நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

திங்கள், 29 ஜனவரி, 2024

ரியூனியன், யோகக்கலை வல்லுநர், ஆச்சாரியா சுவாமி நீலமேகம்

ஆச்சாரியா சுவாமி நீலமேகம் 

யோகக்கலை வல்லுநர், ஆச்சாரியா சுவாமி நீலமேகம் அவர்கள் ரியூனியன் நாட்டில் வாழ்ந்துவரும் புதுவைத் தமிழர். யோகக் கலையைப் பயிற்றுவிப்பதிலும் பரப்புவதிலும் பெரும்பங்காற்றி வருபவர். இந்தியா, செர்மனி, இங்கிலாந்து, பிரான்சு, இந்தோனேசியா, கம்போடியா, மொரீசியசு உள்ளிட்ட நாடுகளில் யோகக் கலையைப் பயிற்றுவித்த பெருமைக்குரியவர். நவதுர்க்கா கோவிலை ரியூனியனில் உருவாக்கி ஆன்மீகப் பணியும் செய்து வருபவர். தமிழ், ஆங்கிலம், பிரெஞ்சு மொழி அறிந்தவர். எனவே தம் நூல்களை மும்மொழியிலும் எழுதி வெளியிட்டு வருபவர். ரியூனியன் சிறுவர்களுக்குத் தமிழை அறிமுகப்படுத்தும் வகையில் பல குழந்தைப் பாடல்களை எழுதியவர். ரியூனியனில் தமிழ்ப் பண்பாடும், தமிழ் மொழியும் வளர்வதற்குத் துணைநிற்பவர்

சுவாமி நீலமேகம் அவர்கள் புதுச்சேரியில் குயவர்பாளையத்தில் வாழ்ந்த சோலை கோவிந்தராசன், உண்ணாமலையம்மாள் ஆகியோரின் மகனாக 29.07.1949 இல் பிறந்தவர். உடன் பிறந்தவர்கள் ஒன்பதின்மர். நெல்லித்தோப்பு அரசு தொடக்கப்பள்ளியிலும் வ.உ.சி. உயர்நிலைப் பள்ளியிலும் கல்வி பயின்றவர். பின்னர் இளநிலைத் தொழிற்பயிற்சிப் பள்ளியிலும் (JPS), மோதிலால் நேரு பல்தொழில்நுட்பக் கல்லூரியிலும் பயின்றவர். பல்தொழில்நுட்பக் கல்லூரியில் அக்காலத்தில் வணிகப் பயிற்சித் தொழில்நுட்பம் (Technical in Commercial Practice) படிக்கும் வாய்ப்பு இருந்தது. அப்படிப்பை நிறைவு செய்த நீலமேகம் அவர்கள் மதகடிப்பட்டு, அரசு பள்ளியில் ஆசிரியர் பணியில் இணைந்தவர். ஏழாண்டுகள் இப்பள்ளியில் இவரின் பணி அமைந்தது. பின்னர் புதுச்சேரி, வீரமாமுனிவர் பள்ளியில் மூன்றாண்டுகள் ஆசிரியர் பணி செய்தவர். 

பள்ளியில் படிக்கும் காலத்திலேயே இவருக்கு உடலையும் உள்ளத்தையும் வலிமைப்படுத்தும் ஆர்வம் ஏற்பட்டு, யோகக் கலையை முறைப்படி கற்கும் முயற்சியில் ஈடுபட்டவர்.  அரவிந்தர் ஆசிரமத்து வல்லுநர்களிடமும், கம்பளிசாமி மடத்தைச் சார்ந்த கீதானந்தசாமி உள்ளிட்ட பெரியோர்களிடமும் மரபு வழியில் யோகக் கலையைக் கற்று வல்லுநர் ஆனவர். 

பள்ளி ஆசிரியர் பணியில் நிறைவு காணாத நீலமேகம் அவர்கள் 1980 ஆம் ஆண்டளவில்  விடுப்பு எடுத்துக்கொண்டு, செர்மனி நாட்டுக்குச் சென்று, அங்கு மூன்று மாதம் தங்கிப் பலருக்கும் யோகக் கலையைப் பயிற்றுவித்தவர். 

பிரான்சு நாட்டின் உறுப்புப் பகுதியாக அமையும் ரியூனியன் நாட்டுக்கு நண்பர்களின் அழைப்பின்பேரில் 1981 இல் சென்றார். அங்கிருந்தபடியே மொரீசியசு நாட்டுக்குச் சென்று, அந்நாட்டின் தலைமை அமைச்சர் தொடங்கி, பல்வேறு துறைசார்ந்த அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு யோகக் கலையை அறிமுகம் செய்து, பயிற்றுவித்தார். பின்னர் ரியூனியன் திரும்பி, அங்குள்ள கோவில்களின் வழியாக யோகக் கலையைப் பலருக்கும் பயிற்றுவித்தார். 1986 ஆம் ஆண்டளவில் இங்கிலாந்து, பிரான்சு, இத்தாலி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்று பல மாதம் தங்கிப் பலருக்கும் யோகக் கலையைப் பயிற்றுவித்தார். 

தென்னாப்பிரிக்காவை ஒட்டி இருக்கும் தீவு நாடு ரீயூனியன் ஆகும். கரும்புத்தோட்டங்கள் நிறைந்த இயற்கை வளம் நிறைந்த நாடு இதுவாகும். புதுவையை அந்நாளில் ஆட்சிசெய்த பிரெஞ்சியர்கள் ரியூனியன் கரும்புத் தோட்டங்களில் வேலை செய்வதற்குத் தங்களின் அடிமைநாடுகளிலிருந்து மக்களை அழைத்துச் சென்றனர். அந்த வகையில் புதுச்சேரியிலிருந்து தமிழ் மக்களை அந்நாட்டுக்கு ஏறத்தாழ முந்நூறு ஆண்டுகளுக்கு முன்னர் அழைத்துச் சென்றனர். ரியூனியன் நாட்டில் ஏறத்தாழ மூன்று இலட்சம் தமிழர்கள் இன்று வாழுகின்றனர். சிவன் கோவில், முருகன் கோவில், காளிக் கோவில், முனீஸ்வரன் கோவில், மதுரைவீரன் கோவில் சுடலைமாடன் கோவில் என்று உருவாக்கி, முன்னோர் வழியில் வழிபாடுகளை ரியூனியன் தமிழர்கள் தொடர்ந்து பின்பற்றுகின்றனர். தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி மாதம் விசாகம், பொங்கல், தீபாவளி கொண்டாடுகின்றனர். காவடியாட்டம், தப்பாட்டம், கரகாட்டம், தீமிதித் திருவிழா முதலியன நடைபெறுகின்றன. சில சிறுதெய்வக் கோவில்களில் பலிகொடுக்கும் வழக்கம் நிலவுவதாகவும் அறியமுடிகின்றது. 

சைவ உணவுப் பழக்கம்கொண்ட, நீலமேகம் அவர்கள், சைவ வழிபாட்டுக்கு முதன்மையளிக்கும் நோக்கில் நவதுர்க்கா கோவிலை உருவாக்கித்(1992) தமிழ் வழியில் நாளும் வழிபடுவதை ஊக்குவித்து வருபவர். இவரே பூசை, வழிபாடுகளை முன்னின்று நடத்துகின்றார். வழிபாட்டுக்குரிய போற்றிப் பாடல்களை நூல்களாக உருவாக்கி அனைவருக்கும் வழங்கி வருகின்றார்.




ரியூனியன் பல்கலைக்கழகத்தில் கடந்த முப்பத்தாறு ஆண்டுகளாகப் பகுதி நேரமாக யோகக் கலையைப் பயிற்றுவித்து வருபவர். யோகக் கலையை இந்தியாவின் சொத்தாக நினைக்கும் நீலமேகம் அவர்கள் ஐ. நா. அவையம் பன்னாட்டு யோகா நாளை அறிவித்தமையைமை மகிழ்ச்சியாகக் குறிப்பிடுகின்றார். 

புதுச்சேரியில் பெரிய காலாப்பட்டுப் பகுதியில் 1984 ஆம் ஆண்டளவில் நிலம் வாங்கி, அறிவியல் அடிப்படையில் யோகக் கலையைப் பயிற்றுவிக்கும் அரங்கம் அமைத்து அப் பணியில் ஈடுபட்டு உழைத்து வருகின்றார். 

ரியூனியனில் இவர் செய்துவரும் சமயப் பணிகள், யோகக் கலைப் பயிற்றுவித்தல், தமிழ்ப் பயிற்றுவித்தல், நூல் வெளியீடுகள் யாவும் இவரின் பெருமையை என்றும் நினைவுகூரும். 

சுவாமி நீலமேகம் அவர்களின் தமிழ்க் கொடைகளுள் சில:

1.   பழகு தமிழில் பக்தி நூல், 2014

2.   தமிழரின் பாரம்பரிய வாழ்க்கைக் கலை, 2014

3.   சமய வழிபாடு, 2023

4.   STYM YOGA, 2024




சுவாமி நீலமேகம் அவர்களுடன் மு.இளங்கோவன்(28.01.2024, புதுச்சேரி)

சுவாமி நீலமேகம் அவர்களுடன் அமைந்த நேர்காணல் காணொலிக் காட்சியைப் பார்க்க இந்த இணைப்பைப் பயன்படுத்துங்கள். 

புலவர் செம்மங்குடி துரையரசனார் மறைவு!

 

புலவர் செம்மங்குடி துரையரசனார் 

 திருவள்ளூரில் வாழ்ந்த மூத்த தமிழறிஞரும் எழுத்தாளருமான புலவர் செம்மங்குடி துரையரசனார் இன்று (29.01.2024) காலை 8.30 மணியளவில் தம் 77 ஆம் அகவையில் இயற்கை எய்தினார் என்ற செய்தியறிந்து பெருந்துயருற்றேன். புலவர் செம்மங்குடியாரை இழந்து வருந்தும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்களுக்கு என் ஆழ்ந்த இரங்கல். 

 புலவர் செம்மங்குடி துரையரசனார் அவர்கள் 20.10.1947 இல் பிறந்தவர். பெற்றோர் பெயர்: சா. சிதம்பரம், வேம்பம்மாள் ஆவர். பிறந்த ஊரான செம்மங்குடியில் தொடக்கக் கல்வியையும் நாச்சியார்கோவிலில் உயர்நிலைக் கல்வியையும் கற்ற செம்மங்குடியார் திருப்பனந்தாள் செந்தமிழ்க்கல்லூரியில் 1968 முதல் 1972 வரை புலவர் படிப்பினைப் படித்துமுடித்தவர். 1972-73 ஆம் ஆண்டுகளில் குமாரபாளையம் கல்லூரியில் ஆசிரியர் பயிற்சி பெற்றவர். 1973 ஆம் ஆண்டு முதல் திருவள்ளூர் நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளிகளில் தலைமையாசிரியராகப் பணியாற்றி 2005 இல் ஓய்வுபெற்றவர்

 புலவர் செம்மங்குடி துரையரசனார் 1975 இல் அறிஞர் கோதண்டபாணி பிள்ளை அவர்களின் தலைமையில் திருமணம் செய்துகொண்டவர். இவர்தம் துணைவியார் பெயர் மங்கலம் என்பதாகும். இவரும் புலவர் படிப்பினைப் படித்து, திருவள்ளூரில் ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். இவர்களின் இல்லறப் பயனாக ஒரு பெண், இரண்டு ஆண் பிள்ளைகள் கிடைத்தனர். அனைவரும் படித்து நன்னிலையில் உள்ளனர்

 திருவள்ளூரில் தமிழ்ச்சங்கத்தை நிறுவித் தமிழ்ப்பணியாற்றிய  செம்மங்குடி துரையரசன் அவர்கள் மிகச் சிறந்த கவிதையாற்றல் உடையவர். கருணாகரத் தொண்டைமானின் வாழ்க்கை வரலாற்றை ஆராய்ந்து காப்பியமாகப் பாடிய பெருமை புலவர் துரையரசனார்க்கு உண்டு. இவர்தம் ஊர்ப்பகுதியே கலிங்கத்துப் பரணியில் போற்றப்படும் கருணாகரத் தொண்டாமான் பிறந்து வாழ்ந்த ஊர்ப்பகுதி என்று சான்றுகளின் அடிப்படையில் மெய்ப்பித்ததுடன் தம் பெயருக்குப் பின் தொண்டைமான் என்பதை அமைத்து, செம்மங்குடி துரையரசத் தொண்டைமான் என்று அழைக்கப்படுபவர். கருணாகரத் தொண்டைமான் குறித்த ஆய்வில் முன்னிற்பவர்

 ஐம்பதுக்கும் மேற்பட்ட விருதுகளையும் ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்களையும் எழுதியவர். தன்முன்னேற்ற நூல்களை எழுதி, மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் எழுச்சியூட்டியவர். அறிஞர் கோதண்டபாணியாரின் "தமிழிசை தந்த தனிப்பெரும் வளம்" உள்ளிட்ட நூல்கள் சிலவற்றைப் பின்னாளில் பதிப்பித்துத் தமிழுலகுக்கு வழங்கிய பெருமைக்குரியவர்

 புலவர் செம்மங்குடி துரையரசனாரை என்றும் நினைவிற்கொள்வோம்! 

 புலவர் செம்மங்குடி துரையரசனாரின் வாழ்க்கை வரலாற்றை என் வலைப்பதிவில் காணலாம்.

வெள்ளி, 26 ஜனவரி, 2024

வள்ளலார் வழித்தொண்டர் ஜெய. பாலகிருஷ்ணன்

 

ஜெய. பாலகிருஷ்ணன் 

பிரான்சு நாட்டின் பாரிஸ் மாநகரத்தில் வாழ்ந்துவரும் ஜெய. பாலகிருஷ்ணன் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழிலக்கியம் பயின்றவர். கடலூரில் முதுநிலைத் தமிழாசிரியராகப் பணியாற்றியவர். 1985 ஆம் ஆண்டு பிரான்சுக்குச் சென்றவர். வள்ளலார் வழியில் தம் வாழ்க்கைப் பயணத்தை அமைத்துக்கொண்டவர். இராமலிங்கர் பணிமன்றத்தின் சார்பில்  2005 ஆம் ஆண்டில் பிரான்சு நாட்டில் உலக வள்ளலார் மாநாட்டை நடத்தியவர். பிரான்சு – சன்மார்க்க சங்கத்தை நிறுவியவர். ’வாழ்தல் வேண்டிப் பொய் கூறேன்’ என்னும் நூலின் ஆசிரியர். எழுத்தாற்றலும் பேச்சாற்றலும் கொண்டவர். 

பலவாண்டுகளுக்கு முன்னர் நாங்கள் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியொன்றில் கலந்துகொள்வதற்குத் தவத்திரு. ஊரன் அடிகளார் அவர்கள் வடலூரிலிருந்து, புதுச்சேரிக்கு வந்திருந்தார். புதுவை செயராம் உணவகத்தில் அந்த நிகழ்வு நடைபெற்றது. அந்த நிகழ்ச்சிக்கு  வந்திருந்த அடிகளார் அவர்கள் பிரான்சு நாட்டிலிருந்து புதுச்சேரிக்கு வந்திருந்த திரு. ஜெய. பாலகிருஷ்ணன் அவர்களையும் அழைத்திருந்தார். ஜெய. பாலகிருஷ்ணன் அவர்களும் அடிகளாரின் அழைப்பின்பெயரில் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பித்தார். ஜெய. பாலகிருஷ்ணன் அவர்களைப் பற்றி அடிகளார் மேடையில் எங்களுக்கு அறிமுகம் செய்துவைத்தார். அதன் பிறகு தொடர்பு இல்லாமல் இருந்தோம். அண்மையில் புதுவை பால மோகன மகாலில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் மீண்டும் பாலகிருஷ்ணன் ஐயாவைச் சந்திக்கும் வாய்ப்பு அமைந்தாலும் உரையாடி மகிழும் வாய்ப்பு இல்லாமல் போனது. 

பிரான்சு நாட்டிலிருந்து அண்மையில் புதுவைக்கு வந்துள்ள திருவாளர்கள் ஜெயராமன் ஐயா, தணிகா ஐயா உள்ளிட்டோருடன் இன்றைய மாலை வேளையில் புதுவை நேரு வீதியில் உள்ள இந்தியன் குளம்பியகத்தில் தேநீர் சந்திப்பு ஒன்று நடந்தது. எங்கள் பேச்சின் ஊடாக ஜெய. பாலகிருஷ்ணன் ஐயாவுக்கு 27.01.2024 இல் நடைபெறும் விருது வழங்கும் விழா குறித்து உரையாடினோம். விருது பெறும் அறிஞர் குறித்து நன்மொழிகளை அரங்கில் பரிமாறிக்கொள்ள போதிய விவரங்களை வேண்டியபொழுது, வழக்கம்போல் அவரின் பன்முகத் திறனை ஒவ்வொன்றாக நண்பர்கள் நினைவுகூர்ந்தனர். வள்ளலார் நெறியில் வாழ்ந்து வரும் ஜெய. பாலகிருஷ்ணன் அவர்களை இன்றைய(25.01.2024) தைப்பூச நாளில் நேரில் சந்தித்து உரையாடுவது சிறப்பு என்று கருதியும் அவர்தம் தமிழ்ப் பணிகளை அறிய வேண்டும் என்ற அவாவிலும், அவர் இல்லம் சென்றேன். அவர்தம் திருமண மண்டபத்தில் தைப்பூசம் சார்ந்த வள்ளலார் வழிபாட்டை முடித்துக்கொண்டு, அடுக்குமாடி இல்லத்தில் ஓய்விலிருந்த அவரிடம் உரையாடத் தொடங்கியபொழுது, அவரின் தமிழ் பயின்ற வரலாறும், தமிழ் இலக்கியப் பயிற்சியும் தெரியத்தொடங்கின. 

ஜெய. பாலகிருஷ்ணன் அவர்களின் தமிழ் வாழ்வு… 

கடலூர் மாவட்டம் சிதம்பரம் வட்டம் வடக்குத் தில்லைநாயகபுரம் என்னும் ஊரில் ஜெய. பாலகிருஷ்ணன் அவர்கள் 05.12.1950 இல் பிறந்தவர். பெற்றோர் வீ. ஜெயராமலு, வச்சலா அம்மாள். உடன்பிறந்தோர் ஜெ. பக்கிரிசாமி (அண்ணன்), ஜெ. பங்காருசாமி(தம்பி). 

தொடக்கக் கல்வியையும் உயர்நிலைக் கல்வியையும் சிதம்பரத்தை அடுத்துள்ள சி. முட்லூர் அரசு பள்ளிகளில் பயின்றவர். புகுமுகக் கல்வி முதல் முனைவர் பட்ட ஆய்வு வரை சிதம்பரம், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயின்றவர். இவர்தம் முனைவர் பட்ட ஆய்வுத் தலைப்பு: ஸ்ரீ வில்லிபாரதத்தில் பாத்திரப் படைப்புகள் என்பதாகும். இவர் தம் எம். ஓ. எல். (M.O.L) படிப்பில் ’கொங்கு மண்டல சதகம்’ குறித்து ஆராய்ந்து திட்டக்கட்டுரை வழங்கியவர். 


தங்கப் பதக்கம் பெறும் மாணவர் ஜெ. பாலகிருஷ்ணன்

வறுமையின் கோரப்பிடியில் இவரின் படிப்பு நடைபெற்றாலும் படிப்பிலும் உடலோம்புவதிலும் பெரும் விருப்பம் கொண்டிருந்தவர். தம் படிப்பில் முதன்மைக்காக  24. 06. 1972 இல்  நிறுவுநர் நாளில் தங்கப்பதக்கம் பெற்றவர். இவர் புகுமுக வகுப்பில் சிறப்புத் தமிழினைப் பாடமாக எடுத்துப் படித்தவர். இளங்கலைத் தமிழ் வகுப்பினை 1972-75 இல் படித்தவர். இவர் எம்.ஓ.எல். படித்தபொழுது இவருடன் 18 பேர் படித்தனர். இவரின் பேராசிரியர்களாக மூதறிஞர் வ.சுப.மாணிக்கம், அழ. பழநியப்பன், செ. வைத்தியலிங்கம், ஆறு. அழகப்பன், அ.ஆனந்த நடராசன், சு. சாமி ஐயா, ஆ.இராமசாமிப் பிள்ளை, சுப.இராமநாதன், வெ. செயராமன், ந.வீ. செயராமன், சோ.ந. கந்தசாமி, சிவ. திருநாவுக்கரசு, கதி. தியாகராசன் உள்ளிட்டோர் விளங்கினர். பேராசிரியர் க. வெள்ளைவாரணம் ஐயாவிடமும் பாடம் கேட்ட பெருமைக்குரியவர். 

எடைதூக்கும் வீரர் ஜெ. பாலகிருஷ்ணன்


எடைதூக்கும் வீரர் ஜெ. பாலகிருஷ்ணன்

எடைதூக்கும் போட்டியில் (Weightlifting) பல்கலைக்கழகம் சார்பில் பல்வேறு ஊர்களில் நடைபெற்ற போட்டிகளில் பாலகிருஷ்ணன் கலந்துகொண்டு, பல்கலைக்கழத்திற்குப் பெருமைசேர்த்தவர். புகுமுக வகுப்பில் இவருக்கு ஏற்பட்ட விளையாட்டு ஆர்வம் இவர் முதுகலை படிக்கும்பொழுது அலிகார் முசுலிம் பல்கலைக்கழகம் வரை எடைதூக்கும் போட்டியாளராக அனுப்பிவைத்தது. 1978- முதல் 1979 வரை ஓராண்டு மட்டும் முனைவர் பட்ட ஆய்வில் ஈடுபட்டவர்.  1979 இல் கடலூர் தூய தாவீது மேல்நிலைப் பள்ளியில் முதுநிலைத் தமிழாசிரியராகப் பணியில் இணைந்து, 1985 ஆம் ஆண்டு வரை பணிபுரிந்தவர். இப்பள்ளி அரசு உதவிபெறும் பள்ளியாகும்.

09.02.1979 இல் புதுவையைச் சேர்ந்த மோகனா அவர்களைத் திருமணம் செய்துகொண்டவர். இவர்களுக்கு மூன்று மக்கள் செல்வங்கள் வாய்த்தனர். முதல் மகன் செந்தில்; அனு, வாணி என்னும் இரு பெண் மக்கள் பிறந்தனர். இவர்கள் அனைவரும் பிரான்சில் வாழ்ந்து வருகின்றனர். புதுச்சேரி அல்லயன்சு பிரெஞ்சுப் பள்ளியில் பகுதி நேரமாகப் பிரெஞ்சு மொழி பயின்ற பாலகிருஷ்ணன் அவர்கள் 10.07.1985 இல், மூன்று ஆண்டு ஊதியம் இல்லாத விடுப்பு எடுத்துக்கொண்டு, பிரான்சு நாட்டுக்குப் பயணமானார். 25.11.1985 முதல் 10.12.2010 வரை பாரிசில் உள்ள வீல் - இவரார் (Ville Evarard) என்ற மருத்துவமனையில் அலுவலகப் பணியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். 

பிரான்சு நாட்டில் வாழ்ந்த திரு. சிவசண்முகம் அவர்கள் வழியாக இராமலிங்க அடிகளாரின் படைப்புகளும் பணிகளும் பாலகிருஷ்ணன் அவர்களுக்கு அறிமுகம் ஆயின. வள்ளலாரின் ’பசித்தோர்க்கு உணவு’, ’கடவுளுக்கு உருவம் இல்லை’, ’இறைவன் ஒளி வடிவானவன்’ உள்ளிட்ட கொள்கைகளில் ஈர்ப்புண்ட பாலகிருஷ்ணன் அவர்கள் வள்ளலார் வழியில் தம் வாழ்க்கையை அமைத்துக்கொண்டவர். 2005 ஆம் ஆண்டு, செப்டம்பர் 17, 18 ஆகிய நாள்களில் பிரான்சில் நடைபெற்ற இராமலிங்கர் பணி மன்றத்தின் விழாவில் தலைமைப் பொறுப்பேற்று, உலக வள்ளலார் மாநாட்டைச் சிறப்பாக நடத்தியவர். பின்னர் பிரான்சு சன்மார்க்க சங்கம் என்ற அமைப்பை நிறுவி, வள்ளலார் நெறிகளைப் பரப்பி வருபவர். 

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மூத்த தமிழறிஞர்களிடம் தமிழ் இலக்கண, இலக்கிய நூல்களைக் கற்றறிந்த ஜெய. பாலகிருஷ்ணன் அவர்கள் ’வாழ்தல் வேண்டிப் பொய் கூறேன்’ என்னும் புறநானூற்றுப் பாடலடியை நூல் தலைப்பாக்கிப் புற நானூற்றுச் செய்திகளின் அடிப்படையில் அரிய நூலொன்றைப் படைத்துள்ளார்.  புறநானூற்றுச் செய்திகளை எளிய மக்களுக்குக் கொண்டுசேர்க்கும் அரிய படைப்பாக இந்த நூல் விளங்குகின்றது. தவத்திரு ஊரன் அடிகளார் அணிந்துரையுடன் வெளிவந்துள்ள இந்த நூல் 2017 ஆம் ஆண்டில் 126 பக்கத்தில் வெளிவந்துள்ளது. 



புதுச்சேரியில் பால மோகன மகால் உருவாக்கியும் அடுக்குமாடிக் குடியிருப்புகளை உருவாக்கியும், புதுவை - திண்டிவனம் சாலையில் முதியோர் இல்லம் உருவாக்கியும் மக்கள் பணியில் மனம் செலுத்தும் ஜெய. பாலகிருஷ்ணன் அவர்கள் வள்ளலார் நெறியை வையமெங்கும் பரப்பும் பல்வேறு திட்டங்களை மனத்துள்கொண்டுள்ளார். 

வாடிய பயிரைக் கண்டபொழுதெல்லாம் வாடிய, கருணை நெஞ்சத்தாரைத் தம் முன்னோடியாகக் கொண்டு வாழ்ந்து வரும் ஜெய. பாலகிருஷ்ணன் அவர்களின் தமிழ் ஆய்வுப்பணிகளும் எழுத்துப்பணிகளும் ஒவ்வொன்றாக வெளிவந்து, தமிழுக்கு ஆக்கம் நல்கும் என்று நம்புவோமாக!



ஞாயிறு, 14 ஜனவரி, 2024

பேராசிரியர் மு. சுந்தரேசம் பிள்ளை

 

                   பேராசிரியர் மு. சுந்தரேசம் பிள்ளை (1920-2000) 

திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரியின் முன்னைப் பேராசிரியர்; தமிழும் வடமொழியும் நன்கு அறிந்தவர்; திருவாவடுதுறை ஆதீனப் புலவராக விளங்கியதுடன்,  திருவாவடுதுறை ஆதீனத்தின் மெய்கண்டார் இதழ் வெளியீட்டுப் பணியில் முன்னின்று உழைத்தவர். யாப்பருங்கலக் காரிகை, யாப்பருங்கலம், தண்டியலங்காரம், நம்பியகப்பொருள் உள்ளிட்ட நூல்களைச் செம்பதிப்பாக வெளியிட்ட பெருமைக்கு உரியவர். 

நான் திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரியில் மாணவராகப் பயின்றபொழுது(1987-92) மாரியம்மன்கோவில் தெருவில் இருந்த அம்பாள் அச்சகத்திற்குச் செல்வது வழக்கம். அந்தத் தொடர்பில், அம்பாள் அச்சகத்தின் சிறப்பினை எடுத்துரைக்கும் வகையில் அச்சக ஆற்றுப்படை என்ற ஒரு சிற்றிலக்கியம் படைக்கும் வாய்ப்பும் அந்த நாளில் அமைந்தது. அச்சகத்து வரும் எத்தனையோ நுகர்வோரைப் போல் நானும் ஒருவனாக இல்லமால் பின்னாளில் அந்தக் குடும்பத்துள் ஒருவனாக மதிக்கப்பட்டு, என் புகைப்படம் அந்த வீட்டில் பொருத்தப்படும் அளவுக்கு இன்றும் தொடர்பு வலிமையடைந்து நிற்பதை எண்ணி எண்ணி மகிழ்கின்றேன். 

அம்பாள் அச்சகத்தில் ஓய்வு நேரங்களில் நண்பர் குழாமுடன் பேசிக்கொண்டிருக்கும்பொழுது அகவை முதிர்ந்த ஒருவர் சாலையில் நடைப்பயிற்சியில் இருப்பதை அம்பாள் அச்சக உரிமையாளர் திருவாளர் சோ. சிவநேசனார் சுட்டிக்காட்டுவார். அப்பொழுது மணி ஐந்தாக இருக்கும். அவர் நடைப்பயிற்சி முடித்து, திரும்பும்பொழுது மணி ஆறாக இருக்கும். இதனை ஒவ்வொரு நாளும் நாங்கள் பார்ப்போம். அவ்வாறு நடைப்பயிற்சியில் இருந்தவர் யார்? என்று வினவிய பொழுது, திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூயில் பணியாற்றி, ஓய்வு பெற்ற பேராசிரியர் என்று அறிந்தேன். ஆயின், அவரிடம் நெருங்கிப் பழகவோ, அவர்தம் முழுப்புலமையையும் அறியவோ எனக்கு அந்த நாளில் வாய்ப்பு இல்லாமல் இருந்தது. ஆயின், அவர் பதிப்பித்த நாற்கவிராச நம்பியின் அகப்பொருள் விளக்கம் - மூலமும் உரையும்(1969) என்ற ஒரு நூலினை மட்டும் வாங்கி வந்து, பலவாண்டுகளாகப் பாதுகாத்து வருகின்றேன். 

நாற்கவிராச நம்பியின் அகப்பொருள் விளக்கத்தினைப் பதிப்பித்த அந்தப் பேராசிரியரின் பெயர் மு. சுந்தரேசம் பிள்ளை என்பதாகும். அவர் பற்றிய விவரங்களைப் பலவாண்டுகளாகத் தேடிக்கொண்டிருந்தாலும் முழுமையான விவரங்கள் கிடைப்பதில் காலத் தாழ்ச்சி ஏற்பட்டவண்ணம் இருந்தது. மு. சுந்தரேசம் பிள்ளை அவர்களின் மகனார் பேராசிரியர் சு. சண்முகசுந்தரம் (மதுரை) அவர்களிடம் தந்தையாரின் விவரம் வேண்டிய சூழலில், அவர்தம் சிறிய தந்தையார் மு.வைத்தியநாதன் அவர்களைப் பற்றி அறிய முடிந்தது (மு.வை. அவர்களைப் பற்றி முன்னமே எழுதியுள்ளேன்). பேராசிரியர் மு. சண்முகசுந்தரம், பேராசிரியர் மு. வைத்தியநாதன் ஆகியோரிடம் மேலும் மேலும் வினவியபொழுது மு. சுந்தரேசம் பிள்ளை அவர்களின் தமிழ்ப்பணிகள் ஓரளவு தெரியவந்தன. நம்முடன் வாழ்ந்து, மறைந்த மூத்த தமிழறிஞர் ஒருவரின் வாழ்க்கையை நண்பர்களுக்கு அறிமுகம் செய்வதில் மகிழ்கின்றேன்.

மு. சுந்தரேசம் பிள்ளை அவர்களின் வாழ்வும் பணியும் 

பேராசிரியர் மு. சுந்தரேசம் பிள்ளை அவர்கள் அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வட்டம் பிள்ளைப்பாளையம் என்னும் ஊரில் வாழ்ந்த “மணியம்” பி. ச. முத்துக்குமரப் பிள்ளை, திருநாவுக்கரசி ஆகியோரின் முதல் மகனாக 1920 ஆம் ஆண்டில் பிறந்தவர். 

கொல்லாபுரம் அரசு தொடக்கப்பள்ளியில் தொடக்கக் கல்வியையும், உயர் தொடக்கக் கல்வியையும் பயின்றவர். சென்னை, மயிலாப்பூரில் இருந்த வடமொழிக் கல்லூரியில் சேர்ந்து, ஐந்தாண்டுகள்  வடமொழி பயின்று, அரசுத் தேர்வெழுதி, "சிரோன்மணி" பட்டம் பெற்றவர். தம் வடமொழிக் கல்வி, எதிர் காலத்துப் பணிநிலைகளுக்கு உதவாது என்று உணர்ந்து, தஞ்சாவூரில் அமைந்துள்ள கரந்தைத் தமிழ்க் கல்லூரியில் புகுமுக வகுப்பில் சேர்ந்து ஓராண்டு பயின்று, தேறினார். பின்னர் அதே கல்லூரியில் 1941 ஆம் ஆண்டு சேர்ந்து, தமிழ் வித்துவான் பயின்றார். 1944 ஆம் ஆண்டில் சென்னைப் பல்கலைக்கழகத் தேர்வெழுதி, தமிழில் தேர்ச்சி பெற்றவர். 

மு. சுந்தரேசம் பிள்ளை அவர்கள் கரந்தையில் பயின்றபொழுது இவருடன் அ. மு. பரிமணம் (அரசு கல்லூரிப் பேராசிரியர்), பாளையங்கோட்டை மாயாண்டி பாரதி (பேராசிரியர்), சென்னை ந. ரா. முருகவேள் (சென்னைக் கிறித்தவக் கல்லூரிப் பேராசிரியர்), கோவை சங்கரநாராயணன் (ச. மெய்கண்டான் இ.ஆ.ப. வின் தந்தை) ஆகியோர் உடன் பயின்றவர்கள். 

கரந்தைக் கல்லூரியில் மு. சுந்தரேசம் பிள்ளை மாணவராக இருந்தபொழுது அக்கல்லூரியில் புகழ்பெற்ற அறிஞர்களாக கா. சுப்பிரமணியப் பிள்ளை, க. வெள்ளைவாரணன், அடிகளாசிரியர், ந.மு.வேங்கடசாமி நாட்டார், கரந்தைக் கவியரசு வேங்கடாசலம் பிள்ளை முதலிய அறிஞர்கள் பேராசிரியர்களாக இருந்தனர். இவர்களின் வழியாகத் தமிழ் இலக்கண, இலக்கியங்களை ஆழமாகக் கற்றுத் தேர்ந்தவர் நம் பிள்ளை அவர்கள். 

திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரி, 1945 ஆம் ஆண்டு தோற்றம் பெற்ற சூழலில் பேராசிரியர் கே. எம். வேங்கடராமையா கல்லூரியின் முதல்வராகத் திறம்படப் பணியாற்றினார். அப்பொழுது ச. தண்டபாணி தேசிகர், தி.வே.கோபாலையர் ஆகியோர் பேராசிரியர்களாக அக்கல்லூரியில் இருந்தனர். அவர்களுக்குப் பின் 1945 -1950 ஆம் ஆண்டில் காசித் திருமடத்தின் ஊதியம் பெற்றுகொண்டு மு. சுந்தரேசம் பிள்ளை பேராசிரியராகப் பணியாற்றினார். 1950 ஆம் ஆண்டில் செந்தமிழ்க் கல்லூரி அரசு உதவிபெறும் கல்லூரியாக மாற்றம் பெற்றது. அது முதல் 1979 ஆம் ஆண்டு வரை மு. சுந்தரேசம் பிள்ளை அவர்கள் அரசு ஊதியம் பெற்றுத் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றினார். 1945 ஆம் ஆண்டு முதல் 1950 ஆம் ஆண்டு வரை இவர் பணியாற்றிய காலத்தில்தான் தா. ம. வெள்ளைவாரணம், கு. சுந்தரமூர்த்தி ஆகியோர் இவரிடம் கல்வி பயின்றனர். 

மு. சுந்தரேசம் பிள்ளை அவர்கள் கல்லூரிப் பணியில் இணைந்தபொழுது சிற்றிலக்கியங்களையும் இலக்கண நூல்களான தண்டியலங்காரம், யாப்பருங்கலம், யாப்பருங்கலக் காரிகை, நம்பியகப்பொருள், நன்னூல் உள்ளிட்டவற்றையும் மாணவர்களுக்குப் பயிற்றுவித்து வந்தார். பின்னாளில் காப்பியங்கள், சங்க இலக்கியங்கள், திருமுறைகளைப் பயிற்றுவிப்பதில் தன்னிகரற்று விளங்கினார். பாடப்பகுதிகள் பெரும்பாலும் இவருக்கு மனப்பாடமாக இருக்கும். பாடம் நடத்தும்பொழுது, பாடத்துச் செய்திகளுடன் பிற செய்திகளையும், ஒப்புமைப் பகுதிகளையும் இணைத்துக்காட்டிப் பாடம் சொல்வது இவரது வழக்கம். சுந்தரேசம் பிள்ளை நல்ல தோற்றப்பொலிவு உடையவர். வெள்ளை வேட்டியும் முழுக்கைச் சட்டையும் இவர் உடை அடையாளம் ஆகும். நேர ஒழுங்கைப் பின்பற்றுவதில் கண்டிப்பானவர். 

தமிழின் முதல் இலக்கண நூலாகக் கருதப்படும் தொல்காப்பியப் பொருளதிகாரம் இளம்பூரணர் உரையை நடத்தும்பொழுது ஈடுபாட்டுடன் நடத்துவது இவர் வழக்கம்.  தம்மிடம் கற்கும் மாணவர்களைப் பழங்காலத்திற்கே இவரின் திறமையால் அழைத்துச் செல்வார். அதுபோல் தொல்காப்பியம் - சொல்லதிகாரம் சேனாவரையத்தை நடத்தும்பொழுது, இவர்தம் வடமொழி  இலக்கண அறிவின் துணைகொண்டு மிகச் சிறப்பாக விளக்குவது இவர் வழக்கம். விரிவாக நடத்துவதால் சேனாவரையம் வகுப்பு பல மாதங்கள் நீள்வது உண்டு. 

சைவ சித்தாந்த நூல்களைச் சிறப்புப் பாடப் பகுதியாக அக்காலத்தில் மாணவர்கள் படிப்பது வழக்கம். இவர்தம் சித்தாந்த வகுப்புகளின் பொழுது சித்தாந்தக் கருத்துகளை மிகவும் எளிமையாகவும் எடுத்துக்காட்டுகளுடனும் விளக்குவார். மாணவர்களின் உள்ளக் குறிப்பறிந்து நடத்துவதால் அக்காலத்து மாணவர்கள் மிகச் சிறப்பாகத் தமிழ் பயின்றனர்.

திருவாவடுதுறை ஆதீனப் புலவர்: 

தமிழ் வளர்க்கும் ஆதீனங்களுள் குறிப்பிடத்தக்க ஆதீனம் திருவாவடுதுறை ஆதீனம் ஆகும். அத் திருமடத்தின் இருபதாம் பட்டம் குருமகா சந்நிதானம் அவர்கள் திருவாவடுதுறை ஆதீனப் புலவராக மு. சுந்தரேசம் பிள்ளையை அங்கீகரித்து, அருந்தமிழ்ப் பணியாற்ற வாய்ப்பு நல்கினார். ஆதீனத்தின்  "சரசுவதி மகால்" நூலகத்துக் காப்பாளராகவும்  பொறுப்பு வகித்தார். மு. சுந்தரேசம் பிள்ளை அவர்கள் ஆதீனப் புலவராக இருந்தபொழுது, மெய்கண்டார் என்னும் சமய இலக்கிய மாத இதழ் வெளிவந்தது. அவ்விதழின் இதழாசிரியராக இருந்து அரிய கட்டுரைகள் வெளிவருவதற்குத் துணைநின்றார். 

தமிழ்ப் பல்கலைக்கழகப் பேராசிரியர் பணி: 

தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் தத்துவத்துறையில் சிறப்புநிலைப் பேராசிரியராகப் பணியமர்த்தப்பெற்றவர். . அதன் பயனாக “சுத்தாத்வைதம்” என்னும் திட்டப்பணி முடிக்கப்பெற்றுப் பல்கலைக்கழகத்திற்கு வழங்கப்பட்டது. இந்த நூல் வெளிவரும்பொழுது பல்கலைக்கழகத்திற்குப் பெரும் சிறப்பு அமையும்.

மு. சுந்தரேசம் பிள்ளை அவர்கள் சொற்பொழிவாற்றுவதிலும் வல்லவர். இரண்டு முறை இலங்கைக்குச் சென்று திருக்கோவில்கள், மன்றங்கள், கல்வி நிறுவனங்களில் இலக்கியம், மற்றும் சமயங்கள் குறித்து உரையாற்றி மீண்டவர். 

மு. சுந்தரேசம் பிள்ளையின் இல்வாழ்க்கை: 

பேராசிரியர் மு. சுந்தரேசம் பிள்ளை அவர்களுக்கு 1952 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்தம் மனைவியின் பெயர் இராசாமணி அம்மையார் ஆவார். இவர்களுக்கு சு. இராசேசுவரன், சு. இராசலெட்சுமி, சு. சண்முகசுந்தரம், சு. சரசுவதி, சு.முத்துக்குமார் என்னும் மக்கள் செல்வங்கள் வாய்த்தனர். இவர்கள் யாவரும் நன்கு கல்வி கற்றுப் பேராசிரியர்களாகவும், ஆசிரியர் பெருமக்களாகவும் உயர்ந்து நிற்கின்றனர். 

மு. சுந்தரேசம் பிள்ளையின் மணிவிழா 1980 ஆம் ஆண்டிலும் எண்பதாம் அகவை விழா 2000 ஆம் ஆண்டிலும் திருப்பனந்தாளில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. 

தமிழிலும் வடமொழியிலும் பெரும்புலமை பெற்று, நல்லாசிரியராகப் பல்லாயிரம் மாணவர்களை உருவாக்கிய மு.சுந்தரேசம் பிள்ளை அவர்கள் தம் எண்பத்தொன்றாம் அகவையில் 30.11. 2000 இல் இயற்கை எய்தினார். 


பேராசிரியர் மு. சுந்தரேசம் பிள்ளையின் இல்லத்து நிகழ்வில்...


                  பேராசிரியர் மு. சுந்தரேசம் பிள்ளையின் இல்லத்து நிகழ்வில்...

மு. சுந்தரேசம் பிள்ளை பெற்ற விருதுகள்: 

vஅண்ணாமலைப் பல்கலைக்கழகம் நடத்திய மெய்கண்ட சாத்திரப்போட்டியில் இவர் கலந்துகொண்டு எழுத்துத் தேர்வு, வாய்மொழித் தேர்வுகளை எதிர்கொண்டு முதல்பரிசு பெற்றவர். 

v  சென்னையில் அமைந்துள்ள சைவ சித்தாந்த பெருமன்றம் நடத்திய சைவத் தமிழறிஞர் போட்டியில் தேர்வு எழுதித் தேர்ச்சி பெற்றவர்.

v  மதுரை ஆதீனத்தின் சித்தாந்தப் பேராசிரியர் விருது பெற்றவர். 

v  குன்றக்குடி ஆதீனத்தின் பெரும்புலவர் விருது பெற்றவர். 

v  திருப்பனந்தாள் காசித்திருமடத்தின் அதிபர் சைவத் தமிழ் மாமணி விருது வழங்கிச் சிறப்பித்துள்ளார். 

நூல் பதிப்புப் பணியும் இயற்றிய நூல்களும்: 

1.   யாப்பருங்கலம்

2.   யாப்பருங்கலக் காரிகை

3.   தண்டியலங்காரம்

4.   நம்பியகப்பொருள்

5.   நன்னூல் விருத்தியுரை (எழுத்து, சொல்)

6.   திருக்கடைக்காப்பில் சித்தாந்தச் செம்பொருள்

7.   தேவாரத்தில் சித்தாந்தச் செம்பொருள்

8.   திருப்பாட்டின் சித்தாந்தச் செம்பொருள்

9.   திருவாசகத்தில் மெய்கண்ட உண்மைகள்

10. சிவஞானச் செல்வர்கள்

11. சிவஞான முனிவர் உரைச்சிறப்பு 



நன்றி:

பேராசிரியர் மு. வைத்தியநாதன் அவர்கள்

பேராசிரியர் சு. சண்முகசுந்தரம் அவர்கள்

முனைவர் கி. பாண்டியன் எழுதியுள்ள சித்தர் பாடல்களில் வாழ்வியல் உண்மைகள், சித்தர் சிவவாக்கியரின் சிந்தனை நெறிகள் நூல்கள் வெளியீடு!


தவத்திரு சிவஞான பாலய சுவாமிகள் நூலினை வெளியிட, பாவலர் பத்ரிசியா பாப்புராயர் முதல் படியைப் பெற்றுக்கொண்டார். அருகில் மியான்மர் க. சந்திரசேகரன், முனைவர் ஔவை நிர்மலா, க. இளமதி சானகிராமன், மு.இளங்கோவன், செ. திருவாசகம்.
 
தவத்திரு சிவஞான பாலய சுவாமிகள் முனைவர் கி.பாண்டியனுக்குச் "சித்தர் இலக்கியச் செம்மல்" என்னும் விருது வழங்கிப் பாராட்டல்.

சித்தர் பாடல்களில் வாழ்வியல் உண்மைகள், சித்தர்  சிவவாக்கியரின் சிந்தனை நெறிகள் ஆகிய நூல்களின் வெளியீட்டு விழா 13.01.2024 அன்று காலை (10.30 மணி முதல் பகல் 1 மணி வரை) புதுவைத் தமிழ்ச்சங்கத்தில் நடைபெற்றது. 

மயிலம் பொம்மபுர ஆதீனம், இருபதாம் பட்டம் தவத்திரு சிவஞான பாலய சுவாமிகள் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு நூல்களை வெளியிட்டார். நூலாசிரியர் கி. பாண்டியனுக்குச் சித்தர் இலக்கியச் செம்மல் என்ற விருதினையும் வழங்கி, அருளாசி வழங்கினார். நூலின் முதற்படிகளைப் பிரான்சு நாட்டிலிருந்து வருகைபுரிந்த பாவலர் பத்ரிசியா பாப்புராயர், மருத்துவர் முத்துராமன் சண்முகவேல், பர்மாவிலிருந்து வருகைபுரிந்த க. சந்திரசேகரன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். 

முனைவர் இளமதி சானகிராமன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முனைவர் ஔவை இரா. நிர்மலா, மருத்துவர் க. கலைவேந்தன் நூல்களை அறிமுகம் செய்து உரையாற்றினர். 

க. தமிழமல்லன், சீனு. வேணுகோபால் பு. சொ. பூபதி, நெய்தல்நாடன், தி. கோவிந்தராசன், முனைவர் அரங்க. மு. முருகையன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நூலாசிரியர் கி. பாண்டியன் ஏற்புரை வழங்கினார். செ. திருவாசகம் நன்றியுரை வழங்கினார். பூங்குழலி பெருமாள் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வயல்வெளிப் பதிப்பக நிர்வாகிகள் செய்திருந்தனர்.

செவ்வாய், 9 ஜனவரி, 2024

முனைவர் கி. பாண்டியன் அவர்கள் எழுதியுள்ள சித்தர் பாடல்களில் வாழ்வியல் உண்மைகள், சித்தர் சிவவாக்கியரின் சிந்தனை நெறிகள் நூல்கள் வெளியீட்டு விழா!




 அன்புடையீர், வணக்கம்.

 சித்தர் பாடல்களைத் தம் ஆய்வுப்புலமாக அமைத்துக்கொண்டு, சித்தர் நெறிநின்று, துறையூரில் வாழ்ந்துவரும் முனைவர் கி.  பாண்டியன் அவர்கள் எழுதியுள்ள 1. சித்தர் பாடல்களில் வாழ்வியல் உண்மைகள், 2.  சித்தர்  சிவவாக்கியரின் சிந்தனை நெறிகள் ஆகிய நூல்களின் வெளியீட்டு விழா அறிஞர்கள் முன்னிலையில் புதுச்சேரியில் நடைபெற உள்ளது. இவ்விழாவில் மாண்புமிகு புதுச்சேரி சட்டப் பேரவைத் தலைவர் ஏம்பலம் அரங்க. செல்வம் அவர்களும் புதுச்சேரி அரசின் கலை பண்பாட்டுத்துறைச் செயலாளர் சீர்மிகு அ. நெடுஞ்செழியன் இ.ஆ.ப. அவர்களும் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர். மயிலம் பொம்மபுர ஆதீனம் இருபதாம் பட்டம் தவத்திரு சிவஞான பாலய சுவாமிகள் அவர்கள் கலந்துகொண்டு சித்தர் இலக்கியச் செம்மல் என்ற விருதினை நூலாசிரியருக்கு வழங்கி, அருளாசி வழங்க உள்ளார்கள். தமிழ் இலக்கிய ஆர்வலர்களையும், சமய இலக்கிய ஆர்வலர்களையும் நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பிக்க அன்புடன் அழைக்கின்றோம். 

அழைப்பின் மகிழ்வில்

வயல்வெளிப் பதிப்பகம்,

உலகத் தொல்காப்பிய மன்றம்

புதுச்சேரி – 605 003

தொடர்புக்கு: 9442029053


நாள்: 13. 01. 2024, சனி(காரி)க் கிழமை, 

நேரம்:   முற்பகல் 10. 30 மணி முதல் 12. 30 வரை

இடம்: புதுவைத் தமிழ்ச்சங்கம், வெங்கட்டா நகர், புதுச்சேரி 

 

நிகழ்ச்சி நிரல் 

தமிழ்த்தாய் வாழ்த்து: 

தலைமை: முனைவர் க. இளமதி சானகிராமன் அவர்கள்,

புலமுதன்மையர்(ப.நி), புதுவைப் பல்கலைக்கழகம்

 

சித்தர் பாடல்களில் வாழ்வியல் உண்மைகள்

சித்தர் சிவவாக்கியரின் சிந்தனை நெறிகள்  நூல்கள்  வெளியீடு

மாண்புமிகு சட்டப்பேரவைத் தலைவர் ஏம்பலம் அரங்க. செல்வம் அவர்கள்


நூலின் முதற்படி பெறுதல்: திரு. அ. நெடுஞ்செழியன் அவர்கள் இ.ஆ.ப

செயலாளர், கலை, பண்பாட்டுத்துறை, புதுச்சேரி அரசு

 

நூலின் சிறப்புப் படிகளைப் பெறுதல்:

பாவலர் பத்ரிசியா பாப்புராயர், பிரான்சு

பொறிஞர் மு. பாலசுப்பிரமணியன் அவர்கள்

மருத்துவர் முத்துராமன் சண்முகவேல் அவர்கள், சென்னை

 

முனைவர் கி. பாண்டியன் அவர்களுக்குச் சித்தர் இலக்கியச் செம்மல் என்னும் விருதளித்து அருளாசியுரை:

தவத்திரு சிவஞான பாலய சுவாமிகள் அவர்கள்,

இருபதாம் பட்டம், மயிலம் பொம்மபுர ஆதீனம்

 

நூல்கள் அறிமுகவுரை:

முனைவர் ஔவை இரா. நிர்மலா அவர்கள்,

தமிழ்த்துறைத் தலைவர்(ப.நி), கா.மா. அரசு பட்டமேற்படிப்பு, ஆராய்ச்சி நிறுவனம்,

மருத்துவர் க. கலைவேந்தன் அவர்கள், விநாயகா மருத்துவமனை, புதுச்சேரி 

 

வாழ்த்துரை:

முனைவர் க. தமிழமல்லன் அவர்கள், ஆசிரியர், வெல்லும் தூய தமிழ்

சொல்லாய்வுச் செல்வர் முனைவர் சு. வேல்முருகன் அவர்கள்

செந்தமிழ்ச் செம்மல் திரு. சீனு. வேணுகோபால் அவர்கள்

சைவத்திரு. பு. சொ. பூபதி அவர்கள், புதுச்சேரி பன்னிரு திருமுறை வழிபாட்டு மன்றம்

முனைவர் நெய்தல்நாடன் அவர்கள், புதுவைத் தமிழ்ச் சான்றோர் பேரவை

தீந்தமிழ்த் தென்றல் தி. கோவிந்தராசன் அவர்கள், வெற்றித் தமிழர் பேரவை

முனைவர் அரங்க. மு. முருகையன் அவர்கள், சமுதாயக் கல்லூரி, புதுச்சேரி 

ஏற்புரை: முனைவர் கி. பாண்டியன் அவர்கள், நூலாசிரியர் 

நன்றியுரை: திரு. செ.திருவாசகம், நெறியாளர், வயல்வெளிப் பதிப்பகம் 

நிகழ்ச்சித் தொகுப்பு: 

“நற்றமிழ் நாவரசி” திருவாட்டி பூங்குழலி பெருமாள் அவர்கள்

செவ்வாய், 2 ஜனவரி, 2024

ஆகாசம்பட்டு சேஷாசலம்

 


கவிஞர் ஆகாசம்பட்டு சேஷாசலம் 


புதுச்சேரிக்கு அருகில் உள்ள ஆகாசம்பட்டு என்னும் ஊரில் வாழும் கவிஞர் இவர். எளிய மக்கள் வாழ்க்கையை   வெண்பா வடிவில் எடுத்துரைத்த படைப்புகளின் வழியாகக் கவிதைத்துறையில் அனைவருக்கும் அறிமுகம் ஆனவர்; மொழிபெயர்ப்பாளர்; சிறுகதையாசிரியர்; சில காலம் ஆசிரியராகவும் பணியாற்றியவர்; முழுநேரமாக உழவுத்தொழில் செய்துவருகின்றார்

1992 ஆம் ஆண்டில் புதுவைப் பல்கலைக்கழகத்தில் நான் இளம் முனைவர் பட்ட ஆய்வு மாணவனாக இருந்தபொழுது பேராசிரியர் ம. இலெ. தங்கப்பா அவர்களின் இல்லத்துக்கு அடிக்கடி செல்வது உண்டு. தமிழ்க் கவிதைப் போக்குகளைக் குறித்து  அவருடன் உரையாடுவது அந்நாளைய வழக்கம். மக்கள் கவிஞர் த. பழமலை அவர்களின் "சனங்களின் கதை" நூலினையும், ஆகாசம்பட்டு சேஷாசலம் அவர்களின் "ஆகாசம்பட்டு" நூலினையும் அறிமுகப்படுத்தியதோடு, அந்த நூலின் படிகளையும் தங்கப்பா எனக்கு வழங்கினார். 

ஆகாசம்பட்டு கவிதை நூல் வெண்பா யாப்பில் அமைந்த நூல். தூய தமிழில் படிப்பதும் எழுதுவதுமாக அந்த நாளில் இருந்த எனக்கு, இந்த நூல் பேச்சு வழக்கில் இருப்பதைக் கண்டு, ஒருவகை ஒவ்வாமை உணர்வுடன்தான் படிக்கத் தொடங்கினேன். உள்ளடக்கச் செய்திகள் யாவும் என் உள்ளம் கவர்ந்தன. வெண்பா ஓசை குறையாமல் மக்களின் பேச்சு வழக்கில் அமைந்த சொற்களைக் கொண்டு நூல் முழுவதும் விளங்கியது. பல வெண்பாக்கள் மனத்துள் பதிந்தன. அவ்வகையில கீழ்வரும் வெண்பாக்களை நான் படித்துச் சுவைத்து, சேஷாசலம் அவர்களின் வெண்பாவியற்றும் திறனை வியந்து நின்றுள்ளேன். வேளாண்மை வாழ்க்கையில் உழன்றவர்களுக்கு இத்தகைய வெண்பாக்கள் உள்ளத்துக்கு ஒத்தடம் கொடுப்பதுபோல் இருக்கும். மூன்றாண்டுகள் உழவுத்தொழிலில் நான் உழன்று, அதன் பிறகு கல்விக்கூடத்திற்குச் சென்றவன் ஆதலால் ஆகாசம்பட்டு நூல் வெண்பாக்கள் என் நெஞ்சத்துக்கு நெருக்கமாக இருந்தன. 



வெள்ளாட்டை வித்து வெரைப்பயிர் வாங்கியாந்து

மள்ளாட்டை போட்டேன் மதிகெட்டு! – கல்லாட்டம்

செம்பைவச்சித் தான களைவெட்ணேன்? வேறஎந்தத்

தெம்பவச்சி வாங்குவன்ஜிப் சம்? (173)

 

நெத்து வெடிக்கையில பத்துகிலோ; நெய்தடவி

அத்தை ஒடைச்சாக்கா ஆறுகிலோ; - குத்தி

எடுத்துப் பொடைச்சாக்கா அஞ்சிகிலோ ஆச்சே

அடச்சாமி இந்த உளுந்து! (171)

 

எங்கூர்ல என்ன வெளையுதுண்ணாக் கேட்டீங்க?

வெங்காயம்; பச்சைப் பயறு;உளுந்து; - தெங்கு;நுங்கு;

வள்ளி; வரகு;கம்பு; மள்ளாட்டை; கேவுரு;

நெல்லு;கொள்ளு; மல்லி;கரும்(பு) எள்ளு! (172)

 

சாமரம் வீசும்; சவுக்கு ’நிழல்’கொடுக்கும்;

ஆமாம்; கனவுங் களைவளர்க்கும்! - போமையா..!

நட்டுவச்ச அண்ணைக்கே நாம கெளம்பிடறோம்

வட்டிக்கி வாங்கி வர! (177)

 

ஊசியப் போடும்; உடம்புமேல் உக்காரும்;

ஓசியில் கச்சேரி வச்சிடும்; - ஓசையுடன்

மின்விசிறி போட்டால் மிரண்டுமே ஓடிவிடும்

இன்னாக் கொசுவோ இது?! (999)

 

பாண்டி வழியா தெரியாது மாட்டுக்கே?

ஆண்டாண்டாய் அண்ணாடம் போவுதில்ல? – நீண்டு

படுத்தே உறங்கிக் குறட்டைவிட்டா(ல்) என்ன?

அடத்தே வுடா,போகு தே!? (1010)

 

எல்லாக் கடவுளரும் “யாமிருக்க என்ன பயம்?”

சொல்றாங்க, இப்படித்தான் சொல்றாங்க! – வெள்ளி

மொளையுமட்டும் பாண்டிபோய் சேருமட்டும் ராந்தல்

வெளிச்சமே எந்தன் துணை! (1012) 

மேற்கண்ட வெண்பாக்கள் பலருக்கும் மனப்பாடமாக இருப்பதைக் கேட்டுள்ளேன். 



ஒருநாள் கோட்டக்குப்பம் பொது நூலகத்தில் நூல்களைத் தேடிக்கொண்டிருந்த பொழுது “ரப்பர் மரத்துக்கு ரணங்கள் புதிதல்ல” என்ற நூல் தலைப்பு கண்ணையும் கருத்தையும் கவர்ந்திழுத்தது. அந்த நூலை எழுதியவரும் நம் ஆகாசம்பட்டு சேஷாசலம்தான். நூலகத்தில் அமர்ந்து அந்த நூலைப் படித்த நான் ஆகாசம்பட்டு ஊர் எங்கு உள்ளது? என்று வினவிக்கொண்டு,  மாலை நேரத்தில் ஒரு மிதிவண்டியில் ஆகாசம்பட்டு சென்று, அவர் இல்லத்தை அடைந்தேன். கவிஞர் சேஷாசலம் உள்ளார்களா? என்று கேட்டதும், அவர் நிலத்தில் இருக்கும் விவரம் தெரிந்தது. நானும் அவரின் நிலத்துக்கு வழி வினவிக்கொண்டு, சென்று சேர்ந்தேன். நம் கவிஞர் சவுக்குமரக் கன்றுகளை ஆடு மாடுகள் மேய்ந்துவிடாமல் காவல் காத்துக்கொண்டு, உட்கார்ந்து இருந்தார். என்னை அறிமுகம் செய்துகொண்டு, உரையாடினேன். விளக்கு வைக்கும் நேரம் வரை இருவரும் கொல்லையில் இருந்துவிட்டு, இரவு இல்லம் திரும்பினோம். 

இரவுப்பொழுதுக்குச் சிற்றுண்டி கொடுத்தார்கள். உண்டுவிட்டு, இரவு முழுவதும் சேஷாசலத்தின் கவிதை முயற்சிகள் குறித்து உரையாடினோம். நள்ளிரவில் கண்ணயர்ந்தோம். காலையில் உணவுகொடுத்தார்கள். உண்டு முடித்துப் பல்கலைக்கழகத்துக்குப் புறப்பட்டேன். காலங்கள் உருண்டோடின. முப்பதாண்டு இடைவெளியில் புதுவையில் இலக்கிய நிகழ்வுகளில் ஓரிரு முறை சந்திக்கும் வாய்ப்பு மட்டும் கிடைத்தது. ஆகாசம்பட்டு சேஷாசலம் அவர்களின் படைப்புகள் குறித்து முனைவர் ப. சரவணன் அவர்கள் ஆய்வு செய்துள்ளதாகவும், சேஷாசலத்தின் நூல்கள் பாட நூல்களாகக் கல்லூரிகளில் உள்ளதாகவும் அறிந்து மகிழ்ந்தேன். எழுதாளர் கி. இராவும், பேராசிரியர் வெங்கட சுப்புராய நாயகரும் சேஷாசலத்தின் வெண்பாக்கள் குறித்து உரையாடலின்பொழுது எப்பொழுதும் வியந்துபேசுவார்கள். 

ஆகாசம்பட்டு சேஷாசலம் அவர்களின் இல்லத் திருமணம் கடலூரில் சிலவாண்டுகளுக்கு முன்னர் நடைபெற்றது. எழுத்தாளர் கி. இரா. அவர்களும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். நானும் அந்த நிகழ்வில் கலந்துகொண்டேன். அதன் பிறகும் ஓரிரு முறை தொலைபேசியில் சேஷாசலத்துடன் உரையாடல் நடந்தது. மீண்டும் ஒருமுறை ஆகாசம்பட்டு சென்று கவிஞரைச் சந்திக்க வேண்டும் என்று நீண்ட நாள்களாக  நினைத்துக்கொண்டிருந்தேன். பலவாண்டு எண்ணம் நேற்று (01.01.2024) கைகூடியது. மாலைப்பொழுதில் ஆகாசம்பட்டுக்கு வரும் செய்தியைச் சேஷாசலம் அவர்களுக்குச் சொன்னதும் கவிஞரும் மகிழ்ந்தார். சொன்னவாறே மாலையில் சென்று, சற்றொப்ப இரண்டு மணி நேரம் சேஷாசலத்தின் இலக்கிய முயற்சிகள், மொழிபெயர்ப்புப் பணிகள், முன்னோடி எழுத்தாளர்களின் ஆக்கங்கள் குறித்து உரையாடும் வாய்ப்பு அமைந்தது. அவரின் வாழ்க்கைக் குறிப்பையும் தெரிந்துவந்தேன்.

  சேஷாசலம் தம் தாத்தாவின் ஊரான ஆகாசம்பட்டுக்கு இளமைக் காலத்தில் குடிபெயர்ந்தவர். ஆகாசம்பட்டு என்னும் இந்த ஊர் புகழ்பெற்ற பஞ்சவடி திருக்கோவிலுக்கு அருகில் உள்ளது. இந்த ஊர் குறித்து, இலக்கிய உலகில் நம் சேஷாசலம் அவர்களால்  நல்ல அறிமுகம் கிடைத்தது. ஆகாசம்பட்டு ஊர் மழைநீரை நம்பி, முற்காலத்தில் வேளாண்மை செய்யும் நிலையில் இருந்தது. இவர்தான் முதன்முதல் ஆழ்துளைக் கிணறு அமைத்து, நீர் வளத்தை வெளிப்படுத்தினார். அதன் பின்னர் இந்த ஊர் இன்று பல்வேறு பயிர் விளையும் ஊராக மாறிப்போனது. சோளம், உளுந்து, துவரை விளைச்சல்தான் முன்பு அதிகமாக இருந்தது. இன்று அனைத்துப் பயிர்களும் விளைவிக்கப்படும் வளம் நிறைந்த ஊராகச் செழித்து நிற்கின்றது. 



சேஷாசலம் அவர்கள் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்துள்ள பாங்களத்தூர் என்னும் சிற்றூரில் 13. 09. 1948 இல் பிறந்தவர். பெற்றோர் பெயர் வெங்கட சுப்பு, அலர்மேல் அம்மாள் ஆகும். பள்ளிப்படிப்பை 1966 இல் நிறைவு செய்த சேஷாசலம் அண்ணாமலைப் பல்கலைக்கழத்தில் இளம் அறிவியல் (விலங்கியல்) படிப்பை 1970 இல் நிறைவு செய்தவர். 1970 இல் இராஜேஸ்வரி அம்மையாருக்கும் இவருக்கும் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு மகள்களும் ஒரு மகனும் மக்கள் செல்வங்களாக வாய்த்தனர். 

சேஷாசலம் கல்வியியல் படிப்பை 1973 இல் முடித்து, திண்டிவனம், கடலூர் முதலிய ஊர்களில் ஆசிரியர் பணியாற்றினார். பின்னாளில் கவிஞர் இரா. மீனாட்சி அவர்களின் வேண்டுகோளின்படி ஆரோவில்லில் உள்ள வெளிநாட்டினரின் பிள்ளைகளுக்குத் தமிழ் பயிற்றுவிப்பதும், தமிழ்ப் பிள்ளைகளுக்கு ஆங்கிலம் பயிற்றுவிப்பதுமான பணியில் ஆர்வமுடன் செயல்பட்டார். 

பள்ளிக்காலம் முதல் படிப்பதிலும் எழுதுவதிலும் சேஷாசலம் ஈடுபாடுகொண்டிருந்தவர். இவரின் கையெழுத்து முத்து முத்தாகக் கண்ணைக் கவரும் தரத்தில் இருக்கும். இது இவருக்குப் பணியாற்றும் இடங்களில் நல்ல புகழை ஈட்டித் தந்தது. இலக்கிய நூல்களில் தனிப்பாடல்கள் இவருக்கு  அறிமுகம் ஆனதும் அதனைப் போலப் பல பாடல்களை எழுதித் தம் பாட்டு வேட்கை தணியாமல் பார்த்துக்கொண்டார். பாரதிதாசன் படைப்புகளில் தொடக்கத்தில் நல்ல ஈடுபாடு கொண்டிருந்த சேஷாசலம் பின்னர் பாரதியார் படைப்புகளை  ஈடுபாட்டுடன் பயின்றவர். வாணிதாசனின் "எங்களூர்" கவிதையும் இவருக்குக் கவிதைத் துறையில் கால்பதிக்க உதவியது. கண்ணதாசன் படைப்புகளிலும் கவிமணியின் மொழிபெயர்ப்புகளிலும் மனம் பறிகொடுத்தவர். வானொலிக் கவியரங்குகளில் வளமான கவிதைகளை வழங்கி அனைவரின் பாராட்டினைப் பெற்றுவருபவர். 

“கவிதை” என்னும் இதழைத் தெசிணி(தெய்வசிகாமணி) அவர்கள் நடத்தினார். பல இளங்கவிஞர்கள் தோன்றுவதற்கு வாய்ப்பாக இந்த இதழ் விளங்கியது. அவரின் ஏட்டில் சேஷாசலம் கவிதைகளைப் படைத்தார். கவிஞர் வைரமுத்துவின் படைப்புகளும் அந்த இதழில் வெளிவந்தன. கவிஞர் வைரமுத்துவின் கவிதைகளில் இருந்த கற்பனை உணர்ச்சி, அவருடன் நெருங்கிய நட்புக்கு நகர்த்திச் சென்றது.  சேஷாசலம் சென்னை சென்றால் வைரமுத்துவின் வீட்டில் தங்கிவரும் அளவுக்கு ஆழமான நட்பு இருவருக்குமிடையில் அந்நாளில் உருவானது. இவரின் நூலுக்குக் கவிஞர் வைரமுத்துவின் அணிந்துரை அமைந்துள்ளமை இங்குக் குறிப்பிடத்தக்கது. 1980 இல் வெளிவந்த சேஷாசலத்தின்  “இரை இழுக்கும் எறும்பு” என்னும் நூலுக்குக் கவிஞர் வைரமுத்துவின் அணிந்துரை அமைந்து, நூலுக்குப் பெருமை சேர்த்தது.  இரண்டாம் நூலான "ரப்பர் மரத்துக்கு ரணங்கள் புதிதல்ல" என்ற நூல் வெளிவருவதிலும் கவிஞர் வைரமுத்து உதவினார் என்று சேஷாசலம் நன்றியுடன் குறிப்பிடுவார். 

சேஷாசலம் தம் பதினைந்தாம் வயது முதல் வெண்பா வடிவில் படைப்புகளைத் தந்து வருகின்றார். எண்சீர், அறுசீர், கட்டளைக் கலித்துறை வடிவங்களையும் பயன்படுத்தியுள்ளார். “புலவர்களுக்கு வெண்பா புலி” என்பார்கள். அந்தப் புலி நம் சேஷாசலத்திடம் கால் மடக்கி, தலைதாழ்த்தி நிற்கும். எளிய பேச்சு வழக்கில் மக்கள் வாழ்க்கையைப் படம்பிடித்துக்காட்டுவதில் சேஷாசலம் வெற்றிபெற்றுள்ளார். இவர்தம் வெண்பாக்களை கி. இரா, தி.க.சிவசங்கரன், அப்துல் ரகுமான், மீரா, சிற்பி, சுஜாதா, அ. அறிவுநம்பி, க.பஞ்சாங்கம், தேவமைந்தன், நாயகர், வாலி, வைரமுத்து, பிரபஞ்சன், தங்கப்பா, இரா. மீனாட்சி, யுகபாரதி உள்ளிட்டவர்கள் ஆர்வமுடன் குறிப்பிட்டுப் பேசுவது வழக்கம். 

1991 இல் புதுக்கவிதை அமைப்பில் 192 வெண்பாக்களை ஆகாசம்பட்டு என்னும் தலைப்பில் அன்னம் பதிப்பகத்தின் வாயிலாக வெளியிட்டார். இந்த நூல் தமிழகத்தில் அனைவரின் கவனத்தையும் இழுத்தது. எழுத்தாளர் சுஜாதா இந்த நூல் பற்றி இந்தியா டுடே இதழில் ஒரு கட்டுரை எழுதி, இலக்கிய உலகில் அனைவரின் கவனத்துக்கும் கொண்டுசென்றார். இந்த நூல் 2004 இல் மறுபதிப்பு கண்டது. இதில் 1062 வெண்பாக்கள் இடம்பெற்றுள்ளன. மூன்றாம் பதிப்பு கூடுதல் வெண்பாக்களுடன் வெளிவர உள்ளது. ஒரே வடிவத்தில் எழுதி, அல்லது ஒரே நூலின் வழியாக இலக்கிய மதிப்பைப் பெறமுடியும் என்ற அசைக்கமுடியாத நம்பிக்கையுடன் தன் படைப்புகளை வழங்கிவருகின்றார். 

படைப்பு நூல்களை வழங்கிவரும் சேஷாசலம் அண்மைக்காலமாக மொழிபெயர்ப்புப் பணிகளில் கவனம் செலுத்தி வருகின்றார். வடமொழிக் கவிஞர் காளிதாசன், வால்மீகி, வைக்கம் முகமது பஷீர், பிரேம் சந்த் ஆகியோரின் படைப்புகளை ஆங்கிலம் வழியாகத் தமிழுக்குப் பெயர்க்கும் அரும்பணியைச் செய்துவருகின்றார். 

இருபது ஆண்டுகளுக்கு முன்பாகவே வடமொழிக் கவிவாணர் காளிதாசனின் காவியங்களைத் தமிழில் மொழிபெயர்த்துள்ள சேஷாசலத்தின் மொழிபெயர்ப்புகள் வெளிவந்தால் அவை தமிழுக்கு ஆக்கமாக இருக்கும். வடமொழிக் காவியங்களின் சுவைகளை எடுத்துரைத்து, காளிதாசனின் பெரும்புலமையை வியக்கும் சேஷாசலம் அந்தப் பெருங்கவிஞரின் முதன்மையான கற்பனைகளை விளக்குவதன் வழியாக அக் காப்பியச் சுவையை முழுதுணர்ந்துள்ளமையை அறியலாம். 



காளிதாசனின் ரகுவம்சம் நூலில் இராமனின் மூதாதையர் வரலாறும் பின்வந்தோர் வரலாறும் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த நூலுக்குப் பேராசிரியர் ப. மருதநாயகம் அவர்களின் அணிந்துரை அமைந்து, நூலின் சிறப்பினை எடுத்துரைக்கின்றது. வெண்பா, எண்சீர், அறுசீர் விருத்தங்களில் அமைந்த பாடல்கள் இந்த நூலினை அழகுசெய்கின்றன. மொழிபெயர்ப்பு என்று கூறமுடியாதபடி பாடல்கள் உயிரோட்டமாக இந்த நூலில் உள்ளன. 

எங்கள் உரையாடலில் புதுமைப்பித்தனும் ஜெயகாந்தனும், தீபம் நா. பார்த்தசாரதியின் தீபம் இதழும் முதன்மைப் பொருள்களாக இடம்பெற்றன. ஜெயகாந்தனின் இலக்கிய ஆளுமையைச் சேஷாசலம் எடுத்து முன்வைப்பதில் ஆற்றல் பெற்றவர். பன்மொழி இலக்கியப் பயில்வு இவர்தம் இலக்கிய மதிப்பீடுகளைச் சிறப்புடையதாக்கி உள்ளன. 

75 வயதாகும் ஆகாசம்பட்டு சேஷாசலம் மாலிய நெறியினர் என்பதால் மாலாயிரம் உள்ளிட்ட அரிய இலக்கியப் பனுவல்களை ஈடுபாட்டுடன் எழுதி, இலக்கிய வாழ்க்கை வாழ்ந்துவருகின்றார். இவரின் படைப்புகள் இவரின் சிறப்புகளை என்றும் நினைவூட்டிக்கொண்டே இருக்கும். 

ஆகாசம்பட்டு சேஷாசலம் படைப்புகள் 

·         இரை இழுக்கும் எறும்பு – 1980

·       ரப்பர் மரத்துக்கு ரணங்கள் புதிதல்ல – 1983, 2004(மணிவாசகர் பதிப்பகம்)

·         ஆகாசம்பட்டு -  1991, 2004(மணிவாசகர் பதிப்பகம்)

·         அனுமாயணம்(யாப்பு) – 2003

·         சேஷாசலம் கவிதைகள் – 2004

·         வனவாசிகள்(மரபு) – 2004

·         கிருஷ்ணார்ப்பணம் (யாப்பு) – 2004

·         மாலாயிரப் பிரபந்தம்(யாப்பு)(மொழிபெயர்ப்பு) – 2007

·         ரகுவம்சம்(யாப்பு) (மொழிபெயர்ப்பு)- 2008

·         கண்ணன் கவிதைகள்(யாப்பு), (மொழிபெயர்ப்பு) – 2010 

வெளிவர வேண்டிய நூல்கள்: 

·         குமார சம்பவம் (மொழிபெயர்ப்பு)

·         மேகதூதம் (மொழிபெயர்ப்பு)

·         ருதுசம்காரம் (மொழிபெயர்ப்பு)

·         சேஷ இராமாயணம் (மொழிபெயர்ப்பு)

·         வைக்கம் முகமது பஷீர் கதைகள் (மொழிபெயர்ப்பு)

·         பிரேம்சந்த் கதைகள்(மொழிபெயர்ப்பு)

·         வேமனர் கவிதைகள் (சதகம்)

·         அமரு சதகம்

·         கீத கோவிந்தம்