நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

புதன், 23 ஜூலை, 2008

தமிழண்ணல் இராம.பெரியகருப்பன் அவர்களின் தமிழ்வாழ்வு...


பேராசிரியர் தமிழண்ணல்


தமிழறிஞர்களால் தமிழண்ணல் என அழைக்கப்படும் இராம. பெரியகருப்பன் அவர்கள் இருபதாம் நூற்றாண்டின் தமிழ் ஆளுமைகளுள் குறிப்பிடத் தகுந்தவர். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவராக விளங்கி இவர் ஆற்றிய பெரும்பணிகள் இலக்கிய உலகில் என்றும் நினைவு கூரத்தக்கன. அறிஞர் மு.வ, அறிஞர் வ.சுப, மாணிக்கம் உள்ளிட்ட அறிஞர் பெருமக்களின் தகு தலைமையின் கீழ் பணியாற்றிய பெருமைக்கு உரியவர்.

இவர் தமிழ்த்துறைத் தலைவராகப் பணிபுரிந்த பொழுது தமிழறிஞர்களுள் தகுதியானவர்களை மதிக்கும் முகமாக அவர்களுக்குச் சிறப்புநிலைப் பேராசிரியர் பணி வழங்கி அவர்களுக்குச் சிறப்பு செய்யப்பெற்றது. அவ்வகையில் தமிழறிஞர்கள் வீ.ப.கா.சுந்தரம், புலவர் இரா.இளங்குமரனார், பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப.சுந்தரேசனார், கவியரசு முடியரசனார், பெரும்புலவர் தண்டபாணி தேசிகர் உள்ளிட்ட அறிஞர்கள் மதுரைப் பல்கலைக் கழகத்தின் தமிழ்த்துறையில் பணிபுரியும் பேறு பெற்றார்கள். இன்று பல்வேறு துறைகளில் புகழுடன் விளங்கும் பேராசிரியர்கள் பலர் தமிழண்ணலின் மாணவர்களாக விளங்கியவர்கள் எனில் மிகையன்று.

தமிழண்ணலிடம் படித்தவர்கள், அல்லது உடன் பணிசெய்தவர்கள் பலரும் புகழ் பெற்றவர்களின் வரிசையில் உள்ள அறிஞர் பெருமக்களேயாவர். தமிழ்ப்பற்றும், சங்க இலக்கியப்புலமையும், தமிழுக்குத் துறைதோறும் பெருமையும் சிறப்பும் வந்தாக வேண்டும் என்ற போர்க்குண இயல்பும் கொண்ட தமிழண்ணல் தமிழ்ப் பேராசிரியர்களுக்கு முன்மாதிரி யாவார். தமிழுக்கு எதிராக நடக்கக்கூடியவர் யார் என்றாலும் எத்தகுப் பொருள்வளம் உடையவர் என்றாலும், எத்தகு உயர்பதவியில் இருப்பவர் என்றாலும் அஞ்சாமல் குரல் கொடுக்கக் கூடியவர் தமிழண்ணல். அவர்தம் தமிழ் வாழ்வையும் இலக்கியப் பணிகளையும் இக்கட்டுரையில் நினைவுகூர்கிறேன்.

பிறப்பு
தமிழண்ணல் அவர்கள் 12.08.1928 இல் சிவகங்கை மாவட்டம் நெற்குப்பை என்னும் சிற்றூரில் பிறந்தவர். பெற்றோர் இட்டபெயர் பெரியகருப்பன் என்பதாகும். இவர்தம் பெற்றோர் இராமசாமி, கல்யாணி ஆச்சியாவர்.

கல்வி

மேலைச்சிவபுரி கணேசர் செந்தமிழ்க் கல்லூரியிலும், திருவையாறு அரசர் கல்லூரியிலும் பயின்று தமிழ் வித்துவான் பட்டம் பெற்றவர்(1948). பிறகு தன்முயற்சியால் கற்று சென்னைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை (பொருளியல்) (1948), முதுகலைத் தமிழ்(1961) ஆகிய பட்டங்களைப் பெற்றவர். மதுரை தியாகராசர் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றிய காலத்தில் சங்க இலக்கிய மரபுகள் என்னும் பொருளில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர்(1969). முனைவர் சி.இலக்குவனாரும், முனைவர் அ.சிதம்பரநாதனாரும் இவர்தம் ஆய்வு நெறியாளர்கள் என்பது குறிப்பிடத்தகுந்தது.

ஆசிரியர் பணி

தமிழண்ணல் அவர்கள் காரைக்குடி மீ.சு.உயர்நிலைப்பள்ளியில் தம் ஆசிரியர் பணியைத் தொடங்கினார். இங்குத் தம் கல்லூரித் தோழர் கவிஞர் முடியரசனாருன் பணிபுரிந்தமை குறிப்பிடத்தக்க ஒன்றாகும். பதின்மூன்று ஆண்டுகள் இங்குப் பணிபுரிந்த பிறகு மதுரைத் தியாகராசர் கல்லூரியில் பத்தாண்டுகள் தமிழ்ப் பேராசிரியர் பணியாற்றினார். இவர் தம் சங்க இலக்கியப் புலமையை அறிந்த ஆலை அரசர் கரு. முத்து. தியாகராசனார் இவருக்கு உள்ளன்போடு பணி வழங்கியதை அண்ணல் அவர்கள் நெகிழ்ந்து கூறுவார்கள்.

1971 முதல் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப் பணியாற்றியும் பின்னர் இணைப்பேராசிரியர், அஞ்சல்வழிக் கல்விப் பேராசிரியர், தமிழியல்துறைப் பேராசிரியர், ஒருங்கிணைப்பாளர் பணி என மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் பல நிலைகளில் பணிபுரிந்துள்ளார். இவர்ம் பணிக்காலத்தில் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை சிறப்பு நிதியுதவித் துறையாக உயர்வுபெற்றது.

குடும்பம்

தமிழண்ணல் அவர்களுக்கு 1954, ஆகத்து 30 இல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்குச் சோலையப்பன், கண்ணன், மணிவண்ணன் என்ற ஆண்மக்களும், கண்ணம்மை, அன்புச்செல்வி, முத்துமீனாள் என்ற பெண்மக்களும் பிறந்து வாழ்வாங்கு வாழ்ந்து வருகின்றனர்.

தமிழண்ணல் பெற்ற சிறப்புகள்

1971 இல் குடியரசு நாளில் புதுதில்லி அனைத்து இந்திய வானொலி நிலையத்தில் நடைபெற்ற கவியரங்கில் தமிழகத்தின் சார்பில் கலந்துகொண்டு இவர் செல்வம் என்ற தலைப்பில் பாடிய கவிதை அனைத்து இந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு ஒலிபரப்பப் பெற்ற சிறப்பிற்கு உரியது. மதுரை மீனாட்சியம்மை பற்றி இவர் பாடிய பாடல்கள் தமிழக அரசின் முதற்பரிசு பெற்றது. மறைமலையடிகள் பிள்ளைத்தமிழ் என்ற இவர் நூலும் பரிசுபெற்ற ஒன்றாகும். தமிழக அரசால் சாகித்திய அகாதெமியின் பொதுக்குழு உறுப்பினராகத் தேர்ந்ததெடுக்கப்பட்டார். 1985 முதல் ஞானபீட விருதுக்குரிய கருத்துரைஞர் குழுவில் பணியாற்றி வருகிறார். தமிழக அரசின் சங்க இலக்கியக்குறள் பீடத்தின் துணைத் தலைவராகவும் பணிபுரிந்தவர்.

பல்கலைக்கழக நல்கைக்குழு தமிழண்ணல் அவர்களை 1981-82 ஆம் கல்வியாண்டில் தேசியப் பேராசிரியராகத் தேர்வு செய்து சிறப்புச்செய்தது. இந்தியப் பல்கலைக்கழகங்கள் பலவற்றிற்கும் சென்று தமிழ் மொழியின் தொன்மை, சிறப்பு, இலக்கியக் கொள்கைகளைப் பற்றி சொற்பொழிவாற்றிப் பிற மொழியினருக்குத் தமிழின் சிறப்பை எடுத்துரைத்தர்.

இலங்கை, சப்பான், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்குக் கல்விப் பயணமாகச் சென்று கருத்தரங்குகளில் உரையாற்றிய பெருமைக்கு உரியவர்.

இவர் மேற்பார்வையில் நாற்பதுக்கும் மேற்பட்டவர்கள் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர். முனைவர் மு.தமிழ்க்குடிமகன் உள்ளிட்டவர்கள் இவரின் நெறிப்படுத்தலில் முனைவர் பட்டம்பெற்றவர்கள். தினமணி உள்ளிட்ட இதழ்களில் இவர் எழுதிய கட்டுரைகள் புகழ்பெற்றவைகளாகும்.

தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்கள் இவருக்கு 1989 ஆம் ஆண்டில் தமிழக அரசின் திரு.வி.க.விருது வழங்கிச் சிறப்பித்துள்ளார்.

மதுரை காமராசர் பல்கலைக்கழகம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், வெங்கடேசுவரா பல்கலைக்கழகம், சென்னைப் பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம், கோழிக்கோடு பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்கலைக்கழகங்களில் பாடத்திட்டக்குழு உறுப்பினராகப் பணிபுரிந்த பெருமைக்கு உரியவர். சிங்கப்பூர் அரசின் அழைப்பில் தமிழ்க்கல்விக்கு உரிய பாடநூல் எழுதும் பணியிலும் ஈடுபட்டவர்.

தமிழகப்புலவர் குழுவின் உறுப்பினராக இருந்து திறம்படப் பணிபுரிந்து வருகிறார். தமிழ்ச்சான்றோர் பேரவை தமிழ்வழிக் கல்வியை முன்னிலைப்படுத்தித் தமிழறிஞர்கள் சாகும்வரை உண்ணாநோன்பு போராட்டம் நிகழ்த்திய பொழுது அறிஞர் சிலம்பொலி செல்லப்பனார் போராட்டத் தலைமையிலிருந்து விலகிக்கொண்டபொழுது தாமே முன்வந்து தமிழ்வழிக் கல்விக்காகச் சாகும்வரை உண்ணா நோன்பில் தலைமைதாங்கி நடத்திய வரலாற்றுப் பெருமைக்கு உரியவர் நம் தமிழண்ணல் அவர்கள்.

அருட்செல்வர் பொள்ளாச்சி மகாலிங்கம் அவர்கள் தொல்காப்பியப் பதிப்பை அறிஞர் இராமலிங்கனார், பகீரதன் ஏற்பாட்டில் பதிப்பித்துப் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விழாவில் அறிஞர்கள் முன்னிலையில் வெளியிட்டபொழுது தமிழுக்கு இந்நூல் கேடானது எனத் துணிந்து குரல்கொடுத்து கண்டித்தவர் நம் தமிழண்ணல் அவர்கள். (இத்துணிவும் தமிழ்ப்பற்றும் கண்ட பிறகே அந்நாளில் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் ஆய்வுமாணவனாக இருந்த இக் கட்டுரையாளனுக்கு இவரின் மேல் அளவுக்கு அதிகமான ஈடுபாடு வந்தது.இவர்தம் தலைமையில் தம் திருமணம் நிகழவேண்டும் என உறுதி செய்து பல ஆண்டுகளுக்குப் பிறகு செயங்கொண்டத்தில் 31.03.2002 இல் திருமணம் நிகழ்ந்தது)

தமிழண்ணல் நூல்கள்

தமிழண்ணல் தமிழ் இலக்கியம், இலக்கணம், திறனாய்வு, நாட்டுப்புறவியல், உரை, படைப்பு எனப் பல திறத்தில் அமையும் நூல்களை வழங்கியுள்ளார். அவற்றுள் சில :

வாழ்வரசி புதினம்
நச்சுவளையம் புதினம்
தாலாட்டு
காதல் வாழ்வு
பிறைதொழும் பெண்கள்

சங்க இலக்கிய ஒப்பீடு- இலக்கியக் கொள்கைகள் (2003)
சங்க இலக்கிய ஒப்பீடு- இலக்கிய வகைகள்(2005)
தொல்காப்பியரின் இலக்கியக் கொள்கைகள்(2004)
புதியநோக்கில் தமிழ்இலக்கிய வரலாறு
தமிழியல் ஆய்வு(இ.முத்தையாவுடன்)
ஆய்வியல் அறிமுகம்(இலக்குமணனுடன்)
ஒப்பிலக்கிய அறிமுகம்
குறிஞ்சிப்பாட்டு இலக்கியத் திறனாய்வு விளக்கம்

தொல்காப்பியம் உரை
நன்னூல் உரை
அகப்பொருள் விளக்கம் உரை
புறப்பொருள் வெண்பாமாலை உரை
யாப்பருங்கலக் காரிகை உரை
தண்டியலங்காரம் உரை
சொல் புதிது சுவை புதிது
தமிழில் அடிக்கடி நேரும் பிழைகளும் திருத்தமும்
தமிழுக்கு ஆகமங்கள் தடையாகுமா?
பேசுவது போல் எழுதலாமா? பேச்சுத் தமிழை இகழலாமா?
பிழை திருத்தும் மனப்பழக்கம்
உரை விளக்கு
தமிழ் உயிருள்ள மொழி
தமிழ் கற்பிக்கும் நெறிமுறைகள்
தமிழ்த்தவம்
உங்கள் தமிழைத் தெரிந்துகொள்ளுங்கள்
திருக்குறள் உரை

இனிய தமிழ்மொழியின் இயல்புகள் முதலியன

முனைவர் தமிழண்ணல் அவர்களின் முகவரி :

முனைவர் தமிழண்ணல் அவர்கள்
ஏரகம்,
4/585 (732) சதாசிவ நகர்,
வண்டியூர்ச்சாலை,
மதுரை - 625 020

பேசி : 0452 - 2533792
செல்பேசி : 94430 64749

நூல்கள் கிடைக்குமிடம் :
மீனாட்சி புத்தக நிலையம்
48,தானப்ப முதலி தெரு,மதுரை - 625 001,தமிழ்நாடு

8 கருத்துகள்:

Unknown சொன்னது…

தமிழறிஞர் தமிழண்ணல் அவர்களை பலரும் அறிந்திருந்தாலும் அவர்கள் அறியா பல தகவல்களோடு தொடர்பு விபரங்களையும் தந்துள்ளது சிறப்பு. வாழ்த்துகள், நன்றி.

முனைவர் மு.இளங்கோவன் சொன்னது…

தங்கள் அன்பான பதிவிற்கு நன்றி.
மு.இ

அ. பசுபதி (தேவமைந்தன்) சொன்னது…

en arum naNbar amarar munaivar nAgappA nAcchiyappan vazhi nAn nanRAka arindha thamizhaNNal aiyAvai mElum siRappAka uNara vaithuLLIrkaL!
anbudan,
Devamaindhan

முனைவர் மு.இளங்கோவன் சொன்னது…

நன்றி
மு.இ

கோவி.மதிவரன் சொன்னது…

முனைவர் தமிழண்ணல் அவர்களின் தொல்காப்பிய உரையைப் படித்துள்ளேன். அவரைப் பற்றிய தகவல்களுக்கு நன்றியன்

.கவி. சொன்னது…

தமிழறிஞர் தமிழண்ணல், சுருக்கமான பதிவு. நிறைவான செய்தி.

ஐயாவின் உரைநூல்கள் பல இளைஞர்களை தமிழ்பால் ஈர்த்துள்ளது.

தமிழ் - தமிழறிஞர்கள் குறித்த தங்கள் பதிவைத் தொடர்க.

அவர்கள் புதல்வர் மணிவண்ணன் பெரியகருப்பன், அமெரிக்க கொலம்பசில் தமிழ் வளர்க்கவும் பாடுபடுகிறார் என்பதும் குறிப்பிடப் பட வேண்டிய செய்தி.

வீட்டிற்கு ஒருவர் இராணுவத்திற்கு என்ற காலம் போய், வீட்டிற்கு ஒருவரைத் தமிழுக்கத் தாருங்கள் என்று கேட்ட வேண்டிய நிலையில் உள்ள தமிழினத்தில், மணி பெரியகருப்பன் போன்ற அடுத்த தலைமுறைத் தமிழார்வம் வரவேற்க வேண்டியது

அன்புடன்
.கவி.

Unknown சொன்னது…

Thamizhannalai nanraaka aRimukam ceytulliirkal. Thamizhannal innum niinda kaalam vaazhntu Tamizhukku tondu ceyya veendumena Aalvaayaanai Veendukireen.

Peeraciriyar a. canmukathaas.

tamilthiru சொன்னது…

தமிழியல் பற்றி தேடினால்
இளங்கோ அவர்களின் வலைப்பூ தான்
கண் முன் வருகிறது

பேரன்புடன் -தமிழ்த்திரு