நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

திங்கள், 26 ஆகஸ்ட், 2019

மலேசியாவில் நடந்த தொல்லிசையும் கல்லிசையும் நூல் வெளியீட்டு விழா!



தவத்திரு பாலயோகி சுவாமிகள் தொல்லிசையும் கல்லிசையும் நூலை வெளியிட, மருத்துவர் செல்வம் பெற்றுக்கொள்ளும் காட்சி.

தொல்லிசையும் கல்லிசையும் நூலைப் பெற்றுக்கொண்ட தமிழ் ஆர்வலர்களும் அறிஞர்களும்


 ஆய்வரங்குகளுக்கு என யான் எழுதிய பத்தொன்பது கட்டுரைகளைத் தொகுத்து, தனி நூலாக்க விரும்பினேன். பல நண்பர்களின் பார்வைக்கும், திருத்தங்களுக்கும் பிறகு தொல்லிசையும் கல்லிசையும் என்ற தலைப்பில் 208 பக்கங்கள் கொண்டு, நூலும் கவினுற அச்சானது. மலேசியாவில் தமிழ்ப்பணிகளிலும் சமூகப் பணிகளிலும் ஈடுபட்டு உழைக்கும்  பொறியாளர் இரா. பெருமாள் அவர்களுக்கும், அவர்தம் துணைவியார் திருவாட்டி சரசுவதி வேலு அவர்களுக்கும் இந்த நூல் படையல் செய்யப்பட்டுள்ளது. என் நண்பர் ம. முனியாண்டி அவர்கள் இந்த நூல் வெளிவருவதற்கும், மலேசியாவில் வெளியிடுவதற்கும் ஆர்வம்கொண்டு அதற்குரிய ஒழுங்குகளைச் செய்ய விரும்பினார். ஆசான் மன்னர் மன்னன் அவர்கள் என் மீது நிறைந்த அன்புகொண்டவர் என்பதால் அவரின் நெறிகாட்டலின்படி மலேசியாவில் நூல் வெளியிடுவதற்குரிய நாளும் நேரமும் குறிக்கப்பட்டன. மலேசியாவில் அமைந்துள்ள திருமுருகன் திருவாக்கு பீடம் தவத்திரு பாலயோகி சுவாமிகளின் நல்லாசியுடன் விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக நடந்தன.

  கோலாலம்பூர், பிரிக்பீல்ட்சு பகுதியில் அமைந்துள்ள இந்திய அரசின் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இந்தியக் கலாச்சார மையத்தில் 10.08.2019 காரி(சனிக்கிழமை), மாலை 7 மணி முதல் 9.30 மணி வரை நூல் வெளியீட்டு விழா மிகச் சிறப்பாக நடந்தது. 

  நிகழ்ச்சியின் தொடக்கமாக இறையருட் கவிஞர் சீனி நைனா முகமது அவர்கள் இயற்றிய தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பெற்றது; மங்கல மகளிர் குத்துவிளக்கேற்றி, நிகழ்வைத் தொடங்கிவைத்தனர். ஆசான் ம. மன்னர் மன்னன் அரியதோர் உரையாற்றி அனைவரையும் வரவேற்றார். மலேசிய அரசின் மேனாள் இணையமைச்சர் டான் ஸ்ரீ குமரன் அவர்கள் தமிழ் உணர்வுகொண்ட தலைமையுரை வழங்கி, இசைத்தமிழினைக் காப்பதற்குத் தமிழர்கள் ஒவ்வொருவரும் முன்வர வேண்டும் என்ற வேட்கையை வெளிப்படுத்தி, நூலாசிரியரின் இசைத்தமிழ்ப் பணிகளைப் பாராட்டினார்.

  மலேசிய நாட்டிலும் உலகின் பிற நாடுகளிலும் முருகவழிபாடும், சமய நெறிகளும் தழைத்து விளங்க நற்பணியாற்றும் எங்களின் வணக்கத்திற்குரிய தவத்திரு. பாலயோகி சுவாமிகள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நூலாசிரியர் மு.இளங்கோவன் செய்துவரும் பணிகளைத் தாம் கவனித்து வருவதாகவும், இசைத்தமிழ் வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டு உருவாக்கிவரும் தொல்லிசையும் கல்லிசையும் என்ற ஆவணப்படம் உருவாக்கத்திற்குத் தம் திருபீடம் துணைநிற்க விரும்புவதாகவும் சொல்லி, கருணைகூர்ந்த அறிவிப்பினை வெளியிட்டார்கள். அவர்களுடன் தமிழ்ப்பற்று நிறைந்த சில அன்பர்களையும் நிகழ்ச்சிக்கு அழைத்து வந்து, நிகழ்ச்சி சிறக்க பெருந்துணைநின்றார்கள்.

  மலேசியா நாட்டில் தமிழ்நெறி தழைக்க உழைத்துவரும் திருவாளர் இரா. திருமாவளவன் அவர்கள் தொல்லிசையும் கல்லிசையும் நூலினை மிகச் சிறப்பாக அறிமுகம் செய்து, நூலின் மாண்பினையும், நூல் நுவல் பொருளையும் தெளிவாக எடுத்ததுரைத்து, நூலாசிரியரின் முயற்சிக்கு அனைவரும் துணைநிற்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். 

  தவத்திரு பாலயோகி சுவாமிகள் தொல்லிசையும் கல்லிசையும் என்ற நூலினை வெளியிட, மலேசிய மருத்துவர் செல்வம் அவர்கள் நூலின் முதற்படியினைப் பெற்றுச் சிறப்பித்தார். அவரைத் தொடர்ந்து பொறியாளர் இரா. பெருமாள் உள்ளிட்ட தமிழார்வலர்கள் நூலினைப் பெற்று நூலாசிரியரைப் பாராட்டினர்.

  மலேசிய நாட்டில் தமிழ் உணர்வுடன் செயல்பட்டுவரும் பகாங் சட்டமன்ற உறுப்பினர்  திருமதி தமிழச்சி காமாட்சி, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இந்தியக் கலாச்சார மைய இயக்குநர் க. ஐயனார், தமிழ்நெறி வாழ்வியல் இயக்கம் சார்ந்த அருள்முனைவர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மலேசியாவின் மூத்த தமிழறிஞர் முனைவர் முரசு. நெடுமாறன் வாழ்த்துப்பா இசைத்து நூலாசிரியரைப் பாராட்டினார். ஆசிரியர் ம. முனியாண்டி நன்றியுரை வழங்கினார். நூலாசிரியர் முனைவர் மு.இளங்கோவன் ஏற்புரை வழங்கி, நிகழ்வு சிறக்க துணை நின்ற அனைவரையும் நன்றிப்பெருக்கோடு நினைவுகூர்ந்தார். மலேசியத் தமிழர்களைத் தம் குரல்வளத்தால் வயப்படுத்தி வைத்திருக்கும் தங்கக் குரலோன் தங்கமணி நிகழ்ச்சியை மிகச் சிறப்பாக தொகுத்து வழங்கினார். 

  மலேசியாவில் வாழும் தமிழ் உணர்வாளர்கள் பலரும் திரளாக நிகழ்ச்சிக்கு வந்திருந்து வாழ்த்தினர். வருவதற்கு வாய்ப்பு அமையாதவர்கள் தொலைபேசி வழியாக வாழ்த்துரைத்து, நூலினை அஞ்சலில் பெற்றுக்கொள்ள முன்பதிவுசெய்துகொண்டனர்.



 சட்டமன்ற உறுப்பினர் திருமதி தமிழச்சி காமாட்சி 
நூலினைப் பெற்றுக்கொள்ளும் காட்சி

இரா. திருமாவளவன் நூலறிமுகம்

க.ஐயனார் அவர்களின் வாழ்த்துரை


ஆசான் ம.  மன்னர் மன்னன் வரவேற்புரை


பார்வையாளர்கள்(ஒரு பகுதி)

ம. முனியாண்டி, நன்றியுரை


சிறப்பு விருந்தினர்கள் நூல் பெறுதல்

வெள்ளி, 23 ஆகஸ்ட், 2019

சப்பானியப் பேராசிரியர் சுசுமு ஓனோ நூற்றாண்டு விழாவும் முனைவர் மு. இளங்கோவனின் தொல்லிசையும் கல்லிசையும் நூல் வெளியீட்டு விழாவும்


பேராசிரியர் சுசுமு ஓனோவின் படத்தைத் திறந்துவைத்த முனைவர் பொற்கோ, மயிலம் பொம்மபுர ஆதீனம் சிவஞான பாலய சுவாமிகள், புதுவைத் தமிழ்ச் சங்கத் தலைவர் வி.முத்து,  சப்பான் நாட்டு மாணவி அயகா, மு.இளங்கோவன், முனைவர் இளமதி சானகிராமன்




தொல்லிசையும் கல்லிசையும் நூலைப் புதுவைத் தமிழ்ச் சங்கத் தலைவர் முனைவர் வி. முத்து வெளியிட, பாவலர் வையவன் முதல்படி பெறுதல். அருகில் முனைவர் பொற்கோ, மயிலம் பொம்மபுர ஆதீனம் சிவஞான பாலய சுவாமிகள், முனைவர் இளமதி சானகிராமன் உள்ளிட்டோர்.


சப்பானியப் பேராசிரியர் சுசுமு ஓனோவின் நூற்றாண்டு விழாவும், புதுச்சேரி அரசின் காஞ்சி மாமுனிவர் பட்டமேற்படிப்பு மையப் பேராசிரியர் முனைவர் மு. இளங்கோவன் எழுதிய தொல்லிசையும் கல்லிசையும் நூல் வெளியீட்டு விழாவும் புதுச்சேரி, செயராம் உணவகத்தில் நடைபெற்றன (23.08.2019). மயிலம் பொம்மபுர ஆதீனம் சிவஞான பாலய சுவாமிகள் தலைமையில் நடைபெற்ற விழாவில் புதுவைத் தமிழ்ச் சங்கத் தலைவர் முனைவர் வி. முத்து,  சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, தொல்லிசையும் கல்லிசையும் நூலினை வெளியிட்டு, தமிழ் மொழியின் சிறப்பினையும் இன்றைய நிலையில் உள்ள தமிழின் நிலையினையும் எடுத்துரைத்துப் பேசினார். நூலின் முதல்படியினைத் திருவண்ணாமலைப் பாவலர் வையவனும், தியாகி மு. அப்துல் மஜீதும் பெற்றுக்கொண்டனர்.

பேராசிரியர் இரா. ச. குழந்தைவேலனார் தொல்லிசையும் கல்லிசையும் என்ற நூலை அறிமுகப்படுத்திப் பேசினார். புதுவைப் பல்கலைக்கழகப் புலமுதன்மையர் முனைவர் இளமதிசானகிராமன், மயிலம் தமிழ்க்கல்லூரியின் முதல்வர் ச. திருநாவுக்கரசு, ரோட்டரி சங்கத்தைச் சார்ந்த செ. திருவாசகம் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். புதுவைத் திராவிடர் கழகத் தலைவர் சிவ. வீரமணி, புதுச்சேரித் தன்னுரிமைக் கழகத் தலைவர் தூ. சடகோபன் முன்னிலை வகித்தனர். பேராசிரியர் அரங்க. மு. முருகையன் வரவேற்புரையாற்ற, முனைவர் மு.இளங்கோவன் ஏற்புரை நிகழ்த்தினார்.

 சென்னைப் பல்கலைக்கழகத்தின் முன்னைத் துணைவேந்தர் முனைவர் பொற்கோ கலந்துகொண்டு, பேராசிரியர் சுசுமு ஓனோவின் படத்தினைத் திறந்து வைத்து, சுசுமு ஓனோ தமிழ் கற்ற வரலாற்றையும் அவர் செய்த ஆராய்ச்சிகளையும் எடுத்துரைத்தார். சுசுமு ஓனோவுக்கு ஜப்பான் நாட்டு மக்களும் அரசும் செய்த சிறப்புகளை எடுத்துரைத்தார். தமிழ்மொழிக்கும், ஜப்பான் மொழிக்கும் உள்ள உறவுகளை வெளிப்படுத்துவதில் சுசுமு ஓனோவின் ஆராய்ச்சி எந்த அளவு இருந்தது என்பதை வரலாற்றுக் கண்ணோட்டத்துடன் எடுத்துரைத்தார். முப்பதாண்டுகளுக்கும் மேலாகத் தமிழ் மொழியையும் ஜப்பான் மொழியையும் இணைத்து ஆராய்ச்சி செய்த சுசுமு ஓனோவின் நினைவினைத் தமிழகத்து மக்கள் போற்றவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ஜப்பானிய மாணவி அயகா இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, சுசுமு ஓனோவின் பெருமைகளைப் பேசினார்.

கலைமாமணி கா. இராசமாணிக்கம் இறைவாழ்த்துப் பாடினார். முனைவர் இரா. கோவலன் நன்றியுரை வழங்க, எழுத்தாளர் பூங்குழலி பெருமாள் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். புதுவையிலிருந்தும், தமிழகத்திலிருந்தும் தமிழ் ஆர்வலர்கள் திரளாக நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
தொல்லிசையும் கல்லிசையும் நூலைப் பெற்றுக்கொண்ட சப்பான் நாட்டு மாணவி அயகா, எழுத்தாளர் பூங்குழலி பெருமாள் உள்ளிட்டோர்.


வியாழன், 8 ஆகஸ்ட், 2019

மலேசியாவில் முனைவர் மு. இளங்கோவனின் தொல்லிசையும் கல்லிசையும் நூல் வெளியீட்டு விழா!





முனைவர் மு. இளங்கோவன் எழுதிய தொல்லிசையும் கல்லிசையும் என்ற நூலின் வெளியீட்டு விழா, கோலாலம்பூரில் அமைந்துள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இந்தியக் கலாச்சார மையத்தின் ஆதரவுடன், தமிழ்ப் பெருமக்கள் செறிந்து வாழும் மலேசியத் திருநாட்டில் நடைபெற உள்ளது.

கோலாலம்பூர் - பிரிக்பீல்ட்சில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இந்தியக் கலாச்சார மையத்தில் 10.08.2019 சனிக்கிழமை மாலை 6.30 மணி முதல் 9.30 மணி வரை நடைபெறும் நூல் வெளியீட்டு விழா, இறையருட் கவிஞர்  சீனி நைனா முகமது அவர்கள் எழுதிய தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்குகின்றது. ஆசான் மன்னர் மன்னன் மருதை வரவேற்புரையாற்றவும் மலேசியா, திருமுருகன் திருவாக்கு பீடம் தவத்திரு பாலயோகி சுவாமிகள் அருளுரை வழங்கவும் உள்ளனர்.

மேனாள் துணை அமைச்சர் மாண்புமிகு டான் ஸ்ரீ க. குமரன் தலைமையில் நடைபெறும் விழாவில், மலேசியத் தமிழ்நெறிக் கழகத்தின் தேசியத் தலைவர் இரா. திருமாவளவன் நூலறிமுகம் செய்ய உள்ளார். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இந்தியக் கலாச்சார மையத்தின் இயக்குநர் க. அய்யனார், சபாய் (பகாங்) சட்டமன்ற உறுப்பினர்    தமிழச்சி காமாட்சி,  மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர் பெ.இராசேந்திரன், தமிழ்நெறி வாழ்வியல் இயக்கம் சார்ந்த அருள்முனைவர் ஆகியோர் வாழ்த்துரை வழங்க உள்ளனர். மலேசியாவின் மூத்த தமிழறிஞர் முனைவர் முரசு. நெடுமாறன் வாழ்த்துக் கவிதை வழங்க உள்ளார். தமிழிசைப் பாடல்களை ந. வளர்மதி பாட உள்ளார். முனைவர் மு. இளங்கோவன் ஏற்புரையாற்றவும், ம. முனியாண்டி நன்றியுரை வழங்கவும் உள்ளனர். நிகழ்ச்சியைத் ’தங்கக் குரலோன்’ தங்கமணி தொகுத்து வழங்க உள்ளார்.

தொடர்புக்கு: 
ம. மன்னர் மன்னன் 013 341 7389 
சரசுவதி வேலு 012 318 9968 
ம. முனியாண்டி 016 444 2029