நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

புதன், 27 பிப்ரவரி, 2013

முனைவர் கு. வெ. பாலசுப்பிரமணியன் அவர்கள்


 முனைவர் கு.வெ.பாலசுப்பிரமணியன் அவர்கள்

பேராசிரியர் கு.வெ.பாலசுப்பிரமணியன் அவர்கள் தஞ்சாவூர் மாவட்டம் நாச்சியார் கோயில் என்னும் ஊரில் திருவாளர்மு.வெங்கடாசலம்- செல்லம்மாள் ஆகியோர்க்கு மகனாக 06.04.1943 இல் பிறந்தவர்.

திருவிடைமருதூரில் உள்ள திருவாவடுதுறை ஆதீன உயர்நிலைப் பள்ளியில் பள்ளிக்கல்வியை முடித்து, குடந்தை அரசுக் கல்லூரியில் புகுமுக வகுப்புக் கல்வியையும் இளங்கலைத் தமிழ் இலக்கியக் கல்வியையும் முடித்தவர்(1961-64). காரைக்குடி அழகப்பா கல்லூரியில் முதுகலைத் தமிழ் இலக்கியம் பயின்றவர். மூதறிஞர் வ.சுப.மாணிக்கனாரிடம் தமிழ் பயின்ற பெருமைக்குரியவர்.

தஞ்சாவூர் பூண்டி திருபுட்பம் கல்லூரியில்22.06.1968 இல் இளநிலை விரிவுரையாளராகப் பணியில் இணைந்தும், 1968-70 இல் வேலூர் ஊரிசு கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராகப் பணியில் இணைந்தும் பணியாற்றினார். 1970 இல் அரசுக் கல்லூரியில் பணியாற்றத் தேர்ந்தெடுக்கப்பெற்றுத் திருவண்ணாமலை, திருச்சி பெரியார் கல்லூரி, கும்பகோணம், புதுக்கோட்டை ஆகிய ஊர்களில் அமைந்த அரசுக் கல்லூரிகளில் தமிழ்ப்பேராசிரியராகப் பணியாற்றியவர்.

 தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் இலக்கியத் துறைத் தலைவராகவும், பொறுப்புப் பதிவாளராகவும் பணியாற்றிய பெருமைக்குரியவர்.

கல்வெட்டு, சமூகப்பணி, முதியோர் கல்வி ஆகியவற்றில் சான்றிதழ்களும் படைப்பிலக்கியம், மொழியியல் ஆகியவற்றில் சிறப்புப் பயிற்சியும் பெற்றுள்ளார். 35 ஆண்டுகளாக ஆசிரியப் பணியாற்றியவர்.

இவரது நூல்கள் ஆராய்ச்சிக் கட்டுரை, கவிதை, செய்யுள் -நாடகம், சிறுகதை, இளைஞர்களுக்கான வழிகாட்டி என்ற பல்வேறு துறைகளில் அமைந்துள்ளன. இவர் ஒரு சீரிய இலக்கிய ஆய்வறிஞர்; சிறந்த பேச்சாளர். ஆங்கில நூல்களைத் தமிழுக்கு மொழிபெயர்க்கும் பேரறிவு பெற்றவர்.

பல கல்விநிறுவனங்களின் பாடநூல் குழுக்களிலும் தேர்வுக் குழுக்களிலும் உறுப்பினராக உள்ளார். அனைத்துலகக் கருத்தரங்குகள், கவியரங்குகள் ஆகியவற்றிலும் பங்கு பெற்று வருகின்றார். அனைத்து இந்திய வானொலியில் முப்பதுக்கும் மேற்பட்ட சொற்பொழிவுகள் நிகழ்த்தியுள்ளார். தமிழகப் பல்கலைக்கழகங்களில் அறக்கட்டளைப் பொழிவுகள் நிகழ்த்திய பெருமைக்குரியவர்.

இலக்கியப்பணி,     கல்விப்பணி ஆகியவை தவிர, பேரா. கு.வெ.பாலசுப்பி்ரமணியன் அவர்கள் தமிழகத்திற்கு வருகை தரும் இந்தியத் தலைவர்கள் மற்றும் நடுவண் அரசு அலுவலர்களுக்குத் தமிழ்நாட்டுச் சுற்றுப்பயணத்தின்போதுமொழி பெயர்ப்பாளராகவும் பணியாற்றி வருகின்றார். 16 முனைவர் பட்ட மாணவர்களுக்கும் 24 ஆய்வியல் நிறைஞர் பட்ட மாணவர்களுக்கும் நெறியாளராகச் செயல்பட்டுள்ளார்.

முனைவர் கு.வெ.பா. வின் தமிழ்க்கொடை

சங்க இலக்கியத்தில் புறப்பொருள்(1986)
சங்க இலக்கியத்தில் வாகைத்திணை
சங்க இலக்கியத்தில் கலையும் கலைக்கோட்பாடும்
ஆய்வுக்களங்கள்
சங்க இலக்கியத்தில் சமூக அமைப்புகள் (1994) தமிழ்ப்பல்கலைக்கழக வெளியீடு
இலக்கியச் சிந்தனைகள்
இலக்கிய நிழல்
கலம்பகத் திறன்
தமிழ் வீரநிலைக் கவிதை(2006 முனைவர் க. கைலாசபதியின் முனைவர் பட்ட ஆய்வேடு மொழிபெயர்ப்பு)

நிலாக்கால நினைவுகள்(கவிதைகள்)

துண்டு, (சிறுகதை)
நரசிம்மம்(சிறுகதை)
தாயத்து(சிறுகதை)

வண்டார்குழலி(காப்பியம்) தமிழக அரசின் பரிசில் பெற்றது

கயற்கண்ணி(நாடகம்)

இளைஞர்களின் ஒளிமயமான எதிர்காலத்திற்கு
தினமும் ஒரு தேவாரம்
சைவ சித்தாந்த அடிப்படைகள்
சிற்ப ரத்னாகரம்
அருணகிரியார்
முதலான நூல்களை எழுதியுள்ளார்.

பேராசிரியர் கு.வெ.பாலசுப்பிரமணியன் அவர்கள் தஞ்சாவூரில் தமிழ் ஆய்வுப்பணிகளில் ஈடுபட்டுவருகின்றார்கள்.

2 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

பேராசிரியர் கு.வெ.பாலசுப்பிரமணியன் அவர்களின் சிறந்த தகவல்களுக்கு நன்றி ஐயா...

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

இவர் தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் பணியாற்றியபோது நன்கறிவேன். பழகுவதற்கு இனியவர். ஆய்வாளர்களை ஊக்குவிப்பவர். பகிர்வுக்கு நன்றி.