நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

ஞாயிறு, 21 டிசம்பர், 2008

இலங்கைப் பேராசிரியர்கள் முனைவர் அ.சண்முகதாசு - முனைவர் மனோன்மணி


பேராசிரியர் அ.சண்முகதாசு


முனைவர் மனோன்மணி சண்முகதாசு

தமிழாய்வு சார்ந்த கருத்தரங்குகள் எந்தப் பொருளில் எங்கு நடந்தாலும் கலந்துகொண்டு கட்டுரை படித்துத் தம் ஆய்வுத்திறமையால் அனைவரது உள்ளத்திலும் இடம்பிடிக்கும் இலக்கிய இணையர்கள் பேராசிரியர் அ.சண்முகதாசு அவர்களும் முனைவர் மனோன்மணி சண்முகதாசு அவர்களும் ஆவார்கள். இவர்கள் இலங்கையை மையமிட்டு வாழ்ந்தாலும் உலக அளவில் அனைவருக்கும் அறிமுகமானவர்கள் ஆவர். இவ்விரு பெருமக்களின் தமிழ்ப்பணிகள் குறிப்பிடத்தக்க பெருமைக்கு உரியனவாகும்.

சங்க இலக்கியம், இலக்கணம், மொழியியல், நாட்டுப்புறவியல், இலக்கியத் திறனாய்வு, பக்தி இலக்கியம், வரலாறு, கல்வெட்டு எனத் தமிழின் அனைத்துப் பரிமாணங்களையும் உள்ளடக்கிய ஆய்வுப் புலங்களில் தடம்பதித்து ஆய்வுலகில் தமக்கென ஓர் இடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ள இவர்களின் வாழ்க்கையையும் பணிகளையும் இங்கு நோக்குவோம்.

முனைவர் அ. சண்முகதாசு அவர்கள் இலங்கையில் உள்ள திருகோணமலையில் 1940 ஆம் ஆண்டு சனவரி மாதம் இரண்டாம்நாள் பிறந்தவர். பெற்றோர் திருவாளர்கள் அருணாசலம் - முத்தம்மாள் ஆவர். இளமைக் கல்வியை திருகோணமலையில் உள்ள பிரான்சிசு சேவியர் பள்ளியில் பயின்றவர்(1945-51). பின்னர் வந்தாறுமூலையில்(செங்கலடி) உள்ள அரசு கல்லூரியில் பயன்றவர்(1952-57). பின்னர் சிவானந்த வித்தியாலயத்தில் பயின்றவர்(1957-59).

1963 இல் இலங்கைப் பல்கலைக்கழகத்தில் சிறப்புத் தமிழை இளங்கலையில் பயின்றவர். இதில் வரலாறு, சமற்கிருதம் உள்ளிட்ட பாடங்களையும் பயின்றார். முதல் வகுப்பில் தேறினார். அதன் பிறகு இசுகாட்லாந்தில் உள்ள எடின்பரோ பல்கலைக்கழகத்தில் ( University of Edinburgh, Scotland, United Kingdom.) ஓராண்டு மொழியியல் பயின்றார்(1969 – 1970). 1970-72 ஆம் ஆண்டில் மொழியியல் துறையில் எடின்பரோ பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். "இலங்கைப் பேச்சுத் தமிழின் வினைவடிவங்களின் ஒலியன்கள்"(Phonology of the Verbal Forms in Colloquial Ceylon Tamil) என்பது இவர் தம் முனைவர் பட்ட ஆய்வுத் தலைப்பாகும்.

இதற்கிடையில் சண்முகதாசு அவர்கள் 1963 இல் இலங்கைப் பல்கலைக்கழகத்தில் தற்காலிக உரையாளராகப் பணிபுரிந்தார். பின்னர் அதே நிறுவனத்தில் துணைப் பேராசிரியராகவும் பணிபுரிந்தார். 1965-68 இல் வட்டுக்கோட்டையில் உள்ள யாழ்ப்பாணக் கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராகப் பணிபுரிந்தார். 1975 முதல் யாழ்ப்பாண வளாகத்தில் இருந்த இலங்கைப் பல்கலைக்கழகத்தின் கல்லூரியில் தமிழ்ப்பேராசிரியராகப் பணிபுரிந்தார். 1976 முதல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தம் தமிழ்ப்பணியைத் தொடர்ந்தார்.

1982 இல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மொழித்துறைத் தலைவர் பொறுப்பு வகித்தார். அடுத்த ஆண்டில் நைசீரியாவில் உள்ள இபாதன் பல்கலைக்கழகத்தில் மொழியியல் மற்றும் நைசீரிய மொழியியல் துறையில் வருகைதரு பேராசிரியராகப் பணிபுரிந்தார்(University of Ibadan). 1983 இல் சப்பான் டோக்கியோவில் உள்ள காகூசன் பல்கலைக் கழகத்தில் (Gakushuin University)வருகைதரு பேராசிரியராக பணிபுரிந்தார்.

1998 இல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர்(பொறுப்பு) பணியையும் கவனித்தவர். 2007 வரை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பல நிருவாகப் பொறுப்புகளையும் கவனித்தவர். 2008 முதல் வருகைதரு பேராசிரியராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பணிபுரிகின்றார்.

சண்முகதாசு அவர்கள் படிக்கும் காலத்திலும் பணிபுரிந்த காலத்திலும் பல விருதுகளை, பரிசுகளை வாங்கிப் பெருமை சேர்த்தவர். 1963 இல் ஆறுமுக நாவலர் விருதினை இலங்கைப் பல்கலைக் கழகத்தில் முதல் மாணவராகத் தேறிப் பெற்றவர். 1987 இல் கொழும்புத் தமிழ்ச்சங்கத்தில் தமிழ்மொழி இலக்கண இயல்புகள் என்ற தம் நூலுக்காகச் சபாரத்தினம் நினைவுப்பரிசு பெற்றவர். யாழ்ப்பாணப் பல்கல்லைகழகத்தில் இருபத்தைந்தாண்டுகள் தொடர்ந்து பணிபுரிந்தமைக்கு இரண்டு முறை பணப் பரிசு பெற்றவர். யுனெசுகோ விருது ஒன்றும், இலங்கை அரசின் சாகித்ய ரத்னா விருது ஒன்றும் பெற்ற பெருமைக்கு உரியவர்.

இலங்கையில் உள்ள பல்வேறு கல்வி நிறுவனங்களில் கல்விக்குழு, பாடத்திட்டக்குழு, மதிப்பீட்டுக்குழு எனப் பல நிலைகளில் பணிபுரிந்தவர். அயல்நாட்டுப் பல்கலைக்கழகங்கள் அனுப்பும் முனைவர் பட்ட ஆய்வேடுகளை மதிப்பிடும் தேர்வாளராகப் பணிபுரிந்த பெருமைக்கு உரியவர். சிந்தனை என்னும் இதழின் தலைமைப் பதிப்பாசிரியராகப் பணிபுரிந்தவர்.

அக இலக்கியமும் அறிவியலும் என்னும் தமிழ்த்துறை வெளியிட்ட நூலின் பதிப்பாசிரியராக இருந்து கடமையாற்றியவர். உலக அளவில் நடைபெற்ற பல உலகத் தமிழ்மாநாடுகளைக் கண்ட பெருமைக்கு உரியவர். அவ்வகையில் சென்னை, பாரிசு, மலேசியா, சிங்கப்பூர், தமிழகம் மொரீசியசு உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்று கட்டுரை படைத்த பெருமைக்கு உரியவர்.பல நாடுகள் சுற்றி வந்தாலும் தமிழ் அரங்குகளில் தமிழர் ஆடையான வேட்டியணிந்து அமர்ந்து வீற்றிருப்பது இவர்தம் தமிழ் உணர்வுகாட்டும் சான்றாகும். இலங்கை நாட்டுப்புறப்பாடல்களைப் பாடிக்காட்டி விளக்கும் ஆற்றல்பெற்றவர்.

முனைவர் மனோன்மணி

எளிய தோற்றமும் பேரறிவும் கொண்டு அன்பு ததும்பும் சொல்லாடல்களால் நம்மை ஈர்ப்பவர் மனோன்மணி அவர்கள். இலங்கையில் 14.10.1943 இல் திருவாளர் முருகேசு, பாக்கியம் ஆகியோர்க்கு மகளாகப் பிறந்தவர். 1948 முதல் 58 வரை சிவப்பிரகாசர் பள்ளியில் தொடக்க உயர்நிலை வகுப்புகளைப் பயின்றவர். 1959 இல் புகுமுக வகுப்பை மெத்தடிசுடு நிறுவனத்தில் பயின்றவர். 1961 முதல் 65 வரை இலங்கைப் பரதேனியா பல்கலைக்கழகத்தில் இளங்கலை வரலாறு பயின்றவர். பின்னர் நூலகவியல் சார்ந்த பட்டயப்படிப்பு நிறைவு செய்தவர்.

1978-80 இல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் முதுகலைத் தமிழ் இலக்கியம் பயின்றவர். சி.வை.தாமோதரம் பிள்ளை குறித்த ஆய்வேடு இதற்காக வழங்கினார். க.கைலாசபதி மேற்பார்வையாளர் என்பது குறிப்பிடத்தகுந்தது. 1994-97 இல் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் கா.சிவத்தம்பி அவர்களின் மேற்பார்வையில் முனைவர் பட்ட ஆய்வு நிறைவு செய்தவர். இவர் தம் ஆய்வுத்தலைப்பு சங்க இலக்கியத்தில் உரைகளின் பொருத்தப்பாடு - குறுந்தொகை (Appropriateness of the Commentaries to Cankam literature: A close analysis of Kuruntokai) என்னும் தலைப்பில் அமைந்தது.

வட்டுக்கோட்டையில் அமைந்துள்ள யாழ்ப்பாணக்கல்லூரியில் (1965-68) இளங்கலைத் தமிழ் மாணவர்களுக்குத் தமிழ் பயிற்றுவிக்கும் பணியில் தம் பணியைத் தொடங்கிய மனோன்மணி அவர்கள் 1979-82 வரை தம் கணவரின் ஆய்வுப்பணிகளுக்கு உதவியாக இருந்தார். 1975 முதல் யாழ்ப்பாணக் கல்லூரி ஒன்றில் வருகை தரு விரிவுரையாளராகப் பணியாற்றினார்.

1983 முதல் 1993 வரை சப்பானியப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் சுசுமு ஓனோ அவர்களின் ஆய்வுப்பணிகளில் இணைந்து ஆய்வாளராகப் பணிபுரிந்தார். தமிழ்மொழிக்கும் சப்பான் மொழிக்குமான உறவு பற்றிய அரிய ஆய்வுப்பணியில் ஈடுபட்டு உழைத்தார். அதுபொழுது சப்பானிய(யப்பான்) இலக்கியம், கவிதைகள் பற்றிய படைப்புகளைத் தமிழில் வழங்கினார். மேலும் முதுகலை பயிலும் சப்பானிய மாணவர்களுக்கு தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு பற்றி பாடம் நடத்தும் வாய்ப்பு அமையப்பெற்றவர். 1993 ஆம் ஆண்டுக்குப் பிறகு வருகைதரு பேராசிரியர் பணியில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பணிபுரியத்தொடங்கினார். தொடர்ந்து சப்பான் நாட்டிற்குச் சென்று தமிழ் சப்பானிய ஆய்வுகளுக்கும் உதவினார்.

படிக்கின்ற காலத்திலும் பணிபுரியும் காலத்திலும் மனோன்மணி அவர்கள் பல பரிசுகளையும் சான்றிதழ்களையும் பெற்றவர். கலைஞானச் சுடர் விருது உள்ளிட்ட விருதுகள் இவர்தம் தமிழ்ப்பணிக்குக் கிடைத்துள்ளன. இவர் பல பொறுப்புகளை ஏற்றுத் திறம்படப் பணிபுரிந்தவர். கல்வி நிறுவனங்கள் பெண்கள் அமைப்பு உள்ளிட்டவற்றில் இவரின் பணி மேம்பட்டு இருந்தது. இலங்கையிலும் சப்பானிலும் கல்வி சார்ந்த, பாடத்திட்டம் சார்ந்த பல குழுக்களில் இணைந்து பணிபுரிந்தவர்.

பத்தொன்பதாம்நூற்றாண்டுத் தமிழ் இலக்கியத்தின் முக்கியப்போக்குகள், சி.வை. தாமோதரம் பிள்ளை ஓர் ஆய்வு, ஆற்றங்கரையான், தமிமொழியும் யப்பானியமொழியும் இலக்கண ஒப்புமை, யப்பானிய மொழியைத் தமிழில் கற்க (கைநூல்),தமிழ்மொழி அகராதி தந்த சதாவதானி, பண்டைத் தமிழர் வாழ்வியற் கோலங்கள்(இரு தொகுதி), தமிழர் யப்பானியர் வாழ்வில் தைப்பொங்கல், சப்பானியக் காதல் பாடல்கள், குறுந்தொகை ஒரு நுண்ணாய்வு, காலம் தந்த கைவிளக்கு, காலத்தை வென்ற பெண்கள், சங்க காலத்திருமண நடைமுறைகள், சி.வை.தாமோதரன் பிள்ளை உள்ளிட்ட பேராசிரியர் மனோன்மணியின் நூல்கள் இவர்தம் எழுத்து வன்மையை அறிவிக்கும் சான்றுகளாகும்.

இலங்கை வானொலி, தொலைக்காட்சிகளில் குழந்தைகள், பெண்கள், மாணவர்கள், இளைஞர்கள் பயன்பெறும் வண்ணம் தம் கருத்துகளை வழங்கியவர். பல ஆய்வரங்குகளில் கலுந்துகொண்டு கட்டுரை படித்தவர். சமயம், பெண்மை, சங்க இலக்கியம், நூலகம், சப்பானிய மொழி, இலக்கியம், ஈழத்து இலக்கியம் சார்ந்த துறைகளில் ஈடுபாடுகொண்டு இவர் எழுதியுள்ள தமிழ் ஆக்கங்கள் என்றும் இவர் பெருமையைப் பறைசாற்றி நிற்கும்.இலங்கையின் சார்பாளர்களாக உலக அரங்கில் தேமதுரத் தமிழின் ஓசை பரவப் பாடுபடும் இவர்களைத் தமிழுலகம் பாராட்டி மதிக்கவேண்டும்.

மொழி, இன, நாட்டுப்பற்றுடன் விளங்கும் இந்த இலக்கிய இணையர்கள் தம் வாழ்நாள் காலத்தைத் தொடர்ந்து தமிழ் மொழி,இலக்கிய, பண்பாட்டு வளர்ச்சிக்கு உட்படுத்தவேண்டும் என்பதே நம் பேராவலாக உள்ளது.


தமிழ் ஓசை களஞ்சியப் பகுதி

நனி நன்றி :

தமிழ் ஓசை களஞ்சியம்,(நாளிதழ்),21.12.2008,
அயலகத் தமிழறிஞர்கள் தொடர் 13
முனைவர் பொற்கோ.
முனைவர் அம்மன்கிளி முருகதாசு(கிழக்குப் பல்கலைக்கழகம், மட்டக்களப்பு)

6 கருத்துகள்:

அ. பசுபதி (தேவமைந்தன்) சொன்னது…

தங்களின் இடுகை சிறப்பாக உள்ளது. இலங்கைப் பேராசிரியர்கள் குறித்த செய்திகள் பலவற்றைத் தெரிந்து கொண்டேன். மேலும் இதுபோன்ற படைப்புகள் பலவற்றை வெளியிடுங்கள். பாராட்டுகள்! வாழ்த்துகள்!
அன்புடன்
தேவமைந்தன்

S.Lankeswaran சொன்னது…

எம் நாட்டின் தமிழ் பெருந்தகைகளை எமக்கு அறிமுகப்படுத்தி இடுகையிட்டதற்கு மிக்க நன்றி ஐயா.

கிடுகுவேலி சொன்னது…

வணக்கம் ஐயா!

எமது ஈழத்தின் தமிழ்த் தம்பதிகளாகிய பேராசிரியர்களின் செய்திகளை நன்றாக தெரியப்படுத்தினீர்கள். மிகவும் பண்பானவர்கள். யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் படித்தாலும் அவர்களிடம் படிக்கும் பாக்கியம் கிட்டவில்லை. ஆனால் நிறைய தடவைகள் அவர்கள் இருவரினதும் பேச்சுக்களை கேட்டிருக்கிறேன். மிகவும் அறிவுபூர்வமாகவும், அமைதியாகவும் பேசுவார்கள். நன்றாக இருக்கும். தற்பெருமை அற்றவர்கள். இந்த வயதிலும் அன்பு குறையாமல் இளம் தம்பதியர் போல வாழ்வது மிகச்சிறந்த எடுத்துக்காட்டு. நன்றி பதிவிற்கு.

முனைவர் இரத்தின.புகழேந்தி சொன்னது…

your blog is exelant
rathinapugazhendi
vridachalam

முனைவர் இரத்தின.புகழேந்தி சொன்னது…

your blog is exelant
rathinapugazhendi
vridachalam

முனைவர் இரத்தின.புகழேந்தி சொன்னது…

your blog is exelant
rathinapugazhendi
vridachalam