மன்னர்மன்னன், பேரவைத்தலைவர் சபாபதி, முத்து உள்ளிட்டோர்
புதுச்சேரியில் அமைந்துள்ள புதுவைத் தமிழ்ச்சங்கத்தில் பாவேந்தர் பாரதிதாசன் கவிதைகளின் முழுத்தொகுப்பு இன்று(10.03.2012) மாலை 7 மணியளவில் நடைபெற்ற விழாவில் வெளியிடப்பட்டது. புதுவைச் சட்டப்பேரவைத் தலைவர் சபாபதி அவர்கள் நூலை வெளியிட்டார். முதற்படியினைப் புதுவைத் தமிழ்ச்சங்கத் தலைவர் முனைவர் வி.முத்து அவர்கள் பெற்றுக்கொண்டார். தமிழ்மாமணி மன்னர்மன்னன் அவர்களின் முன்னிலையில் இந்த விழா நடந்தது. உவமைக்கவிஞர் சுரதா அவர்களின் மகன் சுரதா கல்லாடன் அவர்கள் தொகுத்து மணிவாசகர் பதிப்பகம் வெளியிட்டுள்ள இந்த நூலின் சிறப்பு விலை உருவா 500 அளவில் விழாவில் விற்கப்பட்டது. பாவேந்தரின் அனைத்துக் கவிதைகளும் இந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. சென்னைப் பல்கலைக்கழகத்துப் பேராசிரியர் முனைவர் அரங்க. இராமலிங்கம் அவர்கள் சிறப்புரையாற்றி நூலின் சிறப்பையும் பதிப்பையும் பாராட்டிப் பேசினார்.