நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

புதன், 26 அக்டோபர், 2016

தமிழால் போற்றப்பட்ட என் வாழ்க்கை!...


பாவலரேறு பெருஞ்சித்திரனார் மு.இளங்கோவனுக்குத் தங்கப்பதக்கம் சூட்டியும், சான்றிதழ் வழங்கியும் வாழ்த்தும் பொழுது(15.10.1989), 
இடம்: செயங்கொண்டம்(அரியலூர் மாவட்டம்)

திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரியில் இளங்கலை மாணவனாக நான் பயின்றுகொண்டிருந்தபொழுது (1989), அருகில் உள்ள ஊரான செயங்கொண்டத்தில் அமைந்திருந்த தமிழோசை நற்பணி மன்றத்தின் சார்பில் ஓர் ஆய்வுக்கட்டுரைப் போட்டி மாநில அளவில் நடைபெறுவதாகவும், அதில் கலந்துகொள்பவர்களுள் முதல்பரிசுக்குரிய கட்டுரை வரைவோருக்குத் தங்கப்பதக்கம் சூட்டப்பெறும் எனவும் ஓர் அறிவிப்பு ஓலை எங்கள் கல்லூரி அறிக்கைப் பலகையில் ஒட்டியிருந்தது. பேராசிரியர்கள் அந்த அறிவிப்பினைச் சுட்டிக்காட்டிப் போட்டியில் கலந்துகொள்ளுமாறு ஊக்கப்படுத்தினார்கள். தாய்மொழிவழிக் கல்வி என்ற தலைப்பில் ஆய்வுக்கட்டுரை வரைய வேண்டும் எனவும் அறுபது பக்கங்கள் கட்டுரை இருக்க வேண்டும் எனவும் போட்டி நெறிமுறைகளை வகுத்திருந்தனர்.

ஆர்வமுடன் பல நூல்களைப் படித்தும், பேராசிரியர்களுடன் உரையாடியும் கட்டுரையை ஒருவாறு உருவம்கொடுத்து உருவாக்கி அனுப்பியிருந்தேன். பாவாணர் நூல்களையும், பெருஞ்சித்திரனார் நூல்களையும் நான் பத்தாம் வகுப்பு மாணவனாக இருந்தபொழுதே என் மாமனார் பேராசிரியர் கு. அரசேந்திரன் அவர்கள் எனக்கு அறிமுகம் செய்திருந்த கரணியத்தால் ஒரு தமிழாசிரியருக்கு உரிய தமிழ்த்தெளிவும், எழுத்துப் பயிற்சியும், தனித்தமிழ் நடையும் கைவரப் பெற்றிருந்தேன். கட்டுரை அனுப்பிய சிலநாள் கழித்துப், போட்டிக்கு வந்திருந்த கட்டுரைகளை அறிஞர்கள் மதிப்பிட்டு, என் கட்டுரை முதல்பரிசுக்கு உரியதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும் 15. 10. 1989 அன்று நடைபெறும் பரிசளிப்பு விழாவில் கலந்துகொண்டு பரிசினைப் பெற்றுக்கொள்ளுமாறும் அழைப்பு விடுத்திருந்தனர்.

செயங்கொண்டத்தில் தமிழுணர்வுடன் இயங்கிய திரு. மருத மு. நாவளவன், திரு. குமணன் உள்ளிட்ட தோழர்களின் முயற்சியால் விழா மிகச் சிறப்பாக நடந்தது. பரிசளிப்பு விழாவுக்கு மூத்த தமிழறிஞரும் மொழிஞாயிறு பாவாணர் அவர்களின் தலைமாணாக்கரும், தென்மொழி, தமிழ்ச்சிட்டு ஏடுகளின் ஆசிரியருமான பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்கள் வந்திருந்தார். ‘ஓங்கல் இடைவந்து உயர்ந்தோர் தொழ விளங்கி…” எனத் தொடங்கும் தண்டியலங்கார எடுத்துக்காட்டுப் பாடலை நினைவுகூர்ந்து, தமிழின் சிறப்பினை எடுத்துரைத்து ஐயா அவர்கள் அரியதோர் உரை நிகழ்த்தினார்கள். சின்னஞ்சிறு மாணவர்களான எங்களுக்கு அந்த உரை உள்ளத்தில் மொழி, இன, நாட்டு உணர்வினை ஊட்டியது.

