                 General Author     1994

9.         Collected papers (Studies in Tamil Culture) Author                1994

10.       Achievements of Archaeology Department              Author     1994

11.       Ancient Industries of Tamil Nadu                           Author     1994

12.       Cultural Heritage of Tamil Nadu                             Author     1997


13.       Ancient Ports of Tamil Nadu and their
            trade contact with Foreign Countries                     Author     1997

14.       Tirukkoyilur Excavation                                Joint Author     1998

15.       The Metropolis of the Medieval Cholas
            (Second Edition)                                                     Author     1998

16.       Tamils Heritage                                                      Author       2000

17.       Ancient Port Towns and their busy Trade
            Activities, Capital Cities and Trade
            Contact (Under Print).                                            Author

18.       Hero-Stones, Pallava Period (Under Print) , Author

19.       Cultural Heritage of the Tamils. June          2010


20.கல்வெட்டின் கதை, ஆசிரியர்,1968
21.கன்னியாகுமரிக் கல்வெட்டுகள் (முதல்தொகுதி), பதிப்பாசிரியர்,1972
22.கன்னியாகுமரிக்கல்வெட்டுகள்இரண்டாம்தொகுதி),பதிப்பாசிரியர், 1972
23.கன்னியாகுமரிக்கல்வெட்டுகள் (மூன்றாம் தொகுதி), பதிப்பாசிரியர்,  1972
24.கல்வெட்டியல், இணை ஆசிரியர், 1973
25.கல்வெட்டு ஓர் அறிமுகம், இணை ஆசிரியர், 1973
26.காலச் சுவடுகள், ஆசிரியர், 1973
27.ஆய்வுக் கொத்து, இணை ஆசிரியர்,1973
28.பூம்புகார், இணை ஆசிரியர், 1973
29.மனோரா, ஆசிரியர், 1975
30.ஆய்வுத்தேன், இணை ஆசிரியர், 1976
31.முத்தரையர் (முதற் பதிப்பு),ஆசிரியர், 1976
32.முத்தரையர் (இரண்டாம் பதிப்பு), ஆசிரியர், 1994
33.தொல்லியல் கட்டுரைகள், ஆசிரியர், 1977
34.களப்பிரர், ஆசிரியர், 1981
35.தொல்லியல் கருத்தரங்கம், பகுதி - 11 பொதுப் பதிப்பாசிரியர், 1983
36.இராசராசேச்சுரம், ஆசிரியர், 1984
37.அருண்மொழி, பதிப்பாசிரியர், 1988
38.கல்லெழுத்துக்கலை,(தமிழ்நாடுஅரசு பரிசு பெற்றது),ஆசிரியர்,1989
39.தமிழக வரலாற்றுச் சின்னங்கள், ஆசிரியர், 1989
40.கண்டி மன்னர் கல்லறை, ஆசிரியர், 1989
41.வளரும் தமிழகத்தில் மலரும், மாவட்டத் தலைநகர் நாகப்பட்டினம், ஆசிரியர், 1991
42.திருக்கோடிகா கல்வெட்டுகள், பொதுப் பதிப்பாசிரியர், 1992
43.கும்பகோணமும் மகாமகப் பெருவிழாவும், இணை ஆசிரியர், 1992
44.தமிழகத்தில் தொல்மாந்தர் பண்பாடு, ஆசிரியர், 1993 
45.தமிழ்க் கீர்த்தனைகள், பொதுப்பதிப்பாசிரியர், 1993
46.திருக்குறள் பழைய உரை, பொதுப்பதிப்பாசிரியர், 1993
47.திருவீழிமிழலைக் கல்வெட்டுகள், பொதுப் பதிப்பாசிரியர், 1994
48.தமிழர் நாகரிகம்,பதிப்பாசிரியர்,1996
49.தமிழர் காசு இயல்,(முதல் பதிப்பு),ஆசிரியர் 1995
50.தமிழர் காசு இயல் (இரண்டாம் பதிப்பு),ஆசிரியர், 2003
