நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வியாழன், 28 பிப்ரவரி, 2013

பேராசிரியர் முனைவர் அ . தட்சணாமூர்த்தி அவர்கள்



 பெரும்பேராசிரியர் அ.தட்சணாமூர்த்தி அவர்கள்
சங்க இலக்கிய நூல்களிலும், மொழிபெயர்ப்புத் துறையிலும் மிகச்சிறந்த புலமையுடையவர் பேராசிரியர் அ.தட்சணாமூர்த்தி அவர்கள் ஆவார். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வட்டம் நெடுவாக்கோட்டையில் 10.04.1938 இல் பிறந்தவர். பெற்றோர் திருவாளர் அய்யாசாமி நெடுவாண்டார்- இராசம்மாள் ஆவர்.

தொடக்கக் கல்வியை மன்னார்குடிப் பள்ளியிலும் இடைநிலைக் கல்வியைக் குடந்தை அரசினர் கல்லூரியிலும் முடித்தவர்(1955-57). அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயின்று பி.ஏ(ஆனர்சு) தேறியவர்(1958-61). பி.எட்.பட்டத்தையும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயின்று பெற்றவர்.

திருவாரூரில் உள்ள வடபாதிமங்கலம் சோமசுந்தரம் ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில் 1962 இல் முதனிலைத் தமிழாசிரியராகப் பணியில் இணைந்தார். அதனையடுத்து மன்னம்பந்தல் ஏ.வி.சி.கல்லூரியில் தமிழ் பயிற்றுநராகப் பணியாற்றினார்(19965-67). பூண்டி புட்பம் கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராகவும்(1967-91), மதுரை செந்தமிழ்க் கல்லூரியில் முதல்வராகவும் விளங்கிய பெருமைக்குரியவர்.

முனைவர் அ. தட்சணாமூர்த்தி அவர்கள் எப்பொழுதும் படித்துக் கொண்டிருக்கும் இயல்புடையவர். சங்க இலக்கியங்களிலும், தமிழர் பண்பாடு குறித்த கல்வியிலும் ஆழ்ந்த சிந்தனையுடையவர். தமிழ் இலக்கியங்களை இசையுடன் பாடி விளக்க வல்லவர்.

1973 இல் இவர் எழுதி வெளியிட்ட தமிழர் நாகரிகமும் பண்பாடும் என்ற நூல் இவர் புகழ்சாற்றும் சிறந்த நூலாகும். 1990 இல் பாரதிதாசன் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளார். இதில் அழகின் சிரிப்பு, காதலா கடமையா, தமிழச்சியின் கத்தி  நூல் பகுதிகள் அடங்கும். அகநானூற்றையும்(1999), நற்றிணையையும்(2000) ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளார். மேலும் ஐங்குறுநூறு, குறுந்தொகை உள்ளிட்ட நூல்களையும் மொழிபெயர்த்துள்ளார்.

பேராசிரியர் அ.தட்சணாமூர்த்தி அவர்கள் பத்துப்பாட்டு நூல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார். இவர்தம் பதிப்பு மூலம், ஒலிபெயர்ப்பு, மொழிபெயர்ப்பு, குறிப்புகள் என்ற அடிப்படையில் அமைந்துள்ளது. முனைவர் பொன்னவைக்கோ அவர்களின் முயற்சியால் எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழகத்தின் பதிப்புத்துறை இந்த நூலை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் பல்வேறு கல்வி நிறுவனங்கள், இலக்கிய அமைப்புகளில் சிறப்புச் சொற்பொழிவுகள் ஆற்றிய பெருமைக்குரியவர். பெருமைக்குரிய அறிஞர்களிடம் படித்த இப்பெருமகனாரிடம் படித்தவர்கள் பலரும் தமிழகத்தில் புகழ்பெற்ற அறிஞர்களாக விளங்குகின்றமை குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

நன்றி: முனைவர் இராமர் இளங்கோ, முனைவர் அ.ம.சத்தியமூர்த்தி

கருத்துகள் இல்லை: