நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

ஞாயிறு, 15 மார்ச், 2009

கரூர் மாவட்ட மைய நூலக இணையப் பயிலரங்கின் முதல் அமர்வு சிறப்புடன் நிறைவு...

கரூர் மாவட்ட மைய நூலகத்தின் சார்பில் இணையப் பயிலரங்கம் இன்று 15.03.2009 ஞாயிறு காலை 9 மணிக்குத் தொடங்கியது.கரூர் மாவட்டத்தைச் சார்ந்த நூலகர்கள் 25 பேரும்
ஆர்வலர்கள் சிலரும் கலந்துகொண்டு தமிழ் இணையம் பற்றி பல்வேறு செய்திகளைத் தெரிந்து கொண்டனர்.

நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும் மாவட்ட மைய நூலகர் திருசெ.செ.சிவக்குமார் அவர்கள் வரவேற்றார்.மாவட்ட நூலக அலுவலர் திரு,சே.செகதீசன் அவர்கள் தொடக்கவுரை யாற்றினார்.

புதுச்சேரி பாரதிசான் அரசினர் மகளிர் கல்லூரிப் பேராசிரியர் முனைவர் மு.இளங்கோவன் அவர்கள் தமிழும் இணையமும் என்ற தலைப்பில் உரையாற்றினார்.இணையத்தில் தமிழ் வளர்ந்த வரலாறு,99 விசைப்பலகை,மின்னஞ்சல் கணக்கு உருவாக்கம்,மதுரை இலக்கிய மின்திட்டம்,தமிழ் மரபு அறக்கட்டளை,விருபா தளம் உள்ளிட்டவற்றையும் பிரஞ்சு நிறுவன நூலகம்,சிங்கப்பூர் தேசிய நூலகம் உள்ளிட்டவற்றையும் அறிமுகப்படுத்தினார்.

மு.இளங்கோவன் மின்னஞ்சல் தமிழில் அனுப்பும் முறையைச் சுட்டிக்காட்டியும்,பிற நண்பர்களுடன் பயிற்சியாளர்களை உரையாடவைத்தும் உரையைச் சோர்வில்லாமல் நிகழ்த்தினார். பலரும் மின்னஞ்சல் உருவாக்கும் விதத்தை அறிந்தனர்.இந்தச்செய்தி உடனுக்குடன் கரூர் செய்தியாளர்களால் தொலைக்காட்சியிலும் செய்தித்தாளிலும் மக்களுக்குக் கொண்டு சேர்க்கப்பட்டது.

முனைவர் கடவூர் மணிமாறன்,பேராசிரியர் இராசசேகர தங்கமணி,தலைமையாசிரியர் காமராசு உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.

உணவு இடைவேளைக்குப் பிறகு மீண்டும் இணைய இதழ்கள் என்ற தலைப்பில் மு.இளங்கோவனின் உரை இடம்பெறும்.

1 கருத்து:

ttpian சொன்னது…

i am from karaikal:if u conduct similar programme,pl.invite me sir!
k.pathi
karaikal