நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

ஞாயிறு, 11 மே, 2014

மலேசியப் புலவர் மு. முருகையன் 18. 05. 1942 - 27. 05. 2013

 புலவர் மு. முருகையன் அவர்கள் (மலேசியா)

புலவர் மு. முருகையன் அவர்கள் மலேசியாவில் பிறந்தவர். இவர்தம் பெற்றோர் திரு. சி. முத்துசாமி, திருவாட்டி இராசம்மாள் அம்மா. முருகையன் அவர்களின் துணைவியார் பெயர் செயபத்மினி ஆவார். இவர்களுக்குக் கவிதா, வினோத் கண்ணா என இரு மக்கள் செல்வங்கள் வாய்த்தனர்.

புலவர் முருகையன் அவர்கள் பேராக் மாநிலத்தில் தெமொ பானிர் தமிழ்ப்பள்ளியில் தொடக்கக் கல்வியைப் பெற்றவர். கம்பார் தமிழ்ப் பள்ளியிலும் படித்தவர்.  கம்பார் இடைநிலைப்பள்ளியில் இடைநிலைக் கல்வி பெற்றவர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் உயர்நிலைக் கல்வி பெற்றவர். அந்நாளில் மலேசியாவிலிருந்து வந்து தமிழ் கற்றவர்கள் என்று நினைவுகூரும்பொழுது புலவர் மு. முருகையன் அவர்களே அனைவராலும் நினைவுகூரப்படும் வகையில் தமிழகத்தில் அறிமுகமாகியிருந்தவர்.

திண்டுக்கல் பைந்தமிழ்க் கல்லூரி, கரந்தைப் புலவர் கல்லூரி, சென்னை மாருதி திரைப்படக் கல்லூரியில் பயின்றுள்ளார். தென்கிழக்காசியத் திருக்கோயில் ஆய்வுக்காகப் புலவர் பட்டயம் பெற்றவர். முதுகலைத் தமிழ், இளங்கலை மொழியியல் ( B.O.L.) பட்டங்களைப் பெற்றதுடன் கல்வெட்டுகள், ஊடகக் கல்விக்காகச் சான்றிதழ்களைப் பெற்றுள்ளார். திரைப்படத்துறையில் ஈடுபாடு காட்டி ( D. F. Tec ) பட்டம் பெற்றவர்.

பள்ளி ஆசிரியராகப் பாரிட் புந்தார், பேராக், சுங்கைப் பட்டானி, கெடா ஆகிய ஊர்களில் பணிபுரிந்துள்ளார்.

தமிழ்நேசன் நாளிதழில் ஞாயிறுமலர் ஆசிரியராகப் பணியாற்றியவர் (1976 - 1990). மலேசிய நண்பனில் ஞாயிறுமலர் ஆசிரியராகவும் பணியாற்றியவர் (2005 - 2006). விடியல் வார இதழின் ஆசிரியராகவும் (2006-2010) பணிபுரிந்துள்ளார். ஆலமரம் மாத இதழ் ஆசிரியராகவும்(2010-11) பணிபுரிந்துள்ளார். 2011 முதல் 2013 வரை ஒளிவிளக்கு என்னும் இதழின் ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார். சற்றொப்ப ஐம்பதாண்டுகள் மலேசியாவில் இதழியல்துறையில் தொடர்புடையவராகவும் எழுத்துத்துறைத் தொடர்புடையவராகவும் புலவர் மு. முருகையன் விளங்கியுள்ளார்.

ஒலிப்பேழை, குறுவட்டுகள் வெளியீட்டு முயற்சி

தொழில்நுட்பக் கருவிகளின் வளர்ச்சியை உள்வாங்கிக்கொண்டு பல்வேறு ஒலிவட்டுகளையும், குறுவட்டுகளையும் வெளியிட்டுள்ளார். இதில் இவர் பாட்டியற்றியும் இசை அமைத்தும் தம் திறமையை வெளிப்படுத்தியுள்ளார். பத்துமலை முருகன், கோலாலம்பூர் மாரியம்மன், ஒன்பது தெய்வங்கள், மலாக்கா திரௌபதி அம்மன், சீரடி சாய், ஒரு மலர் கனலாகிறது, மலேசிய மலர்கள், சாதனைத் தலைவர் சாமிவேலர், களம் கண்ட கலைஞர், அவசர அழைப்பு, சித்தார்த்த நாடகம்(தமிழ், தெலுங்கு), நினைவலையின் ஓசையில், கூட்டுறவுப் பாடல்கள் என்பன குறிப்பிடத்தக்கன.

புலவர் முருகையன் அவர்களின் இசையமைப்பில் வாணி செயராம், உமா ரமணன், டி.எல்.மகாராசன், சுரேந்தர். சிவசிதம்பரம், சிந்து, அமிர்தா, வீரமணி கர்ணா, எம்.ஆர். விசயா உள்ளிட்ட தமிழகக் கலைஞர்கள் பாடியுள்ளனர். வீ. சாரங்கபாணிசுசிலா மேனன், சுசிலா திருச்செல்வம், எம். மாரிமுத்து, வி.செயந்தி, சந்திரிகா உள்ளிட்ட உள்நாட்டுக் கலைஞர்களும் பாடியுள்ளனர்.

நாட்டிய நாடகங்கள்

புலவர் மு. முருகையன் நாட்டிய நாடகங்கள் இயற்றுவதில் வல்லவர்.  1986 இல் உருவாக்கிய சித்தார்த்தா நாட்டிய நாடகம் கோலாலம்பூரில் அரங்கேறியது. இசை, இயக்கம், பாடல்கள் அனைத்திற்கும் பொறுப்பேற்று இயக்கிய இந்த நாட்டிய நாடகம் இவர்தம் அன்னை புரடெக்சன்சு சார்பில் உருவானது. இது தமிழ்நாடு, இலங்கை, தாய்லாந்து, பினாங்கு, கோலாம்பூர், ஈப்போவிலும் அரங்கேறியது. ஐம்பதிற்கும் மேற்பட்ட நாட்டிய நாடகங்களை இவர் இயற்றியுள்ளார். தமிழகத் திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தில் உறுப்பினராகவும் தம்மை இணைத்துக்கொண்டார்.

புலவர் மு. முருகையன் அவர்களின் தமிழ்க்கொடை:

இலக்கிய இலக்கண ஆய்வுகள் குறித்து புலவர் மு. முருகையன் அவர்கள் ஐந்நூறுக்கும் மேற்பட்ட கட்டுரைகளை வரைந்துள்ளார்.

உலகத்தின் ஒளிவிளக்கு-பெற்றோரும் பிள்ளைகளும் 
மொழியியல் (ஆய்வுநூல்)
உலகத் தமிழர்களும் தொல்காப்பியமும், (ஆய்வுநூல்)
உலகத் தமிழர்களும் திருக்குறளும் (ஆய்வுநூல்

முதலியன வெளிவர உள்ளன.

பெற்ற விருது:

உலகத் தமிழ்க் கவிஞர் இயக்கத்தின் தலைவர் உவமைக்கவிஞர் சுரதா அவர்களும் க. . திருநாவுக்கரசு அவர்களும் இணைந்து உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில்  இலக்கியச் சித்தர் என்னும் விருது வழங்கிச் சிறப்பித்துள்ளனர்(23.08.1988).
டாக்டர் விக்டர் சுப்பையா


புலவர் மு. முருகையன் அவர்களின் முதலாண்டு நினைவு விழாவைச் சென்னையில் உலகத் தமிழ்ப்பண்பாட்டு இயக்க இந்திய ஒன்றியமும், கோலாலம்பூர் ஒளிவிளக்கு அமைப்பும் 18.05.2014 இல் நடத்துகின்றன. மறைந்த புலவர் மு. முருகையனை நினைவுகூர முயற்சி எடுக்கும் டாக்டர் விக்டர் சுப்பையா , செந்தமிழ்த்தேனீ இரா. மதிவாணன் ஆகியோர் நம் அன்பிற்கும் பாராட்டிற்கும் உரியவர்கள்.


குறிப்பு: களஞ்சியங்களுக்குக் கட்டுரை உருவாக்குவோர், எடுப்போர் எடுத்த இடம் சுட்டி ஆய்வு நாகரிகம் போற்றுக.

கருத்துகள் இல்லை: