·
·
1891
ஏப்ரல் திங்கள் 29-ஆம் நாள் பாவேந்தர் பாரதிதாசன் புதுச்சேரியில் பிறந்தார். இயற்பெயர் சுப்புரத்தினம் பெற்றோர் திரு கனகசபை, திருமதி இலட்சுமி.
·
1895 ஆசிரியர் திருப்புளிசாமி ஐயாவிடம் தொடக்கக் கல்வி பயின்றார்.
·
1902 கவிதைகள் புனையத் தொடங்குதல்.
·
1908
முதுபெரும் புலவர்கள் சாரம் பு.அ. பெரியசாமி, பங்காரு பத்தர் ஆகியோரிடம் தமிழ் இலக்கணம், இலக்கியங்களைக் கற்றுத் தேர்ந்தார். ஆசிரியர் பயிற்சித் தேர்வில் மாநில அளவில் முதலிடம் பெறுதல். வேணு நாயக்கர் இல்லத் திருமண நிகழ்ச்சியில் மகாகவி பாரதியாரை முதன் முதலாகச் சந்தித்தல்.
·
1909 காரைக்கால் பகுதியில் உள்ள நிரவியில் ஆசிரியராகப் பணி ஏற்றார்.
· 1910
இந்திய விடுதலை வீரர்களான மகாகவி பாரதியார் வ.வே.சு.அய்யர், டாக்டர் வரதராஜலு, அரவிந்தர் ஆகியோருடன் கொண்ட தொடர்பால் இந்திய விடுதலைப்போராட்டம் தொடர்பான பல படைப்புகளை எழுதினார். மகாகவி பாரதியார் புதுச்சேரியில் நடத்தி வந்த ‘இந்தியா’ பத்திரிக்கையைப் பதிப்பிக்க உதவி செய்தார். மணிக்கொடி, தாய்நாடு, தேசோபகாரி, தேசசேவகன் போன்ற தேசியப் பத்திரிகைகளில் பாவேந்தரின் படைப்புகள் வெளிவரத்தொடங்கின. ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்றார்.
·
1916 பாவேந்தரின் தந்தையார் திரு கனகசபை சனவரி 16 இல் இயற்கை எய்தினார்.
· 1918
பிரெஞ்சு அரசாங்கத்தால் குற்றம் சாட்டப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்ட
பாவேந்தர் அவர்கள் சிறையில் இருந்தபடியே பிரெஞ்சு அரசாங்கத்தின் மீது வழக்குத் தொடர்ந்து வெற்றிபெற்றார். இதனால் 15 மாதகாலச் சிறைத் தண்டனைக்குப் பின்னர் விடுதலையானார்.
·
1920 மகாத்மா காந்தியின் கதர் இயக்கத்தின்பால் கொண்ட ஈடுபாட்டால் கதர்த் துணிகளைத் தோளில் சுமந்து விற்றார். புவனகிரி பெருமாத்தூர் பரதேசியாரின் மகள் பழனியம்மாளைத் திருமணம் செய்துகொண்டார்.
·
1920
இல் ஸ்ரீ ஷண்முகன் வண்ணப்பாட்டு வெளியீடு
·
1921 செப்டம்பர் 11 இல் மகாகவி பாரதியார் மறைந்தார். செப்டம்பர் 15 இல் பாவேந்தரின் மூத்த மகள் சரசுவதி பிறந்தார்.
·
1925
இல் மயிலம் ஸ்ரீ சிவசண்முகக் கடவுள் பஞ்சரத்நம் வெளியீடு
·
1926 ‘மயிலம் சுப்ரமணியர் துதியமுது எனும் பக்தி இலக்கியப் பாடல்’ நூல் வெளியீடு.
·
1928
பெரியார் ஈரோடு ராமசாமி அவர்களின் சுயமரியாதை இயக்கத்தில் தம்மை இணைத்துக்கொண்டு சமூக மறுமலர்ச்சிக்கான கவிதைகளை எழுதத் தொடங்கினார். நவம்பர் 3 இல் பாவேந்தருக்கு இரண்டாம் மகவாகக் கோபதி (மன்னர் மன்னன்) பிறந்தார்.
·
1929 ‘குடியரசு’ போன்ற பகுத்தறிவு ஏடுகளில் தேசிய எழுச்சிமிக்க கவிதை, கட்டுரை. கதைகளை எழுதி வெளியிட்டார்.
·
1930. சிறுவர் சிறுமியர் தேசிய கீதம், தொண்டர் படைப்பாட்டு, கதர் இராட்டினப்பாட்டு, சஞ்சீவி பர்வதத்தின் சாரல், தாழ்த்தப்பட்டார் சமத்துவப்பாட்டு உள்ளிட்ட கவிதை நூல்கள்
வெளியிடப் பட்டன. டிசம்பர் 10 இல் புதுவை முரசு எனும் கிழமை ஏட்டின் முதன்மைப் பதிப்பாசிரியராகப் பொறுப்பேற்றார்.
·
1931 புதுவை முரசு இதழில் ‘செவ்வாய் உலக யாத்திரை’ எனும் தலைப்பில் கட்டுரை வெளியிடல். சனவரி 5 இல் மூன்றாம் மகவாகப் பெண் குழந்தை வசந்தா பிறந்தார்.
·
1933 நான்காம் மகவாகப் பெண்குழந்தை இரமணி பிறப்பு, வேலூரில் மா.சிங்காரவேலர் தலைமையில் நடைபெற்ற நாத்திகர்கள் மாநாட்டில் பங்கேற்று ‘நான் ஒரு நாத்திகன்’ என்று பதிவேட்டில் கையயழுத்திடல். குடும்பக்கட்டுபாடு குறித்து முதன்முதலில் கவிதையைப் படைத்தவர் எனும் சிறப்பினைப் பெறுதல்.
·
1934 தந்தை பெரியார் தலைமையில் ‘இரணியன் அல்லது இணையற்ற வீரன்’ எனும் நாடகத்தினை அரங்கேற்றல். தோழர்.ப.ஜீவானந்தம், குத்தூசி குருசாமி, குஞ்சிதம், மயிலை சீனிவேங்கடசாமி, மாயூரம் நடராஜன், சுவாமி சிதம்பரனார், நாரண துரைக்கண்ணன் ஆகியோருடன் மகாபலிபுரத்திற்குப் பயணம் மேற்கொண்டார். மாவலிபுரச்செலவு கவிதை உருவாதல்.
·
1935 தம்புசாமி முதலியாரின் உதவியுடன் முழுவதும் கவிதையாலான ஸ்ரீ சுப்ரமண்ய பாரதி கவிதா மண்டலம் எனும் திங்கள் இதழ் வெளியிடப்பட்டது. இராமானுஜர் எனும் தமிழ்த்திரைப்படத்திற்கு உரையாடல், பாடல்கள் எழுதினார்.
·
1937
பாவேந்தரின் ‘புரட்சிக்கவி’ எனும் சிறுகாவியம் திரு எல். துரைராஜ் அவர்களால் வெளியிடப்பட்டது. பாவேந்தரால் திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதப்பட்டு டி.கே.சண்முகம், கதாநாயகனாக நடித்த பாலாமணி (அ) பக்காத்திருடன் திரைப்படம் வெளிவந்தது.
·
1938
‘பாரதிதாசன் கவிதைகள்’ முதல் தொகுதி குத்தூசி குருசாமி, குஞ்சிதம் குருசாமி, நாராயணசாமி நாயுடு ஆகியோர் முயற்சியால் வெளியிடப்பட்டது. தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கம் பாவேந்தரால் வரவேற்கப்பட்டது.
·
1939
நாதசுரச்சக்கரவர்த்தி டி.என். இராசரத்தினம் நடித்த கவிகாளமேகம் எனும் திரைப்படத்திற்குத் திரைக்கதை, வசனம், பாடல்களை எழுதினார்.
·
1941 எதிர்பாராத முத்தம் நூல் வெளியீடு.
· 1942 குடும்ப விளக்கு தொகுதி-1, இசையமுது தொகுதி -1, நூல்கள் வெளியிடப்பட்டன.
·
1944 பாவேந்தரின் மூத்த மகள் சரசுவதி, புலவர் கண்ணப்பரின் திருமணம் தந்தை பெரியார் தலைமையில் நடைபெற்றது. இருண்ட வீடு, காதல் நினைவுகள், நல்ல தீர்ப்பு, அழகின் சிரிப்பு, குடும்ப விளக்கு - தொகுதி -2, ஆகிய நூல்கள் வெளியிடப்பட்டன. பாவேந்தரின் திரைக்கதை, வசனத்தில் டி.ஆர்.சுந்தரம் கதாநாயகனாக நடித்த சுலோசனா திரைப்படம் வெளியிடப்பட்டது.
·
1945 பாண்டியன் பரிசு, எது இசை, எனும் நூல்களை வெளியிடுதல்.
புதுச்சேரியில் எண். 95, பெருமாள் கோவில் தெரு வீட்டை விலைக்கு வாங்குதல்
·
1946 பி.எல். முத்தையா அவர்கள் பாவேந்தரின் ஆதரவுடன் ‘முல்ல’ எனும் பத்திரிகையினை வெளியிடல். நாவலர் சோமசுந்தர பாரதியார் தலைமையில் நடைபெற்ற விழாவில் பாவேந்தருக்குப் ‘புரட்சிக்கவி’ எனும் விருது வழங்கப்பட்டது. பேரறிஞர் அண்ணா அவர்களின் சீரிய முயற்சியால் பாவேந்தருக்கு ரூ. 25,000/‡ நிதி அளிக்கப்பட்டது. நவம்பர் 8இல் 37 ஆண்டுகாலத் தமிழாசிரியர் பணியிலிருந்து பாவேந்தர் ஓய்வு பெறுதல்.
·
1947 ‘குயில்’ திங்கள் இதழின் முதல் இரு வெளியீடுகள் புதுக்கோட்டை செந்தமிழ் அச்சகத்தின் பெயரில் வெளியிடப்பட்டன. . செளமியன் (நாடகம்), பாரதிதாசன் ஆத்திசூடி, கவிஞர் பேசுகிறார் (மேடைப்பேச்சு) ஆகிய நூல்கள் வெளியிடப்பட்டன. பாவேந்தரின் திரைக்கதை, வசனத்தில் பி.எஸ்.கோவிந்தன் கதாநாயகனாக நடித்த ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணி திரைப்படம் வெளியிடப்பட்டது.
·
1948 புதுச்சேரியில் இருந்து வெளியிடப்பட்ட குயில் இதழ் அரசால் தடைசெய்யப்பட்டது. ‘இரணியன் அல்லது இணையற்ற வீரன்’ எனும் நாடகத்தினைத் தமிழகத்தில் மேடையேற்றுவதற்குத் தமிழக அரசால் தடைவிதிக்கப்பட்டது. காதலா? கடமையா?, முல்லைக்காடு,
இந்தி எதிர்ப்புப்பாடல், படித்த பெண்கள் (நாடகம்) கடல்மேற் குமிழிகள், குடும்ப விளக்கு தொகுதி‡3, திராவிடர் திருப்பாடல், அகத்தியன் விட்ட புதுக்கரடி ஆகிய நூல்கள் வெளியிடப்பட்டன.
·
1949
பாரதிதாசன் கவிதைகள் தொகுதி‡2, சேரதாண்டவம், தமிழச்சியின் கத்தி, ஏற்றப்பாட்டு ஆகிய நூல்கள் வெளியிடப்பட்டன. பாவேந்தரின் எதிர்பாராத முத்தம் எனும் காப்பியம் பொன்முடி என்ற பெயரில் திரைப்படமாக வெளிவந்தது. பி.வி.நரசிம்மபாரதி கதாநாயகனாக நடித்தது.
·
1950
குடும்ப விளக்கு தொகுதி-4, குடும்ப விளக்கு தொகுதி-5, வெளியிடப்படுதல்.
·
1951 அமிழ்து எது? கழைக்கூத்தியின் காதல் நூல்களை வெளியிடல்.
·
1952
பாவேந்தரின் திரைக்கதை, வசனத்தில் ஜி.முத்துகிருட்டினன் கதாநாயகனாக நடித்த வளையாபதி திரைப்படம் வெளியிடப்பட்டது.
·
1954 ‘பொங்கல் வாழ்த்துக்குவியல்’ நூல் வெளியீடு. குளித்தலையில் நடைபெற்ற ‘தமிழ் ஆட்சிமொழி’ மாநாட்டிற்குத் தலைமையேற்றல்.
·
1955 புதுச்சேரிச் சட்டமன்றத் தேர்தலில் காசுக்கடைத் தொகுதியில் வெற்றிபெற்றுச் சட்டமன்ற உறுப்பினராகித் தற்காலிக அவைத்தலைவர் பதவி ஏற்றல்.
·
1956 ‘தேனருவி’ இசைப்பாடல் நூல் வெளியீடு.
