நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

செவ்வாய், 26 பிப்ரவரி, 2013

திருமழபாடி பேராசிரியர் அ.ஆறுமுகம் அவர்கள்



முனைவர் அ.ஆறுமுகம் அவர்கள்

திருமழபாடியில் வாழ்ந்துவரும் பேராசிரியர் அ.ஆறுமுகம் அவர்கள் தம் பணி ஓய்வுக்குப் பிறகும் தொடர்ந்து நூல்களை எழுதியும், பதிப்பித்தும் வெளியிட்டும் பேராசிரியர்களுக்கு முன்னோடியாக விளங்கிவருகின்றார். அண்மையில் இவர் வெளியிட்டுள்ள தமிழ் வரலாற்றில் அரியலூர் மாவட்டம் என்ற நூலைப் படித்து மகிழ்ந்தேன். செய்திகளைத் திரட்டுவதிலும் அவற்றைப் பகுத்து வெளியிடுவதிலும் பேராசிரியர் அவர்கள் தேனீபோல் தொடர்ந்து உழைப்பவர்கள்.

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் முனைவர் சி. தங்கமுத்து உள்ளிட்ட தலைமாணாக்கர்களை உருவாக்கிய பெருமைக்குரியவர். பெரும் புலமை பெற்றிருந்தாலும் அடக்கமும் எளிமையுமாக வாழ்ந்து வருபவர். சமூகத்தில் மறக்கப்பட்டவர்களின் வரலாற்றை ஆர்வமாக எழுதியதில் பேராசிரியர் அவர்களுக்குப் பெரும் பங்கு உண்டு. பேராசிரியர் அவர்களின் தமிழ் வாழ்க்கையை இங்குப் பதிந்துவைக்கின்றேன்.

முனைவர் அ.ஆறுமுகம் அவர்களின் தமிழ்வாழ்க்கை

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம், சாத்தநத்தம் என்ற ஊரில் வாழ்ந்த திருவாளர் அமிழ்தம், அருணாசலம் ஆகியோரின் மகனாக 11.06.1933 இல் பிறந்தவர். 19 ஆண்டுகள் பள்ளியிலும், 19 ஆண்டுகள் கல்லூரியிலும் பணியாற்றிய பெருமைக்குரியவர். சங்க இலக்கியத்தில் குடும்பம், உடைமை, அரசு என்ற தலைப்பில் ஆய்வுசெய்து முனைவர் பட்டம் பெற்றுள்ளார். திருமழபாடியில் தமிழ்ச்சங்கம் நிறுவியும், திருவள்ளுவர் சிலை எடுப்பித்தும், தமிழறிஞர்களைத் திருமழபாடிக்கு அழைத்துச் சிறப்புச் செய்தும் தொண்டாற்றியவர். 2010 இல் தாய் தந்த வாழ்க்கைத்தேன் என்ற தலைப்பில் விரிவான தன்வரலாற்று நூலை எழுதியுள்ளார்.

கவிதை நூல்கள், கட்டுரை நூல்கள், தன்வரலாறு, வாழ்க்கை வரலாற்று நூல்கள், நாட்டுப்புற இலக்கிய நூல்கள், திருக்குறள் உரை, கட்டுரை நூல்கள் என நாற்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவர்.

பாவேந்தர் பதிப்பகம் என்ற பதிப்பகத்தைத் தொடங்கி இவர்தம் படைப்புகளை வெளியிட்டு வருகின்றார். உலகத் திருக்குறள் மையத்தின் வாழ்நாள் உறுப்பினராக உள்ளார். மாணவர்கள் திருக்குறளை ஒப்புவிக்கும் வகையில் திருக்குறள் நினைவாற்றல் வழிகாட்டி என்ற நூலை வெளியிட்டுள்ளார்.

முனைவர் அ.ஆறுமுகனாரின் தமிழ்க்கொடை

1.   பூம்புகாரின் புதுவரவு (1970)
2.   பாவேந்தரின் தமிழியக்கம் ஓர் ஆய்வு (1984)
3.   நாட்டுப்புற இலக்கியமும் பண்பாடும் (1984)
4.   திருக்குறள் நினைவாற்றல் வழிகாட்டி (1993)
5.   குறள் விருந்து (1993)
6.   வாழ்க்கை இலக்கியம் (1994)
7.   சங்க இலக்கியத்தில் குடும்பம், உடைமை, அரசு (1994)
8.   திருக்குறள் நினைவேடு (1996)
9.   வளர்தமிழ் வழிகாட்டி (1996)
10. என்னையே நான் (தன்வரலாறு), (1997)
11. பாவேந்தர் தந்த பரிசு (1997)
12. சிலம்பும் நாட்டார் உரையும் (1998)
13. திருக்குறளில் புதிய பார்வை (1998)
14. ஊர்வல உணர்வுகள் (1999)
15. ஆற்றங்கரைக் குயில் (1999)
16. மணிக்குறள் நூறு (2000)
17.  வழியடைக்குங்கல் (2000)
18. எண்ணித்துணிக (2000)
19. அகமும் அழகும் (2001)
20. குயில் தந்த முத்தம் (2001)
21. ஆந்திரங் கண்ட அருந்தமிழ்(முனைவர் சிங்காரவேலர் வரலாறு) (2001)
22. சிலம்பின் மூன்று ஒலிகள் (2003)
23. தன்மானத் தமிழ் மறவர் (2003)
24. கவிவேந்தரின் கருத்துச்சோலை (2003)
25. பிறந்த மண்ணின் பிடிவரலாறு (2004)
26. அந்தமிழ்கண்ட அந்தமான்(பயண நூல்) (2004)
27. வாழ்வியல் வளங்கள் (2005)
28. திருக்குறள் கையேடு (2005)
29. ஆ.செ.த.வாழ்க்கை வரலாறு (2005)
30. படைப்புவேந்தரின் பன்முகப் பார்வை (2006)
31. திருக்குறள் தெளிவும் கருத்தும் (2007)
32. தமிழில் வெண்பா இலக்கியங்கள் (2007)
33. அரசியல் இமையம் அண்ணா (2009)
34. முந்துமா முதுமை,களப்பணித்தொகுப்பு (2009)
35. தமிழராய் வாழ்வோம் (2010)
36. தாய் தந்த வாழ்க்கைத் தேன் (தன்வரலாறு) (2012)
37. வண்டமிழ் வளர்த்த வரதராசனார் (2011)
38. தமிழ் வரலாற்றில் அரியலூர் மாவட்டம் (2012)







1 கருத்து:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

திருக்குறள் நினைவாற்றல் வழிகாட்டி என்ற நூலை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி ஐயா...