சின்னமணல்மேடு த. இராமலிங்கம்
[சின்னமணல்மேடு த. இராமலிங்கம் அவர்கள் தமிழாசிரியராகவும் தலைமை
ஆசிரியராகவும் பணியாற்றி ஓய்வுபெற்றவர். புதுவெள்ளம்
இதழின் ஆசிரியர்; பன்னூலாசிரியர். மரபுப் பாடல் எழுதுவதில் வல்லவர். தமிழகத் தமிழாசிரியர்
கழகத்தின் பல்வேறு பொறுப்புகளில் இருந்தவர். தமிழக அரசின் பாடத்திட்டக் குழுக்களில்
பணியாற்றியவர். வீராணம் ஏரிக்கரையில் உள்ள சின்ன மணல்மேடு என்னும் ஊரில் பிறந்தவர்.]
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலிலிருந்து சேத்தியாத்தோப்பு வரை நீண்டு கிடப்பது வீராணம் ஏரியாகும். முதலாம் பராந்தகசோழனின் இயற்பெயரான வீரநாராயணன் பெயரில் இவ்வேரி வீரநாராயணன் ஏரி என்று அழைக்கப்பெற்று, மக்கள் வழக்கில் இன்று வீராணம் ஏரி என்று குறைவுற்று வழங்குகின்றது. இப்பேரேரியின் நீர்வளத்தால் வாழைக்கொல்லை, கூளாப்பாடி, கந்தகுமரன், உத்தமசோழன் முதலான ஊர்களும் அதனைச் சுற்றியுள்ள பல நூறு ஊர்களும் வளம்பெற்றுத் திகழ்கின்றன.
வீராணம் ஏரியின் நீர் வேளாண்மைக்கு இன்று உதவுவதுடன் சென்னை மக்களின் தாகம் தீர்க்கும் பணியையும் செய்கின்றது. அதுபோல் இந்த வீராணம் பகுதியில் தோன்றிய அறிஞர் பெருமக்கள் பலரும் இப்பகுதி மக்களுக்குக் கல்விபுகட்டும் பணியைச் செய்வதுடன் தமிழ் வளர்ச்சிப் பணிகளுக்குத் துணைநிற்பவர்களாகவும், தூண்களாகவும் விளங்குகின்றனர்.
அவ்வகையில் தமிழாசிரியராகப் பணியாற்றியும் புதுவெள்ளம் என்னும் இலக்கிய இதழ் நடத்தியும், திருக்குறளுக்கு உரைவரைந்தும் அறிவுப்பணியாற்றிவரும் பாவலர் சின்னமணல்மேடு த. இராமலிங்கம் அவர்களின் பணிகளைக் கருவூர்ப் பாவலர் அருணா பொன்னுசாமி அவர்கள் வழியாக அறிந்து பெரும் மகிழ்ச்சியுற்றேன். அறிஞர்கள் போற்றும் கவிதையாற்றலைக் கைவரப்பெற்ற த. இராமலிங்கம் அவர்களின் தமிழ் வாழ்க்கை இலக்கிய ஏடுகளில் பதிவுசெய்யப்பெற வேண்டிய பான்மையை உடையது. அவர்தம் வாழ்க்கையையும் தமிழ்ப் பணிகளையும் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்கின்றேன்.
த. இராமலிங்கம் அவர்கள் வீராணம் ஏரியால் வளம்பெற்றுத் திகழும் சின்னமணல்மேடு என்னும் ஊரில் வாழ்ந்த கோ. தம்புசாமி – அம்மாக்கண்ணு ஆகியோரின் மகனாக 20.10.1949 இல் பிறந்தவர். உழவர்குடியில் தோன்றிய த. இராமலிங்கம் தம் நான்காம் அகவையில் தந்தையாரை இழந்தவர். தாயின் அரவணைப்பில் வளர்ந்தவர்.
த. இராமலிங்கம் அவர்கள் ஒன்று முதல் ஐந்தாம்
வகுப்பு வரை சின்ன மணல்மேடு என்னும் தம் ஊரில் கல்வி பயின்றவர். தெ. நெடுஞ்சேரியில்
ஆறு முதல் எட்டு வகுப்பு வரை பயின்றவர். காட்டுமன்னார்கோவில் அரசு ஆண்கள் பள்ளியில்
ஒன்பது முதல் பள்ளியிறுதி வகுப்பு வரை பயின்றவர்.
வடலூரில் இடைநிலை ஆசிரியர் பயிற்சி பெற்று(1966-1968), இடைநிலை ஆசிரியராகக் கொள்ளுமேட்டில் அமைந்துள்ள தனியார் பள்ளியொன்றில் 02.11.1968 ஆம் ஆண்டு முதல் பன்னிரண்டரை ஆண்டுகள் பணியாற்றியவர்.
1978 இல் தமிழக அரசும் பெற்றோர் ஆசிரியர் கழகமும் இணைந்து “பெரியார் என்னும் பேரொளி” என்னும் தலைப்பில் பாப் போட்டி நடத்தியது. அப் போட்டியில் கடலூர் மாவட்டத்தில் முதன்மை இடம் இவருக்குக் கிடைத்தது. இப்போட்டி'யின் முடிவு இவருக்கு, அடுத்த பணி உயர்வுக்கு ஆதரவாக இருந்தது.
அரசுப் பணி கிடைத்து, சங்கராபுரத்தை அடுத்துள்ள பிரம்மகுண்டம் என்ற ஊரில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் மூன்று ஆண்டுகள் பணியாற்றினார். அதனை அடுத்து, பண்ணுருட்டியை அடுத்துள்ள காடாம்புலியூரில் உள்ள அரசுப் பள்ளியில் 1984 ஆம் ஆண்டு முதல் 1991 ஆம் ஆண்டு வரை தமிழாசிரியராகப் பணியாற்றினார். பின்னர் 1991 முதல் 2006 ஆம் ஆண்டு வரை பண்ணுருட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றினார். 2006 ஆம் ஆண்டு முதல் 2008 ஆம் ஆண்டு வரை கடலூர் மாவட்டம் காரைக்காடு என்னும் ஊரில் அமைந்துள்ள அரசுப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். முப்பத்தொன்பது ஆண்டுகள் மிகச் சீரும் சிறப்புமாகப் பணியாற்றிய த. இராமலிங்கம் வானொலிகளில் பேசியும், பல்வேறு இதழ்களில் எழுதியும் தம் படைப்புப் பணிகளைத் தொடர்ந்து செய்துவந்தவர். தினமணி, தென்மொழி, தீக்கதிர் முதலான ஏடுகள் இவர்தம் படைப்புகளைத் தாங்கிவருவன. இவர்தம் மரபுப் பாடல்கள் மிகச் சிறந்த உணர்ச்சிப்பாக்களாக விளங்குவனவாகும். சிறுவர் பாடல் புனைவதிலும் பெரும் ஈடுபாடுகொண்டவர்.
த. இராமலிங்கம் அவர்கள் 27.08.1972 இல் தம் இருபத்து நான்காம் அகவையில் புலவர் கு. சாவித்திரி அவர்களை இல்லறத் துணையாய் மணந்துகொண்டார். கு. சாவித்திரி அவர்களும் ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். இவர்களுக்கு இல்லறப் பயனாய் இரண்டு ஆண் மக்கள் வாய்த்தனர். முதல் மகன் மருத்துவர் இரா. இலெனின் அரசு மருத்துவராகப் பணியாற்றி வருகின்றார். இரண்டாவது மகன் இரா. கபிலன் பொறியியல் பயின்று, முதுநிலை மேலாளராகப் மணியாற்றி வருகின்றார்.
த. இராமலிங்கம் அவர்கள் தமிழகத் தமிழாசிரியர் கழகத்தின் மாநிலப் பொருளாளராகப் பொறுப்பு வகித்தவர். மேலும் கடலூர் மாவட்டத்துப் பொருளாளர், செயலர், தலைவர் பொறுப்புகளையும் ஏற்றுத் திறம்படச் செயல்பட்டவர்.
புலவர் புங்கனேரியான் அவர்களை அமைப்பாளராகக் கொண்டு காட்டுமன்னார்கோவிலில் 1972 முதல் இயங்கிய பாவேந்தர் பைந்தமிழ் மன்றத்தின் தலைவர், செயலாளராகப் பொறுப்பேற்றுத் திறம்பட நடத்தியவர். தமிழகத்து அறிஞர்களை அழைத்து, திங்கள்தோறும் விழாக்களையும், ஆண்டு விழாக்களையும் நடத்தி அப்பகுதியில் தமிழ் வளர்ச்சிக்குப் பாடுபட்டவர்.
த. இராமலிங்கம் அவர்கள் புதுவெள்ளம் என்ற திங்களிதழின் ஆசிரியராக இருந்து, 2016 முதல் மூன்று ஆண்டுகள் தொடர்ந்து நடத்தியவர். தமிழ்நாட்டரசின் சமச்சீர் கல்விப் பாடநூல் உருவாக்கும் குழுவில் பணியாற்றியவர்.
த. இராமலிங்கம் அவர்கள் அறிவாற்றலில் நிறைந்து
நிற்பவர் என்பதுபோல் தம் வளர்ச்சியில் துணைநின்ற புலவர் சு. நஞ்சப்பன், புலவர் பூ.
தில்லைவளவன், புலவர் ந. செல்வராசன், புலவர் துரை தில்லான் முதலான சான்றோர்களிடத்து
மிகுந்த நன்றியுணர்வுகொண்டவராக விளங்குகின்றார்.
த.இராமலிங்கம் அவர்களின் தமிழ் ஈடுபாட்டினை அறிந்த பல்வேறு தமிழமைப்புகள் இவருக்குப் பின்வரும் விருதுகளையும் பாராட்டுகளையும் வழங்கிப் போற்றியுள்ளன.
1. மறைமலையடிகள் விருது
2. பாவேந்தர் மரபுப் பாவலர் விருது
3. யாப்புநூல் புரவலர்
4. எழுச்சிப் பாவலர்
5. நடைமுறைப் பாவலர்
6. கவிதைக் கனல்
7. கவியருவி
8. தகைசால் தமிழ்ப்பணிச் செல்வர்,
9. மரபு மாமணி
முதலான விருதுகள் குறிப்பிடத்தக்கன.
த. இராமலிங்கம் அவர்கள் தற்பொழுது நெய்வேலி முதன்மை வாயிலுக்கு எதிரில் உள்ள அண்ணா கிராமத்தில் அமைதி வாழ்க்கை வாழ்ந்துவருகின்றார்.
த. இராமலிங்கம் அவர்களின் தமிழ்க்கொடை:
1. சூரியனைச் சுடும் நெருப்பு (பாடல்)
2. வள்ளுவத்தில் காதல் (பாடல்)
3. கிணற்றில் வீழ்ந்த கடல் (பாடல்)
4. பாவம் குருவிகள் (உரைநடை)
5. திருக்குறள் தெளிவுரை
நன்றி: புலவர் அருணா பொன்னுசாமி, கரூர்






கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக