நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வெள்ளி, 17 டிசம்பர், 2010

உலகத் தமிழாசிரியர் மாநாட்டில் தமிழ் இணையம் அறிமுகம்

இன்று(17.12.2010) சென்னையில் நடந்த உலகத் தமிழாசிரியர் மாநாட்டில் தமிழ் இணையம் அறிமுகம் செய்யும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. காலை 9 மணி முதல் 9.30 மணி வரை என் பங்களிப்பு இருந்தது. சிங்கப்பூர், இலங்கை போன்ற அயல்நாட்டிலிருந்தும், தமிழகத்தின் அனைத்து மாவட்டத்திலிருந்தும் வந்திருந்த ஆசிரியர்கள், தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் அறியும் வண்ணம் தமிழ் இணைய வளர்ச்சியைக் காட்சி விளக்கத்துடன் எடுத்துக்காட்டினேன்.

தமிழகத்தின் அனைத்துப் பள்ளிகளிலும் பயன்படுத்தாமல் உள்ள கணினி இனிப் பயன்பாட்டுக்கு வரும் என்ற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டது. ஆர்வமாக அனைவரும் முன்வந்து உரையாடிக் கூடுதல் செய்திகளைப் பெற்றுச்சென்றனர்.

தருமபுரி, தூத்துக்குடி,பழனி, ஆர்க்காடு,கிருட்டினகிரி,விழுப்புரம்,திண்டிவனம், மதுராந்தகம், செஞ்சி, கன்னியாகுமரி,நெல்லை,மதுரை சார்ந்த தமிழகத்தின் பெரும்பான்மையான மாவட்டங்களில் இனித் தொடர்ந்து என்னை அழைத்துத் தமிழ் இணையப் பயன்பாடுகளை அறிந்துகொள்வதாகக் குறிப்பிட்டுச்சென்றர்.

இந்த மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றியதால் தமிழ் இணையப் பரவலாக்கம் தமிழக அளவில் அறிமுகம் ஆகியுள்ளது. இந்த வாய்ப்பைக் காலத் தேவையறிந்து, உணர்ந்து பேராளர்கள் அனைவரும் நேற்றே மாநாட்டு ஒருங்கிணைப்பாளரிடம் வேண்டுகோள் விடுத்துக் கூடுதல் நிகழ்ச்சியாக இதனை அமைத்தனர். இந்த வகையில் உதவிய மாநாட்டு ஒருங்கிணைப்பாளர் திரு.ஈசுவரன் ஐயா உள்ளிட்ட மாநாட்டுக் குழுவினர்க்கு என் நன்றி.

1 கருத்து:

vellaichamy சொன்னது…

உலகத்தமிழாசிரியர் மாநாட்டில் தங்களின் உரையைக் கேட்கும் வாய்ப்பும், சந்திக்கும் வாய்ப்பும் கிடைத்தது.தமிழில் இணையம் என்ற தங்களின் முயற்சி போற்றுதலுக்கு உரியதாகும்.தங்களிடம் நான் இணையம் பற்றிக் கற்றுக்கொள்ள விரும்புகிறேன்.