நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

திங்கள், 27 ஆகஸ்ட், 2012

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தர் முனைவர். கே.இராமசாமி அவர்கள் இன்று பதவி ஏற்பு!


பேராசிரியர் கே.இராமசாமி அவர்கள்

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக மாநிலத் திட்டக்குழு உறுப்பினர் (வேளாண் மற்றும் பாசனம்) கே. இராமசாமி அவர்கள் திங்கள்கிழமை பதவியேற்கிறார்.

இதற்கான உத்தரவை, தமிழ்நாடு ஆளுநரும், பல்கலைக்கழக வேந்தருமான கே.ரோசய்யா பிறப்பித்துள்ளார்.

கோவை ஈச்சனாரியில் உள்ள கற்பகம் பல்கலைக்கழகத் துணைவேந்தரும், மாநில திட்டக்குழு உறுப்பினருமான (வேளாண்மை) கே.இராமசாமியைப் புதிய துணைவேந்தராக நியமித்து ஆளுநர் வெள்ளிக்கிழமை உத்தரவு பிறப்பித்தார்.

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியில் 1948-ல் பிறந்தவர் கே.ராமசாமி அவர்கள். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இளநிலை, முதுநிலைப் பட்டம் படித்தவர். பெல்சியத்தில் உள்ள கத்தோலிக் லீயுவென் பல்கலைக்கழகத்தில் எம்.எஸ். மற்றும் முனைவர் பட்டம் முடித்துள்ளார்.

முனைவர் கே.இராமசாமி அவர்கள் உயிரித்தொழில்நுட்பம், நுண்ணுயிரியல்துறையில் உலக அளவில் புகழ்பெற்ற அறிஞர், கலவை ஆதிபராசக்தி வேளாண்மைக்கல்லூரியில் புல முதன்மையராகப் பணியாற்றிய பெருமைக்குரியவர். கலவையில் பேராசிரியர் அவர்கள் பணியாற்றியபொழுது அவர்களுக்குக் கீழ் வேளாண்மைக்கல்லூரி மாணவர்களுக்கு நான் தமிழ்ப்பாடம் நடத்தும் வாய்ப்பினைப் பெற்றேன்.

பழகுதற்கு இனிய பண்பாளர். நேர்மையும் அடக்கமும் கொண்ட பேராசிரியர். மாணவர்களிடத்தும், நண்பர்களிடத்தும் இயல்பாகப் பழகக் கூடியவர். இவர்தம் பணிக்காலத்தில் கலவை ஆதிபராசக்தி வேளாண்மைக்கல்லூரிக்கு வெளிநாட்டு அறிஞர்கள் பலர் வந்து பேராசிரியர் அவர்களைக் கண்டு ஆய்வுத் தொடர்பாகக் கலந்துரையாடிச் செல்வார்கள். பின்னர் எஸ்.ஆர்.எம். பல்கலைக் கழகத்தில் சில காலம் பணிசெய்து வந்தார்கள். அண்மையில் எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழகத்திற்கு நான் சென்றபொழுது பேராசிரியர் கே.இராமசாமி அவர்களைக் காண நினைத்தேன். துணைவேந்தர் முனைவர் மு.பொன்னவைக்கோ ஐயா அவர்களை வினவினேன். ஆனால் அவர்கள் கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராகப் பணிபுரிவதாக அறிந்தேன்.

இன்று முதல் கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் மாண்பமை துணைவேந்தராகப் பணியாற்றும் பேராசிரியர் கே.இராமசாமி அவர்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

உலகெங்கும் பணிபுரியும் பேராசிரியர் கே.இராமசாமி அவர்களுடன் பணிபுரிந்த பேராசிரியர்கள், அவர்களின் மாணவர்களுக்கு இந்தச் செய்தி இனிப்பானது ஆகும்.

மிகச்சிறந்த கல்வியாளரைத் தகுதி அடிப்படையில் தமிழகத்தின் குறிப்பிடத்தக்க பல்கலைக்கழகத்திற்குத் துணைவேந்தராக நியமித்த தமிழக ஆளுநரும், தமிழக அரசும், உயர்கல்வித்துறை அமைச்சர் உள்ளிட்டோரும் என்றும் பெருமைக்கும் பாராட்டிற்கும் உரியவர்களாவர்.

கருத்துகள் இல்லை: