நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வெள்ளி, 3 ஏப்ரல், 2009

கோவை கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியில் தமிழ் இணையம் பற்றிய என் சிறப்புரை...


கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி முகப்பு

கோயமுத்தூரில் உள்ள புகழ்பெற்ற தனியார் கல்லூரி கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியாகும்.இது தன்னாட்சி பெற்ற கல்லூரி.இகல்லூரியின் தமிழ்த்துறையில் ஆய்வு செய்யும் முனைவர் பட்ட, இளம் முனைவர் பட்ட ஆய்வாளர்களுக்கு மாதம் ஒருமுறை அறிஞர்களை அழைத்து ஆய்வாளர்களுக்குப் பயன்படும் வண்ணம் சிறப்புரை வழங்குவது வழக்கம்.

அவ்வகையில் மார்ச்சு மாதம் 29 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணியளவில் உரையாற்ற எனக்குக் கல்லூரியின் தமிழ்த்துறைத்துறைத் தலைவர் பேராசிரியர் பழனிச்சாமி அவர்களும்,பேராசிரியர் முருகேசன் அவர்களும் அழைப்பு விடுத்திருந்தனர்.

28.03.2009 காலை 9 மணியளவில் புதுச்சேரியில் புறப்பட்டு விழுப்புரம்,சேலம் வழியாகக் கோவை வந்து சேர்ந்தேன்.

கோவையை அடைந்தபொழுது இரவு 7.15 மணி.

என் வருகை முன்பே திட்டமிடப்பட்டதால் பேராசிரியர் முருகேசன் அவர்கள் எனக்காகப் பேருந்து நிலை வந்து எதிர்கொண்டு அழைத்தார்.தனியார் விடுதியில் இரவு தங்க ஏற்பாடு செய்தார்.

நான் வந்த உடனேயே நண்பர் காசி அவர்களுக்குச் செல்பேசியில் தெரிவித்தேன்.அடுத்த அரை மணி நேரத்திற்குள் காசி அவர்கள் நான் தங்கியிருந்த அறைக்கு வந்து சேர்ந்தார்.இருவரும் இரவு உணவு உண்டோம்.அறைக்கு மீண்டு, கணிப்பொறி தொடர்பான பல செய்திகளைக் காசி வழியாக அறிந்து மகிழ்ந்தேன்.இரவு 11.30 மணி வரை காசி என்னுடன் உரையாடிவிட்டுக் காலையில் கல்லூரி அரங்கிற்கு வருவதாகச் சொல்லி விடைபெற்றார்.நானும் பயணக்களைப்பில் கண்ணயர்ந்தேன்.

காலையில் ஆறு மணிக்கு எழுந்து காலைக்கடமைகளை முடித்து,இரவே பேசியது போல பேராசிரியர் கனல்மைந்தன் இல்லம் சென்றேன்.அம்மா அவர்கள் காலைச்சிற்றுண்டி வழங்கினர்கள்.கனல்மைந்தன் அவர்கள் என் குடும்பத்துடன் நல்ல தொடர்பில் இருப்பவர்கள்.

நான் ஆய்வு மாணவனாக இருக்கும்பொழுது அவர் கருத்துகளை அடிப்படையாக வைத்தே என் ஆய்வுக்கட்டுரையை வடிவமைத்தேன்.பல்வேறு கருத்தரங்குகளில் நானும் கனல்மைந்தனும் ஒன்றாகவே உலவுவோம்.கனல் எழுந்தால் வினாக்கணையால் துளைத்தெடுப்பார்.அவரின் சிந்தனையாற்றல் எண்ணி எண்ணி நான் மகிழ்வேன்.கருத்தரங்க நாளில் இரவு முழுவதும் நம் பேராசிரியர் கனல்மைந்தன் அவர்கள் உள்ளூர் அரசியல் முதல் உலக அரசியல் வரை பேசித் தீர்ப்பார்.கல்லூரிப் பல்கலைக்கழகங்களில் நடக்கும் ஆய்வுகள், தில்லுமுல்லுகள் பற்றி கனல்கக்க உரையாற்றுவார்.அவரின் ஒரே பார்வையாளனாக நான் இருப்பேன்.எங்களுடன் வந்த நண்பர்கள் ஆய்வாளர்கள் அவ்வப்பொழுது புறப்பட்டாலும் நான் மட்டும் வைகறைப்பொழுது வரை கண் விழித்துக் கேட்டபடி இருப்பது வழக்கம்.எந்த ஊரில் கருத்தரங்கம் நடந்தாலும் அவரை நான் தேடுவதும் என்னை அவர் தேடுவதுமாக இருப்போம்.அத்தகு பேராசிரியரை இல்லம் கண்டு உரையாடி மீண்டமை மகிழ்ச்சி தந்தது.


ஆய்வாளர்கள் பார்வையாளர்கள்

காலை 9.30 மணிக்குப் பேராசிரியர் முருகேசன் அவர்கள் என்னை அழைத்துச் சொல்ல விடுதிக்கு வந்ததற்கும் நான் பேருந்திலிருந்து இறங்குவதற்கும் சரியாக இருந்தது.இருவரும் கல்லூரிக்குப் புறப்பட்டு காலை 10.30 மணியளவில் சென்றோம்.நாங்கள் வருவதற்கு முன்பாகவே நண்பர் காசி முதலாமவராக வந்திருந்தார்.காலத்தாழ்ச்சிக்குப் பொறுத்தருளும்படி வேண்டினேன்.தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் பழனிச்சாமி ஐயாவை முதற்கண் துறைக்குச் சென்று கண்டேன்.மற்ற துறைப் பேராசிரியர்களையும் கண்டு மகிழ்ந்தேன்.

