நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

புதன், 16 ஜூலை, 2008

தமிழறிஞர் முனைவர் ச.வே.சுப்பிரமணியன்...


முனைவர் ச.வே.சுப்பிரமணியன்

 தமிழ் மொழிக்கு அறிஞர் பெருமக்கள் பல வகையில் தொண்டு செய்துள்ளனர். அவ்வறிஞர் பெருமக்களுள் முனைவர் ச.வே.சுப்பிரமணியன் அவர்கள் குறிப்பிடத் தகுந்தவர். நெல்லை மாவட்டம் வீரகேரளம்புதூரில் 31.12.1929 இல் பிறந்தவர். பெற்றோர் சு.சண்முக வேலாயுதம், இராமலக்குமி அம்மாள்.

 தொடக்கக் கல்வியை விக்கிரம சிங்கபுரத்தில் உள்ள புனித இருதய மேல்நிலை தொடக்கப் பள்ளியில் பயின்றவர். உயர்நிலைப் பள்ளிக்கல்வியை அம்பாசமுத்திரம் தீர்த்தபதி உயர்நிலைப் பள்ளியில் பயின்றவர். இடைநிலைக் கல்வியை ம.தி.தா. இந்துக் கல்லூரியில் பயின்று, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை(ஆனர்சு)1950-53 இல் பயின்றவர். முனைவர் பட்டத்தைக் கேரளப் பல்கலைக்கழகத்தில் ஆய்வு செய்துபெற்றவர்.

 தூத்துக்குடி வ.உ.சி.கல்லூரியில் 1953-56  இல் தமி ழ் பயிற்றுநராகப் பணியைத் தொடங்கி, பின்னர் பாளையங்கோட்டையில் அமைந்துள்ள தூய சவேரியார் கல்லூரியிலும், திருவனந்தபுரம் பல்கலைக்கழகக் கல்லூரியிலும் விரிவுரையாளராகப் பணியாற்றினார். கேரளப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறைத்தலைவராக வீற்றிருந்து, புகழ்பெற்ற பல மாணவர்களை உருவாக்கினார். சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இயக்குநராகப் பணிபுரிந்து அரிய ஆய்வு நூல்களை வெளியிட்டுத் தமிழன்னைக்கு அழகு செய்து பார்த்தவர். இவர் காலத்தில் வெளியிட்ட நூல்கள் இன்றளவும் அரிய பார்வை நூல்களாகவும் பாடநூல்களாகவும் உள்ளன. கடும் உழைப்பாளியான இவர் தன் மாணவர்களையும் இவ்வாறு வளர்த்தவர். இன்று புகழ்பெற்று விளங்கும் தமிழறிஞர்கள் பலர் இவர் மாணவர்களாக இருப்பர்.

 அறிஞர் ச.வே.சுப்பிரமணியன் அவர்களால் இதுவரை எழுதப்பெற்ற நூல்களாகத் தமிழில் 54, ஆங்கிலத்தில் 5, மலையாளத்தில் 1 என்ற எண்ணிக்கையில் அமைகின்றன. தமிழகத்தின் எல்லாப் பல்கலைக் கழங்கங்களிலும் அறக்கட்டளைச் சொற்பொழிவாற்றியுள்ளார். அவை பல நூல்வடிவம் பெற்றுள்ளன.

 தமிழகத்தில் பல கருத்தரங்குகளில் பங்கு பெற்றதுடன் இந்திய அளவிலும், உலக அளவிலும் பல கருத்தரங்குளில் கலந்துகொண்டு ஆய்வுக் கட்டுரைகள் வழங்கியுள்ளார். தமிழ்ப் பணிக்காக இவர் இலங்கை, மொரீசியசு, செர்மனி, போலந்து, செக்கோசுலேவியா, சப்பான், ஆங்க்காங்கு, தாய்லாந்து, மணிலா, சிங்கப்பூர், மலேசியா, பாரிசு, இலண்டன், ஏதென்சு, கெய்ரோ போன்ற நாடுகளுக்குச் சென்று வந்த பெருமைக்கு உரியவர்.

 இவர் மேற்பார்வையில் 44 பேர் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர். தமிழ்ப்பற்று மிக்குடைய பேராசிரியர் அவர்கள் 1985 இல் தமிழூர் என்னும் ஊரை உருவாக்கி அங்கு வாழ்து வருகிறார் (நெல்லை மாவட்டம்). இவர்தம் வீட்டின் பெயர் தமிழகம். இடத்தின் பெயர் தமிழ்நகர்.

நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் 1969 இல் திருவள்ளுவர் கல்லூரியை உருவாக்கியவர்.

இராசா சர் முத்தையா செட்டியார் நினைவுப் பரிசில் ஓரிலக்கம் உரூவா உள்ளிட்ட பல பரிசில்களைப் பெற்றுள்ளார். தொல்காப்பியச் செம்மல், கம்பன் விருது, கி.ஆ.பெ.விசுவநாதம் விருது உள்ளிட்ட விருதுகளும் இவரால் பெருமை பெற்றன. தமிழ் நூல்களை ஆராய்ச்சி செய்வதிலும், பாடம் சொல்வதிலும் ஒப்பாரின்றி உழைத்தவர். சிலப்பதிகாரம் பேராசிரியரின் உள்ளம் கவர்ந்த நூல் எனில் சாலப் பொருந்தும். சிலம்பினை   இசையுடன் பாடி விளக்கம் சொல்வதில் வல்லவர்.

முனைவர் ச.வே.சுப்பிரமணியன் அவர்களின் நூல்கள் :

1. இலக்கிய நினைவுகள் 1964
2.சிலம்பின் சில பரல்கள் 1972
3.இலக்கியக் கனவுகள் 1972
4.மாந்தர் சிறப்பு 1974
5.ஒன்று நன்று 1976
6.அடியார்க்கு நல்லார் உரைத்திறன் 1976
7.இலக்கிய உணர்வுகள் 1978
8.கம்பன் கற்பனை 1978
9.காப்பியப் புனைதிறன் 1979
10.கம்பனும் உலகியல் அறிவும் 1981
11.கம்பன் இலக்கிய உத்திகள் 1982
12.கம்பன் கவித்திறன் 2004
13.இளங்கோவின் இலக்கிய உத்திகள் 1984
14.இலக்கிய வகையும் வடிவும் 1984
15.தமிழ் இலக்கிய வரலாறு 1999
16.சிலப்பதிகாரம் மூலம் 2001
17.சிலப்பதிகாரம் இசைப்பாடல்கள் 2001
18.சிலம்பும் சிந்தாமணியும் 1977
19.திராவிட மொழி இலக்கியங்கள் 1984
20.இளங்கோவும் கம்பனும் 1986
21.தொல்காப்பியம் திருக்குறள் சிலப்பதிகாரம் 1998
22.தமிழில் விடுகதைகள் 1975
23.தமிழில் விடுகதைக் களஞ்சியம் 2003
24. காந்தி கண்ட மனிதன் 1969
25.பாரதியார் வாழ்க்கைக் கொள்கைகள் 1982
26.நல்வாழ்க்கை 1992
27.மனிதம் 1995
28.மனமும் உயிரும் 1996
29.உடல் உள்ளம் உயிர் 2004
30.தமிழர் வாழ்வில் தாவரம் 1993
31.கூவநூல் 1980
32.சிலப்பதிகாரம் தெளிவுரை 1998
33.சிலப்பதிகாரம் மங்கலவாழ்த்துப் பாடல் 1993
34.தொல்காப்பியம் தெளிவுரை 1998
35.சிலப்பதிகாரம் அரங்கேற்று காதை 2001
36.திருக்குறள் நயவுரை 2001
37.திருமுருகாற்றுப்படை தெளிவுரை 2002
38.சிலப்பதிகாரம் குன்றக்குரவை உரை 2002
39.கானல்வரி உரை 2002
40.பத்துப்பாட்டு உரை 2002
41.இலக்கணத்தொகை எழுத்து 1967
42.இலக்கணத்தொகை சொல் 1970
43.இலக்கணத்தொகை யாப்பு,பாட்டியல் 1978
44.வீரசோழியம் குறிப்புரையுடன் 1977
45.தொன்னூல் விளக்கம் குறிப்புரையுடன் 1978
46.குவலயானந்தம் சந்திரலோகம் 1979
47.பிரபந்த தீபம் 1980
48.தொல்காப்பியப் பதிப்புகள் 1992
49.மொழிக்கட்டுரைகள் 1974
50.சங்க இலக்கியம் 2006
51.மெய்யப்பன் தமிழகராதி 2006
52.தமிழ் இலக்கண நூல்கள் 2007
53.பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் 2007
54.பன்னிரு திருமுறைகள் 2007
55.Descriptive Grammar of Chilappathikaram 1975
56.Grammar of Akananuru 1972
57.Studies in Tamil Language and Literature 1973
58..Studies in Tamilology 1982 1982
59.Tolkappiyam in English 2004
60.சிலப்பதிகாரம் வஞ்சிகாண்டம் மலையாளம் 1966

ச.வே.சுப்பிரமணியன் அவர்களின் வாழ்க்கை வரலாறு "தமிழ் ஞாயிறு" என்னும் பெயரிலும், "சாதனைச்செம்மல். ச.வே.சு" என்னும் பெயரிலும் நூலாக வெளிவந்துள்ளன.

முனைவர் ச.வே.சுப்பிரமணியன் அவர்களின் தொடர்பு முகவரி :

முனைவர் ச.வே.சுப்பிரமணியன்
தமிழூர்,
அடைக்கலப்பட்டணம் அஞ்சல்,
திருநெல்வேலி மாவட்டம்-  627 808
பேசி : 04633 - 270239

தொடர்புடைய பதிவுக்குச் செல்ல இங்கே அழுத்துக

6 கருத்துகள்:

THAMIZHIYALAN சொன்னது…

SA.VE.SU
Aiya kuritha padhivu
arumaiyaaha ulladhu

vaazhthukal

Thamizhiyalan

முனைவர் மு.இளங்கோவன் சொன்னது…

தமிழியலன் ஐயாவிற்கு,
தங்கள் ஊக்குவிப்பிற்கு நன்றி.
மு.இ

சி.ம.மன்னர் மன்னன் சொன்னது…

அன்புசால் இளவலுக்கு,
சவேசு பற்றிய அரிய குறிப்புகளைப் படித்து மகிழ்ந்தேன். பாராட்டுகள்.

சவேசு நூல்கள் யாவும் வாங்க ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

ம. மன்னர் மன்னன்

முனைவர் மு.இளங்கோவன் சொன்னது…

அன்புடையீர் வணக்கம்.
முனைவர் ச.வே.சுப்பிரமணியனார் நூல்கள் அச்சுவடிவில் மட்டும் உள்ளன.பல நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன.தங்களுக்குத் தேவையெனில் சிலவற்றை வாங்க முடியும்.

அன்புள்ள
மு.இளங்கோவன்

Unknown சொன்னது…

வணக்கம்,
தங்கள் பணிகள் அனைத்தும் வரலாற்றுப் பதிவுகள். தொடரட்டும், வாழ்த்துக்கள். அய்யாவின் நூல்களை அனைவரும் வாங்கி படித்து பயனுறுவதோடு, அய்யாவையும் ஊக்குவிக்க வேண்டும்.

முனைவர் மு.இளங்கோவன் சொன்னது…

தங்கள் மேலான பதிவிற்கு நன்றி.
மு.இ