51.பெருமுக்கல் கல்வெட்டுகள், இணைத் தொகுப்பாளர், 1998
52.தொல்லியல்துறையின், அரியகண்டுபிடிப்புகள், இணைஆசிரியர்,1998
53.பூம்புகாரும்கடல் அகழாய்வும்,ஆசிரியர் , 1999
54.அரசு கீழ்த்திசை ஓலைச்சுவடி நூலக வெளியீடுகள் (மொத்தம் 51) பொதுப் பதிப்பாசிரியர்,  1991-1998
55.தமிழர் தெய்வங்கள், ஆசிரியர், 2003
56.வன்னியர், ஆசிரியர், 2001
57.தடயம், இணை ஆசிரியர், 2000
58.வரலாற்றுத் தடயம், ஆசிரியர், 2002
59.தொன்மைத் தடயம்,இணை ஆசிரியர், 2003
60.மாமல்லபுரம், ஆசிரியர், 2000
61.தமிழ் எழுத்தியல் வரலாறு, இணை ஆசிரியர், 2004
62.சோழ வேந்தர் பரம்பரை பிச்சாவரம் வன்னியப் பாளையக்காரர் வரலாறு, (முதல் பதிப்பு) ஆசிரியர், 2005
63.பண்டைத் தடயம், இணை ஆசிரியர், 2005
64.வன்னியர்  மாட்சி, ஆசிரியர், 2005
65.சமணத் தடயங்கள், இணை ஆசிரியர், 2005
66.தமிழகச் சிற்பிகள் வரலாறு, ஆசிரியர், 2006
67.வன்னியர் வரலாறு, முதல்தொகுதி,பதிப்பாசிரியர், 2007
68.தமிழகம் அரப்பன் நாகரிகத் தாயகம் (திருப்பூர்த் தமிழ்ச் சங்கம் பரிசு பெற்றது), ஆசிரியர், 2006 
69.வேலூர் மாவட்டத் தடயங்கள், தொகுதி 1, இணை ஆசிரியர்; 2008
70.வேலூர் மாவட்டத் தடயங்கள், தொகுதி 2, இணைஆசிரியர், 2008
71பெரம்பலூர் மாவட்டத் தடயங்கள், இணை ஆசிரியர், 2008
72.வன்னியர் (இரண்டாம் பதிப்பு), ஆசிரியர், 2008
73.தமிழகவரலாற்றுவரிசை (களப்பிரர்காலத் தமிழகம்), ஆசிரியர், 2008
74.கடலூர் மாவட்டத் தடயங்கள் தொகுதி 1, இணை ஆசிரியர், 2009
75.கடலூர் மாவட்டத் தடயங்கள், தொகுதி 2, இணை ஆசிரியர், 2009
76.தொன்மைத் தமிழும் தொன்மைத்தமிழரும், ஆசிரியர், 2009
77.வன்னியர் வரலாறு,இரண்டாம்தொகுதிபகுதி1, பதிப்பாசிரியர், 2009         
78.வன்னியர் வரலாறு,இரண்டாம்தொகுதி,பகுதி2 , பதிப்பாசிரியர், 2009         
79. இராசராசேச்சுரம் (இரண்டாம் பதிப்பு),ஆசிரியர் ,டிசம்பர், 1994
80.கல்வெட்டு ஓர் அறிமுகம் (இரண்டாம் பதிப்பு), இணை ஆசிரியர், 2008
81.சோழவேந்தர் பரம்பரைவன்னியப்பாளையக்காரர் வரலாறு, (இரண்டாம்பதிப்பு) ஆசிரியர், ஆகஸ்ட், 2009
82.கல்லெழுத்துக் கலை, (இரண்டாம் பதிப்பு),ஆசிரியர், டிசம்பர்,2009
83. தமிழர் பண்பாட்டுச் சிதறல்கள், ஆசிரியர்ஜுன் 2010
84.நெல்லை அதன் வரலாற்றெல்லை, ஆசிரியர்செப்டம்பா; 2010
85.காஞ்சிபுரம் மாவட்டத் தடயங்கள், இணை ஆசிரியர், செப்டம்பா; 2010
86. வன்னியர் மாட்சி (இரண்டாம் பதிப்பு), ஆசிரியர்ஆகஸ்ட் 2010
87.இராசராசேச்சுரம் (மூன்றாம் பதிப்பு), ஆசிரியர், செப்டம்பா; 2010
88.தென் பகுதிப் பாளையக்காரர்கள் வரலாறு, ஆசிரியர், ஏப்ரல் 2011
89. தமிழக வரலாற்றுத் தடயங்கள், ஆசிரியர், ஜுலை 2011
90.சோழர் செப்பேடுகள், ஆசிரியர், ஜுலை 2011
91.சோழர் செப்பேடுகள்ஆசிரியர்,   2012
92.காஞ்சிபுரம் மாவட்டக் கலைகள், தொகுதி 1, இணை ஆசிரியர், 2012



மணற்கேணி ஆசிரியர் துரை.இரவிக்குமார், முனைவர் விசயவேணுகோபால், நடன.காசிநாதன், முனைவர் இராசன், முனைவர் செல்வக்குமார்




நாக.இளங்கோவன், நடன.காசிநாதன், திருமதி திலகவல்லி காசிநாதன்





மு.இளங்கோவன், நடன.காசிநாதன், திருமதி திலகவல்லி காசிநாதன்




மு.இளங்கோவன், அறிஞர் நடன.காசிநாதன்

குறிப்பு: படம், கட்டுரை எடுத்து ஆள விரும்புவோர் முன் இசைவு பெறுக