·
1958
தாயின்மேல்ஆணை, இளைஞர் இலக்கியம், பாரதிதாசன் நாடகங்கள், குறிஞ்சித்திட்டு ஆகிய நூல்களை வெளியிடல். தமிழகப் புலவர் குழுவினரால் சிறப்பு உறுப்பினராகப் பாவேந்தர் தேர்ந்தெடுக்கப்படல். பிசிராந்தையார் நாடகம், வள்ளுவர் உள்ளம் (திருக்குறள் உரை) படைப்புகளைத்
தொடர்ந்து எழுதிவரல். நவம்பர் முதல் ‘குயில்’ இதழ் கிழமை ஏடாக வெளிவரல்.
·
1961 ‘பாண்டியன் பரிசு’ திரைப்படம் எடுப்பதற்காகச் சென்னைக்குக் குடிபெயர்தல். பாவேந்தரின் கவிதைகள் கமில் சுவிலபெல்லால்(Kamil Zvelebil) செக்மொழியில் மொழிபெயர்க்கப்படுதல்.
·
1962 அனைத்துலகக் கவிஞர் மன்றத்தின் தொடக்க விழாப் பற்றிய வரலாற்றினைக் குயில் பத்திரிகையில் வெளியிடல், கண்ணகி புரட்சிக் காப்பியம், மணிமேகலை வெண்பா நூல்கள் வெளியிடப்படல். தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் சார்பில் மூதறிஞர் இராஜாஜி அவர்களால் கேடயம் வழங்கி, பொன்னாடை அணிவிக்கப்பட்டுப் பாராட்டப்படுதல்.
·
1963
‘பன்மணித்திரள்’ நூல் வெளியீடு. மகாகவி பாரதியார் வரலாற்றைத் திரைப்படமாக எடுப்பதற்கு முயற்சி மேற்கொண்டார்.
·
1964
பாவேந்தர் அவர்கள் ஏப்ரல் 21 இல் சென்னைப் பொதுமருத்துவமனையில் இயற்கை எய்தினார்.
·
பாவேந்தர் மறைவுக்குப்பின் 1965
ஏப்ரல் 21 இல் புதுச்சேரி மாநகராட்சியினரால் கடற்கரை சார்ந்த பாப்பம்மாள் கோவில் இடுகாட்டில் பாவேந்தருக்கு நினைவு மண்டபம் எழுப்பப்பட்டது.
·
1966 சென்னையில் இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டின் போது மெரினா கடற்கரையில் பாவேந்தரின் திருவுருவச்சிலை முனைவர் மு.வரதராசனாரால் திறந்து வைக்கப்பட்டது.
·
1968
புதுச்சேரியில் பாரதிதாசன் மகளிர் கல்லூரியை மாண்புமிகு முதலமைச்சர் திரு வி.வெங்கடசுப்பா அவர்கள் தலைமையில் மேதகு துணைநிலை ஆளுநர் சீலம் அவர்கள் திறந்து வைத்தார்.
·
1970 - 1969 ஆம் ஆண்டிற்கான புதுடில்லியின் சாகித்திய அகாதெமி விருது பாவேந்தரின் ‘பிசிராந்தையார்’ எனும் நாடக நூலுக்கு வழங்கப்பட்டது.
·
1971
புதுச்சேரி அரசால் பாவேந்தர் பிறந்த நாள் விழாக் கொண்டாடப்பட்டது. எண். 95, பெருமாள்கோவில் தெரு, புதுச்சேரி-1 இல் உள்ள பாவேந்தரின் இல்லம் அரசுடைமையாக்கப்பட்டது. அவ்வில்லத்தில் நினைவு நூலகம், காட்சிக்கூடத்தினை மாண்புமிகு முதலமைச்சர் திரு. எம்.ஓ.எச். பாரூக் அவர்கள் தலைமையில் மேதகு புதுச்சேரித் துணைநிலை ஆளுநர் பி.டி.ஜத்தி
அவர்கள் ஏப்ரல் 29-இல் திறந்து வைத்தார். டிசம்பர் 28 இல் பாவேந்தரின் தமிழ் வாழ்த்துப் பாடல் அரசு விழாக்களிலும், பள்ளிகளிலும் இறைவாழ்த்துப் பாடலாகப் பாட வேண்டும் என அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டது.
·
1972 ஏப்ரல் 29 இல் பாவேந்தரின் முழு உருவச் சிலை டாக்டர் ராஜா சர்முத்தையா அவர்கள்
தலைமையில் மேதகு புதுச்சேரித் துணைநிலை ஆளுநர் சேத்திலால் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
·
1978
தமிழக அரசால் பாவேந்தரின் பிறந்தநாள் விழாவை ஆண்டுதோறும் அரசு விழாவாகக் கொண்டாடுவதென்றும் ‘பாரதிதாசன் விருது’ ஆண்டு தோறும் ஏப்ரல் 29. 30 ஆகிய நாள்களில் வழங்குவதென்றும் முடிவெடுக்கப்பட்டது.
·
1979
பாவேந்தரின் கடல்மேற் குமிழிகள் எனும் நூல் எல்.கதலீஸ் என்பவரால் பிரஞ்சு மொழியில்
Ecume de la mer எனும் பெயரில் நூலாக வெளியிடப்பட்டது.
·
1982 ஏப்ரல் 29 இல் மேதகு தமிழக ஆளுநர் சாதிக் அலி தலைமையில் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் டாக்டர் எம்.ஜி. இராமச்சந்திரன் திருச்சியில் பாரதிதாசன் பல்கலைக் கழகத்தைத் திறந்து வைத்தார். பாவேந்தரின் மருமகளும் தமிழ்மாமணி மன்னர் மன்னனின் மனைவியுமான திருமதி சாவித்திரி இயற்கை எய்தினார்.
·
1986
‘கறுப்புக் குயிலின் நெருப்புக் குரல்’ எனும் தலைப்பில் தமிழ்மாமணி மன்னர் மன்னன் அவர்களால் வெளியிடப்பட்ட பாவேந்தரின் வாழ்க்கை வரலாற்று நூலிற்குத் தமிழக அரசின் பரிசு வழங்கப்பட்டது.
·
1989 மே 21 இல் பாவேந்தரின் மனைவி பழனியம்மாள் இயற்கை எய்தினார்.
·
1990 புதுச்சேரி அரசால் பாவேந்தரின் நூற்றாண்டு விழா ஆகஸ்ட் 26,27 ஆகிய தேதிகளில் கொண்டாடப்பட்டது. மாண்புமிகு முதலமைச்சர் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி தலைமையிலான தமிழக அரசு பாவேந்தரின் நூல்களை நாட்டுடைமையாக்கியது. பாவேந்தரின் நூற்றாண்டுத் தொடக்க விழாக் கொண்டாடப்பட்டது. திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பாவேந்தரின் சிலையைத் தமிழக முதலமைச்சர் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் திறந்து வைத்தார்.
·
1991 மலேசியாவில் பாவேந்தரின் நூற்றாண்டு விழா செப்டம்பரில் கொண்டாடப்பட்டது. பாவேந்தரின் ‘கற்கண்டு’ நாடகத்தை
திருமதி டி.டேவிட் அவர்கள் பிரெஞ்சு மொழியில் ‘Candi’ எனும் பெயரில் நூலாக வெளியிட்டுள்ளார்.
·
1992
பாரிசில் பாவேந்தரின் நூற்றாண்டு விழா மே மாதத்தில் கொண்டாடப்பட்டது.
·
1993
பாவேந்தரின் ‘பிசிராந்தையார்’ நாடகம் திரு எல்.கதலீஸ் என்பவரால் பிரெஞ்சு
மொழியில் நூலாக வெளியிடப்பட்டது.
·
1994 தமிழ் நாட்டில் உள்ள ஒன்பது பல்கலைக்கழகங்களில் தமிழக அரசு பாரதிதாசன் பெயரில் அறக்கட்டளையை நிறுவியுள்ளது.
·
1997 புதுவை மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தால் 10-5-1997 இல் பாரதிதாசன் கவிதைகள் ஆங்கில மொழிபெயர்ப்பு வெளியிடப்பட்டது.
·
2001
மத்திய அரசு பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் திருவுருவப்படத்துடன் கூடிய அஞ்சல் தலையை 9-10-2001 இல் வெளியிட்டுள்ளது.
·
2005
புதுச்சேரி அரசு கலை, பண்பாட்டுத்துறையால் 11-9-2005 இல் பாவேந்தர் பாரதிதாசன் நினைவு அருங்காட்சியகம் - ஆய்வு மையம் குறித்த ஆவணப்படம் தமிழ், ஆங்கிலம், பிரெஞ்சு ஆகிய மொழிகளில் வெளியிடப்பட்டது.
·
நன்றி:
·
புதுச்சேரி அரசின் கலை பண்பாட்டுத்துறையின் விளக்கக் கையேடு

2 கருத்துகள்:
nandru
nandru
கருத்துரையிடுக