நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

திங்கள், 9 பிப்ரவரி, 2009

கலிங்கநாட்டுத் தமிழ் ஆய்வாளர் பாலசுப்பிரமணி B+ve


பாலசுப்பிரமணி

 ஆய்வு செய்ய விரும்பும் மாணவர்கள் சிலர் என்னை அணுகும்பொழுது ஆய்வு செய்ய ஏதேனும் ஒரு தலைப்பு கொடுங்கள் என்பார்கள். அல்லது நீங்கள் சொல்லும் தலைப்பில் ஆய்வு செய்கிறோம் என்பார்கள். தலைப்பு கொடுத்த பிறகு பல மாதங்கள் தலைமறைவாகி விடுவார்கள். பல்கலைக்கழகம் குறிப்பிட்ட காலக்கெடு முடிவதற்கு முந்திய கிழமை வந்து ஆய்வேடு எழுதுவது எப்படி என்பார்கள்.பழைய ஆய்வேடுகளை மாதிரிக்குப் பார்வையிடுங்கள் என்போம்.ஆய்வு பற்றிய சில செய்திகளைக் குறிப்பிடுவோம். சிலர் ஆர்வமாகக் கேட்டு ஆய்வேட்டை எழுதுவதும் உண்டு. சிலர் ஆய்வை இடைக்கண் முறித்துத் திரும்புவதும் உண்டு.

 அலுப்பூட்டும் தலைப்புகள், பயனற்ற எளிய தலைப்புகள், சலிப்பூட்டும் பொருண்மைகளில் ஆய்வு செய்வதாகக் கூறிப் பட்டங்களையும் இன்று பெற்றுவிடுகின்றனர். தரமான ஆய்வுகளின் எண்ணிக்கை குறைந்துவரும் சூழலில் இதழாளர் சுகுமாரன் அவர்கள் எனக்கு ஓர் அன்பரை அறிமுகம் செய்துவைத்தார். மின்னஞ்சல், தொலைபேசி என்று இருந்த அந்த அன்பரின் தொடர்பு அண்மையில் புதுச்சேரியில் கண்டு உரையாடும் வாய்ப்பையும் தந்தது.

 புதுவைக் கடற்கரையின் காற்றுவாங்கும் உலாவுக்குப் பிறகு ஓர் உணவு விடுதியில் சந்திக்க அழைத்தார்கள்.முன்பின் பாராத அந்த அன்பரைச் சுகுமாரன் அவர்கள் அறிமுகம் செய்துவைத்தார்.

 சற்று பருமனான உடற்கட்டுடன் திருக்குறள் எழுதப்பெற்ற ஓர் ஆடையை அணிந்துகொண்டு என் முன் நின்ற அவர்தான் பாலசுப்பிரமணி அவர்கள். ஒரிசாவில் வாழ்கிறார்.ஒரிசா பாலசுப்பிரமணியாக அவர் இருந்தாலும் அவர் தமிழகத்தில் உள்ள திருச்சிராப்பள்ளி-உறையூரில் பிறந்தவர் (07.04.1963). பெற்றோர் திருவாளர்கள் சிவஞானம் - இராசேசுவரி. விழுப்புரம், சென்னை, புதுச்சேரியில் கல்வி கற்றவர். சென்னை தியாகராசர் கல்லூரியில் இளம் அறிவியல் (இயற்பியல்) பயின்றவர். பொறியியல் பட்டம் பயின்றவர். இதில் கணிப்பொறித் தொடர்புடைய பாடங்கள் இருந்தன. இதில் இணைய வரைபடங்கள் குறித்து கற்றார். நூலகத் துறையில் பட்டமும் பெற்றவர்.


பாலசுப்பிரமணி

 கொரிய நிறுவனத்தின் குழுமத்தில் பணி கிடைத்து இந்தியா முழுவதும் சுற்றிப் பணி செய்யும் வாய்ப்பு அமைந்தது.1989 முதல் சுரங்கம் சார்ந்த இயந்திரங்கள் பழுதுபார்ப்புப் பணியில் இருந்தார். பின்னர் நீரியல் சார்ந்த பணியில் ஏழாண்டுகள் இருந்தார். c.r.management என்னும் அரசுக்குச் சார்பான பணிகளைச் செய்யும் நிறுவனத்தில் பணிபுரிந்தார்.

 கடல்பாதை, மலைப்பாதை, துறைமுகம் புதுப்பித்தல் போன்ற பணிகளுக்கு இணைய வரைபடங்கள் உருவாக்கும் பொறுப்பிலிருந்தவருக்குத் தமிழில் ஈடுபாடு ஏற்பட்டது. 1992 இல் ஒரிசா சென்ற இவர் ஒரிசா தமிழ்ச்சங்கப் பணிகளில் தம்மை இணைத்துக்கொண்டவர். இருபதாண்டுகளாக ஒரிசாவில் வாழ்ந்துவருகிறார். ஒரிசா தமிழ்ச்சங்கத்தின் தலைவராகப் பணிபுரிந்த சுந்தரராசன் இ.ஆ.ப.அவர்கள் இராமானுசர் ஒரிசா வந்தது குறித்து எழுதினார். தமக்குப் பிறகு இது பற்றிய விரிவான ஆய்வுகளில் ஈடுபடவேண்டும் என அடிக்கடி குறிப்பிடுவார். இதன் பிறகு தமிழ், ஒரிசா வரலாறுகளைப் பாலசுப்பிரமணி படிக்கத் தொடங்கினார்.

 இராசேந்திர சோழன் கங்கைவரை படையெடுத்த வழி, வரலாறு, பற்றியும் குலோத்துங்கன் காலத்தில் கலிங்கத்து மேல் படையெடுத்த வரலாறு பற்றியும் விரிவாக ஆராயத் தொடங்கினார். கலிங்கப்போர் இரண்டு முறை நடந்துள்ளது (1096,1112) என்று குறிப்பிடும் பாலசுப்பிரமணி இதுபற்றி விரிவாக தகவல் தொழில்நுட்பம் துணைகொண்டு விரிவாக ஆராய்ந்து வருகிறார். ஒரிசாவில் களப்பணி செய்து கன்னியாகுமரி - ஒரிசா வரையுள்ள பகுதிகளை ஆராய்ந்தார்.இன்று கணிப்பொறி,செல்பேசி துணைகொண்டு இவர் ஆய்வுப்பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.

 தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் உள்ளிட்ட அறிஞர்கள் காலத்தில் மாட்டு வண்டிகளைக் கட்டிக்கொண்டு ஊர் ஊராகச் சென்று ஆராய்ந்ததை யான் அறிந்துள்ளேன். எங்கள் ஊருக்கு அருகில் உள்ள வாணதிரையன்குப்பம் என்ற ஊரில் தங்கிப் பண்டாரத்தார் மாட்டுவண்டிப் பயணம் செய்து பல ஊர்களை, கோயில்களைப் பார்வையிட்டதை மூத்தோர் சொல்லக் கேட்டுள்ளேன். ஆனால் நம் பாலசுப்பிரமணி அவர்கள் இந்தியா முழுவதும் உள்ள ஆய்வாளர்கள், தொல்லியல் அறிஞர்கள், இலக்கிய அறிஞர்கள், கல்வெட்டு அறிஞர்கள், மொழியியல் அறிஞர்கள், சொல்லாராய்ச்சி அறிஞர்கள், கணிப்பொறி,  இணையத்துறை அறிஞர்கள், கடலியல் அறிஞர்கள், வரைபடவியில் அறிஞர்கள், பழங்குடிமக்கள், அரச குடும்பத்தினர், கல்வித்துறையினர், கடலில் மூழ்கி முத்தெடுப்பவர்கள், மீனவர்கள், ஆட்சித்துறையினர், காப்பகங்களில் பணிபுரிபவர்கள் என அனைவரையும் ஒருங்கிணைத்து மிகப்பெரியத் திட்டமிடலுடன் தமிழக வரலாற்றுத் தரவுகள் இந்தியா முழுவதும் உள்ளதை உறுதிப்படுத்திக் கண்டு பிடித்து ஆராய்ந்து வருகின்றார்.

 தம் கண்டு பிடிப்புகள் ஆய்வு முயற்சிகள் இவற்றை நண்பர்களுக்குத் தெரிவிக்க மேலாய்வுகள் நிகழக் கலிங்கத்தமிழ் என்ற இணைய இதழை நடத்துகிறார். இதன்வழி உடனுக்குடன் செய்திகள் உலகிற்குத் தெரிவிக்கப்படுகின்றன. கண்டுபிடிப்புகளை, அரியகுறிப்புகளை வெளியே தெரியாமல் வைத்திருக்கும் நம்மவர்களைப் போல் அல்லாமல் உடனுக்குடன் வெளியுலகிற்குத் தரும் பரந்த மனப்பான்மை கொண்டவராகப் பாலசுப்பிரமணி விளங்குகிறார்.

 ஒரிசாவில் பணிபுரிந்த திரு.பாலகிருட்டினன் இ.ஆ.ப.அவர்களின் ஆய்வுகளும் பாலசுப்பிரமணி அவர்களுக்குத் தூண்டுகோளாக இருந்தது.(திரு.பாலகிருட்டினன் அவர்கள் தமிழில் எழுதி இ.ஆ.ப.தேறியவர். தமிழ்க்குடிமகன் அவர்களின் மாணவர். வடநாட்டில் பல ஊர்ப்பெயர்கள் தமிழில் உள்ளதை வெளியுலகிற்குக் கொண்டுவந்தவர்.)

 ஒரிசாவில் உள்ள அரண்மனைகளை இணைத்து அரச குடும்பங்கள் ஆய்வுக்குத் துணை செய்யும்படி மாற்றியவர். அங்குள்ள பழங்குடி மக்களை ஒன்றிணைத்து ஒரிசா மக்களின் பண்பட்ட வாழ்க்கை தமிழ் வாழ்க்கையுடன் தொடர்புடையதை வெளிப்படுத்தியவர். தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடும் கடற்கரை நுளையர்கள் (nolia) பற்றி இவர் ஆராய்ந்து கிழக்குக் கடற்கரையில் 250 கல் தொலைவுக்கு இவர்கள் ஒரிசா சார்ந்த பகுதிகளில் இருப்பதைக் குறிப்பிடுகிறார். இவர்கள் ஆயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்துவருவதைக் குறிப்பிடுகிறார்.ஒரிசா கடற்கரை 480 கல் தொலைவு நீண்டது.

 பண்டைய சோழமன்னர்கள், சேரர்கள், பாண்டியர்கள் இன்று ஒரிசாவில் பழங்குடி மக்கள் இருக்கும் வழியாகத்தான் வடதிசைக்கும் தென்கிழக்குத் திசைகளுக்கும் சென்றுள்ளனர் என்கிறார். பாணர், கந்தா, குடியா, குயி, ஓரான், கிசான், பரோசா, கோலா, மால்டோ, கடாபா என்று பதினான்கு பழங்குடி மக்கள் இன்றும் ஒரிசாவில் உள்ளனர்.மால்டோ, கடவா என்னும் திராவிடக் குழுவினர் இன்றும் உள்ளனர் என்கிறார். தெலுங்குச் சோழர்கள், கரிகால்வளவன் காலந்தொட்டு ஒரிசாவிற்கும் தமிழகத்திற்கும் நல்ல தொடர்பு இருந்துள்ளது என்பதைச் செப்புப் பட்டயங்கள் மெய்ப்பிக்கின்றன.


அரிதுயில்காட்சி,பிராம்மனி ஆறு(கொள்ளடா)ஒரிசா

 வட இந்தியாவில் தமிழர்கள் பற்றிய சான்றுகள் சத்தீசுகர் மாநிலத்தில் சோளனார் என்ற ஊரிலும்,சார்கண்ட் மாநிலத்தில் கரிகாலா என்ற ஊரிலும் உள்ளது என்கிறார். வடக்கே காஞ்சி நதி உள்ளதையும் குறிப்பிடுகிறார். 1991 முதல் ஒரிசா தமிழ்ச்சங்கத்தில் இணைந்து பின்னர் பொறுப்புகள் வகித்துத் தமிழ் விழாக்கள், நாடகங்கள் நடத்தியுள்ளார். ஔவையார், அதியமான் உள்ளிட்ட சங்க இலக்கியக் கதைகளைத் தமிழிலும் ஒரியமொழியிலும் கலந்து அனைவரும் கண்டுகளிக்கும்படி செய்துள்ளார்.


அரிதுயில்(அனந்தசயனம்)கொள்ளடா ஆறு(ஒரிசா)

 கடலில் மூழ்கியுள்ள நகரங்கள் பற்றிய ஆய்வுகளில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஈடுபட்டுவருகிறார். அவ்வகையில் கன்னியாகுமரிக்கு அருகில் கடியாப்பட்டினம், இரண்டரை கடல்கல் தொலைவில் ஆடு மேய்ச்சான் பாறை உள்ளதை ஆராய்ந்து வெளியுலகிற்கு இவை பற்றி அறிவித்தார்.


கடலாய்வுக் களப்பணியில் பாலு


கடலாய்வில் பாலு

 சிலப்பதிகாரத்தில் இடம்பெறும் நூற்றுவன்கண்ணனார் பற்றியும் கங்கை கடலுடன் கலக்கும் கங்கைசாகர் பற்றியும் நன்கு அறிந்துவைத்துள்ளார். ஒரிசாவில் பாலூர், மாணிக்கப்பட்டினம், தாமரா (தமிரா) என்ற மூன்று பழைய துறைமுகங்கள் இருந்துள்ளதை ஆராய்ந்து குறிப்பிடுகிறார்.

 தூத்துக்குடிக்கு அருகில் கடலுக்கு மேல் 30 அடி ஆழத்தில் புதையுண்ட நகரம் உள்ளது பற்றி ஆராய்ந்தவர். மரக்காணம், அரிக்கமேடு பகுதிகளில் கடலின் உள்ளே பழையநகரம் உள்ளது என்று பாலசுப்பிரமணி குறிப்பிடுகிறார். இடைக்கழிநாட்டுக்குக் கிழக்கே நாரக்குப்பம்-ஆலம்பராக்கோட்டைக்கு அருகில் ஒரு கல் தொலைவில் கடலுள் நகரம் இருக்கவேண்டும் எனக் கருத்துரைக்கிறார்.

 தமிழகத்தில் உள்ள ஒரியா பற்றிய தரவுகளையும் சேமித்துவருகிறார். தமிழர்களின் எல்லை வட எல்லை வேங்கடம் இல்லை இமயம் என்று உறுதிப்பட கூற பல சான்றுகள் உள்ளதைக் குறிப்பிடுகிறார். இமயமலையில் கார்த்திகைபுரம் என்ற இடம் உள்ளது. அங்கே கார்த்திகைசாமி கோயில் உள்ளது என்கிறார்.

 கங்கைகொண்டசோழபுரம் சிறப்புற்றிருந்த காலத்தில் சிதம்பரம் அருகில் உள்ள பிச்சாவரம் என்ற ஊர் கடற்கரை நகராக இருந்திருக்கவேண்டும் என்று குறிப்பிடும் பாலசுப்பிரமணி இணைய வரைபடங்கள், செயற்கைக்கோள் வரைபடங்கள் வழியாக அதற்குரிய தரவுகளைத் தேர்ந்தெடுத்து ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளார்.

 ஏறத்தாழ இருநூறு ஆண்டுகளுக்கும் மேலாகப் பிச்சாவரம் புகழ்பெற்ற ஊராக இருந்திருக்க வேண்டும் என்கிறார். கங்கைகொண்ட சோழபுரத்தைச் சார்ந்த பல ஊர்களில் இருக்கும் கலிங்கச்சிற்பங்கள் இந்த ஊருக்குக் கடல் வழியாகக் கொண்டுவரப்பட்டிருக்கலாம் எனவும் இங்கிருந்து கொள்ளிடம் வழியாகக் கங்கைகொண்டசோழபுரம் கொண்டு செல்லப்பட்டிருக்கலாம் எனவும் ஒரு புதிய ஆய்வுச் சிந்தனையை முன்வைக்கின்றார். குலோத்துங்கன் காலத்தில் கடல்வழி சிறப்பாக இருந்திருக்கிறது.

 காசிக்கும் தமிழகத்திற்கும் பல ஆண்டுகளாக நல்ல தொடர்பு இருந்துள்ளது. கிருட்டினகிரி, குப்பம்,தக்கோலம். திருவாலங்காடு, மீஞ்சூர் பெரியபாளையம் உள்ளிட்ட இன்றை ஊர்ப் பகுதிகளில் பண்டைக்காலத்தில் பெருவழிகள் இருந்து வடபுலத்தை இணைத்துள்ளமைக்குச் செயற்கைக்கோள் வரைபட ஆய்வுகள் பேருதவியாக இருப்பதைப் பாலசுப்பிரமணி குறிப்பிடுகிறார்.

