நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

ஞாயிறு, 1 ஏப்ரல், 2007

சமணர்களின் வரலாறு சொல்லும் பொன்னூர்மலை

  தமிழகத்தில் சைவம், வைணவம், சமணம், பெளத்தம் முதலான சமயங்கள் மக்களிடம் செல்வாக்குப் பெற்றிருந்தன. இவற்றுள் சமணமும் பெளத்தமும் புறச்சமயங்களாகக் கருதப்படுகின்றன. தமிழகத்தை ஆண்ட அரசர்கள் சார்ந்திருந்த சமயங்களுக்கு ஏற்ப ஒவ்வொரு சமயமும் வளர்ச்சியையோ, தளர்ச்சியையோ சந்திக்க நேர்ந்தன. களப்பிரர், பல்லவ அரசர்களின் காலத்தில் சமண சமயம் செல்வாக்குப் பெற்றிருந்ததை வரலாறு சொல்கிறது. எனினும் களப்பிரர், பல்லவர்களின் வரலாறு குறித்து அறிஞர்களிடையே கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. இவற்றுள்ளும் களப்பிரர் ஆட்சிக்காலம் இருண்ட காலம் எனும் முத்திரை குத்தப்பெற்றுத் தமிழக வரலாற்று ஆசிரியர்களால் எழுதப்பெற்றது. இச்சூழலில் அறிஞர் மயிலை சீனி வேங்கடசாமியார் களப்பிரர் பற்றியும் சமண, பெளத்த சமயங்களின் வளர்ச்சி, செல்வாக்கு, தமிழ்ப்பணி பற்றியும் விரிவாக ஆராய்ந்து எழுதியுள்ளார். மேலும் பெளத்த, சமண சமயங்களின் செல்வாக்கு, பூசல்கள் பற்றித் தேவாரம், பெரிய புராணம் முதலான நூல்களின் வழியும் அறிய முடிகின்றது. மேலும் பிற்காலப் பல்லவர்கள், பிற்காலச் சோழ அரசர்கள் பலர் சமண, பெளத்த கோயில்களுக்கு வழங்கிய கொடைகளைக் கல்வெட்டுகள் வழியும் அறிய முடிகின்றது.

  மிகப்பெரும் எதிர்ப்புகளைச் சந்திக்க நேர்ந்த சமண, பெளத்த சமயங்களின் சுவடுகள் தமிழகத்தில் ஆழமாகப் பதிந்துள்ளன. சோழநாட்டு, தொண்டைநாட்டுப் பகுதிகளில் புத்தர், மகாவீரர் சிலைகள் பல கண்டெடுக்கப்பட்டுள்ளன. பல சிலைகள் சமய பூசல்களால் அழித்தொழிக்கப்பட்டன. சில சிலைகள் அறியா மக்களால் வெளிநாட்டினர்க்கு விற்கப்பட்டன. காஞ்சிபுரம், செஞ்சி, செய்யாறு, வந்தவாசி, ஆரணி, விழுப்புரம், திருவண்ணாமலை, திண்டிவனம் சார்ந்த பகுதிகளில் சமணர்கள் பலர் இன்றும் வாழ்வதையும் தத்தம் முன்னோர்கள் வழியில் அருக வழிபாடு நிகழ்த்துவதையும் காணமுடிகிறது. திருநறுங்குன்றம் (விழுப்புரம் அருகில்), திருமலை (போளூர் அருகில்) யில் சமணக்கோயில்களில் வழிபாடு சிறப்புடன் நடைபெறுகிறது.சமணர்களின் தெய்வீகத் திருத்தலமாகக் கருதப்படும் இடம் பொன்னூர்மலையாகும். இம்மலை ஏறி வழிபாடு செய்யவும் சுற்றுலா செல்வோர் பாதுகாப்பாகப் பொழுதைக் கழிக்கவும் உகந்த இடமாக உள்ளது.தூய்மையாகப் பராமரிக்கப்படும் இப்பொன்னூர் மலையை எவ்வாறு அடைவது?.....

  திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியிலிருந்து சேத்துப்பட்டு செல்லும் சாலையில் 8வது கிலோ மீட்டரில் இம்மலை உள்ளது. வந்தவாசி - சேத்துப்பட்டு செல்லும் பேருந்துகளில் ஏறிப் பொன்னூர் மலை ஐ.டி.ஐ. பேருந்து நிறுத்தத்தில் இறங்கி மலைப்பகுதியை அடையலாம். மலையடிவாரத்தில் மூன்று அறக்கொடை வழியாக இயங்கும் சமணர் கோயில்களும் தொண்டு நிறுவனங்களும் உள்ளன. இவற்றில் வழிபாடு நிகழ்த்துவதற்கு வசதியான பளிங்கு மண்டபங்களில் சமண முனிவர்களின் சிலைகள் உள்ளன. இவை அரிய வேலைப்பாடுகளைக் கொண்டுள்ளது. தங்குவதற்குரிய தங்குமிட வசதிகளும் உள்ளன. இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வந்து வழிபட்டுத் தங்கிச் செல்கின்றனர். வெளியூர்களில் இருந்து வருபவர்கள் உணவு, கொறிப்புப் பண்டங்களுடன் வருவது நல்லது.

  அறக்கொடை நிலையங்களில், பொன்னூர் மலையில் தங்கித் தவம் செய்ததாக நம்பப்படும் குந்தகுந்தர் பற்றிய பன்மொழி நூல்கள் உள்ளன. விலைக்கு வாங்கிக்கொள்ளலாம். மேலும் சுருதகேவலி பத்ரபாகு சுவாமி சேவாதளம், விசாகசாரியார் தபநிலையம் எனும் அறநிலையங்களில் செய்யப்பெறும் சில அறப்பணிகளையும் பார்வையிடலாம். இங்குச் சமண வழிபாடு, சமயம் பற்றிய ஆய்வு நூல்களைக் கொண்ட நூலகம், இறைவழிபாடு நிகழ்த்தும் கூடம், இலவச மருத்துவமனை, மகாவீரர் உண்டுறைப்பள்ளி உள்ளன. மேலும் உயிர்த் துன்பத்தைப் போக்கும் வகையில் நலிந்த நிலையில் உள்ள மாடுகளை வாங்கிப் பாதுகாக்கும் பாதுகாப்பு இடத்தையும் பார்வையிடலாம். உண்டுறைப்பள்ளியில் எளிய குடும்பங்களைச் சார்ந்த சிறுவர் சிறுமியர்களுக்குச் சாதி வேறுபாடு பாராமல் பராமரித்துக் கல்வி வழங்குவது சிறப்பு. உயிர்களுக்கு துன்பம் தராது அறப்பணிகளைத் தொன்மைக்காலத்துச் சமணச் சான்றோர்கள் வழியில் இங்குள்ளவர்கள் இன்றும் செய்து வருகின்றனர்.

  பொன்னூர் மலையை நோக்கி...பொன்னூர் என்னும் ஊரின் எல்லையில் உள்ளதால் பொன்னூர் மலை என்று பெயர் பெற்றுள்ளது. பொன்னூரில் சமணர் குறித்த கல்வெட்டுக்கள் உள்ளதாக அறிய முடிகின்றது. பொன்னூர் சார்ந்த வங்காரம், இளங்காடு, எறும்பூர், ஆயிலவாடி முதலான சிற்றூர்களில் சமண சமயம் சார்ந்த மக்கள் உள்ளனர். மலையடிவாரத்தில் இருந்து மேலே செல்வதற்கு நல்ல படிக்கட்டு வசதி உள்ளது. கால் மணி நேரம் நடந்தால் மலையின் மேல் பகுதியை அடையலாம். படிக்கட்டுகளின் ஓரச்சுவர்களில் படிக்கட்டுகளை அமைக்க உதவியர்கள் பெயர்கள் கல்வெட்டுகளில் வெட்டப்பட்டுள்ளன. மலையின் மேலே மண்டபம் போன்ற பகுதி கட்டப்பட்டுள்ளது. இதில் குந்தகுந்தர் எனும் முனிவரின் "பாதம்' வழிபாட்டிற்கு உரியதாகக் கல்லில் வெட்டப்பட்டுள்ளது. இதன் அருகில் மகாவீரரின் சிலை உள்ளது. அமர்ந்து ஓய்வெடுக்க குளிர்ந்த நிழலுடன் இம்மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. அருகே சமண முனிவர்கள் தங்கியிருந்ததாக நம்பப்படும் குகைகள் உள்ளன. மேலும் சமண முனிவர்கள் வாழ்ந்ததற்கான பல தடயங்களும் காணப்படுகின்றன.

  மலைப்பகுதியில் இருந்து கீழே நோக்கும்பொழுது இயற்கை எழில் கொஞ்சும் பகுதிகளைக் கண்டு மகிழலாம். குந்தகுந்தர் எனும் முனிவர் இங்கு தங்கித் தவம் செய்ததாக இம்மலையின் வரலாறு சொல்கிறது. இவர் ஆந்திராவில் பிறந்து காஞ்சிபுரம் முதலான இடங்களில் கல்வி பயின்று பொன்னூர் மலையில் தங்கித் தவம் செய்து இறுதி வாழ்வைச் சிரவன பெல்கோலாவில் கழித்ததாக நம்பப்படுகிறது. மகாவீரர், கெளதம கணதரருக்கு அடுத்து மூன்றாம் இடத்தில் வைத்துப் போற்றப்படுபவர் இவர். இவரே திருக்குறளை இயற்றியவர் என்பது சமணர்களின் கருத்தாகும். இவருக்கு ஏலாசாரியார் என்பதும் பெயராகும். திருக்குறளில் சமண சமயக் கருத்துக்கள் மிகுதியாக உள்ளன எனவும் "ஆதிபகவன்' என்பது தம் கடவுள் எனவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

   சமணர்களின் பெருமைக்குரிய வழிபாட்டுத்தலமாக விளங்கிய பொன்னூர் மலை இடைக்காலத்தில் செல்வாக்குக் குறைந்தாலும் அண்மைக்கால முயற்சிகளால் பொலிவுபெற்ற மலையாக விளங்குகிறது. வடநாடுகளில் இருந்து வந்து மகிழ்ச்சியாக வழிபட்டு, இயற்கை அழகைக் கண்டு செல்லும் மக்களைப் பார்க்கும்பொழுது, நாம் நகரச் சந்துகளில் பொழுதைக் கழிக்காமல் விடுமுறை நாட்களில் இதுபோன்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்குச் சென்று வரலாம்.

1 கருத்து:

மாசிலா சொன்னது…

உங்கள் கட்டுரையை படித்து முடித்த பின் பொன்னூர் மலைக்கே போய்வந்த மாதிரி இருக்கிறது. அவ்வளவு அருமையாக எழுதியிருக்கிறீர்கள். இது வரை கேள்விபடாத பல விசயங்களை அறிந்துகொண்டேன். சமயம் வரும்போது கட்டாயம் பொன்னூர் செல்வேன்.

பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி Dr Mu.Elangovan ஐயா.