நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வியாழன், 10 ஜூலை, 2014

அமெரிக்காவில் அதிர்ந்த தமிழர்களின் பறையிசை…



அமெரிக்காவில் ஆண்டுதோறும் நடைபெறும் பெட்னா விழா நம்மூர் பொங்கல் திருவிழாவுக்குச் சமமானதாகும். ஒவ்வொரு ஆண்டும் சூலைத்திங்கள் முதல் வாரத்தில் அமெரிக்கத் தன்னுரிமைத் திருநாளை ஒட்டி இவ்விழா நடைபெறுவது வழக்கம். கூடிக்கலையும் விழாவாக இல்லாமல் அமெரிக்கா முழுவதும் பரவியிருக்கும் தமிழர்கள் ஒன்று கூடித் தங்கள் நண்பர்களையும், ஒத்த உணர்வுடையவர்களையும் கண்டு கலந்துரையாடும் இன்ப விழாவாகவும் இது இருக்கும். தாய்த் தமிழகத்திலிருந்து சிறப்பு விருந்தினர்களை ஆண்டுதோறும் இவ்வமைப்பினர் அழைத்துச் சிறப்பித்தாலும் தமிழகத்து ஊடகங்கள் இந்த விழா குறித்த செய்திகளை மருந்துக்கும் வெளியிடமாட்டார்கள். ஏனெனில் இது தமிழர் விழா!

இந்த ஆண்டு அமெரிக்கத் தமிழ்ச்சங்கங்களின் பேரவையின்( பெட்னா) இருபத்தேழாம் ஆண்டு விழாவை 2014 சூலை 3 முதல் 6 வரை அமெரிக்காவில் செயிண்டு லூயிசில் மிசௌரித் தமிழ்ச்சங்கமும் தமிழ்ச்சங்கங்களின் பேரவையும் இணைந்து  மிகச் சிறப்பாக நடத்தியது. இந்த விழாவுக்கு முன்பதிவு செய்துகொண்டு குடும்பம் குடும்பமாகத் தமிழர்கள் ஒன்றுகூடியது தமிழர்களிடம் ஒற்றுமை உணர்ச்சி இன்னும் உண்டு என்பதை நிலைநாட்டுவதாக அமைந்தது. 

குடந்தை ப. சுந்தரேசனார் நூற்றாண்டு விழா, கால்டுவெல் பெருமகனார் இருநூறாம் ஆண்டு விழா, பண்டிதர் அயோத்திதாசர் நூற்றாண்டு விழா எனத் தமிழுக்கும் தமிழர்களுக்கும் உழைத்த பெருமக்களை நினைவுகூரும் விழாவாகவும் இந்த விழா வடிவமைக்கப்பட்டிருந்தது.

பொதுவாகப் பேரவை விழாவின் முதல்நாள் நிகழ்வு என்பது பல ஊர்களிலிருந்து வந்துள்ள விருந்தினர்கள், சிறப்பு விருந்தினர்கள் ஒன்றுகூடி அறிமுகம் செய்துகொள்வது, படம் எடுத்துக்கொள்வது, சிறப்பு உணவுகளை விருந்தாக உண்டு மகிழ்வது என்று இருக்கும். இவ்வாறு ஒன்றுகூடிப் பேசும்பொழுது பல நிலைப்பட்ட செய்திகளை ஒருவருக்கொருவர் பேசி மகிழ்வர்.

இரண்டாம் நாள் விழாவும் மூன்றாம் நாள் விழாவும் நிமிடந்தோறும் மிகச் சிறப்பாகத் திட்டமிடப்பட்டு நடைபெறுவது வழக்கம். இரண்டாம் நாள் நிகழ்வில் திருக்குறள் மறை ஓதுதல், தமிழ்த்தாய் வாழ்த்து, அமெரிக்க நாட்டுப்பண் இசைத்தல், குத்து விளக்கேற்றும் சிறப்பு நிகழ்ச்சியுடன் விழா தொடங்கியது.

பேரவைத் தலைவர் பேராசிரியர் தண்டபாணி குப்புசாமி, குமார் ஆகியோர் வரவேற்புரை வழங்கினர். நாகை பாலகுமார் அவர்களின் நாட்டியம் அடுத்து இடம்பெற்றது. அடுத்து நகைச்சுவை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. கவிஞர் குட்டி இரேவதி பங்கேற்ற அயோத்திதாசர் நூற்றாண்டு நினைவுரை இடம்பெற்றது. தமிழ்த் தாள இசை என்ற பொருண்மையில் முனைவர் ஆரோன் பேஜ், முனைவர் ஜோயி செரினியனின் சிறப்பு நிகழ்வு நடைபெற்றது.

திரைப்படத்தில் தமிழிலக்கியம் என்ற தலைப்பில் தியோடர் பாஸ்கரன் அவர்களின் சிறப்புரை இடம்பெற்றது. மாநாட்டின் முதன்மை நிகழ்வாக மாநாட்டு மலர் வெளியிடப்பட்டது. அடுத்து குடந்தை ப. சுந்தரேசனார் பற்றி திரு. இராமமூர்த்தி அவர்களும் கால்டுவெல் பெருமகனார் பற்றி ஆல்பர்ட்டு செல்லதுரை அவர்களும் சிறப்புரையாற்றினர். 

பகலுணவுக்குப் பிறகு குட்டி இரேவதி தலைமையில் கவியரங்கம் நடைபெற்றது. கிளம்பிற்று காண் அமெரிக்கத் தமிழர் படை என்னும் தலைப்பில் பல்வேறு கவிஞர்கள் சிறப்பாகக் கவிதை பாடினர். சிகரம் தொட்ட தமிழர்  முனைவர் ஆரோக்கியசாமி பால்ராஜ் அவர்களின் சிறப்புரை அனைவரையும் ஈர்த்தது.

பேரவையின் சிறப்பு நிகழ்வுகளுள் ஒன்றாக  இடம்பெறும் இலக்கிய வினாடி வினா என்னும் நிகழ்ச்சி அமெரிக்காவில் வாழும் தமிழர்களால் ஆர்வமாகக் கவனிக்கப்படும் நிகழ்ச்சியாகும். ஒரு மாதத்துக்கு முன்பாகவே இதற்கான பாடத்திட்டங்கள் வழங்கப்பட்டு, தமிழர்களின் இலக்கியம், கலை குறித்து வினாவுக்கு விடை காணும் வகையில் அணியப்படுத்தும் முயற்சி தொடங்கிவிடும். திரு. நாஞ்சில் பீற்றர் அவர்களும் திரு கொழந்தவேல் இராமசாமி அவர்களும் இதன் பொறுப்பாளர்களாக இருந்து திறம்பட ஒவ்வொரு ஆண்டும் செயல்படுவார்கள். இந்த ஆண்டும் மிகச்சிறப்பாக இலக்கிய வினாடி வினா நிகழ்ச்சி வடிவமைக்கப்பட்டிருந்தது.

மொழிபெயர்ப்பாளர் வேதேகி ஹெர்பர்ட்டு அவர்களின் உரையும் அனைவரையும் ஈர்த்தது. குழந்தைகளுக்கான எலிப்பதி நாடகம் முனைவர் வேலு சரவணன் அவர்களால் மிகச் சிறப்பாக வழங்கப்பட்டது. குழந்தைகளும் பெரியவர்களும் இந்த நாடகத்தை ஆர்வமுடன் சுவைத்து மகிழ்ந்தனர். தமிழர்களின் தொழில் முன்னேற்றம் குறித்தும் மருத்துவம் குறித்தும் சிறப்புரைகள் இடம்பெற்றிருந்தன. இன்னிசை விருந்துக்கும் குறையில்லை. தோல்பாவைக்கூத்தும், பண்ணிசையும், தெருக்கூத்தும், பறையிசையும் முக்கிய நிகழ்வாக இருந்தது. 

சங்கங்களின் சங்கமும் என்ற தலைப்பில் அமைந்த அமெரிக்கத் தமிழர்கள் வழங்கிய பறையிசை விழா அரங்கத்தை அதிரவைத்தது. தீரன்சின்னமலை நாடகமும் அமெரிக்கத் தமிழர்களால் சிறப்பாக நடத்திக்காட்டப்பட்டது. திரைப்பட நடிகை திரிஷா கலந்துகொண்டு நிகழ்ச்சிக்குச் சிறப்புச்சேர்த்தார். எங்கும் தமிழ் என்ற தலைப்பில் பேரூர் மருதாசல அடிகளார் செயலுரை வழங்கினார்.

மூன்றாம் நாள் நிகழ்வில் தமிழர் அடையாளம் காப்போம், ஒன்றிணைந்து உயர்வோம், இன்றைய நிலையும் உயர்நிலை அடைவதற்கான வழிமுறைகளும் என்ற தலைப்பில் அறிஞர்கள் பங்கேற்ற சிறப்புரைகள் இடம்பெற்றன.


அடுத்த ஆண்டு பேரவையின் இருபத்தெட்டாம் ஆண்டு விழா அமெரிக்காவில் சான்பிரான்சிசுகோ நகரில் நடைபெற உள்ளது.

பெட்னா விழா குறித்து மேலும் அறிய இங்குச் செல்லவும்







1 கருத்து:

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

படங்களைப் பார்த்தாலே மனம் மகிழ்ச்சி கொள்கின்றது