நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

சனி, 20 டிசம்பர், 2008

புலவர் உதயை மு.வீரையன் அவர்கள்...


உதயை மு.வீரையன்

தமிழ்ப் புலவர் பெருமக்களுள் பலர் சமூக விடுதலை பற்றிய சிந்தனையுள்ளவர்களாக விளங்கி மாந்த குல விடுதலைக்குக் குரல் கொடுத்துள்ளனர். பாட்டாலும் பேச்சாலும் எழுத்தாலும் செயலாலும் அன்னார் பணிபுரிந்துள்ளனர்.அவர்களின் வரிசையில் எண்ணி மதிக்கத் தக்கவர் புலவர் உதயை மு.வீரையன் அவர்கள் ஆவார்.

திருவாரூர் மாவட்டம் உதயமார்த்தாண்டபுரம் என்னும் ஊரில் 1942 மே ஒன்றாம் நாள் பிறந்தவர். பெற்றோர் முத்துராமன், இராக்கம்மாள்.தொடக்கக் கல்வியை நாச்சிகுளத்திலும் உயர் தொடக்கக் கல்வியை இடையூரிலும் உயர்நிலைக் கல்வியைத் திருத்துறைப்பூண்டியிலும், புலவர் படிப்பைத் திருவையாறு அரசர் கல்லூரியிலும் பயின்றவர்.

ஏழைமையின் பிடியில் இளமையில் சிக்கிய நம் புலவர் அவர்கள் தோழர் அடைக்கலம் என்னும் முடித்திருத்தும் தோழரின் கடைக்கு வரும் இதழ்கள் படித்து உணர்வு பெற்றவர். பள்ளிக்குச் செல்வது தவிர மற்ற நேரங்களில் முடித்திருத்தகம் இவர் தமிழ் உணர்வை வளர்த்துள்ளது. விடுதலை, நாத்திகம், குயில் உள்ளிட்ட ஏடுகள் இவர் பார்வைக்கும் படிக்கவும் கிடைத்துள்ளன. புரட்சிக் கவிஞரின் குயில் உள்ளிட்ட ஏடுகளில் எழுதிய பெருமைக்கு உரியவர்.

அக் காலத்தில் மக்கள் நடுவே நாடகங்கள் பெரிதும் சிறப்பிடம் பெற்றிருந்தன. பல நாடகங்களுக்குப் பாடல் எழுதினார். அந்நாடக வெற்றிக்கு இவர் பாடல்கள் உதவின.

உதயமார்த்தாண்டபுரத்திற்கு அண்மையில் இருந்த பெருமழை என்ற ஊரில் வாழ்ந்த பெருமழைப் புலவர் பொ.வே.சோமசுந்தரனார் அவர்களிடம் உதவியாளராகச் சிலகாலம் பணிபுரிந்தவர். பின்னர் அரசர் கல்லூரியில் புலவர் வகுப்பில் பயின்றவர்.

அந்நாளில் பெரும்புலவர் தி.வே.கோபாலையர் அவர்கள் கல்லூரி முதல்வராக இருந்து திருவையாறு கல்லூரியில் தமிழரசாட்சி நடத்திய காலம் அஃது. அங்குப் பயின்றவர். பெருஞ்சித்திரனாரின் தென்மொழி, சி.இலக்குவனாரின் "குறள் நெறி" மதுரையிலிருந்து வந்த தமிழ்நாடு நாளிதழ் உள்ளிட்டவற்றில் படைப்புகளை வழங்கியவர். இரண்டாவது இந்தி எதிர்ப்புப் போரில் இவர் ஈடுபட்டு உழைத்துள்ளார்.

முப்பத்து மூன்றாண்டுகள் தமிழாசிரியராகப் பணிபுரிந்த பெருமைக்கு உரியவர். ஆலத்தம்பாடி சானகி அண்ணி உயர்நிலைப் பள்ளியில் இரண்டு ஆண்டுகளும் சென்னைக் கெல்லட் உயர்நிலைப் பள்ளியில் ஓராண்டும் சென்னை அயன்புரம் இரயில்வே காலனி உயர்நிலைப் பள்ளியில் முப்பதாண்டுகளும் தமிழாசிரியர் பணிபுரிந்தவர்.

சென்னையில் வாழ்ந்து வரும் புலவர் அவர்கள் தினமணி உள்ளிட்ட ஏடுகளில் தொடர்ந்து சமூக அக்கறையுடன் கட்டுரைகள் வரைவது குறிப்பிடத்தகுந்த ஒன்றாகும்.

இவர் 1.அக்கினிக் குஞ்சுகள், 2.தீர்ப்பு எழுதுகிறேன், 3.உனக்காகப் பாடுகிறேன், 4.உதயை மு.வீரையன் கவிதைகள் என்னும் தலைப்பில் கவிதை நூல்களை வழங்கியுள்ளார்.

1.கல்வித் துறையும் ஆசிரியர் நிலையும், 2.வரமும் சாபமும், 3.மானிட விடுதலை நோக்கி, 4.வெற்றியைச் சுற்றி, 5.தேசத்தின் மறுபக்கம் உள்ளிட்ட கட்டுரை நூல்களை வெளியிட்டுள்ளார்.


மானிட விடுதலை நோக்கி நூல்

நீதியின் முன் என்ற புதினம், பத்துப் படையல், கேள்விக் குறிகள் உள்ளிட்ட சிறுகதை நூல்கள் இவரின் படைப்பாளுமைக்குச் சான்றாகும். சிறுவர்களுக்காக 1.மூன்று முத்துக்கள், 2. தேடித் தேடி, 3.கூவத் துடிக்கும் குயில்கள் உள்ளிட்ட நூல்களை எழுதியுள்ளார்.

பாரத மாநில வைப்பகத்தின் பரிசில், தமிழ் அரசி இதழ் சார்பில் வழங்கப்பட்ட பொற்கிழி விருது,பல்வேறு கவிதைப் போட்டிகளில் பரிசில்கள் பெற்ற பெருமைக்கு உரியவர். கவிதைச் செம்மணி உள்ளிட்ட விருதுகள் இவர் படைப்பாளுமைக்குக் கிடைத்த சிறப்புகளாகும்.

இவர்தம் படைப்பாளுமையை அறிஞர்கள் மு.வ,தீபம் நா. பார்த்தசாரதி, கே.சி.எசு. அருணாசலம், வல்லிக்கண்ணன், உவமைக் கவிஞர் சுரதா உள்ளிட்டவர்கள் போற்றிப் பாராட்டியுள்ளனர்.

உதயை மு.வீரையன், அவர்களின் முகவரி :

மக்கள் பதிப்பகம்,
146/6, சானி சான்கான் சாலை,
இராயப்பேட்டை,சென்னை - 600 014
செல்பேசி : + 9444296985

கருத்துகள் இல்லை: