நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //
நாகர்கோயில் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நாகர்கோயில் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 21 மே, 2017

நாகர்கோயில் உலகத் திருக்குறள் மாநாட்டு நினைவுகள்...

இலக்கியச் செல்வர் குமரி அனந்தன் ஐயாவிடம் நலம் வினவுதல்

மு.இ, அருமை அண்ணாச்சி வி.ஜி.சந்தோஷம் அவர்களுடன்..

திருவாங்கூர் அரச குடும்பத்தைச் சேர்ந்த மாட்சிமைதங்கிய அரசியார் கௌரி பார்வதி பாய் அவர்களை வரவேற்று அழைத்துச் செல்லும் காட்சி: மு.இ, அறிஞர் பத்மநாபன் உள்ளிட்டோர்


  நாகர்கோயிலில் உள்ள ஸ்காட் கிறித்தவக் கல்லூரி அரங்கில் 2017 மே 17,18,19 ஆகிய மூன்று நாளும் அனைத்துலகத் திருக்குறள் மாநாடு மிகச் சிறப்பாக நடைபெற்றது. இருபதுக்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து பேராளர்கள் வருகை தந்து ஆய்வுரை வழங்கினர். சென்னையில் உள்ள ஆசியவியல் நிறுவனமும், மொரீசியசு நாட்டில் உள்ள புலம்பெயர் தமிழர்கள் அமைப்பும் இணைந்து இந்த மாநாட்டிற்கு உரிய ஏற்பாடுகளைச் செய்திருந்தன. இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் திருக்குறள் ஆர்வலர்கள் இந்த மாநாட்டிற்கு வருகை தந்திருந்தனர். அறிஞர்களின் ஆய்வுரைகளைச் செவிமடுக்கவும், நண்பர்களைச் சந்தித்து ஆய்வுப்போக்குகளை அறிந்துகொள்ளவும் நான் சென்றிருந்தேன்.

 முனைவர் ஜான் சாமுவேல், பேராசிரியர் ஆறுமுகம் பரசுராமன், இலக்கியச் செல்வர் குமரி அனந்தன், வி.ஜி.பி. உலகத் தமிழ்ச்சங்கத்தின் தலைவரும் மிகச்சிறந்த திருக்குறள் பற்றாளருமான அருமை அண்ணாச்சி வி.ஜி. சந்தோஷம், முனைவர் நா.கணேசன், பேராசிரியர் கிரிகோரி ஜோம்ஸ், பேராசிரியர் அ. சண்முகதாஸ், பேராசிரியர் மனோன்மணி சண்முகதாஸ், பேராசிரியர் மருதநாயகம், பேராசிரியர் கா.செல்லப்பன், பேராசிரியர் சொர்ணம்(மொரீசியசு) முனைவர் முகிலை. இராசபாண்டியன், அறிஞர் திருவள்ளுவன் இலக்குவனார், முனைவர் கடவூர் மணிமாறன், கவிஞர் காவிரிநாடன், திருக்குறள் இராம. மாணிக்கம், பேராசிரியர் பா. வளன்அரசு, முனைவர் பத்மநாபன், பா.மா. ஆறுமுகம், ’கொங்கு கல்வெட்டு ஆய்வு’ துரை. சுந்தரம், நெல்லை ஆ. சுந்தரம் உள்ளிட்ட நண்பர்களைச் சந்திக்கவும் கண்டு உரையாடவுமான வாய்ப்பு எனக்கு அமைந்தது.

 திருக்குறள்கயமைஅதிகாரச் செய்திகளும் மாக்கியவெல்லியின் சிந்தனைகளும் என்ற தலைப்பில் என் கட்டுரை அமைந்தது. கயமை அதிகாரத்தில் இடம்பெற்றுள்ள செய்திகள் இத்தாலிய அரசியல் அறிஞன் மாக்யவெல்லியின் இளவரசன் நூலில் எவ்வாறு எதிரொலிக்கின்றது என்பதை எடுத்துரைக்கும் வகையில் என் கட்டுரையை அமைத்திருந்தேன். சற்றொப்ப இரண்டு திங்களாகப் பல நூல்களையும் திருக்குறள் உரையையும் கற்று என் கட்டுரையை வடிவமைத்திருந்தேன். நாமக்கல் புலவர் பொ.வேல்சாமி அவர்களுடன் உரையாடி, என் கட்டுரைச் செய்திகளை செழுமைப்படுத்தினேன்.

 மாநாடு நடைபெறும் நாளில் காலைப்பொழுது ஒன்றில் சுசீந்திரம் திருக்கோயில் சென்று அங்குள்ள இசைத்தூண்களையும், சிற்பங்களையும் கண்டு வந்தோம். அதுபோல் தேரூர் சென்று கவிமணி அவர்களின் நினைவு இல்லம் கண்டோம். இதற்குரிய ஏற்பாடுகளைச் செய்த ஆய்வறிஞர் பத்மநாபன், முனைவர் நா. கணேசன் ஆகியோர்க்கு நன்றியன்.

 தமிழுக்கு ஆக்கமான பணிகளைத் தொடர்ந்து செய்துவரும் ஆசியவியல் நிறுவனத்தின் இயக்குநர் முனைவர் ஜான் சாமுவேல், மொரீசியசு நாட்டைச் சேர்ந்த பேராசிரியர் ஆறுமுகம் பரசுராமன் ஆகியோர் அனைவரின் பாராட்டுக்கும் உரியவர்கள்.

மு.இ, முனைவர் நாக. கணேசன், கவிஞர் வி.ஜி. சந்தோஷம்
மு.இ, முனைவர் நாக. கணேசன், கவிஞர் வி.ஜி. சந்தோஷம்

திங்கள், 15 மே, 2017

அனைத்துலகத் திருக்குறள் மாநாடு - நாகர்கோயில்



அனைத்துலகத் திருக்குறள் மாநாடு  2017 மே மாதம் 17 ஆம் நாள் (புதன்கிழமை) காலை பத்து மணிக்கு நாகர்கோயில் ஸ்காட் கிறித்தவக் கல்லூரியில் தொடங்குகிறது. சென்னை ஆசியவியல் நிறுவனமும் மொரீசியசில் உள்ள பன்னாட்டுத் தமிழ்ப் புலம்பெயர்வு அமைப்பும் இணைந்து மூன்று நாள் அனைத்துலகத் திருக்குறள் மாநாட்டை நாகர்கோயிலில் நடத்துகின்றன. உலகின் பல நாடுகளிலிருந்தும் பேராளர்கள் கலந்துகொண்டு திருக்குறள் குறித்த ஆய்வுக்கட்டுரைகளை வழங்க உள்ளனர்.

திருவாங்கூர் அரச குடும்பத்தைச் சேர்ந்த மாட்சிமைதங்கிய அரசியார் கௌரி பார்வதி பாய் அவர்கள் திருக்குறள் மாநாட்டைத் தொடங்கிவைக்கின்றார். ஹாங்காங்கு பல்கலைக் கழகத்தின் பேராசிரியரும் அகராதியியல் துறையின் அறிஞருமான கிரிகோரி ஜோம்ஸ் அவர்கள் மாநாட்டில் தொடக்கவுரையாற்றுகின்றார்.  நடுவண் அமைச்சர் மாண்புமிகு பொன். இராதாகிருட்டினன் அவர்கள் கலந்துகொண்டு, மாநாட்டை ஒட்டி நடைபெறும் கண்காட்சியைத் தொடங்கிவைக்கவும், தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாண்புமிகு சேவூர் இராமச்சந்திரன் அவர்கள் மாநாட்டு மலரினை வெளியிடவும் உள்ளனர்.

மொரீசியசு நாட்டைச் சேர்ந்த பேராசிரியர் ஆறுமுகம் பரசுராமன் அவர்கள் வரவேற்புரையாற்றவும், ஆசியவியல் நிறுவனத்தின் இயக்குநர் முனைவர் ஜான் சாமுவேல் நோக்கவுரையாற்றவும் உள்ளனர்.

அருட்தந்தை தேவகடாட்சம், மகாகுரு பால பிரஜாபதி அடிகளார், இலக்கியச் செல்வர் குமரி அனந்தன், டாக்டர் வி.ஜி. சந்தோஷம், பேராசிரியர் மருதநாயகம், பேராசிரியர் அ. சண்முகதாஸ், பேராசிரியர் கா.செல்லப்பன், பேராசிரியர் கு.மோகனராசு, பேராசிரியர் தி. முருகரத்தினம் உள்ளிட்ட ஆய்வறிஞர்கள் சிறப்புரையாற்ற உள்ளனர்.


உலகின் பல பகுதிகளிலிருந்தும் ஆய்வறிஞர்கள் திருக்குறள் குறித்த ஆய்வுரை வழங்க உள்ளனர். மூன்று நாள் நாகர்கோயிலில் நடைபெறும் அனைத்துலகத் திருக்குறள் மாநாடு திருக்குறளுக்குப் பெருமை சேர்க்கும் மாநாடாக அமையும்.

சனி, 20 ஜூன், 2009

நாகர்கோயில் தமிழ் இணையப் பயிலரங்கம் இனிதே நிறைவு...




20.06.2009 வைகறையில் சில்லென்ற காற்று தொடர்வண்டியில் அரிதுயில்கொண்ட என்னை மெதுவாக எழுப்பியது.ஆரல்வாய்மொழி என்ற இடத்தில் தொடர்வண்டி மாற்றுப்பாதைக்காகத் தேங்கி நின்றது.காற்றாலைகள் எங்கும் கண்ணில் தென்பட்டன.ஒரிசா பாலு நான் எந்த இடத்தில் இருக்கிறேன் என்று வினவினார்.அடுத்து செல்வதரன் அவர்களும் நான் எந்த இடத்தில் இருக்கிறேன் என்று கேட்டார்.செல்வதரன் நாகர்கோயில் தொடர்வண்டி நிலையத்தில் எனக்காகக் காத்திருந்தார்.அரைமணி நேரக் காலத்தாழ்ச்சிக்குப் பிறகு தொடர்வண்டி உரிய இடத்தில் சோம்பல்முறித்து நின்றது.



செல்வதரன் உந்துவண்டியில் ஏறி விடுதிக்குச் சென்றேன்.ஒரிசா பாலு என் வருகைக்காகக் காத்திருந்தார்.அருகில் பேராசிரியர் அ.கா.பெருமாள் அவர்களும் காத்திருந்தார்.தம்பி செல்வமுரளியும் சேலத்திலிருந்து வந்தார்.பெங்களூரிலிருந்து நண்பர் விசயலட்சுமணன் அவர்களும் வந்திருந்தார்.குளித்து முடித்து அனைவரும் சிற்றுண்டி உண்டோம்.இடையில் எழுத்தாளர் செயமோகன் அவர்களிடம் பேசி வாய்ப்புக்கு ஏற்ப சந்திப்பதாகச் சொன்னேன்.





பங்கேற்பாளர்கள்
அனைவரும் இணையப்பயிலரங்கம் நடக்கும் இடத்தைச் சரியாக 9.30 மணிக்கு அடைந்தோம். பதிவுக்குப் பிறகு அரங்கில் நுழைந்தோம்.மானிங் ஸ்டார் கல்லூரியில் உள்ள கணிப்பொறி அரங்கு நிகழ்ச்சிக்காக சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கணிப்பொறிகள் இணைய இணைப்புடன் இருந்தன. காற்று வளிப்பாட்டு அறை. அனைவரும் மகிழ்ச்சியுடன் அமர்ந்தனர்.

பலதுறை சார்ந்த 60 பேர் பயிற்சி பெற வந்திருந்தனர். திருநெல்வேலியிலிருந்து காவல்துறை அதிகாரி ஒருவர் ஆர்வமுடன் கலந்துகொண்டார். கரூரிலிருந்து இரண்டு அன்பர்கள் வந்திருந்தனர்.அதில் ஒருவர் தட்சு தமிழ் இதழின் செய்தியாளர். நாகர்கோயில் சார்ந்த இதழியல்துறை நண்பர்கள் பலரும் வந்திருந்தனர். வங்கியில் பணிபுரியும் நண்பர்கள் நீதிமன்றத்தில் பணிபுரிபவர்கள் என ஆணும் பெண்ணுமாகப் பலர் வந்திருந்தனர்.

