நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

புதன், 23 செப்டம்பர், 2009

கவிஞர் பாலா இயற்கை எய்தினார்!


பேராசிரியர் பாலா

கவிஞர் பாலா என அறியப்பட்ட பேராசிரியர் பாலச்சந்திரன் அவர்கள் 22.09.2009 சென்னையில் தனியார் மருத்துவமனையில் இயற்கை எய்தினார் என்ற செய்தியை இன்று
(23.09.2009) காலை கல்லூரிக்குச் சென்றபொழுது நண்பர்கள் சொன்னார்கள்.

நான் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டிருந்தபொழுது பேராசிரியர் பாலா பற்றி நன்கு அறிந்தேன்.பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் என் முனைவர் பட்ட ஆய்வு நடந்துகொண்டிருந்தபொழுது பேராசிரியரின் புதுக்கவிதை ஒரு புதுப்பார்வை என்ற நூல் என்னை ஈர்த்தது.அவரை நாகப்பட்டினத்தில் நடந்த பேராசிரியர் அரசமுருகுபாண்டியன் அவர்களின் திருமணத்தில் முதன்முதல் கண்டேன்.(1994அளவில்).அரசமுருகுபாண்டியனின் சில தலித் கவிதைகளும் என்ற நூலை வெளியிட்டுப் பேராசிரியர் ஆற்றிய உரை சிறப்பிற்கு உரிய ஒன்றாகும்.அதன் பிறகு பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நடந்த பல்வேறு இலக்கியக்கருத்தரங்குகளில் கண்டு உரையாடியுள்ளேன்.அவரின் எளிமையும் அன்பு ததும்பும் சொற்களும் அவரை நம் உள்ளத்தில் பதியச்செய்யும்.அவரைக் காணுந்தோறும் அண்ணன் அரச முருகு பாண்டியனைத் தொடர்புகொள்ளச் சொல்லுங்கள் என்பார்.அண்ணனுக்குச் செய்தி சொல்வேன்.வழக்கமான அவர் சோம்பலால் தொடர்புகொள்ள மாட்டார்.

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் கவிஞர் பாலா பணி செய்ததால் பல்கலைக்கழகத்திற்குப் பெருமை ஏற்பட்டது.சாகித்திய அகாதெமி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளில் பணிபுரிந்த பெருமைக்கு உரியவர்.பேராசிரியர் சிற்பி உள்ளிட்டவர்களின் அன்புக்குரியவராக விளங்கியவர்.தமிழ்நாட்டு இளைஞர்களை அரவணைத்துக் கவிதைத் துறைகளில் அவர்களை ஈடுபாடு கொள்ளச்செய்தவர்.

மொழிபெயர்ப்புப் பணிகளாலும் படைப்பு நூல்களாலும் தமிழ் உலகில் அவர் புகழ் என்றும் நின்று நிலவும்.

பேராசிரியர் பாலா அவர்களை இழந்து வாடும் பேராசிரியர்கள்,மாணவர்கள்,அவர்தம் குடும்பத்தார் என அனைவருக்கும் என் ஆழ்ந்து வருத்தமும் இரங்கலும் உரிய!

பேரா.பாலா பற்றி மேலும் அறிய
http://www.chennaionline.com/tamil/news/newsitem.aspx?NEWSID=ce81bb2d-cb83-440b-abf5-9e976c3ec5e8&CATEGORYNAME=TCHN

வெள்ளி, 18 செப்டம்பர், 2009

கோவை உலகத் தமிழ்மாநாட்டை வரவேற்போம்!

கோவையில் உலகத் தமிழ்மாநாட்டை நடத்தும் விருப்பத்தைத் தமிழக முதலமைச்சர்
மாண்புமிகு கலைஞர் அவர்கள் அறிவித்த அறிவிப்பால்(17.09.2009) உலகெங்கும் பரவி வாழும் தமிழர்களும் தமிழ் ஆய்வாளர்களும் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.அறிஞர் அண்ணா அவர்கள் இரண்டாம் உலகத் தமிழ்மாநாட்டைச் சென்னையில் நடத்திய பெருமைக்கு உரியவர்கள்.அவரின் நூற்றாண்டு நிறைவுவிழா நடைபெற்ற நாளையொட்டி(15.09.2009) இத்தகு அறிவிப்பு வெளிவந்துள்ளமையால் உலகெங்கும் பரவி வாழும் தமிழர்கள் தமிழக முதலமைச்சரைப் பாராட்டியவண்ணம் உள்ளனர்.

கோவையில் நடைபெற உள்ள உலகத் தமிழ்மாநாட்டில் பல்வேறு ஆய்வரங்குகள் நடைபெற
வாய்ப்புள்ளது.அப்பொழுது கணிப்பொறி,இணையம் சார்ந்த அரங்குக்கு முதன்மையளித்து ஆய்வரங்குகள் அமைக்கப்பெற வேண்டும். இணையத்தில் தமிழ் வளர்ந்துள்ள போக்கு, இன்னும் செல்ல வேண்டிய தூரம் யாவும் அறிஞர்களால் விவாதிக்கப்பட வேண்டும். தமிழகத்தில் அண்மைக்காலமாக நடைபெறாதத் தமிழ் இணைய மாநாட்டுக் குறையை இந்த அரங்கு நிறைவு செய்வதாக இருக்கும்.


தமிழுக்கு வாய்ப்பான நேரம் இது.முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் ஆட்சியில் சென்னையில் நடந்த தமிழ் இணைய மாநாட்டில்தான் தமிழ் விசைப்பலகை 99 அறிமுகம் செய்யப்பட்டது,தமிழ் இணையப் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது என்ற வரலாற்று முதன்மை வாய்ந்த நிகழ்வுகள் நடைபெற்றன.எனவே உலகெங்கும் பரவி வாழும் இணையத்தமிழறிஞர்கள், கணினித்துறை வல்லுநர்கள் கலந்துகொண்டு தமிழ் இணைய வளர்ச்சிக்கு உரிய ஆக்கப்பணிகள் குறித்து விவாதிக்க இந்த மாநாட்டடைப் பயன்படுத்திக்கொள்வோம்.


கொங்கு மண்டலத்தில் தமிழ் வளர்ச்சிக்குரிய பல பணிகள் நடைபெற்றுள்ளன.சிலப்பதிகார உரையாசிரியர் அடியார்க்கு நல்லார் முதல் தெய்வசிகாமணி கவுண்டர் ஐயா உள்ளிட்டவர்கள் உலவிய மண் இஃது.மன வளமும், பணவளமும்,இடவசதிகளும் நிறைந்த பகுதி. வானூர்தி,தொடர்வண்டி,பேருந்து உள்ளிட்ட போக்கு வரவு ஏந்துகள் உடைய மாநகரம். அருகில் உதகை, பொள்ளாச்சி உள்ளிட்ட எழில்கொழிக்கும் பகுதிகள் உண்டு. உலகத் தமிழ் அறிஞர்களை வரவேற்கத் தகுந்த ஊரைத் தேர்வு செய்தமைக்கு முத்தமிழறிஞரைத் தினமணி பாராட்டியுள்ளது பொருத்தமேயாகும்.

கோவை உலகத் தமிழ்மாநாட்டை வரவேற்போம்.

புதன், 16 செப்டம்பர், 2009

தென்கச்சி கோ.சுவாமிநாதன் உடல் அவர் மாமனார் ஊரான துகிலி கஞ்சனூரில் நல்லடக்கம்!



சென்னைத் தனியார் மருத்துவமனையில் மாரடைப்பு நோயால் இயற்கை எய்திய தென்கச்சி கோ.சுவாமிநாதன் அவர்களின் உடல், மருத்துவமனையில் இருந்து நேராக அவர் மாமனார் ஊரான துகிலி கஞ்சனூர் எடுத்துச் சென்று அங்கு அடக்கம் செய்யப்பட உள்ளது.(துகிலி கஞ்சனூர் கும்பகோணத்திற்கு அருகில் உள்ள ஆடுதுறை,சூரியனார்கோயில் அருகில் உள்ளது).

உடையார்பாளையம் வட்டத்திலுள்ள தென்கச்சிப்பெருமாள் நத்தம்,செயங்கொண்டம், தா.பழூர்.ஆண்டிமடம், உதயந்ததம், கோடாலிகருப்பூர், உட்கோட்டை உள்ளிட்ட ஊர்களிலும், அணைக்கரை,திருப்பனந்தாள், சோழபுரம்,கும்பகோணம் உள்ளிட்ட ஊர்களிலும் தகவல் தெரிந்து அவரின் உறவினர்கள் நண்பர்கள் கவலைகொண்டு அவர் உடலைக் காணக் கூடியுள்ளனர்.

அரியலூரில் நடைபெறும் தமிழ்வழிக்கல்வி வலியுறுத்தும் போராட்டக்களத்தில் தென்கச்சியாரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்கச்சி கோ.சுவாமிநாதன் அவர்கள் இயற்கை எய்தினார்!


தென்கச்சி கோ.சுவாமிநாதன் அவர்கள்

புகழ்பெற்ற பேச்சாளரும், எழுத்தாளருமான தென்கச்சி.கோ.சுவாமிநாதன் அவர்கள் உடல்நலக் குறைவுற்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று (16.09.2009) இயற்கை எய்தினார்.

அரியலூர் மாவட்டம் தென்கச்சிப்பெருமாள் நத்தம் என்ற ஊரில் பிறந்த கோ.சுவாமிநாதன் அவர்கள் வேளாண்மைப் பட்டதாரி ஆவார். நெல்லை வானொலியில் அறிவிப்பாளராகப் பணியைத் தொடங்கிய இவர் தமது எளிமையான குரல்வளத்தால் நடிகர்திலகம் சிவாஜிகணேசன் உள்ளிட்டவர்களால் மதிக்கப்பட்டவர். சென்னை வானொலி நிலையத்தில் இன்று ஒரு தகவல் நிகழ்ச்சி வழியாக உலகத் தமிழர் உள்ளங்களில் நிலையான இடம் பிடித்தவர். திரைப்படங்களிலும் தொலைக்காட்சியிலும் நடித்தவர்.

மக்கள் தொலைக்காட்சியில் சென்ற ஆண்டு இவர் பிறந்த ஊருக்கு அழைத்துச் சென்று இவரின் இளமைக்கால வாழ்க்கையப் படமாக்கினர். இவர் தம் பிறந்த ஊரில் ஊராட்சி மன்றத் தலைவராகவும் இருந்தவர். செல்வ வளம் கொண்ட இவர் எளிமையாக வாழந்தவர். இவர் மனைவியுடன் சென்னையில் வாழ்ந்து வந்தார். ஒரே மகள் இவருக்கு.

மயிலாடுதுறையில் நடந்த ஒரு திருமண விழாவில் இலக்கிய வீதி இனியவன் ஐயா அவர்களுடன் தென்கச்சியாரைக் கண்டு வணங்கியுள்ளேன். எங்கள் ஊருக்கும் அவர் ஊருக்கும் ஐந்து கல் தொலைவு இருக்கும். எங்கள் பகுதியினரான கண்ணியம் இதழாசிரியர் கோ.குலோத்துங்கள் அவர்கள் தென்கச்சியாரின் வாழ்க்கைக் குறிப்பைப் படத்துடன் தம் இதழில் வெளியிட்டார். அவருடன் இணைந்து எடுத்துக்கொண்ட படம் என்னிடம் உள்ளது. பிறகு வெளியிடுவேன்.

தென்கச்சியாரை இழந்து வருந்தும் குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்கள், இலட்சக் கணக்கான வானொலி நேயர்களுக்கு என் ஆழ்ந்த இரங்கல் உரியதாகும்.

செவ்வாய், 15 செப்டம்பர், 2009

நவிரமலையில் இடி விழுந்து நான்கு பேர் இறப்பு

சங்க இலக்கியங்களுள் பத்துப்பாட்டு வரிசையில் வைத்து எண்ணப்படும் நூல் மலைபடுகடாம் ஆகும்.இந்த நூல் செங்கண்மாவை(இன்றைய செங்கம்) ஆண்ட நன்னன்சேய் நன்னன் என்ற அரசனைப் போற்றிப்பாடும் நூலாகும்.இந்தப் பகுதி அழகிய மலையழகு உடையது.சங்க நூல்களில் நவிரமலை என்று குறிப்பிடப்படும் பகுதி இன்று பர்வதமலை என்று அழைக்கப்படுகிறது. இந்த மலையில் பல்வேறு ஓசைகள் எழும் என மலைபடுகடாம் நூல் குறிப்பிடும்.இந்த மலையை நான்காண்டுகளுக்கு முன் நான் நண்பர்கள் துணையுடன் ஏறி வந்தேன்(15.08.2005).அப்பொழுது எங்களுக்கு வழிகாட்டிய சாமியார் அவர்கள் இந்த மலையில் முன்பு ஏற்பட்ட இடி விபத்து பற்றி சொன்னார்.அவரும் அதில் பாதிக்கப்பட்டவர் என்றார்.அது பற்றி முன்பே என்பதிவில் எழுதியுள்ளேன்.

நேற்று இரவு(13.09.09) ஏற்பட்ட கடும் மழை,இடி காரணமாகச் சென்னையைச் சேர்ந்த நால்வர் இந்த மலையில் வழிபாட்டுக்குத் தங்கியிருந்தபொழுது இடி விழுந்து இறந்ததாகத் தினமலர் செய்தி வெளியிட்டுள்ளது.கோயிலில் வழிபாடு நிகழ்த்த சென்ற சென்னையைச் சேர்ந்த நால்வர் இரவு கோயிலில் படுத்திருந்தனர்.இரவில் பெய்த மழையுடன் இடி இடித்து நால்வரும் நான்கடி உயரத்துக்குத் தூக்கி வீசப்பட்டுள்ளனர்.

சென்னையைச் சேர்ந்த ஆனந்த ராஜ்,இராஜி.கஜபதி,பாலன் ஆகிய நால்வரும் அதே இடத்தில் இறந்துள்ளனர்.இவர்களுடன் தங்கியிருந்த ஏனைய பதினைந்து பேரும் சிறிய காயங்களுடன் உயிர்பிழைத்தனர்.செய்தியறிந்த காவல் துறையினரும் மீட்புக்குழுவினரும் மலை உச்சிக்குச் சென்று இறந்தவர்களை ஏனை கட்டித் தூக்கிவந்தனர்.

மேலும் செங்கம் பகுதியில் பெய்த மழை இடியால் 5 மாடுகளும் 19 ஆடுகளும் இறந்துள்ளன.அடிக்கடி உயிர்ச்சேதம் விளைவிக்கும் இடியிலிருந்து மக்களையும் ஆடு,மாடுகளையும் காக்க மலையுச்சியில் இடி தாங்கி வசதி அமைப்பது அரசின் கடமையாக இருக்கவேண்டும்.

அறிஞர் அண்ணாவை நினைவுகூர்வோம்!

தமிழக வரலாற்றில் என்றைக்கும் நினைவுகூரத்தக்க பெயர்கள் தந்தை பெரியார்,அறிஞர் அண்ணா என்பனவாகும்.தமிழகத்தில் மொழி,இன,நாட்டு உணர்வு வளர்வதற்கு இவ்விருவரின் ஈகம் பெரும் பங்காற்றியுள்ளது.இவர்கள் எழுத்தாலும் பேச்சாலும் தமிழக மக்களைத் தட்டி எழுப்பியவர்கள்.தமிழ்மொழி,இலக்கிய வளர்ச்சிக்கு இவர்களின் பங்கு மிகுதியாக அமைந்துள்ளது.அரசியல் எழுச்சியிலும் இவ்விரு தலைவர்களின் பங்கு மிகுதியாக இருந்தது.

அறிஞர் அண்ணாவின் நூற்றாண்டு நிறைவுவிழா தமிழகத்திலும்,புதுவையிலும் புதிய எழுச்சியுடன் கொண்டாடப்படுகிறது.அறிஞர் அண்ணா பற்றி முழுமையாக அறிய கீழ்வரும் தளத்திற்குச் செல்லவும்
http://www.arignaranna.info/Home1.htm