நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

திங்கள், 2 டிசம்பர், 2013

சங்க இலக்கிய ஆய்வாளர் முனைவர் சக்குடி பொ. சீனிவாசன்


முனைவர் ச.பொ.சீனிவாசன்

முனைவர் ச. பொ. சீனிவாசன் அவர்கள் மதுரையை அடுத்த சக்குடியில் பெருமைமிகு வாழ்வு வாழும் பொன்னுசாமி - கல்யாணி அவர்களின் மகனாகப் பிறந்தவர் (03.11.1973). இவருடன் பிறந்தோர் எழுவர். நால்வர் ஆண்கள். மூவர் பெண்கள். இவர்தம் குடும்பம் அன்புக்கும் ஒற்றுமைக்கும் பெயர்பெற்ற குடும்பம். இன்னும் கூட்டுக்குடும்பம் மேன்மையுடன் விளங்குகின்றது என்பதற்கு இவர்களின் குடும்பம் ஓர் எடுத்துக்காட்டு.

ச. பொ. சீனிவாசன் அவர்கள் பிறந்த ஊரில் தொடக்கக் கல்வி பயின்றவர். மேல்நிலைக் கல்வியை மதுரை ஐக்கிய கிறித்தவ மேல்நிலைப் பள்ளியில் பயின்றவர் (1989 - 91) மதுரை தியாகராசர் கல்லூரியில் இளங்கலை, முதுகலை, இளம் முனைவர்(எம்.ஃபில்) வகுப்புகளில் தமிழ் இலக்கியம் பயின்றவர். முனைவர் பட்ட ஆய்வைத் திருவனந்தபுரத்தில் உள்ள கேரளப் பல்கலைக்கழகத்தில் முனைவர் குளோறியா சுந்தரமதி அவர்களின் மேற்பார்வையில் நிகழ்த்தியவர்.

சங்க இலக்கியத்தில் அகவுணர்வு உயிரினப் பயன்பாடு - நற்றிணை என்ற தலைப்பில் இவரின் முதல் நூல் வெளிவந்தது. அண்மையில் பத்துப்பாட்டில் வருணனை மரபு என்ற தலைப்பிலும், பத்துப்பாட்டு- பொருளடைவு என்ற தலைப்பிலும் இரண்டு நூல்களை வெளியிட்டுள்ளார். இந்த நூல்கள் தமிழ் ஆராய்ச்சி உலகில் பார்வை நூல்களாகப் பயன்படுத்தப்பெறும் தகுதியைப் பெறுவன. சங்க இலக்கியத்தை ஆழமாக ஆய்வுசெய்த நூல்களாகவும் இவை விளங்குகின்றன.


ச. பொ. சீனிவாசன் அவர்கள் தமிழகத்திலும் கேரளத்திலும் நடந்த பல்வேறு கருத்தரங்குகளிலும், மாநாடுகளிலும் கலந்துகொண்டு கட்டுரை படைத்த பெருமைக்குரியவர். அதுபோல் கல்வித்துறை சார்ந்து பல்வேறு குழுக்களில் இணைந்து பணியாற்றிய சிறப்பிற்குரியவர். சங்க இலக்கிய ஆய்வுகளில் தொடர்ந்து கவனம் செலுத்திவரும் ச. பொ. சீனிவாசன் அவர்கள் இப்பொழுது மூணாறு அரசு கலைக்கல்லூரியின் தமிழ்த்துறையில் துணைப்பேராசிரியராகப் பணியாற்றி வருகின்றார். இவர்தம் சங்க இலக்கிய ஆய்வுப்பணி தொடர என் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்.






1 கருத்து:

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

ச.பொ.சீனிவாசன் அவர்களின் இலக்கிய ஆய்வுப் பணி தொடர வாழ்த்துக்கள்