 பண்டைக்கால அரசர்கள் வள்ளல்கள் குறுநில மன்னர்கள் வாழ்ந்த பகுதிகள் தலைநகரங்கள் வழிகள் பற்றி ஆராயும் ஆய்வாளர்களுக்குத் தம் செயற்கைக்கோள் வழியிலான தரவுகளைத் தர முன்வருகின்றமை இவர்தம் பெருந்தன்மையைக் காட்டும். மேலும் அந்த ஆய்வாளர்களை ஒருங்கிணைத்து ஆய்வு சிறப்பாக நடைபெறவும் புதிய உண்மைகள் வெளிவரவும் உதவுகின்றார். அவ்வகையில் நன்னன், பாரி, அதியமான் உள்ளிட்ட அரசர்கள் பற்றிய ஆய்வு நிகழ்த்துபவர்களை ஒருங்கிணைத்துள்ளார்.

 காலநிலை ஆய்வு,வரைபடம்,நில அளவை,புவி அறிவியல், வரலாறு, புவியியல், கல்வெட்டு, ஏரிகள் ஆய்வு, ஊர்ப்பெயர் ஆய்வு, பண்பாட்டு ஆய்வு, மானுடவியல் ஆய்வு, கடலாய்வு, மண்ணாய்வு உள்ளிட்ட பல துறைகளை இணைத்து இந்தியா முழுவதும் தமிழ், தமிழக வரலாற்றுக்கான தரவுகள் உள்ளமையைக் கண்டுபிடுத்துவரும் பாலசுப்பிரமணி அவர்கள் இந்தியா முழுவதும் உள்ள ஏன் உலக அளவில் உள்ள அறிஞர்களை ஒன்றிணைத்துவரும் பெரும்பணியைத் தமிழர்கள் அனைவரும் பாராட்டி
வரவேற்க வேண்டும்.

 பிற துறை சார்ந்த இவர்களின் தமிழாய்வுகள்தான் தமிழர்களுக்கு உலக அளவில் பெருமையைத் தேடித்தரும் என்பதில் ஐயமில்லை.

 ஒரிசாவில் இன்றும் "அருவா சாவல்" என்று தமிழர்களை நினைவூட்டிப் பச்சரிசியை குறிப்பிடுவர். அதே நேரத்தில் தமிழகத்திலும் கலிங்கச்சம்பா (நெல்வகை) என்று ஒரிசாவை நினைவூட்டும் வழக்கும் உள்ளது. முப்பது இலட்சம் ஒட்டர் இனமக்கள் இன்றும் தமிழகத்தில் வாழ்ந்து வருகின்றனர்.13 வகையர் உள்ளனர். போயர். சங்கு ஒட்டர், ஒட்டன் செட்டி போன்று பல குழுக்கள் 22 மாவட்டங்களில்  வாழ்ந்துவருகின்றனர் என்கிறார். இவை போன்ற அரிய செய்திகளை நா முனையில் வைத்துள்ளார்.

நனி நன்றி

தமிழ்க்காவல்,புதுச்சேரி
தமிழ் ஓசை களஞ்சியம் 08.02.2009
இதழாளர் சுகுமாரன்(மின்செய்தி மாலை)

4 கருத்துகள்:

முனைவர் இர.வாசுதேவன், 'தமிழ் மன்றம்' சொன்னது…

ஓ ... !

எத்தனை வியப்பான செய்திகள்.
இவையெல்லாம் தமிழ் நிலம் பெற்றிருந்த பழஞ்சுவடுகள். சோழர்க்குப் பின் தமிழகம் சோர்ந்து போனது ஏன் என்றும் ஆய்வது நலம்.

ஆய்வார்க்கும் ஆய்வை அகழ்ந்தார்க்கும் அவற்றை அறிந்தார்க்கும் பாராட்டுகள்.

இவண்

முனைவர் இரவா

பெயரில்லா சொன்னது…

Hi

We have just added your blog link to Tamil Blogs Directory - www.valaipookkal.com.

Please check your blog post link here

If you haven't registered on the Directory yet, please do so to update your new blog posts and bring before your work to the large base of Tamil readers worldwide.

Sincerely Yours

Valaipookkal Team

sshsoldstudents சொன்னது…

Realy Amazing Article. Wonderful Job. Wish for his future contribution.
Thanks
Basheer from New Delhi

Thanu சொன்னது…

Congrats Mr. Balasubramaniam !