நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //
சென்னை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சென்னை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 2 ஜூன், 2014

சென்னையில் குடந்தை ப.சுந்தரேசனார் நூற்றாண்டு விழாக் காட்சிகள்


முனைவர் ஔவை நடராசன் தலைமையில் திரு. மோகன் குறுவட்டை வெளியிட மு. இளங்கோவன் பெற்றுக்கொள்கின்றார்.

  சென்னை, திருவான்மியூரில் அமைந்துள்ள சரசுவதி வெங்கட்ராமன் பள்ளியில் 01.06.2014 மாலை 4 மணிக்குக் குடந்தை ப.சுந்தரேசனார் நூற்றாண்டு விழாவைப் ப.சு. அவர்களின் மாணவர்கள் மா. வயித்தியலிங்கன், மா. கோடிலிங்கம் ஏற்பாடு செய்து நடத்தினர். 

  முனைவர் ஔவை நடராசன் ஐயா தலைமையில் நடைபெற்ற இந்த நூற்றாண்டு விழாவில் குடந்தை ப.சுந்தரேசனார் பாடல்கள் அடங்கிய குறுவட்டு வெளியிடப்பட்டது. திரு. மோகன் அவர்கள் வெளியிட மு. இளங்கோவன் பெற்றுக்கொண்டார். திரு. மோகன், பேராசிரியர் மா. வயித்தியலிங்கன், திரு. மா. கோடிலிங்கம், பேராசிரியர் செல்வகணபதி, திரு. விசய திருவேங்கடம் உள்ளிட்ட அறிஞர் பெருமக்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றினர். களக்காடு சீதாலெட்சுமி அவர்களின் பண்ணிசை நிகழ்ச்சியும் நடைபெற்றது.


இறைவாழ்த்து திரு. மா. கோடிலிங்கம்


குறுவட்டினைப் பெறும் காட்சி


முனைவர் ஔவை நடராசன் தலைமையுரை


முனைவர் மு.இளங்கோவனின் முயற்சியைப் பாராட்டும் விழாக்குழுவினர்

வெள்ளி, 4 ஜனவரி, 2013

கேப்டன் நியூசு தொலைக்காட்சியில் பெருமழைப்புலவர் பற்றிய உரை...

சென்னை, கேப்டன் நியூசு தொலைக்காட்சியில் பெருமழைப்புலவர் பொ.வே.சோமசுந்தரனார் பற்றி அவர் நினைவுநாளில்(03.01.2013) பகல் 1 மணிமுதல் 1.30 மணி வரை நேரலையில் உரையாட வாய்ப்பு அமைந்தது. திரு.செல்வம் அவர்கள் உடன் உரையாடினார். இரவு 10.30 மணிமுதல் 11 மணிவரை நிகழ்ச்சி மறுஒளிபரப்பானது. தமிழகத்தின் மின் தட்டுப்பாடு காரணமாகப் பலர் நிகழ்ச்சியைப் பார்க்கமுடியவில்லை என்றனர். யுடியூபில் நிகழ்ச்சி இணைக்கப்பட்டுள்ளது. அனைவரும் காணலாம்

இங்குச் சொடுக்கிக் கேட்கலாம்.

இணைப்பு 1

இணைப்பு 2

வியாழன், 11 அக்டோபர், 2012

சென்னையில் தமிழகப் பண்பாட்டுக் கண்காட்சி




சென்னையில் தமிழகப் பண்பாட்டுக் கண்காட்சி  13.10.2012, 14.10.2012 ஆகிய இரண்டு நாள்(காரி, ஞாயிறு) நடைபெறுகின்றது. 13.10.2012 மாலை 4 மணிக்குத் தொடங்கும் கண்காட்சி மறுநாளும் நடைபெறுகின்றது.

உலகம் தோன்றியது முதல் ஆங்கிலேயர் ஆட்சி வரையிலான தமிழக வரலாறு, 64 கலைகள், இசைக்கருவிகள், இலக்கிய நூல்கள், உணவுகள் குறித்த காட்சி விளக்கம் கண்காட்சியில் இடம்பெறும்.

முனைவர் மு.பொன்னவைக்கோ அவர்கள் கண்காட்சியைத் தொடங்கிவைத்துச் சிறப்புரையாற்றுகின்றார். முனைவர் மயில்சாமி அண்ணாதுரை, நீதியரசர் கலியரத்தினம், பேராசிரியர் இ. வேலம்மாள், திரைப்பட இயக்குநர் மணிவண்ணன், திரு. த. வெள்ளையன், திரு. நா. அருணாசலம், மருத்துவர் தெ. வேலாயுதம், திரு. எம். ஆர் செந்தில்நாதன், திரு. இரா. மோகன் ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துரைக்க உள்ளனர்.

இடம்: இராசா திருமண மண்டபம், கச்சேரி சாலை, மயிலாப்பூர், சென்னை, தமிழ்நாடு

நிகழ்ச்சி ஏற்பாடு:
தமிழகப் பெண்கள் செயற்களம், சென்னை
பேசி: 90944 30334

சனி, 8 செப்டம்பர், 2012

தமிழ் இணைய ஆர்வலர்கள் சந்திப்பு, சென்னை


பார்வையாளர்கள்

தமிழ் இணைய ஆர்வலர்களின் சந்திப்பு சென்னையில் 08.09.2012 மாலை 4 மணியளவில் நடைபெற்றது. தமிழகத்தின் பல பகுதிகளைச் சார்ந்த தொழில் நுட்ப ஆர்வலர்கள், வல்லுநர்கள், எழுத்தாளர்கள் கலந்துகொண்டனர். இவர்களுக்குத் தமிழ் இணையம் சார்ந்த பல செய்திகள் அறிமுகம் செய்யப்பட்டன.


தமிழ் இணைய ஆர்வலர்கள் சந்திப்பு- படம்

சனி, 8 ஜனவரி, 2011

சென்னையில் பொங்கல் திருவிழா!



தமிழர்களின் தனிப்பெரும் திருநாளாம் பொங்கல் திருவிழா இன்னும் ஒரு கிழமையில் வர உள்ளது.

ஒவ்வொருவரும் தத்தம் இல்லத்தில் பொங்கலிட்டு மகிழ்வர். இந்த நல்ல நாளை நகரத்தில் இருப்பவர்கள் தாங்கள் வாழ்ந்த சிற்றூர்ப்புற நினைவுகளை மறவாமால்
கொண்டாட விரும்புவது உண்டு. நகரத்தில் வாழும் பலர் சிற்றூருக்கு வந்து பொங்கலைக் கொண்டாடித் திரும்புவதும் உண்டு. சென்னை போன்ற பெரு நகரங்களில்
இருக்கும் தமிழன்பர்கள் முன்கூட்டியே பொங்கல் திருவிழாவை முன்னிட்டுச் சிற்றூர்போன்று குறிப்பிட்ட நகரப்பகுதியில் ஒன்றுகூடிப் பொங்கலிட்டு மகிழும் விழாவைப் பல ஆண்டுகளாக நடத்தி வருவதை அறிவேன்.

இந்த ஆண்டும் அத்தகுப் பெரு விழா சென்னையில் நடைபெறுவதாகவும் வந்து கலந்துகொள்ளும்படியும் நண்பர்கள் வேண்டினர். அவ்வகையில் நாளை(09.01.2011) ஞாயிறு காலை சென்னையில் முகப்பேர் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள பூங்கா ஒன்றில் நடக்கும் பொங்கல் விழாவில் கலந்துகொண்டு தமிழர்களின் பண்பாட்டு நிகழ்வான பொங்கல் பற்றியும், தமிழக நாட்டுப்புறப் பாடல்கள் பற்றியும் சிறப்புரை நிகழ்த்த உள்ளேன். தமிழ் ஆர்வலர்களும், பண்பாட்டுக் காவலர்களும் கலந்துகொண்டு மகிழ்ச்சியூட்டலாம்.மகிழலாம்.

வியாழன், 16 டிசம்பர், 2010

சென்னை உலகத் தமிழாசிரியர் மாநாட்டுப் படங்கள்

சென்னையில் இன்று(16.12.2010)நடைபெற்ற உலகத் தமிழாசிரியர் மாநாட்டில் எடுக்கப்பெற்ற சில படங்களை இணைத்துள்ளேன். கண்டு மகிழலாம்.


உலகத் தமிழ் ஆசிரியர் மாநாட்டில் பங்கேற்ற பேராளர்கள்


இலங்கைப் பேராளர் மாநாட்டு மலரைப் பெற்றுக்கொள்ளும் காட்சி


மாநாடு தொடக்க விழா


சிங்கப்பூர் பேராசிரியர் தலைமையில் ஆய்வரங்கு


கட்டுரை வழங்கும் பேராளர்கள்


மு.இ, சிங்கப்பூர் இராசிக்கண்ணு,கோவலன்,ஈசுவரன்


புலவர் கோமதிநாயகம் அவர்கள் தலைமையில் மு.இளங்கோவன் கட்டுரை வழங்கிய அரங்கம்

புதன், 6 ஜனவரி, 2010

சென்னை ஒய்.எம்.சி.ஏ.பட்டிமன்ற அரங்கில் பேராசிரியர் செல்வா உரை...


இராம.கி,மு.இ,மறைமலை,செல்வா


பேராசிரியர் செல்வா எனப்படும் செ.இரா.செல்வக்குமார் அவர்கள் கனடாவில் மின்னியல்,மின்னணுவியல் துறை,வாட்டர்லூ பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணிபுரிகின்றார்.மின்னஞ்சல் வழியாக நல்ல தொடர்பில் இருப்பவர்.தனித்தமிழில் அறிவியல் கட்டுரைகள் வரைபவர்.விக்கிப்பீடியா பற்றிய பல செய்திகளை இவர் வழியாக அறிந்தேன்.உரிமையுடன் தவறுகளைச் சுட்டிக்காட்டுவதில் முன்னிற்பவர்.புது தில்லியில் நடைபெறும் ஒரு கருத்தரங்கிற்கு வந்தவர்.தம் வருகையை முன்பே எனக்குத் தெரிவித்து 05.01.2010 இல் தாம் சென்னையில் உரையாற்ற உள்ளதையும் குறிப்பிட்டிருருந்தார்.பேராசிரியர் இ.மறைமலை அவர்களின் ஏற்பாட்டில் இந்தப் பொழிவுக்கு ஏற்பாடாகியிருந்தது.பேராசிரியர் மறைமலை அவர்களும் என்னை அழைத்திருந்தார்.

பார்வையாளனாக ஒய்.எம்.சி.ஏ.அரங்கில் இன்று நுழையும்பொழுது மாலை 6.45 மணி.பேராசிரியர் இ.மறைமலை அவர்கள் நான் செல்வதற்கு முன்பே வரவேற்புரையாற்றியிருந்தார்.தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தின் இயக்குநர் திரு.நக்கீரன் ஐயா அவர்கள் தலைமையுரையாற்றினார்.அவர்களைத் தொடர்ந்து பேராசிரியர் செல்வா அவர்கள் தமிழ் வளர்ச்சிக்கு இணையம் வழியாகத் தமிழர்கள் கூட்டுழைப்பில் ஈடுபட்டுப் பணிகளாற்றவேண்டும் என்றார்.

ஆங்கிலமொழி அண்மைக்காலத்தில்தான் மிகுந்த வளர்ச்சி பெற்றது.இன்றும் பிற மொழியின் சிறந்த நூல்கள்,இதழ்கள் மொழிபெயர்க்கப்பட்டுவருகின்றன.அதுபோல் தமிழில் பிறமொழி நூல்கள், இதழ்கள், படைப்புகள் மொழிபெயர்க்கப்பபடவேண்டும் என்றார்.விக்கிப்பீடியா வளர்ச்சிக்கு உழைத்தவர்கள் பற்றி எடுத்துரைத்தார்.ஆங்கில மொழி வளர்சிக்குப் பலர் பாடுபட்டுள்ளனர். இலத்தீன் மொழியில் இருந்த பைபிளை ஆங்கிலத்திற்குப் பெயர்த்தவர்கள் பலர் படுகொலைக்கு உள்ளாகியுள்ளனர்.ஆங்கிலமும் தொடக்கத்தில் வளர்ச்சிநிலைகளில் பல இடையூறுகளைச் சந்தித்து வந்துள்ளது என்றார்.இன்று அனைவரின் கூட்டுழைப்பால் ஆங்கிலம் மிகச்சிறந்த வளர்ச்சிநிலை கண்டுள்ளது.எனவே தமிழர்களும் கூட்டுழைப்பால் தமிழுக்குப் பணிசெய்ய முன்வரவேண்டும் என்று உரையாற்றினார்.

தமிழ் இணையப்பல்கலைக்கழகப் பணிகளை ஐயா நக்கீரனார் எடுத்துரைக்கும்பொழுது அதில் தமிழ் எழுத்துச்சீர்திருத்தம் பற்றிய செய்திகள் இடம்பெற்றிருப்பது தவறு என்று இ.திருவள்ளுவனார் குறிப்பிட்டுத் தம் எதிர்ப்பைப் பதிவு செய்தார்.இயக்குநர் அவர்கள் அது ஒரு கருத்து என்ற அடிப்படையில் இடம்பெற்றுள்ளது என்றும் மாற்றுக்கருத்து இருப்பின் மின்னஞ்சலில் தெரிவிக்கலாம் என்றும் குறிப்பிட்டார்.நானும் எழுத்துச்சீர்திருத்தம் தேவையற்றது என்று குறிப்பிட்டுத்,தமிழறிஞர்கள் பலரும் எழுத்துச்சீர்திருத்த முயற்சியைக் கண்டித்து வருகையில் கருத்துவேறுபாடுகளுக்கு இடம் அளிக்கும் எழுத்துச்சீர்திருத்தம் பற்றிய செய்திகள் தமிழ் இணையப் பல்கலைக்கழகத் தளத்தில் இடம்பெறுவது தவறு என்றும்,தமிழ் இணையப் பல்கலைக்கழகம் காலம் தாழ்த்தாமல் உடனடியாகச் செய்ய வேண்டியது ஒருங்குகுறிக்குப் பாடங்களைப் - படைப்புகளை மாற்ற வேண்டும் என்றும் இயக்குநரிடம் உரிமையுடன் என் கோரிக்கையை வைத்தேன்.

அவர்கள் 16 பிட் இடம் கிடைத்த பிறகு ஒருங்குகுறியில் ஏறும் என்று குறிப்பிட்டார்கள்.8 பிட் அளவுள்ள இடத்திலேயே மிகச்சிறப்பாக ஒருங்குகுறியைப் பயன்படுத்தி தகவல்களைப் பரிமாறிக்கொண்டிருப்பதால் இனியும் 16 பிட் என்ற காரணம் காட்டி ஒத்திப்போடவேண்டாம் என்று வேண்டிக்கொண்டேன்(2003 இல் தமிழ் ஒருங்குகுறி நடைமுறைக்கு வந்துவிட்டது.உலகம் முழுவதும் ஏழாண்டுகளாகத் தமிழ் ஒருங்குகுறியில் தமிழர்கள் செய்திகளைப் பரிமாறிக் கொண்டிருக்கும்பொழுது, தினமலர்,தினமணி உள்ளிட்ட நாளேடுகள் எல்லாம் ஒருங்குகுறிக்கு வந்துவிட்ட பிறகு ஏன் இணையப் பல்கலைக்கழகம் தமிழ் ஒருங்குகுறிக்கு வர மறுக்கிறது என்பது புதிராக உள்ளது.சில அன்பர்கள் தமிழ் இணையப் பல்கலைக்கழகப் பாடத்திட்டங்கள் ஒருங்குகுறிக்கு மாறிவிட்டது என்ற வகையில் எழுதி வருகின்றனர்.அவ்வாறு மாறியதன் பகுதியைத் தொடுப்பாக எனக்கு வழங்கியுதவ வேண்டுகிறேன்).

எப்படியோ பேராசிரியர் செல்வா அவர்களின் பேச்சைக் கேட்கச்சென்ற எனக்கு தமிழ் எழுத்துச் சீர்திருத்தம்,ஒருங்குகுறி பற்றிய பதிவை உரியவர் முன்பாகப் பதிவு செய்ய ஒரு வாய்ப்பு கிடைத்தமைக்கு மகிழ்கிறேன்.

ஐயா இராம.கி.அவர்களும் வந்திருந்தார்கள்.அனைவரிடமும் விடைபெற்றுப் புதுச்சேரி வந்து சேர்ந்தபொழுது நள்ளிரவு இரண்டுமணி என்க.


நக்கீரன்,இராம.கி,மறைமலை உட்பட நண்பர்கள்



நான் பேராசிரியர் செல்வாவுடன்

புதன், 14 ஜனவரி, 2009

சென்னைப் புத்தகக் கண்காட்சிக்குச் சென்றுவந்தேன்...


முகப்பு

சென்னை அடையாற்றில் 12.01.2009 அன்று பகலுணவு முடித்துப் பச்சையப்பன் கல்லூரி எதிரில் இருந்த புத்தகக் கண்காட்சியை அடையும்பொழுது பிற்பகல் 2.30 மணியிருக்கும்.

புத்தகக் கண்காட்சியில் அரங்குகள் சிறப்பாக அமைக்கப்படிருந்தன.முந்தைய காட்சிகளில் இருந்து இது மேம்பட்ட வளர்ச்சியைக் கண்டுள்ளது.தம்மைத் தாமே விளம்பரப்படுத்திக் கொண்ட கவிப்பேரரசர்கள் கவிவேந்தர்கள் வித்தகக்கவிஞர்கள் உருவம்தாங்கிய விளம்பரப்பலகைகள் நம் கண்ணில் முதலில் தெரிந்தன. பல்வேறு நிறுவனம் சார்ந்த தோரணவாயில்கள் நம்மை வரவேற்றன.

நுழைவுச்சீட்டு வாங்கி உள்ளே நுழைந்தோம்.உடன் வந்தவர்களிடமிருந்து என் விடுதலையை வாங்கிக்கொண்டு தேவைக்கேற்பத் தொலைபேசியில் அழ்த்துக்கொள்ளலாம் என்ற பின்குறிப்புடன் அவரவர் சுவைக்கேற்பப் புத்தக அரங்குகளில் நுழைந்து வெளியேறத் தொடங்கினோம்.

முதலில் ஓவியர் புகழேந்தி நூல்களைக் கொண்டிருக்கும் தோழமை அரங்கில் நுழைந்து புதிய நூல்களைப் பார்வையிட்டேன்.பின்னர் என் பேராசிரியர் க.ப.அறவாணன் அவர்களின் தமிழ்க்கோட்டம் அரங்கிற்குச் சென்றேன்.

புதுவைப் பேராசிரியர் முனைவர் மதியழகன் அவர்களைக் கண்டேன்.பின்னர் பேராசிரியர் தாமசு இலேமான்(செர்மனி)அவர்கள் பல அரங்குகளில் நுழைந்து களைப்புடன் காணப்பட்டார். அவரையும் கண்டு வணங்கினேன்.உரையாடினேன்.அருகில் இருந்த பேராசிரியர் கல்பனா அவர்களுக்கு அறிமுகம் செய்துவைத்தேன்.மீண்டும் எனக்கு விருப்பமான அரங்குகளுக்கு நுழைந்து மீண்டு வந்தேன்.

கிழக்குப் பதிப்பக அரங்கு, காலச்சுவடு அரங்கு,உயிர்மை அரங்கு,புதுநூற்றாண்டுப் புத்தக நிறுவன அரங்கு உள்ளிட்டவை சிறப்பாக இருந்தன.உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் பணிபுரியும் மேலாளர் திரு. வீரபாகு அவர்களின் அமுத நிலையத்தில் நண்பர் பெரியநாடார்
இருந்தார்.நண்பர் கண்ணன் அவர்களும் இருந்தார்.எல்லோரும் நாங்கள் பத்தாண்டுகளுக்கு முன் உ.த.நியில் பணிபுரிந்தவர்கள்.உரையாடி மகிழ்ந்தேன்.புதுநூல்கள் விவரம் அறிந்தேன்.

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் பேராசிரியர் பா.மதிவாணன் அவர்களைக் கண்டு அவர்களின் தந்தையார் பாவலரேறு.ச.பாலசுந்தரனார் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டேன்.

மணிவாசகர் பதிப்பகம் சென்று பார்வையிட்டேன்.மெய்யப்பனார் படமாக இருந்தார்.அவர் நினைவுகள் வந்து உள்ளத்தை உருக்கின.தமிழ் நூல்களை வெளியிட்டுத் தமிழ்ப்பணி செய்த அப்பெருமகனார் நினைவுடன் அரங்கிலிருந்து வெளியே வந்தேன்.

சைவசித்தாந்த நூற்பதிப்புக்கழக அரங்கு எளிமையாகக் காட்சியளித்தது.மூன்றாண்டுகளுக்கு முன் சங்க இலக்கியத்திற்கு நூல்வெளியிட முன்விலைத்திட்டத்தில் பதிவு செய்திருந்தேன். இன்னும் நூல்கள் வந்தபாடில்லை என்ற புலம்பல்களைக் கூறியும் பல மடல்கள் இட்டும் விடையில்லை என்றும் நூல்களை உடன் அனுப்பிவைக்கும்படியும் வேண்டினேன்.

பின்னர்த் தமிழ்ஓசை இதழின் அரங்கு,பெண்ணே நீ அரங்கு உள்ளிட்டவற்றையும் கண்டு பேசினேன்.

தமிழ்மையம் அரங்கில் திரு.தளபதி என்னும் தோழரைக் கண்டு அறிமுகம் ஆனேன். அருட்தந்தையார் கசுபார் அவர்களைப் பற்றி உரையாடும்பொழுது ஒத்த கருத்துடையவர்களாக அவர்கள் தெரிந்ததால் மகிழ்ச்சியுடன் உரையாடினோம்.அதனை விடுத்து அடுத்து நகர்ந்ததும் தோழர் வைகறை அவர்களின் பொன்னி நூல் வெளியீட்டக அரங்கு தெரிந்தது.தோழர் வைகறை அவர்களுடன் அண்ணன் பழ.அதியமான்(வானொலி நிலைய நிகழ்ச்சி அமைப்பாளர்),பேராசிரியர் த.கனகசபை உள்ளிட்ட அன்பர்கள் இருந்தனர்.அவர்களிடம் உரையாடி மகிழ்ந்தேன். நூல் விவரம் குறித்து அறிந்தேன்.என் தமிழ் இணையப்பணி பற்றி உரையாடினோம்.

அடுத்து நகர்ந்ததும் நண்பர் திரு.ப.திருநாவுக்கரசு அவர்கள்(தாரமைச்செல்விப் பதிப்பகம்) எதிர்ப்பட்டார்.அவருடன் நீண்டநாள் நட்பு.நெடுநாழிகை உரையாடினேன்.என் அயலகத் தமிழறிஞர்கள் தமிழ்ஓசைத் தொடரைத் தொடர்ந்து படிப்பதாக உரைத்து அந்தத் தொடரில் இடம்பெறவேண்டிய பிற அறிஞர்களைப் பற்றியும் எடுத்துரைத்தார்.ப.சுந்தரேசனார் பாடல் தொகுப்பு முயற்சி,தமிழ் இணையப்பணிகள்,நூல் அச்சிடல் பற்றியெல்லாம் எங்கள் பேச்சு நீண்டது.அவரின் ஆவணப்படம்,குறும்படம் பயிற்சிப்பட்டறைப் பணிகளைப் பாராட்டி விடைபெற்றேன்.

மீண்டும் உலகத் தமிழிராய்ச்சி நிறவன அரங்கிற்கு வந்து நண்பர் திரு.இராசா அவர்களைக் கண்டு உரையாடி அறிஞர் ச.வே.சு அவர்களின் தமிழ்ப்பணிகளைப் பாராட்டி மீண்டேன். மீண்டும் தொலைபேசியில் பேசி நாங்கள் ஒன்று கூடித் திரும்பத் திட்டமிட்டோம்.இரவு 8.30 மணியளவில் அரங்கிலிருந்து வெளியே வந்தோம்.

பேராசிரியர் கல்பனா அவர்கள் கண்காட்சியிலுருந்த பாதி நூல்களை வாங்கி வந்துவிட்டார்கள். அவர்களுக்கு உதவிக்கு இரு இளைஞர்கள் வந்திருந்தனர்.பேராசிரியர் அம்மா அவர்கள் வாங்கும் நூல்கள் உடனுக்குடன் மகிழ்வுந்துக்கு வந்தன.மகிழ்வுந்து அருகே வந்து பார்த்த பொழுது உட்கார இடம் இல்லாதபடி நூல்கள் இருந்தன. இருக்கும் இடங்களில் நூல்களைத் திணித்துப் புறப்பட்டோம்.

அப்பொழுது பேராசிரியர் அவர்களின் உறவினர் வீட்டுக்குச் சென்று இரவு உணவு உண்டு புறப்படத் திட்டமிட்டார்கள்.பகலுணவுக்கே வரவில்லை என்று அவர்களின் உறவினர்கள் வருந்தி, அன்பால் சண்டையிட்டனர்.இரவு ஒன்பது மணிக்கு அரும்பாக்கத்தில் இருந்த அவர்களின் உறவினர் வீட்டுக்கு வந்து சேர்ந்தோம்.பேராசிரியர் கல்பனா அம்மா அவர்களுக்கு உதவியாக அரங்கிற்கு வந்து உதவிய அந்த இளைஞரின் வீடுதான் அவர்களின் உறவினர் வீடு எனப் பின்பு தெரிந்துகொண்டேன்.உறவினர் என்றதும் எந்த வகையில் உறவினர் அவர்கள் என வினவினேன்.பிறகுதான் தெரிந்தது.

தஞ்சாவூர் அருகில் பேராசிரியரின் தந்தையார் ஊர் என்பதும் அந்த ஊருக்கு தொழில் நிமித்தம் வந்தவர்கள்தான் உறவினர்களாக இன்று பழகுகின்றனர் என்பதும் புரிந்துகொண்டேன்.இரு குடும்பமும் சாதியால் வேறுபட்டன என்பதும் மதுரைக்கு அருகிலிருந்து பிழைக்க வந்த இடத்தில் பழகி ஒருவருக்கொருவர் உதவிக்கொண்டு பிரிக் கமுடியாதபடி அன்பால் கட்டுண்டு
கிடக்கின்றனர் என்பதும் அறிந்து வியந்துபோனேன்.

ஏனெனில் எங்ளுக்கு உறவாக வாய்த்த பலரின் கசாப்பான உறவுப் பட்டறிவுகள் என்னை இந்த மகிழ்ச்சிக்கு ஆற்றுப்படுத்தின.ஆசையோடு உழுது பயிர்செய்ய நினைத்திருப்பேன்.அவர்கள் ஏர்பூட்டி விதைத்து அறுவடைசெய்துகொள்வார்கள்.வாரம்கொடுக்கமாட்டார்கள் "உறவுக்
கிலுகிலுப்பைக்"காட்டி ஏமாற்றுவார்கள்.இருக்கும் நிலத்தை விலைக்குக் கேட்டுத் தராததால் சினம்கொண்டு 'சாவு வாழ்வு இல்லை' என்பார்கள்.பணத்துக்காக எங்கள் நிலத்துப் பக்கத்து நிலங்களைப் பிறருக்கு விற்று எங்களுக்கு எதிரானவர்களைக் கொண்டுவைத்து அடிக்கடி இடையூறு கொடுக்கும் அவர்களைக் கண்டு மகிழ்ச்சியடைவார்கள்.இப்படியான எங்கள் உறவுகளுக்கு நடுவே இந்த உறவு எட்டாவது வியப்பாக எனக்கு இருந்தது.

அரும்பாக்கம் வீட்டுக்குச் சென்றதும் அகவை முதிர்ந்த அம்மா எங்களை அன்புடம் வரவேற்றோர்.உணவு ஆயத்தம்செய்து தந்தார்கள்.அனைவரும் உண்டு மகிழ்ந்தோம.

மதுரைத் தமிழில் எங்களை அன்பால் நனைத்தார்கள்.அந்த அம்மாவின் கடைசி மகன்தான் எங்களைப் புத்தக் கண்காட்சிக்கு வந்து அழைத்துவந்த இளைஞர் என்பதும் புரிந்தது. அந்த இளைஞர் பெயர் சுதாகரன்.நிதி நிறுவனம் நடத்தி நல்ல வசதியாகவே உள்ளார்.அவரும் பத்தாயிரம் உருவா அளவுக்குப் புத்தகம் வாங்கினார்.அம்மா ஏசுவார்கள் எனப் புத்தகத்தைத் தெரியாமல் கொண்டுபோய் வீட்டில் சேர்த்தார்.கவிஞர் பழனிபாரதியின் கவிதைகளை மெச்சிப் பேசினார்.பா.விசய் அவர்கள் அரசியலில் ஈடுப்பட்டடுக் கவிதைத்துறையில் கீழிறங்கி வருவதாக அந்த அன்பர் குறிப்பிட்டார்.

அவர் நிதி நிறுவனம் நடத்துவதால் கரடுமுரடாக இருப்பார் என நினைத்து ஏமாந்தேன். அவருக்குள் ஒரு கலையுணர்வு உண்டு.அறிவுத் தாகம் உண்டு.நல்லொழுக்கம் உண்டு. புதியதாகச் சிந்திக்கும் ஆற்றல் உண்டு.இறை நம்பிக்கை அவர் உள்ளத்தில் இழை ஓடுவதை உணர்ந்தேன்.பிறருக்கு உதவும் இயல்பும் உண்டு.அவர் பல ஆண்டுகளாகப் படித்த இதழ்களின் முதன்மைப் பகுதிகளை வெட்டி ஒழுங்குசெய்து நூற்கட்டு செய்து வைத்திருந்தார். அதனைக் கண்டதும் அவரைப் பற்றிய என் பார்வை உயர்வாக இருந்தது.இவர் படித்திருந்தால் மிகச் சிறந்த நிலைக்கு வந்திருக்கமுடியுமே என நினைத்தேன்.

பணத்தொழிலில் இருப்பதால் குழப்பமான சூழலில் படிப்பதால் மனமாற்றம் பெறுவதாக உரைத்தார். அவர் காட்டிய அன்பும் அவரின் எண்ணமும் எனக்குப் புதிய பாடங்களைத் தந்தன. புத்தகக் கண்காட்சிக்குச் சென்று புத்தகங்களை வாங்காமல் திரும்பிய நான் சுதாகரன் என்ற புத்தகத்தைப் படித்துப் புதிய புதிய அறிவைப் பெற்றேன்.இப்பொழுது நினைத்தேன். முதலிலேயே சுதாகரன் வீட்டிற்கு வந்திருக்கலாம் எனத் தோன்றியது.

அவர்கள் அம்மா கையசைத்து அன்பொழுக வழியனுப்பியபொழுது இரவு பத்துமணியிருக்கும். புதுச்சேரி நோக்கி எங்கள் மகிழ்வுந்து விரைவாக முன்னேறியது.எனக்குச் சுதாகரனின் முகம் புதுப்புதுப் புத்தகங்களாக விரிந்து அறிவு தந்தது...


மக்கள் தொலைக்காட்சியின் வரவேற்பு வளைவு


தென்திசை அரங்கு


மலேசியத் தமிழ் நூல்கள் இடம்பெற்ற அரங்கு


குமரன் புத்தக அரங்கு(இலங்கை நூல்கள்)


அமுத நிலைய அரங்கு


தமிழ் ஓசை அரங்கு


தென்திசையில் தோழர் தளபதி


பொன்னி அரங்கில் தோழர் வைகறை உள்ளிட்டவர்கள்

வெள்ளி, 12 டிசம்பர், 2008

எட்டாம் உலகத் தமிழாசிரியர் மாநாடு - சென்னை(நிகழ்ச்சி விவரம்)

எட்டாம் உலகத் தமிழாசிரியர் மாநாடு சென்னை லீ ராயல் மெரிடியன் உணவகத்தில் 13,14-12.2008 இரு நாள் நடைபெறுகிறது.

13.12.2008 காலை 10.35 மணிக்குத் தொடங்கும் மாநாட்டில் தமிழ்நாட்டு அரசின் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு தங்கம் தென்னரசு அவர்கள் தொடங்கி வைத்துச் சிறப்புரையாற்றுகிறார். மாநாட்டு மலரைப் பிற்பட்டோர் நலத்துறை அமைச்சர் மாண்புமிகு இராமச்சந்திரனார் அவர்கள் வெளியிடுகின்றார்.

மாநாட்டு வரவேற்புரை திரு சு.ஈசுவரன் அவர்கள்.தலைமையுரை திரு.சொ.சகாதேவன் அவர்கள்.மாநாட்டு அறிக்கை திரு.சா.அன்பழகன் அவர்கள்.மாநாட்டு நோக்கங்களை முனைவர் இரா.இளவரசு,வா.மு.சேதுராமன் விளக்கிப் பேசுவார்கள்

மாநாட்டு அமர்வுகளில் முனவர் மா.நன்னன்,எ.சகாதேவன்(மலேசியா),முனைவர் மலையமான்,டி.குணசேகரன்(மலேசியா)முனைவர் ச.முத்துக்குமரன்,முனைவர் சீத்தாலட்சுமி(சிங்கப்பூர்),க.சிவகுருநாதப் பிள்ளை(இலண்டன்),முனைவர் செல்வரஞ்சிதம் சிவசுப்பிரமணியம்(இலங்கை),விசயராணி(சிங்கப்பூர்),சித்திரன் குருசாமி(சிங்கப்பூர்)ஆறு.அஞ்சப்பன்(சிங்கப்பூர்),பா.தியாகராசன்(சிங்கப்பூர்),இ.கோமதிநாயகம்,பூபதி(சிங்கப்பூர்) உள்ளிட்டோர் கருத்தரங்க அமர்வுகளில் தலைமை தாங்குகின்றனர்.

முனைவர் சரளா இராசகோபாலன்,முனைவர் மலையமான்,புலவர் தி.நா.அறிவொளி, முனைவர் து.சேகர்,அருள்செல்வன் இராசு(மலேசியா),அ.கவிதா,முனைவர் கி.மைதிலி, மன்னர்மன்னன்(மலேசியா),முனைவர் வேல்முருகன்(சிங்கப்பூர்),பார்வதி கைலாசம், முனைவர் குமரன்(மலேசியா) இராசப்பன் முத்துலட்சுமி சிங்கப்பூர்),முனைவர் மு.
இளங்கோவன்(புதுச்சேரி), முருகையன்,தமிழகன்,கல்பனா செல்வராசு, கி.சிற்றம்பலம், முனைவர் ப.அனுராதா,முனைவர் சிவகுமாரன்(சிங்கப்பூர்),சா.கல்பனா(தே.கழகம்) உள்ளிட்ட கட்டுரையாளர்கள் கட்டுரை வழங்குகின்றனர்.

14.12.2008 ஞாயிறு காலை 10 மணிக்கு ஆசிரியம் என்னும் நூல் வெளியீட்டு விழா நடைபெறுகிறது.ஆ.சோதிநாதன்(மலேசியா) வெளியிட,சி.சாமிக்கண்ணு(சிங்கப்பூர்)
முதற்படி பெறுகிறார்.முனைவர் இராசேந்திரன்(மலேசியா)ஏற்புரை.

14.12.08 ஞாயிறு பிற்பகல் 4 மணிக்கு நிறைவு விழா.
மாநாட்டு நிறைவுரையும் விருது வழங்கலும்
முனைவர் கா.மாரியப்பன்(மேனாள் பள்ளிக்கல்வி இயக்குநர்).
(பதிவு செய்தவர்கள் மட்டும் கலந்துகொள்ளும் நிகழ்வாக இது இருக்கும்)