அருட்தந்தை விக்டர் அவர்கள்(தாளாளர்)குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்தார். செந்தீ நடராசன் அவர்களும் நானும் குத்துவிளக்கேற்றினோம். விக்டர் அவர்களும் செந்தீ அவர்களும் மிகச்சுருக்கமாகவே உரையாற்றினர். அரங்கினைச் செல்வதரன் அவர்கள் சரியாக 10.10 மணியளவில் என்னிடம் கொடுத்தார். தமிழ் இணையம் ,கணிப்பொறி பற்றியும் தமிழ்த்தட்டச்சு பற்றியும் அடிப்படையான செய்திகளை எடுத்தரைத்தேன். தமிழ்மணம், மதுரைத்திட்டம்,தமிழ்மரபு அறக்கட்டளை பற்றியும் மின்னிதழ்கள் பற்றியும் காட்சி விளக்கத்துடன் எடுத்துரைத்தேன். நண்பர் செல்வமுரளியும்,விசயலட்சுமணன் அவர்களும் பின்புலத்தில் இருந்து தொழில் நுட்பச்சிக்கல் இல்லாமலும் தொய்வில்லாமலும் பார்த்துக்கொண்டனர். நானும் மாணவர்களை ஆளுவதில் பயிற்சி பெற்றவன் என்பதால் மகிழ்ச்சியாகவே நான்குமணிநேரம் வகுப்பெடுத்தேன்.இரண்டு மணிக்கு மேல் மின்சாரம் நிற்கும் என்றார்கள்.அதனால் இரண்டு மணிவரை வகுப்பெடுத்தோம்.உணவு இடைவேளைக்குப் பிறகு மீண்டும் மூன்று மணிக்குச் சரியக ஒன்றுகூடினோம்.அதன் பிறகு சிறிது நேரத்தில் அறிமுகம் செய்துகொண்டோம்.

ஒரிசா பாலு அவர்கள் விக்கிபீடியா, விக்கி மேப்பியா என்ற பகுதியை விளக்கி உலகத்தை எங்களுக்குக் கண்முன் கொண்டு வந்து நிறுத்தினார்.கடலியல் ஆய்விலும் வரலாற்று ஆய்விலும் வல்லவர் பாலு என்பதால் அனைவரையும் தூங்கவிடாமல் தம் பணியை மிகச்சிறப்பாகச் செய்தார்.

மு.,செல்வமுரளி,விசயலட்சுமணன்

தம்பி செல்வமுரளியும் விசயலட்சுமணன் அவர்களும் கூகுள் நிறுவனத்தில் ஜிமெயில் கணக்குத் தொடக்கம் பற்றியும் கமுக்கக்குறியீடுகள் பற்றியும் காட்சி விளக்கம் நல்கினர்.பயிற்சி பெற வந்த ஒருவருக்கு புதிய கணக்கு தொடங்கி வழங்கினர். அதனை அடுத்து வலைப்பூ உருவாக்கம் பற்றி காட்சி விளக்கத்துடன் பயிற்சி வழங்கினர். பயிற்சிக்கு வந்தவர்களுக்கு NHM எழுதி சில படிகள் வழங்கினேன்.முன்னமே காலையில் தமிழ் 99 விசைப்பலகை அமைப்பை ஒளியச்சு எடுத்து அனைவருக்கும் வழங்கினோம்.
ஒரிசா பாலு, செந்தீ நடராசன், செல்வமுரளி மற்றுமுள்ள தமிழார்வலருடன்

நிகழ்ச்சி நிறைவில் அனைவரும் தங்கள் பட்டறிவுகளைப் பகிர்ந்துகொண்டனர். எட்டு வலைப்பதிவர்கள் வந்து கலந்துகொண்டமை மகிழ்ச்சிக்குரிய ஒன்றாகும். இணையத்திலும் எழுத்துத்துறையிலும் ஆர்வம்கொண்ட பலரைக்கொண்டு இந்தப் பயிலரங்கம் வடிவமைக்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிகள்,கல்லூரிகளில் தொடர்ந்து இத்தகு பயிலரங்குகள் நடத்த கிறித்தவ தந்தைமார்கள் பலர் விரும்பியுள்ளனர். வாய்ப்புக்கு ஏற்ப அடுத்த பயிலரங்குகளுக்கு வருவதாக அனைவரிடமும் விடைபெற்றேன்.

காலச்சுவடு அலுவலகம் சென்று பேராசிரியர் பெர்னாடு பேர்டு அவர்களின் பேச்சைக் கேட்க நினைத்திருந்தேன்.நாகர்கோயிலில் மழை என்பதால் வெளியே செல்லமுடியவில்லை.இரவு அறைக்கு அறிஞர் குமரிமைந்தன் அவர்கள் வந்து உரையாடினார்கள்.குமரிக்கண்ட ஆய்வுகள், கன்னியாகுமரி மாவட்ட மக்கள் வரலாறு பற்றி உரையாடினோம்.நடு இரவு வரை எங்கள் உரையாடலும் இணைய வடிவமைப்புப் பணிகளும் தொடர்ந்தன…

தமிழ் இணையப்பயிலரங்கம் நாகர்கோயிலில் இனிதே தொடங்கியது...

தமிழ் இணையப்பயிலரங்கம் இன்று 20.06.2009 சனிக்கிழமை காலை 10 மணிக்கு நாகர்கோயில் மானிங்ஸ்டார் பல்தொழில்நுட்பக் கல்லூரியில் தொடங்கியது.
அமெரிக்காவில் உள்ள தமிழ்மணம் இணையத்தளமும் கலிங்கத்தமிழ் ஆய்வு நிறுவனமும்,அமிர்தா ஊடக ஆய்வு மையமும்,அமுதம் தமிழ் மாத இதழும் இணைந்து ஒருநாள் தமிழ் இணையப் பயிலரங்கம் நடத்த ஏற்பாடு செய்திருந்தன.

ஏறத்தாழ அறுதுபேர் பெயர்களைப் பதிவு செய்துகொண்டு தமிழ் இணையம் சார்ந்த பயிற்சி பெற்றனர்.காலையில் 10 மணிக்குக் குத்துவிளக்கேற்றி மானிங் ஸ்டார் கல்லூரி தாளாளர் விக்டர் அவர்கள் வாழ்த்திப் பேசினார்.எழுத்தாளர் செந்தீ நடராசன் அவர்கள் நிகழ்ச்சியின் நோக்கம் பற்றி எடுத்துரைத்தார்.செல்வதரன் அவர்கள் பயிலரங்கிற்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.மிகச் சுருக்கமாகத் தொடக்கவிழா நடந்தது.

காலையில் பத்து மணியளவில் என் உரை தொடங்கியது.தமிழ்த்தட்டச்சு வகைகள்,தமிழ் 99 விசைப்பலகை அமைப்பு,பயன்பாடு பற்றி எடுத்துரைத்தேன்.மின்னஞ்சல் உரையாடல் வசதிகளை எடுத்துரைத்துக் காட்சிவழி விளக்கினேன்.என் உரை சிறப்பாக அமைய நண்பர் செல்வமுரளி,விசய லட்சுமணன் ஒரிசா பாலு ஆகியோர் தொழில்நுட்ப அளவிலான பணிகளைக் கவனித்தனர்.

உரையாடல் பற்றி உரையாற்றிக்கொண்டிருந்த போது எழுத்தாளர் செயமோகன் அவர்கள் எங்களுடன் இணையம் வழி பங்கேற்று அனைவருக்கும் வாழ்த்துரைத்தார்.அதுபோல் முனைவர் நா.கண்ணன் அவர்கள்(கொரியா)எங்களுடன் உரையாடலில் பங்கேற்றார். தமிழ்க்காவல் முருகையன்,திரட்டி வெங்கடேசன் ஆகியோரும் உடனடியாக இணைப்புக்கு வந்து வாழ்த்துரைத்தனர்.அரங்கில் இருந்தவர்களுக்குத் தமிழ் வழியில் இந்த அளவு வசதி உள்ளதே என்ற வியப்பும் மலைப்பும் இருந்தது.

மின்னிதழ்கள் என்ற தலைப்பில் அடுத்த நிலையில் என் பேச்சுத் தொடர்ந்தது.தினமலர் நாளிதழ் ஒருங்குகுறியில் வருவது பற்றியும்,அதன் பல்வகை சிறப்புகள் குறித்தும் உரையாற்றினேன்.தினமணி நாளிதழ் அண்மையில் ஒருங்குகுறிக்கு மாறியுள்ளது பற்றியும் பிற ஏடுகள் ஒருங்குகுறிக்கு மாறவேண்டியதன் தேவை பற்றியும் எடுத்துரைத்தேன்.
தமிழ்மணம் தளம் அதன் சிறப்பு முக்கியத்துவம் பற்றியும் காட்சி வழி விளக்கினேன்.அதுபோல் மதுரைத்திட்டம்,தமிழ்மரபு அறக்கட்டளை,தமிழ் இணையப்பல்கலைக்கழகம்,வரலாறு உள்ளிட்ட தளங்கள் பற்றியும் எடுத்துரைத்தேன்.கன்னியாகுமரி மாவட்டம் சார்ந்த எழுத்தாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள்,வங்கியில் பணிபுரிபவர்கள்,அருட் தந்ததையர்கள் பலர் வந்துள்ளனர்.

உணவு இடைவேளைக்கு இரண்டு மணிக்குப் பிரிந்தோம்.மீண்டும் மூன்று மணிக்கு அமர்வு தொடங்கியுள்ளது...

வெள்ளி, 19 ஜூன், 2009

கன்னியாகுமரி மாவட்ட வலைப்பதிவு,எழுத்தாளர் நண்பர்களுக்கு...


மாண்புமிகு கலைஞர் அவர்களால் குமரி முனையில் எடுக்கப்பெற்றுள்ள திருவள்ளுவர் சிலை

கன்னியாகுமரி மாவட்டம் நாகர் கோயில்,சுங்கான் கடை, மானிங் ஸ்டார் பல்தொழில் நுட்பக்கல்லூரியில்(பாலிடெக்னிக்) 20.06.2009 சனி காலை 9 மணிமுதல் மாலை 5 மணி வரை தமிழ் இணையப்பயிலரங்கம் நடக்கிறது.திரு.பிரிட்டோ,திரு.செல்வதரன் உள்ளிட்ட நண்பர்களை எனக்கு அறிமுகம் செய்துவைத்து இந்தப் பயிலரங்கை ஒரிசா பாலசுப்பிரமணி(B+) அவர்கள் ஒருங்கிணைத்துள்ளார்.

வழக்கம் போல் பல்வேறு தடைகளைக் கடந்து நல்ல உள்ளங்களின் மேலான ஒத்துழைப்பால் இந்தப் பயிலரங்கம் வெற்றியுடன் நடைபெற உள்ளது.உங்கள் அனைவரின் வாழ்த்துதலையும் ஒத்துழைப்பையும் கோருகிறேன்.

கன்னியாகுமரி,நாகர்கோயில்,திருவனந்தபுரம்,திருநெல்வேலி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வலைப்பதிவு நண்பர்களும், எழுத்தாளர்களும்,தமிழ் ஆர்வலர்களும் கலந்துகொண்டு புதியவர்களுக்கு உதவலாம்.பயிற்சியில் மின்னஞ்சல்,உரையாடல் பற்றி விளக்கும் பொழுது இணைப்பில் உள்ளவர்கள் வந்து பயிற்சியாளர்களுக்கு வாழ்த்துரைக்கலாம்.

தரமான பயிற்சி வழங்கப்படுவதால் சில விதிமுறைகள் வகுத்து நிகழ்ச்சியை அமைத்துள்ளோம்.நிறை குறைகள் சுட்டிக்காட்டப்பட்டால் அடுத்த நிகழ்வில் அவற்றைச் சரிசெய்துகொள்வோம்.

புதுவையிலிருந்து நானும் சேலத்திலிருந்து திரு.செல்வமுரளி,விசய இலட்சுமணனும் கலந்துகொள்கிறோம் ஒரிசா பாலசுப்பிரமணியும் வந்துள்ளார்.அனைவரும் இணைந்து பயிற்சியளிக்க உள்ளோம்.தமிழ்த்தட்டச்சு,தமிழ் 99 விசைப்பலகை,மின்னஞ்சல் கணக்குத் தொடக்கம்,வலைப்பூ உருவாக்கம்,இணைய இதழ்கள்,வலைத்தளப் பாதுகாப்பு,தமிழ் விக்கிபீடியா,நூலகம் திட்டம்,மதுரைத்திட்டம்,தமிழ் மரபு அறக்கட்டளை உள்ளிட்ட இணையம் சார்ந்த செய்திகள் காட்சி விளக்கத்துடன் எடுத்துரைக்கப்பட உள்ளன.

உணவு,சிற்றுண்டி வழங்கப்படும்.முன்னமே பதிவுசெய்து கொண்டுள்ள நண்பர்கள் உரிய நேரத்தில் வந்து பங்குகொள்ள,பயன்பெற அழைக்கிறேன்.

கிழக்குப் பதிப்பக உரிமையாளர் நண்பர் திரு.பத்ரி அவர்கள் தம் நிறுவனம் சார்பில் வழங்கியுள்ள NHM எழுதியை இருப்பில் உள்ளவற்றைச் சிலருக்கு வழங்க முடிவு செய்துள்ளேன்.

பொள்ளாச்சி கவிஞர் சிற்பி ஐயா அவர்களும் பேராசிரியர் கி.நாச்சிமுத்து ஐயாவும்(சவகர்லால் நேரு பல்கலைக்கழகம்,புது தில்லி),நா.கணேசன்(நாசா விண்வெளி ஆய்வுமையம்),திரு.கல்யாணசுந்தரம்(மதுரைத் திட்டம்,சுவிசர்லாந்து),பேராசிரியர் சி.இ.மறைமலை,முனைவர் பொற்கோ,தகடூர் கோபி,முகுந்து ஆகியோரும் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.

சங்கமம்லைவ்,தட்சுதமிழ் உள்ளிட்ட இணைய இதழ் ஆசிரியர்கள் தங்கள் தளங்களில் இச்செய்தியை வெளியிட்டனர்.செய்தி இதழ்கள்,ஊடகங்கள் இந் நிகழ்வு பற்றிய செய்தியை வெளியிட்டுள்ளன.அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி.நாளை கன்னியாகுமரி-நாகர்கோயிலிலிருந்து எழுதுவேன்.நிகழ்ச்சி பற்றிய படங்களை,பேச்சு விவரங்களை வழங்குவேன்.

தொடர்புக்கு :
9994352587
9790307202
9865894576

சனி, 13 ஜூன், 2009

தமிழ் இணையப் பயிலரங்கம்-நாகர்கோயில்



தமிழ் இணையத்தை அறிமுகப்படுத்தும் நோக்கில் குமரிமுனையில் தமிழ் இணையப் பயிலரங்கம் ஒன்றை நடத்த அமெரிக்காவில் உள்ள தமிழ் மணம் இணையத்தள நிறுவனமும், கலிங்கத்தமிழ் ஆய்வு நிறுவனமும்,மானிங் ஸ்டார் பாலிடெக்னிக் கல்லூரியும் இணைந்து திட்டமிட்டுள்ளன.இந்த நிறுவனங்களுடன் இணைந்து அமிர்தா ஊடக ஆய்வுமையமும், அமுதம் மாத இதழும் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்துவருகின்றன.

கணிப்பொறி,இணையத்தில் ஆர்வம் உடையவர்கள் இதில் பங்கேற்றுப் பயன் பெறலாம்.

இடம்: மானிங் ஸ்டார் பாலிடெக்னிக் கல்லூரி,
சுங்கான்கடை,நாகர்கோயில்(கன்னியாகுமரி மாவட்டம்)
நாள் : 20.06.2009 காரி(சனி)க்கிழமை
நேரம் : காலை 9.00 முதல் மாலை 5.00 மணிவரை

பயிலரங்கில் தமிழ்த்தட்டச்சு,மின்னஞ்சல்,வலைப்பூ உருவாக்கம்,புகழ்பெற்ற இணையத்தளங்கள் குறித்து காட்சி விளக்கத்துடன் செய்திகள் பேசப்படும்.மின்னிதழ்கள், நூலகங்கள், விக்கிபீடியா, விக்கி மேப்பியா பற்றியும் எடுத்துரைக்கப்படும்.புதுச்சேரி முனைவர் மு.இளங்கோவன்,சேலம் செல்வமுரளி,ஒரிசா பாலு ஆகியோர் பயற்சியளிக்க உள்ளனர்.பயிலரங்கில் கலந்துகொள்ள உரூவா 100 பதிவுக் கட்டணமாகச் செலுத்த வேண்டும்.பகலுணவு உண்டு.

பதிவு செய்ய இறுதிநாள்: 18.06.2009.
முதலில் வருபவருக்கு முதல்வாய்ப்பு

தொடர்புக்கு
9994352587
9790307202
9789575900