நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வியாழன், 18 செப்டம்பர், 2008

தனித்தமிழ்ப் பாவலர் தமிழியக்கன்


பாவலர் தமிழியக்கன்

பாவலர் தமிழியக்கன் அவர்கள் புதுச்சேரி மாநிலம் பாகூர் வட்டம் சேலிய மேட்டில் 24.02.1946 இல் பிறந்தவர்.பெற்றோர் கி.இராமு,இராசம்மாள் ஆவர். இவர்தம் இயற்பெயர் இரா.வேங்கடபதி ஆகும்.உயர்நிலைப் படிப்பைப் பிரஞ்சுமொழி வழியாகக் கற்றவர். தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், பிரஞ்சுமொழி அறிந்தவர்..கருநாடக இசையிலும்,யாப்பறிவும் நிரம்பப் பெற்றவர். இலக்கிய, இலக்கண அறிவை கவிஞர் வாணிதாசன் வழியாகப் பெற்றவர்.

மொழிஞாயிறு பாவாணர்,பாவேந்தர்,பெருஞ்சித்திரனார் கொள்கைகளில் ஆழ்ந்த பற்று கொண்டவர்.புதுச்சேரி மாநிலத்தின் பல பள்ளிகளில் ஆசிரியராகவும் பின்னர் அரசு தொடக்கப்பள்ளியின் தலைமையாசிரி யராகவும் விளங்கியவர்.பள்ளியில் நல்லாசிரியராக விளங்கிய இவருக்குப் புதுச்சேரி அரசின் இராதாகிருட்டிணன் விருது,இந்திய நாட்டரசின் நல்லாசிரியர் விருது உள்ளிட்ட உயரிய விருதுகள் பல கிடைத்துள்ளன.

கம்பன் புகழ்ப்பரிசில்,அன்னை தெரேசா இலக்கிய விருது உள்ளிட்டவையும் இவர் பெற்ற சிறப்புகளுள் அடங்கும்.
தமிழிக்கனார் பல்வேறு பாட்டரங்குகளிலும் கலந்துகொண்டு பாடல் வழங்கியுள்ளார்.கவிஞர் வாணிதாசன்,பாவலரேறு பெருஞ்சித்திரனார் உள்ளிட்ட பெரும் பாவலர்களின் தலைமையில் பாட்டரங்கேறிய பெருமைக்குரியவர்.

தமிழியக்கனின்  பாடல்கள் சில பாடநூல்களில் இடம்பெற்றுள்ளன. அறிவியல் செய்திகளைப் பாட்டாக்கியும் பாவாணர்,வாணிதாசன் மேல் பிள்ளைத்தமிழ் பாடியும் புகழ்பெற்றவர்.

இவர்தம் படைப்புகளை விடுதலை,உண்மை,இனமுரசு,கண்ணியம், கவிஞன்,தென்மொழி, தமிழ்ச்சிட்டு, கவியுகம்,கவிக்கொண்டல்,வெல்லும் தூயதமிழ், தெளிதமிழ்,தேனருவி உள்ளிட்ட இதழ்கள் வெளியிட்டு வருகின்றன.பாட்டும் உரையும் வரையும் ஆற்றல்கொண்ட இவர் தம் நூல்களின் பட்டியல் கீழ்வருவனவாகும்.

01.அறிவியல் இலக்கியம்
02.உயிரியல் பாட்டு
03.நிலைத்திணைப் பாட்டு
04.உயிரியல் மாமாவின் அறிவியல் கதைகள்
05.வாணிதாசன் பிள்ளைத்தமிழ்
06.எழுச்சி விதைகள்
07.பாவாணர் பிள்ளைத்தமிழ்
08.எழிலின் சிரிப்பு
09.தமிழ்மகள் பாவை
10.முல்லைப்பண்ணில் ஒரு முகாரி
11.வேலிகள்
12.சிறுபறை(சிறார் பாடல்கள்)

நிலைத்திணைப்பாட்டு(1989)
உயிரியல் பாட்டு(1986)
அறிவியல் இலக்கியம்(இ.ப.1987)
பாவாணர் பிள்ளைத்தமிழ்(1996)
முல்லைப்பண்ணில் ஒரு முகாரி(2001)
வாணிதாசன் பிள்ளைத்தமிழ்(1994)


பாவலர் தமிழியக்கன் அவர்களின் முகவரி:
பாவலர் தமிழியக்கன்
54,முதல் தெரு,தெ.இராமச்சந்திரன் நகர்,
புதுச்சேரி-605 013
பேசி : 0413- 2240115

1 கருத்து:

அ. பசுபதி (தேவமைந்தன்) சொன்னது…

நண்பரைப் பற்றிய கருத்துகள் மகிழ்வூட்டின.
-தேவமைந்தன்