நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

சனி, 16 ஜூலை, 2011

புதுச்சேரியில் முனைவர் இரா.திருமுருகனார் அறக்கட்டளைப்பொழிவு


புலவர் கி.த.பச்சையப்பன் அவர்கள்

புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தின் சார்பில் தீந்தமிழ்க் காவலர் முனைவர் இரா.திருமுருகனார் அறக்கட்டளையின் இரண்டாம் பொழிவு புதுவைத் தமிழ்ச்சங்க அரங்கில் இன்று(16.07.2011) மாலை ஆறு மணியளவில் தொடங்கியது. தொடக்கத்தில் எழுச்சித் தமிழிசை நிகழ்ச்சி நடைபெற்றது.

அறக்கட்டளைப் பொழிவு நிகழ்ச்சியில் முனைவர் இரா.சம்பத் அவர்கள் அனைவரையும் வரவேற்றார். புலவர் வி.திருவேங்கடம் தலைமையுரையாற்றினார். சி.நாகலிங்கம், அரங்க.நடராசன், பேராசிரியர் வே.ச.திருமாவளவன், பாவலர்மணி சித்தன் ஆகியோர் முனைவர் இரா.திருமுருகனாரின் தமிழ்ப்பணிகளை நினைவுகூர்ந்தனர்.

புதுவைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரத்துறையின் பேராசிரியரும், மேனாள் நாடாளுமன்ற உறுப்பினருதான முனைவர் மு.இராமதாசு அவர்கள் முனைவர் இரா.திருமுருகனாரின் தமிழ்ப்பற்றை நினைவுகூர்ந்ததுடன் முனைவர் இரா.திருமுருகனார் பாண்டிச்சேரி என்று அழைக்கப்பெற்ற பெயரைத் தமிழில் புதுச்சேரி என்று மாற்றுவதற்கு மேற்கொண்ட முயற்சிகளையும், தமிழ் உள்ளிட்ட மொழிகளை இந்திய அரசு ஆட்சிமொழியாக்க வலியுறுத்தியதையும் நினைவுகூர்ந்தார். புதுவை அரசிடம் அவர் தமிழ் வளர்ச்சிக்கு வலியுறுத்திய கோரிக்கைகளையும் எடுத்துரைத்தார். தமக்கும் அவருக்குமான தமிழ்த்தொடர்புகளைப் பேராசிரியர் மு.இராமதாசு நினைவுகூர்ந்தார்.

அறக்கட்டளைப் பொழிவைத் தமிழோசை நாளிதழின் மொழிநடை ஆசிரியரும், தமிழகத் தமிழாசிரியர் கழகத்தின் தலைவருமான புலவர் கி.த.பச்சையப்பன் சிறப்பாகச் செய்தார். முனைவர் இரா. திருமுருகனார் இயல், இசை, நாடகம் என்ற மூன்று துறைகளில் வல்லவர் என்றதுடன் ஊர்தோறும் சென்று தமிழ்ப்பரப்புரை செய்த களப்போராளி என்று எடுத்துரைத்தார்.

தமிழ்வழிக் கல்வியை வலியுறுத்தி உண்ணா நோன்பு மேற்கொண்டவர் என்றும், தெளிதமிழ் இதழை மொழி வளர்ச்சிக்காக நடத்தியவர் என்றும் யாருக்கும் அவர் அஞ்சியது இல்லை எனவும் யாரிடமும் அவர் கெஞ்சியதில்லை எனவும் குறிப்பிட்டுக் "கெடல் எங்கே தமிழின் நலம் அங்கெல்லாம் தலையிட்டுக் கிளர்ச்சி செய்க" என்ற பாவேந்தரின் கொள்கைகளை நடைமுறைப்படுத்தியவர் இரா.திருமுருகனார் என்று குறிப்பிட்டார். இதுவரை 54 நூல்களை எழுதியுள்ள அவர் சிந்துப்பாவியல் என்ற இலக்கண நூல் எழுதித் தமிழ் இலக்கணத்திற்கு அணிசேர்த்தவர் என்றும், குழலிசை வல்லவர் என்றும், தமிழகத்தில் அமைக்கப்பெற்ற புதிய இலக்கண நூல் எழுதும் குழுவில் அவர் இடம்பெற்றிருந்தார் எனவும் முனைவர் இரா.திருமுருகனாரின் பணிகளைப் புகழ்ந்துரைத்தார். நிகழ்வுகள்

நிறைவில் முனைவர் த.பரசுராமன் அவர்கள் நன்றியுரையுடன் விழா இனிது நிறைவுற்றது.


பேராசிரியர் வே.ச.திருமாவளவன்,முனைவர் மு.இராமதாசு,புலவர் கி.த.ப.


அறக்கட்டளை நிகழ்வில் பங்கேற்ற அறிஞர்கள்

கருத்துகள் இல்லை: