நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

சனி, 6 செப்டம்பர், 2014

சுடுமண் சிற்பக் கலைஞர் வில்லியனூர் கி.முனுசாமி


 திரு.முனுசாமி அவர்களையும் அவர்கள் உருவாக்கிய சிலையையும் உற்றுப் பார்த்து வியக்கும் மு.இளங்கோவன்

    ஒளி ஓவியர் சிவக்குமார் அவர்கள் பலநாள் என்னை அழைத்துப்பார்த்தார். வேலைகளைக் காரணம் காட்டித் தப்பித்துக்கொண்டிருந்தேன். ஒருநாள் இரவு கட்டாயம் வரவேண்டும் என்று கட்டளைபோட்டார். வேறு வழியில்லாமல் முன்னிரவு நேரத்தில் அரைமனத்துடன் வில்லியனூர் நோக்கி இருவரும் விரைந்தோம். சந்தும் பொந்துமான பாதைகளைக் கடந்து எங்கள் வண்டி மண்குவியல்கள் இருந்த வீட்டருகே நின்றது. இறங்கிச் சுற்றும் முற்றும் பார்த்தேன். உழைக்கும் மக்கள் நிறைந்த தெருவாக இரவில் அந்தத் தெருவை மதிப்பிட்டுக்கொண்டேன். வீட்டின் திண்ணையிலும் கூடத்திலும் மண்பொம்மைகள் செய்ததும், வெந்ததுமாக இருந்தன. அங்கிருந்த மண்குவியல்களையும், பக்குவப்படுத்தப்பட்ட மண்ணையும், புளித்த மண்ணையும், பல்வேறு சுடுமண் பொம்மைகளையும் தொட்டும் தடவியும் பார்த்து மகிழ்ந்தேன்.

வாயிற்படியில் அமர்ந்தபடி அகல்விளக்கினைத் தடவியும், வழித்தும், சிறு கத்தியை வைத்துப் பிசிறுகளைச் சீவியும் அழகுப்படுத்திக் கொண்டிருந்தார் ஒரு பெண்மணி. பின்புதான் இவர் கலைமாமணி விருது பெற்ற கலைஞர் என்று தெரிந்துகொண்டேன். எங்களுக்குத் தேநீர் கொடுத்துவிட்டு அவர் வேலையை அவர் கவனித்துக்கொண்டிருந்தார். சிறிது நேரத்தில் வந்துவிடுவதாகக் கூறிய நண்பர் கால்மணி நேரத் தாழ்ச்சிக்குப் பிறகு வந்து சேர்ந்தார். காலத் தாழ்ச்சிக்குப் பொறுத்துக்கொள்ளும்படி வேண்டிக்கொண்டார்.

இதுநேரம் வரை நான் கேட்டுக்கொண்டிருந்த செய்திகளுக்கும் கண்ணில் தென்பட்ட ஆளுக்கும் தொடர்பு இல்லாமல் இருந்தது. மெலிந்த உடல்வாகு. வெண்மயிர் விரவிய தலைமுடி.  அன்பு ஒழுகும் பார்வை. அறிவு ஒழுகும் பேச்சு. அவருடன் எங்கள் பேச்சு மூன்றுமணி நேரத்திற்கும் மேல் நீண்டது.

சுடுமண் பொம்மைக் கலைஞர் கி. முனுசாமி மனந்திறந்து உரையாடியானார். புதுவை முத்தியால்பேட்டையில் வாழ்ந்த கிருஷ்ண பத்தர், மங்கலட்சுமி ஆகியோருக்குப் பன்னிரண்டாவது குழந்தையாகப் பிறந்தவர் முனுசாமி. 21.07.1967 இல் பிறந்த இவர் வறுமைச்சூழலில் வாழ நேர்ந்தது.  மண்ணைக் குழைத்து அகல்விளக்கு, சட்டி, பானை, குடம் வனையும் தொழில் செய்யும் குடும்பம். எத்தனையோ குடும்பங்களுக்கு உணவு சமைக்க பானைகளைச் செய்துகொடுத்தாலும் இவர்களின் அடுப்பில் பானையை வைத்துப் பொங்கமுடியாத வறுமைச்சூழல். முனுசாமி எட்டாம் வகுப்பு வரை படித்தார். பெங்களூரில் இரண்டாண்டுகள் வேலை பார்த்தார். 83 - 85 ஆம் ஆண்டுகளில் மின்சாரப் பணியாளர் படிப்பை முடித்தார். கேரளா, பாலக்காடு வரை வறுமையின் துரத்தலுக்குத் தப்பிச் சென்று பல்வேறு வேலைகளைச் செய்தார். ஆரியாடு இராசேந்திரன் அவர்களிடம் இயற்கை வடிவமைப்பு தொழிலைப் பயின்றார்.

1989 முதல் அகல்விளக்கு விற்றால்தான் வாழ்க்கையை ஓட்ட முடியும் என்ற நிலை முனுசாமிக்கு இருந்தது. அகல்விளக்குச் செய்து விற்றுவந்தார். வில்லியனூரில் நடைபெற்ற மருத்துவ முகாமுக்குத் தாய் சேய் சிலை செய்யச் சொன்னார்கள். அதன் பிறகு காத்தவராயன், ஆரிய மாலா சிலை செய்தார். 1989 இல் கல்லாமையை இல்லாமை ஆக்குவோம் என்ற கல்வித்துறையின் முழக்கத்திற்கு ஆசையோடு பாட்டி, தாய், சேய் பொம்மை செய்துகொண்டு அதிகாரிகளைப் பார்க்கப் போனார். மிதிவண்டியில் சென்ற பாட்டியும் தாயும் சேயும் கீழே விழுந்து கை கால் தனித்தனியாப் பிரிந்து கிடந்தனர். அதிகாரிகளுக்கு நிலைமையை விளக்கிய முனுசாமி அவர்கள் முன்பாகவே பாட்டி, தாய், சேய் நலம்பெறச் செய்தார். இதனை நேரில் கண்ட அதிகாரிகள் முனுசாமியின் கையசைவுக்குக் கட்டுப்பட்டனர். அதிகாரிகள் நடுவே இவரின் முயற்சி தெரியவந்தது. முனுசாமியின் புகழ் பரவத் தொடங்கியது.

மூலதனம் இல்லாமல் வாணிகம் செய்யமுடியும் என்று நம்பிய முனுசாமி மண், காற்று, தீ, நீர். வானை நம்பிச் செய்யும் தம் முன்னோர் தொழிலான மண்பாண்டம் சார்ந்த தொழிலில் தீவிரமாக இறங்கினார். பானை, சட்டி செய்ததுடன் மண்குதிரை, புத்தர், விநாயகர், கண்காட்சிக்கு வைக்கும் அழகுப்பொம்மைகள் பலவற்றைச் செய்தார், இவர் பொம்மைகள் வெளிநாட்டுப் பயணிகளை ஈர்த்ததன. இவர் பொருள்கள் இவருக்கு முன்பாகக் கடல்கடந்தன. வானில் பறந்தன. புதுவை, தமிழகம் இந்தியா கடந்து முனுசாமியின் புகழ் உலக அரங்கிற்குச் சென்றது. தான் மட்டும் பொருள்களைச் செய்யாமல் அக்கம் பக்கம் இருந்தவர்களுக்குப் பயிற்சியளித்து மண்பொம்மைகள் செய்யப் பயிற்றுவித்தார். இதனால் தொடர்ந்து 11 ஆண்டுகள் இவர் செய்த பொருள்கள் முதல்பரிசினைத் தட்டிச் சென்றன. ஐந்துமுறை இவருக்குத் தேசிய விருது கிடைத்துள்ளது. 68 விருதுகள் இதுவரை பெற்றுள்ளார்.

இசுபெயின், பிரான்சு, ருமானியா, தாய்லாந்து, வியட்நாம், செர்மனி, இத்தாலி நாடுகளுக்குச் சென்று மண்ணில் சிலைசெய்வது எவ்வாறு என்று அங்குள்ளவர்களுக்குப் பயிற்சியளிதுள்ளார். தமிழகத்தின் தாய்த்தொழிலான மட்பாண்டம் செய்யும் கலையை உலகத் தமிழர்கள் இவரை அழைத்துப் பயின்று, பாதுகாக்கலாம். இவரின் விரல் அசைவில் விநாயகரும் புத்தரும் உயிர்பெறுவர். படத்தைப் பார்த்தும், உருவத்தைப் பார்த்தும் மண்ணில் சிலைவடிக்கும் மிகப்பெரும் கலைஞரைக் கண்ட மன நிறைவில் அவரிடம் விடைபெற்றோம்.

மண்ணும், கல்லும் மக்கள் வாழ்விலும் வரலாற்றிலும் பெருந்துணைபுரிவன. மண் ஓடுகளில் நம் முன்னோர்கள் எழுதிய எழுத்துகள்தான் தமிழக வரலாற்றில் ஆண்டுக்கணக்கை உறுதிசெய்ய உதவுகின்றன. பானை ஓடுகளில் உள்ள கீறல்களும் கிறுக்கல்களும்தான் பல வரலாற்று ஆராய்ச்சி அறிஞர்களைத் தூங்கவிடாமல் செய்கின்றன. கிரேக்க, உரோமை உறவுகளை அறியவும், சிந்துச் சமவெளி ஆய்வுகளை முன்னெடுக்கவும், அரிக்கமேடு, ஆதிச்சநல்லூர் ஆய்வுகளை முன்னெடுக்கவும் பானை ஓடுகளும், தாழிகளும் பெரிய நிலையில் உதவுவன.

 உணவு சமைக்க உதவிய பானைகளின் பெரிய வடிவமான தாழிகள்தான் மனிதனை அடக்கம் செய்ய அக்காலங்களில் பயன்பட்டன. புறநானூற்றில் இடம்பெறும் "தாழிய பெருங்காடு" (புறம்.364) என்று தாழியில் உடல்புதைத்த வரிகள் இப்பொழுது என் நெஞ்சில் நிழலாடின. மணிமேகலையில் ஐந்துவகையில் உடல்புதைத்தக் குறிப்புகளையும் மனத்தில் அசைபோட்டேன். அவை இவை:

சுடுவோ ரிடுவோர் தொடுகுழிப் படுப்போர்
தாழ்வயி னடைப்போர் தாழியிற் கவிப்போர்” 
                              ( மணிமேகலை: 6: 66-67)

மற்ற ஊர்களிலும் நாடுகளிலும் செய்யும் பொம்மைகள் உப்புத் தன்மை உடைய மண்ணில் செய்யப்படுவன. புதுச்சேரியில் ஓடும் சங்கராபரணி ஆற்றுப்படுகை மண் உப்புக் கலவாதது. இதில் செய்யும் பானைகளும் சட்டிகளும் பொம்மைகளும் உப்புத் தன்மை இல்லாததால் நீண்டகாலம் நிலைபெற்றிருக்கும் என்று முனுசாமி சொன்னது என் காதில் ஒலித்துக்கொண்டே உள்ளது. இவர் கைப்பட்ட மண்பொம்மைகள் உலகம் முழுவதும் இருந்து தமிழகத்தின் வரலாற்றை நினைவூட்டிக்கொண்டே இருக்கும் என்று நினைத்துக்கொண்டே வீடு திரும்பினேன்.




1 கருத்து:

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

திரு முனுசாமி அவர்கள் போற்றப்பட வேண்டியவர்
போற்றுவோம்