நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

திங்கள், 12 நவம்பர், 2012

அந்திமழை - தமிழ் தெரியுமா? தொடர் 3



உழவுத்தொழிலுக்குள் அனைத்துத் தொழிலும் அடங்கிவிடுவதால் திருவள்ளுவர் உழவை மட்டும் சிறப்பித்துத் திருக்குறளில் பாடினார். இயற்கை பொய்த்ததாலும், மனைவணிகம் தமிழகத்தில் கொடிகட்டிப் பறப்பதாலும் வேளாண்மைத்தொழில் மிக விரைவாக அழிந்து வருகின்றது. வேளாண்மையுடன் அது சார்ந்த தமிழ்ச்சொற்களும் அழிந்து வருகின்றன. இந்தப் பகுதியில் வேளாண்மைச் சொற்கள் நினைவூட்டப்படுகின்றன.

1.   ஆச்சல்- ஆமாம், மரம், பள்ளம், சோலை
2.   இடிவிழுதல்- மின்னல்தோன்றல், மரத்தைக் கரியாகச் சுடும்பொழுது மூட்டத்தில் பொந்துவிழுவது, மழைக்காலம், மரம் அருகில்
3.   உயிர்த்தண்ணீர்- விக்கலில் குடிப்பது, தாகத்தில் குடிப்பது.மரம்,செடி நடும்பொழுது முதலில் ஊற்றும் நீர்,சாவும்பொழுது ஊற்றுவது,
4.   ஊட்டி- ஊர், குடித்தல், உணவு கொடு, தொண்டையின் கண்டப்பகுதி,
5.   ஊத்தா- ஊசிய பொருள், மீன்பிடி சாதனம், ஆயா, அம்மா.
6.   எக்கடையான்- பெரியகடை,கடலை எள் இவற்றின் பாலை உறிஞ்சும் பூச்சி, சிறியது, ஊர்,
7.   எடாவுதல்- அடிப்பது, ஓடுவது, துரத்துவது, மாடு கொம்பை ஆட்டுவது.
8.   பொட்டு- மூளை, குங்குமம், நெற்றி, தரமற்ற எள்,
9.   ஏர்க்கால்- அழகிய கால், வண்டியின் நடுமரம், நீட்டுக்கால், ஊர்.
10.  ஒரு பூட்டு- திண்டுக்கல்,சேப்டிலாக்கர், பெட்டகம், ஏரோட்டும் கால அளவு.
11.  கசங்கு- வீண், கட்டுவதற்கு உதவும் ஈச்சம்செடியின் கழி, மடிப்பு, அழுக்கு.
12.  கட்டக்கால்- மருத்துவர்போடுவது, அடிபட்டகால், பன்றி, குள்ளமானவர்
13.  கட்டு- வண்டிச்சக்கரத்தின் இரும்புப்பட்டை, மூட்டை,புறப்படுதல், வீக்கம்.
14.  கல்லங்கழி- பிரம்பு, தடி, உறுதியான மூங்கில், கடற்கரை.
15.  கலவடை- ஓட்டலில் கிடைக்கும்வடை,பானை, குடங்களின் வாய்ப்பகுதி, ஊசிப்போன வடை, சண்டை.
16.  குண்டு- சிறிய நிலம், பெரியது, கோலி, உப்புநீர்.
17.  சீட்டை- சீட்டுப்பணம், முறுக்கு, உருண்டை, தப்பி நிற்கும் கம்பங்கதிர்.
18.  பட்டம்- படித்துப்பெறுவது, காசுகொடுத்து வாங்குவது, வானில்விடுவது, நிலங்களில் இடைவெளிவிட்டு வரிசையாகப் பயிரிடல்,
19.  மோழிப்பால் குடித்தல்- தரம் உயர்ந்த பால், திரட்டுப்பால், கழுதைப்பால், ஏரோட்டப் பழகுவோரின் கையை அழுத்திப் பயிற்றுவிப்பது.
20.  முறுக்காத்தி- பண்டிகையில் சுடுவது, காரைக்குடி பலகாரம், ஆறிப்போனது, ஆடு,மாடு கட்டும் கயிற்றில் இணைக்கப்படும் சிறு கருவி.

விடைகள்:
1. பள்ளம் 2. மரத்தைக் கரியாகச் சுடும்பொழுது மூட்டத்தில் பொந்துவிழுவது.3. மரம்,செடி நடும்பொழுது முதலில் ஊற்றும் நீர்,4. தொண்டையின் கண்டப்பகுதி 5. மீன்பிடி சாதனம் 6. கடலை,எள் இவற்றின் பாலை உறிஞ்சும் பூச்சி,7. மாடு கொம்பை ஆட்டுவது 8. தரமற்ற எள் 9. வண்டியின் நடுமரம் 10. ஏரோட்டும் கால அளவு 11. கட்டுவதற்கு உதவும் ஈச்சம்செடியின் கழி 12. பன்றி 13. வண்டிச்சக்கரத்தில் பொருத்தப்படும் இரும்புப்பட்டை 14. உறுதியான மூங்கில் 15. பானை, குடங்களின் வாய்ப்பகுதி 16. சிறிய நிலம் 17. தப்பி நிற்கும் கம்பங்கதிர் 18. நிலங்களில் இடைவெளிவிட்டு வரிசையாகப் பயிரிடல் 19. ஏரோட்டப் பழகுவோரின் கையை அழுத்திப் பயிற்றுவிப்பது 20. ஆடு, மாடு கட்டும் கயிற்றில் இணைக்கப்படும் சிறு கருவி.

அந்திமழையில் தமிழ்தெரியுமா? பகுதி 3

1 கருத்து:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

விளக்கத்திற்கு மிக்க நன்றி ஐயா...