நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

ஞாயிறு, 6 ஜூலை, 2008

தமிழ்மணம் தந்த காசி ஆறுமுகம் தமிழ் ஓசையில் என் கட்டுரை...


தமிழ்ஓசை களஞ்சியம்,06.07.08

உலக மக்களுக்குப் பயன்படும் பல கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியவர்கள்அவர்கள் வாழுங் காலத்தில் பல இன்னல்களுக்கு ஆட்படுத்தப்பட்டார்கள் என்பதுவரலாறு. உலகம் உருண்டை என்ற கலிலியோ தொடங்கி ஒரு செல் உயிரியிலிருந்து மாந்தன் தோன்றினான் என்ற சார்லசு டார்வின் வரை இதனை நம்மால் அறியமுடிகிறது. இத்தகு கண்டுபிடிப்புகளில் ஈடுபடுபவர்கள் தமிழர்கள்என்றால் அடையும் இன்னல்களும் பழிகளும் கணக்கிலடங்காது. அறிஞர் துரைசாமியார் நாயுடு அவர்களின் கண்டுபிடிப்புகள் நம் நாட்டில் போற்றப்படாமையை நினைவிற்கொள்க.

கணிப்பொறி, அறிவியல் கண்டுபிடிப்புகள் என்றால் குறிப்பிட்டஒருசாராருக்கு என்று இருந்த நிலையை உடைத்து இன்று தமிழர்கள் அனைவரும்வல்லாண்மை செலுத்தும் ஒரு துறையாகக் கணிப்பொறித்துறை மாறிவருகிறது. ஆனந்தகிருட்டிணன், பொன்னவைக்கோ, அமரர் நா.கோவிந்தசாமி, முத்தெழிலன்,முகுந்து என்று தமிழ்க் கணிப்பொறித் துறையில் குறிப்பிடத் தகுந்தஆளுமைகள் இன்று உலகம் பாராட்டும் வண்ணம் செயல்படுகின்றனர். கணிப்பொறியில் ஆங்கிலத்திற்கு அடுத்த நிலையில் அனைத்து வசதிகளும் தமிழ்மொழியில் கிடைக்கும் வண்ணம் அறிஞர்கள் பலர் பங்களிப்புகளைச் செய்துவருகின்றனர்.

கணிப்பொறியிலும் அதன்வழி இயங்கும் இணையத்திலும் பல வசதிகள் உள்ளன.அவற்றுள் ஒன்று வலைப்பதிவு.வலைப்பதிவுகள் இன்று உலகம் முழுவதும் விவரம் தெரிந்தவர்களால் நன்கு பயன்படுத்தப்படுகிறது. அமெரிக்க நாட்டுத் தேர்தல் முடிவுகளை மாற்றியமைப்பதில் வலைப்பதிவர்களின் பங்கு மிகுதியாக உள்ளது.

தமிழ் வலைப்பதிவுகள் 2003 இல் அறிமுகம் ஆயின. இணைமதி, மயிலை எழுத்துருக்களில் தொடங்கி, தரப்படுத்தப்பட்ட எழுத்துருக்களில் வளர்ந்து,ஒருங்குகுறி எழுத்தின் வருகைக்குப் பிறகு தமிழ் வலைப்பதிவு மிகப் பெரிய வளர்ச்சிகளைக் கண்டுள்ளது. தமிழ்வலைப்பதிவு வளர்ச்சிக்கு மிகப் பெரிய பங்காற்றிய பொறியாளர் ஒருவரை இங்கு அறிமுகப்படுத்தும் வண்ணம் இக் கட்டுரைஅமைகிறது.

தமிழ் இணையம் பயன்படுத்துபவர்களுக்கு நன்கு அறிமுகமான பெயர் 'தமிழ்மணம்'. இதனை உருவாக்கியவர் காசிலிங்கம் ஆறுமுகம். 'காசி' எனஅறியப்படுபவர். இவர் கோயமுத்தூருக்கு அருகில் உள்ள வடசித்தூர் என்னும் ஊரில் பிறந்தவர். பெற்றோர் திரு. ஆறுமுகம், திருமதி. சரசுவதி. தந்தை சில வகுப்புகள் படித்தவர். தாய் எழுதப் படிக்கத் தெரியாதவர்.

காசி எட்டாம் வகுப்பு வரை வடசித்தூரில் படித்தார்; ஒன்பதும் பத்தும் பொள்ளாச்சியில் படித்தார். பல்தொழில் நுட்பப் படிப்பைப் பொள்ளாச்சி நாச்சிமுத்து பல்தொழிற் கல்லூரியில் படித்தார்(1978-81). கோவை எவெரெசுடு பொறியியல்நிறுவனத்தில் சிலகாலம் பணி. அத்துடனே மாலைநேரத்தில் அரசு பொறியியல் கல்லூரியில் பகுதி நேரமாகப் பொறியியல் பட்டப்படிப்பு. இதன் பின்னர் திருவள்ளூரில் இந்துசுதான் மோட்டார்ஸ் நிறுவனத்தில் பொருள் வடிவமைப்பாளராகப் பணியில் இணைந்தார். மண்வாரி இயந்திரங்களின் பகுதிகளை வடிவமைக்கும் பணி. ஆறரை ஆண்டுகள் இப்பணியில் இருந்தார். இக்காலத்தில்சென்னை ஐ.ஐ.டியில் தொழில்நுட்பம் முதுகலை(எம்.டெக்) படித்தார்.

பின்னர் கோவை ரூட்சு நிறுவனத்தில் வடிவமைப்பு மேலாளராகப்பணிபுரிந்து அந்நிறுவன வளர்ச்சிக்குப் பல வகையில் உதவியாக இருந்தார்.2000 ஆண்டில் தொழில்நுட்ப இயக்குநர் பொறுப்புக்கு உயர்ந்தார். காசிஅவர்கள் கணினிவழி பொருள் வடிவமைக்கும் நுட்பத்தைச் செயல்படுத்தி தரையைத்தூய்மை செய்யும் பல கருவிகளை வடிவமைத்தார். உலக அளவில் ஏற்றுமதித் தரம்வாய்ந்த பொருள்களை உருவாக்கும் ஆற்றலைப் பெற்றிருந்தார் காசி. 2000 இல் அந் நிறுவனத்திலிருந்து வெளியேறி சென்னையில் டாடா கன்சல்டன்சி நிறுவனத்தில் பணிபுரிந்தார்.

ஒருவருடம் கணினி வழிவடிவமைப்புகளைப் பகுப்பாய்வு செய்யும் பணிபுரிந்த பிறகு இவரைஅமெரிக்காவிற்கு அனுப்பியது டாடா நிறுவனம். நியூயார்க் மாநிலத்தில் ரோச்சஸ்டர் நகரில் உள்ள, புத்துருவாக்கத்தில் உலகப் புகழ்பெற்றசிராக்ஸ் நிறுவனத்தின் ஆராய்ச்சிப் பிரிவில் பணிபுரிந்தார்.

இருகுழந்தைகள், மனைவியுடன் நான்கு வருடங்கள் அமெரிக்காவில் வாழ்ந்தார். முன்னதாகவே ஓய்வு நேரத்தில் முயன்று, 2000 இல் இல்லங்களில் 'சேவை'எனப்படும் இடியாப்பம் செய்வதற்காக புதிய சாதனம் ஒன்றைக் கண்டுபிடித்து,2001 இல் காப்புரிமைக்கும் விண்ணப்பத்திருந்தார். இக்கருவி பற்றி தனியாகச் செய்தி உள்ளது.

அமெரிக்காவில் வசித்தபோது, காசிக்குக் கிடைத்த ஓய்வு நேரங்களில்இணைய வசதிகளைப் பயன்படுத்த தொடங்கினார். யாகூ உள்ளிட்ட நிறுவனங்கள் பல்வேறு சேவைகளை மக்களுக்கு வழங்கியது. 2003 இல் வலைப்பதிவுகள் அறிமுகம்ஆனது. அயல்நாடுகளில் வாழ்ந்தவர்கள் தங்கள் அனுபவங்களை,படைப்புகளை,செய்திகளை வலைப்பதிவில் பதியும் வழக்கத்தில் இருந்தனர்.இவ்வாறு உலகம் முழுவதும் பதியும் தமிழ் வலைப்பதிவர்கள் முகவரியை சில ஆர்வலர்கள் பட்டியலிட்டுத் தங்கள் கணிப்பொறியில் வைத்திருந்தனர்.இப்பட்டியல் வழியாக யார் யார் என்ன செய்திகளைப் பதிந்துள்ளனர் என வெளி உலகிற்குத் தெரியத் தொடங்கியது.

வலைப்பதிவு எழுதுபவர்கள் தொழில் நுட்பம்தெரிந்தவர்கள் என்பதால் இலக்கியப் படைப்புகளாக அல்லாமல் பெரும்பாலானவலைப்பதிவுகள் சிறு அனுபவங்கள், பயண அனுபவங்கள், சிறுபடைப்புகளைத் தங்கள் வலைப்பதிவுகளில் இட்டு வைத்தனர்.

காசி ஆறுமுகம்

காசி அவர்களும் சித்தூர்க்காரனின் சிந்தனைச்சிதறல்கள் என்றதலைப்பில் தன் வலைப்பதிவை உருவாக்கினார். கருவிகளைப் புத்துருவாக்கம் செய்யும் ஆற்றல் பெற்றிருந்த காசி வலைப் பதிவில் தொடந்து ஈடுபட்டு உலகம் முழுவதும் தமிழில் எழுதும் வலைப்பதிவுகளை இணைப்பது பற்றி சிந்திக்கத்தொடங்கினார். இந்த நேரத்தில் எ-கலப்பை முகுந்து அவர்கள் நியூக்ளியசுஎன்னும் வலைப்பதிவு தொடர்பிலான மென்பொருளைத் தமிழ்ப்படுத்தும்படி இணையம்வழி வேண்டுகோள் விடுத்தார். இப் பணியில் ஈடுபட்டதன்மூலம் வலைப்பதிவுகள் ஒன்றிணைக்கும் முயற்சிக்கான நுட்ப அறிவு காசிக்குக் கிடைத்தது.

ஆதாரப்பூர்வ முதல் வலைப்பதிவு தொடங்கிய கார்த்திகேயன் இராமசாமி(தமிழ்மணத்தை நடத்தும் நிறுவனச் செயலர்) வலைப்பதிவுகளில் முன்னோடியாக விளங்குபவர். நா.கண்ணன், கனடா வெங்கட், மாலன், மதி கந்தசாமி, சுரதா,இராம.கி, பத்ரி உள்ளிட்டவர்கள் தொடக்ககாலத்தில் சிறப்பாக வலைப்பதிவில் இயங்கியுள்ளனர். அக்கால வலைப்பதிவில் செய்தி சொல்வது இயல்பாக இருந்தது. எழுதுபவர்களின் எண்ணிக்கை குறைவு. செய்திகள் சிறப்பானவையாக இடம்பெற்றன.

தனிமாந்தத் தாக்குதல், மொக்கைப்பதிவு, கும்மிப் பதிவுகள் அதிகம் இல்லை. பழந்தமிழ்க் கட்டுரை, பயண இலக்கியம், புனைவு இலக்கியம், ஆன்மீகம்,பழந்தமிழ் இலக்கியம் பற்றி பல பதிவுகள் இருந்தன. அரசியல், சமூகம் சார்ந்த செய்திகள் இன்றிருப்பதைப்போல அதிகம் இல்லை. முகுந்து, சுரதா, செல்வராசுஉள்ளிட்டவர்கள் தொடக்க காலத்தில் வலைப்பதிவு திரட்டி முயற்சிகளில் ஈடுபட்டவர்கள் எனில் பிழையன்று. உலகம் முழுவதும் இம்முயற்சி நடைபெற்றதால் இவற்றைத் துல்லியமாகக் குறிப்பிடுவதில் சிக்கல் உள்ளது.

இந்த சூழலில் புதுமையான வடிவமைப்பு, இயங்குமுறை கொண்டு காசியின்உழைப்பில் தமிழ்மணம்.காம் உருவாகி 2004ஆம் ஆண்டு ஆகசுடு மாதம் பயனுக்குவந்தது. ஓர் ஆண்டுக்குள் பல மாற்றங்களை, வளர்ச்சிகளைப் பெற்றுதமிழ் இணையத்தில் தனக்கென ஒரு தனிச்சிறப்பான இடத்தைப் பெற்றது. உலகில்எழுதப்படும் அனைத்துத் தமிழ்ப் பதிவுகளையும் திரட்டித் தரும் தளமாகஅத்தளம் செயல்பட்டது.

இன்று தமிழில் எழுதப்படும் வலைப்பதிவுகள் மட்டுமன்றித் தமிழின்கிளைமொழிகளான தெலுங்கு,கன்னடம்,மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் எழுதப்படும் வலைப்பதிவுகளையும் திரட்டித் தரும் தளமாகத் தமிழ்மணம் உள்ளது. நாம்எழுதும் வலைப்பதிவுகளை உடனுக்குடன் திரட்டும் வண்ணம் தமிழ்மணத்தின் தொழில்நுட்பம் உள்ளது. தமிழ்மணத்தின் கருவிப் பட்டையை நம் தளத்தில் பொருத்திவிட்டால் நாம் எழுதும் வலைப்பதிவை ஒரு நொடியில் தமிழ்மணம் வழியாகஉலகத்தின் பார்வைக்கு வைக்கமுடியும்.

நம் படைப்புகளைப் படித்த படிப்பாளிகள் நமக்கு எழுதும்மறுமொழிகளையும் தமிழ்மணத்தில் காட்ட வசதி உள்ளது. இன்றைய தமிழ்மணம் தளத்தில் உலகில் நடைபெறும் நிகழ்வுகள் விழி என்னும் தலைப்பில் காணொளியாகக் காட்டும் வசதியும், உலகச்செய்திகள் உடனுக்குடன் காட்டும்படியான வசதிகளும் உள்ளன. உண்மையில் சொல்லப்போனால் உள்ளங்கையில்
உலகம் என்பது தமிழ்மணத்திற்குதான் பொருந்தும். இவ்வளவு பெரிய கண்டுபிடிப்பைக் காசி நிகழ்த்தியதால் இணையத்தில் தமிழில் எழுதக்கூடியவர்களின் எண்ணிக்கை மிகுந்தது. உலக வலைப்பக்கத்தில் தமிழ்ப்பக்கங்களின் எண்ணிக்கை
மிகுந்தது.

தமிழ் எழுத்தாளர்கள்/செய்தியாளர்கள்/பத்தியாளர்கள், பொதுவாகச்சொன்னால் வலைப் பதிவாளர்கள், தங்கள் படைப்புகளை எந்தச் சிக்கலும் இல்லாமல் உடனுக்குடன் வெளியுல கிற்குத் தெரிவிக்க முடிந்தது. உலகம் முழுவதும் உள்ளதமிழர்கள் தம் தாய்மொழியில் எழுதப்படும் படைப்புகளை உடனுக்குடன்தெருந்துகொள்ளும் வாய்ப்பைப் பெற்றனர். காசிக்கு உதவியாக ஈரோடுபகுதியிலிருந்து அமெரிக்கா குடிபுகுந்த முனைவர் செல்வராசும், கனடாவிலிருந்து மதி கந்தசாமியும் நிர்வாகத்தில் உதவினார்கள்.

பெரிய ஊடங்கங்கள் தாங்கள் தருவதுதான் உண்மைச் செய்தி என்ற நிலையைமாற்றி உலகின் எந்த மூலையில் வாழும் எவராலும் செய்தியை உடனுக்குடன் உலகின் பார்வைக்குக் கொண்டுவரமுடியும் என்ற நம்பிக்கையைத் தமிழ்மணம் உண்டாக்கியது. இதனால் உடனுக்குடன் உள்ளூர் அரசியல முதல் உலக அரசியல்வரை செய்திகள் பரிமாறப்பட்டன.

சாதி,மத உணர்வு கொண்டவர்கள் செய்த தவறுகள் இணைய அன்பர்களால் விவாதத்திற்கு உட்படுத்தப்பட்டது. இருட்டில் நடக்கும் நிகழ்வுகள் அடுத்த நொடியே உலகின் பார்வைக்கு வந்ததால் தவறு செய்தவர்களும்அவர்களுக்கு வேண்டியவர்களும் தமிழ்மண வளர்ச்சியைக் குறிவைத்துத் தாக்கினர்.பல்வேறு பொய்ப் பிரச்சாரங்களைப் பரப்பினர்.

காசி உள்ளிட்ட அன்பர்கள் பலவகை மன உலைச்சலுக்கு ஆளானார்கள். காசியைப் பற்றி அவதூறுசெய்திகள் பரப்பட்டன. தொடர்ந்து தமிழ்மணத்தை நடத்த விரும்பாத நிலைக்கு காசி வந்துவிட்டார். உலகத் தமிழர்களை இணைத்த தமிழ்மணம் என்ற திரட்டியைஉருவாக்கிய காசிக்கு ஆதரவாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் அணிதிரண்டு உதவ நினைத்தனர். இதன் ஒரு விளைவாகத் தனி ஒருவர் நிர்வகிப்பதற்குப் பதிலாக அமெரிக்காவில் வாழும் தமிழர்களின் நிறுவனமான தமிழ் மீடியா இண்டர்நேஷனல் என்னும் நிறுவனம் தமிழ்மணத்தை வாங்கி தன்பொறுப்பில் ஏற்று நிர்வாகம் செய்யப்பட்டுகிறது.

பலநாள் கண்விழித்துத் தமிழ்மணத்தை உருவாக்கிய பொறியாளர் காசிஆறுமுகம் அவர்கள் வலைப்பதிவு வரலாற்றில் என்றும் நிலைத்த புகழ்பெற்றவர்.அமெரிக்கா சென்றால் மிகுதியாகப் பொருளீட்டலாம என நினைக்கும் நம்வெள்ளைக்கார அடிமைக் கணிப்பொறி வல்லுநர்களிலிருந்து வேறுபட்டவர் நம்காசி. அமெரிக்க வாழ்க்கை தம் கண்டுபிடிப்புகளைத் தமிழ்நாட்டிற்குவழங்கவிடாமல் செய்துவிடும் என உணர்ந்து, தமிழகத்திற்கு வந்து ஒப்பந்தப்படி மீண்டும் தாம் பணிபுரிந்து நிறுவனத்தில் ஆறுமாதம் பணிபுரிந்துவிட்டுமுன்பே திட்டமிட்டபடி கோவையில் நண்பர்களுடன் சேர்ந்து நிறுவனம் ஒன்றைத் தொடங்கினார்.

'சேவை மேசிக்' எனப்படும் இடியாப்பக் கருவிகள் செய்யும் நிறுவனம் இப்பொழுது அவரின் நண்பர்களின் பொறுப்பில் சிறப்பாக இயங்குகிறது.

அது என்ன தமிழ்மணம்?

தமிழ் மணம் என்பது உலகம் முழுவதும் தமிழில் எழுதப்படும் வலைப்பதிவுகளைத் திரட்டித்தரும் இணையத்தளம். தமிழ்ப்பதிவுகள் மட்டுமன்றி மலையாளம், தெலுங்கு , கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் எழுதப்படும் பதிவுகளையும் திரட்டித் தரும். தமிழ் மணத்தில் நாம் நம் மின்னஞ்சல்,வலைப்பக்க முகவரியைத் தந்து பதிவு செய்தால் நாம் வலைப்பதிவு செய்யும் கருத்துகளை ஆராய்ந்து பார்த்து தமிழ்மணம் இணைப்பில் நம் வலைப்பதிவை இணைத்துக்கொள்வார்கள்.மூன்று பதிவுகள் நம் வலைப்பக்கத்தில் இட்ட பிறகே தமிழ்மணத்தில் பதிவு செய்யமுடியும்.

பாலியல்,வன்முறை உள்ளிட்ட சமூகத்திற்குத் தீங்கு தரும் செய்திகளை எழுதுபவரின் பதிவைத் தமிழ்மணம் இணைத்துக்கொள்ளாது. தமிழ்மணத்தில் இதுவரை 3182 பேர் தங்கள் பதிவுகளை இணைத்துக்கொண்டு எழுதி வருகின்றனர்(28.06.2008 நிலவரம்).ஒரு நாளைக்குச் சராசரியாக 505 படைப்புகள் எழுதப்படுகின்றன. 1168 மறுமொழிகள் இடப்படுகின்றன. தமிழில் வலைப்பதிவைத் திரட்டும் முதல் தளமாகவும் அனைவராலும் அறியப்பட்ட தளமாகவும் இருப்பது தமிழ்மணமாகும். அமெரிக்காவில் உள்ள தமிழ் மல்டிமீடியா இண்டர்நேசனல் என்னும் நிறுவனம் இதனை நடத்திவருகிறது. இதற்கென நிருவாக குழு உள்ளது.

தமிழ்மணம் அமைப்பு

தமிழ்மீடியா இண்டர்நேசனல் நிறுவனம் தொடர்ந்து தமிழ்மணத்தைநுட்பரீதியாக மேம்படுத்திவருகிறது. இன்றைய தமிழ்மணம் தளம் கண்ணைக் கவரும்வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. வடிவமைப்பு இரு வகையில் மாற்றிக்கொள்ளும்படி உள்ளது. முகப்பு,இடுகைகள்,பதிவுகள்,'ம'திரட்டி,பூக்கூடை,தமிழ்விழி, கேளிர்,மன்றம், உதவி/தகவல் என்னும் அமைப்பில் சிறு தலைப்புகளைப் பெற்றிருக்கும். இன்று என்னும் பகுப்பில் இன்று இடப்பட்டபதிவுகள் மின்னிச்செல்லும் அமைப்பில் இருக்கும். இடப்பக்கமும்,வலப்பக்கமும் பட்டிகளாகவும், நடுவில் ஒரு பகுப்பு செய்திகளுக்கு எனவும்அமைக்கப்பட்டிருக்கும்.

இடப்பக்கப் பட்டையில் விளம்பரம் அறிவிப்புகள்,தமிழ்மணத்தில் இணைக்க, தமிழ்மணம் புள்ளிவிவரம், தமிழில் எழுதுங்கள்,தமிழ் மென்பொருட்கள், சூடான இடுகைகள், வாசகர் பரிந்துரை, பதிவர் பலகை,பதிவர் புத்தங்கங்கள்,பதிவர் முயற்சி, குறிச்சொற்கள் உள்ளிட்ட சில விளக்கக் குறிப்புகள் காணப்படும். இவற்றின் துணையால் நமக்குத் தேவையான
வசதிகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.

வலப்பக்கம் இருக்கும் பட்டையில் மறுமொழிகள்,அனைத்து மறுமொழிகள்,இன்றைய மறுமொழிகள், செய்திகள்,கேளிர் திரட்டி என்னும் குறிப்புகள்இருக்கும். நடுப்பக்கம் உள்ள பட்டையில் பதிவர்பெயர், இடும் செய்திகளின்தலைப்பு,உள்ளடக்கம் ஒரிரு வரி இடம்பெறும்.புதியதாக இணைக்கும் பதிவுகள்புதியது என்று சிவப்பு மையால் தனி அடையாளப்படுத்திக் காட்டப்படும்.

பதிவுகளைத் தமிழ்மணத்தில் இணைக்க அதன் கருவிப்பட்டையை நம்வலப்பதிவுப்பக்கத்தில் இணைத்திருந்தால் உடன் நமது பதிவையும் மறுமொழியையும் தமிழ்மணத்தில் காட்டிவிடமுடியும்.தமிழ்மணத்தின் வழியாகத் தமிழ்ப்பதிவுகளை மட்டும் படிக்க முடியும் என்றில்லை.மலையாளம்,தெலுங்கு,கன்னட மொழியில் உலகம் முழுவதும் எழுதுபவர்களின் பதிவுகளையும் நம்மால் படிக்கமுடியும். பிறமொழி தெரிந்தவர்களுக்குத் தமிழ்மணம் மிகப்பெரிய கொடையாகும். தமிழர்களை இணைக்கும் பணியைச் செய்த காசி ஆறுமுகம் இணைய உலகில் என்றும்நினைவூகூரப்படும் பெயராகும்.

பெட்டிச்செய்தி

காசியின் சேவைமேஜிக் குக்கர்

காசியின் 'சேவைமேஜிக்' என்னும் பொருள் வடிவமைப்பிற்கான எண்ணம் 1999 இல் தோன்றியது. இதனை வடிவமைத்து விற்பனைக்குவிட பெருமளவு பணம் தேவை. எனவே பணம் திரட்ட டாடா கம்பெனி வழியாக அமெரிக்கப் பயணம். ஒரளவு கோவையில் சேவைமேஜிக் தயாரிக்க தொகை சேமித்துக்கொண்டார். இதற்கு முன்பாகவே இக்கருவிக்குக் காப்புரிமை பெற்றுவிட்டார். இரண்டு ஆண்டு உழைப்பு,திட்டமிடலுக்குப் பிறகு கோவையில் புதிய தொழிற்சாலை உருவாக்கும் எண்ணம் செயல்வடிவம் பெற்றது. இடியாப்பம் செய்ய எளிய கருவி இது.

கீழ்ப்பாத்திரம் குக்கர் வடிவம் போன்றது. விளிம்பில் சிறு மாறுபாடு காணப்படும். அதில் குறிப்பிட்ட அளவு தண்ணீர் ஊற்றிக் கொள்ளவேண்டும்.மூடிசிறப்பு வடிவமைப்பைக் கொண்டிருக்கும். நடுப்பாத்திரத்தில் மாவு ஒட்டாதவகையில் சிறப்புப் பூச்சு இருக்கும். உட்பகுதியின் நடுவில் ஒரு தண்டு இருக்கும். அரைத்த புழுங்கலரிசி மாவை ஊற்றி அடுப்பில் வைத்தால் 20மணித்துளிகளில் மாவு வெந்துவிடும். அதன்பிறகு மேல் பாத்திரத்தில் பிளாசுடிக்கில் செய்யப்பட்ட பாத்திரத்தைப் பொருத்தி குக்கர் வெயிட்டைப் போட்டுவிட்டால் நீராவியின் அழுத்தத்தில் நமக்குச் சிற்றுண்டிக்கு ஏற்ற இடியாப்பம் கிடைக்கும்.

நம் மரபு வழி உணவை மிகச் சிறப்பாகச் செய்ய இக் கண்டுபிடிப்பைக் காசி உருவாக் கியுள்ளார். ரூ.3150 விலையுள்ள சேவை மேஜிக் குக்கர் தன் அதிக அளவு உற்பத்தியை அடையும்பொழுது விலைகுறையும்.இதன் செயல்பாட்டு விளக்கத்தை இணையத்தில் சென்று பார்வையிடலாம்.

(தமிழ் ஓசைக்கு அனுப்பப்பெற்ற கட்டுரையின் மூலவடிவம் இது.கட்டுரை பக்க வரையறை கருதி சில பத்திகள் வெளியிடப்பெறவில்லை.எனவே அனைவருக்கும் பயன்படும் என்ற நோக்கில் முழுமையாக வெளியிடப்பெறுகிறது).

நனி நன்றி : தமிழ்ஓசை களஞ்சியம் 06.07.08 சென்னை,தமிழ்நாடு

13 கருத்துகள்:

தருமி சொன்னது…

காசியைப் பற்றிய இந்த நல்ல கட்டுரைக்கு நன்றி.

முனைவர் மு.இளங்கோவன் சொன்னது…

தங்கள் பதிவுக்கு நன்றி.

Unknown சொன்னது…

அய்யா,
விண்ணையும், மண்ணையும் ஒண்ணையும் விட்டுவைக்காதவன் தமிழன். ஆனால் இன்று......
காசி போன்ற ஒரு சிலரேனும் உள்ளனரே, வாழ்க காசி.

முனைவர் மு.இளங்கோவன் சொன்னது…

தமிழ்நாடன் அவர்களுக்கு வணக்கம்
தங்கள் பதிவிற்கு நன்றி.
மு.இ

மயிலாடுதுறை சிவா சொன்னது…

தங்கள் பதிவிற்கு மனமார்ந்த நன்றிகள்!

தொடரட்டும் தங்கள் பணி!

மயிலாடுதுறை சிவா...

முனைவர் மு.இளங்கோவன் சொன்னது…

பாராட்டிற்கு நன்றி.
மு.இ

SnackDragon சொன்னது…

இளங்கோவன் ,

கட்டுரைக்கு நன்றி.

முனைவர் மு.இளங்கோவன் சொன்னது…

நன்றி.
மு.இ

வெற்றி சொன்னது…

அறிந்திராத பல தகவல்களைத் தெரிந்து கொண்டேன்.

காசி அண்ணர் குறிச்ச தகவல்களுக்கு நன்றி.

அந்நாள் மற்றும் இந்நாள் தமிழ்மண நிர்வாகிகள்/உறுப்பினர்களின் சேவைக்கு தமிழ் கூறு நல்லுலகம் என்றென்றும் நன்றிக்கடன் பட்டுள்ளது.

உலகத்தின் பல மூலையிலும் இருக்கும் தமிழர்களை இணைக்கும் உறவுப்பாலமாகத் தமிழ்மணம் திகழ்கிறது என்றால் மிகையல்ல.

அ. பசுபதி (தேவமைந்தன்) சொன்னது…

நெடுங்காலம் என் வலைப்பதிவுக்கு இடம் தந்த நண்பர் பற்றிய சித்திரத்துக்கு நன்றி.
அன்புடன்,
தேவமைந்தன்

அ. பசுபதி (தேவமைந்தன்) சொன்னது…

நெடுங்காலம் என் வலைப்பதிவுக்கு இடம் தந்த நண்பர் பற்றிய சித்திரத்துக்கு நன்றி.
அன்புடன்,
தேவமைந்தன்

பெத்தராயுடு சொன்னது…

காசி அவர்களைப் பற்றிப் பதிவிட்டதற்கு நன்றி.

Balaji.paari சொன்னது…

இந்த கட்டுரையை நேர்த்தியாக எழுதி இங்கு இட்டதற்கு நன்றிகள்.