தமிழோசை நற்பணி மன்றத்து நிகழ்ச்சியின் நிறைவில் முதல்பரிசு பெற்ற எனக்குத் தமிழின் தலைமகனான பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஐயாவின் திருக் கையால் தங்கப் பதக்கம் சூட்டப்பெற்றது. என் தமிழார்வம் தழைத்து வளர இந்த நிகழ்வு ஓர் அடிப்படைக் காரணமாக அமைந்தது. கடந்த இருபத்தேழு ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற விழாவில் எடுக்கப்பெற்ற அந்தப் படம் இன்று என் பேழைகளை ஒழுங்குசெய்தபொழுது கிடைத்தது. என் பணிகளை ஊக்கப்படுத்தி மகிழ்வூட்டும் நல் உள்ளங்களின் பார்வைக்கு இந்தப் படத்தை வைப்பதில் மகிழ்கின்றேன். பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களின் திருமுன்னர் தலைவணங்கித் தங்கப் பதக்கம் சூடிக்கொள்வதை விடவும் வாழ்வில் வேறு என்ன உயர்வு இருக்கமுடியும்?
பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களின் ஒப்பம் தாங்கிய சான்றிதழ்

செவ்வாய், 25 அக்டோபர், 2016

“தாய்மைப் பண்பினை உயிர்களுக்கு வேர் என்போம்!” – மதுரை இராம. விசுவநாதனின் பொருள்பொதிந்த வாழ்க்கை நூலுக்குரிய அணிந்துரை




தமிழ்த் தொண்டர் துரை இராம. விசுவநாதன் ஐயா அவர்களை என் மாணவப் பருவத்திலிருந்து அறிவேன். இவர் காரைக்குடியில் வ.சுப. மாணிக்கனார், பேராசிரியர் இரா. சாரங்கபாணியார் உள்ளிட்ட அறிஞர் பெருமக்களிடம் தமிழ் கற்ற பெருமைக்குரியவர். இயல்பிலேயே தமிழ்ப்பற்றும், நெறிநூல் பயிற்சியும் கொண்டவர். கடும் உழைப்பால் உயர்ந்து முன்னேறியவர். தம் தொழிலிலும், வாழ்விலும் தமிழைச் செழுமையாகப் பயன்படுத்தும் செவ்விய ஒழங்குடையவர். நாளும் பழகும் நண்பர்களாக இருந்தாலும் தமிழுடன் பிறமொழியைக் கலந்துபேசினால் பெருஞ்சீற்றம் கொள்வார். ஆண்டுதோறும் வ.சுப. மாணிக்கனார் நினைவாக ஏழிளந்தமிழ் உள்ளிட்ட நெறிநூல்களில் போட்டிவைத்து, நன் மாணாக்கரை உருவாக்குவதைத் தொண்டாக நினைந்து வாழ்ந்துவருபவர்.

மதுரை இராம. விசுவநாதனார் அவர்கள் கங்கை காவேரி வாணிகத் தொடர்பு என்ற பெயரில் நிறுவனம் ஒன்றை நடத்தி வருவதை அறிந்தபொழுது, இப்பெயரைக் கொண்டு இவரின் நாட்டுப்பற்றையும், மொழிப்பற்றையும் வியந்தேன். நெல்லையில் நடைபெற்ற தனித்தமிழ் இலக்கியக் கழக ஆண்டு விழாவில் நம் ஐயா விசுவநாதனார் ஒருமுறை எனக்கு தங்கப்பதக்கம் சூட்டியமை(1994) என் வாழ்வில் நினைக்கத் தகுந்த பொழுதாகும். அன்று முதல் ஐயாவுடன் நல்ல தொடர்பில் இருந்து வருகின்றேன். ஐயாவின் அழைப்பில் மதுரைத் திருவள்ளுவர் கழகத்தில் நடைபெற்ற நிகழ்வுகளில் உரையாற்றும் வாய்ப்பையும் பெற்றுள்ளேன்.

தமிழ்ப்பற்றும், நெறியார்ந்த வாழ்க்கையும் கொண்ட இப்பெருமகனார் தம் பட்டறிவுப் பயனாகப்பொருள் பொதிந்த வாழ்க்கைஎன்னும் பெயரில் இதுவரை 34 தொகுதகளை வழங்கியுள்ளார். இத்தொகுதிகள் மணிவாசகர் பதிப்பகம் வழியாக வந்து, மக்களைச் சென்றடைந்துள்ளது.

அண்மையில் முப்பத்தைந்தாம் தொகுதியை அவர்களின் அரிய கையெழுத்தில் எனக்கு அனுப்பியிருந்தார்கள். வழக்கம்போல் எனக்கிருந்த பல்வேறு பணிகளுக்கு இடையில் அவற்றைப் படிப்பதில் காலம் தாழ்ந்தது. ஒரு மழைப்பொழுதில் எடுத்து அந்தக் கையெழுத்துப் படியைப் படித்தபொழுது, அரிய வாழ்வியல் உண்மைகள் தெறித்துக் கிடப்பதை இனங்காண முடிந்தது.  

அகவலோசையில் அசைந்தோடும் இக்கவிதையாறு இயற்கை, தமிழ், இனிய வாழ்க்கை, உழைப்பின் உயர்வு, ஊக்கத்தின் சிறப்பு,  கடவுள் அன்பு, காதல், மழைநீர், காற்று, தோழமை, கவின்மிகு நட்பு எனப் பல பொருண்மைகளில் அமைந்துள்ளது.

அறிவின் நேயம், மனித நேயம்
நேயம் உடையார் நியாயம் தவறார்
வெளி உடம்பின் அழகு தேயும்
உள் உடம்பின் அழகு வளரும்
உள்ளத்தில் கள்ளம் இல்லையென்றால்
எல்லோரும் இன்புற்று வாழ்வர்

என்று இந்நூலில் இடம்பெற்றுள்ள வரிகளைக் கற்றபொழுது திருவள்ளுவமும், திரு.வி..வின் முருகு குறித்த கட்டுரையும் என் மனத்திரையில் தோன்றி மறைந்தன. ‘மனத்தின்கண் மாசற்ற வாழ்க்கையையே அறவாழ்க்கைஎன்று ஆசான் திருவள்ளுவன் சொன்னதை நம் இராம. விசுவநாதனார் இந்த நூலின் பல இடங்களில் நயம்பட உரைத்துள்ளார். திருக்குறள், புறநானூறு, தாயுமானவர், வள்ளலார் நூல்களின் வரிகள் இந்தப்பொருள்பொதிந்த வாழ்க்கைநூலில் தெளிசாறாக உள்ளன.

இளவயது உடம்பு உயர் கோபுரமாகும்
கிழவயதில் குருவிக் கூடாகி உருக்குலையும்

என்று முதுமை நிலையைக் கண்முன் கொண்டுவருவது இவரின் பட்டறிவாகும்.

மாந்தர்களைப் போல் உலகில் வாழும் பிற உயிர்களும் நெறியுடன் வாழ்கின்றன என்ற இயற்கை உண்மையை உணர்ந்த இராம. விசுவநாதனார் காக்கை, குருவிகளின் கவினார்ந்த வாழ்க்கையை வியக்கின்றார். ஆரவார உலகில் அல்லலுற்று அலையும் மாந்தர்களுக்குப் பின்வருமாறு இயற்கை வாழ்க்கையைக் காட்டுகின்றார்.

காக்கை குருவி
பறப்பதைப் பாரீர்!
பதற்ற மின்றிப் பார்ப்பீர்!
பக்குவம் பெறுவீர்!
பறப்பதைத் தொழிலாகக் கொண்ட பறவைகள்
எங்கெங்கோ பறக்கின்றன.
எவ்விடத்திலும் இளைப்பாறும்.
கிளைகளில் கூடுகள்;
முட்டையிடப் பொந்துகள்;
பொரிக்கும் குஞ்சுகளைக்
கொஞ்சுவது சில நாட்களே!
பறவைகள் குஞ்சுகளுக்கு
இரையூட்டும் காட்சி,
பெற்ற தாய் மகவுக்குப் பாலூட்டும் காட்சியே!
தாய்மைப் பண்பினை,
உயிர்களுக்கு வேர் என்போம்

என்று முடிக்கும் இவரின்  உயிர் நேயம் இந்த வரிகளால் புலப்படுகின்றது.

இயற்கையையும் வாழ்க்கையையும் மட்டும் இராம. விசுவநாதனார் பாடவில்லை. காவிரி நீரின் உரிமை, பாலாற்றின் உரிமை, திருப்பதியின் உரிமை, தேவிகுளம், பீர்மேட்டு உரிமை என்று தமிழர்களின் இழந்த உரிமைகளையும் இந்தப் பாட்டுப் பனுவலில் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ் வாழ்க்கை வாழ்ந்து, நிறைபுலமை பெற்ற திரு. இராம. விசுவநாதனாரின் தமிழ் உணர்வு இளைஞர்கள் பெற வேண்டிய உணர்வாகும். அவர்தம் வாழ்க்கைப் பாடம் நாம் படிப்பதற்கு மட்டுமன்று. பின்பற்றுவதற்கும் உரியது. இராம. விசுவநாதனார் பல்லாண்டு வாழ்ந்து பைந்தமிழுக்கு இன்னும் நிறைந்த நூல்களை வழங்க வேண்டுகின்றேன்.

பணிவுடன் / மு.இளங்கோவன் / 22.11.2015

நூல்: பொருள் பொதிந்த வாழ்க்கை
வெளியீடு: மணிவாசகர் பதிப்பகம், சென்னை.
விலை: 40 - 00 உருவா