அரங்கிற்கு வந்து இணைய இணைப்புகளைச் சரி செய்வது என் முதற்கண் வழக்கம்.முன்பே கல்லூரியில் அனுமதி பெற்றிருந்ததால் கணிப்பொறி இயக்கும் நண்பர் வந்திருந்தார். மடிக்கணினி,இணைய இணைப்பு சரியாக இருக்கும் என நினைத்த எனக்கு சிறிது தயக்கம் ஏற்பட்டது.கணிப்பொறிக்கும் இணையத்துக்கும் இணைப்பு கிடைக்காமையே என் தயக்கத்துக்குக் காரணம்.என்ன செய்ய?

நண்பர் காசியை அழைத்துச் சரி செய்து, என் மடிக்கணினியில் இணைப்பு கொடுத்து ஒருவாறு 11.30 மணிக்குதான் நிகழ்ச்சி தொடங்கியது.

அதற்குள் காசி வழியாகவும் நண்பர் நா.கணேசன் ஐயா அவர்களின் வழியாகவும் செய்தியறிந்த திருவாளர்கள் இலதானந்து,கோவை சிபி உள்ளிட்ட பதிவர்களும் ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் அவர்களும் வேறு சில நண்பர்களும் வந்திருந்தனர். அனைவரையும் வரவேற்று நிகழ்ச்சியைத் தொடங்கினோம்.


பயிற்சியளிக்கும் நான்(மு.இ)

தமிழ்மணம் தந்த காசி அவர்களின் சிறப்புகளை எடுத்துரைத்து அவர் ஊரில் அவர் முன்னிலையில் இந்த நிகழ்வு நடக்கும் பொருத்தப்பாட்டை எடுத்துரைத்தேன்.பிறகு தமிழ்த்தட்டச்சு முறைகள் பற்றி எடுத்துரைத்துத் தமிழ் 99 விசைப்பலகை பழக எளிது எனவும் அரசு இதனை ஏற்றுக்கொண்டு அறிவித்துள்ளது எனவும் விளக்கினேன்.


காசி உள்ளிட்ட நண்பர்கள்

எதிர்பாராத நிலையில் பதிவர் இலதானந்து அவர்கள் ஒலிப்புவழி தட்டச்சு சிறந்தது எனவும் என் தமிழ்ப்பற்றால் தமிழ் 99 விசைப்பலகையைத் திணிப்பதாகவும் கருத்துரைத்தார்.மேலும் 99விசைப்பலகையே என் முயற்சி போலவும் கருதி கருத்துரைத்தார்.தமிழ் 99 இல் உள்ள பல்வேறு சிறப்புகளை எடுத்துரைத்து தமிழ் மரபிலக்கண முறைப்படி அறிஞர்கள் குழு இதனை உருவாக்கியது என்று உரைத்தும் விவாதம் நீண்டது.இதுபற்றி நாம் பதிவு வழிவிவாதிக்கலாம் எனவும் இது பற்றி நெடுநாழிகை உரையாடினால் பேச வேண்டிய, சொல்லவேண்டிய பிற செய்திகளைப் பேச காலம் குறைவாகும் எனவும் குறிப்பிட்டேன்.

பேராசிரியர் முருகேசன் அவர்கள் விவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.உரை தொடர்ந்தது. பகல் 1.30 மணி வரை பல்வேறு இணையத்தளங்களை எடுத்துக்காட்டிச் சிறப்புகளை விளக்கினேன்.தமிழ்மணத்தின் சிறப்பை விளக்க முயற்சி செய்யும் பொழுது தமிழ் மணம் உள்ளிட்ட சில தளங்கள் கல்லூரியில் தடுத்து வைக்கப்பட்டிருந்ததை அறிந்தோம் தமிழ் மணம் தெரியும் படி செய்ய ஓர் அன்புவேண்டுகோளை வைத்தோம்.ஆய்வாளர்கள் பலருக்கும் ஏற்பட்ட ஐயங்களைப் போக்கினேன்.ஆய்வுக்கு உதவும் பக்கங்களைக் காட்டினேன்.

தமிழ்த் தட்டச்சு 99 விசைப்பலகை அமைப்பை ஒளியச்சிட்டு அனைவருக்கும் ஒரு படி வழங்கினோம்.

நண்பர் பத்ரி அவர்கள்(கிழக்குப் பதிப்பகம் உரிமையாளர்) தம் நிறுவனம் உருவாக்கிய NHM WRITER என்னும் மென்பொருளைக் கூடுதலாக என் விருபத்தின் பேரில் குறுவட்டாக அனுப்பி வைத்திருந்தார்கள்.அதனைநிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவருக்கும் ஒரு படி வீதம் வழங்கினோம்.

அனைவரிடமும் விடைபெற்றுக்கொண்டு பிற்பகல் 3.45 மணிக்குப் புறப்பட்டு நள்ளிரவு புதுச்சேரி வந்து சேர்ந்தேன்.

3 கருத்துகள்:

நா. கணேசன் சொன்னது…

லதானந்தும் கொங்குத்தமிழில் இந்த நிகழ்ச்சியை விவரித்து எழுதியுள்ளார்.
http://lathananthpakkam.blogspot.com/2009/04/blog-post.html

அன்புடன்,
நா. கணேசன்

அ. பசுபதி (தேவமைந்தன்) சொன்னது…

siRappu!

Sanjai Gandhi சொன்னது…

இதை பற்றி நானும் கூட எழுத நினைத்தேன். ஆனால் நேரம் தான் ஒத்துழைக்கலை. ரொம்ப சிறப்பா பண்றிங்க. நல்ல நோக்கம்.
தவறாக நினைக்க வேண்டாம்.
இன்னும் கொஞ்சம் திட்டமிடல் அவசியம்னு தோனுது.